காதோடுதான் நான் பாடுவேன்-2



அத்தியாயம்-2

ரவேற்பறையை ஒட்டியிருந்த விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கபட்டிருந்த அறைக்கு தன் மருமகளை சென்று ஓய்வெடுத்து கொள்ள சொல்லி அனுப்பி வைத்திருந்தார் சிவகாமி... மதுவும் விட்டால் போதும் என்று அந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்து காலையில் நடந்த கூத்தையெல்லாம் மனதில் ஓட்டி பார்த்து வெந்து கொண்டிருந்தாள்...

அந்த நேரம் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு ஒரு பெண் எட்டி பார்த்தாள்...அழகான வேலைப்பாடு மிக்க லகங்கா அணிந்து, அதற்கு மேச்சாக காதணிகளும் கையில் வளையல்களையும் அணிந்து, இடைக்கும் கொஞ்சம் மேலாக தொங்கிய சடையில் மல்லிகை பூவை மடித்து தொங்க விட்டு நெற்றியில் சிறிய நெற்றி சுட்டியும் கழுத்தில் மின்னிய நெக்லஸ் ம் அவள் மாப்பிள்ளை வீட்டிற்கு மிக நெருங்கிய சொந்தம் போல காட்டியது....

முகத்தில் குழந்தைதனமும் கண்ணில் மின்னும் குறும்புமாக தன்னை நோக்கி வந்தவளை உற்று பார்த்தாள் மதுவந்தினி.. அவளை கண்டதும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தாள் மது... அதற்குள் அந்த பெண் அருகில் வந்தவள்,

“ரெஸ்ட் எடுக்கறீங்களா அண்ணி?? சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? “ என்று சிரித்தவாறு மதுவின் அருகில் அமர்ந்தாள்..

மது இல்லை என்று தலை ஆட்டவும்

“நான்தான் உங்க நாத்தனார்.. பேரு அகிலா.. நான்தான் உங்களுக்கு நாத்தனார் முடிச்சு போட்டேன்” என்று பெருமையாக சிரித்தாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது மதுவுக்கு காலையில் மணமேடையில் தன் அருகில் நின்று கொண்டிருந்தவள் இவள் தான் என்று... அவளை பார்த்து மதுவும் சிநேகமாக புன்னகைத்து,

“என் பெயர் மதுவந்தினி... “ என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டாள் மது ....

அதற்குள் அகிலா முந்தி கொண்டு,

“ஆங்... அதான் தெரியுமே.. திருமண பத்திரிக்கையில் மதுவந்தினி வெட்ஸ் மகிழன் என்று போட்டிருந்தமோ.. “ என்றவள் நாக்கை கடித்து கொண்டாள்...பின் மதுவை பார்த்து

“சாரி அண்ணி...’ என்றாள் வருத்தத்துடன்

“எதுக்கு சாரி??.. “ என்று புரியாமல் அகிலாவை பார்த்தாள் மது ..

“அது வந்து... உங்களுக்கு மகிழன் அண்ணாவை ஞாபக படுத்திட்டேன்.. அதான் “ என்று முழுங்கினாள்...

“போச்சுடா... இவளுமா??? ஆமா... நான் அந்த ஓடிப்போனவன் நினைப்புல உருகறனாக்கும்.. இவள் வந்து ஞாபக படுத்த... ”என்று மனதிற்குள் திட்டியவள்,

“அதெல்லாம் ஒன்னுமில்லை “ என்று மீண்டும் இலேசாக புன்னகைத்தாள் மது ..

அவளின் புன்னகையை கண்ட அகிலா

“வாவ்... சூப்பரா சிரிக்கறீங்க அண்ணி... நீங்க சிரிக்கிறப்போ ரொம்ப அழகா இருக்கீங்க.... எங்க மகிழன் அண்ணா கூட இப்படிதான்.. நல்லா சிரிப்பான்... நீங்க பேசாம சின்ன அண்ணியாவே வந்திருக்கலாம்.. மகிழன் ஷோ ஸ்வீட்... நீங்க அவனுக்குதான் பொருத்தமா இருந்திருப்பீங்க...” என்றவள் மெதுவாக மதுவின் காதருகில் வந்து ,

“இந்த நிகிலன் அண்ணா இருக்கானே... சரியான சிடுமூஞ்சி... எப்ப பாரு திட்டிகிட்டே இருப்பான்...எனக்கு அவனை கண்டாலே கை கால் உதறும்... பாவம் நீங்க வந்து அவன் கிட்ட மாட்டிகிட்டீங்களே!!! “ என்று ரகசியம் போல மெதுவாக முனுமுனுத்தாள்....

