என் மடியில் பூத்த மலரே-18



அத்தியாயம்-18 

மூன்றாவது மாதம்:
ஒரு நாள் இரவு பாரதி வரவேற்பறையில் அமர்ந்து கையில் ஒரு புத்தகத்தை வைத்து சுவராஷியமாக படித்துக்கொண்டிருந்தாள்.. அவள் இருந்த சுவராஷியத்தில் வாயிலில் அழைப்பு மணி இரண்டு முறை அடித்து நின்றதை கவனிக்கவில்லை.. மூன்றாவது முறையாக விடாமல் அடிக்கவும் வேகமாக எழுந்து தான் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேகமாக வாசலுக்கு விரைந்தாள்....

கதவை திறந்ததும் அங்கு ஒரு நெடியவன் இவளை கோபமாக முறைத்தபடி நின்று கொண்டிருந்தான்...

இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது ஒரு சில விநாடிகள்...

அதற்குள்

“ஹலோ .... பெல் அடிச்சா வந்து கதவு திறக்க இவ்வளவு நேரமா??” என்று கோபமாக திட்டிக்கொண்டே அவளை பின்னே தள்ளி விட்டு உள்ளே வந்தான்...

ஒரு சில விநாடிகள் அவன் பார்வையில் கலந்து திகைத்து நின்றவள் பின் சுதாரித்து கொண்டு

“யார் இவன்?? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே “ என்று மூளையை கசக்கியவள் சரியாக ஞாபகம் வராததால் அவன் பின்னே வேகமாக சென்று அவன் முன்னே வழியை மறித்து நின்றவள்

“ஹலோ!! மிஸ்டர்.. யார் நீங்க?? யார் வேணும்.. இப்படி அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழையலாமா?? ... ” என்று அதிகாரமாக கேட்டாள்...

அவளை ஒருமுறை ஏற இறங்க பார்த்தவன்

“ஹ்ம்ம்ம் அனுமதி?? யாரோட அனுமதி வேணும்?? “ என்று நக்கலாக கேட்டான்..

“ஹ்ம்ம்ம் என்னோட அனுமதி.. நான்தான் இப்ப இந்த வீட்ல இருக்கேன்.. என்கிட்ட கேட்ட பிறகு தான் உள்ள வரணும்” என்றாள் மிடுக்காக...

“ஆமா.. நீ யாரு ?? “ என்றான் அவளை முறைத்தவாறு

‘நான் யாருங்கிறது இருக்கட்டும்... முதல்ல நீங்க யாருனு சொல்லுங்க...முன்ன பின்ன தெரியாத இடத்தில், அனுமதி இல்லாமல் திறந்த வீட்டுக்குள்ள ஏதோ நுழைந்த மாதிரி வந்து நிக்கறீங்க” என்று மிரட்டினாள்..

“ஏய்... என்னையா நாய் ங்கிற... “ என்று பல்லைக் கடித்தான்

“நான் அப்படி சொல்லலையே... அனுமதி இல்லாமல் வந்தீங்கனுதான் சொன்னேன்.. நீங்களே அப்படி அர்த்தம் எடுத்துக்கிட்டா நான் என்ன பண்றது” என்று தன் தோளை குலுக்கினாள் அமர்த்தலாக...

“ஹ்ம்ம்ம் இவ்வளவு கேட்கறேன்.. இப்பக்கூட இன்னும் நீங்க யாருனு சொல்லலையே “ என்றாள் மீண்டும் அதிகாரமாக

“ஹ்ம்ம்ம் நான் யாரா?? இந்த வீட்டுக்கு சொந்தக்காரன் .. போதுமா விளக்கம்?? “ என்றான் அவனும் மிடுக்காக...

“ஹ்ம்ம்ம் சொந்தக்காரங்க னா??? அது... ஜானகி... ஜானகி அம்மா தான... “ என்று முழித்தாள்..

“ஏன் ஜானகி அம்மா , வீட்டுக்கு சொந்தக்காரங்க னா அவங்க பையன் சொந்தக்காரன் இல்லையா?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினான் நக்கலாக...

“ஆங்..... “ என்று முழித்தாள் தன் கண்களை அகல விரித்து....

அவளின் அந்த அகன்ற கண்களையே சிறிது நேரம் இமைக்காமல் பார்த்து இருந்தான்....

அதற்குள் பாரதிக்கு ஓரளவு புரிந்தது

“வந்து.. வந்து.. நீங்க அவங்களோட பையனா?? “ என்று மெல்ல முனகினாள் முன்பு இருந்த சுருதி இறங்கி....அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன்

“ஹ்ம்ம்ம்.. ஏன் ஆதார் கார்ட், பர்த் சர்டிபிகேட் எல்லாம் காமிச்சா தான் நம்புவியா?? “ என்றான் நக்கலாக...

“ஆமா... என்னை இத்தன கேள்வி கேட்குறியே.. நீ யாரு?? உன்னை யாரு உள்ள விட்டா??? இங்க என்ன பண்ற?? இந்த மாரியும் முத்துவும் எங்க போய்ட்டாங்க??? “ என்று தன் கேள்விகளை அடுக்கினான்...

அதற்குள் முழுவதுமாக சுதாரித்துக்கொண்டவள்

“ஸ் அப்பா.... இந்த ஜானகி அத்தை தான் ஒரு நேரத்துல ஆயிரம் கேள்வியை விடாமல் கேப்பாங்கனு பார்த்தா அவர் பெத்த இந்த புத்திரனும் அதே மாதிரியே இருக்கிறானே!!.. குடும்ப வியாதி போல “என்று மனதுக்குள் அவசரமாக திட்டியவள், சிறிது தயங்கி

“நான்.... நான்.... “ என்று ஆரம்பித்தவள் அவனுக்கு தான் யாரென்று சொல்வது என்று புரியாமல் முழித்தாள்...

“என்ன?? நீ யாருனு மறந்து போச்சா??? ஓ அந்த கேசா நீ... அதான் யாரை பார்த்தாலும் யார் நீங்கனு கேட்கிறியா?? “ என்று சிரித்தான் குறும்பாக...

“ஹலோ மிஸ்டர்.... நான் ஒன்னும் லூசு இல்லை.. “என்று முறைத்தாள்...

“ஹா ஹா ஹா .. நான் ஒன்னும் நீ லூசுனு சொல்லலையே!! நீயே தப்பா அர்த்தம் எடுத்துகிட்டா அதுக்கு நான் என்ன பண்றதாம் “என்று அவளைப்போலவே தன் தோளை குலுக்கினான்...

“நான் லூசு இல்லைனு நீயே ஏன் சொல்ற?? “ என்று அவள் சொன்னதையே அவளுக்கு திருப்பினான்..

“பை தி வே... லூசுங்கதான் நான் லூசு இல்லை லூசு இல்லைனு சொல்லுமாம்” என்று சொல்லி மீண்டும் சிரித்தான்...

அதை கேட்டதும் பாரதிக்கு கோபம் தலைக்கேறியது...

அவனை முறைத்தவாறே

“ஹ்ம்ம்ம் உங்க அம்மா தான் என்னை இங்க கூட்டி வந்து வச்சிருக்காங்க... என் பெயர் பாரதி “ என்றாள் முறைத்தவாறு..

