தவமின்றி கிடைத்த வரமே-29


அத்தியாயம்-29


சென்னை விமான நிலையம்..

கண்ணில் ஏதோ ஒரு வலியுடன் முகத்தில் மறந்தும் தன் வருத்தத்தை காட்டி விடக் கூடாது என்று கஷ்டபட்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டிருந்தாள் பனிமலர்..

அவள் அருகில் அவளை போலவே வருத்ததுடன் நின்றிருந்தனர் மலரின் பெற்றோர்கள்.. அவர்களை அடுத்து மீனாட்சியும் சுந்தரும் நின்று கொண்டிருந்தனர்.....

“எல்லாம் எடுத்து வச்சுட்டியா கண்ணா? எதையும் மறந்து விடலையே... “ என்றார் மீனாட்சி அக்கறையுடன்...

“மா... நான் என்ன சின்ன பையனா?? இல்லை இதுதான் முதல் முறையா நான் ப்ளைட்ல போறது? ஏன் இப்படி எல்லாரும் ஏர்போர்ட் வரைக்கும் வந்து நிக்கறீங்க ?.. “ என்றான் செல்லமாக கோவித்தவாறு...

“ஹ்ம்ம்ம் அது என்னவோ இந்த முறை அப்படி இருக்கு டா.. ஒரு வேளை முன்பு நீ எங்களுக்கு மட்டும் மகன்.. அதனால பெருசா தெரியலை கண்ணா...

இன்னைக்கு நீ இன்னொருத்திக்கும் சொந்தமானவன் ஆய்ட்ட இல்ல... மலரையும் கூட்டிகிட்டு போயிருந்தால் நல்லா இருந்திருக்கும்...நீ அவளை இப்படி தனியா விட்டுட்டு போறது கஷ்டமா இருக்கு... அதான் எல்லாரும் ஏர்போர்ட் வரைக்கும் வந்திட்டோம்... “ என்றார் வருத்தமாக...

“ஆடி மாதம் முடிஞ்ச உடனே அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்திடலாம்னு பார்த்தா கரெக்டா ஆடி முடியவும் ஒரு சிக்கல் வந்திடுச்சு.. அதுக்கு மேல நீ இந்த திடீர் கான்ப்ரன்ஸ் க்கு போகனும்னு கிளம்பிட்ட...

பார்.. இப்ப மலரை உன்னோட அனுப்பவும் முடியாம நம்ம வீட்டுக்கு கூட்டி போகவும் முடியாம இன்னும் அங்கயே தங்க வேண்டி வந்திடுச்சு.. “ என்றார் மீனாட்சி வருத்தமாக..

“ஹ்ம்ம் எல்லாம் அந்த ஹிட்லர் பாட்டியால வந்தது...” என்று பல்லை கடித்தான் வசி.. அவன் நினைவுகள் இரண்டு வாரம் பின்னோக்கி சென்றது..

வசுந்தராவின் விழா அன்று மலரிடம் தெரிந்த மாற்றத்தை கண்டு மகிழ்ந்து போயிருந்தான் வசி...

அவன் அவளை கட்டி அணைத்த பொழுது அவள் அவனை எதிர்க்காமல் முகத்தை சுழிக்காமல் அவனுடன் ஒன்றி கொண்டது அவள் இதயத்தில் தன்னை கணவனாக அவள் ஏற்று கொண்டாள் என புரிய துள்ளி குதித்தான் வசீகரன்...

முன்பாவது அவளுக்கு இந்த திருமணத்தை, தன்னை ஏற்று கொள்ள கொஞ்சம் டைம் வேண்டும் என்பதற்காக அவளை பிரிந்து இருப்பதாக தன்னை சமாதானம் செய்து கொண்டவனுக்கு அவளிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த பிறகு அவளை பிரிந்து இருப்பது ரொம்பவுமே கஷ்டமாக இருந்தது...

அடுத்த நாளே தன் அன்னையிடம் சென்று மலரை எப்பொழுது அழைத்து வரப் போறிங்க என்று நேரடியாக கேட்க, அவருக்கும் தன் மகனின் மனம் புரிந்து விட, அடுத்த நாளே சிவசங்கருக்கு அவர் அழைத்து

“அண்ணா... எப்ப வந்து நாங்க மலரை அழைச்சுகிட்டு வர்றது?? .. அடுத்த வாரம் ஆடி முடியுது இல்ல... “ என்றார் தயங்கியவாறு..