“ஹ்ம்ம்ம் ஆனாலும் கெட்டதுலயும் ஒரு நல்லது என்னன்னா?? .. எனக்கு ஒரு கம்பெனி கிடைச்சாச்சு....” என்று சிரித்தாள் அகிலா..

“கம்பெனியா??.. “ என்று மீண்டும் புரியாமல் அகிலாவை பார்த்தாள் மது....

“ஆமா அண்ணி… எப்பவும் அந்த சிடுமூஞ்சி என்னை மட்டுமே திட்டுவானா... இனிமேல் கூட திட்டு வாங்க நீங்க வந்திட்டீங்க இல்லை.. எப்படியும் உங்களையும் திட்டத்தான் போறான்...

அவன் உங்க கழுத்துல தாலி கட்டினதில் இருந்தே பார்த்து கிட்டேதான் இருக்கேன்... அவன் எல்லாரையும் முறைச்சுகிட்டே இருக்கான்..

எங்க அம்மாவே அவன் கண்ணுல படாம எஸ் ஆகிகிட்டிருக்காங்க... நீங்களும் அவன் கண்ணுல தனியா மாட்டிறாதிங்க... உண்டு இல்லைனு பண்ணிடுவான்.. “ என்று தன் அண்ணனின் அருமை பெருமைகளை விளக்கி சொல்லி மதுவின் வயிற்றில் புளியை கரைத்தாள் அகிலா...

“ஐயோ!!! இது வேறயா... “ என்று நொந்து கொண்டாள் மது..

பின் அகிலா தொடர்ந்து கதை அடித்து கொண்டிருக்க,

“அகிலா “என்று சிவகாமி அழைத்தார் தன் மகளை..

“இருங்க அண்ணி.. அம்மா கூப்பிடறாங்க.. என்னனு கேட்டுட்டு வந்திடறேன்... நாம அப்புறம் பேசலாம்... ” என்று துள்ளி குதித்து ஓடினாள்..

தன் அன்னையிடம் சென்றவளை

“போய் நிகிலனை கீழ வர சொல்லு அகிலா... அண்ணியோட பேரன்ட்ஸ் கிளம்பறாங்களாம்.. ” என்றார் சிவகாமி...

“ நான் எப்படி??.... “ என்று இழுத்தவள் தன் அன்னை முறைக்கவும் வேகமாக சென்று மாடி ஏறினாள்..

“ஐயோ!! இவன் ரூமுக்கு போறது அந்த சிங்கத்தோட கூண்டுக்கு போற மாதிரி இருக்கு.. அந்த சிங்கம் கூட போன போகுதுனு கடிக்காம விட்டுடும்.. இவன் கடிச்சு குதறிதான அனுப்புவான்...

இன்னைக்கு வேற புல் கடுப்புல இருப்பான்.. இந்த அம்மா கடைசியில என்னை பலி ஆடாக்கிட்டாங்களே... “ என்று புலம்பியவாறே நிகிலன் அறையை அடைந்தவள் மெதுவாக கதவை தட்டினாள்...

அதை கேட்டு படுக்கையில் விழுந்து கிடந்த நிகிலன் எழுந்து வந்து கதவை திறந்தவன், அகிலா வெளியில் நின்று கொண்டிருப்பதை கண்டு

“என்ன??? “என்று எரிந்து விழுந்தான்..

அதை கேட்டதும் அவள் எதுக்கு வந்தாள் என்பது மறந்து முழித்து கொண்டு நின்றாள் அகிலா....

‘ஏய்.. அகிலா... எதுக்கு கதவை தட்டின.. ” என்று கத்தினான் கீழ கேட்காதவாறு.. அவன் கத்தலில் விழித்து கொண்டவள்

“அது வந்து...” என்று தலையை சொரிந்து அவசரமாக யோசித்தவள் நல்ல வேளையாக நினைவு வர

“ஆங் ஞாபகம் வந்திடுச்சு... அம்மா உன்னை கீழ வர சொன்னாங்க.. ” எண்று சொல்லி விட்டு வேகமாக கீழ ஓடி மறைந்தாள்..

இல்லைனா அவள் மறந்து நின்றதுக்கும் அவன் கிட்ட அர்ச்சனை வாங்கி கட்ட வேண்டி இருக்கும் என்று உடனே எஸ் ஆகினாள்..

