காதோடுதான் நான் பாடுவேன்-17


அத்தியாயம்-17

வ்வொருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க காலமும் அதன் கடமையில் பிசியாகி செவ்வனே அதன் பணியை செய்ய நாட்கள் விரைந்தோடி சென்றது...

மதுவந்தினியின் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியிருந்தது அதற்குள்.. இந்த ஐந்து மாதங்களில் தன் சிறுபிள்ளை குணத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்து தெளிவாகியிருந்தாள் மது...

தனக்கு திருமணம் ஆனதும் மாமியார் நாத்தனார் என்ற புது உறவுகளை ஏற்று அவர்களுக்கு பிடித்தவளாக வளைய வருவதும் புது விதமாக இருந்தது...

அதை எல்லாத்தையும் விட சமீபமாக அவள் உள்ளே புதிதாக முளைத்திருந்த காதல் இன்னும் சுகமாக இருந்தது அவளுக்கு...

அதுவும் தாலி கட்டி தன்னை மணந்த கணவன் மீது வந்துள்ள காதல்....

எல்லாரும் காதலித்து பின் கை பிடிக்க, இவள் வாழ்வில் கை பிடித்து முழு உரிமையும் பெற்ற பின் வந்துள்ள காதல்....

ஆனால் அதை உரியவனிடம் தான் வாய்விட்டு சொல்ல முடியவில்லை அவளால்... காதல் முளைத்த நாளிலிருந்தே அவனை ரகசியமாக பார்க்க மட்டுமே முடிகிறதே தவிர, அவனை இன்னும் நேருக்கு நேராக பார்க்க, அவனை பார்த்து நாலு வார்த்தை பேச தந்தி அடிக்கிறது அவளுள்ளே...

அவனாவது ஏதாவது ஆசையாக பேசுவான் என்று பார்த்தால் ம்ஹூம்.. அந்த விருமாண்டி இவள் பக்கம் திரும்பிய மாதிரியே தெரியவில்லை...

இருவரும் ஒரே அறையில் தங்கிய பொழுதும், இரவில் ஒன்றாக உறங்கிய பொழுதும் இதுவரை ஆசையாக, தப்பாக ஒரு கணவன் பார்வை கூட விழவில்லை அவள் மீது...

மதுவுக்கே இதை நினைத்து ஆச்சர்யம்... இவள் கேள்விபட்ட, அதுவும் சுந்தரி சொன்ன கதைகளை கேட்ட பொழுது கணவன் என்றால் ஒரு நாள் கூட இரவில் மனைவியை பிரிந்து இருக்க முடியாது என்று பதிய வைத்திருந்தாள்...

அப்படித்தான் சுந்தரி அக்காவின் கணவன் என்று சுந்தரி சொல்லி கேட்டும், அதே போல சுந்தரி அவள் தாய் வீட்டுக்கு வந்திருந்தாலும் பின்னாலயே வந்து அவளை அழைத்து சென்று விடுவதையும் நேரில் பார்த்து இருக்கிறாள்...

அதற்கெல்லாம் அப்பொழுது அர்த்தம் புரியவில்லை...

ஆனால் அவளும் வளர்ந்து திருமணம் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொள்ளும் பொழுது அந்த சுந்தரி சொன்னதின் அர்த்தம் ஓரளவுக்கு விளங்கியது இப்பொழுது..

ஆனால் தன் கணவன் ஒரு நாளும் தன்னை நாடியதும் இல்லை.. ஏன் தப்பாக கூட ஒரு பார்வை பார்க்கவில்லையே.. ஏன்??

அப்படி என்றால் இந்த திருமணத்தில் அவனுக்கு விருப்பம் இல்லையா?? இல்லை என்னை அவனுக்கு பிடிக்க வில்லையா?? என்ற அடுத்த கவலை ஆரம்பித்தது அவளுக்குள்..

ஏன் இவளுக்குமே ஆரம்பத்தில் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைதான்... ஆனால் போக போக தன் கணவனின் குணம் புரிந்து அவளுக்கு அவனை பிடித்து விட்டதே..

“அதே போல அவன் மனதிலும் என்னை பற்றி நல்ல எண்ணம் வந்திருக்கும் தானே... பிறகு ஏன் என்னை ஏறேடுத்தும் பார்ப்பதில்லை.. ஒரு வேளை அவர் வேற யாரையாவது லப் பண்ணியிருப்பாரோ?? லவ் பெயிலியரா ஆயிருக்குமோ?? அதனால் தான் இத்தனை நாள் திருமணம் வேண்டாம் என்று மறுத்து வந்தாரா??

அந்த பெண்ணின் நினைவில் தான் என்னை ஏற்றுக்காமல் இருக்கிறாரோ??” என்று பல கேள்விகள் அவள் உள்ளே...

ஆனால் அதை யாரிடம் எப்படி கேட்பது என்று தான் புரியவில்லை அவளுக்கு...

இருந்தும் ஒரு நாள் தைர்யத்தை வரவழைத்து கொண்டு அகிலாவிடம் மெல்ல விசாரித்தாள்...

“அகி... நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது... “ என்று மெல்ல இழுத்தாள் மது...

“அடடா.. எதுக்கு அண்ணி.. இப்படி தயங்கறீங்க... தைர்யமா கேளுங்க... நீங்க தப்பாவே கேட்டாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. போதுமா.. சும்மா கேளுங்க.. “ என்று சிரித்தாள் அகிலா...

“வந்து... வந்து.... உங்க பெரியண்ணா யாரையாவது லவ் பண்ணினாரா?? “ என்றாள் ஒரு வழியாக தயங்கியவாறு....

அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் அகிலா...

“கிரேட் ஜோக் அண்ணி.. எங்க அண்ணன் மூஞ்சிக்கு அவன் போய் யாரையாவது லவ்..ஆ... .” என்று மீண்டும் சிரித்தாள்....

மது அவளை பார்த்து முறைக்க, தன் சிரிப்பை அடக்கி கொண்ட அகிலா

“ஓகே ஒகே.. அண்ணி.. உங்க புருசனை பத்தி கிண்டல் அடிச்சா உங்களுக்கு கோபம் வருது னு நினைக்கிறேன்... இனிமேல் அடக்கி வாசிக்கணும்... “ என்று சிரித்தவாறே

“அண்ணி... எங்க அண்ணன்.. அவன் கூட பிறந்த தங்கச்சியான என்னையே என்ன விரட்டு விரட்டினான் னு பார்த்திங்க இல்ல.. ஏதோ உங்க புண்ணியத்துல நீங்க அவன் மண்டைல உறைக்கிற மாதிரி எதோ திட்டி இப்பதான் கொஞ்சமா பாசத்தை காமிக்கிறான்..

அப்படி இருக்கிறவன் எப்படி அண்ணி மானே மயிலே தேனே னு வேற ஒரு பொண்ணை கொஞ்சி லவ் பண்ணியிருக்க முடியும்??

சான்சே இல்ல அண்ணி... இந்த சிடுமூஞ்சி... ஆங் என்ன பேர் வச்சீங்க?? “ என்று தன் தலையை தட்டி யோசித்தவள்

“ஆங்... சிடுமூஞ்சி, விருமாண்டிக்கு லவ் எல்லாம் செட் ஆகாது அண்ணி... அப்படி எல்லாம் இருக்க சான்சே இல்ல..

