தவமின்றி கிடைத்த வரமே-38



அத்தியாயம்-38 

சுந்தராவின் மனதில் இருந்த குழப்பத்தை நீக்கி, அவளுக்கு காதலை பற்றிய ஒரு தெளிவை கொடுத்த நிம்மதியில் தன் அறைக்கு வந்தாள் பனிமலர்...

“வசு சொன்ன மாதிரி சரியான நேரத்தில் அவள் பிரச்சனையை கண்டுபிடிச்சு அதுக்கு தீர்வும் கொடுத்தாச்சு.. இனிமேல் வசு நல்லா படிப்பா... “ என்ற நிம்மதியுடன் தன் அறைக்கு வந்தாள்..

உள்ளே வந்தவள் அங்கு கட்டிலில் உறங்கி கொண்டிருந்த தன் கணவனை கண்டதும் திகைத்து நின்றாள்.

“இவன் எப்பொழுது வந்தான்? அதுவும் வந்த உடனே தன்னைக் கூட அழைக்காமல் சாப்பிட்டு அதுக்குள்ள உறங்கி விட்டானா? அவ்வளவு நேரமா ஆகிடுச்சு? என்று மணியை பார்த்தவள் அப்படி ஒன்றும் நேரம் ஆகி இருக்கவில்லை..

எத்தனையோ நாள் இதைவிட தாமதம் ஆகி வந்த பொழுதும் தன் மனைவியை கொஞ்சிவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கும் மேல தான் உறங்குவான் வசீகரன்..

“இன்று தனக்காக கூட காத்திருக்காமல் வந்த உடனே உறங்கி விட்டானே ? ஒரு வேளை வேலை அதிகமா இருக்குமோ? “ என்று யோசித்தவாறு அந்த அறையின் விளக்கை அணைத்து விட்டு அவளும் வந்து அவன் அருகில் படுத்து கொண்டாள்..

தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த இந்த இரண்டு மாதங்களில் ஒரு நாளும் வசி அவளை தவிர்த்ததில்லை..

எவ்வளவு நேரம் ஆகி வந்தாலும் அவளை இழுத்து அணைத்த பிறகே உறங்குவான்.. தன் கணவனின் கை அணைப்பிலயும் அவன் மார்பின் மீதும் உறங்கி பழகிய அவளுக்கு இன்று அவன் அணைப்பில்லாமல் உறக்கம் வரவில்லை...

அவன் அருகில் இன்னும் நெருங்கி அவனை ஒட்டி கொண்டவள் அவன் பக்கமாக திரும்பி படுத்து கொண்டு தூங்குபவனையே ரசித்து கொண்டிருந்தாள்..

பின் தன் கையை எடுத்து அவனை அணைத்து கொண்டு அவனோடு இன்னும் ஒட்டி கொண்டாள்..

தூங்குபவனை போல பாவணை செய்த வசிக்கோ பெரும் சோதனையாக இருந்தது.. எப்பவும் அவன்தான் அவளை நாடி செல்வதும் இழுத்து அணைப்பதும்.. இன்று அவன் தள்ளி படுத்தாலும் அவன் அருகில் வந்து அவள் ஒட்டி கொள்வதும் தன்னை அணைத்து கொள்வதும் கண்டு அவன் இதயம் எகிறி குதித்தது...

அவளை அப்படியே இழுத்து அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளே.. ஆனால் சற்று முன் அவன் கண்டதும் வசுந்தரா அறையில் அவளின் பேச்சும் கொஞ்சம் இலக ஆரம்பித்தவனை, தன் மனைவியின் பக்கம் சாய இருந்தவனை தடுத்து நிறுத்தியது..

அவன் உடல் இறுக, உள்ளுக்குள் பல்லை கடித்தவாறு அசையாது படுத்திருந்தான்..

தன் கணவனின் மனதில் இருக்கும் கொதிப்பை அறியாமல் மலர் அவனை சீண்டி கொண்டிருந்தாள்.. அவள் அணைத்தும் அவன் எந்த ரெஸ்பான்ஸ் ம் செய்யாமல் போக, அவள் கையால் அவன் முகத்தில் கோலமிட, அவன் மீசையை பிடித்து செல்லமாக இழுக்க, பின் அவளுக்கு மிகவும் பிடித்த அவன் முரட்டு இதழ்களை தன் கரங்களால் ஆசையுடன் வருடினாள்...

