காதோடுதான் நான் பாடுவேன்-30



அத்தியாயம்-30 

டுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தாள் மது... சென்ற வாரம் அந்த இல்லத்திற்கு சென்று வந்ததில் இருந்தே அவள் மிகவும் மகிழ்ச்சியாக வளைய வருகிறாள்..



மாலை தன் வகுப்பில் இருந்து திரும்பி வந்ததும் தன் மாமியார் இடம் கதை அடிப்பவள் தன் பெற்றோரிடமும் பேசிவிட்டு, மறக்காமல் ரமணிக்கும் போன் பண்ணி அவரிடம் தன் அன்றைய கதையை சொல்லுவாள்..



ரமணிக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...தன்னை அவரின் மகள் என்று கூறியவள் வாய் வார்த்தையோடு நிக்காமல் அதையே நிரூபிக்க தினமும் தன்னை அழைத்து பேசும் மதுவை நினைத்து பெருமையாக இருந்தது..அவரும் அவளுடன் சிரித்து பேச ஆரம்பித்திருந்தார்....



சிவகாமிக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது....

“எப்படியோ தன் மருமகள் இந்த அழுமூஞ்சி ரமணியையே மாற்றி சிரிக்க வைத்துவிட்டாளே.. “ என்று... அவளிடமும் அதை சொல்லி பாராட்டினார்...



மதுவும் புன்னகைத்து

“அத்தை... நீங்க என்னை பாராட்டறதுக்கு பதிலா எனக்கு ஒரு சின்ன உதவி செய்யுங்களேன்... “என்று பொடி வைத்தாள் தன் மாமியார்க்கு....

“என்ன உதவி அது இது னு.. என்ன வேணும்னு தயங்காம கேள் மருமகளே.. “ என்று சிரித்தார் சிவகாமி...



“அத்தை.. வந்து... இந்த வாரமும் அந்த இல்லத்திற்கு போகணும் போல இருக்கு.... நான் கூட்டிப்போக சொன்னா திட்டுவார்... நீங்க உங்க பையன் கிட்ட சொல்லி கூட்டிட்டு போக சொல்லுங்களேன்... “ என்றாள் தயங்கியவாறு..



“ஆஹா... இது சின்ன உதவி இல்ல மருமகளே... பெரிய்யயயய உதவியாக்கும்...

அந்த வானத்தை கூட வில்லா வளைச்சிடலம்... உன் புருசன ஒரு விசயத்துக்கு ஒத்துக்க வைக்கிறதுக்கு.... “ என்று சலித்துக் கொண்டவர் மது அவரை பாவமாக பார்க்க



“சரி.. விடு... முயற்சி செய்து பார்க்கலாம்... “என்று தன் மருமகளை சமாதானபடுத்தினார்...



அதன்படி நேற்று காலையில் நிகிலன் காலை உணவை உண்டு கொண்டிருக்க, மது கண்ணால் தன் மாமியார்க்கு ஜாடை காட்ட, சிவகாமியும் அதை புரிந்து கொண்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தார்...



அவர் அந்த இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிக்கு முன்னே மதுவை பார்த்து முறைத்தவன்

“மா.. அவள் படிக்கறது நிறைய இருக்கும்... வாரா வாரம் ஊர் சுற்ற வேண்டாம் னு சொல்லுங்க....” என்று மறுத்துவிட்டான்...



“இல்ல.. நான் திரும்பி வந்து எல்லாம் படிச்சுக்குவேன் அத்தை... நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான்...நானும் பாரதியும் சேர்ந்து சில நிகிழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கொம்..



அதனால் நாளைக்கு மட்டும் அவரை கூட்டிகிட்டு போக சொல்லுங்களேன்.. ப்ளீஸ் அத்தை... “ என கெஞ்ச, சிவகாமியும் தன் மகனை பாவமாக பார்த்தார்....



அதை கண்டவன்

“ஹ்ம்ம்ம் இரண்டு பேரும் சொல்லி வச்சு ஏதோ ட்ராமா பண்ற மாதிரி இருக்கு... மா... நீ அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கற.. இது எங்க போய் முடியும் னு தெரியல... “ என்று தன் அன்னையை முறைத்தான் நிகிலன்...



அவரும் ஏதேதோ சொல்லி அவனை சம்மதிக்க வைத்தார்...அவன் கடைசியாக ஒத்து கொண்டதும் “யெஸ்..” என்று குதித்து தன் மாமியாரை கட்டி கொண்டாள் மது தன்னையும் மறந்து...



அதை கண்டு நிகிலன் அவளை பார்த்து முறைக்க, அப்பொழுதுதான் அவன் அங்கு இருப்பது நினைவு வர, கன்னம் சிவக்க, தன் உதட்டை கடித்து கொண்டு சமையல் அறைக்குள் ஓடிவிட்டாள்...



அவனும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே தன் உணவை முடித்து கிளம்பி சென்றான்...



மறுநாள் காலையில் எழுந்ததும் பரபரப்பாக கிளம்பி சிவகாமியையும் கிளம்ப வைத்தாள் மது ..



அகிலா தானும் வருவதாக அடம்பிடிக்க, நிகிலன் அவள் படி க்கவேண்டும் என்று முறைத்து அவளை நிறுத்தி விட்டான்..



தன் மாமியார் உடன் கிளம்பி நின்றவள் நிகிலன் காரை ஓட்ட பின் இருக்கையில் அமர்ந்து தன் மாமியாரிடம் கதை அடித்து கொண்டு வந்தாள் மது....



வாய் என்னவோ அவரிடம் பேசினாலும் கண்கள் என்னவோ தன் கணவனையே சுத்தி வந்தன..



சிவகாமியும் அதை கண்டு கொண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் .



கார் அந்த இல்லத்தை அடைய காரை நிறுத்தி இறங்கினான் நிகிலன் ...



அதே நேரம் ஆதியின் காரும் வந்து நிக்க அதிலிருந்து பாரதி, ஜானகி, சுசிலா இறங்க, அந்த குட்டி காரத்தியாயினியும் குதித்து இறங்கினாள்...



தன் பாட்டியின் கையை பிடித்து கொண்டு நின்றவள் பக்கத்தில் நிகிலன் இறங்கியதை கண்டதும் அவரின் கையை விட்டுவிட்டு வேக நடையுடன் ஓடி வந்தாள் நிகிலனை நோக்கி..



நிகிலனும் அவளை கண்டு வேகமாக முன்னே வந்து அந்த குட்டியை தூக்கி தலைக்கு மேல் சுற்றி அதன் பட்டு கன்னத்தில் அழகாக முத்தமிட்டான்...



அதில் அந்த குட்டி தேவதையும் கிலுக்கி சிரிக்க, அதை கண்டு அழகாக புன்னகைத்தான் அந்த விருமாண்டி..



