தவமின்றி கிடைத்த வரமே-14


அத்தியாயம்-14 

ழகிய மெரூன் கலரில் இன்றைய மாடலில் டிசைன் செய்ய பட்ட பார்டருடன் மின்னிய பட்டுபுடவை சரசரக்க, கழுத்தில் கனமான சம்மங்கி பூக்களால் ஆன மாலை அணிந்து அதைவிட கனமான புது மஞ்சள் கயிற்றால் கோர்த்து அணிந்திருந்த தாலி முன்னால் தொங்க, தயக்கத்துடன் தன் வலது காலை எடுத்து வைத்து அந்த வீட்டின் உள்ளே வந்தாள் மணக்கோலத்தில் இருந்த பனிமலர்...

அவள் அருகில் ஆறடிக்கும் மேலான உயரத்தில் , பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக பார்ப்பவர்களை கட்டி இழுக்கும் வசீகர தோற்றத்தில் மணக்கோலத்தில் இருந்த அந்த நெடியவனும் பனிமலருக்கு இணையாக தன் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தான்....

அவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு...

இந்த உலகத்தையே வென்றுவிட்ட கர்வம் முகத்தில் தெரிய, அவன் உதடுகள் அவன் மகிழ்ச்சியை புன்னகையாக்கி விரிய விட முயல ஆனால் ஏனோ அதை கஷ்டபட்டு அடக்கி புன்னகைக்காமல் சாதாரணமாக இருப்பதாக கஷ்டபட்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டான்...

உள்ளே வந்த மணமக்களை நேராக பூஜை அறைக்கு அழைத்து சென்று அந்த வீட்டு புது மறுமகளை விளக்கேற்ற சொல்ல, அவளோ இன்னும் தயக்கத்துடன் நடுங்கும் விரல்களுடன் அந்த தீபெட்டியை உரசி அந்த வீட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தாள்....

அந்த விளக்கும் மகிழ்ச்சியில் பிரகாசிக்க, தலையை நிமிர்த்தி பார்க்க, எதிரில் அவள் வணங்கும் அந்த ஈசன் தன் மனைவி பார்வதியுடனும் தன் இரு மகன்களுடன் புன்னகைத்தவாறு அவளை அந்த வீட்டிற்கு வரவேற்று அமர்ந்திருந்தார்.....

அவனை கண்டதும் மனதுக்குள் இருந்த ஏதோ ஒரு பெரிய பாரம், வலி வேதனை எல்லாம் விலகி நிம்மதி வந்ததை போல இருந்தது பனிமலருக்கு....

இனி எல்லாம் அவன், அந்த ஈசன் பார்த்துக்குவான் என்று தன் வாழ்க்கையை அவனிடம் விட்டு விட்டு அவன் முன்னே கண் மூடி நின்றாள் பனிமலர்.....

அவளை அழுத்தி வந்த பாரம், வலி வேதனை இலேசாக குறைந்து கொஞ்சம் அமைதியாக இருந்தது...

பின் அங்கிருந்த கற்பூர தட்டில் இருந்த கற்பூரத்தை பற்ற வைத்து அந்த ஈசனுக்கு காட்டி தலையை குனிந்த படியே தன் அருகில் இருந்தவர்களுக்கு காட்ட, திடீரென்று ஒரு வலிய கரம் அவள் முன்னே நீண்டது...

அந்த கைகளை கண்டதும் அது யாரென்று புரிய அவள் உள்ளே படபடப்பாக இருந்தது...

தன் படபடப்பை, தவிப்பை வெளிகாட்டி கொள்ளாமல் உதடு கடித்து அடக்கி கொண்டாள்....

பின் அனைவரும் பூஜை அறையில் இருந்து வெளி வந்து சம்பிரதாயத்துக்காக ஒரு சில சடங்குகளை செய்ய வைத்தனர்....

மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் இருந்ததை தவிர, அந்த வீட்டில் எந்த ஒரு கல்யாண கலையும் தெரியவில்லை....

கூட இருந்தவர்களும் யாரும் அலங்கரித்து கொண்டு புது பட்டுபுடவை சரசரக்க, தங்க, வைர நகைகள் கழுத்தில் மின்ன சிரித்து பேசும் அந்த கல்யாண கலை யார் முகத்திலும் இல்லை....