ஏனோ நான் தான் உன் குழந்தையை சுமக்க வந்தவள் என்று சொல்ல தோன்றவில்லை.. தன் பெயர் சொன்னாலாவது புரிஞ்சுக்கட்டும் என்று தான் தன் பெயரை சொன்னாள்..

பாரதி என்ற பெயரை கேட்டதும் அதுவரை சிரித்து கொண்டிருந்தவன் முகம் கடினமாகியது.... அவன் உடல் விரைத்தது...

“ஓ... நீ தான் அந்த பார தீதீதீதீயா “ என்று தீ என்பதை இழுத்து சொன்னான்...

“பார தீதீதீதீ இல்லை... பாரதி... “ என்று அவளும் விடாமல் தன் பெயரை திருத்தினாள்...

“நீ எதுவோ இருந்திட்டு போ.. உன்னை யார் இங்க வரச்சொன்னது??? இந்த அம்மாவிற்கு வர வர புத்தியே இல்லை... உன்னைத்தான் ஹாஸ்டல் ல சேர்த்து விட சொன்னேனே?? அப்புறம் எப்படி எங்க அம்மாவை மயக்கி உன்னை இங்க கூட்டி வர செய்த??? “ என்று எகிறினான்…

“மயக்கி??? “ என்று புரியாமல் முழித்தாள் பாரதி...

“என்ன ஒன்னும் புரியாத மாதிரி நடிக்கிற?? உன் திட்டம் எல்லாம் எனக்கு தெரியும்... எப்படியாவது என்னை மயக்கி இந்த குழந்தையை சாக்கா வச்சு எங்க வீட்டுக்குள்ள வரத்தானெ திட்டம் போட்டிருக்க?? அதனால தான் நீ வீட்டிற்கே வரக்கூடாது னு ஸ்ட்ரிக்ட் ஆ சொன்னேன்.. இந்த அம்மா பாட்டுக்கு இங்க கொண்டு வந்து வச்சிருக்காங்க...

இங்க சுறுட்டற மாதிரி ஒன்னும் இல்லை தான்... இருந்தாலும்... உன் மாஸ்டர் பிளானுக்கு இந்த வீடெல்லாம் எம்மாத்திரமா இருக்கும்???

சொல்லு… உன் திட்டம் என்ன?? எதுக்காக இந்த வாடகைத்தாய் வேசம் போட்டிருக்க?? “ என்று கர்ஜித்தான்....

பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை... முதலில் ஜானகி ஏன் தன்னை இங்க கூட்டி வந்தார் என்பதற்கு விடை தெரிந்த மாதிரி இருந்தது....அவர் பையனுக்கு பிடிக்காததால் தான் இங்கு கூட்டி வந்திருக்கார்...

அதற்கு பின் மயக்கி…. திட்டம்.... என்று என்னென்னவோ சொல்லுவது தான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை...

“பே .. “என்று முழித்து கொண்டிருந்தாள்..

அவளின் அந்த முழியை கண்டவன் என்ன தோன்றியதோ.. அதோடு நிறுத்தி

”இங்க பார்.. உன் திட்டம் என்னவாக வேணாலும் இருந்திட்டு போகட்டும்... ஆனா எதுவும் இந்த ஆதித்யாகிட்ட பலிக்காது.. வீணா மனக்கோட்டை கட்டி கிட்டு இருக்காத... குழந்தை பிறந்ததும் அடுத்த நிமிடம் குழந்தையை கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணிடனும்...

மாறி ஏதாவது டிராமா பண்ணின உன்னைத் தொலைச்சுடுவேன்.. ஜாக்கிரதை” என்று உருமி விட்டு வேகமாக மாடி ஏறி தன் அறைக்கு சென்றான்...

இடி இடித்து மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது பாரதிக்கு.... மெல்ல நடந்து ஷோபாவிற்கு சென்று பொத்தென்று அமர்ந்தாள்...

“என்னதான் சொல்கிறான் ??? “என்று திரும்பவும் யோசித்தவளுக்கு ஒன்னும் புரியவில்லை... ஒன்று மட்டும் புரிந்தது. அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை.... அப்படி பிடிக்காதவன் எதுக்கு இந்த ஆட்டத்திற்கு ஒத்துக்கொள்ளனும்” என்று யோசித்தாள்..

அப்பொழுது தான் ஜானகி சொன்னது நினைவு வந்தது.. அவர் கட்டாயப் படுத்திதான் அவனை சம்மதிக்க வைத்தார் என்று....

“அப்படி என்றால் இந்த குழந்தையை பிடிக்க வில்லையா?? இல்லை நான் சுமப்பதை பிடிக்க வில்லையா?? “ என்று மெல்ல தன் அடி வயிற்றை தொட்டு பார்த்துக்கொண்டாள்.. இது மூன்றாவது மாதம் அவளுக்கு...

தன் குழந்தையை சுமப்பவள் என்று தெரிந்தும் கூட இப்படி எரிந்து விழறானே.. முக்கியமா அது தெரிந்த பிறகு தான் இன்னும் காய்ந்தான்... அதற்கு முன் கூட ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்தான்... அப்படி என்ன என் மேல் எரிச்சல் அவனுக்கு என்று குழம்பி கொண்டிருந்தாள்...

அதற்குள் மேலெ சென்றவன் ரிப்ரெஸ் ஆகி கீழ வந்தான்.. அவன் முகத்தில் இன்னும் அதே கடுகடுப்பு... வந்தவன் அவளை பார்த்து

“ஆமா... மாரி எங்க?? “

அவனின் அதட்டல் குரல் கேட்டு தானாக எழுந்து நின்றாள்..

“ஹ்ம்ம்ம்ம்ம் வந்து ..... மாரியும் முத்துவும் அவங்க பொண்ணுக்கு பிரசவ வலி எடுத்து ஹாஸ்பிட்டல் ல சேர்த்திருக்காங்கனு போயிருக்காங்க “ என்று மெல்ல முனகினாள்...

“யாரை கேட்டு போனாங்க?? அம்மாக்கு தெரியுமா??? “ என்று முறைத்தான்...

“இல்லை.... அவசரம் னு சொன்னதால நான் தான் அவங்களை அனுப்பி வச்சேன்.. உங்க அம்மா கிட்ட அப்புறம் சொல்லிக்கிளாம்னு..” என்று அவள் முடிக்கும் முன்னே

ஓ... இந்த வீட்ல நீ இருக்கிறதால இந்த வீட்டு எஜமானினு நினைப்பா?? நீயே எப்படி அவங்களுக்கு பெர்மிசன் கொடுக்கலாம்??? .. அவங்களும் எங்க கிட்ட கேட்காம எப்படி போகலாம்.. வரட்டும் அவங்க சீட்டை கிழிக்கிறேன்...

லுக்... நீயும் இந்த வீட்ல ஒரு வேலைக்காரிதான்.. உன் வேலை வெறும் பத்து மாதம் மட்டும் தான்.. அதை ஞாபகம் வச்சுக்க.. வேற ஏதாவது வாலாட்டின அவ்வளவு தான் “ என்று கர்ஜித்தான்...