மதுவோ அவன் அந்த குழந்தையை கொஞ்சும் அழகையே ரசித்த படி ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தாள்..



அதை கண்ட சிவகாமிக்கும் கஷ்டமாக இருந்தது..

“சீக்கரம் என் மகனுக்கும் இதே மாதிரி அவன் குழந்தையை கொஞ்சும் பாக்கியத்தை கொடேன்...” என்று அந்த வேலனை வேண்டிக் கொண்டார்..



இரு குடும்பமும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியோடு நலம் விசாரித்து கொண்டனர்...

வெளியில் கார் வந்து நிக்கவும் ரமணியும் உள்ளே இருந்து வெளியில் வந்தார்....

மது அவரை கண்டதும் ஓடிச் சென்று கட்டிக் கொள்ள, ரமணியும் அவளை வாஞ்சையுடன் தடவி நலம் விசாரித்தார்...

பின் சிரித்துக் கொண்டே ஆதியின் கார் அருகில் வந்தார்.. அவருக்கு ஜானகி, மற்றும் ஆதியும் பாரதியும் முன்பே பழக்கம் என்பதால் அவர்களை வரவேற்று நலம் விசாரித்தார்...

சுசிலா அந்த அளவுக்கு இந்த இல்லத்திற்கு வந்ததில்லை.. எப்பொழுதும் வேலை இருப்பதாக சொல்லி அந்த RJS மருத்துவமனையே கதியாக கிடக்க, பாரதிதான் இன்று அவரை வற்புறுத்தி அழைத்து வந்தாள்... அவருக்கும் ரிலாக்சாக இருக்கும் என்று...

பாரதியின் மிரட்டலை சமாளிக்க முடியாமல் சுசிலாவும் சிரித்துக் கொண்டே கிளம்பி வந்திருந்தார்...

மது, சென்ற வாரம் சொன்ன அந்த இல்லத்து முதியோர்களை அழைத்துச் சென்று தங்களுடன் வைத்து கொள்ளும் ஐடியாவை நிகிலன் ஆதியிடமும் வசியிடமும் சொல்ல அவர்களும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்கள்...

வசி அடுத்த வாரம் வந்து அழைத்து செல்வதாக கூறியிருந்தான்..

பின் பாரதியும் மதுவும் இணைந்து இன்று சில நிகழ்ச்சிகளை அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்காக இன்று ஏற்பாடு செய்திருந்தனர்..அதற்காகத்தான் இரண்டு குடும்பமும் வந்திருந்தனர்..

சற்று நேரம் அந்த குட்டி இளவரசியை கொஞ்சிய நிகிலன் பின் வேலை இருப்பதாகவும் மாலை வருவதாக கூறி கிளம்பி சென்றான்..

ஆதியும் தன் மகளிடம் கொஞ்சிவிட்டு கிளம்பிச் செல்ல, பாரதி ஏக்கமாக பார்த்தாள் அவனை....

ஆதியும் இப்பொழுதெல்லாம் வேலை அதிகமாக இருப்பதால் எப்பொழுதும் பிசியாக இருக்க வேண்டிய சூழ்நிலை.. அதனால் அவன் மனைவி மகளுடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியவில்லை....

அதனால் தான் பாரதி இன்று முழுவதும் தங்களுடன் அவன் இருக்கவேண்டும் என்று கன்டிசன் போட்டு அவனை அழைத்து வந்தாள்..

ஆனால் வரும் வழியிலயே அவன் அலுவலகத்தில் முக்கியமாக வேலை இருப்பதாக அழைப்பு வந்து விட, அவனுக்கும் இன்று அவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போயிற்று...

அதை காரிலயே பாரதியிடம் சொல்லியிருந்தான் தான்.. ஆனாலும் அவன் விட்டு செல்வதை கண்டு ஏக்கமாக பார்த்தாள் பாரதி....

அவள் கண்ணில் தெரிந்த ஏக்கத்தை கண்டுக் கொண்டவன், அவள் அருகில் வந்து

“ஹே... ரதி டார்லிங்.. என்ன இது?? இப்ப எதுக்கு இப்படி பீல் பண்ற?? முக்கியான வேலையால தான் போக வேண்டியிருக்கு டா... சீக்கிரம் வந்திடறேன்.. ஈவ்னிங் லயிருந்து உன் கூடயும் நம்ம பிரின்ஸஸ் கூடவும் தான் இருக்கப் போறேன்... இப்ப கொஞ்சம் சிரியேன்... “ என்றான் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும்...

அதை கேட்டு முறைக்க முயன்றவள் பின் அது முடியாமல் போக அழகாக புன்னகைத்தாள்...

அவளின் புன்னகையை கண்டவன்

“இது .. இது.. இதுதான் என் ரதி டார்லிங்.... இப்படி சிரிச்சுகிட்டு இருந்தால் தான் கொஞ்சமாவது பார்க்கிற மாதிரி இருக்கிற கருவாச்சி...” என்று கண்சிமிட்ட முன்பு வராத அவள் கோபம் இப்பொழுது பற்றிக் கொண்டு வந்தது பாரதிக்கு...

அவனை பார்த்து காரமாக முறைக்க,

“ஆஹா... சும்மா இருந்தவளை நானே சீண்டி விட்டுட்டனே... போச்சுடா... இன்னைக்கு நைட் ம் இவ காலை பிடிக்கணும் போல...” என்று தன்னையே நொந்து கொண்டவன் அனைவரிடமும் விடை பெற்று சென்றான்....

பாரதியும் இன்னும் முறைத்தவாறே அவனுக்கு கை அசைத்து வழி அனுப்பினாள்...

பின் சிவகாமியிடமும் மதுவிடமும் வந்தவள் அவர்கள் நலம் விசாரிக்க,

“என்ன மருமகளே?? இப்பதான் நாங்க எல்லாம் உன் கண்ணுல தெரிஞ்சமோ?? இவ்வளவு நேரம் கண்டுக்கவே இல்லை.. “ என்றார் சிவகாமி சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ.... எல்லாம் தெரிஞ்சது மாமியாரே...என்ன பண்றது??... காலுல வெந்நிய கொட்டிகிட்டு இல்ல ஓடறார் உங்க பையன்... அதான் அவரை அனுப்பி வச்சுட்டு மாமியாரை சாவகாசமா கவனிக்கலாம் னு வந்தேன்...

நீங்க எப்படியும் இங்கதான் இருக்க போறீங்க.. மெதுவா கவனிச்சுக்கலாம்னுதான் மாமியாரே... அதுக்குள்ள கோவிச்சுக்காதிங்க... “ என்று சிரித்தாள் பாரதி....

“அதான.. உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?? அததுக்கு பதில் ரெடியா வச்சிருப்பியே.. “என்றவாறு அவள் காதை பிடித்துச் செல்லமாக திருகியவர்

“சரி.. வாங்க.. எல்லாம் உள்ள போகலாம்... “என்று உள்ளே செல்ல, மற்றவர்களும் சிரித்துகொண்டே உள்ளே நடந்தனர்...