சிவசங்கரும் முன்பு என்றால் இந்நேரம் அங்கு மாட்டியிருந்த தினசரி காலண்டரை எடுத்து நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து இருப்பார்...ஆனால் இப்பொழுது இந்த ஜாதகம் ஜோசியம் இதை நம்பி பலத்த அடி வாங்கிய பிறகு அதில் நம்பிக்கை குறைந்து விட்டது...

“ஆடி முடிந்த அடுத்த நாளே நாங்களே கொண்டு வந்து விடறோம் தங்கச்சி.. “ என்றார்.. அதை கேட்டதும் தன் அன்னையின் அருகில் இருந்த வசி உள்ளுக்குள் துள்ளி குதித்தான்...

ஆனால் பாவம் அவன் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் சில நொடிகள் தான் என்று அறிந்திருக்கவில்லை..அந்த ஈஸ்வரன் அவன் வாழ்க்கையில் ஆடும் ஆட்டத்தை புரிந்திருக்கவில்லை அவன்..

வசி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க, அதே நேரம் ஊருக்கு சென்றிருந்த கனகம் பாட்டி ஊரிலிருந்து திரும்பி வந்திருந்தார்...

அவர் வீட்டுக்கு உள்ளே வர, அப்பொழுது தன் மகன் சொல்லியது சரியாக அவர் காதில் விழ, நேராக அவரிடம் சென்றவர்

“டேய் சிவா... உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அது எப்படி பொண்ணை யாருக்கும் தெரியாம நேரா புகுந்த வீட்டுக்கு அனுப்பறதாம் ? மாப்பிள்ளை சொன்னார் இல்ல வரவேற்பு வச்சு எல்லாரையும் கூட்டி அவங்க கல்யாணத்தை தெரிய படுத்தணும் னு.. இப்ப எப்படி நேரா நம்ம பொண்ணை கொண்டு போய் அங்க விடறது.

அதெல்லாம் முடியாது.. முன்பு பேசின மாதிரி முதல்ல வரவேற்பை வைக்கச் சொல்.” என்று வசியின் மகிழ்ச்சிக்கு ஆப்பு வைத்தார்...

அதை கேட்டு முழித்த சிவசங்கர் தன் ஒன்று விட்ட அன்னையை சமாதானம் படுத்த முயலோ அவரோ அதை எல்லாம் மறுத்து விட்டார்..

“நம்ம சாதி சனத்தையெல்லாம் கூட்டி நம்ம மாப்பிள்ளையை அறிமுக படுத்தியே ஆகணும்.. அதுவும் என் பேத்தியை வேண்டாம்னு போனான் இல்ல அந்த உதவாக்கரை கூஜா .. அவனுக்கு என் பேத்தியோட அருமை தெரியணும்..

அவளுக்கு எவ்வளவு பெரிய டாக்டர், ராஜகுமாரன் மாப்பிள்ளையா கிடச்சிருக்கானு தெரிஞ்சு வயிறு எரியணும்..

அதனால் ஊர் மெச்ச என் பேத்திக்கு வரவேற்பு வைத்துத்தான் அவ புகுந்த வீட்ல கொண்டு போய் விடணும்.. “ என்று குண்டை தூக்கி போட்டார்...

சிவசங்கருக்கும் அது சரியென்று தோன்ற, உடனே மீனாட்சியையும் சுந்தரையும் அழைத்து தன் சித்தி சொல்வதை சொல்ல, அவர்களுக்கும் அது சரியென்றே பட்டது...

அப்பொழுது வசியும் அங்குதான் இருந்தான்..

அவனிடம் விசயத்தை சொல்ல,

“ஆஹா.. நான் ஒரு நிமிசம் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா அந்த ஈஸ்வரனுக்கு பொறுக்காதே.. வரிஞ்சு கட்டிகிட்டு வந்திட்டானே என் சந்தோஷத்துக்கு ஆப்பு வைக்க..

ஊருக்கு போன பாட்டியை அதுக்குள்ள எதுக்கு மிஸ்டர் ஈஸ் அனுப்பி வச்ச ?? “ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டே

“ஹ்ம்ம்ம் சரி மா.. ரிசப்சன் தான வைக்கணும்... அதான் ஆடி முடிஞ்ச அடுத்த நாளே ரிசப்சன் வச்சுக்கலாம்.. அப்படியே அவளை இங்க கூட்டிட்டு வந்திடலாம்.. “ என்றான்...