ஏனா அண்ணா 10த் வரைக்கும் படிச்சது பாய்ஸ் ஸ்கூல் ல.. அங்கதான் ஆதி அண்ணா, வசி அண்ணா எல்லாம் பிரெண்ட்ஸ் ஆனாங்க.. அப்புறம் 10 த் முடிச்சதும் NDA (National Defence Academy) மிலிட்டரி ஸ்கூல் ல சேர்ந்துட்டானாம்..

அது பயங்கர ஸ்ட்ரிக்ட் ஸ்கூலாம்... அப்பயே மிலிட்டரி மாதிரி ட்ரெயினிங் எல்லாம் கொடுப்பாங்களாம்..

அவனுக்கு எங்கப்பா மாதிரி மிலிட்டரி ல இன்ட்ரெஸ்ட் ங்கிறதால அவனே விருப்பபட்டு அதில போய் சேர்ந்துட்டானாம்... அப்புறம் அதிலயே படிச்சு என்னவோ பெரிய படிப்பு எல்லாம் படிச்சானாம்.. எனக்கு சரியா தெரியல அண்ணி...

இவன் போனது பத்தாதுனு அந்த மங்கி மகி அண்ணாவையும் இந்த ஸ்கூல் ல சேர்த்து விட்டுட்டான்.. அவனால ஒரு நாள் கூட அங்க சமாளிக்க முடியல.. ஒரே அழுகையாம்.... அப்புறம் அம்மாதான் போய் கூட்டிகிட்டு வந்திட்டு இங்கயே சேர்த்துட்டாங்களாம்..

இந்த கதையெல்லாம் அந்த மங்கிதான் சொன்னான் ஒரு நாள்...

அதனால அண்ணா படிச்ச இடத்துல பொண்ணுங்க வாசம் சுத்தமா இல்ல அண்ணி..

ஹ்ம்ம்ம் இப்ப வேலை செய்யற இடத்துல எதுவும்?? “ என்று மீண்டும் தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள் அது கூட எதுவும் இருக்காது அண்ணி..

ஏனா அண்ணா வேலை செய்யற ஸ்டேஷன்ல மாலினி னு ஒரு லேடி இன்ச்பெக்டர்... அண்ணா மேல பயங்கர லவ்ஸ்... அண்ணா கிட்ட நேரடியாவே புரபோஸ் பண்ணியிருக்காங்க.. அண்ணா ஒரு அறைவிட்டு ஒலுங்கா ட்யூட்டிய பாருனு சொல்லிட்டாராம்...

அவங்க நேரா எங்க வீட்டுக்கு வந்திட்டாங்க... எங்க அம்மாகிட்ட தினமும் நல்லா ஐஸ் வைப்பாங்க எங்க அண்ணனை கட்டிக்க அவனை சம்மதிக்க சொல்லி..

எங்கம்மாவை அத்தை அத்தைனு அப்படி கொஞ்சுவாங்க... எனக்கென்னவோ அவங்களை பிடிக்கவே இல்லை..

அம்மாவும் வேற வழி இல்லாம என் அண்ணாகிட்ட கெஞ்சி பார்த்தாங்க... அண்ணா முடியவே முடியாதுனு சொல்லிட்டான்..

அப்புறம் நம்ம செக்யூரிட்டி அங்கிள் கிட்ட சொல்லி இனிமேல் அவங்க வந்த வீட்டுகுள்ள விடக்கூடாது னு சொல்லிட்டான்...

பாவம்.. அதுக்கப்புறம் அப்பப்ப அவங்க அம்மாவை கோவில்ல பார்த்து அண்ணா கிட்ட ரெகமன்ட் பண்ண சொல்லி நச்சரிச்சுகிட்டே இருந்தாங்க...

ஒரு வழியா உங்க கல்யாணம் ஆன பிறகுதான் எங்கம்மாவுக்கு அவங்க தொல்லை விட்டது போல... “என்று தன் அண்ணன் கதையை சொன்னாள் அகிலா சிரித்தவாறு...

அதை கேட்டதும் ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது மதுவுக்கு...எப்படியோ வேற யாரும் இல்ல அவன் வாழ்வில் என்று..

இன்னொரு பக்கம் அந்த மாலினி மேல் கோபமாக வந்தது..

“என் புருசனை அவ எப்படி லவ் பண்ணலாம்..” என்று...

அவளின் எண்ணத்தை கண்டு கொண்ட அகிலா

“அதனால நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க அண்ணி.. அண்ணா கோபப்படுவான் தான்.. ஆனால் ரொம்ப நல்லவன்... சீக்கிரமே உங்களை புரிஞ்சுக்குவான்... “ என்று சிரித்தாள்..

மதுவுக்கோ வெக்கமாக இருந்தது இந்த சின்ன பெண்ணிடம் இதை பற்றி பேசி விட்டோமே என்று.

“ஹீ ஹீ ஹீ “ என்று அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள் மது..

அந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு நிகிலன் கொஞ்ச சீக்கிரம் வீடு திரும்பி இருந்தான்... தன் காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே வர, அங்கு வரவேற்பறையில் கண்ட காட்சியை கண்டு திகைத்து நின்றான்..

இடுப்பில் சுடிதாரின் துப்பட்டாவை மடித்து கட்டி கொண்டு மது அங்கே டான்ஸ் ஆடி கொண்டிருந்தாள்... அகிலாவும் சிவகாமியும் அவள் ஆடுவதை ரசித்து பார்த்து கொண்டிருக்க, மதுவும்

கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்.. என் செல்ல கண்ணனே வா...

என்ற பாடலை ரசித்து பாடிய படியே ஆடிக்கொண்டே சற்று முன்னால் வர, அங்கு நின்றிருந்த நிகிலனை கவனிக்காமல் கால் இடறி அவன் மேல் சாய்ந்தாள்....

இதை எதிர்பார்த்திராத நிகிலனும் அவள் மேலும் கீழ விழுந்து விடாமல் இருக்க அவள் இடையோடு பற்றி தன்னோடு சேர்த்து அணைத்தவாறு அவளை நிறுத்தியிருந்தான்...

சில விநாடிகள் இருவரும் தங்களை மறந்து இருக்க, அதற்குள் சுதாரித்து கொண்டவன் அவளை பிடித்து தள்ளி நிறுத்தினான்...

பின் மதுவை பார்த்து முறைத்தவன்

“என்ன இது ஆட்டம் பாட்டம் எல்லாம்.. ?? “ என்று முறைத்தான்...

அதற்குள் மதுவும் சுதாரித்து கொண்டவள் தன் துப்பட்டாவை எடுத்து மேல போட்டு கொண்டு தலையை குனிந்தவாறே சமையல் அறைக்குள் ஓடி விட்டாள்...

பெரிய மனுசியாக அகிலா எழுந்து முன்னால் வந்து

“சாரி ணா... அண்ணி காலேஜ் ல கான்வகேசன் பங்சன் நாளைக்காம்.. அதுக்கு அவங்கள டான்ஸ் ஆட சொல்லியிருக்காங்களாம்.. அதுதான் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணி கிட்டிருந்தாங்க...அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க... “ என்றாள் தைர்யத்தை வரவழைத்து கொண்டு...

