என் மடியில் பூத்த மலரே-27



அத்தியாயம்-27

ந்த சஷ்டி கவசம் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த முருகன் கோவிலில்

அந்த கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தின் நடுவில் ஐயர் அமர்ந்து ஏதோ பூஜைக்கான ஏற்பாடுகளை பண்ணிக்கொண்டிருந்தார்..

அது ஒரு திருமணத்திற்கான சடங்குகளுக்கான ஏற்பாடு..

ஐயர் கேட்கும் பொருட்களை எல்லாம் மலர்ந்த முகத்துடன் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார் ஜானகி... அவரின் அருகில் சுசிலாவும் நின்று கொண்டு சிரித்த முகமாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

இருவரும் ஒரே மாதிரி ரொம்பவும் வேலைப்பாடு இல்லாமல் சிம்பிளான பட்டு புடவையை அணிந்திருந்தனர்.. அவரின் அருகில் கமலா டாக்டரும் அவரின் கணவர் கண்ணனும் நின்று கொண்டிருந்தனர்...

அவர்களின் அருகில் மற்றொரு பெண்மணியும் பின் மேனேஜர் சுந்தரம் மற்றும் மாரி, முத்து என்று அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.. எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.. ஒரு வழியாக ஐயர் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து முன்னால் இருந்த ஹோம குண்டத்தை பற்ற வைத்து அக்னியை வளர்த்து சில சடங்குகளை செய்தார்.. பின் ஜானகியை பார்த்து “பொண்ணை அழைச்சுட்டு வாங்க ஜானகி மா... “ என்றார்...




ஜானகியும் சிரித்தவாறே

“அகிலா கண்ணா... அண்ணியை அழைச்சுட்டு வாடா.. “ என்று குரல் கொடுத்தார் மண்டபத்தின் அருகில் இருந்த ஒரு சிறு அறையை பார்த்து..

“இதோ ஆன்ட்டி.. “ என்று உற்சாகமாக குரல் வந்தது அந்த அறையில் இருந்து..

அதை தொடர்ந்து பட்டுபாவாடையும் அதற்கு பொருத்தமான சட்டையும் அணிந்து இரண்டு ஜடையை பின்னி அதில் ஒரு ஜடையில் மல்லிகை சரத்தை அணிந்து ஒரு சின்ன பெண் முன்னே வர , அவளை தொடர்ந்து மணப்பெண் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து வந்தாள் தலையை குனிந்தவாறே...

அரக்கு கலரில் அளவான் தங்க நிற பார்டரில் பட்டுபுடவையும், நீண்ட பின்னிய ஜடையும் அதில் தலை நிறைய மல்லிகை பூவையும் வைத்து மிக எளிமையான அலங்காரத்திலும் அழகாக இருப்பாள் போல என்று என்ன வைத்தது அவளை முன்பு அறியாதவர்களுக்கு..

மண்டபத்தின் நடுவில் வந்ததும் ஐயர் சொன்ன இடத்தில் அமர்ந்தாள் மணப்பெண்... தலையை மட்டும் நிமிர்த்தாமல் குனிந்தபடியே ஐயர் சொன்ன சடங்குகளை செய்தாள்... பின் “பொண்ணோட தாய் மாமா இல்லைனா மாமா முறையில் யாராவது இருந்தால் வரச் சொல்லுங்க... “ என்றார் ஐயர்...

அதை கேட்டதும் இதுவரை அமைதியாக அருகில் நின்று கொண்டிருந்த அந்த பெண்மணி மண்டபத்தின் மறுபக்கத்தை பார்த்து

“நிகிலா... சீக்கிரம் வா.. ஐயர் கூப்பிடறார்... “ என்றார்...அவரின் குரலை கேட்டு ஒரு நெடியவன் வேகமாக ஓடி இல்ல நடந்து வந்தான்..

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தவனையே அந்த புதிய பெண்மணி இமைக்காமல் பார்த்து இருந்தார்... அந்த நெடியவன் நான்கே எட்டியில் ஐயர் இருக்கும் இடத்திற்கு வந்திருந்தான்...

மணப்பெண் பக்கத்தில் யாரும் மாமா முறைக்கு இல்லாததால், மாப்பிள்ளையின் நண்பனான நிகிலனை மணப்பெண்ணிற்கு இன்ஸ்டன்ட் மாமாவாக்கியிருந்தனர்..

அதே மாதிரி மாப்பிள்ளையின் இன்னொரு நண்பனான் வசி என்கிற வசீகரனும் முன்பே வந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை தன் ஐபோனில் பதிந்து கொண்டிருந்தான்.. மிகவும் எளிமையான நடக்கும் திருமணம் என்பதால் கேமரா மேன்,வீடியோ எதுவும் இல்லாமல் தங்கள் கையில் இருந்ததை வைத்து புகைப்படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தான் வசி..

நிகிலனை கண்டதும் ஐயர்,

“நீங்கதான் பொண்ணுக்கு மாமா முறையா?? இந்த மாலையை பொண்ணு கழுத்துல போடுங்க.. போட்டு இந்த திருநீற்றையும் வைத்து விடுங்க..” என்றார்...

அதற்குள் அந்த மணப்பெண் எழுந்து நின்றிருக்க, மாலையை வாங்கியவனுக்கோ தயக்கமாக இருந்தது.. தான் எப்படி போடுவது என்று..

அதை புரிந்து கொண்ட ஐயர்

“தம்பி.. இது தாய் மாமா தான் போடணும்.. மாமானா அந்த பொணணுக்கு எல்லாமா நீங்க இருக்கீங்கனு அர்த்தம்.. நாளைக்கு எந்த ஒரு கஷ்டம்னாலும் நீங்க தான் செய்யனும்.. அதுக்குதான் மாமாவுக்கு முதல் மரியாதை..

நீங்க அந்த ஸ்தானத்துல இருந்துதான் போடறீங்க.. அதனால தயங்காம போடுங்க.. “என்று விளக்கினார்..

அவனும் தலையை ஆட்டிய படியே மாலையை வாங்கி அந்த மணப்பெண்ணை பார்க்க அவளோ இன்னும் குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்...

“மறுமகளே.. தலைய நிமிர்ந்து கொஞ்சம் எங்களை எல்லாம் பாருமா... நாங்களும் உன் முகத்தை பார்க்க எவ்வளவு நேரமா காத்துகிட்டு இருக்கோம்.. அதோட மாலை போடணும் இல்லை.. “ என்றார் அந்த புதிய பெண் கொஞ்சம் மிரட்டும் குரலில் ...

அவரின் அந்த கணத்த குரலை கேட்டு கொஞ்சம் பயத்துடன் தலையை நிமிர்த்தினாள் மணப்பெண்...

மணக்கோலத்தில் மிகவும் அழகாக இருந்தாள்..

அவளின் முகத்தில் இருந்த பயத்தை கண்டு ஜானகி,

“நீ பயந்துக்காத பாரதி மா ... சிவா எப்பவம் அப்படித்தான்.. கொஞ்சம் மிரட்டற மாதிரி தான் பேசுவா.. நீ கண்டுக்காத..” என்று சிரித்தார்...ஜானகியையும் அந்த புதிய பெண்ணையும் பார்த்து புன்னகைத்தாள் மணக்கோலத்தில் இருந்த பாரதி..

“அப்பாடா.. இப்பதான் மறுமகளை பார்க்க முடிந்தது.. பொண்ணு லட்சணமா , மஹாலட்சுமியாட்டம் இருக்கா... நீ கொடுத்து வச்சவ ஜானகி..” என்று சிரித்தார் அந்த சிவா என்கிற சிவகாமி.. ஜானகியும் சிரித்துக் கொண்டே

“நிகிலா.. நீ மாலையை போடுப்பா.. “ என்றார் அந்த நெடியவனை பார்த்து..

அவனும் தன் கையில் இருந்த மாலையை போட்டு, திருநீற்றை பாரதியின் நெற்றியில் வைத்துவிட்டான்..

பின் பாரதியைப் பார்த்து,

“ஐயர் சொன்ன மாதிரி உனக்கு நான் இருக்கேன் மா.. எதுனாலும் பார்த்துக்க.. நீ கவலைப்படாத.. “என்றான்..

அவளும் தலை அசைத்து புன்னகைத்தாள்..

பின் அவளை ஒரு ஓரமாக நிற்க சொல்ல அவள் ஜானகியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.. ஜானகிக்கு அவளை பார்க்க பார்க்க திகட்டவில்லை... அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தார்...

பின் ஐயர் மாப்பிள்ளையை வரச்சொல்ல அதற்கும் அந்த நிகிலனே ஓடி மாப்பிள்ளையை அழைத்து வந்தான்..

பட்டுவேஷ்டி பட்டுசட்டையும் தோளில் ஒரு துண்டும் அணிந்து ஆறடி உயரத்தில் கம்பீரமாக நடந்து வந்தான் மணமகன்.. அந்த அதிகாலையில் கிழக்கில் இருந்து உதித்த அந்த ஆதவனும் அப்பொழுது தான் எட்டி பார்க்க, அதே கம்பீரத்துடன் அவன் நடந்து வந்தான்...

இதுவரை மணப்பெண்ணை பார்த்து பூரித்திருந்த ஜானகி இப்பொழுது மணமகனை பார்க்க கண்கள் தாவின.. அப்படியே அசந்து நின்றார் தன் மகன் ஆதியை மணக்கோலத்தில் கண்டு...

அப்படியே அந்த ஆதவனே நேரில் வருவதை போல இருந்தான் அவன்.. எல்லாரும் மணமகன் வந்த திசையை பார்த்து பூரித்திருக்க பாரதியும் மெதுவாக தலையை நிமிர்ந்து எதிர் திசையில் பார்த்தாள்...

அவள் சிறுவயதில் இருந்தே காதல் கொண்டு கொஞ்சி மகிழ்ந்து வரும் அவள் காதலனான அந்த ஆதவனே நேரில் வந்ததை போல இருந்தான் அவன்.... அவனையே இமைக்க மறந்து பார்த்து இருந்தாள் பாரதி..

“என்ன மறுமகளே... எங்க பையனை முழுங்கிடற மாதிரி பார்க்கற.. கண்ணு வைக்காத.. இப்பயே பார்த்துட்டா அப்புறம் எப்படி பார்ப்பதாம்.. மீதி கொஞ்சம் வை.. “என்று கிண்டலடித்தார் அருகில் நின்ற சிவகாமி...

அதை கேட்டு கன்னம் சிவந்த பாரதி தலையை குனிந்து கொண்டாள்..

ஆதி அருகில் வரவும் அவனையும் அமர வைத்து மாப்பிள்ளைக்கான சடங்குளை செய்தார் ஐயர்... பின் மாப்பிள்ளையின் தாய் மாமா வை வரச் சொல்லுங்க என்று சொல்லவும் ஜானகி அருகில் நின்றிருந்த மேனேஜர் சுந்தரத்தை வரச் சொன்னார்...