பெரியவர்கள் முன்னே நடக்க, கடைசியாக பாரதியும் மதுவும் சென்றனர்...

தனக்கு முன்னால் நடந்த மதுவின் ஜடையை பிடித்து இழுத்து அவளை நிறுத்திய பாரதி

“என்ன மதுகுட்டி... கண்டுக்கவே மாட்டேங்கிற?? அப்புறம் என்ன சொல்றார் போலிஸ்கார மாம்ஸ்.?? “ என்றாள் ஆராயும் பார்வையுடன்...

“ஆமா.. என்னத்த சொல்றான் அந்த விருமாண்டி..பொண்டாட்டிகிட்டே பேசவே கூலி கேட்பான் போல.. பாதி நாள் ஆளையே பார்க்க முடியறதில்லை...” என்று உள்ளுக்குள் புலம்பியவள் வெளியில் எதுவும் சொல்லாமல் அசடு வழிய அதிலயே புரிந்து கொண்டாள் பாரதி...

“என்ன மதுகுட்டி?? இன்னுமா உன் புருசனை வழிக்குக் கொண்டு வரலை?? “ என்றாள் ரகசியமாக

“வழிக்கு கொண்டு வருவதா?? அப்படீனா?? “ என்றாள் மது புரியாதவாறு..

“ஹ்ம்ம் ஓ.. இன்னும் நீ வளரவே இல்லையா?? போடா மதுகுட்டி உலகமே தெரியாம இருக்க...

புருசனை எப்படி வழிக்குக் கொண்டு வர்றது னு எத்தன சினிமா படத்துல காட்டியிருக்காங்க.. அதுல ஏதாவது ஒரு டிப்ஸ் ஐ யூஸ் பண்ண வேண்டியதுதான?? “ என்றாள் கண் சிமிட்டி

“ஆங்,… இப்படியெல்லாம் கூட படத்துல இருக்கா?? “என்றாள் ஆச்சர்யமாக..

“சுத்தம்... நீ பழைய தமிழ் படம் எல்லாம் பார்த்ததில்லை?? முந்தானை முடிச்சு படம் பார்த்தியா?? அதுல ஊர்வசி தன் புருசனை வழிக்கு கொண்டு வர என்னெல்லாம் செய்வாங்க..

அதே மாதிரி இது நம்ம ஆளு படத்துல ஷோபனா என்னெல்லாம் ட்ரை பண்ணுவாங்க.. இது மாதிரி இன்னும் நிறைய படம் இருக்கு.... அதுல எதாவது ஒன்ன பாலோ பண்ணு...

அப்பதான் இந்த கஞ்சி போட்ட போலிஸ்காரர வழிக்கு கொண்டு வர முடியும்.. சீக்கிரம் நீயும் ஒரு குட்டிய பெத்துக்க... அப்பதான் அவரும் நேரத்தோட வீட்டுக்கு ஓடி வருவார்...“ என்று கண் சிமிட்டினாள் பாரதி..

அதை கேட்டு மது கன்னம் சிவந்தாள்...

தன் கணவன் சாயலில் ஒரு குழந்தையை அவன் தூக்கி கொஞ்சுவதை போல கற்பனை பண்ணியவள் மீண்டும் சிவக்க

“பாருடா.. வெக்கத்தை... “என்று மீண்டும் பாரதி மதுவை ஓட்டினாள்...

“சீ... போ பாரதி.. நீ பேட் கேர்ள்.. தப்பு தப்பா சொல்லி கொடுக்கிற..”” என்றாள் மது சிணுங்கியவாறு..

“அடிப்பாவி... போனா போகுது.. சின்ன புள்ள.. விவரம் இல்லாம இருக்காளே,, நாமளாவது சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சா, நான் பேட் கேர்ள் ஆ... எனக்கு வேணும் டீ... “என்று தலையில் அடித்து கொண்டாள் பாரதி...

“அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம் பாரதி.. அவர் உண்மையாகவே என்னை புரிஞ்சுகிட்டு என்னை ஏத்துக்கிட்டா போதும்... அதுவரைக்கும் நான் காத்துகிட்டிருப்பேன்.. “என்றாள் மது உறுதியாக...

“ஹ்ம்ம்ம் சூப்பர் மது குட்டி ... கவலைபடாத.. உன் நல்ல மனசுக்கு சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்குவார்... நீயா அவரை வழிக்கு கொண்டு வர முயற்சி செய்யலைனாலும் அந்த வேலன் விடமாட்டான்... சீக்கிரம் உன் புருசன் உன்னை ஏத்துக்க வச்சிடுவான்.. “என்று சிரித்தாள் பாரதி....

“தேங்க்ஸ் பாரதி... “ என்று சிரித்தாள் மது..

அப்பொழுது பாரதியின் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவள் பேசி முடிக்கவும்

“மது.. நீ கார்த்தியை கூட்டிகிட்டு உள்ள போ.... என்னோட புரபசர் வந்திட்டாங்க.. நான் போய் கூட்டிகிட்டு வர்ரேன்..” என்றவள் தன் மகளை மதுவிடம் கொடுத்துவிட்டு வேகமாக வெளியில் சென்றாள்..

மதுவும் அந்த குட்டியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்...

ரமணி இரு குடும்பத்தையும் அங்கு இருப்பவர்களுக்கு அறிமுக படுத்தி கொண்டிருந்தார்...

மது உள்ளே சென்றதும் அவள் கையில் இருந்த குழந்தையை கண்டு ஒரு தம்பதியர் ஆசையாக வந்து அந்த குட்டியை கேட்டு கையை நீட்ட, கார்த்தியும் அவர்களிடம் தாவி சென்றாள்...

அவர்கள் பார்ப்பதற்கு பாரதியின் பெற்றோர்கள் போல இருக்க, அவர்கள் என்று நினைத்து

“ஐ.. தாத்தா... பாட்டி... “ என்று மழலையில் செல்லமாக கொஞ்சி அழைக்க, அதை கேட்டு அந்த தம்பதியருக்கு அளவில்லா மகிழ்ச்சி...

தங்கள் பேத்திக்கும் இதே வயதுதான் இருக்கும்... பிறந்த பொழுது பார்த்தது மட்டும்தான்.. அப்புறம் மருமகள் அந்த குழந்தையை அவர்கள் கண்ணிலயே காட்டியதில்லை..

அதனால் கார்த்தியை பார்த்ததும் தங்கள் பேத்தி ஞாபகம் வந்து விட, அவர்கள் ஆசையாக அள்ளி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டனர்....