அவன் ஏதோ யோசிக்க, எங்க அவன் தன் அண்ணியை ஆட விட மறுத்து விடுவானோ என்று அஞ்சிய அகிலா,

“அண்ணா... அண்ணி சூப்பரா டான்ஸ் ஆடறாங்க.. அவங்க ஒரு கிளாசிக்கல் டான்சராம்.. அவங்க காலேஜ்ல எல்லா பங்சனுக்கும் அவங்க தான் டான்ஸ் ஆடுவாங்களாம்.. அதான் இந்த முறை அவங்களையே ஆட சொல்லியிருக்காங்க...

ப்ளீஷ் ணா... வேணாம்னு சொல்லிடாதிங்க.. இந்த ஒரு தரம் மட்டும் அவங்க ஆடட்டும்.. “என்று தன் அண்ணிக்காக பரிந்து பேசினாள் அகிலா..

அதை கேட்டதும்

“சரி.. ஆடி தொலையட்டும்.. ஆனா நீ என்ன பண்ற இங்க??.. நீ உன் படிப்பை பார்க்கிறதில்லை.. இங்க உட்கார்ந்து எதுக்கு அவ ஆடறத பார்த்துகிட்டு இருக்க?? .. “என்று முறைத்தான்...

“இதுவரைக்கும் படிச்சுகிட்டுதான் இருந்தேனா.. இப்பதான் கீழ வந்தேன்.. இதோ இப்ப போய்டுவேன்.. தேங்க்ஸ் ணா.. அண்ணி ய ஆட சொன்னதுக்கு... “ என்று எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டு திரும்பி பார்க்காதவாறு ஓடிவிட்டாள்...

தன் தங்கையின் செல்ல முத்தத்தில் கிறங்கி நின்றவன்

“இது என்ன புது பழக்கம்?? இது நாள் வரை இதுபோல இல்லையே... தன் அண்ணியை ஆட சொன்னதுக்கு இவள் இப்படி குதிக்கிறாளே.. “ என்று புன்னகைத்தவாறு தன் அறைக்கு சென்று தன் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்ட, அப்பொழுது தான் கவனித்தான் அந்த சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை....

மது அவன் மார்பில் வந்து விழுந்த பொழுது அவள் வகுட்டில் வைத்திருந்த குங்குமம் ஒட்டியதாயிருக்கும்.. என்று நினைக்கையிலயே பூச்சென்டாக தன் மார்பில் வந்து விழுந்தவளின் மெண்மை அவன் உடல் எங்கும் பரவியது...

அவளின் இடையை பற்றிய பொழுது அவன் உள்ளே பாய்ந்த மின்சாரம் மீண்டும் அவன் உள்ளே பற்றி எரிவதை போல இருந்தது....

அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டு குளியலறைக்குள் புகுந்து ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்றான்...

சில்லென்ற குளிர்ந்த நீர் அவனின் மேனியில் பட, அது மீண்டும் அவளின் மோதலை நினைவு படுத்தி அவனுள் பரவசத்தை ஏற்படுத்தியது...

“சே... என்னாச்சு எனக்கு?? எதுக்கு அந்த ஒட்டட குச்சியவே நினச்சுகிட்டு இருக்கேன்... என்ன மாயம் பண்ணினாளோ?? இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும்.. “ என்று பலமுறை உரு போட்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே வெளியில் வந்தான்...

வெளியில் வந்தவன் முக்கால் பேன்ட் ம் இலகுவான டீ சர்ட் ம் அணிந்து கொண்டு தலையை துவட்டியவாறே கீழிறங்கி வர , மதுவுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்க வெக்கமாக இருந்தது...

அவன் மார்பில் விழுந்தவள் ஏதோ வித்தியாசத்தை புதுவித உணர்வை உணர்ந்தாள்...

முன்பு ஒரு தரம் இது மாதிரி இடித்து கொண்ட பொழுது தோன்றாத உணர்வு இப்பொழுது தோன்றியது... ஏனோ அவன் மார்பிலயே தஞ்சம் புகுந்து கொள்ள வேண்டும் போல இருந்தது அவளுக்கு...

ஆனால் அவளை அவன் விலக்கி நிறுத்திய விதம் அவளுக்கு வெக்கமாகி போனது...

ஏனோ தானே ஆசை பட்டு நின்றதை போலவும் அவன் அவளை விலக்கி நிறுத்தியதை போலவும் இருக்க அதற்கும் மேல் அவன் முகம் பார்க்க முடியவில்லை அவளால்...

தலையை துவட்டிய படியே இறங்கி வரும் தன் கணவனையே ஆசையாக பார்த்தாள் சமையல் அறைக்குள் இருந்தவாறு...

அவள் ஒளிந்து கொண்டு தன்னை பார்ப்பது தெரிந்தும் அவன் கண்டு கொள்ளாமல்

“கேடி. எப்படி ஒளிஞ்சு இருந்து பார்க்கிறா பார்.. “ என்று உள்ளுக்குள்ளே சிரித்து கொண்டே டைனிங் ஹாலுக்கு சென்றான்..

அங்கு சிவகாமியும் அகிலாவும் அமர்ந்து இருக்க, மது உணவு இருந்த பாத்திரங்களை சமையல் அறையில் இருந்து எடுத்து வந்து வைத்தாள்...

இப்பொழுது எல்லாம் சிவகாமியை அமர வைத்து அவள் செய்ய ஆரம்பித்து இருந்தாள்...

எல்லா பாத்திரமும் எடுத்து வந்து வைத்த பிறகு அவளே அனைவருக்கும் பரிமாறி விட்டு அகிலாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்...

நிகிலன் குனிந்தவாறு உணவை உண்டு கொண்டிருக்க, மது நிமிர்ந்து தன் மாமியாரை பார்த்து கண்ணால் ஜாடை காட்ட, சிவகாமியும் பதிலுக்கு அவளுக்கு ஜாடை காட்டி ஏதோ சொன்னார்...

கீழ குனிந்து சாப்பிட்டு கொண்டிருந்தவன்

“என்னமா விசயம்?? என்ன கேட்க சொல்றா உன் மருமக?? “என்றான் தலைய நிமிர்த்தாமல்…

“ஷ் அப்பா.. இவனுக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்கும் ங்கறது அப்பப்ப மறந்து போய்டுது… எதையும் ரகசியமா கூட பேச முடியாது..” என்று மனதுக்குள் புலம்பியவர்

“ஹீ ஹீ ஹீ அது ஒன்னும் இல்ல பெரியவா... நாளைக்கு என் மருமக அவ படிச்ச காலேஜ் ல கோல்ட் மெடல் வாங்கறாளாம்...அதான் உன்னையும் வரச்சொல்லி சொல்ல சொன்னா” என்றார் தயங்கியவாறு...

அதை கேட்டு நிமிர்ந்தவன் மதுவை நேராக பார்த்து

“ஏன்?? அத அவ சொல்ல மாட்டாளா?? நீங்க என்ன நடுவுல?? “ என்றான் நக்கலாக சிரித்தவாறு...அவன் தன்னை நேராக பார்ப்பது தெரிந்ததும் உடனே தலையை குனிந்து கொண்டாள் மது..