அவரும் தயங்கியபடி அருகில் வரவும்

“நீங்க மாலைய போடுங்க சுந்தரம்... “ என்றார் ஜானகி.. அதை கேட்டு பதறிய சுந்தரம்,

“ஐயோ!! நான் போய் எப்படி மேடம் சாருக்கு..... “ என்று இழுத்தார்...

“சுந்தரம்... அவங்கப்பா இறந்த அனனைக்கு நீங்க மட்டும் இல்லைனா நாங்க இன்று இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.....என்னுடைய கூட பிறந்தவனா அன்னைக்கு அந்த சூழ்நிலையை சமாளிச்சு, இன்னைக்கு வரைக்கும் ஆதிக்கு துணையா நிக்கறீங்க.. இத தவிர வேற என்ன வேணும் ஒரு தாய் மாமன் ஸ்தானத்திற்கு... தயங்காமல் மாலையை போட்டு ஆசிர்வாதம் பண்ணுங்க.. “ என்று சிரித்தார்..

அதை கேட்டு சுந்தரம் நெகிழ்ந்து, கண் கலங்க, மாலையை வாங்கி ஆதியின் கழுத்தில் போட்டு திறுநீற்றை வைத்து மனதார ஆசிர்வாதம் பண்ணினார்...

பின் அவன் அமரவும் மணப் பெண்ணையும் வரச்சொல்லி அவனின் அருகில் அமர சொன்னார்..

அதுவரை அலட்டிக்கொள்ளாமல் இருந்த பாரதிக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.. கால்கள் பின்னிக்கொள்ள அந்த அகிலாவே அவளை அழைத்து கொண்டு அவனுக்கு அருகில் சென்று அவளுக்கு அமர உதவி செய்தாள்..

ஒருவித பயம் மற்றும் படபடப்புடன் அவன் அருகில் கொஞ்சம் இடைவெளி விட்டே அமர்ந்தாள் பாரதி..

சிறிது நேரம் ஐயர் இருவருக்கும் சில சடங்குளை செய்ய வைத்தார்..

பாரதி அவனை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ இவள் பக்கம் திரும்பவே இல்லை.. முகத்தில் அதே கடுகடுப்புடன், உடல் விரைத்து இருந்தான்.. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உதட்டில் ஒரு போலியான புன்னகையுடன் இருந்தான்...

அவன் மன நிலை அருகில் அமர்ந்திருந்த பாரதிக்கு நன்றாக புரிந்தது... அதை கண்டு அவள் இன்னும் பயந்தாள்... பின் அவளும் தன் உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொண்டு நடக்கிறது நடக்கட்டும் என்று ஐயர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தாள்..

பின் ஐயர் ஜானகியை பார்த்து

“ஜானகி மா.. மாங்கல்யத்தை கொடுங்க.. “ என்கவும் ஜானகி அருகில் நின்றிருந்த கமலாவை பார்க்க அவர் ஐயரின் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த அந்த பளபளவென்று மின்னிய தாலிக்கொடியை கழட்டி கண்களில் ஒற்றிக் கொண்டு ஐயரிடம் கொடுத்தார்..

புது தாலியை மணப்பெண்ணுக்கு நேரடியாக போட்டால் அதன் வீரியம் தாங்க முடியாது என்றும் அதையே ஆதர்ஷ தம்பதிகளாக நீண்ட நாள் வாழும் சுமங்கலி பெண்ணிடம் அந்த தாலியை சில நாட்கள் அணிவிக்க செய்து மணப்பெண்ணிற்கு கட்டுவது கிராமங்களில் ஒரு வழக்கமாகும்...

கமலாவும் அவர் கணவர் கண்ணனும் இருவருமே மன ஒத்த தம்பதிகள்.. அதனால் அந்த தாலியை கமலாவை அணிய சொல்லி இருந்தார் ஜானகி..கம்லா கொடுத்த தாலிக்கொடியை வாங்கி அதன் மேல் மஞ்சள் நூலை சுற்றினார் ஐயர் ..

குனிந்திருந்த பாரதியின் கண்களில் பட்டது அந்த தாலிக்கொடி.. அதை கண்டதும் மனதினுள் இனம் புரியாத பரவசம் அவள் உள்ளே.. அதே நேரம் ஒரு வேளை இது அந்த ஷ்வேதா அணிந்திருந்ததோ என்ற ஐயம் வர முகத்தில் ஒரு கலக்கத்துடன் ஜானகியை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி..

அவளின் மன நிலையை புரிந்து கொண்ட ஜானகி இல்லை என்று தலையை ஆட்டினார்..

அவளுக்குள் நிம்மதி பரவியது.. ஏனோ அந்த ஷ்வேதா அணிந்திருந்த, அவள் கழட்டி வீசியதை தான் அணிய அவளுக்கு மனம் வரவில்லை..அதனாலயே ஜானகியை கலக்கத்துடன் பார்த்தாள்..

அதே எண்ணம் தான் ஜானகிக்கும்.. அந்த தாலி செய்த நேரம் சரியில்லை போல என்று எண்ணியவர் அதை அழித்து மேலும் பணம் கொடுத்து அரை பவுனில் 100 தாலி செய்ய வைத்து நூறு தம்பதிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் இதே நாளில்...

அவர்களின் திருமணத்திற்கான எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டிருந்தார்.. அதோடு அந்த முருகன் கோயிலில் அன்று முழுவதும் அன்னதானமும் மேலும் இன்னும் சில அனாதை இல்லங்களில் அன்று முழுவதுக்குமான உணவுக்கான செலவை அவரே ஏற்று கல்யாண சாப்பாடு எல்லாருக்கும் போட வைத்திருந்தார்...

கோடி கணக்கில் செலவு பண்ணி ஆசை ஆசையாக தன் மகனுக்கு பண்ணிய முதல் திருமணம் நிலைக்காமல் போகவும் இந்த முறை மிகவும் சிம்பிளாக அந்த வேலனின் சன்னதியில், மிகவும் வேண்டியவர்கள் சில பேர் முன்னிலையில் மிக முக்கியமான சடங்குகளை மட்டும் செய்யுமாறு செய்திருந்தார் ஜானகி...

அதோடு 100 தம்பதியருக்கு திருமணம் என்று ஏற்பாடு செய்திருந்தார்... அட்லீஸ்ட் அவர்களின் மனதார வாழ்த்துக்களாவது தன் பையனின் வாழ்வில் ஒளியை ஏற்றட்டும்.. என்று வேண்டிக் கொண்டார்...

ஐயர் மஞ்சள் நூலை சுற்றி ஒரு தட்டில் தேங்காயின் மேல் அந்த தாலிக்கொடியை வைத்து அதற்கு பூ போட்டு சில மந்திரங்களை சொல்லி ஆதியையும் பாரதியையும் அதற்கு பூஜை செய்ய வைத்தார்...

பின் அந்த மாங்கல்யத்தை பெரிய தாம்பாலத்தில் வைத்து அருகில் நின்றிருந்த அகிலாவிடம் கொடுத்து அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவரச் சொன்னார்.. அதே மாதிரி இன்னொரு தட்டில் இருந்த அட்சதையை அருகில் நின்ற நிகிலனிடம் கொடுத்து அனைவரிடமும் கொடுக்க சொன்னார்..

பாரதி மெல்ல நிமிர்ந்து அங்கு இருந்தவர்களை பார்க்க, எல்லாருமே ஆதியின் பக்கத்தில் இருந்து வந்திருந்தவர்கள்.. தனக்காக நிக்க கமலா மேடமும் கண்ணன் டாக்டர் மட்டுமே இருப்பதை காணவும் அவளுக்கு நெஞ்சை அடைத்தது...

தன் குடும்பத்தில் அத்தனை பேர் இருக்க, ஏன் அவங்க உறவினர்கள்,பங்காளிகள் என்று அவள் ஊரே அவள் திருமணத்திற்கு வந்திருப்பர்... “அவர்களை எல்லாம் விட்டு, யாருக்கும் தெரியாமல் இப்படி அனாதை மாதிரி தனியாக தானே நின்னு தாலி வாங்கிற மாதிரி பண்ணிட்டியே முருகா...” என்று புலம்பினாள் மனதுக்குள் பாரதி..

ஜானகி எதேச்சையாக பாரதியின் முகத்தை காண, அவள் முகத்தில் இன்னும் ஒரு கலக்கமும் வேதனையும் ஏதோ தப்பு பண்ற மாதிரியும் இருந்தது.. அதற்கான காரணத்தை புரிந்து கொண்டவர் உடனே தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்...

மறுபக்கம் அழைப்பை ஏற்றதும்

“சொல்லுமா ஜானகி.. எப்படி இருக்க?? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?? “ என்றார் தர்மலிங்கம்..

தன் அப்பாவின் குரலை கேட்டதும் துள்ளி குதித்தது பாரதியின் மனம்...வேகமாக தலையை நிமிர்த்தினாள் பாரதி.. இதுவரை சோகமாக இருந்தவளின் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் மின்னியது...

அதை கண்டு சிரித்த ஜானகி தொடர்ந்து பேசினார்..

“அண்ணா. ஒரு சின்ன உதவி வேணும்.. “ என்று பீடிகை போட்டார்..

“அது என்னமா உதவி அது இதுனு. நீ இந்த அண்ணன் கிட்ட எதயும் உரிமையோட கேட்கலாம்... கேள்.. உனக்கு என்ன வேணும் என்று.. “ என்று சிரித்தார்...

அதை கேட்டு மனம் நெகிழ்ந்தது ஜானகிக்கு.. இப்படி பட்டவரை ஏமாற்றுகிறமே.. என்று குற்ற உணர்வு எழுந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி நல்லதுக்கு தானே செய்கிறோம் என்று தன்னை சமாதான படுத்தி கொண்டு தொடர்ந்தார்...

“அது வந்து... அண்ணா.. நான் ஒரு கல்யாணத்தில இருக்கேன்... பையன் எனக்கு ரொம்ப தெரிஞ்ச வேண்டிய பையன்.. அந்த பொண்ணு சைட் ல நெருங்கியவங்கனு யாரும் இல்லை... நான் பையன் சைடுங்கிறதால அந்த பொண்ணு பக்கத்துல நிக்க முடியலை. அவளுக்கு தனக்கு யாரும் இல்லையே எங்கிற வருத்தம் போல.. நீங்க அவளுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க.. அவளும் நம்ம பாரதி மாதிரி தான் னு வச்சுக்கங்க... ஆசிர்வாதம் பண்றீங்களா?? “ என்றார்..

“அடடா.. இதுக்கு எதுக்குமா இவ்வளவு தயக்கம்.. தாராளமா..அந்த பொண்ணும் என் பொண்ணு மாதிரிதான் மா... நீ போன என் பொண்ணு கிட்ட கொடு.. “ என்றார்...

ஜானகியும் அலைபேசியை பாரதி கிட்ட கொடுக்க தர்மலிங்கம் தொடர்ந்தார்..