ஏன் மணப்பெண்ணுமே கூட கழுத்து நிறைய நகைகளை அடுக்கி மணப்பெண் என்று பளிச்சென்று எடுத்து காட்டாமல் ஏதோ பேருக்கு கொஞ்சம் நகைகளை அணிந்து இருந்தாள்....

பார்ப்பதற்கு அது ஒரு திடீர் கல்யாணம் போல இருந்தது....

மணமக்களை சோபாவில் அமர்த்தி அவர்களுக்கு பால் பழம் கொடுக்க , பனிமலர் தயக்கத்துடன் தன் அருகில் இருந்தவனுக்கு கொடுக்க, அவனோ எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இதற்காகவே காத்து கொண்டிருந்தவனை போல அவளுக்கு ஊட்டினான் சந்தோசத்தில்.....

அதை கண்டு அனைவரும் மனம் நிறைந்து சிரித்தனர்....

பின் அருகில் நின்றிருந்த அந்த மாமி

“எப்படியோ.... வீட்டுக்கு விளக்கேற்ற மறுமகள் வரலையேனு கவலை பட்டுகிட்டிருந்த இல்ல மீனாட்சி...

நீ கிழமை தவறாமல் அந்த ஈசனை வேண்டியதும் , நாள் தவறாமல் பண்ணிய பூஜைகளும் அந்த ஈசன் காதுல இப்பதான் விழுந்திருக்கு போல... அதான் நீ தேடி போகாமலயே தங்க விக்கிரகம் மாதிரி இருக்கிற மறுமகளை உன்னை தேடி அனுப்பி வச்சுட்டான்...

அவள பத்திரமா பார்த்துக்கோ... “ என்று சிரித்தவர் பின் அந்த நெடியவனை பார்த்து

“ உனக்கும் தான் பா... நீ தவம் எதுவும் இல்லாமல் தானா இந்த வரத்தை ஈசன் உன் கையில கொடுத்திருக்கான்.. அதை தவறவிடாமல் கெட்டியா புடிச்சுக்கோ...

இனிமேல் உன் வாழ்க்கை இன்னும் அமோகமா இருக்கும்... “ என்று ஆருடம் சொல்வதை போல அந்த மாமி சொல்ல, அந்த நெடியவன் மெல்ல புன்னகைத்து

“கண்டிப்பா மாமி... “ என்று வழக்கமான தன் வசீகர புன்னகையுடன் வெண் பற்கள் தெரிய புன்னகைத்தான்.......

கடந்த சில நாட்களாக தொலைந்து போயிருந்த இந்த புன்னகை, அவன் முகத்தில் இருந்த வேதனை மறைந்து தன் மகன் இப்படி புன்னகைப்பதை கண்டு சந்தோசமாக இருந்தது அவனை பெத்தவர்களுக்கு....

அருகில் நின்றிருந்த பனிமலரின் அன்னை ஜோதிக்கும் அதே நிலைதான்... பல இன்னல்களுக்கு பிறகு தன் மகளை மணக்கோலத்தில் பார்க்க, அந்த தாய் உள்ளமும் உருகி நின்றது....

அதை விட தன் மகள் அருகில் கம்பீரமாக வசீகர தோற்றத்தில் அமர்ந்திருந்த தன் மறுமகனை காணவும் இன்னுமே மகிழ்ச்சியாகி போனது..

“இப்படி ஒரு மறுமகனை அடைய நாங்கள் என்ன புண்ணியம் பண்ணினமோ!!.. அந்த மாமி சொன்ன மாதிரி இப்படி ஒரு மாப்பிள்ளை , மறுமகன் வரமாக கிடைக்க என் பொண்ணும் நாங்களும் தவம் இருந்திருக்க வேண்டும்...

ஆனால் இவர் எங்களுக்கு தவமின்றி கிடைத்த வரமாக்கும்...இனி என் மகள் வாழ்வு நன்றாக இருக்கும்...” என்று பூரித்து போனார் ஜோதி....

இதை காண தன் கணவன் அருகில் இல்லையே என்று இலேசாக வருத்தம் இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி மணமக்களையே கண் குளிர பார்த்து ரசித்தார்....

“என்ன அண்ணா.... நீங்க ஒருத்தர் தான் eligible bachelor ஆ சம்சார வலையில சிக்காமல் எஸ்கேப் ஆகிட்டு வந்தீங்க.... கடைசியில நீங்களும் சம்சார கடல் ல குதிச்சிட்டிங்களே....

இல்ல.. ஒருவேளை இந்த மலர் தான் உங்களை புடிச்சு சம்சார கடலுக்குள்ள தள்ளி விட்டுட்டா போல...