“அவ சொல்றதுக்கு என்ன?? நீதான் எப்ப பார் அவள முறைச்சுகிட்டே இருக்கியே.. அப்புறம் எப்படி உன்னை பார்த்து பேசுவா.. பொண்டாட்டினு கொஞ்சமாவது ஆசையா பேசுறியா அவகிட்ட?? உன்னை பார்க்கவே பயப்படறா “ என்று இதுதான் சந்தர்ப்பம் என்று பொரிந்து தள்ளினார் சிவகாமி...

“ஹ்ம்ம்ம்ம் அப்ப முதல்ல உங்க மருமகள என்கிட்ட நேரா நின்னு தைர்யமா அந்த பங்சனுக்கு வாங்கனு என்னை கூப்பிட சொல்லுங்க.. அப்ப சொல்றேன் நான் அவ மெடல் வாங்கறத பார்க்க வர்றதா வேண்டாமானு.. “ என்று மீண்டும் நக்கலாக சிரித்தான் நிகிலன்...

“அம்மாடி மருமகளே.. இனிமேல் நீயாச்சு.. உன் புருசனாச்சு.. எதுனாலும் நீயே நேரடியா கேட்டுக்கோ.. என்னை இனிமேல் பஞ்சாய்த்துக்கு கூப்பிடாதிங்க... “ என்று முகத்தை நொடித்தவாறு தன் உணவை உண்டார் சிவகாமி...

அகிலாவும் இவர்கள் நாடகத்தை ரசித்து சிரித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள்..

அடுத்த நாள் மாலை அனைவரும் கிளம்பி மதுவின் காலெஜ்க்கு சென்றனர்... மதுவின் அப்பாவே வந்து அவர்களை அழைத்து சென்றார்..

நேற்று அவளை சீண்டுவதற்காக சொன்னாலும், வழக்கம் போல வேலை இருப்பதாக சொல்லி நிகிலன் விழாவிற்கு வர மறுத்து விட, சிவகாமி, அகிலா, மற்றும் சாரதா அனைவரும் மதுவுடன் கிளம்பி சென்றனர்....

மதுவுக்கு மனதுக்குள் சின்ன வருத்தம்.. அவன், தன் கணவன் தான் கோல்ட்மெடல் வாங்குவதை பார்க்க வரவில்லையே என்று...

தான் பதக்கம் வாங்குவதை கண்டு

வெரிகுட்.. என்று சொல்லி அகிலாவை அன்று அணைத்து கொண்டதை போல தன்னையும் அணைத்து கொள்ள மாட்டானா?? என்று ஏங்கியது அவள் காதல் உள்ளம்...

“அவன் தான் அடுத்தவங்க மனசை புரிஞ்சுக்காத விருமாண்டி ஆச்சே.. என் மனசு எப்படி புரியுமாம் அவனுக்கு... சரியான விருமாண்டி தான்.. “ என்று உள்ளுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவாறெ வந்தாள் மது..

சிவகாமியும் சாரதாவும் கதை அடித்து கொண்டே வர, அகிலாவும் அவர்கள் கதையில் ஒன்றி விட்டாள்..

மது மட்டும் முன்னால் தன் அப்பாவின் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்து வந்தாள் மனமெல்லாம் தன் கண்வனை திட்டியபடியே

சண்முகத்திற்கு தன் பெண்ணின் முகத்தில் இருந்தே அவள் மனதில் இருந்ததை கண்டு கொண்டார்.. அவருக்குமே மாப்பிள்ளை வராதது வருத்தமாக இருந்தது..

“இன்னைக்கு என்ன ஆனாலும் மாப்பிள்ளையிடம் நேரடியாக கேட்க வேண்டும் அவர் ஏன் வரவில்லை என்று” என்று எண்ணிக் கொண்டார்....

காலேஜ் ஐ அடைந்ததும் மது அவர்களை பார்வையாளர் பகுதியில் அமர்த்தி விட்டு விழா மேடையை நோக்கி சென்றாள்..

நீண்ட நாள் கழித்து தன் வகுப்பு நண்பிகளை காண, மிகவும் சந்தோசமாக இருந்தது...

நெருங்கிய தோழிகள் என்று யாரும் இல்லை என்றாலும் எல்லாரிடமும் ஒரு ஹாய் நட்புதான்...

ஆனாலும் அவர்களை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது..

அவர்களும் மதுவை புதிதாக பார்த்தனர்.. முன்பு இருந்ததை விட அவள் தேறியிருப்பதாக இருந்தது... அதுவும் அவள் பேட்மின்டனில் ஜெயிச்ச விசயம் பரவியிருக்க அனைவரும் அவளை வாழ்த்தினர்...

மது அவர்களுக்கு புன்னகைத்தவாறு சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு தன் ஆசிரியர்களையும் பார்த்து விட்டு பின் மேக்கப் அறைக்கு சென்று விட்டாள்..

ஏனோ சிறுவயதில் இருந்தே இந்த நாட்டியத்தில் அவளுக்கு தனி விருப்பம்.. மற்றதில் கூச்ச பட்டு நிற்பவள் இந்த நாட்டியம் என்று வந்த பொழுது எந்த தயக்கமுமின்றி பள்ளி காலத்துலயே மேடையில் ஏறி ஆட பழகியிருந்தாள்..

அது அப்படியே தொடர, கல்லூரியிலும் அவளே எல்லா விழாவிலும் அவளுடைய நாட்டியம் இடம் பெறும்...

இன்று யாரும் சிறப்பாக ஆடுபவர்கள் இல்லை என்பதால் அவள் வகுப்பு பேராசிரியர் அவளை அழைத்து அவளையே ஆட சொல்லி இருந்தார்...மதுவும் ஒத்து கொண்டு கடந்த ஒரு வாரமாக பிராக்டிஸ் பண்ணி வந்தாள்...

தனக்கான மேக்கப்பை போட்டு தயாராக இருக்க, விழா ஆரம்பிக்கவும் முதல் நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சியாக மதுவின் நடனம் இருந்தது...

“கண்ணுக்குள் பொத்தி வைத்தேன் என் செல்லக் கண்ணனே வா .. “ என்று தன் கணவனை நினைத்தபடியே அவள் வெக்கம் கலந்த பார்வையுடன் ஆடியபடியே பார்வையாளரை பார்க்க,

முதல் வரிசையில் அமர்ந்திருந்தவனை கண்டதும் உள்ளுக்குள் இன்பமாய் அதிர்ந்தாள்... அவள் யாரை எதிர்பார்த்து இதுவரை உள்ளுக்குள் வாடி இருந்தாளோ அவனே, அவள் கணவன், அந்த விருமாண்டியே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தான்...

தன்னிடம் வரமாட்டேன் என்று சொன்னவன் சர்ப்ரைஸாக அங்கு வந்திருக்கவும் அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது...அவள் எதிர்பார்த்த அந்த கண்ணனே நேரில் வந்ததை போல இருக்க, அவளுள் மெல்லிய நாணம் பரவியது....

அவன் அன்று அவள் இடையை பிடித்தது நினைவு வர அதே வெட்கத்தோடு தன் நாட்டியத்தை இலயித்து ஆட ஆரம்பித்தாள்... எப்பவுமே நாட்டியம் ஆடுகையில் அவளை மறந்து ஆடுவது வழக்கம்...