இயல்பாக எல்லோரிடமும் செல்லும் பழக்கம் கொண்டவள் அந்த தாத்தாவின் முத்தத்திற்கு சிரித்துக் கொண்டே அந்த குட்டியும் திருப்பி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அதை கண்டு இன்னும் குளிர்ந்து போனார் அந்த பெரியவர்.. அவர் மனைவிக்கும் அதே போல முத்தமிட, அந்த இரு பெரியவர்களும் ரொம்ப நாளைக்கு பிறகு மகிழ்ச்சியாக சிரித்தனர்...

பின் மற்றவர்களும் அவளை தூக்கி கொஞ்ச, ஜானகிக்கும் சுசிலாவுக்குமே மனம் நிறைந்து இருந்தது...

ஒவ்வொருவர் கண்ணிலும் தெரியும் பாசமும் ஏக்கமும் அவர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து எவ்வளவு வேதனை படுகிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியது...

ஒவ்வொருவரும் அவளை கொஞ்சி கொண்டிருக்க, அவளும் ஒவ்வொருவர்கிட்டயும் தயங்காமல் சென்று விளையாடினாள்...

வெளியில் சென்ற பாரதி அவளுடைய புரபசரான ராஜம் அவர்களை வரவேற்றாள்..

பாரதி படிக்கும் சைக்காலஜி கோர்சின் பகுதி நேரம் வகுப்பு எடுக்கும் ராஜம் அவர்களை பாரதிக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் பாடத்தை நடை முறை வாழ்க்கையோடு சேர்த்து விளக்குவார்....அவரின் ஒவ்வொரு வகுப்பையும் பாரதி மிஸ் பண்ணியதில்லை..

அவரின் பேச்சில் கவரபட்டவள் இந்த முதியோர் இல்லத்தைப் பற்றி சொல்லி இங்கு இருக்கும் பெரியவர்களுக்கு சைக்காலஜிகலாகவும் வாழ்க்கையில் ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் அவரை உரையாற்ற சொல்லி அழைக்க, அவரும் மறுக்காமல் வருவதாக ஒத்துக் கொண்டார்...

அவரை வரவேற்று உள்ளே அழைத்து சென்றவள் அனைவருக்கும் அவரை அறிமுக படுத்தி வைத்தாள்..

ரமணி அங்கு இருந்த பெரியவர்களை ஏற்கனவே ஹாலில் அமர வைத்திருக்க, பாரதி அவரை அந்த ஹாலின் ஓரமாக இருந்த மேடைக்கு அழைத்து சென்று அவரிடம் மைக் ஐ கொடுத்தாள்...

அவரும் அனைவருக்கும் வணக்கம் சொல்லி, தன் பேச்சை ஆரம்பித்தார்... மனோதத்துவ ரீதியாகவும் முதுமையில் ஒவ்வொருவர் மனமும் எப்படி மாறும் அதை எப்படி கையாள்வது என்பதாக பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்...

அவரின் பேச்சு சுவையாகவும், சிரிப்பு மற்றும் சிந்திக்க வைக்க கூடியதாக இருக்க, நேரம் ஆனதே தெரியாமல் அந்த முதியோர்கள் மெய் மறந்து அவர் பேச்சை ரசித்து கேட்டு கொண்டிருந்தனர்....

அனைவருக்கும் அவரின் மோட்டிவேசனல் பேச்சு பிடித்துவிட, அனைவரும் கை தட்டி ஆரவரித்தனர்...ராஜம்க்கும் அதை கண்டு மனம் நிறைந்து இருந்தது...

இது மாதிரி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த பாரதிக்கு நன்றி சொல்லி விடை பெற்று சென்றார்...

பின் மதியம் அவர்களுக்கு ஸ்பெஷல் லன்ச் ஏற்பாடு செய்திருந்தனர் பாரதியும் மதுவும்...

அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டு மனம் மகிழ வாழ்த்தினர்.. 



சிறிது நேரம் இடைவேளைக்கு பிறகு, இன்னும் இரண்டு நிக்ழ்ச்சிகள் முடிய அடுத்ததாக மதுவின் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

அவள் ஒரு கிளாசிக்கல் டான்சர் என்று தெரிய பாரதிதான் அவளை நடனமாட சொல்லியிருந்தாள்.. இதுவரை இந்த மாதிரி நடனம் இந்த இல்லத்திற்காக ஏற்பாடு செய்ததில்லை.. என்று கூறி மதுவை வற்புறுத்தி ஒத்துக்க வைத்திருந்தாள் பாரதி..

நாட்டியத்தின் முக்கிய சிறப்பே அந்த நாட்டியத்திற்கு தகுந்த உடையும் அதற்கான ஒப்பனையும் தான்... அதனால் மது ரமணியின் அறைக்கு சென்று நாட்டிய உடையில் தயாராகி வந்தாள்...

நாட்டிய பாணியில் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி தன் நடனத்தை தொடங்கினாள்.. அவளின் மெல்லிய தேகத்திற்கு அவள் உடலை வளைத்து ஆடியதும் அவள் முகபாவமும் அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்க, அவளின் நடனத்தை அனைவரும் ரசித்தனர்...

முதல் இரண்டு பாட்டு முடிய அடுத்ததாக அவளுக்கு பிடித்த

கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்.. என் செல்ல கண்ணனே வா.... “ என்ற பாடலுக்கு நடனம் ஆட ஆரம்பிக்க, அவள் அழைத்த அதே நேரம் அவள் கண்ணனும் அந்த ஹாலின் உள்ளே பிரசன்னமானான்....

அவனை கண்டதும் ஒரு நொடி வியந்தவள் தன் முகத்தில் வெக்க கோடுகள் பரவ, தான் ஆரம்பித்த நடனத்தை பாதியில் நிறுத்த கூடாது என்பதால் தொடர்ந்து ஆடினாள்...

நிகிலனுக்குமே அவன் உள்ளே வரும்பொழுது காட்டிய அவள் முக பாவம் அவன் ஆழ் மனது வரை சென்று அசைத்து பார்த்தது...

அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்குமே உள்ளுக்குள் சிலிர்த்தது... உள்ளே நுழைந்தவன் அங்கயே நின்று கொண்டு அவள் ஆடுவதையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தான்....

அவன் ரசிப்பதை கண்டு கொண்டவளுக்கு உள்ளேயும் சிலிர்த்தது... அதில் அவள் அபிநயங்கள் இன்னும் அழகாக வர, அதை ரசித்துக் கொண்டே ஆடியவள் அந்த பாடல் முடியவும் வெக்கப் பட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டே ஓடிவிட்டாள் ரமணியின் அறைக்கு...

அவள் ஏன் ஓடினாள் என்று யோசித்து அனவைரும் திரும்பி பின்னால் பார்க்க, அங்கு நிகிலனை பார்க்க, அவன் வந்ததால் தான் மது ஓடிவிட்டாள் எனப் புரிய அனைத்து பெரியவர்களும் அவனை கிண்டல் செய்தனர்..