“சரி சரி.. நைட் சாப்பிட ஏதாவது செய்... இந்த மாரி இருப்பாங்கனு நான் சாப்பிடாமல் வந்திட்டேன்... சமைக்க தெரியுமில்லை??? ... “ என்று மீண்டும் முறைத்தான்...

“ஏதோ சுமாரா செய்வேன்” என்று முனகினாள்....

அதே நேரம் ஆதித்யாவின் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்தவன் அதில் “அம்மா” என்று ஒளிர்ந்ததும் அது வரை சிடுசிடு வென்று எரிந்து விழுந்தவன் முகம் உடனே இலகியது... அதை ஆன் பண்ணி

“ஹ்ம்ம்ம் சொல்லுங்கம்மா... “ என்றான் குழைந்த குரலில் .. அதைக் கண்ட பாரதி

“ஸ் அப்பா... உலக மகா நடிப்புடா சாமி.. எப்படி தான் இப்படி உடனே மூஞ்சியையும் குரலையும் அப்படியே மாற்றினானோ” என்று வாயை பிளந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்... அதை கண்டவன் அலைபேசியை கையில் மூடிய படி

“ஏய்... இன்னும் என்ன வாய பார்த்துகிட்டு இருக்க... போய் சீக்கிரம் ஏதாவது செய்...ரொம்ப பசிக்குது “ என்று முறைத்தான்...

“ஹ்ம்ம் இவனுக்கு ஆஸ்கர் தான் கொடுக்கனும். ஒருவேளை இவன் அந்நியனோ??? நல்லவன் பாதி சிடு மூஞ்சி பாதி” என்று மனதுக்குள் திட்டிகொண்டே சமையலறைக்குள் சென்றாள்..

“இந்த மாரி அக்கா வேற என்ன வச்சிருக்காங்களோ சமைக்க ?? இதுவரை நான் சமையல் அறை பக்கமே போனது கிடையாது.. நான் பாட்டுக்கு சமைக்க தெரியும்னு சொல்லிட்டேனே.. இப்ப எப்படி சமாளிப்பது??? முருகா...

எப்படியாவது என்ன காப்பாத்து... இல்லைனா இந்த சிடுமூஞ்சிகிட்ட நான் மறுபடியும் வாங்கி கட்ட முடியாது..“ என்று புலம்பிக் கொண்டே பிரிட்ஜை திறந்து ஏதாவது இருக்கா என்று தேடிப் பார்த்தாள்... உள்ளே தோசை மாவு இருந்தது

“அப்பாடா ... தப்பிச்சேன்...முருகா.. உன் கருணையே கருனை.. எப்படியோ லெவெல் 1 பாஷாகிட்டேன்... அடுத்து லெவல் 2 இதுக்கு தொட்டுக்க ஏதாவது வேணுமே... அதையும் இந்த மாரி அக்கா ரெடியா வச்சிருந்தா நான் தப்பிச்சேன்.. முருகா... லெவல் 2 லயும் என்னை காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டே பிரிட்ஜை திறந்து மீண்டும் எல்லா பக்கமும் தேடினாள்...

ம்ஹும்.. எதுவும் இல்லை...மீண்டும் எல்லா பக்கமும் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை... என்ன முருகா.. இப்படி கவுத்திட்டியே!!!

“ஐயோ.. இப்ப தொட்டுக்க என்ன பண்றது?? எனக்கு எதுவும் செய்ய தெரியாதே” என்று புழம்பியவள். தன் அம்மா அவசரத்துக்கு என்ன செய்வாள் என்று யோசித்தாள்.....ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை..

இதுக்குத்தான் அப்ப அப்ப அந்த லட்சு சமைக்கிறப்ப கிச்சனுக்குள் எட்டி பார்த்திருக்கனும்... இப்ப என்ன செய்யறது?? “ என்று முழித்தாள்.. பின் எதேச்சையாக அருகில் இருந்த தேங்காய் கண்ணில் படவும்

“ஹ்ம்ம்ம் ஐடியா... பேசாமல் தேங்காய் சட்னி பண்ண வேண்டியது தான்... உலகத்திலயே சுலபமா சீக்கிரமா செய்யக்கூடியது நம்ம தேங்காய் சட்னி தான்... இதை கண்டுபிடித்த நம் முன்னோர் வாழ்க!!! “ என்று சிரித்துக்கொண்டே அங்கிருந்த தேங்காயை அவசரமாக உடைத்து அதை திருக தேவையான ஆயுதத்தையும் ஒரு வழியாக தேடி கண்டுபிடித்தாள்...

இதை எப்படி திருகுவது என்று முழித்தவள் தன் வீட்டில் செய்வது போல கீழ தரையில் அமர்ந்து கால்களை மடக்கி உட்கார்ந்து கஷ்டப்பட்டு திருக ஆரம்பித்தாள்...

தன் அன்னையிடம் பேசியவன் அவர் பாரதியிடம் பேசணும் என்கவும் பாரதியிடம் அலைபேசியை கொடுக்க என்று கிச்சனுக்குள் வந்தவன் அவள் அமர்ந்து இருந்த கோலத்தை கண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்றான்..

ஏதோ உள்ளுணர்வு உறுத்த நிமிர்ந்தவள் ஆதி சமையல் அறையின் வாசலில் நின்று தன்னையே பார்ப்பதை உணர்ந்து வேகமாக மேல ஏறியிருந்த துப்பட்டாவை கீழ இழுத்து விட்டுக்கொண்டு எழுந்து நின்றாள்...

அவனும் சுதாரித்துக்கொண்டு

“இந்தா... அம்மா உன்கிட்ட பேசனுமாம்... “என்று அவளின் அருகில் வந்து போனை நீட்டினான்...

அவளும் அதை வாங்கிகொண்டு சொல்லுங்க என்றாள்

“பாரதி...ஆதி ஏதாவது திட்டினானா?? “ என்று ஒரு அச்சத்துடன் கேட்டார்... ஆதி இன்னும் அங்கயே இருப்பதை கண்டு என்ன சொல்ல என்று யோசித்தவள்

“அதெல்லாம் ஒன்னும் இல்லை .... “என்று இழுத்தாள்..ஜானகியும் புரிந்து கொண்டு.

“சரி பாரதி... அவனுக்கு ஏதாவது செஞ்சு கொடு....தோசை மாவு இருந்தால் ஒரு மூனு தோசை ஊற்றி, ஒரு ரெண்டு சட்னி பண்ணு.. ஒன்னும் மட்டும் இருந்தால் சரியா சாப்பிட மாட்டான்” என்று அக்கரையாக சொல்லி அப்புறம் பேசறேன் என்று வைத்தார்....

அதை கேட்டதும் அதிர்ந்தாள்..

“என்னது இரண்டு சட்னியா??? எனக்கு ஒன்னு பண்றதுக்குள்ளயே கண்ணை கட்டுது... இதுல இன்னொன்னா?? “என்று முழித்துக் கொண்டு நின்றாள்...

அவள் பேசி முடித்ததும் இன்னும் அலைபேசியை தராமல் யோசித்துக்கொண்டு நிற்கவும்

“என்ன இந்த மாதிரி போனை முன்ன பின்ன பார்த்தது இல்லையா?? அதையே உத்து பார்த்து கிட்டிருக்க??? சீக்கிரம் கொடு. எனக்கு வேலை இருக்கு” என்று கத்தினான்

அதை கேட்டு சுய நினைவுக்கு வந்தவள் அதை வேகமாக அவனிடம் கொடுத்தாள்..