இன்று தன் மனம் கவர்ந்தவன் முன்னால் அதுவும் அவன் வருகையை வேண்டி ஆடவும் அந்த ஆட்டத்தில் இன்னும் இலயித்துப் போனாள்...

ஒவ்வொரு அசைவும் அவள் அனுபவித்து ஆட, அது அந்த பாடலுக்கு பொருத்தமாக இருந்தது.. அடிக்கடி அவள் பார்வை அவனை தழுவி சென்றது...

முன் வரிசையில் அமர்ந்திருந்த நிகிலனுமே அசந்து போய் தான் உட்கார்ந்து இருந்தான்.. “இந்த ஒட்டட்ட குச்சியா இப்படி வளைந்து ஆடுவது.. “ என்று..

அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குள்ளும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வை தூண்டியது.. அதுவும் தன்னிடம் அடிக்கடி வரும் அவளின் பார்வை வீச்சும் அதில் இருந்த ஏதோ ஒன்று அவனை அப்படியே கட்டி இழுத்தது...

அந்த பாவனை அந்த பாட்டிற்கு தேவை என்றாலும் என்னவோ அவள் தனக்காகவே அந்த பாடலை தேர்வு செய்தது போலவும் தனக்காகவே அவள் பிரத்தியேகமாக ஆடுவது போலவும் இருந்தது...

இமைக்க மறந்து அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.. இதுவரை இந்த மாதிரி கலை நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது அவனுள் தோன்றாத ஏதோ ஒன்று இன்று அவனை புரட்டி போட மெய் மறந்து அமர்ந்து இருந்தான்....

மது ஆடி முடித்ததும் நாட்டிய பாணியில் அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற, அவள் சென்று சில நிமிடங்கள் ஆகியும் அவள் இன்னும் அந்த மேடையில் இருந்து தன்னை பார்ப்பதை போலவே இருந்தது அவனுக்கு...

உள்ளே சென்ற மதுவுக்கும் அதே பீலிங் தான்... தான் ஆடும் பொழுது அவன் தன்னையே ரசித்து பார்த்ததை அவளும் கண்டு கொண்டாள்... திருமணம் ஆகி இத்தனை நாட்களில் இது தான் முதல்முறை அவன் அவளை தன் மனைவியை ரசித்து பார்த்தது....

அதை கண்டதும் இன்னுமே மதுவுக்குள் படபடப்பாக இருந்தது...

எப்படி முழுவதும் ஆடி முடித்தாள் என்று அவளுக்கே தெரியாது.... உள்ளே வந்தவள் சிறிது நேரம் அப்படியே மெய் மறந்து இருக்க, மற்ற பெண்கள் அவள் நடனத்தை புகழ்ந்து பாராட்ட நினைவுலகிற்கு வந்தாள்....

பின் தன் மேக்கப்பை கழைத்து விட்டு வேற ஆடை அணிந்து கொண்டு பார்வையாளர் பக்கம் வந்து தன் குடும்பத்தாரிடம் வந்து அமர்ந்து கொண்டாள்..

அகிலா அவளை கட்டிகொண்டு

“சூப்பரா ஆடினீங்க அண்ணி.. கலக்கிட்டீங்க.. செமயா இருந்தது.. “ என்று பாராட்ட,சிவகாமியுமே தன் மருமகளை மெச்சிக் கொண்டார்... அனைவருக்கும் அவள் பதிலாக புன்னைகையை உதிர்த்தவள் பார்வை என்னவோ தன் கணவனிடமே இருந்தது...

அவனிடமிருந்து ஒரு சிறு பாராட்டு கிடைக்காதா?? என்று சிறு ஏக்கம்... பின்னால் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்து கொண்டு இருக்க, அப்பொழுது தான் உறைத்தது அவன் மட்டும் ஏன் தனியாக முன் வரிசையில் அமர்ந்து இருக்கான் என்று...

அதை சிவகாமியிடம் கேட்க நினைத்த நேரம், மற்ற சில கலை நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்றிருக்க, அந்த கல்லூரியின் பிரின்சிபல் மேடம் மேடை ஏறி சிறப்பு விருந்தினரை வரவேற்றார்....

“நம் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் Assistant Commissioner of Police Mr நிகிலன் IPS அவர்களை சிறப்புரையாற்ற வரவேற்கிறேன்... “என்று அவர் முடிக்கவும் பார்வையாளர் பக்கமிருந்து பலத்த கரகோஷம் எழும்பியது...

அதை கேட்ட மதுவோ அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்தாள்....

வெறும் சாதாரண போலிஸ் என்று எண்ணியிருந்த தன் கணவன்

Assistant Commissioner ஆ ??? என்று பயங்கர ஷாக் ஆகி அமர்ந்திருந்தாள்..

ஒரு வேளை இது வேற யாராவது இருக்குமோ என்று மேடையை உற்று பார்க்க முன் வரிசையில் அமர்ந்திருந்த அவனே தான் மேடை ஏறும் படிகளில் இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறிக் கொண்டிருந்தான்...

சந்தேகமே இல்லாமல் அவனேதான்....

தன் கணவன் ஒரு IPS ஆபிசர் என்று தெரியவும் உள்ளுக்குள் சிலிர்த்தது அவளுக்கு...

சென்னையின் Assistant Commissioner பற்றி அவளும் கேள்வி பட்டிருக்கிறாள்... மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்னால் அந்த புது ACP வந்த பிறகு நிறைய மாற்றங்கள் வந்திருந்தன....

புது ACP ஒரு நேர்மையான, நியாயமான முக்கியமாக லஞ்சம் வாங்காத சின்சியர் போலிஸ் ஆபிசர் என்று கேள்வி பட்டிருக்கிறாள்..

அவர் வந்த பிறகே ரௌடிசம் குறைந்து, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பும் பொதுமக்கள் விதிகளை மதித்து நடப்பதும் என்று இன்னும் நிறைய கட்டுபாடுகளுடன் இருப்பதாக அவள் ஒரு கட்டுரையில் படித்தது...

அப்பொழுது படித்த அவர் பெயர் அவள் நினைவில் இல்லை...

இன்று அதை நினைத்து பார்த்தவள் அப்படி பட்ட பெருமைக்குரியவன் என் கணவன் என்று எண்ணுகையிலயே உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவும் கர்வமாகவும் இருந்தது....



அதே நேரம் நிகிலன் கம்பீரமாக மேடை ஏறி சென்று மைக்கை கையில் வாங்கி பார்வையாளர் பக்கம் பார்த்து நின்றான்...

அப்பொழுது வீசிய தென்றலில் அவன் முன் உச்சி நெற்றி முடி கற்றைகள் அழகாக பறக்க, அதை தன் ஒரு கையால் கோதி விட்டு கொண்டு மீண்டும் ஒரு கையால் மைக்கை பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தான்...

அவன் மேடை ஏறி நின்ற கம்பீரத்திலும் அவன் முடியை ஒதுக்கிய ஸ்டைலிலும் மதுவே அசந்து மயங்கி நிக்க, பார்வையாளர் பக்கம் இருந்த அனைத்து பெண்களும் ஓ வென்று கத்தினர். பலர் விசில் அடித்தனர்...