எனிவே இரண்டு பேரும் இதில் வெற்றிகரமாக நீந்தி வர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்... விஷ் யூ போத் ஆப் யூ ஹேவ் எ ஹேப்பி மேரிட் லைப்.... “ என்று மணமக்களின் கைகளை பிடித்து வாழ்த்தி சிரித்தாள் பாரதி....

“ரொம்ப தேங்க்ஷ் சிஸ்டர்....கூட இருந்து எங்களுக்கு எல்லா ஹெல்ப் ம் பண்ணினதுக்கு... “ என்று மீண்டும் வசீகர புன்னகையுடன் மனம் விட்டு சிரித்தான் மணமகனாக தன் மனம் கவர்ந்தவளின் அருகில் அவளை ஒட்டி அமர்ந்திருந்த வசீகரன்...

“ஹா ஹா ஹா.. வெறும் வாயால நன்றி சொல்றதோட நிறுத்திடலாம்னு நினைச்சுடாதிங்க டாக்டர் சார்.... எனக்கு பெருசா ட்ரீட் வேணுமாக்கும்... அதுல மெய்ன் ஆ ஐஸ்கிரீம் வேணும்.. எனக்கும் என் பொண்ணுக்கும் மட்டும் டபுள் ஐஸ்கிரீம்.. இப்பயே சொல்லிட்டேன்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் பாரதி...

“ஹா ஹா ஹா.... அவ்வளவுதானா... நான் கூட வேற எதுவோ பெருசா கேட்க போறனு நினைச்சேன்... ட்ரீட் தான.. கொடுத்துட்டா போச்சு.. “ என்று சிரித்தான் வசீகரன்...

“நீங்க தான் குட் அண்ணா.... இந்த போலீஸ்கார நிகிலன் மாம்ஸ் இருக்காரே...இன்னும் எனக்கு கல்யாண ட்ரீட் கொடுக்கவே இல்லை... அவர் பொண்டாட்டி பிறந்த நாளுக்கு னு நானே கெஞ்சி ஒருதரம் கூட்டி கிட்டு போனார்.. அதுக்கப்புறம் ஆளவே புடிக்க முடியலை...

என்ன மாம்ஸ்?? ... என் வசி அண்ணா வை பார்த்து கத்துக்கங்க... பார் பொண்டாட்டி வந்ததுக்கு பிறகு எப்படி கலகலனு பேசறார்...

கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகியும் நீங்க இன்னும் மாறவே இல்லை.. அப்படியே கஞ்சி போட்ட சட்டை மாதிரி விறைச்சுகிட்டே இருக்கிங்க வாயை திறக்காமல்..

ம்ஹூம்... நம்ம மதுகுட்டி சரியில்லை... இன்னும் உங்களை மாத்தாம அப்படியே விட்டு வச்சிருக்கா.... அவளை ஒரு வாரம் என்கிட்ட ட்ரெயினிங் அனுப்பி வைங்க... “ என்று சிரித்தவாறு அருகில் நின்றிருந்த வசியின் நண்பன் நிகிலனை வாரினாள் பாரதி....

நிகிலனும் மெல்ல புன்னகைத்து பாரதியின் அருகில் வந்து

“நான் பாவம் மா.. என்னை விட்டுடு... உனக்கு யாரையாவது கலாய்க்கணும்னா என் மச்சான் அதான் உன் புருசன் ஆதியை வர சொல்றேன்.. போட்டு தாக்கு.. உனக்கெல்லாம் அவன்தான் லாயக்கு.... பார் எப்படியோ உன்கிட்ட மாட்டாம இன்னைக்கு எஸ் ஆகிட்டான்.. “ என்று சிரித்தான் நிகிலன்....

“மாம்ஸ்... யூ டூ.........!!! ” என்று செல்லமாக முறைத்தாள் பாரதி...

அவனும் சிரித்து கொண்டே மணமக்கள் அருகில் வந்தவன் தன் நண்பன் வசியை கட்டி கொண்டு

“விஷ் யூ ஹேவ் எ ஹேப்பி மேரிட் லைப்....டா..” என்று மனம் நிறைந்து வாழ்த்தினான்.. பின் பனிமலரை பார்த்து

“வாழ்த்துக்கள் சிஸ்டர்....எங்க நண்பனை கண் கலங்காம பார்த்துக்கங்க...” என்று புன்னகைத்தான் நிகிலன்...