அலைபேசியை கொடுக்கும் பொழுதுதான் கவனித்தாள் அந்த கவர் போட்டொ.. அதில் ஆதித்யா, ஜானகி, ராம் மற்றும் சுசிலா நால்வரும் சிரித்து கொண்டிருந்தனர்....

“பரவாலை.. இந்த சிடுமூஞ்சிக்கு சிரிக்க கூட தெரிஞ்சிருக்கு” என்று மனதிற்குள் திட்டிக்கொண்டெ அதை கொடுத்தாள்.. அவனும் முறைத்தபடியே அதை வாங்கியவன்

“சீக்கிரம் ஏதாவது செய்...பசி உயிர் போகுது “ என்று மீண்டும் திட்டியவாறு வெளியில் சென்றான்...

“நான் என்ன இவன் பொண்டாட்டியா?? இந்த விரட்டு விரட்டறான்... “என்று திட்டிகொண்டே மீதி இருந்த தேங்காயை திருகி ஒரு வழியா சட்னி அறைத்தாள்.. இன்னொன்னு என்ன பண்ண ?? என்று யோசித்தாள்..

ஒருநாள் திடீரென்று ஏதோ சொந்தக்காரங்க வந்திட்டாங்கனு நம்ம லட்சு அவசரத்துக்கு ஏதோ செய்துச்சே .. என்ன அது என்று மீண்டும் மூளையை கசக்கியவள் ஒரு வழியாக ஞாபகம் வரவும், அதையே செய்ய வேண்டியதுதான்.. அவனுக்கு பிடித்தாலும் பிடிக்காட்டாலும் அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டே

வெங்காயம், தக்காளி, வர மிளகாய் எல்லாம் பச்சையாக போட்டு அரைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலையை தேடி எடுத்து போட்டு அதில் கொஞ்சம் பூண்டும் நறுக்கி போட்டு தாழித்து இன்னொரு சட்னியும் ரெடி பண்ணினாள்...

ஒரு வழியாக லெவல் 2 கம்ப்ளீட்டட்....

அடுத்து லெவல் 3 இதுதான் பைனல் ரவுண்ட்... தோசை ஊற்றுவது.... இந்த தோசை சரியா வரணுமே... எங்க வீட்டுல எப்பயாவது தோசை ஊற்ற சொன்னால் அது பிஞ்சதாதான் வரும்...

அதை கண்டு பாரத்

“என்ன பாரதிக்கா..நாங்க பிச்சு சாப்பிட்டா நேரம் ஆகும்னு நீயே பிச்சு எடுத்துகிட்டு வர்ரியா?? ” என்று கிண்டலடித்தான்..

“ஆமான்டா.. எப்படியும் இதை பிச்சு தான சாப்பிடப் போற.. அதான் உனக்கு வேலை வைக்காமல் நானே பிச்சே சுட்டுடேண்_ பேசாமல் சாப்பிடு “என்று அவன் வாயை அடக்குவாள்...

“ஐயோ இங்க எப்படி வரப்போகுதோ?? ... முருகா.. இதுலயாவது என் பக்கம் நில்லு “ என்று பயந்துகொண்டே தோசை கல்லை தேடி எடுத்து அடுப்பில் வைத்து முதல் தோசையை ஊற்றினாள்...

பின் பரிட்சை எழுதிவிட்டு ரிசல்ட் க்காக காத்திருக்கும் மாணவியைப்போல பயந்து கொண்டே அதை பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஒரு வழியாக வெந்ததும் அதை திருப்ப அவள் குல தெய்வங்கள் அத்தனையும் துணைக்கு கூப்பிட்டு திருப்ப ஆரம்பித்தாள்...

அது நான்ஸ்டிக் என்பதால் அவள் திருப்ப ஆரம்பித்த உடனே அது தானாக திரும்பியது.. அதை கண்டதும்

“வாவ்.... சூப்பரா திரும்புதே !!! இது எப்படி?? .. எங்க வீட்ல சுட்டா மட்டும் சட்டியை விட்டு தோசை வர மாட்டேங்குது??? இங்க பட்டணத்துல மட்டும் இவ்வளவு சுலபமா வருதே... இப்படி வந்தால் நான் எங்க ஊருக்கே தோசை சுடலாம் போல... நான் ஊருக்கு போகும் பொழுது இது மாதிரி ஒரு சட்டி வாங்கிட்டு போய் நம்ம லட்சுக்கு கொடுத்து அசத்தனும்” என்று சிரித்துக் கொண்டே அடுத்த தோசையை ஊற்றினாள்..

பின் தான் வெற்றிகரமாக சுட்ட முதல் தோசையை தட்டில் வைத்து, அந்த ரெண்டு சட்னியையும் எடுத்து கொண்டு சென்று டைனிங் டேபிளில் வைத்து விட்டு அவனிடம் சென்றவள்

“சாப்பிட வாங்க “ என்றாள் சத்தமாக..

“ஏய் .. எதுக்கு கத்தற... எனக்கு காது நல்லாவே கேட்கும் “ என்று மீண்டும் சிடுசிடுத்துக் கொண்டே எழுந்து டைனிங் டேபிளுக்கு வந்தான்

பின் ஒரு இருக்கையை இழுத்து அமரவும் அவன் முன்னே தட்டை வைத்தாள்...அதில் இருந்த ஒரு தோசையை கண்டவன்

“ஏய்.. என்ன ஒரு தோசைதான் இருக்கு.. இது எப்படி பத்தும்??? “ என்று கத்தினான்...

“ஸ் அப்பா...சரியான அவசரத்துக்கு பொறந்தவன் போல...” என்று முனகியவள்

“நீங்க முதல்ல இதை சாப்பிடுங்க... நான் ஒன்னு ஒன்னா செஞ்சு எடுத்திட்டு வர்ரேன்.. ” என்று உள்ளே சென்றாள்...

ஜானகி எப்பொழுதும் முதலிலயே செய்து வைத்து விடுவார்.. இல்லை ஜானகி செய்யாத நாட்களில் சமையல் செய்யும் தங்கம் செய்தாலும் முன்னாடியே எல்லா தோசையையும் செய்து ஹாட் பாக்ஷில் போட்டு வைத்து விடுவாள்.. ஆதி எப்பவும் மூன்று தோசை மட்டும் எடுத்து சாப்பிட்டு எழுந்து விடுவான்...

பாரதி வைத்திருந்த அந்த தோசையும் வெங்காய சட்னி மற்றும் தேங்காய் சட்னியை யும் பார்த்தவன் முதலில் யோசித்து கொஞ்சமாக தொட்டு சாப்பிட்டான்... அந்த வெங்காய சட்னியின் சுவை புதியதாக இருக்கவும் விரும்பி சாப்பிட ஆரம்பித்தான்... 



ற்கனவே பசியில் இருந்தவனுக்கு அந்த ரெண்டு சட்னியின் காம்பினேசன் சூப்பராக இருக்கவும் ருசித்து சாப்பிட்டான் .. பாரதியும் ஒவ்வொன்றாக சுட்டு எடுத்து வரவும் அவனும் தன் அலைபேசியை பார்த்துக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தான்..

