தவமின்றி கிடைத்த வரமே-31


அத்தியாயம்-31 

சென்னையில் பிரபலமான அந்த பெரிய திருமணம் மண்டபம் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது..

அது பெரிய VIP க்கள் இல்லத்து விழாக்கள் மட்டுமே நடைபெறும் அந்த மண்டபத்தில் முதல் முறையாக மாறி வசி மற்றும் பனிமலரின் வரவேற்பு விழா அங்கு ஏற்பாடாகி இருந்தது...

இந்த மண்டபத்தில்தான் வைக்கவேண்டும் என்று மித்ரா வற்புறுத்தி வசியை சம்மதிக்க வைத்திருந்தாள்..

அதோடு அந்த மண்டபத்தின் செலவையும் அவளே ஏற்று கொண்டாள் தன் நண்பனுக்கு கல்யாண பரிசாக... அதை கண்டு வசி உருகி போனான்...ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அவளின் குள்ளநரித்தனம் பாசத்தால் மூடி இருந்த அவன் கண்களுக்கு தெரியவில்லை...

சென்னையின் ஒரளவுக்கு எல்லா புகழ்பெற்ற மருத்துவமனையும் வசிக்கு பழக்கம் என்பதால் எல்லா மருத்துவமனையின் MD மற்றும் அவனுக்கு தெரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள், வார்ட் பாய்ஸ் என கடை நிலை ஊழியர் வரை அனைவரையுமே தன் திருமண வரவேற்பு விழாவிற்கு அழைத்திருந்தான்.

அதோடு அவன் பள்ளி கல்லூரி தோழர்கள், ஆசிரியர்கள் என்று ஒருவர் விடாமல் ஞாபகம் வைத்து அனைவரையும் நேரிலோ வாட்ஸ்அப்பின் மூலமாக அழைத்திருந்தான்..

மீனாட்சி , சுந்தர் மற்றும் சிவசங்கர் அவர்கள் பணிபுரியும் பள்ளி கல்லூரி ஆசிரியர்களையும் அழைத்திருக்க, கூடவே உறவினர்களும் சேர்ந்து கொள்ள அந்த மண்டபமே பெரிய VIP க்களில் இருந்து நடுத்தர மக்கள் மற்றும் கடை நிலை ஊழியர்கள் என எல்லா வகையான மக்களாலும் நிரம்பி வழிந்தது...

வசி லண்டன் சென்று விட்டதால் அவனின் நண்பர்கள் ஆதி மற்றும் நிகிலன் அந்த விழாவின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். இன்றும் காலையில் முன்னதாகவே வந்து அந்த மண்டபத்தில் ஏற்பாடுகளை மீண்டும் ஒருமுறை பார்வை இட்டு விட்டு தங்கள் குடும்பத்தை அழைத்து வர கிளம்பி சென்றிருந்தனர்...

சிவசங்கர் நண்பர் சோமுவும் அந்த குடும்பத்தில் ஒன்றாகி விட, அவருமே அந்த விழாவை முன்னின்று நடத்தி கொண்டிருந்தார்.. அவருக்குமே மலருக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்ததுக்கு மனம் நிறைந்து இருந்தது...

எல்லாருக்கும் வசதியாக இருக்க விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை மதியம் விழாவை ஏற்பாடு பண்ணியிருந்தனர்.... ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்க, அந்த விழாவின் நாயகன் வசீகரன் தயாராகி மணமகன் அறையில் இருந்து வெளி வந்தான்...

வழக்கமாக அணியும் பிளேசர் இல்லாமல் மெருன் கலர் சேர்வானியில் வந்திருந்தான்... அவனின் ஆறடி உயரத்திற்கு அந்த சேர்வானியும் அவனை இன்னும் கம்பீரமாக தூக்கி காட்டியது.....

வெளியில் வந்தவன் அந்த அரங்கத்தில் முன்னால் பார்த்து தெரிந்தவர்கள் அனைவருக்கும் தன் வசீகர புன்னகையுடன் கை குவித்து வணக்கம் தெரிவித்தான்..

ஆனால் கண்கள் என்னவோ மணமகள் என்று பெயரிட்டிருந்த அறை பக்கமே சென்று வந்தது.... பின்ன இருக்காதா.. இன்றோடு 10 நாட்கள் ஆகி விட்டன அவளை பார்த்து..

அவன் லண்டன் செல்லுமுன் அவளை பார்த்துவிட்டு அதுவும் எதுவும் பேசாமல் வெறும் தலை அசைப்புடன் சென்றது... அதன் பிறகு விமான நிலையத்தில் கலங்கிய கண்களுடன் கண்டது மட்டுமே...