“சின்ன பாப்பா... நீ உனக்கு யாரும் இல்லைனு நினைச்சுக்காதா... உனக்கு அப்பா, அம்மா, ஆயா உன் தம்பி, தங்கை னு எல்லாரும் இருக்கோம் டா... நீ முன்னாடியே சொல்லி இருந்தால் நாங்கள் எல்லாருமே அங்க வந்து உன் கல்யாணத்தை ஜாம் ஜாமுனு நடத்தி இருக்கலாம்..

இப்பவும் ஒன்னும் இல்லை டா. நீ வருத்தப்டாத.. மாப்பிள்ளை ஜானகி பக்கம்னா கண்டிப்பா தங்கமானவரா தான் இருப்பார்... ஏனா என் தங்கச்சி அந்த மாதிரி .. உன்னை மாப்பிள்ளை நல்லா பார்த்துக்குவார்... நீ தயங்காமல் தாலிய வாங்கிக்க.. அப்பா நான் இருக்கேன்.. எங்க எல்லாரோட ஆசிவாதமும் எப்பவும் உனக்கும் மாப்பிள்ளைக்கும் இருக்கும்... நீ கலங்காத .. போன மாப்பிள்ளையிடம் கொடு மா... “ என்றார்.

அவளும் “ரொம்ப நன்றி பா... “ என்று அவள் குரலை அவர் அடையாளம் தெரிந்து கொள்ளாமல் மெல்ல முனகி அலைபேசியை ஆதியிடம் நீட்ட அவன் அதை வாங்கியதும்,

“மாப்பிள்ளை.. எங்க பொண்ணை நல்லபடியா பார்த்துக்கங்க...பொண்ணுக்கு யாரும் இல்லனு நினைச்சிடாதிங்க... நாங்க எல்லாம் இருக்கோம்.. இனிமேல் எல்லா சீர்வரிசையும் நாங்க பார்த்துக்கறோம்.... நீங்க எல்லாரும் எங்க ஊருக்கு வரணும்.. யாரும் இல்லைனு நினைக்காதிங்க.. “என்றார்..

அதை கேட்டதும் ஆதியே கொஞ்சம் உருகிப் போனான்... யாருனே தெரியாத பொண்ணுக்கு இப்படி உதவ வர்ராரே என்று ... அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன்

“ஹ்ம்ம் சரிங்க மாமா... உங்க பொண்ணை நான் பத்திரமா பார்த்துக்கறேன்.. “ என்றான்.. பின் பாரதியின் அம்மா, ஆயா என்று அனைவரும் பாரதிக்கு வாழ்த்து சொல்லி ஆசிர்வாதம் பண்ண பாரதிக்கு தன் குடும்பத்தையே நேர்ல பார்த்த மாதிரி இருந்தது... முகத்தில் அப்படி ஒரு நிம்மதி, மகிழ்ச்சி பரவியது...

தன் குடும்பத்துக்கு தெரியாமல் இப்படி ஒரு காரியம் பண்றமே .. என்று தன் மனதை அரித்து வந்த பாரம் நீங்கி இப்பொழுது முழு மனதாக அந்த திருமணத்தில் ஒன்ற முடிந்தது அவளுக்கு...

இதுக்கெல்லாம் காரணமான ஜானகியை பார்த்து கண்களால் நன்றி சொல்ல ஜானகியும் நான் இருக்கேன் என்று கண்களால் ஜாடை செய்தார்...

இதை கண்ட சுசிலா மிகவும் வியந்து

“ஹே.. கலக்கிட்ட ஜானு... எப்படி உனக்கு இப்படி ஒரு ஐடியா கிடைச்சது?? இப்பதான் பாரதி முகத்துல சிரிப்பையே பார்க்க முடிஞ்சுது... “என்று அவரை கட்டிக் கொண்டார்...

“ஹீ ஹீ ஹீ எல்லாம் என் மறுமகளோட ட்ரெயினிங் தான்... “ என்று பாரதியை பார்த்து சிரித்தார்...

“என்னமோ போ... நீ ரொம்பவும் முன்னேறிட்ட.. உலகமே தெரியாமல் இருந்த ஜானகியா நீ.. இப்ப மட்டும் ராம் அண்ணா இருந்தால் ரொம்ப சந்தோசப்படுவார்..

ஹே.. நீதான் இப்ப பெரிய ஆள் ஆகிட்டியே... அவருக்கும் ஒரு போனை போடேன்.. அவர் கிட்டயும் ஆசிர்வாதிம் வாங்கிடலாம்... “என்று கண்ணடித்தார்..

“கிண்டலா டி உனக்கு? “ என்று அவரை அடிக்க எல்லாரும் சிரித்தனர்..

“ஹ்ம்ம்ம் அவர் எப்பவும் என் கூடத்தான் இருக்கார் சுசி.. இப்பவும் அவர் பையன் கல்யாணத்தை கண் குளிர பார்த்துக் கொண்டிருக்கார்..” என்று சிரித்தார் ஜானகி கண்களில் ஆனந்த கண்ணீருடன்...

ஆதிக்குமே தன் அன்னையின் அந்த திடீர் செயல் நம்ப முடியாததாக இருந்தது ...

அதற்குள் அகிலா எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கி திரும்பி வந்து அந்த தட்டை ஐயரிடம் கொடுத்தாள்.. அதை வாங்கிய ஐயர் , நாத்தனார் முடிச்சு யார் போடறது என்கவும்

“நான்தான்... நான் தான்..” என்று துள்ளி குதித்தாள் அகிலா...

அதை கண்ட சிவகாமி

“ஹே... பறக்காத டீ..உனக்குத் தான் அந்த சான்ஸ்.. “ என்று சிரித்தவர்

“ஜானகி, நீ இந்த வாலிடம் நாத்தனார் முடிச்சு அவதான் போடணும்னு சொன்ன நாள் ல இருந்து இவ கால் தரையில நிக்கல... நாத்தனார் முடிச்சுனா என்ன?? அதை எப்படி போடறதுனு ஒரே நச்சரிப்பு.. அதோட ஒரு நூலை எடுத்து அதுக்கு ப்ராக்டிஸ் வேற.. “ என்று சிரித்தார் சிவகாமி

அதை கேட்டு தன் அம்மா வை முறைத்தாள் அகிலா..

“சே!! இப்படி மானத்தை வாங்கறாங்களே இந்த அம்மா..” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்..

“அகிலா கண்ணா... நீ கவலைப்படாத... நீ நாத்தனார் முடிச்சு போட வரிசையா நிறைய சான்ஸ் இருக்கு... “ என்று ஜானகி அருகில் நின்றிருந்த நிகிலனையும், வசீகரனையும் பார்த்து சிரித்தார்....

அதற்கு வசி இயல்பாக சிரிக்க, நிகிலனோ அகிலாவை பார்த்து முறைத்தான்..

“வாவ்.. சூப்பர் ஆன்டி.. அப்ப அதுக்குள்ள நான் நல்லா ப்ராக்டிஸ் பண்ணிக்கறேன்.. “ என்று சிரித்தாள்.. அதை கேட்டு அனைவரும் சிரிக்க, ஐயரும் சிரித்தவாறெ பின்னால் வந்து நில்லுமா என்றார்..

அவளும் பாரதியின் பின்னால் சென்று நின்று கொள்ள, கமலாவும் பாரதிக்கு உதவ என்று பாரதியின் அருகில் நின்று கொள்ள , ஐயர் அந்த மாங்கல்யத்தை எடுத்து ஒரு முறை வேண்டிக் கொண்டு ஆதியின் கையில் கொடுத்து அந்த தாலிக்கொடியை மாட்டி அதன் பின்னால் இருந்த மஞ்சள் கயிற்றில் முடிச்சிட சொன்னார்...

அதை கையில் வாங்கியதும் அவன் உடல் இன்னும் இறுகியது..

”எனக்கு உங்களை பிடிக்கலை.. அதுவும் ஏற்கனவே ஒருத்தியோடு வாழ்ந்தவனுக்கு இரண்டாம் தரமா என்னால வரமுடியாது.. நான் என் காதலனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் “ என்ற பாரதியின் குரல் அவன் காதில் ரீங்காரமிட, அவன் கை முஷ்டி இறுகியது... ஆனாலும் தன் உணர்ச்சிகளை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தி கொண்டு பாரதியை பார்த்தான்..அவள் இன்னும் தலை குனிந்து கொண்டிருந்தாள்..

அவன் தாலியை கட்டாமல் அவளையே பார்த்து இருக்க, பாரதி மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்...

அவளின் அந்த பார்வை அவன் உள்ளே பல மாற்றங்களை ஏற்படுத்தியது...அவளின் பார்வை அவனுக்கு சம்மதம் தெரிவிப்பதை போல இருக்க இதுவரை விரைத்திருந்த அவனுடல் மெல்ல இளகியது.. முகத்தில் இருந்த கடுகடுப்பு குறைந்து மனம் கொஞ்சம் இலேசானது..

அந்த இளகிய மனதுடன் அவள் கழுத்தில் அந்த மாங்கல்யத்தை அணிவித்து பின்னால் இரண்டு முடிச்சிட்டான்...

பாரதி அந்த முருகனிடம் மனதார வேண்டிக் கொண்டாள்.. “எத்தன ஜென்மம் எடுத்தாலும் இவனே தன் கணவனாக வர வேண்டும்.. நாங்கள் இருவரும் இணைந்து இருக்க வேண்டும்... “ என்று மனம் நிறைந்து வேண்டிக் கொண்டு அவன் தாலியை வாங்கிக்கொண்டாள்..

அவன் கை படவும் சிலிர்த்தது அவளுக்கு.. ஆதிக்கும் அதே நிலைதான்..அவனுள் பரவிய அந்த சிலிர்ப்புடன் அவன் இரண்டு முடிச்சுகளிட தன் வாய்ப்புக்காக காத்து கொண்டிருந்த அகிலா

“அண்ணா... அடுத்தது நான் போடனும்.. அதையும் நீங்களே போட்டிராதிங்க.”. “ என்று சிரித்தாள்..

அவனும் சிரித்துக் கொண்டே கையை எடுக்க அகிலா மூன்றாவது முடிச்சான நாத்தனார் முடிச்சை இறுக்கி போட்டு வெற்றி கழிப்புடன் நிமிர்ந்தாள்...

அவளின் செயலை கண்டு அனைவரும் சிரித்தனர்.. அருகில் இருந்து இந்த திருமண சடங்குகளை கண்டு இதுவரை விரைத்து கொண்டு நின்றிருந்த நிகிலன் கூட தன்னை மறந்து சிரித்தான்....

அனைவரும் அட்சதையை தூவி மணமக்களை ஆசிர்வதித்தனர்...

பின் ஆதியை பாரதியின் மாங்கல்யத்திலும் நெற்றிலும் குங்குமத்தை வைக்க சொல்லவும் அவனும் அதையே செய்தான்.. பாரதி அவனின் ஒவ்வொரு செய்கையும் அனுபவித்து தன் மனதில் பத்திரமாக பூட்டிக் கொண்டாள்..