அது பெண்கள் கல்லூரி என்பதால் வழக்கமாக இந்த மாதிரி விழாக்களில் பெண்கள் கொஞ்சம் அதிகமாக ஆட்டம் போடுவர்.. அதுவும் இன்று அவர்களுக்கு பிடித்த இளம் போலிஸ் ஆபிசரான நிகிலனை கண்டதும் அனைவருக்குமே கொண்டாட்டம்...

அதுவும் அவன் காக்க காக்க சூர்யாவை நினைவு படுத்தும் விதத்தில் அவனுக்கும் மேலயும் கம்பீரமாக இருக்க, பெண்களின் கூச்சலுக்கு சொல்லவே வேண்டாம்....

இது மாதிரி கல்லூரிகளில் பல முறை சிறப்பு விருந்தினராக சென்றிருந்ததால் அவனுக்கு இதெல்லாம் பழகி போன ஒன்று...

அங்கு இருந்த பெண்களின் கத்தலை கண்டு அழகாக வெட்கப்பட்டு சிரித்தான்..

அதை பார்த்து மீண்டும் ஓ வென்று எல்லாரும் கத்த

மதுவுக்கோ நம்பவே முடியவில்லை... வீட்டில் பார்ப்பவன் எப்பவும் சிடுசிடுனு தான இருப்பான்.. இங்க எப்படி இப்படி கேசுவலா இருக்கான்?? என்று குழம்பி தன் மாமியாரை பார்க்க அவருக்குமே அது ஆச்சர்யமாகத்தான் இருந்தது...

தன் மகனை இப்படி சிரித்து பார்த்ததில்லை இதுவரைக்குமே... அவருமே அதிகமாக வெளியில் வந்ததில்லை என்பதால் தன் மகன் வெளியில் எப்படி பழகுகிறான் என்று நேராக பார்ப்பது இதுதான் முதல் முறை...

அவனை சிரித்து பார்த்த பூரிப்பில் அவனையே ரசித்து கொண்டு அமர்ந்து இருந்தார் சிவகாமி....


துவின் பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.. அவர்களுக்குமே இப்பொழுது தான் தெரியும் தங்கள் மாப்பிள்ளை போலிஸில் பெரிய பதவி என்று...

அவர்கள் முன்பு விசாரித்த பொழுது பெரிய பையன் போலிஸ் டிபார்ட்மெண்டில் வேளை செய்வதாக கேட்டதில் போலிஸாக இருக்கும் என்று அதற்கு மேல் அவர்கள் விசாரிக்கவில்லை..

மாப்பிள்ளையாக வேண்டிய மகிழனை பற்றியே அதிகம் விசாரித்தனர்... அதனால் பெரிய பையனை பற்றி அவ்வளவாக விசாரித்திருக்கவில்லை...

திருமணத்தின் பொழுது மாப்பிள்ளை மாறிய பிறகு இனிமேல் விசாரித்து என்ன பயன் என்று அதற்கு மேல் எதுவும் அவர்கள் நோண்டவில்லை...

தங்கள் பெண் திருமணம் நிக்காமல் நடந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்களுக்கு அதற்கு மேல் ஒன்றும் தோண்றவில்லை...

ஏதோ அந்த முருகன் புண்ணியத்தில் மது புகுந்த வீட்டில் நல்ல படியாக பொருந்தி விட, அவர்களுக்குமே அதன் பிறகு மாப்பிள்ளையை பற்றி பெரிதாக கவலை பட வில்லை...

இன்று தங்கள் மாப்பிள்ளை இந்த சிட்டியோட Assistant Commissioner என தெரிய வர, இருவருமே வாயடைத்து அமர்ந்திருந்தனர்...

“இவ்வளவு பெரிய இடமா தங்கள் பெண்ணுக்கு அமைஞ்சிருக்கு?? ஆனால் சம்மந்தியோ, மாப்பிள்ளையோ இத பற்றி என்னைக்குமே பெருமையாக சொன்னதில்லையே..”.

ஏன் தங்கள் மகளே இதை பற்றி கூற வில்லையே என்று மதுவை பார்க்க அவளுமே ஆச்சர்யத்தில் இருப்பதை கண்டு அவளுக்குமே இப்பொழுது தான் தெரிந்திருக்கிறது என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...

இப்படி தன் குடும்பத்தார் தன்னை பற்றி நினைத்து கொண்டிருப்பதை அறியாதவன், முன்னால் இருந்த பார்வையாளர்களை பார்த்து தன் பேச்சை ஆரம்பித்தான்....

அது பெண்கள் கல்லூரி என்பதால் பெண்களின் சேப்டி பற்றியும்,பெண்களுக்கான தற்காப்பு கலையின் அவசியம், அதை பள்ளி கல்லூரி பாடங்களுடன் எக்ஷ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிஸ் உடன் இதையும் கற்று கொள்ளவேண்டும் என்றும், பெண்கள் தைரியமாக எந்த துணையும் இன்றி வெளியில் வரவேண்டும்..

எந்த ஒரு ஆபத்து காலத்திலும் காவல் துறையை எப்படி அணுக வேண்டும், தற்காப்பு ஆயுதங்கள் பற்றியும் அப்புறம் எல்லாரும் ரூல்சை எப்படி மதிக்க வேண்டும் என்று பேசினான்....

தன் வீட்டு பெண்களுக்கு சொல்லும் அறிவுரைகளையே இங்கயும் கொஞ்சம் விளக்கமாக சொன்னான்..

கடைசியாக சமீபத்தில் பொல்லாச்சியில் நடந்த இளம்பெண்கள் தற்கொலை பற்றி எடுத்துக் கூறியவன் பெண்கள் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும்...குறிப்பாக இந்த மாதிரி மொபைல் டிவைஸ் பயன்படுத்தும் பொழுதும், புதியவர்கள் உடன் பழகும் பொழுதும் கவனமாக இருக்கவேண்டும்

அப்படியும் தெரியாமல் தவறு செய்து முழிக்கும் நேரத்தில் தவறான முடிவு எதுவும் எடுக்காமல் தைர்யமாக காவல் துறையையோ இல்லை பெண்கள் அமைப்பையோ அணுக வேண்டும்..

இப்படி ஆகி விட்டதே , மானம் போச்சே என்று கூனிக் குறுகாமல் அதை தைர்யமாக எதிர்த்து நின்று தட்டி கேட்க வேண்டும்.. என்று இன்னும் பல அறைவுரைகளை அன்றைய இளம் பெண்கள் ரசிக்கும் விதத்தில் நகைச்சுவையுடன் எடுத்துக் கூற, முன்பு இருந்த சலசலப்பு அடங்கி பெண்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தார்கள்...

பலருக்கு அவனுடை பேச்சு ஒரு மோட்டிவேசனாக இருந்தது.. தன்னம்பிக்கையை உண்டாக்கியது...

தன் உரையை முடித்து அனைவருக்கும் நன்றி சொல்ல, மீண்டும் . பலத்த கரகோஷமும் விசில் சத்தமும் அந்த அரங்கத்தை அதிர வைத்தது...

சில குறும்புக்கார பெண்கள்

“நிக்கி... You are soooo handsome...I love you darling…I want to marry you… “ என்று கத்த, அதை கேட்டு மெல்ல புன்னகைத்தவாறு படிகளில் தாவி இறங்கி வந்தான்...