அதன் பின் அவளை நேரில் சென்று சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட, இதோ இப்பொழுது தான் அவளை பார்க்க போகிறான்... அதனாலயே அந்த வாயிலை நோக்கி தவம் இருந்தான்.

அந்த மண்டபத்திற்கு வந்ததில் இருந்தே ஏதாவது சாக்கு சொல்லி அவன் அடிக்கடி அவன் அறையில் இருந்து வெளி வர எப்படியாவது தன்னவளின் தரிசனம் கிடைக்காதா என்று தவம் இருக்க, அவன் கெட்ட நேரம் கதவு இடுக்கின் வழியாக கூட அவளை காண முடியவில்லை....

பனிமலர் வீட்டில் இருந்து நேராக மண்டபத்திற்கு வந்தவள் நேராக மணமகள் அறைக்குள் சென்று விட, அவளை காணும் வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருந்தான்...

நேராக அவள் அறைக்கு சென்று என் பொண்டாட்டியை பார்க்கணும் என்று சொல்லவும் வெட்கமாக இருக்க, அந்த மணமகள் அறையை பார்த்து விட்டு தன் அறைக்கு உள்ளே சென்று விடுவான்..இப்பொழுது உள்ளே செல்லாமல் அங்கயே நின்று கொண்டிருந்தான்.

அவன் அருகில் அவன் உயரத்திற்கு இணையாக மாப்பிள்ளை தோழனாக அவனை போலவே மயில் கழுத்து கலரில் சேர்வானி அணிந்து மழித்து விட்ட மீசையுடன் கொஞ்சம் உடல் தேறியிருக்க சின்ன இளவரசனாக நின்று கொண்டிருந்தான் இனியவன்..

தன் அக்காவின் வரவேற்பு விழாவிற்காக இரண்டு நாள் முன்னதாகவே மும்பையில் இருந்து வந்துவிட்டான்..பெண் வீட்டார் சார்பாக அவனுமே அந்த விழாவின் ஏற்பாட்டை கவனித்து கொண்டான்..

வசியின் அருகில் நின்றிருந்தவன் தன் மாமாவின் கண்கள் அடிக்கடி மணமகள் அறைக்கு சென்று வருவதை கண்ட இனியவன் ,

“மாமா.. நீங்கள் இருங்க..நான் போய் அக்கா ரெடியாகிவிட்டாளா என்று பார்த்து வருகிறேன்.. “ என்று சிரித்தவாறு மணமகள் அறை பக்க சென்றான்... கதவை லேசாக தட்டவும் மெதுவாக கதவு திறக்க, கதவின் பின்னால் நின்றிருந்தவளை கண்டதும் ஷாக் ஆகி மூச்சடைத்தது அவனுக்கு...

பின்னால் நின்றிருந்தவளும் அவன் சேர்வானிக்கு பொருத்தமாக அழகிய மயில் கழுத்து கலர் பாவாடையும் பிங்க் கலர் சோளியும் அதே கலரில் வேலைப்பாடு மிக்க தாவணியும் அணிந்து இடுப்பில் தாவணி நழுவாமல் இருக்க அழகான ஒட்டியாணத்தை கட்டி இருந்டாள்..

நெற்றியில் கற்கள் பதித்த அழகிய சிறிய நெற்றி சுட்டியும் கண்களுக்கு மஸ்கரா போட்டு மை தீட்டி உதட்டுக்கு அழகான ஃப்ளோரசன்ட் பிங்கில் லிப்ஸ்டிக் போட்டு கழுத்தில் அவள் ஆடைக்கு பொருத்தமான நெக்லசும் மற்றும் அவன் அணிவித்திருந்த அந்த டாலர் செயின் முன்னால் தொங்க நின்றிருந்த வசுந்தராவை கண்டதும் ப்ரீஸ் ஆகி நின்றான் இனியவன்..

அப்படியே ஒரு தேவதையே கண் முன்னால் வந்து நின்றதை போல இருந்தது அவனுக்கு..

ஒரு நிமிடம் இமைக்க மறந்து அவளையே கண்களால் பருகி கொண்டிருந்தான்.. அவன் பார்வையை கண்டு கொண்ட வசுந்தாவுக்கோ வெட்கமாக இருந்தது....

கன்னம் சிவக்க மெல்ல தலையை குனிந்து கொண்டாள்.. குனிந்திருந்த அவளின் கண்களுக்கு அவன் அணிந்திருந்த ஆடை தெரிய அவனும் அதே கலரில் அணிந்திருக்க உள்ளுக்குள் துள்ளி குதித்தவள் மெல்ல நிமிர்ந்து அவன் முகம் நோக்க அவன் முழு தோற்றத்தையும் கண்டு சொக்கி போனாள் அந்த இளமங்கை....

