தவமின்றி கிடைத்த வரமே-1



அத்தியாயம்-1 



இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்...
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா….


என்ற இனிமையான பாடல் தன் அருகில் ஓடிக் கொண்டிருப்பவரின் பாக்கெட்டில் இருந்த அலைபேசியில் இருந்து ஒலிக்க, அதை ரசித்த படியே தன் காலை ஓட்டத்தை ஓடிக் கொண்டிருந்தான் நம் பயணத்தின் நாயகன்...

அப்பொழுது தான் நினைவு வந்தது அவன் காதலி இன்னும் வந்திருக்க வில்லையே என்று... எப்பொழுதும் அவன் வருமுன்னே வந்து அவனுக்காக காத்திருப்பவள் இன்று இன்னும் வரவில்லையே... என்று ஏக்கமாக சுற்றிலும் பார்த்தான்....

அவனின் தேடலை கண்டு கொண்டாளோ என்னவோ.. அவனை மேலும் தேடி ஏங்க வைக்காமல் அடுத்த நொடி அவன் முன்னே வந்து நின்றாள்....

அவளின் வருகையை உணர்ந்தவன் முகத்தில் புன்னகை அரும்ப, தன் முகத்தை நிமிர்த்தி அவள் முன்னே நீட்ட, அவளும் அவனை ஏமாற்றாமல் சில்லிட்டிருந்த தன் கரங்களால் அவன் முகத்தில் கோலமிட்டு அவனுக்கு குறுகுறுப்பை மூட்ட அதில் மெல்ல வெக்கப்பட்டு அதை அனுபவித்து ரசித்தான்...

அவன் வெக்கப்படும் அழகை ரசித்த அவனின் காதலி மேலும் முன்னேறி அவன் முன் உன்னுச்சி கேசத்தை செல்லமாக கலைக்க, அதில் இன்னும் கரைந்து தான் போனான்...

அவளின் அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் தன்னை மறந்து அவளிடம் முழுவதும் சரணடைந்திருந்தான் அவன்...

கொஞ்ச நேரம் தன் காதலனுடன் கொஞ்சி விளையாடிய அவள் தனக்கு நேரம் ஆவதை உணர்ந்து அவனை பிரிந்து செல்ல முயல, அவளை எப்பொழுதும் தன்னுடனே பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் அவளை ஏக்கமாக பார்க்க, அவளோ அவனிடம் பிரியா விடைபெற்று செல்ல காத்து நின்றாள் ...

“ஹ்ம்ம்ம்ம் மீண்டும் நாளைதான் உன் தரிசனம் கிடைக்கும்....நாளையும் மறக்காமல் வந்து விடு அன்பே...“ என்ற பெருமூச்சுடன் தன் வசீகர புன்னகையோடு தன் தென்றல் காதலியை விடை கொடுத்து அனுப்பி வைத்தான் வசி என்கிற வசீகரன்....

வசீகரன்- நிறைய பேருக்கு நினைவு வந்திருக்கும்... என் மடியில் பூத்த மலரே நாயகன் ஆதி மற்றும் நிகிலனின் நண்பன் தான் நம் இந்த புதிய பயணத்தின் நாயகன்...

பெயருக்கேற்றார் போல யாரையும் எளிதில் வசீகரிப்பவன்.. ஆறடி உயரமும் அடர்ந்த கேசமும் தன்னுடைய பிசியான செட்யூலிலும் தன் காலை உடற் பயிற்சியை தவறாமல் செய்து வருவதால் முறுக்கேறிய, ஆண்மை ததும்பும் தோற்றம் கொண்டவன்....

தன் மற்ற இரு நண்பர்களை போல முகத்தை எப்பொழுதும் இறுக்கமாக வைத்திருக்காமல் எப்பொழுதும் இலகிய நிலையில் கனிவான முகமும் சிரித்த கண்களும் யாரும் எப்பொழுதும் அவனை அணுகும் வகையில் மிகவும் மென்மையான குணம் கொண்டவன்...

நிறைய பேர் அவனிடமே வியந்து கேட்டிருக்கிறார்கள்.. அவன் எப்படி மற்ற இரண்டு பேருடன் நண்பனானான் என்று..

பள்ளியில் மற்ற இருவரும் எப்பொழுதும் யாரையாவது முறைத்து கொண்டே இருக்க, இல்லையென்றால் யாருடனாவது சண்டையிட்டு கொண்டிருக்க, வசிதான் அவர்கள் இருவரின் கோபத்தை கட்டுபடுத்தி அவர்களை அமைதி படுத்துவான்....

இவன் எப்படி அவர்களுடன் நண்பனான் என்று பல நேரங்களில் அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும்...

காதல் எப்படி இனம், மொழி, குணம் பார்த்து வராதோ அதே போலத்தான் நட்பு என்பதும் மற்றவருடைய இனம், மொழி, குணம் பார்த்து வருவதில்லை போல...

ஆறாம் வகுப்பில் மூவரும் ஒரே வகுப்பில் சேர்ந்த பொழுது ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் உதவ, அதுவே நட்பாக மலர்ந்தது...12 ஆம் வகுப்பு வரை மூவரும் ஒரே வகுப்பில் தான் ஒன்றாக படித்தனர்...