அது எப்படி முகூர்த்த நாள், நல்ல நேரம் பார்க்காமல் ரிசப்சன் வைப்பது என்று அதுக்கு ஒரு தடா போட்டார் கனகம்..அதை கேட்டு கடுப்பான வசி, தன் அன்னையை பார்த்து

“மா... இந்த ஹிட்லர் பாட்டி என் பொறுமையை ரொம்பவும் சோதிக்கிறாங்க... அதான் கல்யாணம் ஏற்கனவே நடந்திருச்சு இல்ல.. ரிசப்சனுக்கு எல்லாம் யார் மா நல்ல நாள் பார்ப்பாங்க?..

விட்டா இந்த பாட்டி சந்திரனுக்கு சேட்லைட் அனுப்ப கூட நல்ல நாள் முகூர்த்த நேரம் பார்த்து தான் அனுப்ப சொல்லும் போல...

இது தொல்லை தாங்க முடியலை.. இப்படியே ஆடுச்சு, நீங்க முன்பு சொன்ன மாதிரி இந்த ஹிட்லர் பாட்டியை தூக்கிட்டு அது பேத்தியை தூங்கிட்டு வந்துடுவேன்.. சொல்லி வைங்க அந்த பாட்டிகிட்ட.. “ என்று முறைத்தான் வசீகரன்..

அதை கேட்டு மீனாட்சிக்கும் சுந்தருக்கும் சிரிப்பு வர, எங்கே அவன் முன்னே சிரித்தால் அவன் இன்னும் எகிறுவானோ என்று அடக்கி கொண்டு தலையை குனிந்து கொண்டு சிரித்தனர் இருவரும்...

மீனாட்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது தன் மகனை அப்படி பார்க்க

இதுவரை அவன் யாரிடமும் கோபமாக ஏன் அதிர்ந்து கூட பேசியதில்லை.. எல்லாருடனும் சிரித்த முகத்துடனே பழகியவன் இன்று இப்படி எரிமலையாக குமுற ஆரம்பித்து விட்டானே என்று ஆச்சர்யமாக இருந்தது...

“ஹ்ம்ம் எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு போல.. இத்தனை நாள் அந்த இதயத்தை வெறும் உறுப்பாக பார்த்து பழகியவனுக்கு அதில் உள்ளே இருக்கும் மனம் வெளிவர, அந்த மனதுக்கு பிடித்த இன்னொரு மனதை கண்டறிந்ததில் இருந்தே அவன் மாறிவிட்டான். “ என புரிந்தது அவருக்கு...

திருமணம் ஆகியும் இப்படி தன் மனைவியை பிரிந்து இருக்கும் அவன் வேதனை புரிய அவனுக்காக பரிதாப பட்டார் மீனாட்சி.. ஆனாலும் தன்னை வெளி காட்டாமல்

“டேய் கண்ணா.. ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையாம்.. அந்த மாதிரி இத்தனை நாள் காத்திருந்த இல்ல.. என்ன இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் தானே.. எப்படியும் ஒரு வாரத்துக்குள்ள நல்ல நாள் இருக்கும்..

அன்றைக்கே ரிசப்சன் வச்சுக்கலாம்.. நமக்கும் எல்லாம் தயார் பண்ண அவகாசம் வேண்டும் இல்லையா .. “ என்று தன் மகனை சமாதானம் படுத்தினார்...

அவனும் அவரை முறைத்தவாறு

“சரி மா..என்னைக்கு நல்ல நாள் னு கேட்டு தொலைங்க.. “ என்றான் சலித்தவாறு..

சிவசங்கர் தன் அன்னைக்காக அங்கு தொங்கி கொண்டிருந்த காலண்டரை எடுத்து நல்ல நாள் பார்க்க, வசியின் கெட்ட நேரம் ஆடி முடிந்து அடுத்து 15 நாட்கள் கழித்துதான் முகூர்த்த நாள் இருந்தது..

அதை கேட்டதும் இன்னும் அதிர்ந்து போனான்..

“என்னது ?? இன்னும் இரண்டு வாரமா?? ஒரு வழியா எனக்கு அறுபதாவது கல்யாணத்துக்குத்தான் என் பொண்டாட்டியை அனுப்பி வைக்குமா இருக்கும் அந்த ஹிட்லர் பாட்டி.. எங்க இருந்துதான் எனக்குனு வந்து வாச்சுதோ.. “ என்று புலம்பினான்..