ஆனாலும் அதற்குள் சமாளித்து கொண்டவள்

“எப்படி இருக்கீங்க மாமாஆஆஅ..? “ என்றாள் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு...

அதில் தன் நிலைக்கு வந்தவன் வெட்கபட்டு சிரித்தவாறு

“ஐம் பைன்.. கௌவ் ஆர் யூ வசு? “ என்றான் அதே வசீகர புன்னகையுடன்..

“ஹ்ம்ம்ம் நான் நல்லா இருக்கேன்... ஆமா என்ன வேண்டும் ?... இங்க எதுக்கு வந்தீங்க?? “ என்றாள் மிடுக்காக கண்களை உருட்டி...

அதில் இன்னும் கவிழ்ந்தவன் அப்பொழுதுதான் தான் வந்த வேலை நியாபகம் வர,

“வந்து.... மலர்... அக்கா ரெடியாகிட்டாளா?? மாமா ரெடியாகிட்டார்.. சீக்கிரம் வரச் சொல்றார்.. எல்லாரும் வந்துகிட்டிருக்காங்க... “ என்றான் ஒரு வழியாக....

அதற்குள் மலரும் தன் அலங்காரங்கள் முடிந்திருக்க, அவன் அருகில் வந்தவள்

“டேய்.. எரும.. நிஜமாகவே அதுக்குத்தான் வந்தியா?? இல்லை வேற யாரையோ சைட் அடிக்க வந்தியா?? “ என்றாள் மலர் கண் சிமிட்டி ரகசியமாக அவனை பார்த்து குறும்பாக சிரித்தவாறு..

‘ஐயோ..இவ ஒருத்தி.. இவ இருக்கிறது மறந்து போய் தெரியாம நானே வாலண்டியரா வந்து மாட்டிகிட்டனே.. இவளுக்கு மட்டும் நம்ம கதை தெரிஞ்சுது அவ்வளவு தான்.. ஓட்டியே தீர்த்திடுவா.. “ என்று மனதுக்குள் புலம்பியவன்

“ஹீ ஹீ ஹீ.. நான் ஒன்னும் சைட் அடிக்க வரலை. அங்க பாவம் மாமாதான் அவர் பொண்டாட்டியை காணாமல் ஒத்த காலில் நின்று தவம் இருக்கிறார்... சீக்கிரம் வா க்கா..

இல்லைனா மாமா நேரா இங்கயே வந்து உன் மேக்கப் போட்ட வரைக்கும் போதும் னு அப்படியே தூக்கிட்டு போய்டுவார்..“ என்றான் சிரித்தவாறு

அதை கேட்டு கன்னம் சிவந்தாள் பனிமலர்.. ஆனாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டவள் அவனை பார்த்து முறைத்தாள்..அதே நேரம் மீனாட்சியும்

“மலர் ரெடியா?? “ என்றவாறு உள்ளே வந்தார்...

அங்கு வந்திருந்த அழகு நிலைய பெண்களின் கை வண்ணத்தால் அம்மன் சிலையாட்டம் நின்று கொண்டிருந்த தன் மருமகளை கண்டதும் அப்படியே அசந்து நின்றார் மீனாட்சி...

“அப்படியே அந்த சொக்கநாதன் பக்கத்தில இருக்கிற அந்த அழகு மீனாட்சி போலவே இருக்கா என் மருமக.. என் கண்ணே பட்டுடும் .. “என்று நெற்றி முறிக்க அவர் பின்னே நின்று கொண்டிருந்த ஜோதிக்கும் அதே எண்ணம்தான்.

தன் மகளையே ஆசையோடு பார்த்திருக்க, மலரோ

“போங்க அத்தை.. சும்மா கலாய்க்காதிங்க... “ என்று சிணுங்கினாள்..

அதற்குள் மலரின் அருகில் நின்றிருந்த வசுந்தராவை கண்ட ஜோதி,

“அண்ணி... உங்க மருமக மட்டும்தான் ஜொலிக்கிறாளா? என் மருமகளை பாருங்க.. அப்படியே அந்த தேவதையே கால் முளைச்சு இந்த மண்டபத்துக்கு வந்திட்ட மாதிரி இருக்கா.. ராஜாத்தி சூப்பரா இருக்க டீ.. “ என்று வசுந்தராவுக்கு நெற்றி முறிக்க, இப்பொழுது வசுந்தரா வெட்கி சிவந்தாள்..

உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத படபடப்பு.. ஓரக் கண்ணால் இனியவனை பார்க்க, அவனோ தன் அன்னை சொன்னது சரிதான் என தலை அசைத்து மெல்ல புன்னகைத்தான் அவளையே பார்த்தவாறு....