இடையில் ஆதி வேற வகுப்பிற்கு மாற்றப்பட, அவன் தன் தந்தையிடம் அழுது அடம் பிடித்து மீண்டும் தன் நண்பர்கள் இருந்த வகுப்பிற்கே மாற்றி வந்து விட்டான்...

பள்ளி படிப்பிற்கு பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பயணித்தாலும் அவர்கள் நட்பு அப்படியே தான் தொடர்ந்து கொண்டிருந்தது....

பள்ளி, கல்லூரி முடிந்து அவரவர் பாதையில் பிசியாக இருந்தாலும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வர்.... அலைபேசியில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உரையாடிக் கொள்வர்...

வசிக்கு சிறுவயதில் இருந்தே மருத்துவ துறையில் ஆர்வம் அதிகமாக இருக்க, மற்ற நண்பர்கள் இருவரும் அவனை ஊக்குவித்தனர்.... 12 ஆம் வகுப்பில் கொஞ்சம் மதிப்பெண் குறைந்து விட, அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை...

அவர்கள் இருந்த நிலைக்கு பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்வது என்பது இயலாத ஒன்று

மருத்துவனாக அத்தனை தகுதி இருந்தும் தேர்வு நேரத்தில சரியாக பிரசன்ட் பண்ண முடியாமல் போக மதிப்பெண் குறைந்துவிட்டது...

நம் education system தான் மாணவர்களின் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து மருத்துவராக eligible ஆ இல்லையா என்று தீர்மானிப்பதால் மருத்துவனாக கனவு கொண்டிருந்த வசியால் அதில் சேர முடியவில்லை...

தன் சிறுவயது கனவான மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி கவலை கொண்டிருந்த நிலையில் ஆதிதான் தன் தந்தையிடம் சொல்லி அவனை தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்து விட்டான்...

அதோடு கல்லூரி கட்டணத்தை அவரே ஏற்று கொள்ள, வசீகரனுக்கு தன் நண்பனை நினைத்து பெருமையாக இருந்தது...

முதலில் வசியின் பெற்றோர்கள் மறுத்தனர்... ஆதியின் தந்தை ராம் அவர்களை சந்தித்து

“நம்ம பசங்க கனவை நிறைவேற்றி வைக்கணும்.. அவனுக்கு மருத்துவத்தில் விருப்பம் இருக்கும் பொழுது அவனை அதை படிக்க விடாமல் வேற ஒரு படிப்பை படிக்க சொன்னால் அது அவன் மனதை நாமே கொலை செய்வதற்கு சமம்...

அப்படி ஒரு கொலையை செய்யாதிர்கள்.. அவனுக்கு பிடித்த படிப்பை படிக்கட்டும்.. என்னிடம் பணம் இருக்கு.. நான் தருகிறேன்.. அந்த பணத்தை நான் தொழிலில் முதலீடு செய்தால் இன்னும் பெருகும்தான்....

ஆனால் அதை விட அதே பணம் ஒரு நல்ல டாக்டரை உருவாக்கி பல பேர் உயிரை காப்பாற்ற போகிறது என்றால் எனக்கு அதுதான் மகிழ்ச்சி.. நீங்கள் இதில் தலையிடாதிர்கள்.. “ என்று கூறி அவர்களை கன்வின்ஸ் பண்ணி அவன் விரும்பிய அந்த மருத்துவ கல்லுரியிலயே சேர்த்து விட்டார்...

அவனும் தன் பொருப்பை உணர்ந்து சின்சியராக படிக்க, இரண்டாவது வருடத்திலயே ஸ்காலர்ஷிப் கிடைக்க, அதை கொண்டு மேலும் நன்றாக படித்தான்...

MBBS முடித்ததும் அவன் மேற்படிப்பாக Cardiology எடுத்து படித்தான்...

ஏனோ சிறுவயதில் இருந்தே அந்த இதயத்தின் மீது தனியா காதல் அவனுக்கு...

ஒருவர் உடலில் எந்த உறுப்பு வேலை செய்யாவிட்டாலும் சமாளித்து விடலாம்... ஏன் மூளை வேலை செய்ய வில்லையென்றால் கூட கோமா ஸ்டேஜ் என்ற நிலைக்கு சென்று விடுவர்.. ஆனாலும் அவர்கள் இதயம் இயங்கி கொண்டுதான் இருக்கும்..

அதே போல இன்பத்திலும் துன்பத்திலும் அதிகம் துடிப்பது இதயம்தான்... அதனாலயே அந்த இதயத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும்.. என்பதாலயே அதை பற்றின படிப்பை எடுத்து படித்தான்...

அவனுடைய மேற்படிப்புக்கும் ராம்குமார் உதவ முன் வர, அதை மறுத்து விட்டான் வசி..

“இதுவரை எனக்கு நிழலாய் நின்று என்னை காத்ததற்கு நன்றி அங்கிள்.. இனிமேலும் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பலை.. நானே இப்பொழுது சம்பாதிக்கிற நிலைக்கு வந்து விட்டேன்..