அதற்கு மேல் அவள் சீண்டல்களை தாங்க முடியாதவன்

“ம்ச்...ஐம் டயர்ட் பனிமலர்.. டோன்ட் டிஸ்டர்ப் மீ.. “ என்று அவள் கையை விலக்கியவன் மறுபக்கம் திரும்பி அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்..

அதை கண்ட மலர் திகைத்து போனாள்..

அவன் நன்றாக உறங்குகிறான் என்றுதான் அவள் தைர்யமாக, அவள் நீண்ட நாட்களாக மனதுக்குள் எண்ணி வந்த ஆசையான அவன் இதழை தீண்டி பார்க்க தோன்றியதை செய்தாள்..

ஆனால் அவன் தன் கையை விலக்கிய விதத்தை பார்க்கும் பொழுது அவன் உறங்கியிருக்க வில்லை.. தன்னை தவிர்க்கத்தான் உறங்குபவனை போல பாவணை செய்கிறான் என்று புரிந்தது..

இதுவரை ஒரு நாளும் தன்னை விலக்கியிராத தன் கணவன் இன்று அவளாகவே அவன் அருகில் வந்தும் கண்டு கொள்ளாமல் அதோடு தொந்தரவு செய்யாதே என்று சொல்லவும் சுருக்கென்று வலித்தது மலருக்கு...

நான் தொடுவது அவனுக்கு தொந்தரவா இருக்கா? என்று எண்ணியவளுக்கு கண்ணோரம் கரித்தது.. இதுவரை இப்படி அவன் அவளிடம் கடிந்தோ முகம் திருப்பியோ பேசியதில்லை..

அதோடு அவளை எப்பொழுதும் ஜில்லு என்று ஆசையுடன் அழைப்பவன் இன்று பனிமலர் என்று தன் பெயர் சொல்லி அழைக்க, அவனின் செயலும், சிறு ஒதுக்கமும் அவளுக்கு பெரும் வேதனையை தந்தது...

கண்ணில் ஈரம் கசிய, அவளும் மறுபக்கம் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டாள்...

“என்னாச்சு? எதுக்கு இப்படி நடந்து கிட்டார்? ஒரு வேளை உண்மையிலயே வேலை அதிகமோ? “ என்று ஏதேதோ யோசித்தவாறு நீண்ட நேரம் கழித்து உறங்கி போனாள்..

மறுபக்கம் திரும்பி படுத்த வசிக்கும் பெரும் வேதனையாக இருந்தது.. அவளை ஒரு நாளும் அவள் மனம் நோக பேசியதில்லை.. இன்று அவளே நாடி வந்தும் அவள் கையை விலக்கவும் அவள் மனதில் அது வலித்திருக்கும் என புரிய, அது அவனுக்குமே வேதனையாக இருந்தது..

ஆனால் அதை விட வேதனை அவளிடமிருந்து வந்த வார்த்தையால் என்பதால் அடுத்த நொடி மனம் கசந்து வழிய, அவனுமே எதை எதையோ எண்ணிய படி நீண்ட நேரம் போராடி பின் உறங்கி போனான்...

மறுநாள் காலை கண் விழித்த பனிமலர் அவசரமாக தன் பக்கத்தில் பார்க்க படுக்கை காலியாக இருந்தது..வசி எழுந்து விட்டிருந்தான். மீண்டும் மணியை பார்த்தவள் இது அவன் ஜாகிங் செல்லும் நேரம் அல்லவே..

இன்னும் கொஞ்ச நேரம் கழித்துதான் தன் காலை ஓட்டத்தை தொடர்வான்..

அப்படி இருக்க அதற்குள் எழுந்து விட்டானா? என்று எழுந்தவள் சுற்றிலும் தேடி பார்க்க அவன் இருப்பதற்கான அரவம் எதுவும் கேட்கவில்லை..