முதலில் அவன் விரும்பி சாப்பிடுவதை ரசித்துக்கொண்டே ஆர்வத்தோடு சுட்டவள் அவன் சாப்பிட்டு கொண்டே இருக்கவும் கடுப்பானாள்..

“என்ன இப்படி சாப்பிடறான்???... இந்த அத்தை வேற மூனு தோசைக்கு மேல சாப்பிடமாட்டன் னு சொன்னாங்க.. மூனு தானு ஆரம்பிச்சா இப்ப முப்பது சாப்பிடுவான் போல.. எவ்வளவு நேரம் நான் நடக்கிறதாம் ?” என்று திட்டிகொண்டே அடுத்த தோசையை கொண்டு வந்து வேகமாக அவன் தட்டில் போட்டாள்...

“ஏய்... எதுக்கு இப்படி வேகமா போடற?? .. மெதுவா வைக்க தெரியாதா... ஆமாம்.. எத்தனை போட்டிருக்க” என்றான்

“ஹ்ம்ம்ம்ம் ஒரு டஜன் .. “என்றாள் அவளும் முறைத்தவாறு...

“டஜன் னா”

“என்னது டஜன்னா தெரியாதா?? இவன் எல்லாம் என் பிசினஸ் பண்றானோ ? “என்று திட்டிகொண்டே

“ஹ்ம்ம்ம் 12.... “என்றாள் கையை விரித்து காட்டி

“ஹ்ம்ம் 12 னு சொல்லிட்டு பத்து விரலை காமிக்கிற “ என்றான் நக்கலாக

“ஆமாம்.. இதெல்லாம் கணக்கு சரியா தெரியுது.. தான் எத்தனை தோசை சாப்பிட்டோம்னு மட்டும் மறந்திடு “என்று பொறுமினாள்...

“ஏய் எனக்கு எதுக்கு 12 கொடுத்த... என்ன நிறைய செஞ்சு போட்டு என்னை மயக்கலாம்னு பார்க்கிறியா?? ... போதும் இதோட “ என்றான்..

“என்னது நான் மயக்கறனா?? .. போன போகுது பசிக்கிதுனு சொல்றாரே னு செஞ்சு கொடுத்தா மயக்கறேனா’’’ என்று முறைத்துகொண்டே உள்ளே சென்றாள்...

அவனும் மனதுக்குள் சிரித்துகொண்டே எழுந்து சென்று கை கழுவி விட்டு மேல மாடிக்கு சென்றான்..

பின் பாரதி அவளும் இரண்டு தோசையை ஊற்றி வேகமாக சாப்பிட்டு விட்டு அங்கு இருந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து ஒழுங்கு படுத்தி விட்டு தன் அறைக்கு சென்று மெத்தையில் பொத்தென்று விழுந்தாள்...

கால் வலியோடு அவன் பேசிய வார்த்தைகளும் மனதை சுட மனம் ஏனோ சோர்ந்து போனது..கண்களில் நீர் கட்ட ஆரம்பித்தது... அதே நேரம் அவளின் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்தவள் ஜானகி தான் அழைத்து இருந்தார்...உடனே தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அத்தை..” என்றாள் தன் வருத்தத்தை மறைத்துக்கொண்டு..

“பாரதி மா... என் பையன் சாப்பிட்டானா?? “ என்று ஆர்வமாக கேட்டார்..

“சாப்பிட்டாராவா??? அடுக்கினார் அத்தை.. எனக்கு செஞ்சு போட்டு கால் வலியே வந்திருச்சு “ என்றாள் கடுப்பாக

“நிஜாமாவா... என் பையன் அவ்வளவா சாப்பிட மாட்டானே.. எத்தனை தோசை சாப்பிட்டான்?? “

“ஹ்ம்ம்ம்ம் 12... விட்டால் இன்னும் சாப்பிட்டிருப்பார்... என்னால இதுக்கு மேல முடியாதுனு சொல்லிட்டேன்... “

“ஹ்ம்ம்ம் கண்ணு வைக்காத டீ.. வந்த உடனே அவனுக்கு சுத்திபோடனும்... “என்று சிரித்தார்...

“ஆமாம்... நான் கண்ணு வைக்கிறேனாக்கும் அந்த அய்யனாரை பார்த்து ?? “ என்று முகத்தை நொடித்தாள்..

ஜானகிக்கு அவளின் அந்த ஆக்ஷன் மறுமுனையிலயே தெரிந்தது.. அவரும் சிரித்து கொண்டே

“ஹே... என்னது?? .. என் புள்ளை அய்யனரா??? அவன் என் அழகு முருகன் டீ .. நல்லா உற்று பார்... அப்படியே அந்த முருகனே நேர்ல வந்த மாதிரியே இருக்கும்” என்று சிரித்தார்...

“அத்தை... இது உங்களுக்கே அடுக்காது.... என் ப்ரென்ட் முருகன் எங்க... அவனை பார்த்தாலே முகம் அழகு கொஞ்சும்... அவன் கையில் இருக்கிற வேலை பார்த்தாலே நமக்கு இருக்கிற பயம் எல்லாம் போய் தைரியம் வரும்...

ஆனால் உங்க புள்ள இருக்காரே... வந்ததில் இருந்து கடிச்சி குதறி கிட்டே இருக்கார்... முகத்த எப்பவும் கடுகடுனு வச்சு கிட்டு.. சரியான சிடு மூஞ்சி.. கையில ஒரு அறுவா மட்டும் இருந்தது அப்படியே எங்க ஊர் அய்யனார் தான்... அவரை பார்த்தாலெ பயம் தான் வருது..

இன்னொரு தரம் அவரைப்போய் என் முருகனோட கம்பேர் பண்ணாதிங்க... சிடுமூஞ்சி.. சிடுமூஞ்சி” என்று திட்டினாள்...

“இரு இரு என் பையன் சிடுமூஞ்சியா.... அப்படினா இன்னும் ரெண்டு நாள் அங்கயே இருக்க சொல்றேன்” என்று சிரித்தார் ஜானகி..

“ஐயோ!!! அத்தை.. ஏதோ சின்ன புள்ள.... உங்க அழகு முருகன் லவகுஷன் ராஜகுமாரனை சிடு மூஞ்சினு தெரியாமல் சொல்லிட்டேன்.. அதுக்குப்போய் இவ்வளவு பெரிய தண்டனையா????

வேணாம் அத்தை...வேணாம்... நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்... அவரை நல்ல படியா திரும்ப கூப்பிட்டுக்குங்க.. என்னால ஒரு மணி நேரமே சமாளிக்க முடியலை... இதுல இன்னும் ரெண்டு நாளா??? அவ்வளவுதான்”

“வேணா இப்படி வச்சுக்கலாம்... அந்த முருகனோட அப்பா யாரு??