அதனால் நானே சமாளித்து கொள்வேன்... நீங்கள் எனக்கு இதுவரை செய்த உதவிக்கு ரொம்ப நன்றி.. நீங்கள் மட்டும் அன்று எனக்கு உதவியிருக்க வில்லையென்றால் என் கனவு கனவாகவே போயிருக்கும்...

இன்று ஒரு மருத்துவனாக உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது...”

என்று உணர்ச்சி பொங்க மறுத்து விட, ராம்குமார் அவனை கட்டி அணைத்து கொண்டு

“God bless you my child…. உனக்கு எப்ப என்ன உதவி என்றாலும் தயங்காமல் என்னிடம் வா... நீ இந்த Cardiology துறையில் உலக புகழ் பெற்ற நிபுணனாக வேண்டும்.. உயிருக்கு போராடும் அனைவரையும் உன்னால் முடிந்தவரை காப்பாற்றனும்.. “என்று சிரித்தவாறு அவன் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்தார்....

அவர் அன்று சொன்னது எப்பவுமே வசியின் மனதில் ஓடி கொண்டேஇருக்கும்.. அதையே ஒரு மந்திரமாக அடிக்கடி சொல்லி கொள்வான்..

அவன் சொன்ன மாதிரியே ஒரு தனியார் மருத்துவமனையில் பகுதி நேர மருத்துவராக பணியில் சேர்ந்தான்...

அந்த மருத்துவமனையின் MD ன் மகள் அவன் MBBS வகுப்பு தோழி....அதனாலயே தன் தந்தையிடம் சொல்லி அவனுக்கு அங்கு வேலை வாங்கி கொடுத்தாள்... அவருக்கும் இவனை பிடித்து விட,அவருமே அவனுடைய மேற்படிப்புக்கு உதவ, தன்னுடைய மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து இன்று புகழ் பெற்ற ஒரு successful இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வருகிறான்...

அவனின் குரு ராம்குமார் சொன்ன மாதிரி

இதுவரை இதய நோய் என்று தன்னிடம் வந்தவர்கள் அனைவரையும் எப்பாடு பட்டாவது காப்பாற்றி விடுவான்...அவனிடம் வந்து தோழ்வியுற்ற கேஸ் என்று இதுவரை எதுவும் இருந்ததில்லை....

அதனாலயே டாக்டர் வசி தான் வேண்டும் என்று அவனுக்காக காத்திருந்து அவனை சந்திப்பவர்கள் அதிகம்...ஒவ்வொருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வெளியேறும்பொழுது அவன் கைகளை பிடித்து நன்றி சொல்லி செல்வர்....

அதை எல்லாம் காணும்பொழுது தன் கனவு நிறைவேறி விட்டதை போல அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்..ஆனாலும் அவன் உள்ளுக்குள் சின்ன குறை அவனை எப்பொழுதும் அறித்து கொண்டே தான் இருக்கிறது..

அது தன்னை இந்த துறைக்கு கொண்டு வந்த தன் நண்பனின் தந்தை ராம் அங்கிளை தன்னால் காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்பதே.. தான் ஒரு தலை சிறந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவனாக இருந்தும் அவரின் இக்கட்டான் நிலையில் இங்கு இல்லாமல் அப்பொழுது வெளிநாடு சென்றிருந்தான்...

“நான் மட்டும் இங்கு இருந்திருந்தால் எப்படியாவது அவர் உயிரை காப்பாற்றியிருப்பேன்.... “ என்று அடிக்கடி மனதுக்குள் புலம்புவான்

ஒவ்வொரு பேசன்ட் ஐயும் பார்க்கும்பொழுதும் அவர் நினைவு வர, எவ்வளவு கிரிட்டிகல் சிட்சுவேசனிலும் எப்படியாவது போராடி காப்பாற்றி விடுவான்..

அது மாதிரி காப்பாற்றியாக வேண்டும் என்பதாலயே இந்த துறையில் இன்னும் ஆராய்ச்சி செய்து வருகிறான்...

ராம் அங்கிளின் நினைவில் சிறிது நேரம் கண்ணை மூடி ஓடியவன் தன் மனம் பாரமாக இருக்க தன்னை கட்டு படுத்தி கொண்டு அதில் இருந்து வெளிவர எண்ணி, மற்றவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு ஓடி கொண்டிருந்தான்..

ஒவ்வொருவரும் காதில் ஒரு ஹெட்போனை மாட்டி கொண்டு அதில் ஒலிக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டு ஓட, அவர்களை பார்த்தவாறு தன் கவனத்தை மாற்றினான்...

காலையில் ஓடி வரும் ஒவ்வொருவரையும் பார்க்கவே அவனுக்கு சுவாரஷ்யமாக இருக்கும்....

எத்தனை விதமான மனிதர்கள்....