பின் மாலை மாற்றி ஒருவர் கையை ஒருவர் பிடித்து அக்னியை வலம் வர

அனைவரும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை கண்டு மகிழ்ந்தனர்.. ஜானகியும் சுசிலாவும் மகிழ்ச்சியில் திலைத்தனர்.. இப்படி ஒரு நாள் தங்கள் மகனின் வாழ்வில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையே இல்லாமல் இருந்த அந்த இரண்டு தாய்களுக்கும் மீண்டும் தங்கள் மகனை மணக்கோலத்தில் காணவும் மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தனர்....

அருகில் நின்ற சிவகாமியும் அவர்களையே ரசித்துக் கொண்டிருந்தார்... அதை தொடர்ந்து அவரின் பார்வை அருகில் மாப்பிள்ளை தோழனாக நின்று கொண்டிருந்த நிகிலனிடம் சென்றது. அவனும் பட்டு வேஷ்டி சட்டையில் ஆதியை விட சற்று உயரம் அதிகமாக மிலிட்டரி கட்டுடன் கம்பீரமாக நிக்கும் அவனையே ரசித்தார்...

அவரின் கண்களில் ஏதோ ஒரு ஏக்க பார்வை இருந்தது அவனை காண்கையில்... நிகிலனும் அவரை பார்க்க அவரின் கண்களில் தெரிந்த அந்த ஏக்கத்தை, ஆசையை கண்டவன் அவரை பார்த்து முறைக்க, அதை கண்டு சிவகாமி அவசரமாக தன் பார்வைய மாற்றிக் கொண்டார்... பின் மணமக்களையே ரசிக்க ஆரம்பித்தார்...

அடுத்து பாத பூஜை செய்ய என்று மாப்பிள்ளை, பெண் இருவரின் பெற்றொரை வரச் சொல்ல, ஜானகி தயங்கி நின்றார்...

ஆதி அவர்களை பார்த்து,

“ஜானகிமா. சுசிலா மா , இரண்டு பேரும் இப்படி வாங்க.. நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாம்... அதனால ரெண்டு பேருமே இங்க வந்து நில்லுங்க.. “ என்று அழைத்தான்..

இருவரும் மேலும் தயங்கி நிற்க, ஐயர்

“தயங்காமல் வாங்கம்மா.. நீங்க ரெண்டு பேரும் தான் அவருக்காக இருக்கீங்க.. உங்களுக்கு பாத பூஜை செய்வதில் தப்பில்லை... “ என்று அழைக்கவும் இருவரும் அவன் அருகில் வந்தனர்...

அவர்களின் கால்களுக்கு நீரை விட்டு கையால் துடைத்து, பின் ஐயர் கொடுத்த குங்குமத்தை வைத்து அவர்களின் காலில் விழுந்தான்.. அதை கண்டு இருவரின் மனமும் நிறைந்து நின்றது..இருவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர்... இருவரும் அட்சதை போட்டு ஆசிர்வதித்து பின் அவனை தூக்கி

“எங்க ராஜா... நீ எப்பவும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கனும்..நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இணை பிரியாமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழணும்.. “ என்று வாழ்த்தினர்...இதை கண்ட பாரதியின் மனமும் நிறைந்து இருந்தது... 




பின் பாரதியின் பெற்றொரை வரச் சொல்ல, ஒரு நொடி பாரதியின் கண்கள் கலங்கின.. அதற்குள் கமலாவும் கண்ணனும் அருகில் வர,

கமலா பாரதியை கட்டி அணைத்து,

“பாரதி.. நீ உன் அப்பா, அம்மா, குடும்பத்தை எவ்வளவு மிஸ் பண்றனு தெரியும்.. கவலைப்படாத.. சீக்கிரம் எல்லாம் சரியாகும்.. அவங்க கூட நீ ஒன்னா இருக்கலாம்.. இன்னைக்கு எங்களயே உன் அப்பா அம்மாவா நினைச்சுக்கோ...அவங்க இடத்தில இருந்து நாங்க உனக்கு எல்லாம் செய்யறோம்... நீயும் எனக்கு பொண்ணுதான்.. “ என்று தழுதழுத்தார்.கமலா..

“ஐயோ!! மேடம்... நீங்க சொல்லாட்டியும் எனக்கு நீங்களும் சாரும் அம்மா அப்பா மாதிரிதான்... எனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கீங்க... உங்களை வணங்குறதில எனக்கு ரொம்ப சந்தோசம்.. அட்லீஸ்ட் நீங்களாவது என் பக்கத்தில் இருந்து வந்திருக்கீங்களே.. அதுவே நம்ம ஊரே வந்து என்னை ஆசிர்வாதம் பண்ற மாதிரி...” என்று அவரை கட்டிக்கொண்டாள்...

திருமண ஏற்பாட்டை செய்யும் பொழுதே முதலில் கமலாவிடம் சொல்லி விட்டார் ஜானகி.. ஆனால் பாரதி இருக்கும் இந்த நிலையில் அதுவும் தர்மலிங்கம் இந்த செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வார்?? .. மறுபடியும் அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயந்தே பாரதியின் வீட்டில் இந்த திருமணத்தை பற்றி சொல்லவில்லை.. பாரதியும் சொல்ல வேண்டாம் என்று மறுத்து விட்டாள்..

ஆனால் கமலாவிடம் சொல்லும் பொழுது கமலாவிற்கு ரொம்ப சந்தோஷம்..

“ரொம்ப தாங்க்ஷ் ஜானகி.. பாரதிக்கு இப்படி ஒரு வாழ்வு அமைச்சு கொடுத்ததுக்கு.”. என்று மகிழ்ந்து போனார்...

பாரதி பக்கம் யார் நிப்பது என்று வரும்பொழுது சுசிலா தானே பாரதிக்கு பெற்றொர் ஸ்தானத்தில் நிற்பதாக கூற, ஆதி மறுத்து விட்டான்..

“எனக்கு இரண்டு அம்மாவும் வேணும்.. என்னால் ஒருத்தரை விட்டு இன்னொருத்தரை பிரிச்சு பார்க்க முடியாது… இரண்டு பேருமே எனக்கு அம்மாவாதான் இருக்கணும்.. “ என்று மறுத்து விட்டான்...

அப்பொழுது தான் கமலா நாங்களே பாரதிக்கு பெற்றோரா இருக்கோம் என்று சொல்லி கண்ணனையும் அழைத்து கொண்டு நேற்றே வந்துவிட்டார்...

ஐயர் சொன்ன மாதிரி பாரதியும் அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்க, கமலாவும் கண்ணனும் மனம் நிறைந்து வாழ்த்தினர்.. பின் பாரதியை தூக்கி,

“எங்க ரெண்டு பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி சடங்கு செய்து கல்யாணம் பண்ணலை பாரதி.. ஆனால் இந்த மதிரி சடங்குகளை பார்க்கும் பொழுது மனம் நிறைந்து நிக்குது... என் ரெண்டு பொண்ணுங்களை விட நீ எங்களுக்கு மகளா இருக்கறதுல பெருமையா இருக்கு..அவங்க கல்யாணத்தை விட உன் திருமணத்திலதான் அதுவும் இப்படி எங்களை வணங்கியதுல , உனக்கு பெற்றோரா இப்படி நின்னதில ரொம்ப பெருமையா இருக்கு

நீ எப்பவும் சந்தோஷமா மாப்பிள்ளையை அனுசரித்து இருக்கனும்.. “ என்று அவளின தலையை தடவி ஆசிர்வாதம் பண்ணினார்.. கண்ணனும் சிரித்து கொண்டே அவளை ஆசிர்வாதம் பண்ணினார்...

பின் இருவரும் அனைவரையும் வணங்கி எழ, அனைவரின் மனதும் நிறைந்த இருந்தது..

பின் அந்த முருகனின் சன்னதிக்கு சென்று பூஜை செய்து வணங்கி விட்டு கோயில மூன்று தரம் சுற்றி வந்தனர்..ஜானகி அந்த முருகனிடம் தன் நன்றியை தெரிவித்து, இதே மாதிரி அவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டார்...

அகிலா அவர்களை ஓட்டி கொண்டே வர ஆதியும் கொஞ்சம் கடுமை குறைந்து இயல்பான நிலைக்கு வந்திருந்தான்..

பின் இருவரும் ஜோடியாக நிற்க வைத்து ஒவ்வொருவராக தங்கள் பரிசுகளை கொடுக்க, இருவரும் மகிழ்ச்சியோடு வாங்கி கொண்டனர்.. கடைசியாக சிவகாமியும் கொடுக்க அதை தொடர்ந்து வந்த அகிலா,

“அண்ணி, இது என்னோட ஸ்பெஷல் கிப்ட்.. எங்க வீட்டுக்கு வரப்போறீங்க இல்ல அதுக்கு..நான் அடிக்கடி வந்து உக்களை பார்க்கறேன்.. நீங்க எங்க ஆதி அண்ணாவை கண் கலங்காம பார்த்துக்குங்க.. உங்கள நம்பிதான் விடறோம்.. “ என்று எக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அவளின் அந்த திடீர் செயலால் பாரதியின் கன்னம் அழகாக சிவந்தது வெட்கத்தாள்..

“வாவ்.. சூப்பரா வெக்கபடறீந்க்க அண்ணி... எனக்கே உங்களை இப்படியே பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்கு.. பாவம் ஆதி அண்ணா.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

“ஏய் வாலு.. எங்க அதுக்குள்ள கிளம்பற... நீ இன்னைக்கு ஸ்கூல் லீவ் போட்டுட்டு உன் அண்ணி கூடவே இரு.. “ என்றான் ஆதி..

“ஹ்ம்ம்ம் எனக்கும் ஆசை தான் ஆதி அண்ணா.. ஆனால் எங்க மிஸ் டைனசர் இருக்கே.. அது யாரும் லீவ் போடக்கூடாது னு சொல்லிருச்சு.. அது விட்டா கூட இந்த அம்மா டைனசர் இருக்கே.. அதுக்கு மேல.. ஒரு நாள் கூட லீவ் எடுக்க கூடாதுன்னு விரட்டி விட்டுடறாங்க... நான் பேசாமல் உங்களுக்கு தங்கச்சியா பிறந்திருக்கலம்.. ஜானகி ஆன்டியும் சோ ஸ்வீட்.. இந்த சிவா தான் எப்ப பார் முறைச்சு கிட்டே இருக்கு..”என்று குற்ற பத்திரிக்கை வாசித்தாள்

“ஆமா டீ.. உன் வாலை அவங்களால் சமாளிக்க முடியாமல் அடுத்த நாளே துரத்தி விட்டிடுவாங்க .. “ என்று சிரித்தார் சிவகாமி...

“அப்படியெல்லாம் இல்லடா அகிலா கண்ணா.. நீ லீவ் விட்டா நம்ம வீட்டுக்கு வந்திடு.. அதான் இனி பாரதியும் இருக்க போறா இல்ல.. ஜாலியா என்ஜாய் பண்ணலாம்.. “ என்றார் ஜானகி..