அதெல்லாம் கேட்டு கொண்டிருந்த மதுவின் காதில் புகை வந்தது...

அவளும் இதே கல்லூரியில் படித்தவள் தான்.. இந்த மாதிரி யார் வந்தாலும் இந்த பெண்கள் இப்படி கத்துவது வழக்கம் தான்.. அதை ஏற்கனவே பார்த்திருக்கிறாள்..

ஏனோ இன்று தன் கணவனை பார்த்து அவர்கள் லவ் யூ என்று கத்தவும் அவளுக்கு பத்திகிட்டு வந்தது.. எல்லாரையும் அறைய வேண்டும் போல இருந்தது...

எத்தனை பெண்களை அறைய முடியும்?? .. எல்லாருமே எழுந்து குதித்து கொண்டிருந்தார்கள்...

அதை கண்டதும் தன் கோபம் அடங்கி அவளுக்குமே சிரிப்பு வந்தது...

“என்னாச்சு எனக்கு?? எவளோ என் புருசனை பார்த்து சொன்னா அது அப்படியே ஆகிடுமா?? என் புருசன் எப்பவும் எனக்கு மட்டும்தான்... “ என்று உள்ளுக்குள் சொல்லி சிரித்து கொண்டாள்...

முன்பு அவனை தன் கணவனாக ஏற்று கொள்ள தடையாக இருந்த ஏதோ ஒன்றும் விலகி இன்று அவள் மனம் முழுவதும் அந்த சிடுமூஞ்சி விருமாண்டியே அவள் ஆசை, காதல் கணவனாக சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டான்...

பின் மற்ற சிலரும் தங்கள் உரையை முடிக்க பரிசு வழங்கும் விழா ஆரம்பிக்க, நிகிலன் மற்றும் மற்ற விருந்தினர் சில பேர் மீண்டும் மேடை ஏறினர்...

இப்பொழுது பட்டம்(degree) கொடுக்கும் விதத்தில் நிகிலன் அந்த கவுன் அணிந்திருக்க, பட்டம் வாங்கும் அனைவரையும் முன்னால் அழைத்தனர்....

மதுவும் எழுந்து முன்னால் சென்று அந்த கவுனை அணிந்து கொண்டு வரிசையில் நிக்க, முதலில் கோல்ட் மெடல் வாங்குபவர்களை அழைக்க, மற்ற மாணவிகளுடன் மதுவும் முன்னால் வந்தாள்...

மேடையில் நிகிலன் உடன் வேற ஒருவரும் மாறி மாறி வருபர்களுக்கு பதக்கதை கொடுத்து பட்டத்தை வழங்க மதுவோ தனக்கு தன் கணவன் கிட்டயே அந்த பட்டத்தையும் பதக்கத்தையும் வாங்கவேண்டும் என்ற ஆசை ..

மற்றொருவரிடம் தான் போகக்கூடாது என்று மனதுக்குள் அந்த முருகனை வேண்டி கொண்டே அவனை துணைக்கு அழைத்தாள்..

அந்த வேலனும் மது குட்டியை கொஞ்சம் சீண்டி பார்க்கலாம் என்று குறும்பாக சிரித்து கொண்டே அவள் முறை கரெக்டாக மற்றவரிடம் செல்லுமாறு செய்ய, மதுவோ திடுக்கிட்டு அவரிடம் செல்லாமல் அசைய மறுத்து அப்படியே வரிசையிலயே நின்று கொண்டாள்...

அந்த பெரியவர் இவளையே பார்க்க, அவள் தலை குனிந்து கொண்டாள்... அதற்குள் இவளுக்கு பின்னால் இருந்த பெண் அவரிடம் சென்று விட மதுவுக்கு நிம்மதியாக இருந்தது...

சில விநாடிகள் நிகிலனையே பார்த்து இருக்க அவன் அவளுக்கு முன்னால் சென்ற பெண்ணிற்கு பட்டத்தை வழங்கி முடித்து கை குலுக்கி வாழ்த்து சொல்லி அனுப்பி வைக்க, அதற்காகவே காத்து கொண்டிருந்தவளை போல அவனிடம் ஓடி சென்றாள்...

அவளின் செயலை கண்டு அனைவரும் ஓ வென்று கத்த மதுவுக்கு வெக்கமாகி போனது...

ஆனாலும் தன் கணவன் கையால் தன் பட்டத்தை வாங்க வேண்டும் என்ற தன் ஆசை நிறைவேறுவதை எண்ணி மற்றவர்களின் கேலியை பின்னுக்கு தள்ளினாள்...

தன் அருகில் வந்தவளை கண்டதும் நிகிலனுக்குமே ஒரு நொடி இதயம் அடித்து கொண்டது...

அருகில் இருந்த பிரின்சிபல் மேடம் அவளை பற்றி நிகிலனிடம் கூறினார்..

“மது... she is very sweet girl and very good classical dancer நிகிலன் .. எங்க காலேஜ்லயே அமைதியான பொண்ணுனா இவ மட்டும் தான்.. ஆனா எங்க காலேஜ்க்கு எல்லா பங்சன்லயும் இவ டான்ஸ் கண்டிப்பா இருக்கும்... “ என்று அவளை பற்றி புகிழ்ந்து பேச, மதுவோ

“தேங்க் யூ மேம்..” என்றவாறு அவர் காலை தொட்டு வணங்கினாள்...

அவளை தூக்கி தன்னோடு அணைத்து கொண்டவர்

“All the best மது... “ என்றார்...

நிகிலனுக்கும் பெருமையாக இருந்தது....

“இன்னொன்னு விட்டுட்டீங்களே மேம்.. “ என்றான் நிகிலன் மதுவை குறும்பாக பார்த்தவாறு

“என்னது?? “ என்றார் ஆச்சர்யமாக அந்த பிரின்சிபல்

“She is a very good badminton player. District லெவல் ல வின் பண்ணியிருக்கா.. அடுத்து ஸ்டேட் லெவல் ஆடப்போறா..” என்றான் அவளை பார்த்தவாறு...

அதை கேட்டு அதிசயித்த பிரின்சிபல்

“நிகிலன்.. அப்ப மது வ உங்களுக்கு தெரியுமா? “என்றார் ஆச்சர்யமாக..

“யெஸ் மேம்.. She is my wife..” என்றான் குறும்பாக சிரித்தவாறு...

அதை கேட்டதும் மதுவின் மனதுக்குள் மழைச்சாரல் தன்னை அவன் மனைவி என்று இரண்டாவது முறையாக அழைத்ததில்...

“ஓ.. அதான் உன் கையால மெடல் வாங்கணும்னு உனக்காக நீ ப்ரியாகிற வரைக்கும் காத்து கிட்டிருந்தாளா?? “என்று குறும்பாக சிரித்தார் பிரின்சிபல்....

“ஐயோ... இவர் கூட கண்டு பிடிச்சுட்டாரே.. மானம் போச்சு... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள்...

அந்த பிரின்சிபல் க்கு நிகிலன் தனிபட்ட முறையில் பழக்கம்... அவருக்குமே அவனை ரொம்ப பிடிக்கும்.. அதனாலயே அவனை கட்டாயப்டுத்தி இந்த வருட விழாவிற்கு அவனை வரவழைத்திருந்தார்... அவனும் வேற வழியில்லாமல் வந்திருந்தான்...

இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது மதுவும் இங்குதான் படித்தாள் என்று.. அதுவும் அவள் அவன் முன் நடனம் ஆடும் பொழுதுதான் கவனித்தான் அவளை...

“ நிகிலன்... உங்க கையால அவள் கழுத்துலயே இந்த மெடலை போட்டு விடுங்க..” என்று அவர் சொல்ல,

தன் நினைவில் இருந்து வெளி வந்தவன் அந்த கோல்ட் மெடல் ஐ எடுத்து அவள் கழுத்தில் மாட்ட, இருவருக்குமே ஒருவித பரவசம்....

அவன் அவள் கழுத்தில் தாலி அணிவிக்கும் பொழுது இருவருமே வேண்டா வெருப்பாக அந்த திருமண மேடையில் அமர்ந்து இருக்க அப்பொழுது இருவருக்குமே எதுவும் தோன்றவில்லை...

ஆனால் இப்பொழுது ஏனோ வித்தியாசமாக இனம் புரியாத உணர்வு இருவருக்குள்ளும்... இருவருமே அந்த நொடிகளை ரசித்து நின்றனர்...

பார்வையளர் பக்கமிருந்த சிவகாமி மற்றும் மதுவின் பெற்றோருக்குமே இதை காண மனம் நிறைந்து இருந்தது... அவர்களையே ரசித்து பார்த்து கொண்டிருந்தனர்....

பார்வையாளர் பக்கமிருந்த பெண்கள் ஓ வென்று மீண்டும் சத்தம் எழுப்ப, அதில் இருவருமே சுய நினைவுக்கு வர, இருவரிடமே வெக்க புன்னகை..

பின் நிகிலன் அவள் பட்டத்தை எடுத்து அவள் கையில் கொடுத்து அவளுடன் கை குலுக்க,

அவன் கைகள் எதேச்சையாக அவள் விரலை தீண்ட சிலிர்த்தது மீண்டும் இருவர் உள்ளேயும்...

“This is not fair… “ என்று அதே குறும்பு பெண்கள் மீண்டும் கத்த, மது வெக்க பட்டு சிரித்து கொண்டே அந்த மேடையில் இருந்து இறங்கி ஓடி விட்டாள்...

அவள் கீழ இறங்கியதும் அவள் வகுப்பு தோழிகள் அவளை பிடித்துக் கொள்ள, அனைவருக்கும் அவன் தான் தன் கணவன் என்று பெருமையாக கூற, அனைவரும் அவளை வாழ்த்தி பொறாமையோடு பார்த்தனர்....

பின் விழா முடியும் முன்னே இன்னும் சில கலை நிகழ்ச்சிகள் பாக்கியிருக்க, நிகிலன் அங்கிருந்தவர்களிடம் விடை பெற்று அவன் வந்திருந்த காரில் கிளம்பி சென்று விட்டான்...

தன் குடும்பத்தாரிடம் வந்து பேசவும் இல்லை... மதுவுக்கு என்னவோ போல இருந்தது தன் பெற்றோர்களிடம் கூட பேசவில்லையே என்று...

சிறிது நேரத்திலயே போன் பண்ணி தன் மாமனாரிடம் பேசினான்.. முக்கியமான வேலை இருப்பதால் கிளம்பி விட்டதாகவும் அவரையே மற்றவர்களை வீட்டில் ட்ராப் பண்ணி விட சொன்னான்...

“சரிங்க மாப்பிள்ளை.. “ என்று சண்முகமும் சிரித்து போனை வைத்தார்...

“எவ்வளவு வேலை இருந்தாலும் அக்கரையாக கூப்பிட்டு விசாரிக்கிறாரே... “ என்று தன் மருமகனை மெச்சிகொண்டவர் தன் மகளை காண, வரும்பொழுது அவள் முகத்தில் இருந்த வாட்டம் மறைந்து இப்பொழுது அவள் கணவன் வந்து விட்டு சென்ற சந்தோஷத்தில் பூரித்து இருப்பதை கண்டு நிம்மதியடைந்தார்......

“தன் மனைவி சொல்வதை போல, இனிமேல் தன் மகளை பற்றி கவலைபட தேவையில்லை.. எதுனாலும் மாப்பிள்ளை பார்த்து கொள்வார்... இனி நாம் எதிலும் தலையிடக்கூடாது.. “என்று முடிவு செய்து கொண்டார்...

விழா முடிந்ததும் அவர்கள் அனைவரும் காரில் கிளம்பி செல்ல, சண்முகம் தன் மனதில் இருப்பதை சிவகாமியிடம் கேட்டார்...

“சம்மந்தி.. மாப்பிள்ளை இவ்வளவு பெரிய பதவியில இருக்கிறார் னு சொல்லவே இல்லையே... “ என்றார் தயக்கமாக..

“அட நீங்க வேற னா... அவன் இந்த வேலையில் இருப்பது எனக்கு சுத்தமா பிடிக்கலை.. இதை விட்டுட்டு முதல்ல கிடைச்ச கலெக்டர் வேலையவே பாருடானா இதுதான் பிடிச்சிருக்குனு விட்டு தொலைக்க மாட்டேங்குறான்...

எப்பபார் வேலை வேலைனு சுத்திகிட்டே இருக்கான்.. வீட்லயே தங்கறது இல்லை.. அதனாலயே நான் இத பெருமையா சொல்லிக்கிறது இல்லை... “ என்று தன் மனதுக்குள் இருந்ததை சொன்னார் சிவகாமி...

அதை கேட்டு மது மேலும் அதிர்ந்தாள்...

“கலெக்டர் வேலை கிடைத்தும் வேணாம்னு சொல்லிட்டானா?? “என்று சந்தேகமாக இருக்க, அருகில் அமர்ந்திருந்த அகிலாவிடம்

“அகி.. உங்க அண்ணா IAS செலக்ட் ஆனாரா?? “ என்றாள்

“ஹ்ம்ம்ம் ஆமா அண்ணி... உங்கள மாதிரியே தான் அண்ணாவும் இந்த பரிட்சை எழுதினார்.. முதல் அட்டெம்ப்ட் லயே டாப் ரேங்க் வந்திட்டார்.. ஆனால் கலெக்டர் வேலை ஒரு போர்னு அதுக்கு போக மாட்டேனுட்டாராம்... இந்த போலிஸ் வேலைதான் பிடிச்சிருக்குனு இதுக்கு வந்திட்டார்...

ஏன் அண்ணி .உங்களுக்கு தெரியாதா?? “ என்றாள்...

“ம்ம்ம்ம்ம்... எனக்கு யார் சொன்னா?? அவர் பேரே கல்யாணம் ஆகி நாலு நாள்க்கு அப்புறம்தான் தெரிஞ்சுது... இதுல என்ன வேலை பார்க்கிறான் னு தெரிஞ்சுக்கவே 5 மாசம் ஆச்சு..

இன்னும் என்னெல்லாம் எனக்கு தெரியாம இருக்கோ?? “ என்று மனதுக்குள் புலம்பியவள் அசட்டு சிரிப்பை சிரித்து சமாளித்து வைத்தாள்....



Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!