பாரதியோ சொல்லவே வேண்டாம்... நிகிலனை வளைத்து வளைத்து வாரி கொண்டிருந்தாள்...நிகிலன் அழகாக வெக்க பட்டு புன்னகைக்க, அதை வைத்து இன்னும் ஓட்டினாள் பாரதி..

உள்ளே சென்ற மது சுடிதாருக்கு மாறி தன் ஒப்பனைகளை கழைத்து விட்டு தலையை வாரிக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வர, அங்கு ஆதியின் இளவரசி மது அனைவருக்கும் வணக்கம் வைத்து ஆடிய அந்த ஸ்டெப் ஐ தன் பிஞ்சு கரங்களால் செய்து அவள் கவனித்த சில ஸ்டெப்கள் ஆட, அதில் மயங்கியவர் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்...

ஜானகி, சுசிலா, சிவகாமி, ரமணி என அனைவரும் அந்த குட்டியின் ஆக்சனை கண்டு அதிசயித்து ரசித்தனர்...

அதை தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாள் பாரதியும் சிரித்தவாறு..

பின் மதுவை கண்டதும் பாரதி அவளிடம் சென்று

“ஹோய்.. என்ன உன் ஹீரோவை பார்த்ததும் அப்படி ஒரு ரொமான்ஸ் ... எங்களையெல்லாம் பார்க்கவே இல்லை....உன் ஆளை மட்டுமே பார்த்து ஆடற..” என்று கண் சிமிட்டினாள்...

“சீ போ பாரதி.. “ என்று மது வெக்கப் பட்டு சிரிக்க,

“சரி..சரி.. நீ நடத்து டா மதுகுட்டி... இப்ப வா.. நாம சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடலாம்..” என்றாள் பாரதி..

“ஆங்... அதெல்லாம் எனக்கு வராது..எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் மட்டும்தான் தெரியும்... ” என்று மறுத்தாள் மது.. அவளுக்கு நிகிலன் முன்னால் ஆட கூச்சமாக இருந்தது..

“ஓய்.. நான் மட்டும் என்ன கத்துகிட்டா ஆடறேன்... சும்மா வா மது குட்டி... “ என்று அவளை இழுத்து கொண்டு முன்னால் வந்தவள் குத்துபாட்டை போட சொல்ல, மதுவின் கால்கள் தானாக ஆடியது அந்த பாடலை கேட்டதும்...

அந்த இரண்டு பெண்களும் அழகாக ஆட, கூடவே அந்த குட்டி இளவரசியும் சேர்ந்து கொள்ள, அந்த இடமே அமர்க்களபட்டது...

எவ்வளவு கட்டுபடுத்தியும் அடங்காமல் நிகிலனின் பார்வை அழகாக ஆடிய மதுவின் பக்கமே சென்று நின்றது...அவள் இலாவகமாக ஆடும் அழகையே ரசித்திருந்தான்...

சில பாடல்கள் முடிந்ததும் ஆடி கலைத்த பாரதி நிகிலனையும் ஆட அழைக்க அவனோ மறுத்து விட்டான்..

“போங்க மாம்ஸ்... நீங்க சுத்த வேஸ்ட்... இதே என் புருசனா இருந்தா அடுத்த நொடியே என் கூட வந்து ஆடியிருப்பார்...” என்று சொல்லும்பொழுதே ஆதியும் உள்ளே வந்தான்...

அதை கண்ட நிகிலன்

“ஆஹா... ஆடு தானா வந்து தலையை கொடுக்குதே.. மச்சான்.. நீ இன்னைக்கு மாட்டின.!! அனுபவி டா ... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான் நிகிலன்....

அவனுக்கு விரித்திருந்த வலையை அறியாமல் அவர்கள் அருகில் வந்த ஆதி

“ஹாய்.. ரதி... என்னாச்சு?? ..ஏன் நிகில் கிட்ட கெஞ்சிகிட்டு இருக்க?? “ என்றான் சிரித்தவாறு...

“ஹை.. வாங்க மாமா... உங்களை பத்திதான் பெருமையா சொல்லிகிட்டிருந்தேன்.. அதுக்குள்ள நீங்களே வந்திட்டீங்க... நீங்க நான் எது கேட்டாலும் செய்வீங்கதான?? “ என்றாள் கொஞ்சலாக....

“யெஸ்... டார்லிங்.. நீ கேட்டு நான் எதையாவது மறுத்திருக்கேனா?? உனக்கு என்ன வேண்டும்??... ஆணை இடு டார்லிங்... அடுத்த நொடி அதை நிறை வேற்ற நான் காத்து கொண்டிருக்கிறேன்...” என்று வீர வசனம் பேசினான் ஆதி அடுத்து வரும் ஆப்பை அறியாமல்...

ஹீ ஹீ ஹீ.. நீங்க தான் என்ன செல்ல ஆதி மாமா... அப்பனா வாங்க என் கூட டான்ஸ் ஆடுங்க... “என்று அவன் கையை பிடித்து இழுத்தாள் பாரதி...

அதை கேட்டு திடுக்கிட்டவன்

“என்னது டான்சா?? நான் கூட நீ வேற எதுவோ கேட்க போறேன்னு தான நினைச்சேன்...” என்றான் முகத்தில் அதிர்ச்சியுடன்..

நிகிலன் அவனை பார்த்து

“டேய் மச்சான்.. அதுக்குத்தான் எதையும் விசாரிக்காமல் சவடால் விடக் கூடாதுங்கிறது... நல்ல மாட்டினியா?? ..” என்று குறும்பாக சிரித்தான்..

ஆதி அவனை முறைத்தவாறு

“ஏன்டா...நீயாவது சொல்லியிருக்க கூடாது அவ எதுக்கு புள்ளி வச்சானு.. நானும் கொஞ்சம் உசார் ஆயிருப்பேன் இல்ல...போடா துரோகி... ” என்றான் முறைத்தவாறு

“டேய்... இது அடுக்குமா?? நானும் உனக்கு எத்தனை தரம் சைகை காட்டினேன்... நீ தான் உன் பொண்டாட்டியை பார்த்த உடனே உன் பக்கத்துல இருக்கிறவனை கூட உனக்கு கண் தெரியலை.. நீ என்னை துரோகி னு சொல்ற..” என்றான் சிரித்தவாறு..

அவர்கள் இருவரும் ரகசியமாக பேசி கொள்ள,

“இது என்ன பொம்பளைங்களாட்டம் இரண்டு பேரும் குசுகுசு னு பேசறீங்க?? “என்றாள் பாரதி ஆராயும் பார்வையுடன்....

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் ஒன்னும் இல்லை ரதி... சும்மாதான்... “ என்று சமாளித்தான் ஆதி...