தன் தந்தை இந்த காலை ஓட்டத்தை அறிமுகபடுத்தியதில் இருந்தே அவனுக்கு இது மிகவும் பிடித்து விட்டது.. அப்பொழுதெல்லாம் காலையில் எங்கு பார்த்தாலும் குருவிகளின் கீச் கீச் சென்ற சத்தமும் பலவித பறவைகளின் ஓசையும் அந்த காலை நேரத்தையே ரம்யமாக்கி இருக்கும்..

அதோடு இந்த மாதிரி ஓடி வரும்பொழுது ஒருவருகொருவர் நின்று நலம் விசாரித்து கொண்டும் சுறுக்கமாக சில நிமிடங்கள் பேசி விட்டு செல்வதையும் அவன் ஆவலாக கவனிப்பான்...

ஆனால் இன்றைய கால கட்டத்தில அவை எல்லாம் மறைந்து விட்டன... அந்த குருவிகளும் பறவைகளும் குறைந்து வருவதை போல வழியில் நின்று நலம் விசாரிக்கும் பழக்கமும் குறைந்து வருகிறது...

எல்லாரும் காலை ஓட்டத்தை ஆரம்பிக்கும் முன்னரே காதில் இந்த ஹெட் போனை மாட்டிகொண்டு அதில் மூழ்கி போய் விடுகிறார்கள்.. வழியில் தெரிந்தவர்கள் வந்தாலும் நின்று பேச நேரம் இல்லாமல் வெறும் புன்னகையும் கை அசைப்புடன் கடந்து விடுகின்றனர்...

ஓட்டத்தில் மட்டுமில்லாமல் பயணங்களிலும் கூட இந்த gadgets களின் ஆக்கிரமிப்புதான்..

முன்பு பஸ் பயணத்திலோ இரயில் பயணத்திலோ நீண்ட தூரம் செல்லும் நேரங்களில் அருகில் அமர்ந்திருப்பவர்தான் பொழுது போக்கு..

மெல்ல இருக்கையில் அமர்ந்ததுமே மற்றவரை பார்த்து புன்னகைத்து தயங்கியவாறு பேச ஆரம்பிப்பர்...

சிறிது நேரத்திலயே அவர்களுக்குள் சுமூக உறவு வந்து எல்லா கதையையும் பேசி முடிக்க, அந்த பயணத்தின் முடிவில் அழகான நட்பு மலர்ந்திருக்கும்...

அதை இரயில் சிநேகிதம் என்று அழகாக சொல்வர் அந்த நாட்களில்

அந்த நட்பின் ஆயுட்காலம் சிறிது காலமாக இருக்கும் சிலருக்கு... சில பேருக்கு நீண்ட நாள் தொடர்வதாகவும் மாறிவிடும் ...

ஆனால் இன்றோ பஸ்ஸிலோ, இரயிலிலோ, விமானத்திலோ இருக்கையில் அமர்ந்ததும் முதல் வேலை தன் அலைபேசியை எடுத்து அதில் ஹெட் போனை மாட்டிகொண்டு தனி உலகத்தில் புகுந்து விடுகின்றனர்.. அருகில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று கூட கண்டு கொள்ளாமல்…

அதனாலயே வசீகரனுக்கு இந்த ஹெட் போனை கண்டாலே அலர்ஜி.. அதுவும் குறிப்பாக மக்களுடன் பழகும் சமயங்களில் அதை தொடவே மாட்டான்...

அவன் அதிகம் பேசாவிட்டாலும் மற்றவர்கள் பேசுவதை விரும்பி ரசித்து கேட்பான்..

சுற்றுபுறத்தையும் அதில் நடமாடும் வேறுபட்ட மனிதர்களையும் வேடிக்கை பார்த்து ரசிப்பதில் அலாதி பிரியம்....

அதே போல இன்றும் தன்னை சுற்றி இருக்கும் மனிதர்கள், அவர்களுடன் காலை ஓட்டத்திற்கு வரும் வேறுபட்ட நாய்கள், அந்த பூங்காவை சுற்றி இருக்கும் செடி, கொடிகள் அதன் மேல் வீற்றிருக்கும் பனித்துளிகள் என்று அனைத்தையும் ரசித்தவாறே அன்றைய ஓட்டத்தை முடித்து விட்டு வீடு திரும்பினான்... 




வீட்டிற்கு வந்தவன் நேராக ஹாலில் இருந்த குளியலறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி வந்தவன் தோட்டத்தில் அமர்ந்திருந்த தன் பெற்றோர்களை கண்டதும் டவலால் தன் முகத்தை துடைத்தபடியே அவர்கள் அருகில் சென்றான்...

அருகில் சென்றதும்

“குட்மார்னீங் பா... குட்மார்னீங் மா.. “ என்று சிரித்தவாறு அவர்கள் அருகில் இருந்த இன்னொரு நாற்காலியை இழுத்து அமர்ந்தான்..

வசியின் அப்பா சுந்தர் அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியர்.... அன்னை மீனாட்சி அரசு பள்ளியில் தமிழாசிரியர்... அவர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில் அரக்க பரக்க எழுந்து ஓடுவர்

அன்று சனிக்கிழமை என்பதால் இருவருமே சாகவாசமாக எழுந்து காலை உடற்பயிற்சியை முடித்து தோட்டத்தில் சிறிது நேரம் உலாவியவர்கள் அப்பொழுதுதான் அமர்ந்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்தனர் காபி ஐ பருகியவாறு..