“தாங்க்ஷ் ஆன்டி... சரி நான் இன்னைக்கு போய்ட்டு நாளைக்கு வர்ரேன்.. “ என்று சிரித்து விட்டு விடை பெற்றாள் ..

பின் அனைவரும் அங்கு ஜானகியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானமாகிய கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டு கிளம்பினர்.. இதுவரை அங்கு நடந்த நிகழ்வுகளை படம் எடுத்துக் கொண்டிருந்த வசியும் மணமக்கள் இருவரையும் வாழ்த்தி,தன் பரிசினை கொடுத்து ஆதியை கட்டி அணைத்து விடை பெற்றான்..

பின் நிகிலன் ஒரு காரை ஓட்ட , ஆதியும் பாரதியும் பின்னால் அமர்ந்து கொள்ள அடுத்த காரில் ஜானகி, சுசிலா, கமலா மற்றும் கண்ணன் அமர்ந்து கொள்ள, ஆதியின் வீட்டை நோக்கி பறந்தது இரண்டு கார்களும்..

ஜானகிக்கு மனம் நிறைந்து இருந்தது... எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நிம்மதியும் சந்தோஷம் நிறைந்து இருந்தது...

ஆதியின் அருகில் அமர்ந்திருந்த பாரதிக்கு படபடப்பாக இருந்தது... இந்த மாதிரி அவன் அருகில் இவ்வளவு நெருக்கத்தில் அவள் வருவாள் என்றே அவள் எதிர்பார்க்காதது.. அதை விட அவள் கழுத்தில் தொங்கிய அவனின் தாலி இனி அவன் தனக்கானவன் என்று சொல்ல அதை கண்டு அவளின் கண்கள் பளபளத்தன..

“மனம் முழுவதும் அவனை நினைத்துக் கொண்டு முதலில் எப்படி அவனை வேண்டாம் என்று சொன்னேன்... சே!! என்னுடைய முட்டாள் தனத்தால் அவனை இழக்க இருந்தேனே.. இப்பவும் அவன் இன்னும் என்னுடயவன் இல்லை தான்... ஆனாலும் அவன் மனைவிங்கிற இந்த அங்கீகாரமே போதும் எனக்கு..

அவன் என்னை ஏற்று கொள்ளாவிட்டாலும் காலம் முழுவதும் அவன் மனைவி என்கிற இந்த நினைப்பிலயே வாழ்ந்து விடுவேன்... “ என்று எண்ணிக் கொண்டவள் ஓரக் கண்ணால் அவனை பார்க்க அவன் இவள் பக்கமே பார்க்காமல் முன்னால் இருந்த நிகிலனிடம் ஏதோ கதை அடித்துக் கொண்டிருந்தான் அவள் ஒருத்தி அங்கு இருப்பதையே மறந்து...

அதை கண்டு அவள் மனம் வருந்தினாலும் எல்லாம் என்னால வந்தது தான்.. அதுக்கான தண்டனையை அனுபவித்து தான் ஆகணும் என்று எண்ணியவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றன..

ஆதி திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதும் ஜானகி கேட்டு பாரதி மறுத்து விட்ட அந்த நாள் இரவு பாரதி தன் அறையில் அமர்ந்து கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் அவள் நினைவு முழுவதும் ஜானகி காலையில் பேசியதிலயே சுற்றிகொண்டிருந்தது..

அன்று காலை உணவை முடித்து விட்டு தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள் பாரதி.. அவளின் அலைபேசி அடிக்கவும் அதில் தெரிந்த அத்தை என்றதை காணவும் மனம் முழுவதும் சந்தோஷத்துடன் அந்த போனை அட்டென்ட் பண்ணினாள் தனக்கு வரும் துயர செய்தியை அறியாமல்...

வழக்கமான நல விசாரிப்புகள் பிறகு ஜானகியின் குரலில் இருந்த உற்சாகத்தை கண்டு பாரதி

“என்ன அத்தை ஸ்பெஷல்.. .இன்னைக்கு நீங்க இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?? “என்றாள்

“ஹ்ம்ம்ம் பரவாயில்லையே என் மறுமகள் புத்திசாலி... என் குரலில் இருந்தே கண்டு பிடிச்சுட்டியே.. நல்ல செய்திதான் பாரதி... நீ சீக்கிரமே என் மறுமகளாக போற.. “என்றார் ஜானகி உற்சாகத்தில்..

“இதுல என்ன இருக்கு அத்தை.. நான் இப்பவும் உங்க மறுமக தான.. ?” என்றாள் புரியாதவளாக...

“ஹ்ம்ம்ம் இப்பதான் என் மறுமக புத்திசாலினு சொன்னேன்.. அதுக்குள்ள அது தப்புனு ப்ரூப் பண்றியே மறுமகளே.. “என்று சிரித்தார்..

“”ம்ஹூம்.. நீங்க ஏதோ சரியில்லை இன்னைக்கு... ஒன்னும் புரியற மாதிரி பேச மாட்டேங்குறீங்க... ஜானகி அத்தை மறுமக அவங்க அத்தை மாதிரியே மக்குதான்... நீங்க கொஞ்சம் விளக்கமா விளக்கறீங்களா... “என்று சிரித்தாள்..

“ஏய்.. கேடி.. சந்தடி சாக்குல என்னையே மக்குங்கறியா.. உன்னை.. என் பையன் உனக்கு சரியான பேர் தான் வச்சிருக்கான் கேடினு “என்று சிரித்தவர்

“பாரதி மா.. நீ சீக்கிரம் எங்க மகன் ஆதிக்கு பொண்டாட்டியா, லவகுஷ ராஜகுமாரனுக்கு ராணியா, இந்த ஜானகிக்கு சொந்த மறுமகளா நம்ம வீட்டுக்கே வரப்போற.. இப்பவாது புரிஞ்சுதா என் மக்கு மறுமகளுக்கு?? “ என்றார் மீண்டும் சிரித்தவாறு... அதை கேட்டு அதிர்ந்த பாரதி

“ஆங்க்... என்ன அத்தை சொல்றீங்க... ?? “ என்றாள் குழப்பத்துடன்..

“ஸ்ஸ் அப்பா.. எல்லாத்துலயும் ஃபாஸ்ட் ஆ இருக்கிறவ இதுல மட்டும் ஏன் இவ்வளவு டுயூப் லைட்டா இருக்கியோ.. சரி டா மா நேராவே கேட்கறேன்.. என் பையன கல்யாணம் பண்ணிக்கிறியா?? “ என்றார் ஆவலுடன்..

அதை கேட்டு வாயடைத்து நின்றாள் பாரதி.. கொஞ்ச நேரம் ஆனதும் அவர் கேட்டதின் அர்த்தம் புரிய..அந்த புகைப்படத்தில் இருக்கும் அவனின் குறும்பு சிரிப்பும் அவன் நேற்று தந்த முத்தமும் கண் முன்னே வந்தது...

“அவனுக்கு நான் மனைவியா??..” நினைக்கையிலயே அவளுக்கு தித்தித்தது... ஆனாலும் அவளால் நம்ப முடியாமல் .

“வந்து... வந்து.. நீங்க என்ன சொல்றீங்க அத்தை.. ஏன் என்னாச்சு?? .. ஏன் திடீர்னு இப்படி..? “ என்றாள் இன்னும் அவர் சொன்னதை நம்ப முடியாமல்....

“ஹ்ம்ம்ம்.. நேற்று நடந்ததை எல்லாம் ஆதி சொன்னான் பாரதி ,,, இதுக்கு மேல உன்னை தனியா விட மனம் இல்ல டா.. நீ எங்க கூடவே இருக்கிறது தான் பெட்டர்.. நீ எங்க கூட இருக்கனும்னா கல்யாணம் பண்ணி முறைப்படி எனக்கு மறுமகளானா தான் னு சொல்லிட்டேன்.. அதுக்கப்புறம் தான் இந்த பேச்சு.. “ என்று சிரித்தார்... தனக்கு அடுத்து வரும் இடியை அறியாமல்..

“ஹ்ம்ம்ம் அப்ப உங்க பையன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாரா?? “ என்றாள் ஒரு எதிர்பார்ப்புடன்

“அவன் எங்க அவ்வளவு சீக்கிரம் ஒத்துகிட்டான்..அவனை மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி, கூத்தாடிதான் சம்மதிக்க வச்சேன்.. இன்னும் சுசி கிட்ட கூட சொல்லலை... உன் கிட்ட பேசிட்டு அப்புறம் பேசலாம் னு .. சொல்லுடா பாரதி ... அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணத்தை வச்சுக்கலாமா.. “என்றார் அதே ஆர்வத்துடன்...

ஜானகி அரியவில்லை பாரதியின் மன ஓட்டத்தை...அவள் எதுக்காக ஆதி சம்மதிச்சானா என்று கேட்டாள் என்று யோசித்திருக்கவில்லை..

அப்படி யோசித்து இருந்தால், ஒரு வார்த்தையில் ஆதிக்கு சம்மதம் என்று சொல்லி இருப்பார்...அவரை அப்படி சொல்ல விடாமல் சுத்தி வர செய்தான் அந்த வடிவேலன்..

ஜானகி சொன்னதை சிறிது நேரம் யோசித்தவள்

“இல்ல அத்தை .. அது சரி வராது.. இந்த கல்யாணம் வேண்டாம்..” என்று ஜானகியின் தலையில் இடியை இறக்கினாள் பாரதி ..

அதை கேட்டு அதிர்ந்து போனார் ஜானகி.. அவருக்குமே தெரியும் பாரதி மனதில் ஆதியை பற்றி நல்ல அபிப்ராயம் இருப்பதையும் அவள் மனதில் ஆதி இருப்பதும்... அதனால தான் நேரடியாக கல்யாணத்திற்கு கேட்டார்..

ஆனால் பாரதியிடம் இருந்து இப்படி ஒரு பதிலை அவர் எதிர் பார்க்க வில்லை.. பாரதி எப்படியும் சம்மதித்து விடுவாள் என்ரு நம்பியிருந்தவருக்கு பாரதி மறுத்ததும் ஷாக் ஆகி நின்றார்... பின் மெல்ல சுதாரித்து

“என்னாச்சு பாரதி?? .. ஏன் வேண்டாங்கிற?? உனக்கு ஆதியை பிடிக்கலையா?? .. இல்ல உன் வீட்ல எதுவும் சொல்வாங்கனு பயமா?? நான் அண்ணனை சமாளிச்சுக்குவேன்... நீ எதை பத்தியும் கவலைப்படாத... “ என்றார் கரைந்த குரலில்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை... எனக்கு இந்த ஏற்பாட்டில் விருப்பம் இல்லை.. என்னை மன்னிச்சிடுங்க.. இதுக்கு மேல இத பத்தி பேச வேண்டாமே... இதோடு இந்த பேச்சை விட்டுடுங்க.. உங்க பையனுக்கு வேற ஒரு பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க..இப்ப எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறம் போன் பண்றேன்.. “ என்று அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் போனை வைத்தாள் பாரதி...