மீனாட்சியும் தன் மகளின் அழகை கண்டு மனம் குளிர்ந்து சிரித்தவாறு

“சரி.. சரி.. இரண்டு பேரும் கலக்கறிங்க... வசு.. அண்ணியை கூட்டிகிட்டு வாடா. எல்லாரும் வந்திட்டாங்க.. பங்சன் ஸ்டார்ட் பண்ணிடலாம்.. “ என்றவாறு வெளியேறினார்..

அதுவரை கலகலப்பாக இருந்த மலர் இப்பொழுது அவன் அருகில் எப்படி நிற்பது என வெட்கம் வர தலையை குனிந்து கொண்டாள்....

“ஆஹா...அக்கா... பங்சனுக்கு நிறைய VIP க்கள் எல்லாம் வந்து இருக்காங்க.. நீ பாட்டுக்கு பட்டிக்காடு மாதிரி இப்படி வெட்கபட்டு தலைய குனிஞ்ச மாதிரி போகாத...

கொஞ்சம் தலை நிமிர்த்தி சிரிச்சுகிட்டே போய் மாமாக்கு இணையா கெத்தா நிக்கணும்.... அப்பதான் அவருக்கு நீ பொருத்தமா இருப்ப... “ என்றான் இனியவன் தன் அக்காவை கலாய்க்க எண்ணி..

ஆனால் அவன் சொன்ன மாமாவுக்கு பொருத்தமா என்ற வார்த்தை மட்டும் அவள் ஆழ் மனதில் பதிந்து கொண்டது..

அவனை செல்லமாக முறைத்தவாறு வசுவின் பின்னால் செல்ல, அவளுக்காகவே தவம் இருந்தவன் அவளை கண்டதும் வசியின் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தன.

மலருமே மெருன் கலர் பட்டுபுடவையை வடக்கத்திய மாடலில் முன்னால் தொங்க விட்டு கட்டி இருக்க, அந்த புடவைக்கு பொருத்தமான சிகை அலங்காரமும் அணிகலன்களும் அணிந்து இருந்தாள்..

கண்களில் தீட்டி இருந்த மையும் ஏற்கனவே எடுப்பாக இருக்கும் அவள் இதழ்களுக்கு இன்னும் சாயம் தீட்டி பெரிதாக எடுத்து காட்ட, அவளையே விழுங்கி விடுவதை போல ரசித்து பார்த்தான் வசீகரன்...

அதற்குள் அவன் அருகில் சென்ற இனியவன்

“மாமா.. இது பப்ளிக்..அதுவும் ஸ்டேஜ்ல வேற நிக்கறீங்க.. எல்லாரும் உங்களையே பார்த்துகிட்டிருக்காங்க.. கொஞ்சம் சைட் அடிக்கறதை அடக்கி வாசிங்க... “ என்று காதில் மெதுவாக கிசுகிசுத்தான் இனியவன...

அதை கேட்டதும் அவசரமாக தன் பார்வையை மாற்றி கொண்டவன் மெல்ல வெட்கபட்டு சிரித்தவாறு மலர் அருகில் சென்றவன் ஆங்கிலேயர் பாணியில் அவள் முன்னே அமர்ந்து கை நீட்ட, அவளும் கன்னம் சிவக்க தன் கைகளை அவனுடன் இணைத்தவாறு இருவரும் அந்த மேடையை நோக்கி நடந்தனர்...

நடுவில் இருந்த மேடையை அடைந்ததும் அங்கு ஏற்கனவே இரண்டு மாலைகள் தயாராக இருக்க, அந்த போட்டோ க்ராபர் இருவரையும் அந்த மாலையை எடுத்து மாற்றி கொள்ள சொல்ல, இருவரும் மாலையை கையில் எடுத்தனர்...

அவர்கள் திருமணத்தின் பொழுது இருவருமே வெவ்வேறு மனநிலையில் இருந்ததால் அன்றைய சடங்குகளை முழுமையாக இருவராலும் அனுபவிக்க முடியவில்லை..

ஆனால் இப்பொழுது ஓரளவுக்கு இருவர் மனதிலும் மற்றவர் மேல் விருப்பம் இருக்க, இப்பொழுது மாலையை எடுத்தவர்கள் உள்ளே ஏதோ ஒரு இனம் புரியாத பரவசம் பரவியது..

வசி அவளை பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு அந்த மாலையை அவளுக்கு அணிவிக்க, மலரும் வெட்கபட்டு மெல்ல எக்கி தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் அணிவித்தாள்....

அதையே ஒரு ஐந்து நிமிடம் விதவிதமான போஸ்களில் நிற்க சொல்லி போட்டோ எடுத்து தள்ளினர்.... பின் இருவரும் பார்வையாளர்களை பார்த்து கை குவித்து வணக்கம் சொல்ல, வசி அருகில் இருந்த மைக் ஐ கையில் எடுத்து

தங்கள் திருமணம் அவசரமாக நடந்ததால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றும் இந்த விழாவிற்கு வருகை தந்து தங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி சொல்லி வைக்க அடுத்து ஒவ்வொருவரும் மேடை ஏறி அவர்களை வாழ்த்தி பரிசு பொருட்களை கொடுத்தனர்..