அவன் என்ன புலம்பினாலும் அந்த பாட்டியை மீற மற்றவர்களுக்கு விருப்பம் இல்லாததால் அந்த நாளிலயே வரவேற்பை உறுதி செய்தனர்..

தன் அறைக்கு திரும்பியவன் மாடியில் ஏறி கொண்டிருக்க, அங்கு சுவற்றில் மாட்டியிருந்த கண்ணை மூடி தியானத்தில் இருந்தவாறு காட்சி தந்த ஈஸ்வரனை கண்டதும் அவரையே உற்று பார்த்தான் வசி...

“ஹலோ மிஸ்டர் ஈஸ்.. இப்ப ரொம்ப ஹேப்பியா? எப்படியோ நான் கேட்ட வரத்தை கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு அப்புறம் என்னை சோதிக்க உன் திருவிளையாடலை ஆரம்பிச்சுட்டியே...!!

இது நியாயமா?? தர்மமா?? உனக்கே அடுக்குமா?? நீ மட்டும் இரண்டு பொண்டாட்டி கட்டிகிட்டு இரண்டு புள்ளைங்களையும் பெத்துகிட்டு ஜாலியா லைப் ஐ என்ஜாய் பண்ற..

ஆனால் எனக்கு இத்தனை நாளைக்கு பிறகு வந்திருக்கா ஒரே ஒரு பொண்டாட்டி.. அவ கூட சந்தோஷமா இருக்க விடாம இப்படி பிரிச்சு வச்சுட்டியே... நீ விளங்குவியா??

நீ என் வாழ்க்கையில் இதுவரைக்கும் ஆடின ஆட்டத்துக்கெல்லாம் பொருமையா இருக்கேன்..

சாது மிரண்டால் காடு கொள்ளாது னு சொல்வாங்க அந்த மாதிரி என் பொருமைய ரொம்ப சோதிச்ச அப்புறம் நீ ஆடின அதே ருத்ர தாண்டவத்தை நான் உனக்கு காட்டிடுவேன்.. பி கேர்புல்.. இதுவே நீ ஆடும் கடைசி ஆட்டமா இருக்கட்டும்

இதுக்கு மேல என்னை சோதிக்காத...என்ன செய்வியோ தெரியாது.. இந்த ரிசப்சன் க்கு பிறகு என் பொண்டாட்டி என் கூட இருந்தாகணும்.. சொல்லிட்டேன்.. “ என்று கை நீட்டி மிரட்டியவன் அவரை முறைத்தவாறு தன் அறைக்கு சென்றான்....

அவன் மிரட்டலை கேட்டு தியானத்தில் இருந்த ஈஸ்வரனும் கண்ணை திறந்து நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டான்... மிஸ்டர் ஈஸ் சிரிப்பதை பார்த்தால் நம்ம டாக்டருக்கு இன்னும் எத்தனை ஆப்பு காத்திருக்கிறதோ ?? லெட்ஸ் வெய்ட் அன்ட் சீ..

அதற்கு அடுத்து வந்த நாட்கள் வரவேற்பு விழாவிற்கு மண்டபம் தேட, அழைப்பிதல் அடிக்க, எல்லாரையும் அழைக்க என்று பறந்தது...

இந்த நிலையில் அவன் மலரை அழைத்து பேசவோ நேரில் சென்று பார்க்கவோ முடியவில்லை..

எப்படியும் இந்த அலைச்சல் எல்லாம் முதல் வாரத்தில் முடிந்து அடுத்த வாரத்தில் இருந்து பிரியாகி விடலாம். பின் தன் மனைவியிடம் பேசலாம் என எண்ணி இருக்க, அதுக்கும் ஆப்பு மித்ரா வழியாக வந்தது...

லண்டனில் நடக்கும் கார்டியாலஜி சம்பந்தமான கான்ப்ரன்ஸ் ஒன்று தெரிய வர, வசியை அதற்கு ரெகமன்ட் செய்தாள் மித்ரா...

முதலில் தயங்கியவன் மித்ரா அதனுடைய அஜென்டாவை காட்டி அது எல்லாம் அவனுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவனை சென்று வர சொல்லி வற்புறுத்த, எப்படியும் கான்ப்ரன்ஸ் நடக்கும் அடுத்த வாரம்தானே வரவேற்பு.. அதற்குள் இந்த கான்ப்ரன்ஸ் ஐ முடித்துவிட்டு வந்து விடலாம் என்று ஒத்துக் கொண்டு அதற்கு விண்ணப்பித்தான்...