தன் மகனை கண்டதும்

“காலை வணக்கம் வசி... என்ன அதுக்குள்ள உன் ஓட்டத்தை முடிச்சிட்ட?? “ என்று கேட்டவாறு அருகில் இருந்த கோப்பையில் இருந்து காபியை ஊற்றி அவனிடம் நீட்டினார் மீனாட்சி...

“தேங்க்ஷ் மா.. “ என்றவாறு அதை வாங்கி உறிஞ்சியவன் தன் அன்றைய காலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டே கதை அடித்து கொண்டிருந்தான்...

அவன் பேசிக் கொண்டிருக்க, மீனாட்சியும் சுந்தரும் ஒருவரை ஒருவர் கண்ணால் ஜாடை காட்டி ஏதோ சொல்ல, மீனாட்சி மெதுவாக ஆரம்பித்தார்....

“வசி கண்ணா... நான் சொன்ன விசயத்தை பற்றி யோசிச்சியா?? என்ன முடிவு எடுத்திருக்க?? “என்றார் ஆவலாக....

“எந்த விசயம் மா...?? “ என்றான் தெரிந்தும் தெரியாதவனாக...

“டேய்.. தெரிஞ்சுகிட்டே தெரியாத மாதிரி கேட்கற பார்த்தியா??.. சரி நானே சொல்றேன்... எல்லாம் உன் கல்யாண விசயத்தை பத்திதான்...

நான் கோவில்ல அடிக்கடி ஒரு பொண்ணை பார்ப்பேனு சொன்னேனே.. மஹாலட்சுமி மாதிரி இருப்பா.. கிட்டதட்ட பாதி நம்ம ஆதி வைப் பாரதி மாதிரியும் மீதி நம்ம நிகிலன் வைப் மது மாதிரியும் இருப்பா...

எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.. நீ ஒருதரம் பார்த்து ஓகே சொல்லிட்டனா அந்த பொண்ணையே முடிச்சிடலாம் கண்ணா... “ என்றார் ஆர்வமாக...

“ஹா ஹா ஹா... நான் தான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே மா... எனக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு... இந்த துறையில நான் இன்னும் நிறைய சாதிக்கணும்... எனக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்க தோணுதோ அப்ப பண்ணிக்கறேனு... “ என்று சிரித்தான் வசி

“டேய்...இப்பயே உனக்கு வயது 31 ஆயிடுச்சு.. உன் செட் பசங்க எல்லாருமே கல்யாணம் ஆகி குழந்தை குட்டினு செட்டில் ஆகிட்டாங்க.. அந்த நிகிலன் தான் உனக்கு கம்பெனி கொடுத்து கிட்டிருந்தான்.. அந்த சிவகாமி எப்படியோ அவனையும் மடக்கி கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா...

இப்ப மீதி இருக்கிறது நீ மட்டும்தான்... மத்த எல்லா அம்மாக்களும் அவங்கவங்க மறுமகள கொஞ்சறத பார்க்கிறப்போ எனக்கு எவ்வளவு பொறாமையா இருக்கு தெரியுமா... சே எனக்கு அந்த அதிஷ்டம் இல்லையே என்று..

இந்த பொண்ணு சூப்பரா இருக்கா டா ... நல்ல குணம்.. பேசாம ஓகே சொல்லிடேன்.. “ என்றார் ஏக்கமாக...

“மா... உனக்கு பிடிச்சிருக்குனு நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?? “ என்று மெல்ல சிரித்தான்...தன் மகனின் வசீகர சிரிப்பை ரசித்த மீனாட்சி

“வசி... அந்த நிகிலன் மாதிரி உன் மனசுக்குள்ள எதுவும் மறச்சு வச்சிருக்கியா?? திருமணத்தை பத்தி , மறுமகள பத்தி அவனே தப்பு தப்பா நினச்சுகிட்டு அதுக்கு பயந்துகிட்டு கல்யாணம் வேண்டாம்னு இருந்தானாம்...

அவ்வளவு பெரிய போலிஸ்காரன்...ஒரு சின்ன விசயத்தில போய் இப்படி முட்டாளே இருந்திட்டானே.. சிவா நேத்துதான் கோயில்ல பார்த்தப்போ எல்லாம் சொன்னா....

அது மாதிரி உன் மனசுலயும் ஏதாவது இருந்தா சொல்லிடு கண்ணா... “ என்றார் மீனாட்சி....

“மா... அவன் ஒரு பிடிவாதக்காரன்.. நானும் ஆதியுமே பலமுறை அவனுக்கு எடுத்து சொல்லிட்டோம்.. அவன் தன் கருத்துல இருந்து வெளில வரவே மாட்டேனுட்டான்... எப்படியோ இப்ப மாட்டிகிட்டான்...