இருவரின் ஜோடி பொருத்தமும் இருவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் கண்டு மனம் நெகிழ்ந்து போனார் சிவசங்கர்..

அதிகம் அலைய வேண்டாம் என்று அவரை வற்புறுத்தி முதல் வரிசையில் அமர்த்தி வைத்தான் இனியவன்.. அவருக்கு துணையாக அந்த ஹிட்லர் பாட்டியும் முதல் வரிசையில் அமர்ந்து தன் பேத்தியையும் பேத்திக்கு அவள் தவம் இன்றி கிடைத்த வரமான அந்த ராஜ குமாரனையும் கண் குளிர கண்டு ரசித்தார்..

வசியும் மேடைக்கு வந்த ஒவ்வொருவரையும் மலருக்கு அறிமுக படுத்தி வைத்தான்.. எல்லாருமே பெரிய மனிதர்கள்.. அவர்கள் அருகில் சென்று பார்க்க முடியாத சில முக்கியமானவர்கள் வந்திருக்க அவர்களை எல்லாம் நேரில் காண அதுவும் தன் திருமணத்திற்கு வந்து அவர்கள் வாழ்த்த மலருக்கோ எங்கயோ போனதை போல இருந்தது..

அப்பொழுது தான் தன் கணவனின் பெருமையும் அவன் எவ்வளவு செல்வாக்கானவன் என்றும் புரிந்தது....

“எங்கயோ இருந்த என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துவிட்டானே.. உண்மையிலயே இதுக்கெல்லாம் நான் தகுதியானவள் தானா? “ என்று உள்ளுக்குள் குழம்பி கொண்டிருந்தாள்..

ஆனாலும் தன் குழப்பத்தை பின்னுக்கு தள்ளி மேடை ஏறி வருபவர்களின் வாழ்த்தை ஏற்று அவர்களிடம் புன்னகைத்து ஒரு சில வார்த்தைகள் பேசி என அதில் மூழ்கி போனாள் பனிமலர்...

இதுவரை எல்லாருமே வசிக்கு தெரிந்தவர்கள் என அவன் பக்கம் இருந்தே வந்திருக்க மலருக்கு அடுத்த ஈகோ தலை தூக்கியது.. தன் பக்கம் இருந்து யாருமே வரவில்லையே இதுவரை என்று

அதே நேரம் மலரின் தோழி கயல் மேடை ஏறி வர, அவளை பார்த்ததும் மலரின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது...

இதுவரை ஏதோ கடமைக்காக சிரித்தவள் இப்பொழு மனம் விட்டு புன்னகைக்க, அவளையே மீண்டும் கண்களால் விழுங்கி கொண்டான் வசி..

அவர்கள் அருகில் வந்த கயல்

“வாழ்த்துக்கள் டீ..” என்று மலரை கட்டி கொண்டவள் பின் வசியிடம் திரும்பி ”ரொம்ப சந்தோஷம் அண்ணா நீங்களே மலருக்கு ஹஸ்பன்ட் ஆ வந்ததுக்கு. ஐம் சோ ஹேப்பி. விஸ் யூ போத் ஹேவ் அ ஹேப்பி மேரிட் லைப்.. “ என்று வசிக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தாள் கயல்...

அதை கேட்ட வசியும்

“ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.. “ என்று அழகாக புன்னகைத்தான்...

“அப்புறம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா.....இப்படி இவளை பற்றி தெரிந்தே இவ கிட்ட வந்து வாலண்டியரா மாட்டிகிட்டீங்களே... இனி காலம் முழுவதும் இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.. எப்படியோ நான் தப்பிச்சேன்...

இவ தொல்லை இனி எனக்கு இல்லை... ஆல் தி பெஸ்ட் அண்ணா...

“பார்த்து டீ.. என் அண்ணனை கண் கலங்காம பார்த்துக்கோ....” என்று சிரிக்க மலரோ செல்லமாக முறைத்தவாறு கயலின் கையை பிடித்து நறுக்கென்று கிள்ளினாள்...

அதில் ஆ வென்று சத்தம் வராமல் அலறியவள்

“அண்ணா.. நல்லா பார்த்துக்கங்க..இப்பவே எப்படி கிள்ளறானு..இது வெறும் சேம்பிள்தான்... அதனால இவ கிட்ட கிள்ளு வாங்க உங்க உடம்பை இப்பவே தயார் பண்ணி வச்சுக்கங்க... “ என்று கண் சிமிட்டி சிரித்தவள் மலர் அடுத்து அடிக்க வருமுன்னே சிரித்து கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டாள்...