“யாரு?? “ என்றார் ஜானகியும்

“போங்க அத்தை உங்களுக்கு நம்ம கடவுளோட கதையே தெரியல.. முருகனோட அப்பா சிவபெருமான் இருக்கார் இல்லை.. அவர் கோபம் வந்தா காலை தூக்கிட்டு ஆட ஆரம்பிச்சுடுவாராம்... எங்க ஆயா சொல்லி இருக்கு.. என்ன காலால் ஆடறதுக்கு பதிலா உங்க புள்ள வாயால ஆடறார்...சரியான சிடுமூஞ்சி சிவபெருமான் “

“ஹா ஹா ஹா” என்று சிரித்தவர் பின் ஏதோ நினைத்தவரக

“அவனும் நல்லா கல கலனு சிரித்தவன் பாரதி..உன் ரூம்ல இருக்கிற போட்டோ வ பார்.. எப்படி சிரிச்சுக்கிட்டிருந்த பையன்... எல்லாம் அந்த ஷ்வேதா பிசாசால இப்படி மாறிட்டான்.. “என்றார் வருத்தமாக...

அப்பொழுதுதான பாரதிக்கு உரைத்தது... ஒரு தாயிடம் அவர் மகனை பற்றி குறை சொன்னால் எப்படி வலிக்கும் என்று... உடனே அதை சமாளிக்க

“சரி சரி நீங்க கண்ணை கசக்காதிங்க அத்தை...நல்ல வேளை உங்க ராஜகுமாரன் சிரிக்கிறப்பவே போட்டோ எடுத்து பெருசா ப்ரேம் போட்டு வச்சுட்டீங்க.. இல்லைனா உங்க பையனுக்கு சிரிக்க தெரியும்னா யாரும் நம்பி இருக்க மாட்டாங்க...

அதோட நல்லவேளை இந்த போட்டோவை கொண்டு வந்து இங்க மாட்டினீங்க..இதை நான் தினமும் பார்க்கறதால உங்க வாரிசு கொஞ்சம் சிரிச்சுகிட்டே பொறக்கும்... இல்லைனா அதுவும் அந்த சிடுமூஞ்சி மாதிரி பிறக்கிறப்பவே சிடுசிடுனு தான் பொறந்திருக்கும்…

இப்ப என்ன கவலையை விடுங்க அத்தை... உங்க புள்ளையையும் நம்ம வழிக்கு கொண்டு வந்திடலாம்.. அதாவது அவரையும் சிரிக்க வச்சுடலாம்.. உங்களையே மாத்தலையா.. அதே மாதிரி உங்க ராஜகுமாரனையும் மாத்திடலாம் “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம் அது உன் கையில தான் இருக்கு பாரதி” என்று மனதுக்குள் சொல்லியவர்

“ஹ்ம்ம்ம் பார்க்கலாம்... சரி பாரதி... நல்ல பிள்ளையா நீ எனக்கு இன்னொரு உதவி செய்வியாம்... “ என்று இழுத்தார் ஜானகி

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அத்தை. உங்களுக்கு உதவி செய்யதான் இந்த அடிமை காத்துகிட்டு இருக்கேன் “ என்று கையை பவ்யமாக வாயில் வைத்து நடித்து காட்டினாள்...

“வாயாடி.... ஹ்ம்ம்ம் ஆதி எப்பவும் தூங்கறப்போ பால் குடிச்சிட்டுதான் தூங்குவான்.. நீ என்ன பண்ற ஒரு டம்ளர் பால் மட்டும் அவனுக்கு கொண்டு போய் கொடுத்திடுவியாம்... “

“என்னது?? மறுபடியும் அந்த சிடு மூஞ்சி கிட்டயா.... ம்ஹும்ம்ம்.. அத்தை... இங்க பக்கத்துல இருக்கிற கடல் ல போய் விழு னு சொல்லுங்க. ஓடிப்போய் விழுந்திடறேன்... என்னால் அந்த சிடுமூஞ்சி அய்யனார் கிட்ட மறுபடியும் நிக்க முடியாது... “

“ப்ளீஸ் பாரதி.. மாரி இருந்தா அவளே கொடுத்து இருப்பா.. இன்னைக்குனு பார்த்து அவள் இல்லை... அவன் பால் குடிச்சாதான் தூங்குவான்.. அதனால இன்னைக்கு மட்டும் கொண்டு போய் கொடுத்திடு..என் சமத்து இல்ல “என்றார் கெஞ்சும் குரலில்

“ஹ்ம்ம்ம் ஒன்னு செய்யறேன்.. நான் பாலை காய்ச்சி வச்சிடறேன்.. அவரை வந்து கிச்சனில் எடுத்துக்க சொல்லுங்க”

“ம்ஹும்.. அவன் சரியான சோம்பேறி.. மறந்திடுவான்.. நான் நேர்ல கொண்டு போய் கொடுத்தாலே வாங்கி வச்சிட்டு சில நேரம் மறந்திடுவான்.. நீ என்ன பண்ற பாலை கொடுத்திட்டு அவன் குடிச்சு முடிக்குற வரைக்கும் அங்கயே இருந்து முடிச்சதும் டம்ளரை வாங்கிட்டு வா”

“அதெல்லாம் முடியாது அத்தை.. “ என்று சினுங்கினாள்

“அப்படீனா அவன் இன்னும் இரண்டு நாள் அங்கதான்” என்று சிரித்தார்..

“என்ன அத்தை?? ...வர வர புத்திசாலி ஆகிட்டு வர்ரீங்க.. ப்ளாக்மெயில் எல்லாம் பண்ண கத்துகிட்டீங்க “

“ஹீ ஹீ ஹீ.. எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் பாரதி... எப்படி பாஷாகிட்டேனா?? “என்ரார் அவரும் அவளுக்கு சமமாக...

“ஹ்ம்ம்ம் பின்றீங்க அத்தை.. சரி போனா போகுது... இன்னைக்கு மட்டும் தான் செய்வேன்.. அவரை ஒழுங்கா கிளம்பி நாளைக்கு போய்ட சொல்லுங்க.. “ என்று முனகியவாறு அலைபேசியை அணைத்து பின் எழுந்து கிச்சனுக்கு சென்றாள்..

ஜானகியும் சிரித்து கொண்டே “இந்த இரண்டும் ஏன் இப்படி முட்டிக்கிதுங்க.. எப்படி சரி பண்றது?? “என்றவர் சிறிது நேரம் ஏதோ யோசனையில் இருந்தார்.. பின் அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினார்... தன் அலைபேசியை எடுத்து சுசிலாவிற்கு அழைத்து எதையோ சொன்னார்... சுசிலாவும் சம்மதிக்கவும் மகிழ்ச்சியுடன் அலைபேசியை அணைத்தார்....

சமையல் அறைக்குள் சென்றவள் ஒரு டம்ளரில் பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டு “இந்த சிடுமூஞ்சி இப்ப என்ன கடிக்க போகுதோ?? ” என்று பயந்து கொண்டே அவனின் அறைக்கு சென்று கதவை தட்டினாள் பாரதி..

சாப்பிட்டு விட்டு மேல வந்தவன் இரவு உடைக்கு மாறி பின் தன் வேலைகளை முடித்து அப்பொழுது தான் மெத்தையில் படுத்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எரிச்சலோடு எழுந்து வந்து

“என்ன?? “ என்று எரிந்து விழுந்தான்...

“அது ... வந்து... உங்க அம்மா.... பால்.... “ என்று உளறினாள் பாரதி...

“ஏய்.... உளறாமல் சொல்லு” என்று அதட்டலுக்கு அப்படியே நடுக்கம் ஆப் ஆகியது....