பனிமலரும் அதுவரை குனிந்து இருந்தவள் தன் தலையை நிமிர்ந்து புன்னகைத்து

“தேங்க்ஷ் ணா... “ என்றாள்...

“அடடா... இன்னைக்கு கண்டிப்பா சென்னையில் புயல் வரப்போகுது... எப்பவுமே பேசாத நிகிலன் மாம்ஸ் கூட பேசி அதுவும் இப்படி எல்லாம் வாழ்த்தி சிரிச்சுட்டாரே...

அப்ப அந்த புயலுக்கு வர்தா புயல் மாதிரி நிகிலா புயல் னு தான் பேர் வைக்கணும்... “ என்று பாரதி சிரிக்க, நிகிலன் அவள் காதை பிடித்து திருகி

”வாயாடி...உன் வாயை குறைக்கவே மாட்டியா ?? “ என்று செல்லமாக முறைத்தான்...

“ஆ...... வலிக்குது மாம்ஸ்... பழக்க தோசத்துல அக்யூஸ்ட் காதை பிடித்து திருகற மாதிரியே இப்படி முரட்டு தனமா என் காதை திருகறீங்களே...!!! முருகா.... இப்பதான் தெரியுது.. உங்ககிட்ட வர்ற அக்யூஸ்ட் எல்லாம் ஏன் உடனே உண்மையை கக்கறானுங்கனு...

இருங்க என் ஆதி மாமா வரட்டும்.. அவர்கிட்டயே சொல்லி உங்கள முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன்.. “ என்று செல்லமாக சிணுங்கினாள் பாரதி....

அதை கண்ட அனைவரும் வாய் விட்டு சிரித்து அந்த சூழ்நிலையும் மறந்து ஓரளவுக்கு இயல்பாகினர்...

மலருக்கும் பாரதியை கண்டதும் பிடித்து விட்டது...

ஏற்கனவே சுசிலா பாரதியை பற்றி சொல்லி இருக்கிறார்.. அவ்வளவு பெரிய RJS மருத்துவமனையை சுசிலாவுடன் இணைந்து நிர்வகிப்பவள் இவள்தான் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்...

எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் படு இயல்பாக வாயடிப்பவளை கண்டு வியந்தவள்

“ஆஹா.... எனக்கு அக்காவா இருப்பாங்க போல இருக்கு... நம்மளதான் எல்லாரும் வாயாடினு சொல்வாங்கனு பார்த்தா இவங்க எனக்கு மேல வாயடிப்பதுல மாஸ்டர் இல்ல P.hd பட்டமே வாங்கியிருப்பாங்க போல....” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள் மலர்...

அவள் உள்ளுக்குள் சிரித்தது அவள் உதட்டிலும் இலேசாக பரவ, மெல்ல உதடு விரிந்து இலேசாக புன்னகைத்திருந்தாள்...

இதுவரை சிரிக்க மறந்து ஒருவித வேதனையுடன் இருந்தவள் மெல்ல புன்னகைக்க அவளையே ஓரக் கண்ணால் பார்த்து கொண்டிருந்த வசிக்கு நிம்மதியாக மகிழ்ச்சியாக இருந்தது....

“எங்க அவசரபட்டுட்டமோ?? “ என்ற ஒரு குற்ற உணர்வு அவன் உள்ளே இன்னும் அழுத்தி கொண்டிருக்கிறது... அதற்கு தகுந்த மாதிரி அவள் இயல்பாக இல்லாமல் ஒரு வித வேதனையுடனே இருப்பதை கண்டு அவனுக்கு கஷ்டமாக இருந்தது...

ஆனால் இப்பொழுது அவள் உதட்டில் மிளிரும் அந்த மெல்லிய புன்னகை அவனுக்கு நம்பிக்கையை கொடுத்தது....

அவளையே ஓரக் கண்ணால் ரசித்து பார்த்து கொண்டிருந்தான் வசி....

“அம்மாடி.. மலர்... சிரிக்கிறதும் சிரிக்கிற.. நல்லா வாய் விட்டு தான் சிரியேன்.. பாவம்... என் டாக்டர் அண்ணா.. நீ எப்ப சிரிப்ப அப்படீனு தவம் இருக்கிறார் பார் உன்னையே பார்த்துகிட்டு.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் பாரதி..

பனிமலரும் மெல்ல வெக்க பட்டு தலையை குனிந்து கொண்டாள்...