பின் அவளும் எழுந்து குளித்துவிட்டு கீழ செல்ல, வழக்கம் போல மீனாட்சி புன்னகைத்து அவளுக்கு காலை வணக்கத்தை சொல்லி அவளுக்கு காபியை கொடுத்தார்..

மலரும் சிரித்து கொண்டே அதை வாங்கி கொண்டவள்

“அத்தை... அவர் ஜாகிங் போயிருக்காரா? “ என்றாள் தயக்கத்துடன்...

“இல்ல மலர்.. ஹாஸ்பிட்டல் ல ஏதோ வேலை இருக்குனு சீக்கிரம் கிளம்பி காபி மட்டும் குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் க்கு போய்ட்டான்.. ஜாகிங் கூட கட் பண்ணிட்டான்.. ஏன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா? “ என்றார் சிறு யோசனையுடன்...

“இல்ல அத்தை.. நான் தூங்கிட்டேன்.. அதான் என்கிட்ட சொல்லலை.. எனக்கு மெசேஜ் அனுப்பி இருப்பார்.. நான் தான் பார்க்கலை.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தவாறு காபியை எடுத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றாள்..

அவள் அலைபேசியை எடுத்து பார்க்க அவளுக்கு எந்த மெசேஜ் ம் அனுப்பி இருக்கவில்லை...

ஏனோ அவன் வேண்டும் என்றே தன்னை தவிர்ப்பதை போல இருந்தது..

“இல்லை.. நாமலே ஏதாவது கற்பனை பண்ணி கொள்ள கூடாது.. உண்மையிலயே வேற காரணம் எதுவும் இருக்கும்.. எனக்கு அது தப்பாக தெரிகிறது.. அவரிடமே கேட்டுக்கலாம்.. “ என்று

தன்னை சாமாதான படுத்தியவள் எப்பவும் போல சிரித்து கொண்டே தன் மாமியார்க்கு உதவி செய்ய, கலகலப்புடன் காலை உணவை எல்லாரும் முடித்து அவரவர் பணிக்கு கிளம்பி சென்றனர்...

அன்று இரவும் வசி நீண்ட நேரம் கழித்தே திரும்பி வந்தான்.. அவன் வருகைக்காக காத்திருந்த மலர் மணி பன்னிரண்டை தாண்டியதும் கண்கள் சொக்க அப்படியே உறங்கி விட்டாள்...

அடுத்த நாள் காலையிலும் எழுந்து சீக்கிரமே சென்றுவிட்டான் வசி.. இரண்டாவது நாளும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர, பேசாமல் அவனிடமே அழைத்து கேட்டு விடலாம் என்று அன்று மதியம் அவன் எண்ணுக்கு அழைத்தாள்..

ஆனால் அவள் அழைப்பு ஏற்க படவில்லை.. மீண்டும் முயற்சிக்க, திரும்பவும் அதேதான்..

ஒரு வேளை பிசியாக இருக்கானோ? என்று எண்ணியவள் மீண்டும் மாலையில் சில முறை அழைக்க, ஒரு கட்டத்தில் அழைப்பை ஏற்றவன்

“ஏய்.. கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா?.. ஒருத்தன் போனை எடுக்கலைனா எதாவது முக்கியமான வேலை இருக்கும் னு தெரியாது? சும்மா திரும்ப திரும்ப எதுக்கு கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணி கிட்டிருக்க. இடியட்.. நான் இப்ப பிசி. அப்புறம் பேசறேன்.. வை போனை.. “ என்று எரிந்து விழுந்து அழைப்பை துண்டித்தான்...

அதை கேட்டவள் அப்படியே சிலை போல நின்றாள்..

அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை.. பேசியது அவள் கணவன் தானா? இல்லை வேற யாருக்காவது அழைத்து விட்டனா? என்று மீண்டும் ஒரு முறை தன் அலைபேசியை பார்க்க அதில் மெக்கானிக் என்று அவள் கணவன் பெயரும் அவன் புகைப்படமும் சிரித்தது..

அவள் சரியான எண்ணிற்குத்தான் அழைத்திருக்கிறாள்..