அவரிடம் இன்னும் சில விநாடிகள் பேசினால் போதும் தன்னையும் அறியாமல் சரி சொல்லி விடுவாள் என்று தெரிந்தே மேல பேசாமல் துண்டித்தாள்..

ஆனாலும் அலைபேசியை வைத்தவளுக்கு மனம் கனத்து இருந்தது.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது... எதுக்காக இந்த கண்ணிர் என்று அறியாமலயே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..

சிறிது நேரம் அப்படியே அந்த தோட்டத்தில் இருந்த கல்லில் அமர்ந்து இருந்தவள் எழுந்து வேகமாக தன் அறைக்குள் வந்தாள்..

“நான் ஏன் அப்படி சொன்னேன்?? ஏன் இந்த கல்யாணம் பிடிக்கலைனு சொன்னேன்??..” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.. அவளுக்கே தெரியவில்லை ஏன் அப்படி சொன்னாள் என்று.. பின் குளியலறைக்குள் சென்று முகத்தில் நீரை அடித்து கழுவி கொண்டு வந்தவளின் கண்கள் தானாக அந்த புகைப்படத்திற்கு சென்றன... வழக்கம் போல குறும்புடன் சிரித்து கொண்டிருந்தான் ஆதி ...

அவனின் சிரிக்கும் கண்களை பார்க்கும் பொழுது வரும் உற்சாகம் இப்ப வரவில்லை.. மாறாக எதையோ இழந்து விட்டதை போல ஒரு வலி அவள் மனம் முழுவதும் பரவியது...

“எதை இழந்தேன்?? ஏன் இந்த வலி?? “ என்று ஆழ்ந்து யோசிக்கும் பொழுது தான் அவள் அடி மனதில் இருந்தது புரிந்தது... அவள் மனம் முழுவதும் அவனே நிறைந்து இருந்தான்....

“இது எப்படி?? நான் எப்ப இருந்து அவனை நினைக்க ஆரம்பித்தேன்?? “ என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் விளங்கியது... ஜானகியுடன் பேசும்பொழுது எல்லாம் அவர் தன் மகனை பற்றியே பெருமையாக பேசுவார்..அவனை பற்றி கேட்கும் பொழுது எல்லாம் அவளை அறியாமல் அவளுள் ஒரு உற்சாகம் பொங்கி வழியும்... அவள் வேண்டும் என்றே அவனை மட்டம் தட்டி பேசினாலும் அவள் ஆழ் மனதில் அவன் படிந்து விட்டான்...

அதுதான் ஜானகி தன் பையனின் வாரிசை சுமக்க கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டாள்... ஆனால் அதற்கு வேற ஒரு காரணம் காட்டிக்கொண்டாள்... அவள் மனதில் ஆதி இருந்ததால் தான் ,அவன முன்ன பின்ன பார்க்காமலே அன்று அவள் கனவிலும் தன் கணவனாக வந்தான்...

அதை எல்லாம் இப்பொழுது நினைத்து பார்க்கும் பொழுது அவள் மனம் நன்றாக புரிந்தது அவளுக்கு.. அப்படி அவளே அவனை விரும்பும்பொழுது, அவனை வேண்டாம் என்று சொன்னதும் எதையோ இழந்து விட்டதை போல இருந்தது...

ஆனால் ஏன் அப்படி சொன்னேன்?? என்று மீண்டும் யோசித்தவளுக்கு முதலில் ஜானகி சொல்லும் பொழுது சந்தோஷமாகத்தானே இருந்தேன்.. அப்புறம் என்னாச்சு என்று மீண்டும் அவளையே கேட்டுக்கொள்ள அவளின் குழப்பத்திற்கான விடை கிடைத்தது....

“அது அவன் என்னை விரும்பி மணக்க முன் வரவில்லை.. இந்த அத்தை தான் அவனை மிரட்டி சம்மதிக்க வச்சிருக்காங்க... ஏன் என்னைக் கண்டாலெ அவனுக்கு பிடிக்காது... ஆரம்பத்திலயே நான் அவனை மயக்க வந்தவள் என்றுதானே என் மேல எரிந்து விழுந்தான்.. இப்பவும் கூட என்னைக் கண்டால் அவனுக்கு பிடிக்கவில்லையே.. அப்படி இருக்க என்னை கல்யாணம் பண்ணி கொண்டால் ஆயுள் முழுக்க அவன் கஷ்டப்படணும்..

வேண்டாம்.. அந்த ஷ்வேதாவால் அவன் பட்ட கஷ்டம் போதும்.. என்னால மறுபடியும் கஷ்டப்படக்கூடாது.. அவன் அவனுக்கு பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கட்டும்..

நான் முன்பு பேசின படியே இந்த குழந்தையை பெத்து கொடுத்ததோடு என் கடமை முடிந்தது.. நான் திரும்பவும் எங்க ஊருக்கே போய்டனும்.. அது தான் அவனுக்கு நல்லது... இப்ப அத்தைகாகனு பார்த்திட்டு அவனுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடாது.. “ என்று தெளிவாக தப்பான முடிவை எடுத்தாள்...

அவள் அறியவில்லை அவன் மனதிலும் அவளுக்கான சாப்ட் கார்னர், ரெக்டாங்கள் ஆகி , பின் அது இன்னும் வளர்ந்து அவன் மனம் முழுவதும் அவள்தான் என்று.. ஏன் அவனுக்கே இன்னும் தெரியவில்லை.. பின் இவளுக்கு எப்படி தெரியுமாம்...

இருவரும் தங்கள் மனதினில் இருப்பதை அறியாமல் கண்ணாமுச்சி ஆடினர்... ஆட வைத்திருந்தான் அந்த வேலன்

பாரதி ஓரளவுக்கு தான் எடுத்த முடிவில் தெளிவானதும் மீண்டும் முகத்தில் நீரை அடித்து கழுவிக்கொண்டு அந்த முருகனின் திருநீற்றை எடுத்து வைத்துக் கொண்டு தன் வேலைகளை கவனித்தாள்...

முடிவு எடுப்பது என்னவோ சுலபமாக இருந்தது.. அதை செயல் படுத்துவதில் தான் அவ்வளவு கஷ்டமாக இருந்தது... நொடிக்கொரு தரம் காலையில் கேட்ட ஜானகியின் மகிழ்ந்த குரலும் அதற்கு பிறகு கரைந்த குரலும் அவள் காதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது...

“இந்நேரம் என்ன பண்ணுவாங்க அத்தை?? .. பாவம் அழுதுகிட்டு இருப்பாங்களோ?? அவங்களுக்கும் கஷ்டமாதான் இருக்கும்.. ஏன் எனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கே.. ஒரு வேளை நான் எடுத்த முடிவு தப்போ?? என்று வழக்கம் போல பட்டிமன்றம் நடத்தினாள் அன்று நாள் முழுவதும்..

இதோ ஒரு நாளே முடியப்போகுது.. இன்னும் அவளுள் ஒரு குழப்பமான நிலைதான்... அவளின் குழப்பத்திற்கு டாப்பிங்க்ஷ் சேர்க்கிற மாதிரி அன்று மதியம் அவள் டீவியில் பார்த்த திரைப்படம் வேறு அவளை மேலும் குழப்பியது...

அன்று மதியம் பாரதி தன் அறையிலயே இருந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு என்று கீழ இறங்கி சென்றாள்.. அங்கு மாரி டீ.வி யில் கர்ணன் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. பாரதியும் ஒரு ஷோபாவில் அமர்ந்து அந்த படத்தை பார்த்தாள்.. பார்த்த பிறகே ஏன் அந்த படத்தை பார்த்தோம் என்றாகியது...

கர்ணனின் கதை அவள் ஏற்கனவே அறிந்ததே... ஆனாலும் அதை திரையில் பார்க்கும்பொழுது அதில் அவர்களின் பீலிங்க்ஷ் ஐ பார்க்கும் பொழுது நெஞ்சை பிசைந்தது..

அதிலும் குந்தி திருமணத்திற்கு முன்பே தாயாகி அந்த சூர்ய பகவானின் குழந்தையை சுமப்பதும் பின் அந்த குழந்தை பிறந்ததும் அதை ஆற்றில் விடும் பொழுது அவள் படும் வேதனைகளை காட்சிகளாக பார்க்கும் பொழுது அவளை அறியாமல் தன் நிலை ஞாபகம் வந்தது..

“நானும் அந்த குந்தி போலத்தானோ?? .. இங்கயும் அந்த ஆதியின்(சூரியனின்) குழந்தையைத்தானே சுமக்கிறேன்.. அப்ப இந்த குழந்தையை நானும் பிரியும் பொழுது அப்படித்தான் வலிக்குமா?? “ என்று யோசித்தாள்..

அதிலும் கர்ணன் தேரோட்டியின் மகனாக வளர்வதும் அதனால் அவன் படும் அவமானங்களும் அதிலும் த்ரௌபதி அவனை அவளுடைய சுயம்வரத்தில் இருந்து வெளியேற்றுவதையும் பின் கர்ணன் குந்தியை தன் தாய் என்று அரிந்ததும் அவன் படும் வேதனைகளையும் பார்த்த பொழுது தன்னை அறியாமல் தன் அடி வயிற்றில் கை வைத்துக் கொண்டாள்..

“இந்த குட்டியும் அந்த மாதிரி கஷ்டபடுமோ?? ஆதியும் ஜானகி அத்தையும் நல்லாதான் பார்த்துக்குவாங்க.. ஆனாலும் அவள் வளர்ந்து அம்மாவை தேடும்பொழுது யாரை காட்டுவாங்க?? .. அவளுக்கும் அந்த கர்ணனை போல ஏக்கம் வருமா?? அதை விட எனக்கு இந்த குழந்தைய பார்க்கணும் னு தோணுமே.. அந்த குந்தி மாதிரி இந்த குழந்தையை நினைத்து ஏங்குவேணா?? “ என்று பல விடை தெரியாத கேள்விகளை தனக்குள் கேட்டுக்கொண்டாள்..

இந்த குட்டி கஷ்டப்படக்கூடாதுன்னா நான் இவ கூடவே இருக்கனும்.. அதுக்கு அத்தை சொன்ன மாதிரி அவனை கல்யாணம் பண்ணிக்கணும்... ஆனால் அப்படி கல்யாணம் பண்ணிகிட்டா அவனுக்கு பிடிக்காதே ... அவன் என்னை பார்க்கும் பொழுது எல்லாம் எரிஞ்சு விழுவான்... அவனால் நிம்மதியா வாழ முடியாது...

கடைசியில் குழந்தையா, இல்லை தன் மனதை கவர்ந்தவனா என்று வந்து நிக்கையில் அவன் பக்கமே சாய்ந்தது அவளின் தராசு..

“இருக்கட்டும்.. அவன் சந்தோஷமாக இருக்கட்டும்.. இந்த குட்டியையும் நல்லா பார்த்துக்குவாங்க... “என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்..

அதை எல்லாம் இப்பொழுதும் நினைத்து பார்த்துக்கொண்டிருந்தாள் கட்டிலில் அமர்ந்தவாறு..