பின் கிண்டல் கேலி என சில நிமிடங்கள் கரைய, அதற்குள் மீனாட்சி அனைவருக்கும் சாப்பிட அவசரமாக ஆர்டர் பண்ணி இருந்த இனிப்பையும் சில ஸ்னாக்ஸ் ஐட்டங்களையும் தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுத்தார் மகிழ்ச்சியுடன்...

அது ஒரு திடீர் கல்யாணம் என்பதால் வீட்டில் எதுவும் ஏற்பாடு செய்திருக்க வில்லை...

வந்தவர்களுக்கு உண்ண என்று அப்பொழுதுக்கு ஆர்டர் பண்ணியதை கொடுத்து குளிர் பானமும் கொடுக்க, அனைவரும் அதை மன நிறைவுடன் வாங்கி கொண்டனர்....

பின் வந்திருந்தவர்கள் மீண்டும் ஒரு முறை மணமக்களை மனம் நிறைந்து வாழ்த்தி அனைவரும் விடை பெற்று சென்றனர்...

மலர் பக்கம் இருந்து வந்திருந்தவர்களும் கிளம்பி செல்ல, அவளின் அன்னை ஜோதி மற்றும் அவளின் ஒன்று விட்ட பாட்டி கனகம் மட்டும் அங்கிருந்தனர்...

பாரதியும் நிகிலனும் நேரம் ஆவதாக சொல்லி, மீண்டும் ஒருமுறை அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு கிளம்பி சென்றனர்....

இதுவரை கும்பலோடு இருந்ததால் தெரியாத அவன், தன் திடீர் கணவனின் நெருக்கம் இப்பொழுது ஏனோ வித்தியாசமாக தெரிந்தது மலருக்கு...

அவன் அருகில் நெருங்கி அமர்ந்து இருக்க கூச்சமாக இருந்தது.... அதனால் இலேசாக நெழிய ஆரம்பித்தாள் பனிமலர்...

அவளின் நிலையை புரிந்து கொண்ட வசி உடனே சோபாவில் இருந்து எழுந்து

“மா... இனிமேல் எதுவும் பார்மாலிட்டிஸ் இல்லை இல்ல... நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்ரேன்.. “ என்று எழுந்து தன் அறைக்கு சென்றான்...

மீனாட்சி சற்று தள்ளி நின்றிருந்த தன் மகள் வசுந்தராவை அழைத்து

“வசு... அண்ணிக்கு நம்ம வீட்டை சுத்தி காமி... பாட்டி, ஜோதி.. நீங்க வாங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க...” என்று அவர்களை தன் அறைக்கு அழைத்து சென்றார் மீனாட்சி...

வசுவும் அருகில் வந்து

“ஹாய் அண்ணி.. நான் வசு.. வசுந்தரா.... இந்த அரண்மனையின் இளவரசி... அப்படித்தான் எல்லாரும் இதுவரைக்கும் சொல்வாங்க... ஆனால் அதுக்கு போட்டியா இனிமேல் நீங்கதான் இளவரசியாக்கும்....

பாருங்க... என்னை இதுவரைக்கும் யாருமே கண்டுக்கலை..” என்று உதட்டை பிதுக்கினாள்....

அவளின் வெகுளியான பேச்சை கேட்டு மலரும் புன்னகைக்க,

“ஐயோ..!! நீங்க சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா ?? இதுவரைக்கும் எங்க வசி அண்ணா சிரிச்சாதான் அழகா இருக்கும்னு நான் எல்லார்கிட்டயும் பெருமையா சொல்வேன்..

இப்ப அவனுக்கு போட்டியா உங்க சிரிப்பும் கூட செமயா இருக்கு....அதான் என் அண்ணன் உங்களை பார்த்த உடனே கவிழ்ந்திட்டானா?? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

மலரும் இலேசாக கன்னம் சிவந்து புன்னகைத்தவாறு தலையை குனிந்து கொண்டாள்....

அதை கண்டவள் அவள் காதருகில் வந்து

“அண்ணி... போதும்... இந்த தலையை குனிஞ்சு கிட்டு அடக்கம் ஒடுக்கமா இருக்கிற மாதிரி ஆக்ட் பண்ணினதெல்லாம்.... இப்பதான் எல்லா பெருசுங்களும் போய்ட்டாங்க இல்ல... இன்னும் எதுக்கு இப்படி வராத வெக்கத்தை வந்த மாதிரி காட்டி நடிக்கறீங்க...