வசியும் சிரித்து கொண்டே

“வெரி நைஸ் கேர்ள்...” என்றான் மலரை பார்த்து புன்னகைத்தவாறு..

கயலின் குட்டி கலாட்டாவில் அதுவரை இருந்த இறுக்கம் குறைய அவள் உள்ளேயும் மெல்லிய இனிமை பரவியது மலருக்கு...

மீண்டும் அந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள, ஏனோ இப்பொழுது அவன் அருகில் நிற்பது அவளுக்கு சுகமாக, பெருமையாக இருந்தது.. அவன் அருகில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள்..

இதுவரை விலகி இருந்தவள் நெருங்கி வரவும் வசிக்குமே உற்சாகமாக இருந்தது... அதே மகிழ்ச்சியுடன் வந்தவர்களிடம் இருவரும் ஆசி பெற்று கொண்டிருக்க, அடுத்து மலரின் அலுவலக கேங் மேடை ஏறியது..

அவளுடைய மேனேஜர் பாஸ்கர் மற்றும் அவள் டீம் ல் இருப்பவர்கள் அனைவருமே வந்திருந்தனர்..பாஸ்கர் மணமக்கள் இருவரையும் வாழ்த்தி பெரிய கிப்ட் ஐ கொடுக்க, வசி புன்னகையுடன் ஏற்று கொண்டான்..

பின் அனைவரும் நின்று புகைப்படம் எடுத்து கொள்ள, அவள் டீம் ல் இருந்த பெண்கள் மலரின் அருகில் வந்து

“ஹே மலர்.. உன் ஹஸ்பன்ட் செமயா இருக்கார் டீ.. அதுவும் அவர் சிரிப்பு இருக்கே சான்சே இல்லை.. அவர் பெரிய பேமஸ் கார்டியாலஜிஸ்ட் ஆம்.. விக்கி இப்பதான் சொன்னான்.. நீ ரொம்ப லக்கி டீ. இப்படி ஒரு ஹஸ்பன்ட் கிடைக்க..” என்று சிலாகித்து பேச, மலருக்கோ ரொம்பவும் பெருமையாக இருந்தது..

அவள் அருகில் வந்த விக்கி

“ஹாய் ஸ்நோ.. பார்த்தியா நம்ம தல சொன்ன மாதிரியே பெரிய கிப்ட் ஆ வாங்கிட்டார்.. ஆனா என்னாலதான் நான் சொன்ன காஷ்மீர் ஐ உனக்கு வாங்கி கொடுக்க முடியலை..

பட் என்னால முடிஞ்ச காஷ்மீர் ஆப்பிளும், காஷ்மீர் குங்குமப்பூவும் வாங்கி வந்திருக்கேன் உனக்கு மேரேஜ் கிப்ட் ஆ..

இதை தினமும் பால் ல போட்டு குடி.. அப்பதான் என் மருமகன் என்னை மாதிரி சிவப்பா பொறப்பான்.. “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அதை கண்டு மலர் அவனை பார்த்து முறைத்து சிரித்தாள்..

ஆனாலும் அடிக்குரலில் அவன் மட்டும் கேட்குமாறு

“டேய் பக்கி.. இந்த ஸ்டேஜ் ல நிக்கறதால என்னால் உன்னை அடிக்க முடியாதுனு ஓவரா கலாய்க்காத.. ஸ்டேஜ் னு கூட பார்க்க மாட்டேன்.. வந்ததுக்கு ஒலுங்கா நல்லா சாப்டிட்டு உன் ஆளை சைட் அடிச்சுகிட்டே ஓடிப்போய்டு. என்னை கடுப்பேத்தாத. “ என்று காதை கடித்தாள் வெளியில் சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ டன் ஸ்நோ.. நோ டென்ஷன்.. பி கூல்.. இன்னைக்கு ஒரு நாளாவது மாம்ஸ் கூட சிரிச்சுகிட்டே இரு.. உன் சுயரூபத்தை இன்னைக்கே அவர்கிட்ட காமிச்சிடாத. “ என்று அவனும் ரகசியம் பேசியவன் பின் வசியிடம் திரும்பி

“மாம்ஸ்... கல்யாணம் ஆகிடுச்சுனு எங்க ஸ்நோ வை உங்க வீட்லயே அடைச்சு வச்சிராதிங்க.. பாவம் நாங்க.. இவளை நம்பி இவ்வளவு பெரிய டீம் இருக்கோம்.. யாருக்கும் எதுவும் தெரியலைனா இவளை நம்பிதான் இருக்கோம்... “ என்று அவளை புகழ்ந்து பேச , வசியும் சிரித்து கொண்டே

“கண்டிப்பா மச்சான்.. என்னாலயும் இவளை வீட்ல வச்சு சமாளிக்க முடியாது.. கண்டிப்பா உங்களை எல்லாம் பார்க்க வருவா.. நான் கேரண்டி.. “ என்றான் சிரித்தவாறு..