பாரதி இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றதும் வேகமாக தன் காரை கிளப்பி கொண்டு புயலென தன் கெஸ்ட் ஹவுஸை அடைந்தவன் காரை பார்க் பண்ணிவிட்டு வேகமாக மாடி ஏறி அவள் அறையை அடை ந்தவன் கதவை திறந்து படீரென்று அறைந்து சாத்தினான்...

அப்பொழுதுதான் தன் அடி வயிற்றில் கை வைத்து அந்த குட்டியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த பாரதி ஆதி வேகமாக உள்ளே வரவும் திகைத்து தன்னை அறியாமல் எழுந்து நின்றாள்..அவள் கண்களில் அப்படி ஒரு மின்னல் வந்து சென்றது அவனை காணவும்.. ஆதியும் அவள் முகத்தில் வந்து போன அந்த மகிழ்ச்சி ரேகைகளை கண்டுகொண்டான்...

நேராக அவளிடம் சென்றவன்

”ஏய்.. உனக்கு என்ன பெரிய ரதி னு நினைப்பா...போனா போகுது அம்மா ரொம்ப கெஞ்சி கேட்டாங்களே னு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா நீ என்னவோ வேண்டாம் னு சொன்னியாம்... சொல்லு.. ஏன் வேண்டாம் னு சொன்ன?? என்று உருமினான்...

அவனின் இந்த திடீர் கேள்வியில் அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் முழித்தாள்..

“ஏய் இப்ப எதுக்கு இப்படி முழிக்கிற?? .. எதுனால இந்த கல்யாணம் வேண்டாம் னு சொன்ன?? காரணத்தை சொல்.. “ என்று அதட்டினான்.. அவன் அதட்டலில் கொஞ்சம் தெளிந்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

“அது என் பெர்சனல்.. உங்க கிட்ட காரணம் சொல்லனும் னு அவசியம் இல்லை .. “ என்றாள் அவனை நேராக பார்த்து...

“என்னடி பெர்சனல்ல்?? அப்படி பெர்சனல் ஆ வச்சிருக்கவ என் குழந்தையை சுமக்க எதுக்கு வந்த?? ஓ காசுக்காகவா?? இப்ப நீ முடிந்தவரை சுருட்டினதும் எங்க அம்மா தேவை இல்லை அப்படித்தான?? “ என்று வார்த்தைகளை துப்பினான்..அதை கேட்டு தன் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு, தன் காதுகளை மூடிக்கொண்டாள் பாரதி..

அதை கண்டவன் இன்னும் வெறி பிடித்தவன் போல ஆனான்..

“இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட வேண்டாம்.. ஏன் இந்த கல்யாணம் வேண்டாம் என்பதற்கு உண்மையான காரணத்தை சொல்லு.. ஏன் என்னை பிடிக்கலையா?? “ என்றவன் ஏதோ நினைவு வரவும்

“ஓ .. உன் ஆருயிர் காதலனை பிரிய முடியலயா?? அப்படி உன் காதல் உண்மைனா இந்த மாதிரி அடுத்தவன் குழந்தைய சுமக்க வந்திருக்க கூடாது.. சொல்லு டீ.. என்ன அவன்தான் வேண்டாம்னு சொன்னானா?? “ என்று அவளை பிடித்து உலுக்கினான்.. இதுவரை அவன் பேசிய பேச்சுக்களை கேட்டு சிலையாக நின்றவள் அவன் உலுக்கவும் சிலைக்கு உயிர் வந்ததை போல கண்ணை திறந்து அவனை எரித்து விடுவதை போல பார்த்தாள்.. பின் ஏதோ யோசித்தவள் ..

“ஆமா .. எனக்கு உங்களை பிடிக்கலை.. அதுவும் ஏற்கனவே ஒருத்தியோடு வாழ்ந்தவனுக்கு இரண்டாம் தரமா என்னால வரமுடியாது.. நான் என் காதலனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்... உங்களால முடிஞ்சதை பாருங்க.. “ என்று அவளும் திருப்பி கத்தினாள்..

அதை கேட்டு ஆடிப்போனான் ஆதி... தன் மேல் அடிக்கடி விழும் அவளின் அந்த பார்வையில் அவளுக்கு தன் மேல் விருப்பம் இருக்கும் என்று நினைத்திருந்தவனுக்கு அவள் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லவும் அவன் உள்ளே கட்டியிருந்த சீட்டுகட்டு மாளிகை எல்லாம் சரிந்து விழுந்ததை போல இருந்தது.. அவன் கண்ணில் அடிபட்ட வலி தெரிந்தது..

சிறிது நேரம் கண்ணை இறுக்க மூடிக்கொண்டான் ..கை முஷ்டி இறுக முகத்தில் சுளிப்புடன் எதையோ தீவிரமாக யோசித்தான்... பின் அவளை பார்த்து

“வெல்... நீ எப்படியோ போய்த்தொலை.. எனக்கு என் பேபி முக்கியம்...இனிமேல் உன்னைத் தனியா விட முடியாது.. என் கண் பார்வையில் தான் நீ இருக்கனும்.. அதுக்கு இந்த கல்யாணம் தான் வழிங்கிறாங்க அம்மா... அதனால நீ என்ன பண்ற, என் பிரின்ஸஸ் பிறந்து வளர வரைக்கும் என் வைப் ஆ நடிக்கணும்...” என்றான் கண்கள் இடுங்க..

அதை கேட்டு கோபத்தில் முகம் சிவந்தது அவளுக்கு.. நடிக்கணும்னா?? “என்றாள் புரியாமல்..

“ஹ்ம்ம் எங்கம்மாவுக்கு நான் உன் கழுத்துல தாலி கட்டினாதான் நீ என் மனைவி னு ஒத்துக்குவாங்க... அதனால அவங்களுக்காக நீ தாலி வாங்கிக்கணும்.. அப்புறம் நீ என் கூட அந்த வீட்டிற்கு வந்திடலாம்.. அப்பதான் என் பேபியை நான் பக்கத்தில் இருந்து பார்த்துக்க முடியும்..

எப்படி இப்ப ஒரு வாடகைத்தாயா இருக்கியோ அதே மாதிரி குழந்தை பிறந்ததுக்கப்புறம் நீ ஒரு பேபிசிட்டர் ஆ ( babysitter) ஒரு இரண்டு வருடத்திற்கு என் பேபியை பார்த்துக்கணும்... மற்றபடி உனக்கு என் மனைவிங்கிற எந்த உரிமையும் கிடையாது... எப்ப நீ என்னை பிடிக்கலைனியோ அப்பயே உன் மேல கொஞ்சமா இருந்ததும் போயிருச்சு..

என் பிரின்ஸஸ் வளர்ந்ததுக்கப்புறம் நீ எப்ப வேணும்னாலும் போய் உன் காதலனை கல்யாணம் பண்ணிக்கலாம் ...அதுவரைக்கும் நான் சொல்றதைத்தான் கேட்கனும் “ என்றான் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு..

அதை கேட்டு அவள் முகம் இன்னும் சிவந்தது..

“இதுக்கெல்லாம் நான் ஒத்துக்க முடியாது.. நீங்க சொல்றதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது.. “என்று முறைத்தாள்..

அதை கேட்டு

ஹா ஹா ஹா என்று வில்லன் சிரிப்பை சிரித்தான் ஆதி ..

“லுக்...உன் சம்மதம் இப்ப தேவை இல்லை.. நீதான் ஏற்கனவே ஒத்துகிட்டியே..” என்று மீண்டும் சிரித்தான்

“ஹலோ.. என்ன உளறீங்க??.. நான் எங்க எப்ப சம்மதிச்சேன்?? ” என்றாள்..

“ஹ்ம்ம்ம் நீ ஆரம்பத்துல ஒரு அக்ரிமென்ட் ல கையெழுத்து போட்டு கொடுத்த இல்லை... அதுல என்ன எழுதி இருந்துச்சுனு படிச்சு பார்த்துட்டு தான கையெழுத்து போட்ட?? “என்றான் அதே கண்கள் இடுங்க

“இல்லையே... நான் அதை படிக்கலையே.. ஏன் அதுல என்ன இருந்தது.. ??” என்றாள் சந்தேகமாக

“ஹா ஹா ஹா நீ அப்ப படிக்கலை?? அப்ப இன்னும் வசதியா போச்சு... அதுல என்ன எழுதி இருந்தது னா நீ வாடகைத்தாயாக வரும்பொழுது நான் என்ன சொன்னாலும் கேட்கணும்..குழந்தைக்கு எது நல்லதோ அதை செய்வ னு எழுதி கொடுத்திருக்க... அதோட ஒரு வெத்து பேப்பர் லயும் கையெழுத்து போட்டிருக்க.. அத வச்சு நான் என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்...

இப்ப புரிஞ்சுதா??.. நீ மட்டும் நான் சொன்னதுக்கு ஒத்துக்கலைனா அந்த அக்ரிமென்ட் ஐ வச்சு உன்னை கோர்ட் க்கு இழுப்பேன்... அதனால உனக்கு வேற வழி இல்லை.. இதுக்கு மேலயும் ஏதாவது வம்பு பண்ணா, தொலைச்சிடுவேன்.. “என்றான் கோபமாக..

“இதெல்லாம் சீட்டிங்.. என்னை ஏமாத்தறீங்க.. “ என்று கத்தினாள்..

“ஏய்.. யார் ஏமாத்தினா??.. எங்கம்மா உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தாங்க.. அவங்க கேட்டும் இந்த திருமணத்தை நீ மறுத்து இருக்கனா நீ தான் இத்தனை நாளா அவங்களை ஏமாத்தி இருக்க... ஏமாத்துக்காரி.. எங்கம்மா எப்படி ஒடிஞ்சு போய்ட்டாங்க தெரியுமா...அவங்க ஆசையை நான் நிறைவேற்றி வைக்கனும்... அதனால அவங்க ஆசை பட்ட மாதிரியே அடுத்த முகூர்த்ததுலயே நம்ம கல்யாணம்..ரெடியா இரு.. “என்றான் அதே கோபத்துடன்..

“அதெல்லாம் முடியாது.. “ என்று அவள் சத்தம் போட அதை மறுத்து அவன் பேச இரண்டு பேரும் வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க,

இவங்களும் சண்டையை முடிப்பாங்க னு இதுவரை பொறுத்துகிட்டிருந்த அந்த குட்டி தன் வேலையை காட்ட ஆரம்பித்தாள்.. அதாங்க எட்டி உதைக்க ஆரம்பித்தாள்..

திடீரென்று வயிற்றில் நடந்த அசைவால் ஆ வென்று அலறினாள் பாரதி..