உடனேயே அனுமதி கிடைத்துவிட, அதற்கு பிரிப்பேர் பண்ணவும் அவனுக்கு நேரம் இறக்கை கட்டி கொண்டு பறந்தது...

கிட்ட தட்ட இரண்டு வாரம் கழித்து இப்பொழுதுதான் தன் மனைவியை நன்றாக பார்க்கிறான்.. தன் நினைவுகளில் இருந்து மீண்டவன் ஒரு பெருமூச்சை விட்டு

“ஹ்ம்ம்ம் என்ன பண்றது மா. இது ஒரு முக்கியமான கான்ப்ரன்ஸ்.. போய்தான் ஆகணும்.. ஒரு வாரம் தான்... சீக்கிரம் ஓடிடும்...நீங்க அதுக்குள்ள ரிசப்சன் வேலை எல்லாம் பாருங்க... சீக்கிரம் நாள் ஓடிடும்....” என்றவன் தன் மாமனார் மாமியார் அருகில் வந்து

“சாரி மாமா.. அத்தை.. எனக்கு பனிமலரையும் கூட்டிகிட்டு போகணும்னு ஆசைதான்.. ஆனால் முறைப்படி ரிசப்சன் முடிஞ்சு அவளை எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்ட்டு அதுக்கப்புறம் தான் என் மனைவியா கூட்டிகிட்டு போகணும்.. அதோடு அவளுக்கு வீசா உடனே ஏற்பாடு செய்ய முடியாது..

நீங்க உடம்பை பார்த்துக்கங்க.. எதாவது பிரச்சனைனா நான் கொடுத்த என் ஜூனியர் நம்பருக்கு கால் பண்ணுங்க. அவனை வீட்டுக்கே வந்து பார்க்க சொல்லி இருக்கேன்..

ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணாதிங்க....ரிசப்சன் வேலை எல்லாம் சோமு அங்கிள் அப்புறம் என் பிரண்ட்ஸ் பார்த்துக்குவாங்க.. நீங்க எதுக்கும் அலையாதிங்க... டேக் கேர்... “ என்றான்..

“ஹ்ம்ம்ம் பரவாயில்லை மாப்பிள்ளை... உங்கள் தொழில் சம்பந்தமா போகிறப்போ மலர் வந்து என்ன பண்ணப் போறா.. நீங்க போய் உங்க வேலையை நல்ல படியா முடிச்சிட்டு வாங்க ... “என்றார் சிவசங்கர்..

பின் மலரிடம் வந்தவன் அவளை காண அவளோ தன் கண்ணில் திரண்டிருந்த நீர் துளிகள் அவன் கண்ணில் படாதவாறு தலையை குனிந்து கொண்டாள்....

அவனுமே மற்றவர்கள் முன்னால் என்ன பேச என தெரியாமல் தயங்கியவாறு

“அப்பாவை பார்த்துக்கோ பனிமலர்.. சீக்கிரம் வந்திடறேன்.. “ என்றான். அவன் குரல் கொஞ்சம் பிசிறடித்த மாதிரி இருந்தது...

அவளும் “ஹ்ம்ம்ம்ம் “ என்று குனிந்தவாறு தலை அசைக்க, அவள் குனிந்த படியே அவள் கண்கள் கலங்குவது அவனுக்கு புரிந்தது..

அதை கண்டு, தனக்காக தன் பிரிவை எண்ணி வருத்தபடுகிறாளே என சந்தோஷ படுவதா இல்லை அவள் கண் கலங்கி நிற்க காண பிடிக்காமல் அவன் வருத்த படுவதா என குழம்பி போனான் வசீகரன்..

எது எப்படிஆனாலும் அவள் கண் கலங்கி நிற்க அவனுக்கு பிடிக்கவில்லை...

அவள் அருகில் வந்தவன் மெல்ல அவளை தன்னுடன் சேர்த்து அணைத்து ஆறுதல் சொல்ல எண்ணி அவள் புறம் கையை நீட்ட அந்த நொடி

“ஹாய் டா..... “ என்று கத்தியவாறு ஓடி வந்தாள் மித்ரா....

அவளை கண்டதும் மலரை நோக்கி நீண்ட கையை உடனே இழுத்து கொண்டான் வசீகரன்...