“வாவ்.. சூப்பர் மாம்ஸ்..ஆனாலும் இப்படி ஒரு ரவுடியை இல்ல இல்ல தேவதையை கட்டி கிட்ட உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடணும்.. “ என்று நக்கலாக சிரிக்க, மலர் மீண்டும் விக்கியை முறைக்க ,

“ஓகே மாம்ஸ்.. உங்க பொண்டாட்டி காலி அவதாரம் எடுக்க ஆரம்பிச்சுட்டா.. பாவம் இன்னும் நிறைய பேர் பின்னாடி வெயிட்டிங்.. இவ காலி அவதாரத்தை பார்த்து பாதியில் ஓடிட போறாங்க..

நாங்க அப்ப உத்தரவு வாங்கிக்கறோம்.. விஷ் யூ ஹேவ் அ ஹேப்பி மேரிட் லைப்.. “ என மீண்டும் கை குலுக்கி விடை பெற, பின் ஒவ்வொருவரும் வசிக்கும் மலருக்கும் கை குலுக்கி வாழ்த்து சொல்லி விடை பெற்றனர்..

அவர்கள் இறங்கி சென்ற பின்னரும் இன்னும் அந்த இடமே கலகலப்பாக இருப்பதை போல இருந்தது இருவருக்கும்..மலருக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது..

வசி அவள் நண்பர்களிடம் உரிமையாக பேசியதும் அவர்களுக்கு இணையாக இவனும் வாய் அடித்ததையும் கண்டு மனம் நிறைந்து இருந்தது.. ஆனால் அவள் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் சில நொடிகள்தான் என்று அறியவில்லை.

அவள் மகிழ்ச்சியை கெடுக்க என்றே மேடை ஏறினாள் அடுத்து வந்தவள்...

அவள் அவர்கள் அருகில் வந்ததும்

“ஹேப்பி மேரீட் லைப் டா.. “ என்று வசிக்கு மட்டும் மனம் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் வாழ்த்தி கை குலுக்கியவள் மலரிடம் திரும்பி “ஹேப்பி மேரீட் லைப் மலர்..” என்றவாறு மலரின் அருகில் சென்றாள் மித்ரா...

அவள் பின்னே வந்த அவளின் தந்தையும் மனம் நிறைந்து மணமக்களை வாழ்த்தி வசியின் கழுத்தில் ஒரு தங்க சங்கிலியை அணிவித்தார்....

அதை கண்டு மலரோ வாய் பிளந்து நின்றாள்...

வசி அவர் காலில் விழ, மலரும் உடனே அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவரும் அவர்களை மனம் நிறைந்து வாழ்த்தினார்..கூடவே தன் மகளுக்கு இப்படி ஒரு நல்லது பண்ணி பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் கண்ணில் தெரிந்தது..

அதை கண்டு கொண்ட வசிக்கும் வருத்தமாக இருந்தது.. சீக்கிரம் மிதுவுக்கும் ஒரு நல்ல வழி கிடைக்கணும் என்று மனதுக்குள் எண்ணி கொண்டான்..

பின் வசி அவர்களிடம் நன்றி சொல்லி பேசி கொண்டிருக்க, மலர் அருகில் வந்த மித்ரா

“என்ன மலர்.. பார்த்தியா எத்தனை VIP க்கள் வந்திருக்காங்க னு .. எல்லாம் வசிக்காக.. நீ இவங்களை எல்லாம் தூரத்துல இருந்து கூட பார்த்திருக்க முடியாது.. இல்லை இந்த மாதிரி ஒரு மண்டபத்தை தான் உன்னால் பரத்திருக்க முடியுமா?? நீ கொடுத்து வச்சவ...

ஆனால் பாவம் வசிதான் கொடுத்து வைக்காம போய்ட்டான்.. எவ்வளவு பெரிய இடத்துக்கு மாப்பிள்ளையாக வேண்டியவன் அவன் ஒரு நொடி யோசிக்காமல் எடுத்த அவசர முடிவால் இப்படி நடுத்தர குடும்பத்தில போய் மாப்பிள்ளை யா மாட்டிகிட்டான்..

அதனால அவனுக்கு எவ்வளவு பெரிய லாஸ் தெரியுமா??