“அப்படி என்றால் அவன் என் மீது கோபமாக இருக்கிறான்.. அப்படி கோபப்படும் அளவுக்கு என்ன தப்பு செய்தேன்?.. எதுக்காக இந்த பாராமுகம்? “ என்று குழம்பி போனாள்...

அவனிடமே கேட்கலாம் என்றால் அவன் வீட்டிற்கு வர தாமதமாகிறது.. போனிலும் அவனை பிடிக்க முடியவில்லை... என்னவா இருக்கும் என்று மண்டையை போட்டு கசக்கி கொண்டே நான்கு நாட்கள் ஓடி இருந்தது..

அன்று இரவு தன் இரவு உணவை முடித்து விட்டு தன் அறையில் அமர்ந்து தன் கணவனை பற்றிய யோசனையில் இருந்தவளை அவளின் அலைபேசி அழைப்பு கலைத்தது..

ஒரு வேளை தன் கணவனாக இருக்குமோ? என்ற ஆவலில் பாய்ந்து சென்று அதை எடுத்தவள் அதன் திரையில் பார்க்க மித்ரா அழைத்து இருந்தாள்...

தன் வேதனையை மறைத்து கொண்டவள்

“ஆங் சொல்லு மித்ரா.. எப்படி இருக்க? “ என்று நலம் விசாரித்தாள் மலர்..

“ஹ்ம்ம் நான் சூப்பரா இருக்கேன் மலர்... அதுவும் இந்த நாலு நாட்களில் பயங்கர சந்தோஷமா இருக்கேன்.. “ என்றாள் மித்ரா சிரித்தவாறு..

நாலு நாட்கள் எனவும் அவள் கணவன் அவளை தவிர்ப்பதும் நான்கு நாட்களாக என மனம் அவசரமாக கணக்கிட்டது...

“ஏன் னா என் வசி தினமும் என் கூட டைம் ஸ்பென்ட் பண்றான் இல்லை.. அதான்.. இப்பல்லாம் இரவு ஹாஸ்பிட்டல் ல வேலை முடிந்ததும் நேரா என் வீட்டுக்கு வந்திடறான்.. இரண்டு பேரும் ஜாலியா பேசிகிட்டு இருப்போம்..

ஆமா நீ ஏதோ M.B.A ப்ராஜெக்ட் பண்றதாகவும் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் தினமும் லேட்டா வீட்டுக்கு போறதா என்கிட்ட சொன்னான்...

மத்தபடி உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனை இல்லையே?.. வசி உன்கிட்ட நல்லாதான நடந்துக்கிறான்.. “ என்று போட்டு வாங்க முயன்றாள் மித்ரா..

மலரோ தங்கள் கதையை வெளியில் சொல்லாமல்

“அதெல்லாம் ஒன்றும் இல்லை மித்ரா.. நாங்க சந்தோஷமாதான் இருக்கோம்.. அவர் சொன்ன மாதிரி நான் கொஞ்சம் பிசியா இருக்கேன்.. “ என்று மழுப்பினாள்..

“சரியான அழுத்தக் காரி.. அப்பவும் உண்மையை சொல்கிறாளா பார்... “ என்று உள்ளுக்குள் திட்டி கொண்டாள் மித்ரா..

வசி கடந்த நான்கு நாட்களாக தினமும் காலையில் சீக்கிரம் மருத்துவமனைக்கு வந்து விடுவதும் இரவு வெகு நேரம் கழித்தே வீட்டிற்கு செல்வதையும் கவனித்தாள் மித்ரா..

தன் வேலை முடிந்ததும் அவன் அறையிலயே இருந்து அவன் பண்ணும் சில ஆராய்ச்சிகளுக்கு குறிப்பு எடுத்து கொண்டிருந்தான் வசி..

மித்ரா சொன்ன மாதிரி அவள் வீட்டிற்கு செல்லவில்லை அவன்.. தன் மனைவியின் முகத்தை பார்க்க பிடிக்காமல், அதை விட அவளை பார்த்தால் தன் உறுதி உடைந்து விடும் என்ற பயத்தால் அவளை சந்திக்க , அவள் குரலை கேட்க கூட மறுத்து அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறான்..