இந்த கெட்டப் உங்களுக்கு செட் ஏ ஆகலை... நான் எப்பவும் கோவில்ல பார்க்கிறப்ப ஒரு கெத்தா சிரிச்சுகிட்டே இருப்பீங்களே... அந்த கெட்டப் க்கு வாங்க.. அதுதான் உங்களுக்கு செட் ஆகும்... “ என்று ரகசியமாக சொன்னாள் வசு....

அதை கேட்டு மலர் செல்லமாக அவளை முறைக்க

“ஆங்... இது... இது... இதத்தான் எதிர்பார்த்தேன்.. இதுதான் ரியல் மலர் அக்கா... இல்ல மலர் அண்ணி... கோவில்ல பார்த்த அப்பவே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்...

நீங்களே எனக்கு அண்ணியா வந்தது ரொம்ப சந்தோசம் அண்ணி.. “ என்று மலரை கட்டி கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் வசு....

மலரும் அவளின் செயலை கண்டு திகைத்து வியந்தாள்...

இது போல இதுவரை தன்னை யாரும் கட்டி கொண்டது இல்லை.. அவள் உடன் பிறந்தவன் தம்பி மட்டும் என்பதால் என்னதான் அவன் உடன் செல்லம் கொஞ்சினாலும் சண்டை போட்டாலும் ஒரு வயதுக்கு மேல ஆண் பெண் என்ற ஒரு இடைவெளி வந்து விடுகிறது...

இந்த மாதிரி ஒட்டி கொள்ள முடியாது... எட்டி நின்னுதான் எதுனாலும் பேசி கொள்வர்..

ஆனால் வசு தன்னை பார்த்த உடனே இப்படி அவளிடம் ஒட்டி கொண்டதோடு உரிமையாக பேசுவதும் அவளுக்கு வியப்பாக இருந்தது....

ஏன் மீனாட்சியும் கூடத்தான் அவளிடம் முன்னைக்கு ரொம்ப ஒட்டி கொண்டார்...

அவரை முன்னரே மலருக்கு தெரியும்.. கோவிலில் பல முறை பார்த்திருக்கின்றனர் இருவரும்... ஆரம்பத்தில் பார்த்தால் ஒருவருக்கொருவர் புன்னகைப்பதோடு சரி....

மீனாட்சி இயல்பாக யாரிடமும் பேசாதவர் என்பதால் அவளிடம் எதுவும் பேசவில்லை....

வசீகரனை போலவே மீனாட்சியின் சிரிப்பும் அழகாக அடுத்தவரை வசீகரிப்பதை போல இருக்கும்.... அவரின் புன்னகையை காணவே அவர் வரும் நேரங்களில் அவளும் கோவிலுக்கு வந்து விடுவாள்.....

ஒரு நாள் மலர் தானாகவே அவரிடம் சென்று

“ஹாய் ஆன்ட்டி... உங்க சிரிப்பு சூப்பரா இருக்கு.. நீங்களும் சூப்பரா இருக்கீங்க.. அங்கிள் ரொம்ப கொடுத்து வச்சவர்..... “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அதை கண்ட மீனாட்சி அதிசயித்து வாயை பிளந்தார்...

முன் பின் தெரியாத பொண்ணு இப்படி திடீர்னு வந்து அதுவும் உரிமையோடு பேசுவதை கண்டு அதிசயிக்க அவருக்குமே கலகலனு பேசும் மலரை உடனே பிடித்து விட்டது....

அதில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாகினர்... கோவிலுக்கு வரும் பொழுதெல்லாம் சிறிது நேரம் அமர்ந்து ஏதாவது கதை அடித்து விட்டு செல்வர்.... அவளை ரொம்ப பிடித்து விட்டதால் தான் தன் மகனை மணந்து கொள்ள சொன்னார்....

மலர்க்கு மீனாட்சி , வசு அமைதியாக இருக்கும் அந்த வீட்டின் தலைவர் சுந்தர் என அனைவரையும் ரொம்ப பிடித்து விட,

“இப்படி ஒரு நல்ல குடும்பத்தில் வாழ்க்கை படத்தான் அந்த ஈசன் என்னை, என் குடும்பத்தை இவ்வளவு தூரம் சோதித்தானா?? “ என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள்....

வசுவோ தன் அண்ணியை கட்டி அணைத்து முத்தமிட்டவள் தன் கதையை தொடர்ந்தாள்...