“உங்கம்மா இந்த பாலை கொடுக்க சொன்னாங்க “ என்று பாலை அவன் முன்னே நீட்டினாள்...

“ஏய்... என்னை என்ன சாப்பாட்டு ராமனு நினைச்சியா??? ... ஏற்கனவே நிறைய செஞ்சு போட்டு தொலைச்சிருக்க... இதுல பால் வேற யா.. வேண்டாம் போ “ என்று முறைத்தான்..

“ஹ்ம்ம்ம் என்னை கேட்டா???... உங்கம்மா தான் பால் குடிக்கலைனா நைட் என் பையன் தூங்க மாட்டானு என்னை அனுப்பி வச்சாங்க... இதை எடுத்துகிட்டு பிடிச்சா குடிங்க இல்லையா கீழ ஊத்துங்க எனக்கென்ன வந்தது... என்னை ஆள விடுங்க... “என்று திருப்பி முறைத்தாள்...

“சரி சரி கொடுத்து தொலை.. என்று வாங்கியவன் அதை உற்று பார்த்தான்...

“ஏய்.. என்ன பால் வேற கலரா இருக்கு?? “

“ஆமா.. உன்னை மயக்க அதுல வஷிய மருந்து வச்சிருக்கேன்”என்று மனதுக்குள் சொல்லி முடிக்கு முன்பே

“என்னை மயக்கறதுக்கு னு வஷிய மருந்து எதுவும் கலந்திருக்கியா ?? “ என்று சந்தேகமாக கேட்டான்..

“ஆமா நீங்க பெரிய மன்மதன்.. உங்களை மயக்க வஷிய மருந்து வச்சிருக்கேன்... சிடு மூஞ்சி அய்யனார்..” என்று முறைத்து விட்டு.

“இது மசாலா பால்... இத குடிச்சா எவ்வளவு அலைச்சல், டென்ஷன் இருந்தாலும் எல்லாம் காணாமல் போய்டும்.. நல்லா தூக்கம் வரும்... அப்புறம் யாரையும் கடிச்சு குதற மாட்டீங்க “ என்பதை மட்டும் அவனுக்கு கேட்காமல் முனகிக்கொண்டவள்...

“சீக்கிரம் குடிச்சுட்டு படுத்து தூங்குங்க... இல்லனா உங்கம்மா என்ன தான் மறுபடியும் தொல்ல பண்ணுவாங்க “ என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் தன் அறைக்கு ஓடி விட்டாள்.. அங்கு இருந்தால் இன்னும் ஏதாவது கடிக்கும் இந்த சிடு மூஞ்சி என்று முனகியவாறு ...

“என்னது சிடுமூஞ்சியா?? ... இருக்கட்டும்.. நாளைக்கு மாட்டுவ இல்ல.. அப்ப வச்சுக்கறேன் ”என்று திட்டிகொண்டே உள்ளே வந்து அந்த பாலை பருகினான்...

புது சுவையுடன் ருசியாக இருக்கவும் முழுவதும் குடித்து முடித்தான்.. அதே நேரம் ஜானகி அவனை அலைபேசியில் அழைத்து இருந்தார்..

“ஹ்ம்ம் சொல்லுங்கம்மா... “ என்றான் இலகிய குரலில்

“பாரதி பால் கொடுத்தாளா கண்ணா??... “ என்றார் பரிவுடன்

அதை கேட்டதும் அவனுக்கு மனம் கனிந்து போனது.. இந்த அம்மாக்குத்தான் எத்தனை அக்கரை.. இவ்வளவு தூரம் தள்ளி இருந்தாலும் அவங்க நினைப்பு எல்லாம் என்னை சுற்றியே தான் இருக்கு...என்று நினைத்தவன்

“ஹ்ம்ம்ம் கொடுத்தாமா.. இப்பதான் குடிச்சேன்... அது ஒரு டிப்ரென்ட் டேஸ்ட் ஆ இருந்தது மா.. எப்படி பண்ணினா னு கேட்டு நீங்களும் அதே மாதிரி பண்ணுங்க” என்று சிரித்தான்’

அதை கேட்டதும் ஜானகிக்கு மனம் குளிர்ந்தது.. முதல் முறையாக பாரதியை பாராட்டி சொல்லி இருக்கிறானே.. முருகா இதுவே தொடரனும்” என்று வேண்டிக் கொண்டவர்

“ஹ்ம்ம்ம் சரி கண்ணா...அதே மாதிரி செஞ்சுடறேன்... அப்புறம் எனக்கு ஒரு உதவி செய்யனும்... “என்று மெல்ல இழுத்தார்...

“சொல்லுங்கம்மா... என்ன உதவி அது இதுனு.. என்ன செய்யனும் னு சொல்லுங்க... “ என்றான் அதே கனிந்த குரலில்

“வந்து.... பாரதியை நாளைக்கு ஹாஸ்பிட்டல்க்கு செக்கப் க்கு கூட்டிட்டு போகனும்.. என்னால அவ்வளவு தூரம் முடியும்னு தோனலை.. நீதான் அங்க இருக்க இல்லை.. அவளை அப்படியே கூட்டிட்டு போய்ட்டு வந்திடு கண்ணா... “ என்று மென்று முழுங்கினார்

“மா... எனக்கு காலைல முக்கியமான மீட்டிங் இருக்கு... இன்னைக்கே இங்க வேலையை முடிச்சிட்டு திரும்பி வரையில் நம்ம கெஸ்ட் ஹவுஸ் கிட்ட வந்த உடனே கார் ரிப்பேர் ஆகிடுச்சு... இனிமேல் சரி பண்ணி திரும்பவும் சிட்டி வந்திட்டு நாளைக்கு காலையில சீக்கிரம் வரமுடியாதுனு தான் நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தேன்.. பார்த்தால் அந்த பொண்ணை கொண்டு வந்து இங்க தங்க வச்சிருக்கீங்க..

அவள் இங்க இருக்கிறது தெரிஞ்சு இருந்தால் நான் இந்த பக்கம் வந்தே இருக்கமாட்டேன்....முன்னாடியே சொன்னேன் இல்லை அவ என் கண்ணுலயே படக்கூடாதுன்னு...

அதில்லாமல் எனக்கு வேலை இருக்கு.. என்னால எல்லாம் கூட்டிட்டு போக முடியாது... அவளையே போய்ட்டு வரசொல்லுங்க.. இல்லை நான் கார் அனுப்பறேன்.. தனியாவே போய்ட்டு வரச்சொல்லுங்க” என்று எரிந்து விழுந்தான்..

“காலைல மீட்டிங்கனா ஈவ்னிங் கூட்டிட்டு போய்ட்டு வா கண்ணா... நம்ம வீட்டு வாரிசு.. நாமலும் கூட போனா தான் நம்ம மேல பாசமா இருக்கும்.. அதோடு குழந்தையோட வளர்ச்சி எப்படி இருக்குனு நாம் தெரிஞ்சுக்கலாம்... அதனால நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்திடு”

“என்னமா.. தொல்லை ப்ண்றீங்க..” என்று சலிப்புடன் யோசித்தவன் பின்

“சரி உங்களுக்காக போய் தொலைக்கிறேன்.. ஆனால் இந்த முறை மட்டும் தான்.. அதுக்கப்புறம் என்னை எதுவும் தொல்லை பண்ணக்கூடாது....சரியா?? “

“ஹ்ம்ம்ம் சரிடா கண்ணா.. நான் பார்த்துக்கறேன்.. இந்த முறை மட்டும் நீ கூட போய்ட்டு வா”

“ஹ்ம்ம்ம் சரி மா...அப்ப நான் ஈவ்னிங் வந்து கூட்டிகிட்டு போறேன் “ என்றவன் சில விநாடிகள் தயங்கி

“மா.. நிஜமாலுமே என் குழந்தை அந்த பொண்ணு வயிற்றில இருக்கா??? “ என்று ஒரு வித ஆர்வத்தோடு கேட்டான்...