சே.. அவன் கல்யாணத்தை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கல...அவன் முறச்சுகிட்டே தான தாலி கட்டியிருப்பான்....அந்த கண் கொள்ளா காட்சிய மிஸ் பண்ணிட்டேனே.. ” என்று சிரித்தவன்

“எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மா...

ஆனா என் கனவு பத்திதான் ஏற்கனவே சொல்லியிருக்கேனே... எனக்கு இந்த அரேஞ்சுடு மேரேஜ் ல எல்லாம் நம்பிக்கை இல்லை....

உங்க இரண்டு பேரையும் போல திகட்ட திகட்ட காதலித்து கல்யாணம் பண்ணனும்..

ஒரு பொண்ணை பார்க்கிறப்போ “இவதான் எனக்கானவள்” அப்படீனு என் இதயம் சொல்லனும்.. அவளை கண்ட நொடியில் உள்ளே சில்லென்ற பனிமழை பொழியணும்...

அவளை காணாத நொடிகளில் என் இதயம் அவளை காண துடிக்கணும்..அவளை பிரிய நினைக்கும் நொடிகளில் அந்த இதயம் அந்த வலியை உணரணும்...

அப்படி ஒருத்தியை கண்டால் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிக்கறேன்...

வேணும்னா ஒவ்வொரு முகூர்த்தத்துக்கும் நீங்க கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்ணி பத்திரிக்கை அடிச்சு பொண்ணு பெயர் மட்டும் காலியா வச்சிருங்க..

அவளை கண்ட உடனே அதை பில் பண்ணி எல்லாருக்கும் கொடுத்திடலாம்... “ என்றான் சிரித்தவாறு...

“ஆமான் டா. நீ சொன்ன மாதிரி ஒவ்வொரு முகூர்த்தத்துக்கும் நான் பத்திரிக்கை அடிச்சு வச்சிருந்தா இந்த 4 வருடத்தில பத்திரிக்கை குவிந்து போய் பத்திரிக்கை மலை தான் வந்திருக்கும்...

கின்னஸ் ல வேனா தன் மேரேஜ்க்காக அதிக பத்திரிக்கை அடித்த சாதனையாளன் அப்படீனு அவார்ட் கொடுக்கலாம்... “ என்றார் சலித்துக் கொண்டே...

“ஹா ஹா ஹா இதுவும் குட் ஐடியா மா.. டாட்... நீங்க என்ன சொல்றீங்க.. “என்று அதுவரை அமைதியாக அவர்கள் இருவரின் பேச்சை கேட்டுகொண்டிருந்த தன் தந்தையை நடுவில் இழுத்தான் வசி...

“டேய் வசி... அவ ஏற்கனவே புலம்பிகிட்டிருக்கா.. நீ அதுல எண்ணை ய ஊத்தின, அப்புறம் ஒரேடியா பொங்கிட போறா?” என்று சிரித்தார் சுந்தர்...

தன் கணவனை பார்த்து முறைத்தவர் தன் மகனிடம் திரும்பி

“முடிவா என்னடா சொல்ற?? “ என்றார் கோபமாக இருப்பதாக காட்டிகொண்டு

“முடிவா உன் மறுமகளை பார்த்த பிறகு தான் என் கல்யாணம்... “ என்றான்...

“சரி... இத்தனை வருசத்துல எத்தனை பொண்ணை பார்த்திருப்ப?? படிக்கிற காலத்துல, பி ஜி பண்றப்போ அவ்வளவு ஏன் வேலை செய்யறப்போ உன் துறைய சார்ந்த டாக்டர் பொண்ணுங்க, அப்புறம் பேசன்ட்ஸ், பேசன்ட்ஸ் ஐ பார்க்க வர்றவங்க னு எத்தனை பொண்ணுங்களை பார்த்திருப்ப...

அதுல ஏதாவது ஒரு பொண்ணை பார்த்து கூடவா உனக்கு மணி அடிக்கல?? பல்ப் எரியல?? பனி மழை பொழியல?? “என்றார் மீனாட்சி நக்கலாக

“இ ல் லை யேயே.... மா... “என்றான் சிவாஜி ஸ்டைலில் இழுத்தவாறு...

“டேய் கண்ணா... அதுக்கெல்லாம் நீ பொண்ணுங்களை சைட் அடிக்கணும்... எப்ப பார் சாமியார் மாதிரி கண்ணை இறுக்கி மூடிகிட்டும் காதை இறுக மூடிகிட்டா அப்புறம் எந்த பொண்ணுங்கள உனக்கு பிடிக்கும்..??

இதுக்கெல்லாம் உன் அப்பா மாதிரி தைரியம் வேணும்....உங்கம்மா வை பார்த்த அடுத்த நொடியே அவ கிட்ட போய் தைர்யமா புரபோஸ் பண்ணிட்டேன் இல்ல.. “ என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டு சிரித்தார் சுந்தர்...

“சும்மா இருங்க.... பையன் கிட்ட பேசற பேச்சா இது... “என்று கன்னம் சிவந்தார் மீனாட்சி.. “..

தன் மனைவியின் அழகை அந்த வயதிலும் ரசனையோடு பார்த்திருக்க, வசிக்கோ இன்னும் ஆச்சர்யமாக இருந்தது....

திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் அவர்களுக்குள் ஒரு சிறு சண்டையோ வாக்குவாதமோ கூட வந்ததில்லை... இருவரும் தன் இணையின் கருத்தை மதித்து, எதுவானாலும் கலந்து ஆலோசித்து நடப்பதே அதற்கு காரணம் என்று புரிந்து கொண்டான்...

எப்பொழுதாவாது கருத்து வேறுபாடு வரும்பொழுது அந்த நேரம் அதை பேசாமல் இருவருமே யோசிக்க விட்டுவிடுவர்...பின் சிறிது நேரம் கழித்து இருவருமே இறங்கி வந்து அடுத்தவருக்கு விட்டு கொடுப்பர்....

ஒருவர் மேல் மற்றவர் வைத்திருக்கும் காதல்தான் இந்த விட்டு கொடுத்தலுக்கு அடிப்படை காரணம் என்பதும் அவன் அறிந்ததே....

சின்ன வயதில் இருந்தே தன் பெற்றோர்களின் காதலையும் அன்பையும் பார்த்து வளர்ந்தவனுக்கு தானும் இதே மாதிரிதான் தன்னவளை காதலிக்க வேண்டும்.. என்று உறுதி கொண்டான்...பின் தன் தந்தையை பார்த்து

“ஹ்ம்ம்ம் சூப்பர் பா...நானும் இனிமேல் உங்க வழியை பின்பற்ற முயற்சி செய்யறேன்....சரி... எங்க உங்க இளவரசியை இன்னும் காணோம்?? “ என்று பேச்சை மாற்றினான்...

“அவ இரவெல்லாம் கண் முழிச்சு படிச்சா டா... அதான் இப்ப நல்லா தூங்கறா போல .. .+2 இல்லையா... அதான் நிறைய படிக்கிறா போல... “ என்றார் சுந்தர்

அதை கேட்டு தன் கடிகாரத்தை திருப்பி மணியை பார்த்தவன்,

“ஏன் பா... நைட் எல்லாம் கண் விழிச்சு படிச்சிட்டு மதியம் வரைக்கும் தூங்கறதுக்கு பதிலா நைட் நல்லா தூங்கிட்டு ஏர்லி மார்னிங் எழுந்து படிக்கலாம் இல்லை... அதுதான் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது.... “ என்றான் ஒரு மருத்துவனாக.....

“ஹீ ஹீ ஹீ... அதுல ஒரு லாஜிக் இருக்கு டாக்டர்.... நைட் தூக்கம் வராதப்போ சும்மா புரண்டு புரண்டு படுத்து வராத தூக்கத்தை வர வைக்கிறதுக்கு, நைட் படிச்சிட்டு, காலையில இழுத்து போர்த்தி தூங்கினா எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா???

இதெல்லாம் இந்த மக்கு அண்ணனுக்கு எங்க தெரிய போகுது??.. நான் சொல்றது கரெக்ட் தான டாட்... “ என்று தன் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டு சிரித்தாள் அந்த வீட்டின் இளவரசி வசு என்கிற வசுந்தரா...

“என் பொண்ணு எப்பவுமே கரெக்ட் ஆதான் சொல்லுவா... வசுகுட்டி... “ என்று சிரித்தார் சுந்தர்...

“போச்சுடா... ஏற்கனவே அவ ஆடுவா... இப்ப அவ சொல்றது எல்லாம் சரி னு சொல்லிட்டீங்களா அவ்வளவு தான்... “ என்று சிரித்த மீனாட்சி மீண்டும் தன் மகனின் திருமண பேச்சிற்கு வந்து நின்றார்...

அவனும் தன் பக்கம் இருக்கும் காரணத்தையே திரும்ப பாட

“டேய்... வசி...இது சரிப்படாது... இனிமேல் நான் ஸ்ட்ரிக்ட் அம்மாவா இருக்க போகிறேன்... நான் சொல்றத தான் நீங்க இரண்டு பேரும் கேட்கனும்... “ என்று தனக்கு வராத கோபத்தை வரவைக்க முயன்றார் மீனாட்சி....

அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள் வசுந்தரா...

“மம்மி... நீங்க ஸ்ட்ரிக்ட் மம்மியா ?? கிரேட் ஜோக்...அதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது மா... வீணா ட்ரை பண்ணாதிங்க... “ என்று சிரித்தாள் வசு...

“ஹ்ம்ம்ம் இந்த ஸ்கூல் டீச்சரா போனது தப்பா போச்சு... அங்க அந்த பசங்க பண்ற சேட்டை, வால் தனத்தையெல்லாம் பார்த்து அடிக்க மனசு வராமல் பொறுமையா அவர்களே புரிந்து கொள்ளுமாறு கனிவா பேசி பேசி அதுவே வீட்லயும் வந்திடுச்சு....

பார்... உங்களை மிரட்ட கூட எனக்கு வர மாட்டேங்குது.. “ என்றார் மீனாட்சி பாவமாக...