அதுவரை எரிமலையாக குமுறிக்கொண்டிருந்தவன் அவளின் அலறலை கேட்டு உடனே பனிமலையாக உருகி தன் கோபம் தணிந்து “என்னாச்சு?? “என்று பதறினான்…

அவள் எதுவும் பேசாமல் நிக்கவும் அவனே அவள் புடவையை விளக்கி அவள் வயிற்றில் கை வைத்து

“ஹே!! பிரின்ஸஸ்.. சாரி டா.. நீ இருக்கிறத மறந்துட்டேன்...இனிமேல் நான் சத்தம் போட மாட்டேன்.. சும்மா இந்த பட்டிகாட்டோட பேசிகிட்டிருந்தான்.. யூ கூல் டவுன்... உன் டாட் நாட் பாட் டாட்..யூ ஸ்லீப் பேபி... “ என்று கொஞ்சியபடியே மெல்ல தடவினான்... அவனின் கை பட்டதும் தன் ஆட்டத்தை நிறுத்தி அமைதியானாள் அவன் தேவதை...

ஆதியின் கை பாரதியின் வயிற்றில் படவும் இப்பொழுது என்னவோ போல இருந்தது அவளுக்கு.. முன்பு தெரியாத ஏதோ ஒரு மாற்றம் அவள் உள்ளே இப்பொழுது.. மெல்ல நெளிந்தாள் பாரதி .. அப்பவும் அவன் கையை எடுக்காததால் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

“கையை எடுங்க.. “என்றாள் அவனை முறைத்தவாறு..

“ஏன்?? “ என்றான் புரியாதவாறு..

அன்றைக்கு அவளே தானே கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து காட்டினாள்.. இப்ப என்னவாம் என்ற நினைப்பு அவனுள்.. அவனுக்கு தெரியவில்லை பாரதியின் மனதில் வந்த மாற்றம்...

“ஹ்ம்ம்ம் கூசுது.. கையை எடுங்க.. “என்றாள்..அதில் கடுப்பானவன்

“ஓ.. அப்படியா... இனிமேல் உனக்கு எந்த கூச்சமும் இருக்காது பார்.. “என்றவன் திடீரென்று அவளின் முகத்தை கையில் ஏந்தி அவள் இதழ்களில் முரட்டுத்தனமாக அழுந்த முத்தமிட்டான்...

அவனின் இந்த திடீர் செயலால் பேச்சிழந்து நின்றாள் பாரதி.. சில விநாடிகள் கழித்தே அவளை விட்டவன்

“என்ன இப்ப கூச்சம் போயிருச்சா??... இனிமேல் நான் என் பேபிய எப்ப வேணாலும் தொடுவேன்.. You have to adjust.. அப்புறம் அடுத்த முகூர்த்தத்திலயே நம்ம கல்யாணம்.. தயாரா இரு.. “ என்றவன் அவளின் பதிலுக்கு காத்திராமல் வேகமாக வெளியேறி கீழ சென்றான்.

பின் மாரியை பார்த்து பாரதி கூடவே தங்கும் படி சொல்லி எங்கயும் போகக்கூடாது என்று எச்சரித்து விடை பெற்றான்...

பாரதியோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் நின்றிருந்தாள்... அவனின் அந்த முரட்டுத்தனமான முத்ததில் கிறங்கி நின்றாள்..

அவள் பார்வை எதேச்சையாக அந்த படத்திற்கு செல்ல அவன் குறும்பாக அவளை பார்த்து கண் சிமிட்டினான்...அவளின் பார்வை அவன் உதட்டிற்கு செல்ல, அன்று அவள் கற்பனை பண்ணி பார்த்ததை போலவே என்ன ஒரு அழுத்தம் ,முரட்டுத்தனம்.. என்று நினைத்தவளின் கன்னம் சிவந்தது...

அவளுள் சில்லென்று பனிமழை பொலிய, அதை கலைக்கும் விதமாக அவளின் அலைபேசி ஒலித்தது...

உடனே தன்னை சமாளித்து பழைய நிலைக்கு வந்து தன் அலைபேசியை எடுக்க, ஜானகி தான் அழைத்து இருந்தார்.. தயக்கத்துடனே அதை எடுத்தவள் காலையில் அவள் மறுத்ததுக்கு எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று பயத்துடன் போனை அட்டென்ட் பண்ணினாள்..

“பாரதி மா .. நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதா ஆதி சொன்னான்.. இப்பதான் எனக்கு போன உயிர் திரும்ப வந்தது... ரொம்ப சந்தோஷமா இருக்கு டா .. அந்த முருகன் என்னை கை விடலை... கண்ணை திறந்துட்டான்... “ என்று குதூகலித்தார்...

அதை கேட்ட பாரதி

“சாரி அத்தை.. நான் காலையில் அப்படி பேசியிருக்க கூடாது... “ என்று மெல்ல முனகினாள்

“பரவாயில்லை விடு டா.. உன் மனதில் இருந்ததை சொல்லிட்ட.. நானும் உனக்கு கொஞ்சம் டைம் கொடுத்து யோசிக்க சொல்லியிருக்கணும். எடுத்த உடனே கேட்கவும் உனக்கு குழப்பமா இருந்திருக்கும்.. “என்று அவளுக்கும் அவரே சமாதானம் சொல்லிக் கொண்டார்...

“என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா அத்தை?? “ என்றாள் தயக்கத்துடன்..

“சே!! சே!!... நான் எதுக்குடா கோப படனும்.. என்ன வருத்தம் தான் இருந்தது.. உன்னை என் மறுமகளாக்க முடியலையே னு .. உன்னை எங்கே இழந்து விடுவேனு பயமா இருந்தது...

எப்படியோ இப்பதான் நிம்மதியா இருக்கு...

அப்புறம் பாரதி, ஆதி உன்கிட்ட ஏதாவது சொல்லி மிரட்டி இருந்தால், நீ எதையும் மனசுல வச்சுக்காத... அவன் கோபம் எல்லாம் சில மணி நேரம் தான்.. அப்புறம் எல்லாம் மறைஞ்சிடும்..

அத்தை நான் இருக்கேன் உனக்கு துணையா... அவன் என்ன சொன்னாலும் நீ கண்டுக்காத... சந்தோஷமா இந்த திருமணத்தை ஏத்துக்கோ.. எல்லாம் நல்லதா நடக்கும்.. “ என்று அவளின் மனதை அறிந்து ஆறுதல் கூறினார்...

அவருக்கு தெரியும் ஆதி ஏதோ மிரட்டிதான் பாரதியை சம்மதிக்க வச்சிருக்கான் என்று.. எப்படியோ பாரதி மறுமகளா உள்ள வந்திட்டா, அதற்கப்புறம் அவனை வழிக்கு கொண்டு வந்திடலாம்.. “ என்று நம்பினார்..

“அப்புறம் பாரதி... இந்த விசயம் உங்க வீட்டுக்கு இப்ப தெரிய வேண்டாம்... அண்ணா நல்லா குணம் ஆனதுக்கப்புறம் நானே பக்குவமா எடுத்து சொல்றேன். கண்டிப்பா உன்னை மன்னிப்பாங்க.. அதனால நீ எதுவும் கலங்க கூடாது.. “

“ஹ்ம்ம்ம் சரி அத்தை... “

பின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர் போனை வைத்தார்.. அடுத்த முகூர்த்த நாளே நன்றாக இருந்ததால் திருமண ஏற்பாட்டை எல்லாம் அவசரமாக அவரே பார்த்துக் கொண்டார்... பட்டு புடவை எடுப்பதில் இருந்து நகை வாங்குவதில் இருந்து அவரே பார்த்து பார்த்து செய்தார்..

அவர் தேர்வு செய்வதை எல்லாம் பாரதிக்கு வாட்ஸ்அப் வழியாக காட்டி அவளுக்கு பிடித்த பிறகே வாங்கினார்... துணைக்கு சுசிலா சில நேரமும் சிவகாமி சில நேரமும் அவருக்கு கூட வந்து உதவ, தான் நினைத்தபடியே இந்த திருமணத்தை நல்ல படியாக முடித்தார் ஜானகி...

தன் பழைய நினைவுகளில் இருந்து திரும்பிய பாரதி, மீண்டும் ஓரக்கண்ணால் ஆதியை பார்க்க அவன் நிகிலனுடன் இன்னும் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்...

அவனையே இமைக்காமல் பார்த்தாள்.. இவன் சிரிக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கு.. அதுவும் இன்று மாப்பிள்ளை கோலத்தில் அவ்வளவு அசத்தலாக இருந்தான்.. அவன் இந்த பக்கம் திரும்புவதை போல இருக்க தன் பார்வையை அவசரமாக மாற்றிக் கொண்டு கண் மூடி காரின் இருக்கையில் சாய்ந்தாள்...

அன்று அவனை வேண்டாம் என்று சொன்னதும் தன் மனம் பட்ட வலி, வேதனையிலிருந்து விடுதலையான மாதிரி இருந்தது..

எப்படியோ அவனை வேண்டாம் என்று தள்ளி வைத்து எட்ட நின்று தினமும் அவனை நினைத்து வேதனை படுவதற்கு அவன் தன்னை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவன் அருகில் அவன் மனைவியாய் அவனை தினமும் பார்த்துக் கொண்டும் அவன் புள்ளையை வளர்ப்பதே மேல்...

“எப்படியோ முருகா.. நான் பண்ண இருந்த தப்பை சரி பண்ணி நல்ல வழிய காமிச்சிருக்க... இந்த பாதை அவன் சொன்ன மாதிரி இரண்டு வருடத்தில் முடிந்து விடாமல் எப்பவும் அவன் கூடவே செல்லுமாறு நீ தான் பார்த்துக்கனும்.. “என்று மானசீகமக அந்த முருகனை வேண்டிக் கொண்டு கண்ணை இறுக மூடிக்கொண்டு காரின் இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள் பாரதி.....



என்ன வேல்ஸ்.. ஒரு வழியா ஜானகியோட குறையை தீர்த்து வச்சுட்டீங்க... அப்ப உங்க ஆட்டத்தை இதோட முடிச்சிடலாமா??

வேல்ஸ் ஹா ஹா ஹா.. அது எப்படி அவ்வளவு சிக்கிரம் முடிப்பதாம்.. மை டாட் எத்தனை திருவிளையாடலை ஆடியிருக்கிறார்.. எனக்கு இப்பதான் ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.. அதுக்குள்ள ஆட்டத்தை முடித்தால் எப்படி?? இன்னும் கொஞ்சம் இவங்க கூட விளையாண்டு பார்க்கலாம்.. “ என்று சிரித்தான்

அப்ப பாரதி முதலில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாதது?? ஆதி அவளை மிரட்டி சம்மதிக்க வைத்தது???

வேல்ஸ் ஹீ ஹீ ஹீ .. எல்லாம் என் லீலைதான். அவங்களை அப்படி ஆட வச்சது நானே.. வரும் வாரங்களில் இன்னும் கொஞ்சம் விளையடலாம்.. பார்க்கலாம் அவங்க எப்படி ஆடறாங்கனு..” என்று மீண்டும் சிரித்தான்

வாவ்.. சூப்பர் வேல்ஸ்... We are waiting….

வேல்ஸ் மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம் மக்களே.. மறக்காம்ல் ஆட்டத்தை தொடர்ந்து பாருங்கள்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...!!!..

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!