அதற்குள் அவள் அவன் அருகில் ஓடி வந்திருக்க, மூச்சிரைக்க அவன் அருகில் வந்து நின்றவள்

“சாரி டா... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. ட்ராபிக்ல மாட்டிட்டேன்... “ என்றாள் கொஞ்சலாக

“ஹே.. மிது.. எதுக்கு இப்படி அடிச்சு புடிச்சு ஓடி வர்ற? .. இன்னும் ப்ளைட்டுக்கு டைம் இருக்கு... “ என்று புன்னகைத்தான்...

“அப்பாடா... எங்க உன்னை மிஸ் பண்ணிடுவேனோ என்று இருந்தது.. எப்படியோ புடிச்சிட்டேன்... “ என்றவள் அப்பொழுதுதான் அருகில் நின்றிருந்த மீனாட்சி மற்ரும் சுந்தரை பார்க்க, அவர்களை அங்கு கண்டு அதிசயித்தவள்

“ஹாய் ஆன்ட்டி, ஹாய் அங்கிள்.. என்ன அதிசயமா நீங்க ஏர்போர்ட்டிற்கு வந்திருக்கீங்க? முன்னெல்லாம் வசி மட்டும்தானே தனியா போய்ட்டு வருவான்.“ என்றாள் கேள்வியாக...

“ஹ்ம்ம் அப்படி கேள் மிது.. நான் என்னவோ பர்ஸ்ட் டைம் ப்ளைட் ல ஏறுகிற மாதிரி என்னை சென்ட் ஆப் பண்ண இத்தனை பேரும் வந்திருக்காங்க.. “ என்று மற்றவர்களையும் கை காட்டினான்...

அப்பொழுது தான் மற்றவர்களை பார்ப்பவளை போல விழி விரித்து பார்த்தவள் மலர் பெற்றோருக்கும் ஒரு ஹாய் சொல்லி பின் மலர் பக்கம் பார்த்தாள்...

மலரும் இவளையேதான் ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தாள்..

“ஹே மலர்.. எப்படி இருக்க?? கல்யாணத்தப்ப பார்த்ததுக்கு இப்ப ரொம்ப மெலிஞ்சுட்ட..சரியா சாப்பிடறதில்லையா?? “ என்று கட்டி கொண்டாள்...

மலரும்

“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கேன் ங்க.. நீங்க எப்படி இருக்கீங்க ?? “ என்றாள் மித்ராவை எப்படி அழைப்பது என்று தெரியாமல்...

மித்ரா தன் கணவன் வயது எனும் பொழுது கண்டிப்பாக அக்கா தான் ஆகும்..ஆனால் அக்கா என்று சொல்லி அதற்கு அவள் வேற எதுவும் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது என்று குழம்பி வெறும் ங்க என்றாள்..

“ஹே.. இது என்ன பட்டிகாடு மாதிரி வாங்க போங்க னுட்டு.. என்னை பேர் சொல்லியே கூப்பிடு.. “ என்றாள் மித்ரா..

அதை கேட்ட மலர்

“அடிப்பாவி.. உனக்கு கழுதை வயசாய்டுச்சு... ஆனாலும் அக்கானு சொல்லாம பேரை சொல்லி கூப்பிட சொல்றீயே.. நீயெல்லாம் விளங்குவியா?? “ என்று மனதுக்குள் திட்டி கொண்டிருந்தாள்..

ஆனாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் புன்னகைத்தாள் மலர்...

“ஹ்ம்ம்ம் அப்புறம் மலர். ஏர்போர்ட் வரைக்கும் வந்து என் வசியை அனுப்ப வந்திருக்க..ஓ அவனுக்கு எதுவும் ஆகிடும்னு பயமா?? அவனுக்கு எதுவும் ஆகாம என் வசியை நான் கூடவே இருந்து பத்திரமா பார்த்துக்கறேன்... ஹேப்பி?? “ என்று அவன் கையை பிடித்து அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள் மித்ரா உரிமையோடு...

அதை கேட்டு மலர் திடுக்கிட்டாள்.

“இவளுமா அவர் கூட போறா?? “ என்று அதிர்ச்சியாக இருந்தது..

“அவர் இதை பற்றி சொல்ல வில்லையே?? ஆமா எதை சொல்லி இருக்கான் இதை சொல்ல...

வசு பங்சன் அப்ப அவனை பார்த்தது தான்.. அப்ப மட்டும் என்னவோ எனக்காக உருகி கிட்டு இருக்கிற மாதிரி அவ்வளவு பில்டப் பண்ணினான்... ஆனா அதுக்கப்புறம் ஒரு போனும் இல்ல மெசேஜும் இல்லை...