“ஹ்ம்ம்ம் ஆமா கண்ணா... இப்ப உன் குழந்தைக்கு 90 நாள்.. இந்நேரம் கை கால் எல்லாம் வந்திருக்கும்... இன்னும் 190 நாள் தான் இருக்கு.. நம்ம வாரிசு நம்மளை பார்க்க ஓடி வந்திடும்... “என்று மகிழ்ச்சி பொங்க சிரித்தார்...

தன் அன்னையின் உற்சாகம் அவனையும் தொற்றி கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல்

“அந்த பொண்ணை பார்த்தால் அப்படி எதுவும் தெரியலையே.. சாதரணமாக தான் தெரியறா.. வயிறு பெருசா இல்லை... அதுவும் கீழ எல்லாம் உட்கார்ந்து தேங்காய் திருகிகிட்டு இருந்தாளே... “ என்றான் சந்தேகமாக...

அதை கேட்டதும் ஜானகிக்கு சிரிப்பு வந்தது.... சிறுவயதில் அவன் எதை பார்த்தாலும் கேள்வி கேட்பதும், தாங்கள் அதுக்கு விளக்கம் சொன்னாலும் நம்பாமல் ‘நிஜமாகவா??’ என்று சந்தேகமாக கேட்கும் அந்த குட்டி ஆதி அவர் கண் முன்னே வந்தார்... இவன் இன்னும் அப்படியே தான் இருக்கான் என்று சிரித்தவர்

“இனிமேல் தான் கண்ணா குழந்தை பெருசா வளர ஆரம்பிக்கும்.. அப்பதான் பாரதியின் வயிறு கொஞ்சம் கொஞ்சமா பெரிதாகும்... அதான் நீ நாளைக்கு கூட போற இல்லை... சுசி உன் குழந்தையை ஸ்கேன் பண்ணி காமிப்பா... எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாம்... “

“அப்புறம்....”. என்று இழுத்தவர்

“பாரதியை எதுவும் திட்டாத கண்ணா.. அவள் நம்ம வீட்டு வாரிசை சுமந்து கிட்டு இருக்கிறவ... அவளை திட்டினா நம்ம வாரிசையும் திட்டற மாதிரிதான்., அதனால் கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ “ என்றார்....

“அதுக்குள்ள உங்க கிட்ட பத்த வச்சுட்டாளா?? சரியான கேடி தான் “ என்று நினைத்தவன்

“ஹ்ம்ம்ம் சரி மா... நீங்க பத்திரமா இருங்க.. நாளைக்கு வர்ரேன்” என்று அலைபேசியை அணைத்து மெத்தையில் படுத்தவனுக்கு ஜானகி சொன்ன

“உன் குழந்தை இப்பொழுது 90 நாள் என்பதே திரும்ப திரும்ப நினைவு வந்தது....

“என் குழந்தை... எப்படி இருக்கும் இப்போ ??? குட்டி கை ,கால், குண்டு கன்னங்களுடன் கறு விழியில் அச்சு அசல் அவனை மாதிரியே ஒரு குட்டி தேவதை அவனை நோக்கி “டாடி.. “என்று ஓடி வருகிறது..

கிட்ட வந்ததும் அவன் காலை கட்டிக் கொண்ட அந்த குட்டி தேவதையை அள்ளி எடுத்து தலைக்குமேல் தூக்கி சுற்றி அதன் பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிடுகிறான்.. அந்த பட்டு ரோஜாவும் அவன் கன்னத்தில் முத்தம் இடுகிறது

அந்த முத்தத்தில் சிலிர்க்கிறது அவன் உடல்... மனமெல்லாம் புது சுகம் பரவுகிறது...

“My sweet princess… I want to see you soon.. Daddy is waiting for you. Come fast!!! “ என்று மெல்ல முனகியவன் சிரித்து கொண்டே அருகில் இருந்த தலையணையை இறுக்கி கட்டி கொண்டான்... அதோடு பாரதி கொடுத்த மசாலா பால் வேலை செய்யவும் கண் மூடி உறங்க ஆரம்பித்தான்...

மூன்ரு வருடங்களுக்கு பிறகு அவன் நிம்மதியாக உறங்குவது இதுவே முதல் முறை... அவன் நிம்மதி நிலைக்குமா????

அலைபேசியை வைத்த ஜானகிக்கு நிம்மதியா இருந்தது... ஆக்சுவலா பாரதிக்கு செக்கப் அடுத்த வாரம் தான்...

ஆதி அங்கு இருக்கவும் எப்படியாவது அவனை பாரதியோடு ஹாஸ்பிட்டல் போய்ட்டானா, அவன் குழந்தைய பார்க்கும் பொழுது அவனுள் மாற்றம் வரும் என்று திட்ட மிட்டே சுசிலாவிடம் போன் பண்ணி நாளைக்கே பாரதிக்கு ஸ்கேன் பண்ண ஏற்பாடு செய்தார்.. சுசிலாவும் சம்மதிக்கவே எப்படியோ ஆதியிடம் கெஞ்சி அவனை சம்மதிக்க வைத்தார்....

“எப்படியோ திட்டம் போட்டு இந்த பையனை நாளைக்கு பாரதி கூட போக சம்மதிக்க வச்சாச்சு.. நான் நினைக்கிறது சீக்கிரம் நடக்கனும் முருகா...

எனக்கு என்னவே அவன் கார் வழியில் நின்னது கூட உன்னோட நாடகம்னு நினைக்கிறேன்... அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க நீ ஆடிய நாடகம்னு நினைக்கிறேன்.. எப்படியோ சீக்கிரம் ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்திடு முருகா” என்று வேண்டிகொண்டார்...

அதை கேட்ட அந்த வேலனும்

“ஹா ஹா ஹா... ஜானகி,. பாரதி சொல்ற மாதிரி நீயும் வர வர புத்திசாலி ஆகிட்டு வர்ர... என்னோட ஆட்டத்தின் மூவ்மென்ட் ஐ சரியா கண்டுபிடுச்சிட்டியே!!!! எப்படியோ ஒரு வழியா என் ஆட்டத்தின் நாயகனையும் நாயகியையும் சந்திக்க வச்சாச்சு....

அவங்க எப்படி இனிமேல் ஆடப்போறாங்க.... இல்ல இல்ல நான் எப்படி ஆட வைக்கிறேன் என்று பொறுத்திருந்து பார் “ என்று சிரித்துகொண்டான் அந்த சிங்கார வேலன்...

Comments

  1. அருமையான பதிவு
    ஆனாலும் எப்படியோ
    டிபன்செஞ்சுட்டா

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!