“அம்மா தான் உங்களை பற்றி தினமும் சொல்லி என் அண்ணாகிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி நச்சரிப்பாங்க.. அந்த சாமியார் காதுலயே போட்டுக்க மாட்டான்...

இப்பா பார் தானா வந்து உங்க கிட்ட மாட்டிகிட்டான்.... “ என்று சிரித்தாள்...

மலரும் புன்னகைக்க,

“சரி... வாங்க அண்ணி.... நாம இந்த அரண்மனையை சுத்தி பார்க்கலாம்.... “ என்று சிரித்தவாறு மலர் கை பிடித்து அழைத்து சென்றாள் வசு....

தன் அறைக்கு சென்ற வசி தன் ஆடையை கழற்ற முயல எதேச்சையாக கண்ணாடியில் தன்னை பார்த்தவன், தன்னுடைய பட்டு வேஷ்டி சட்டையில் மணமகன் கலை இன்னும் முகத்தில் இருக்க, அவனை அறியாமலயே ஒரு பூரிப்பு அவன் முகத்தில் வந்து சேர்ந்தது...

மணமகன் அவன் என்பதைவிட மணமகள் அவன் இதய தேவதை அவனுடையை ஜில்லு என்பதில் தான் அத்தனை மகிழ்ச்சி அவன் உள்ளே....

இதுவரை சூழ்நிலை கருதி தன் மகிழ்ச்சியை, சந்தோசத்தை வெளிகாட்ட முடியாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்தவன் இப்பொழுது தன் அறைக்குள் வந்ததும் கதவை தாளிட்டு தன் பட்டு வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு குத்தாட்டம் போட்டான் சந்தோசத்தில்....

வாயில் விரலை வைத்து விசில் அடிக்காத குறைதான்... அதையும் செய்திருப்பான்.. ஆனால் கீழ இருப்பவர்களுக்கு கேட்டு விடுமே என்று அடக்கி வாசித்தான்....

ஓரளவுக்கு ஆடி முடித்து கலைத்தவன் தன் மெத்தையில், மேல பார்த்தவாறு கைகளை விரித்து கொண்டு மெத்தையில் பொத்தென்று விழுந்தான் சிறு பையனாக.....

அவன் இதயத்தை இத்தனை நாளாக அழுத்தி வந்த பாரம், வலி, வேதனை எல்லாம் ஓடி மறைந்து நிம்மதி பரவியது... பெரும் நிம்மதி, சந்தோசம், மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளும் அவனை ஆக்கிரமித்து இருந்தன.....

பின்ன இருக்காதா??

“எனக்கு வேற ஒருவனோடு திருமணம்... நான் அடுத்தவனுக்கு சொந்தமாக போகிறேன்.. என் திருமணத்திற்கு அவசியம் வந்து விடுங்கள்.... “ என்று தனக்கு சொந்தமாக வேண்டியவள் தன் முன்னே திருமண அழைப்பிதழை நீட்டினாள் எப்படி இருக்குமாம் ??....

முறையான உடற்பயிற்சி செய்து தன் உடலை தன் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததால் அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரவில்லை.. இல்லை என்றால் அந்த இடத்திலயே அவன் இதயம் நின்றிருக்கும்....

அன்று அவளை சந்தித்து விட்டு வந்ததில் இருந்தே வசி அவனாக இல்லை... எதையோ தொலைத்து விட்ட மாதிரி, வாழ்க்கையையே வெறுத்து விட்ட மாதிரி யாரிடமும் சரியாக பேசாமல் சரியாக உண்ணாமல் நாட்களை கடத்தினான்...

மீனாட்சியும் தன் மகனின் நிலை கண்டு பதறி அவனிடம் விசாரிக்க அவனோ ஒன்றுமில்லை என்று மலுப்பி விட்டான்...

அவரும் விடாமல் மருத்துவமனையில் எதுவும் பிரச்சனையா என்று ஷ்யாமிடம் விசாரிக்க அவனும் மருத்துவமனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று விட்டான்...

பின் அவன் நண்பர்கள் ஆதி, நிகிலனிடமும் மீனாட்சி விசாரிக்க, அவர்களுக்கு தெரிந்த வரையிலும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லினர்...

பின் அவனை கான்ப்ரன்ஸ் காலில் அழைத்து இருவரும் விசாரிக்க, எப்பவும் தன் மனதை திறக்காதவன் தன் நண்பர்களிடமும் ஒன்றும் இல்லை என்று சமாளித்து பேச்சை அவர்கள் திருமண வாழ்க்கையை பற்றி விசாரித்து திருப்பி விட்டான்...