அவளும் தினமும் அவன் இரவு ஏதாவது போன் பண்ணி பேசுவான் என எதிர்பார்க்க, அவனோ அழைக்கவில்லை.. ஒரு மெசேஜ் கூட பண்ணவில்லை...

மீனாட்சிதான் தினமும் இரவு வீட்டிற்கு அவன் லேட்டாக வருவதாக அவளிடம் சொல்லி புலம்பினார்..

சரி ஏதோ வேலை இருக்கும் போல என்று அவளும் தன் மனதை தேற்றி கொண்டாள்...

பின் நேற்றுதான் திடீரென்று வீட்டுக்கு வந்து நாளை லண்டன் கிளம்பணும் என்க அனைவரும் அதிர்ந்து போயினர்..

மருத்துவ துறை சம்பந்தமான கான்ப்ரன்ஸ்.. ஒரு வாரம்தான்... போய்ட்டு உடனே வந்திடறேன்.. அது சம்பந்தமா அலைந்து கொண்டிருந்ததால் வீட்டிற்கு வர முடியவில்லை என மறைமுகமாக மலருக்கும் செய்தி சொல்ல, அவளும் ஓரளவுக்கு சமாதானம் ஆகி இருந்தாள்...

அவசர வேலை இருப்பதால் வீட்டிற்கு வந்தவன் அரை மணி நேரம் கூட நிற்காமல் ஓடி விட்டான்.. அதிலயே மலருக்கு முகம் வாடி விட்டது...

ஆனாலும் தன் பெற்றோர்கள் முன்னால் எதுவும் காண்பித்து கொள்ளாமல் படிக்கிறேன் பேர் வழி என ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டாள்...

அதன் பின் இன்று நேராக மலர் அவர்கள் வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு வந்து விட, இப்பொழுது தான் அவனை பார்க்க முடிகிறது...

“அதுவும் நாலு வார்த்தை பேசு முன்னே இந்த மித்ரா குரங்கு வேற வந்திட்டா.. “ என்று மனதுக்குள் கருவி கொண்டிருந்தாள் மலர்...

மித்ராவும் அவள் முகத்தில் வந்து போன சிறு ஏமாற்றதை கண்டு கொண்டு உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்...

இதைத்தான் எதிர்பார்த்தாள் மித்ரா..

வசியின் திருமணத்தை கண்டதில் இருந்தே அவளுல் கொதித்து கொண்டேதான் இருக்கிறது.. அவளுக்கு சாதகமாக ஆடி மாதம் என சொல்லி மலரை அவள் வீட்டிலயே வைத்து கொண்டதால் நிம்மதியாக இருந்தது..

அதற்கு பிறகும் அவளை வசி உடன் சேர விடக்கூடாது.. அவன் எனக்கு சொந்தமானவன்.. ஏதோ ஒரு அவசரத்தில் அவன் தவறாக முடிவு எடுத்து விட்டான்..

அதை சரி செய்து அவனை மீண்டும் என்னிடம் கொண்டு வருவது என் பொறுப்பு என்று எண்ணியவள் எப்படி இவர்களை பிரிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்..

கணவன் மனைவியை பிரிப்பது எப்படி என்ற டிப்சை இணையத்தில் தேடியும் பல தமிழ் திரைப் படங்களை பார்த்தும் சில பல டிப்சை சேகரித்து வைத்திருந்தாள்...

அதையெலாம் சேர்த்து போட்டு கலக்கி மசாலாவாக்கி சில குருகிய திட்டங்கள் சில நீண்ட கால திட்டங்கள் என வகை பிரித்து பட்டியல் இட்டு வைத்து கொண்டாள்..

அதில் ஒன்றாக வசி மலரை சந்திக்க விடாமல் செய்ய வேண்டும் என்று எண்ணி இருக்க, எதேச்சையாக இந்த கான்ப்ரன்ஸ் பற்றி தெரிய வர, அவனை கட்டாயப்டுத்தி இந்த கான்ப்ரன்ஸ் க்கு செல்ல வைத்தாள்..

கூடவே தனக்கும் அங்கு வேலை இருப்பதாகவும் அவளும் அவள் துறை சம்பந்தமாக நிறை மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்பதால் அவனுடன் வருவதாக சொல்லி இரண்டு பேருக்கும் அவளே டிக்கட் புக் பண்ணி இருந்தாள்...