எங்கப்பா இரண்டு மருத்துவமனையும் அவன் பெயரில் எழுதி வைப்பதாக இருந்தார்... சொந்தமாக ஒரு மருத்துவமனை கட்டுவது அவனுடைய கனவு.. ஆனால் இப்பொழுது அவன் வாங்கும் சம்பளத்தில் ஒரு க்ளினிக் கூட கட்ட முடியாது..

எங்கப்பா என்று இல்லை. இங்க வந்திருக்கிற பாதி ஹாஸ்பிட்டல் ஓனர்ஸ் வசியை மாப்பிள்ளையாக்கி கொள்ள தவம் இருக்க, போயும் போயும் இப்படி பட்ட இடத்தில் விழுந்திட்டானே...

ஹ்ம்ம்ம் அவன் தலை எழுத்து இப்படி இருக்கு.. அதை மாற்றவா முடியும்?? “ என்று பெருமூச்சு விட்டாள்...

அவள் சொல்வதை எல்லாம் கவனமாக கேட்டு கொண்டிருந்த மலருக்கோ அதிர்ச்சியாக இருந்தது..

“உண்மையிலயே அப்படித்தானோ? .. அவளுக்கே தெரியும் பல மருத்துவமனை உரிமையாளர்கள் வசியின் மீது கண் வைத்து இருந்தது. ஒரு வேளை இவள் சொல்வதை போல அவர்களில் ஒருவருக்கு மருமகனாக ஆகி இருந்தால் ஒரு மருத்துவமனைக்கு நேரடியாக எம்.டி ஆகி இருப்பான்..

என்னால் எல்லாம் கெட்டு விட்டதா? “ என்று மீண்டும் குழம்ப ஆரம்பித்தாள் பனிமலர்.

அதோடு நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தாள் மித்ரா..

“நாங்கள் இருவருமே காலேஜ் ல் இருந்து ஒன்றாக சுற்றியவர்கள். வசிக்கு நான் என்றால் கொள்ளை பிரியம்.. எனக்கும் அப்படித்தான்.. அவனுக்காகத்தான் நான் இதுவரை காத்திருக்கிறேன்..

அவன் தன் துறையில் பெரிதாக சாதிக்கும் வரை திருமணத்தை தள்ளி வைக்க எண்ணியதால் தான் எங்கள் திருமணம் தள்ளி போயிற்று...

ஆனால் உன் அப்பா உயிரை காப்பாற்ற எண்ணி அவன் ஆசை, கனவு எல்லாம் மறந்து திடீர்னு இப்படி உன்னை கல்யாணம் பண்ணி கொள்வான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை..

அவனுக்கு தன் சுகம், மகிழ்ச்சியை விட, தன் பேசன்ட் ன் நலம்தான் முக்கியம்.. அப்படிபட்ட அவன் பேசன்ட் ஆன உன் அப்பாவை காப்பாற்றத்தான் அப்படி ஒரு முடிவு எடுத்து விட்டான்.

எப்படியோ நடந்தது நடந்து விட்டது. உங்கள் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலாவது ஏதோ அவசரத்தில் எடுத்த முடிவு, ட்ராமா கல்யாணம் என்று பிரிந்திருக்கலாம்..

ஆனால் இந்த திருமணத்தை பதிவு வேறு செய்திருக்கிறது.. இனிமேல் அவனால் இதிலிருந்து விடுபட முடியாது.. அவன் மேலயும் முன்னேறி வர முடியாது...

நானும் அவனை நினைத்து கொண்டே காலத்தை கழிக்க வேண்டியதுதான்... “ என்று இன்னும் கொஞ்சம் மலரிடம் புலம்பி அவள் மனதில் இன்னும் கொஞ்சம் நஞ்சை ஏற்றினாள் மித்ரா... பின் இறுதியாக

“மலர்.. நீ படித்தவள்.. யாருக்கு எது நல்லது கெட்டதுனு யோசிக்க தெரிந்தவள்.. அதனால் இந்த திருமணம் சரிதானா?? நீ வசிக்கு பொருத்தமானவள் தான? இதனால் அவன் எதிர்காலம் எப்படி பாதிக்க படும்? என்று நன்றாக யோசித்து பார்.. உனக்கே அதுக்கான விடை கிடைக்கும்... “ என்று முடித்தாள்..

அதற்குள் அவள் தந்தை வசியுடன் உரையாடல் முடித்திருக்க, புகைப்படம் எடுக்க நிற்க சொன்னார் புகைப்படக்காரர்... உடனே மித்ரா வசியின் அருகில் சென்று ஒட்டி நின்று கொண்டாள்..

மலர் ஒரு புறம் நிற்க, மறுபுறம் நின்றவள் வசியின் கைகளை உரிமையுடன் பற்றி கொண்டு அவனை உரசியபடி நிற்க, அவள் அருகில் அவள் தந்தை நின்றிருந்தார்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!