“சே... இப்படி எல்லாரும் பார்த்து கேட்கிற மாதிரியா நடந்து கொள்வது?? “ என்று தன்னையே கடிந்து கொண்டவன் அன்றிலிருந்து தன் வேதனையை உள்ளுக்குள் அழுத்தி கொண்டு வெளியில் சிரிக்க ஆரம்பித்தான்....

ஆனால் அவன் இதயம் மட்டும் அவன் இதயராணியின் திருமண நாளை எண்ணி கொண்டே வந்தது...

“ஏதாவது நடந்து அவள் திருமணம் நின்று விடக்கூடாதா?? அவள் என்னவள்... எனக்கானவள்... என்னிடமே வந்து விடக்கூடாதா??” என்று ஒரு மூலையில் ஓடி கொண்டே இருக்கும்...

உடனேயே இந்த திருமணம் நின்றால் எத்தனை பேருக்கு கஷ்டம்.. என் சுய நலத்திற்காக எப்படி இப்படி நினைக்க முடிகிறது ?? என்று தன்னையே திட்டி கொண்டு தன் மனதை அடக்கி விடுவான்....

ஆனாலும் அவள் திருமண நாள் நெருங்க நெருங்க உள்ளுக்குள் படபடப்பாக வேதனையாக இருக்கும்....

அதுவும் இன்னும் திருமணத்திற்கு இரண்டே நாள் இருக்க , இன்று அவள் வீட்டில் திருமண விழாவிற்காக பந்த கால் நடும் விழா.....

அதோடு மெகந்தி பங்சன் இன்று என்று காலையில் அவள் கையில் வைத்திருந்த அந்த மெகந்தியை போட்டோ எடுத்து அவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி இருந்தாள் பனிமலர் அவன் நிலை அறியாமல்.....

அவள் முகம் தெரியாமல் வெறும் கைகளை மட்டும் அனுப்பி இருந்தாள்....

அவள் கைகளை கண்டதுமே அவன் இதயம் எகிறி குதிக்க ஆரம்பித்தது...

அந்த மருதாணி டிசைன் அவள் வெண்ணிற கைகளுக்கு மிக அழகாக பொருத்தமாக இருக்க, அவனுக்கு உடனேயே அவள் முகத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது..

சாதாரணமாகவே மனதை சுண்டி இழுப்பவள்.. இன்று எப்படியும் புடவை கட்டி தலை நிறைய பூ வைத்து அலங்காரத்தில் சிரித்த முகமாக இருப்பாள்...

அவளை அப்படி பார்க்க வேண்டும் என அவன் இதயம் துடித்தது.... ஆனால் என்ன சொல்லி சென்று அவளை பார்ப்பது?? என்று தவித்தான்...

அவள் புகைபடத்தையாவது அனுப்பி வைக்க சொல்லலாம் என்றாலும் அவள் இன்னொருவனுக்கு சொந்தமாக போகிறவள்.. அவள் புகைபடத்தை உன் அலைபேசியில் வைத்திருப்பது தப்பு என்று அவன் மனம் இடித்துரைக்க, நல்ல பையனாக தன் மனம் சொன்னதை கேட்டு அமைதியாகி விட்டான்....

“இனி என் வாழ்வில் அவள் இல்லை ... எனக்கு அவளுடன் வாழும் அந்த வரம் கிடைக்கவில்லை...

0.00001% ஆக எப்படியாவது அவள் எனக்கு கிடைத்து விட மாட்டாளா?? ஈஸ்வரா எதாவது செய்யேன்.. எத்தனை இதயங்களை காப்பாற்றி இருக்கிறேன்...

என் இதயம் படும் வலி வேதனையை போக்கி என்னை காப்பாற்றி விடேன்.. என்னவளை என்னிடமே சேர்த்து விடேன்... “ என்று மனம் உருகி அந்த ஈசனிடம் மண்டி இட்டு வேண்டினான்...

அவன் வேண்டுதலுக்கு செவி சாய்த்த அந்த ஈசனும் அடுத்த சில மணி நேரங்களிலயே அவனவளை அவனிடம் சேர்த்துவிட்டான்....

அந்த மகிழ்ச்சியில் தான் துள்ளி குதித்து கொண்டிருக்கிறான் அந்த இதய நல மருத்துவன்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!