“சரி.. அத விடுங்க.. வாங்க டான்ஸ் ஆடலாம்.. “ என்று அவனை அழைத்தாள் பாரதி

“எனக்கு டான்ஸ் எல்லாம் ஆ ட வராது ரதி....என்னை விட்டுடேன்.. “ என்றான்... கெஞ்சலாக...

“ஹீ ஹீ ஹீ.. அப்ப நம்ம ரூம்ல என் கூட ஆடினதுக்கு பேர் என்னவாம்??... “ என்றாள் குறும்பாக பார்த்தவாறு..

“ஐயோ... இப்படி பப்ளிக்ல மானத்தை வாங்காத டி .. “என்று தலையில் அடித்து கொண்டான் ஆதி...

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் நம்ம மாம்ஸ் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டார் மாமா... நீங்க வாங்க.. “என்று விடாமல் அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு முன்னே செல்ல, நிகிலனுக்கு பாரதி ஆட்டை பிடித்து இழுத்து கொண்டு செல்வதைப் போலவே இருக்க, வாய்விட்டு சிரித்தான்....

அடை கண்ட ஆதி கடுப்பாகி அவனை பார்த்து முறைக்க, மதுவும் ஆதியின் அருகில் வந்து

“நீங்களும் அடுங்க அண்ணா... சூப்பரா இருக்கும்.. “என்று வற்புறுத்த,வேற வழியில்லாமல் அங்கு ஒலித்த பாடலுக்கு அவனுக்கு தெரிந்த ஸ்டெப் ஐ ஆடினான்..

சில நொடிகளிலயே அதில் லயித்து விட, தன் அசதியை எல்லாம் மறந்து உற்சாகமாக அவன் பாரதியுடன் இணைந்து ஆடினான்... அவர்களின் ஜோடி பொருத்ததிற்கு அவர்களின் நடனம் அருமையாக அமைந்து இருக்க அனைவரும் கை தட்டி ஆரவரித்தனர்..

பின் வந்த பாடலுக்கு பாரதி மதுவையும், இழுத்து விட அவளும் அவர்களுடன் இணைந்நு ஆடினாள்.. அவர்களின் நடனத்தை அங்கு இருந்த பெரியவர்களோடு ரசித்துக் கொண்டிருந்த நிகிலனையும் ஆதி கையை பிடித்து முன்னால் இழுத்துச் சென்று ஆட சொல்ல, அவன் மறுக்க, ஆதி விடாமல் வற்புறுத்தவே நிகிலனும் நடனம் ஆடினான்...

அதை கண்ட மது மலைத்து நின்றாள்...

“இந்த விருமாண்டிக்கு இப்படியெல்லாம் கூட ஆட தெரியுமா??” என்று...

அடுத்து வந்த தல யின் அதாரு அதாரு பாடல் ஒலிக்க, பாரதி மதுவின் கையை பிடித்து இழுத்து முதல் பகுதியான

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு..

வரிகளுக்கு இரு பெண்களும் அழகாக ஆடினார்கள்.. அவர்களை தொடர்ந்து ஆதியும் நிகிலனும் இணைந்து


லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு...

என்ற வரிகளுக்கு தங்கள் இன் பண்ணியிருந்த சட்டையை வெளியில் எடுத்து விட்டு அதன் நுனியை லுங்கி போல பிடித்து, மடித்து ஆட, அவர்கள் இருவரின் உயரத்திற்கு அந்த நடனம் அவ்வளவு அருமையாக இருந்தது...

பாரதியும் மதுவும் பாதியில் தங்கள் ஆட்டத்தை நிறுத்திவிட்டு தங்கள் கணவன் ஆடும் அழகையே இமைக்க மறந்து ரசித்தனர்.....

தன் தந்தையின் ஆட்டத்தை கண்ட ஆதியின் இளவரசி ஓடி வந்து ஆதியின் காலை கட்டிக் கொண்டாள்...

அவளை தூக்கி கொஞ்சியவன் அவளையும் தூக்கி தலையில் வைத்து கொண்டே ஆட, அங்கிருந்தவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்து மகிழ்ந்தனர்....

ஒரு வழியாக எல்லா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் முடிய, மாலை சிற்றுண்டியை அனைவருக்கும் வழங்கினர்...

அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அந்த நாள் மறக்க முடியாத நாள் ஆகியது.. ஒவ்வொருவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதை கண்ட நிகிலனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

இந்த மாதிரி இவர்கள் உற்சாகத்துடன் இதுவரை பார்த்ததில்லை... இதை ஆர்கனைஸ் பண்ணியவளை ஓரக்கண்ணால் பார்க்க அவளோ அந்த கார்த்தி குட்டியுடன் தோட்டத்தில் விளையாண்டு கொண்டிருந்தாள்...

அவள் அந்த குழந்தையை கொஞ்சும் அழகையே ரசித்து கொண்டிருந்தான் சில நொடிகள்.. பின் தலையை உலுக்கி கொண்டு பாரதிக்கு சென்று நன்றி சொன்னான்...

“என்ன மாம்ஸ்.. நன்றி எல்லாம் சொல்றீங்க?? .. இது எல்லாம் உங்க பொண்டாட்டியோட ஏற்பாடுதான்.. அவதான் இந்த ஐடியாவை கொடுத்தது.. நான் சும்மா சப்போர்ட் பண்ணினேண்.... அவ்வளவுதான்.. “என்று சிரித்தாள் பாரதி...

பின் அனைவருமே பாரதிக்கும் மதுவுக்கும் நன்றி சொல்லினர்...

மேலும் அவர்கள் திட்டமிட்ட படி, நிகிலன் இந்த புதிய திட்டத்தை பற்றி அங்கு இருந்தவர்களிடம் ஏற்கனவே பேசியிருந்தான்.. அதை கேட்டு அவர்களும் மகிழ்ந்தனர்...

அந்த இல்லத்திற்கு ஆரம்பத்தில் சேர்ந்த கமலம் நிகிலன் உடன் வர விருப்பப்பட, கார்த்தி ஒட்டி கொண்ட அந்த முதியவர் தம்பதிகளை பாரதி அழைத்து கொண்டாள்..

மது வற்புறுத்தி ரமணியையும் தங்களுடன் அழைத்தாள்.. அவரும் வேற வழியில்லாமல் மதுவுடன் கிளம்பி இருக்க, இருவர் கார்களும் அந்த இல்லத்தை விட்டு விடை பெற்று சென்றன..

நீண்ட நாட்களுக்கு பிறகு நிகிலன் இல்லத்திற்கு வந்த ரமணியும், நீண்ட நாட்களுக்கு பிறகு நமது இல்லத்தை விட்டு வெளியில் வந்த கமலம் அம்மாவிற்கும் அந்த வீடு ரொம்ப பிடித்திருந்தது..