அதனாலயே சீக்கிரம் கிளம்பி வந்து தாமதமாக வீடு செல்வது.. அவன் எதிர்பார்த்த மாதிரியே அவன் செல்லுமுன்னே மலர் உறங்கி விடுவாள்..

குழந்தை போல உறங்குபவளையே சில நொடிகள் அவனையும் மீறி ரசித்து பின் கஷ்டபட்டு தன் மனதை கடினமாக்கி கொண்டு தான் உறங்க செல்வான்..

மித்ரா அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று அறிந்து கொள்ள எவ்வளவோ முயன்று விட்டாள்.. ஆனால் வசி வாயை திறந்து எதுவும் சொல்லவில்லை.. மலரிடம் கேட்டால் அவளும் சரியாக பதில் சொல்லவில்லை..

ஆனால் என்னவோ இருக்கு என்று மட்டும் புரிந்தது..

“ஒரு வேளை மலரிடம் நான் கலந்த ஸ்லோ பாய்சன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? அதற்கான எபக்ட் தான் இதுவா? அப்படி மட்டும் இருந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.. சீக்கிரம் நான் கலந்த விஷம் வேலை செய்யணும்.. அவர்கள் இரண்டு பேரும் பிரியணும்

அப்பதான் என் வசி என்னிடம் வருவான்..ஆமாம்... வரணும்.. என் வசி சீக்கிரம் என்னிடம் வரணும்.. “ என குரூரமாக சிரித்து கொண்டாள் மித்ரா...

வசி நடத்தும் கண்ணா மூச்சி ஆட்டம் கிட்டதட்ட ஒரு வாரம் முடிந்திருந்தது..இந்த ஏழு நாட்களில் அவன் மலர் முகத்தையோ குரலையோ கேட்க வில்லை..

மீனாட்சிக்கும் அதே யோசனைதான்.. தன் மகனிடம் கேட்டால் தன் ஆராய்ச்சி விசயமாக பிசியாக இருப்பதாக கூறி விட்டான்..

ஆனாலும் அவன் சொல்லும் காரணம் உண்மை இல்லை என தெரிந்தது அவன் அன்னைக்கு.. அதற்கு மேல் அவனை கட்டாய படுத்தி என்ன பிரச்சனை என்று கேட்க முடியவில்லை.

“இது அவர்கள் வாக்கை .. எந்த பிரச்சனையானாலும் அவர்களே தீர்த்து கொள்ள வேண்டும்...”என்று எண்ணினாலும் சிறிது நேரத்தில் மனம் மீண்டும் யோசிக்க ஆரம்பித்து விடும்..

“அப்படி என்ன பிரச்சனை இருவருக்குள்ளும்? .. மலர் அவனை அனுசரித்து செல்பவள்.. இவனோ அவள் மீது பைத்தியமாக இருக்கிறவன்.. அப்படி இருக்க வேற என்ன பிரச்சனை? “ என்று அவர் மண்டையையும் குடைந்து கொண்டிருந்தார்..

மலருக்கு இப்பொழுது தன் கணவனிடம் ஏதோ பிரச்சனை என்பது உறுதியானது.. ஆனால் என்ன பிரச்சனை என்று தான் தெரிய வில்லை.. அவள் பக்கம் இருந்து எந்த தவறும் செய்யவில்லை.. அப்படி இருக்க எதுக்காக இந்த ஒதுக்கம்? என்று யோசித்தாள்..

“எதுவானாலும் இன்றைக்கு அவனிடமே கேட்டு விட வேண்டியதுதான்.. “ என்று முடிவு செய்தவள் அடுத்த நாள் சனிக்கிழமை விடுமுறை என்பதால் அன்று இரவு உறங்காமல் நாற்காலியில் அமர்ந்து ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் சம்பந்தமான புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தவள்..

இரவு ஒரு மணிக்கு மேல் தன் அறைக்கு திரும்பி இருந்தவன் அங்கு மலர் இன்னும் உறங்காமல் தனக்காக காத்து கொண்டிருப்பதை கண்டதும் திக் என்றது ஒரு நொடி..