“ஹா ஹா ஹா ... மீனு.. ஆனா என்கிட்ட மட்டும் உன்னோட இந்த லாஜிக் மறந்து போய்டுதோ?? “ என்றார் சுந்தர் கண் சிமிட்டி குறும்பாக...

“என்ன டாட் சொல்றீங்க.. அம்மா..?? . லாஜிக் மறந்து?? .... “என்று யோசித்தவள்

“ஓ... அம்மா உங்கள திட்டறத சொல்றீங்களா?? “என்றாள் வசு

“ஹ்ம்ம்ம் திட்டறது மட்டுமா... அதுக்கும் மேல டா வசு ..” என்றார் பாவமாக...

“அதுக்கும் மேல னா?? ஓ நீங்க அம்மாகிட்ட அடி வாங்கறத சொல்றீங்களா பா ?? “ என்று மீண்டும் சிரித்தாள் வசு ...

“பார்த்து மெதுவா பேசு வசுகுட்டி... என் ஸ்டூடன்ட்ஸ் யார் காதுலயாவது விழுந்திட போகுது.. காலேஜ் ல எனக்கு இருக்கிற கொஞ்சம் மரியாதையும் காத்துல போய்டும்... “ என்று சிரித்தார் சுந்தர்....

அதை கேட்ட மீனாட்சி அவரை கோபமாக முறைக்க முயன்று கோபம் வராமல் போக வாய் விட்டு சிரித்தார்....

அதை கண்டு கொண்ட வசு

“”ஹீ ஹீ ஹீ.. நான்தான் அப்பவே சொன்னேனா மா... நீங்க அதுக்கெல்லம் செட் ஆக மாட்டீங்கனு.. நான் வேணா உங்களுக்கு ட்யூசன் எடுக்கவா எப்படி கோபமா இருக்கிறது?? எப்படி முறைக்கிறது னு ?? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் வசு ...

“போடி வாயாடி...எங்க இருந்து தான் உனக்கு இவ்வளவு வாய் வந்ததோ??.. உன் அண்ணனை பார்... நாலு வார்த்தைக்கு மேல பேசறானா?? அவன் வாயையும் சேர்த்து நீ பேசற... எல்லாம் உங்கப்பா கொடுக்கிற செல்லம்... “ என்றார் சிரித்து கொண்டே... பின் தன் மகனை பார்த்து

“சரி டா... கண்ணா.. எப்ப என் மறுமகள காட்டப் போற ?? “என்று மீண்டும் தன் மகனின் கல்யாண பேச்சிற்கு வர

“வாட் மம்மி?? மறுமக?? யூ மீன் அண்ணி?? .” என்று வசு ஏதோ சொல்ல வர

“அம்மா தாயே.. கொஞ்ச நேரம் உன் வாயை மூடு டீ... நீ குறுக்க குறுக்க பேசினா நான் சொல்ல வர்ற பாய்ண்ட் எனக்கே மறந்து போய்டுது.. அவனே இன்னைக்குத் தான் சாவகாசமா நம்ம கூட உட்கார்ந்திருக்கான்...

இப்ப விட்டனா அப்புறம் எப்ப பேச முடியுமோ?? “ என்று தன் மகளின் காதை பிடித்து செல்லமாக திருகினார் மீனாட்சி

“ஓ... உத்தரவு மகாராணி.. இனிமேல் இந்த வசு வாயை திறக்க மாட்டா... டீல்.. “ என்று பணிவாக குனிந்து வாய் பொத்தி நின்றாள்...

அவளின் செய்கையை கண்டு அனைவரும் சிரிக்க, மீனாட்சியின் பார்வை மீண்டும் வசியிடம் வந்து நின்றது....

தன் அன்னையின் பார்வையில் இருந்த ஏக்கத்தை புரிந்து கொண்டவன்

“மா.. சீக்கிரம் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்றேன்.. போதுமா...சரி எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு போக டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்... “ என்று நழுவினான்...

“அதான... எப்படி நழுவி ஓடறான் பார்...

“ஈஸ்வரா... இந்த பையன் நினைக்கிற மாதிரி பொண்ணை சீக்கிரம் அவன் கண்ணுல காட்டிடேன்..நானும் இவன் நல்ல செய்தி சொல்லுவான் னு 4 வருசமா காத்துகிட்டிருக்கேன்... இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க எவ்வளவு கனவு கண்டுகிட்டிருக்கேன்...

ஆனா அந்த கனவு கனவாவே போய்டும் போல இருக்கு... சீக்கிரம் என் கனவை, ஆசையை நிறை வேற்றி வைப்பா... “ என்று மனதுக்குள் தான் வணங்கும் அந்த ஈசனை வேண்டிக் கொண்டார் மீனாட்சி...

அவர் வேண்டுதல் அந்த ஈசனின் காதில் விழுந்ததோ என்னவோ?? அந்த ஈசன் அவர் வேண்டுதலை இன்றே நிறைவேற்ற போகிறான்... ஆனால் அதன் பிறகு அவர்கள் செல்ல மகனின் நிம்மதி நிலைக்குமா?? பொறுத்திருந்து பார்க்கலாம்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!