அதோடு சிவகாமியும் அவர்களுடன் நன்றாக பழக, கமலத்திற்கு ரொம்ப மகிழ்ச்சியாகி போனது... அதுவும் அகிலாவின் வாய் ஓயாத பேச்சும் அவர்களிடம் ஒட்டிகொண்ட விதமும் பிடித்து விட, இருவருமே மகிழ்ச்சியாகி போனார்கள்..

அதோடு மது சிவகாமியின் உறவை பார்த்து இருவருக்குமே வியப்பாக இருந்தது...

மருமகள் மாமியார் என்ற ஈகோ இல்லாமல் அவர்கள் இருவரும் இயல்பாக பழகுவதை கண்ட பொழுது ரமணிக்கும் கமலத்திற்குமே தங்கள் தவறு புரிந்தது..

முதலில் சிவகாமி தன் மகனை பற்றி சொல்லும் பொழுது உன் புருசன்.. என்றே அழைத்தார் மதுவிடம்.. என் பையன் என்று அவர் வாயில் வரவில்லை..

திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண்மகனுக்கு அன்னையை விட மனைவிக்குத்தான் முதல் உரிமை என்று சிவகாமி புரிந்து கொண்டு அதையே அவர் அடிக்கடி தன் மருமகளிடம் சொல்லி வந்தார்...

அது அந்த மருமகளின் மனதில் அவளுக்கான இடத்தை நிலை நாட்டவும் ஒரு இன்செக்யூரிட்டி இல்லாமல் தன் கணவன் தனக்குத்தான் என்பதை அவள் கண்வனை பெற்றவளே சொல்ல இன்னும் அவளால் இயல்பாக இருக்க முடியும்...

கணவனை பெற்றவர்களே அந்த உரிமையை விட்டுக் கொடுத்திருந்தால் தன் கணவனை அவர்களிடம் இருந்து பிரித்து தனக்கு மட்டுமே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற தேவை வந்திருக்காது..

அதனாலயே பல பிரச்சனைகள் வந்திருக்காமல் தடுத்திருக்கலாம்... என்று புரிந்து கொண்டனர் இருவரும்...

அதே மாதிரி மதுவும் தன் மாமியாரிடம் என் புருசன் என்று சொல்லாமல் எப்பொழுதும் உங்க மூத்த மகன்... என்று அழைக்க, அதில் அவள் அவர் மகனை பறித்துக் கொள்ளவில்லை..

திருமணத்திற்கு பிறகும் அவர் மகன் அவருக்கே.. என்று சொல்லாமல் சொல்ல, அதில் அந்த தாய்க்கும் எங்கே மருமகள் தன் மகனை பறித்து விடுவாளோ என்ற பயம் விலகி விடுகிறது..

தன் மகனை தக்க வைத்துக் கொள்ள என்று எந்த சூழ்ச்சியும் செய்யாமல் தன் வீட்டிற்கு வாழ வந்தவளை இயல்பாக ஏற்றுகொண்டு அவளையும் தன் குடும்பத்தில் ஒருத்தியாக பாவிக்க முடிந்த ரகசியத்தையும் இருவரும் புரிந்து கொண்டனர்...

ரமணி, கமலம் இருவருமே ஒரு விதத்தில் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதை நிரூபித்து விட துடித்ததில் தான் பிரச்சனை வெடித்து இருவருமே தங்கள் மகனை பிரிந்து இப்படி தனியாக வாழ வேண்டி வந்ததை நன்றாக புரிந்துக் கொண்டனர்...

ஒரு குடும்பம் உடைந்து விடாமல் இருக்க, விட்டுக் கொடுத்தல் என்பது எவ்வளவு பெரிய ரகசியம் என்பது இருவருமே சிவகாமியின் குடும்பத்தில் இருந்து கத்துக் கொண்டனர்...

“இவையெல்லாம் ஏனோ அவர்கள் அறிவுக்கு முன்னரே எட்டவில்லை.. “என்று பெருமூச்சு விட்டனர்..

மீண்டும் தங்கள் மகன் மருமகளுடனும் பேர குழந்தையுடனும் தனக்கேயான குடும்பத்துடன் வாழ இருவருக்குமே ஆசையாக இருந்தது...

சிவகாமி மாதிரி மருமகளை அரவணைத்து செல்ல அவளுடன்நட்பாக இருக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா?? என்று இருவர் மனதிலும் ஒரு சிறு நப்பாசை...

ஆனால் கண்ணாடி பாத்திரம் உடைந்து விட்டால் அது உடைந்தது உடைந்தது தான்.. மீண்டும் அதை ஒட்ட வைக்க முடியாது.. அது மாதிரி தங்கள் குடும்பம் உடைந்தது உடைந்தது தான்..

அந்த கடவுள் என்ன எழுதி வைத்திருக்கிறானோ அதுவே நடக்கட்டும் என்று பெருமூச்சு விட்டு தங்கள் மீதி வாழ்க்கையை அந்த ஆண்டவனிடம் விட்டனர் அந்த இரண்டு பெரியவர்களும்...

எனவே அதை எல்லாம் மறந்து அந்த குடும்பத்தில் இருக்கும் நாட்களை அனுபவித்தனர்...

ரமணி தன் வீட்டில் இருப்பதால் அவரை பார்க்க என்றே நிகிலன் சீக்கிரம் வந்து விடுவான் இந்த ஒரு வாரமாக.. அவர் மனம் வாடிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் நிகிலன்..

ஆனால் இப்பொழுது ரமணி நிறைய மாறியிருக்க, முன்பு மாதிரி சோகத்துடன் இல்லாமல் அவரும் மற்றவர்களுடன் சிரித்து பேச ஆரம்பித்திருந்தார்.. அதுவும் அகிலாவுடன் வம்பு இழுக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தார்...

அதை கண்டதும் நிகிலனுக்கு ஆச்சர்யம்...

“இத்தனை வருடம் தன்னால் முடியாததை இந்த ஒட்டடகுச்சி செய்துவிட்டாளே!!!.. ரமணியை மாற்றி சிரிக்க வைத்து விட்டாளே..” என்று ஆச்சர்யமாக இருந்தது..

அவர்கள் இங்கு வந்ததில் இருந்தே இரவு சாப்பாடு மூன்று பெரியவர்களும் இணைந்து தயாரிக்க அதை மது எடுத்து வந்து வைத்து அனைவருக்கும் பரிமாறி தானும் அமர்ந்து உண்ண, அனைவரும் சிரித்து பேசி கொண்டே இரவு உணவை முடிப்பர்..

ரமணியும் கமலமும் தனி அறை வேண்டாம் என்றும் அவர்கள் சிவாகாமியின் அறையிலயே தங்க ஆசைபட்டதால் அங்கயே நிகிலன் ஏற்பாடு பண்ணி கொடுத்திருந்தான்..

இரவு உணவை முடித்ததும் சிவகாமியின் அறைக்கு சென்று தங்கள் கதையை தொடர்வர் மூவரும்...