ஒரு வாரமாக அவளை பார்க்காமல் தவித்த கண்கள் அவளை கண்டதுமே அவளிடம் தாவி சென்றது.. அவன் இதயமோ மகிழ்ச்சியில் எகிறி குதிக்க, அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் சில நொடிகள்...

தன் புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தவள் தன்னை யாரோ உற்று பார்ப்பதை போல இருக்க டக் என்று திரும்பி பார்க்க, அங்கு தன் கணவன் நின்று கொண்டு அவளை காதலுடன் பார்த்து கொண்டிருப்பது கண்டு திகைத்தவள் வேகமாக எழுந்தாள்..

ஆனால் அடுத்த நொடி அவள் பார்த்தது கனவா ? என்பதை போல அவன் பார்வையை மாற்றி கொண்டான்.. அவளை ஒரு வெற்று பார்வை பார்த்தான்..

அவன் கண்ணில் கசிந்த காதலை கண்டதும் வேகமாக எழுந்தவள் ஓடி வந்து அவனை இறுக்கி அணைத்து கொள்ள முயல, அவனோ சட்டென்று நகர்ந்து திரும்பி நின்று கொண்டான் தன் மனதை கல்லாக்கி கொண்டு..

அதை கண்டவள் அப்படியே அதிர்ந்து போனாள்.. அவள் அணைக்க வந்தும் அவன் அவளை மறுத்து நிற்பதை கண்டவள் நொறுங்கி போனாள்...கண்கள் தானாக நீரை சொரிய உடனே தன்னை சுதாரித்து கொண்டவள்

“சாரி............” என்றாள் வேதனையுடன்..

அந்த ஒரு சாரியில் ஓராயிரம் அர்த்தமும் வேதனையும் தெரிந்தது வசிக்கு..தன்னை கண்டதும் தாவி அணைக்க வந்தவளை அப்படியே இழுத்து அணைத்து இந்த ஒரு வார பிரிவை, அவள் படும் வேதனையை போக்கி விட துடித்தது அவன் உள்ளே..

ஆனாலும் அவன் படும் வேதனை அவள் வேதனையை விட பெரிதில்லையா...

“அனுபவிக்கட்டும்..என்னை ஏமாற்றினாள் இல்லை அதுக்காக நல்லா வேதனை அனுபவிக்கட்டும்.. “ என்று எண்ணியவன் அவளிடம் எதுவும் பேசாமல் வார்ட் ரோபிற்கு சென்றான்..

தனக்கான இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு சென்றவன் குளித்து முடித்து இரவு உடையை அணிந்து கொண்டு வந்தவன் நேராக கட்டிலுக்கு சென்று படுத்துவிட்டான்...

தன் மனைவியிடம் திரும்பவும் இல்லை.. ஒரு வார்த்தையும் பேசவில்லை.. மலர் இன்னும் அதிர்ந்து போய் அப்படியே நின்று கொண்டிருந்தாள்..

அவள் தன் கணவனிடம் பேச நினைத்தது, கேட்க நினைத்தது எல்லாம் மறந்து போய்விட்டது.. சில நிமிடங்கள் அப்படியே நின்று கொண்டிருந்தவள் பின் தன்னை சுதாரித்து கொண்டு தன் கணவன் பக்கம் பார்த்து

“உங்க கிட்ட பேசணும்... “ என்றாள் வேதனையுடன்..

அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை...

“மெக்.... “ மெக்கானிக் என்று சொல்ல வந்தவள் அதை நிறுத்தி கொண்டு

“வசி.. உங்களைத் தான்.. உங்ககிட்ட பேசணும்... “ என்றாள் சற்று கோபமாக..

அவள் வசி என்று அழைத்ததில் ஒரு நொடி புருவத்தை உயர்த்தினான்.. இதுவரை மலர் அவனை வசி என்று அழைத்ததில்லை..அவனை எப்பொழுதும் மெக்கானிக் என்றும் டாக்டர் என்றும் தான் அழைத்திருக்கிறாள்..

அவள் தந்தையின் உடல்நிலை சரியில்லாத பொழுது வசி என்று அழைத்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தது நினைவு வந்தது..