தான் வசியிடம் நெருங்கி நிற்பது மலருக்கு பிடிக்கவில்லை என உணர்ந்து கொண்டு வேண்டும் என்றே இன்னும் வசியிடம் நெருங்கி நின்று கொண்டு அவன் மீது உரசியபடியே பேசியவள் பின் நேரம் ஆவதாக சொல்லி வசியை பிடித்து தள்ளி கொண்டு உள்ளே சென்றாள்..

கல்லூரியில் இருந்து ஒன்றாக படிப்பவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வசி பெற்றோருக்கு அவர்கள் நெருக்கம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.

சிவசங்கரும் இப்பொழுது கொஞ்சம் மாறி இருந்ததால் அதை எதுவும் கண்டு கொள்ளவில்லை.. அவர் மாறி இருந்தார் என்பதை விட, தன் மாப்பிள்ளை மீது முழு நம்பிக்கை வைத்திருந்ததால் அவரால் தவறாக எதுவும் எண்ண முடியவில்லை..

மித்ராவின் அந்த நெருக்கத்தை கண்டு ஜோதிக்குத்தான் என்னவோ போல இருந்தது.. அவர் மலர் முகத்தை பார்க்க அவள் முகத்தில் வந்து போன சிறு சிணுங்கள், கோபம் அவருக்கும் புரிந்தது...

என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்தாலும் நம் பெண்களின் அடிப்படை குணங்கள் எப்பொழுதும் முழுவதும் மாறி விடாது...

அதில் ஒன்றுதான் தன் கணவனை யாருக்கும் பங்கு போட பிடிக்காது என்பது காலம் காலமாக இருந்து வருவது..

இதில் என்னதான் பொதுப்படையாக வெளிப்படையாக பழகினாலும் வெளியில் தன் கணவன் அடுத்த பெண்ணுடன் நண்பர்களாக பழகினாலும் உள்ளுக்குள் ஒரு மூலையில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்யும்..

மலருக்கும் அப்படித்தான் இருந்தது.. அதோடு ஏற்கனவே அவள் மனதில் இருந்த அந்த சந்தேக பயிர் இன்னும் வேகமாக வளர ஆரம்பித்தது..

ஜோதி தன் மகளின் முகத்தை கண்டு கொண்டு மெல்ல அவள் கையை அழுத்தி கொடுத்தார்...

அதற்குள் விமான நிலையத்தின் நுழை வாயிலை அடைந்தவர்கள் திரும்பி இவர்களை பார்த்து கை அசைத்து விடை பெற மலரும் கலங்கிய கண்களுடன் கை அசைத்து விடை கொடுத்தாள்..

அவளின் கலங்கிய முகத்தையே தன் மனதில் நிரப்பி கொண்டு உள்ளே சென்றான் வசி...

எல்லா ப்ராசஸ் முடிந்து விமானத்தில் உள்ளே செல்ல, அவர்கள் இருவருமே அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்பதால் பிரிமியம் மெம்பர்கள் ஆவர்.. அதனால் முதலாம் வகுப்பில் டிக்கட் புக் செய்திருந்தாள் மித்ரா...

ஆன்லைனில் செக்கின் செய்யும்பொழுது இருவருக்கும் அருகருகில் ஒட்டி இருக்குமாறு இருக்கையை தேர்வு செய்திருந்தாள்...

தங்கள் இருக்கைக்கு சென்று அமரவும் நடுவில் இருந்த கைப்பிடியை தூக்கி விட்டு அந்த இருவர் இருக்கையில் மித்ரா வசியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள்..

வசியின் கை வழியாக தன் கையை விட்டு கொண்டு அவன் கைகளுக்குள் தன் கைகளை பிண்ணி கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் மித்ரா...

அவளுடன் பழகியதில் இருந்து இது மாதிரி எப்பவாது அவனிடம் அதிகம் உரிமை எடுத்து கொள்வாள்... அதனால் இந்த முறை அவள் கொஞ்சம் அதிகமாகவே அவனிடம் உரிமை எடுத்து கொள்வதை அவனால் உணர முடியவில்லை...

அந்த விமானம் கிளம்பி மேல பறந்து கொண்டிருக்க, அது இரவு நேரம் என்பதால் விளக்கை அணைத்திருக்க, மித்ரா இன்னும் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் இடுப்போடு கட்டி கொண்டு அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!