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பாலை காய்ச்சி எடுத்து சென்று அனைவருக்கும் கொடுத்தவள் தங்கள் அறைக்கு செல்ல, மதுவிற்கு உள்ளுக்குள் உதறும்...



நிகிலன் எப்பொழுதும் இரவு தாமதமாக வருவான்.. அவன் வருமுன்னெ மது உறங்கி விடுவாள்.. அதனால் ஒரே அறையில் இருந்தும் பெரிதாக எதுவும் தெரியவில்லை...

ஆனால் ரமணி இங்கு இருப்பதால் சில நாட்களாக சீக்கிரம் வந்து விடுகிறான் நிகிலன்... ஒரே அறையில் இருந்து கொண்டு அவனை, தன் காதல் கணவனை பார்க்காமல் அவள் மனதை கட்டிப்போட முடியவில்லை அவளுக்கு.. அதனால் இந்த இரவு மட்டும் கொடுமையாக இருந்தது இந்த நாட்களில்....

இன்றும் அதே போல உள்ளே செல்ல தயக்கமாக இருக்க, மீண்டும் ஒரு முறை அந்த வேலனை நினைத்து கொண்டு தன்னை சமாளித்து கொண்டு அறைக்கு உள்ளே சென்றாள்...

கட்டிலில் அமர்ந்து தன் அலைபேசியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தவன் அவள் உள்ளே வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, கையில் பால் டம்ளருடன் அறையின் கதவை மூடிவிட்டு வந்தவளை காண அவனுக்குமே உள்ளுக்குள் சிலிர்த்தது...

எப்பொழுதும் அவன் வருவதற்கு முன்னே அவள் உறங்கிவிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை அவனுக்கு... அவள் உறங்க வேண்டுமென்றே திட்டமிட்டு அவன் தாமதமாக வருவது அவன் மனதிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம்...

அதுவும் சென்ற வாரத்தில் இருந்தே அவளின் ஒவ்வொரு செயலும் அவனுக்கு அவள் மேல் ஒரு நல்ல மதிப்பை ஏற்படுத்தத்தான் செய்தது...

அவன் வரைய ஆரம்பித்த சாப்ட் கார்னர் பெருசாக வளர்ந்து நிற்கிறது தான்...

அதனாலோ என்னவோ அவளை திட்டுவதற்கும் முறைப்பதற்கும் இப்பொழுதெல்லாம் மனம் வரவில்லை அவனுக்கு...

ரமணி மற்றும் கமலம் முன்னால் அவளை முறைக்க கூடாது என்று குறைத்தவன் அப்படியே பழகி விட்டதை போல இருந்தது...

உள்ளே வருபவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் நிகிலன்... அவன் பார்வையை ஓரகண்ணால் கண்டு கொண்டவளுக்கு இன்னும் சில்லிட்டது...

தன் கணவனை பற்றி சுகந்தி சொல்லிய கதைகள் எல்லாம் கண் முன்னே வந்து அவளை சிவக்க வைத்தன...

அவள் எவ்வளவு முயன்று கட்டுபடுத்தியும் கேட்காமல் அவள் கைகள் தானாக நடுங்க ஆரம்பித்தன அவனை நெருங்க நெருங்க....

அவன் அருகில் வந்தவள் அவன் முன்னே அந்த ட்ரேயை நீட்டினாள் மெல்லிய நடுக்கத்துடன்..

அவளின் நடுக்கத்தை கண்டு கொண்டவன்

“ஏய்... எதுக்கு உன் கை இப்படி நடுங்குது?? நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கேன்?? எதுக்கு இப்படி பயந்துக்கற?” என்றான் முறைத்தவாறு..

“இ.. இல்ல சார்... சீக்கிரம் சரியாயிடும்.. “ என்றவாறு பால் டம்ளரை எடுத்து அவன் கையில் கொடுக்க, கொஞ்சம் நடுக்கம் குறைந்து இருந்தது..

“பார்த்தீங்களா.. இப்ப நடுக்கம் போயே போச்சு...!!! “ என்றாள் சிரித்தவாறு..

அவளின் கன்னம் குழிய சிரித்த அந்த முகத்தை அவ்வளவு பக்கத்தில் பார்க்க, அவனுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது...

ஆனாலும் தன்னை அடக்கியவன் தலையை உலுக்கி கொண்டு அவள் நீட்டிய பாலை வாங்கி பருகிய பிறகு மீண்டும் அவளிடம் நீட்டினான்...

அவளும் அதை வாங்கி வைத்துவிட்டு தன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டு அந்த வாரத்திற்கான பாடங்களை ரிவைஸ் பண்ண தன் புத்தகத்தை எடுத்து வைத்தாள்..

ஆனால் கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் அவள் பார்வை மட்டும் அடிக்கடி தன் கணவனிடம் சென்று மீண்டது அவன் எதுவும் பேசுவானோ என்ற ஏக்கத்துடன்...

அவளின் ஏக்க பார்வையை கண்டு கொண்டதாலோ இல்லை அவன் உள்ளே சுழல ஆரம்பித்திருந்த அந்த சூறாவளி இன்னும் வேகமாக சுழற்ற ஆரம்பித்ததாலோ, வேகமாக எழுந்து அந்த அறையை ஒட்டியிருந்த பால்கனிக்கு சென்றான்...

அங்கு வீசிய பனிகாற்று அவனுள் இருந்த சூறாவளிக்கு இன்னும் தூபமிட, தன்னைக் கட்டுபடுத்தி கொள்ள, கைகளை மார்பிற்கு குறுக்காக கட்டிகொண்டு முன்னும் பின்னும் நடை பயில ஆரம்பித்தான் அந்த விருமாண்டி...

அதை கண்ட அந்த சிங்காரவேலனும்

“ஹா ஹா ஹா... விருமாண்டி.. இப்பதான் நீ என் வழிக்கு வந்திருக்க.. இனிமேல் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது... என்னோட அடுத்த மூவ் எனக்கு வெற்றி மூவ்தான்... “என்று வெற்றி சிரிப்பை சிரித்து கொண்டான் இதுவரை அனைத்திலும் வெற்றிபெற்ற அந்த வடிவேலன்....

பாவம்... வெற்றி தோழ்வி என்பது வாழ்வின் இயல்பு.. அது கடவுளுக்கும் பொருந்தும் என்பதை மறந்துவிட்டான் அந்த ஆறுமுகன்..

எப்படியும் தான்தான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நம்பி கொண்டிருக்கும் அந்த வேலனும் தோற்க போகிற நாள் விரைவில் வரப்போவதை அறியவில்லை...

தன் அப்பனுக்கு புத்தி சொன்ன அந்த வேலனே தோற்க போகிறான் என்றால் அவனை ஜெயிப்பது யாராயிருக்கும்???


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!