இன்று அவள் வசி என்று அழைக்க அந்த அழைப்பே அவன் இதயத்தை கசக்கி பிழிந்தது..

“சே.. இவள் மட்டும் நல்லவளாக இருந்திருக்க கூடாதா? எப்படி சொர்க்கமாக இருந்த வாழ்க்கை.. இப்படி நரகமாக்கிட்டாளே.. “ என்று பல்லை கடித்தவன்

“எனக்கு தூக்கம் வருது.. எதுனாலும் காலையில் பேசு.. “ என்று சொல்லி விட்டு தன் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டான்..

அதில் கோபம் அடைந்தவள் அவனிிடம் சென்று அவன் மீது இருந்த போர்வையை இழுத்து கீழ விசிறி விட்டு

“எதுக்கு இந்த ட்ராமா? எதுக்காக வராத தூக்கத்தை வந்த மாதிரி காட்டி கொண்டு இப்படி ஆக்சன் பண்றீங்க?..ஏன் என்னை அவாய்ட் பண்றிங்க?.. நான் என்ன தப்பு செய்தேன்?... “ என்று கொஞ்சம் கோபமாக வேகமாக ஆரம்பித்தவள் கடைசியில் சுருதி இறங்கி அழுகையில் முடிந்தது...

அவளின் அழுகையை பொறுக்க முடியாதவன் எழுந்து அமர்ந்தவன்

“இப்படி அழுது எல்லாம் சீன் போடாத... உன்னை பற்றி நல்லா புரிஞ்சுகிட்டேன்.. உன் நாடகம் எனக்கு தெரிஞ்சிடுச்சு...நீதான் சரியான வேசக்காரி ஆச்சே.. “ என்றான் ஒரு ஏளன பார்வையுடன்...

அந்த பார்வையை கண்டவள் இன்னும் உடைந்து போனாள்..

“என்ன உளறீங்க?.. நான் வேசக்காரியா? அப்படி என்ன உங்களை வேசம் போட்டு ஏமாத்திட்டேன் ? “ என்றாள் கோபமாக

“ஹ்ம்ம்ம் அது நீதான் சொல்லணும்.. நீயே யோசிச்சு பார்.. நீ என்ன என்னை ஏமாத்துன என்று? “ என்று மீண்டும் உதட்டை சுழித்தான்..

“சே.. உன் வேசம் தெரியாமல் உன்னைப்போய் கா... “ என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்

“சே.. நிம்மதியா தூங்க கூட முடியலை..இதுக்குத் தான் இனிமேல் வீட்டுக்கே வரக் கூடாது.. “ என்றவன் வேகமாக எழுந்து தன் இரவு உடையுடனே கிளம்பி கதவை படீரென்று அறைந்து சாத்தி விட்டு வேகமாக கிளம்பி கீழ சென்றவன் தன் காரை எடுத்து கொண்டு வேகமாக வெளியேறினான்...

அவன் வேகமாக செல்வதையே சன்னலில் இருந்து பார்த்தவளுக்கு திக் என்றது.. “அவனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது.. “ என அவசரமாக வேண்டி கொண்டவள் பின் தன் தலையில் கை வைத்து கொண்டு அப்படியே கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள்.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ? அவள் அலைபேசிக்கு மெசேஜ் வந்ததற்கான ஒலி வந்திருக்க, ஒரு வேலை தன் கணவன்தான் சாரி சொல்லி அனுப்பி இருப்பானோ என்று ஆவலாக அதை எடுத்து பார்த்தாள்..

ஆனால் மித்ரா தான் அந்த நேரத்தில் அனுப்பி இருந்தாள்.. அதை திறந்து பார்த்தவள் அப்படியே ஷாக் ஆகி நின்றாள்..

அதில் வசி மித்ராவுடன் ஒன்றாக சோபாவில் அமர்ந்து சிரித்து கொண்டிருந்தான்.. சற்று முன் அணிந்திருந்த அதே இரவு உடை தான்.. அவளுமே இரவு உடையில்தான் இருந்தாள்..

“அப்படி என்றால் அவன் நேராக மித்ரா வீட்டிற்குத் தான் சென்றிருக்கிறான்..

அதுவும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணின் படுக்கை அறை வரைக்கும் செல்கிறான் என்றால் அதுவும் இந்த கோலத்தில்? “ என்று திடுக்கிட்டவள் அந்த புகைப்படத்தை பெரிது படுத்தி பார்க்க அவன் முகத்தில் பெரிய புன்னகை இருந்தது..

சற்றுமுன் தன்னிடம் எரிந்து விழுந்த முகம் தான் அது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்..

அந்த அளவுக்கு கனிந்து உல்லாசமக சிரிப்பதை போல இருந்தது.. மித்ராவை உற்று பார்க்க, அவளோ வசியுடன் ஓட்டி உரசியபடி அமர்ந்து இருந்தாள்.. அந்த கோலத்தில் இருவரையும் பார்க்க மலருக்கு உள்ளுக்குள் பிசைந்தது..

என்ன தான் தன் கணவன் தப்பு பண்ண மாட்டான் என்றாலும் சந்தர்ப்பம் சூழ்நிலை என்று ஒன்று இருக்கிறதல்லவா.. அது எப்படி பட்ட மகானையும் கூட தடுமாறி விழ வைத்து விடும்

வசி சாதாரண மானிடன்.. அதுவும் தன் பொண்டாட்டி மீது பைத்தியமாக இருப்பவன்.. ஒரு நாள் கூட அவள் இல்லாமல் இருந்ததில்லை.. அப்படி இருக்க இந்த ஒரு வாரமாக அவளை நாடி வராததும் இப்பொழுது மித்ராவுடன் நெருக்கமாக இருப்பதையும் கண்டு அவளுக்குள் பிசைந்தது..

கூடவே மித்ரா முன்பு சொன்ன தினமும் அவளை பார்க்க வருகிறான் என்றதும் நினைவு வர,

“ஒரு வேளை... இந்த மித்ராவுடன் உல்லாசமாக இருப்பதால் தான் நான் வேண்டாதவளாகி விட்டேனா? ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று சொல்வாங்களே... அந்த மாதிரி அறுபது நாளில் என் மீது இருந்த ஆசையும் மோகமும் விலகி விட்டதா?

அப்படி என்றால் என்னை நாடியது வெறும் ஆசைக்காகத்தானா? காதலால் இல்லையா? அவன் என்னை காதலிக்க வில்லையா? வெறும் கணவனாகத்தான் தன் கடமையை செய்தானா? “ என்று எண்ணியவளுக்கு இப்பொழுது உடல் எல்லாம் கூசியது..

அவன் தீண்டிய இடம் எல்லாம் இப்பொழுது அருவெறுப்பாக இருந்தது...

“அப்ப உண்மையிலயே அவனுக்கு மித்ராவைத்தான் பிடித்திருக்கிறதா? என்னை வெறும் கடமைக்காக, என் அப்பாவை காப்பாற்றுவதற்காக கல்யாணம் பண்ணி கொண்டு பின் அதில் இருந்து விலக முடியாமல் ஆசையும் சேர்ந்து கொள்ள என்னிடம் கணவனாக நடித்து வருகிறானா ?

அதை தானே மித்ரா அன்றும் சொன்னாள்..

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்ததாகவும் வசி என் அப்பாவை காப்பாற்றுவதற்காக யோசிக்காமல் என்னை மணந்து கொண்டதாகவும் கூறினாளே..

இப்பொழுது என் மீது இருந்த அந்த ஆசை மோகம் எல்லாம் விலகி விட, அவன் பழைய காதலி கண்ணுக்கு தெரிந்து விட்டாள் போல.. அவளுமே அவன் சந்தோஷத்துக்காக எது வேண்டும் என்றாலும் செய்வேன் என்றாளே.. அப்படி என்றால்...............? “ என்று நினைக்கையிலயே அருவெறுப்பாக இருந்தது.

“சே.. இவனைப் போய் நல்லவன் னு நம்பினேன் பார்.. நான் ஒரு மடச்சி.. “ என்று தன்னைத் தானே திட்டி கொண்டாள்.. 



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!