“இந்த அம்மாக்கு வேற வேலை இல்லை...மனுசனை நிம்மதியாகவே விட மாட்டாங்க போல... “என்று திட்டிகொண்டே கீழ இறங்கி வந்தான் நிகிலன்...

வரவேற்பறையில் மதுவின் உறவினர்கள் கிளம்ப ரெடியாக இருந்தார்கள்..

மதுவின் அறைக்கு சென்ற அவளின் அம்மா சாரதா,

“மது .. நாங்க கிளம்பறோம்.. ..நீ காலையில நடந்தது எதயும் நினைத்து வருத்த படாத.. எப்படியோ நிக்க இருந்த கல்யாணம் மாப்பிள்ளை தயவால் நல்ல படியா முடிஞ்சிடுச்சி...

உனக்கு பெண் கேட்டு வர்றப்பயே பெரிய மாப்பிள்ளை பற்றியும் விசாரிச்சோம்... இவரும் தங்கமானவர் தான் மது.. அதனால் நீ எதுவும் பயப்பட வேண்டாம்.. சம்பந்தி அம்மா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க ...

நீ தான் இந்த வீட்டு சூழ்நிலையை அனுசரித்து போகனும்... " என்று மூச்சு விடாமல் தன் அறிவுரைகள வழங்கினார் சாரதா..மதுவும் சரி என்று தலை ஆட்டினாள்...

தன் பெற்றோர் தன்னை தனியா விட்டுட்டு போறாங்க என்றதுமே அவள் கண்கள் கலங்கியது...அதே கலங்கிய கண்களுடன் வரவேற்பறைக்கு வந்ததும் அங்கு தன் தந்தையை காணவும் தன்னை மறந்து ஓடி சென்று கட்டி கொண்டாள்... அவரின் தோளில் முகம் புதைத்து குழுங்கினாள்..

அவளின் தந்தையுமே தழுதழுத்தார்... அனைவரின் கண்களுமே கலங்கியது அந்த நொடியில்....

கீழ இறங்கி வந்து கொண்டிருந்த நிகிலன் மட்டும் அங்கு நடப்பதை கண்டு இன்னும் கடுப்பானான்..

"என்னமா நடிக்கிறா... இப்படி நடிச்சு தான் என் தம்பியை மயக்கி இருப்பா இந்த வீட்டிற்குள் வருவதற்கு .. இப்ப என்னடான்னா அவள் பெற்றோரை விட்டு பிரிய மனம் இல்லாதவ மாதிரி நல்லாவே நடிக்கிறா... " என்று முகம் இறுகியது..

ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் அங்கு நடப்பவைகளை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.. ஒரு வழியாக மதுவை தேற்றிய அவள் பெற்றோர்கள் நிகிலனிடம் வந்து

"மாப்பிள்ளை.... மது சின்ன பொண்ணூ...ஒரே பொண்ணுங்கறதால செல்லமா வளர்த்துட்டோம்... அவள் எதுவும் தப்பு செய்தால் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைங்க.. அவளை கண் கலங்காமல் பார்த்துக்கங்க.." என்று தழுதழுத்தார் மதுவின் அப்பா சண்முகம்....

அவரின் கைகளை பிடித்து கொண்ட நிகிலன்,

"நீங்க கவலை படாதிங்க சார்.. உங்க பொண்ணை நாங்க பார்த்துக்கறோம்.. நீங்களும் நடந்ததை எல்லாம் மறந்திடுங்க... " என்று சமாதானம் செய்தான்...

“சார் இல்ல மாப்பிள்ளை.. என்னை மாமானு கூப்பிடுங்க.... எப்படியோ சரியான நேரத்துல நீங்க மனசு வச்சதால தான் என் பெண்ணோட வாழ்க்கை திரும்ப கிடைத்தது.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை.. “ என்று மீண்டும் தழுதழுத்தார் சண்முகம்..

அதை கண்டு கொஞ்சம் இலகியவன்,

“இருக்கட்டும் மாமா... நானும் என் தம்பி சார்பா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்... “ என்கவும் அவரின் முகத்தில் நிம்மதி பரவியது.. எப்படியோ தன் பொண்ணு நல்ல இடத்துலதான் சேர்ந்திருக்கா....” என்று மனதுக்குள் சந்தோஷபட்டார்..

ஒரு வழியாக பெண் வீட்டார் அனைவரும் கிளம்பி செல்லவும் மற்ற உறவினர்களும் களைந்து சென்றனர்...அந்த இன்ஸ்ட்ரக்டர் பெண்மணியும் இன்னும் இரண்டு நெருங்கிய சொந்தக்கார பெண்கள் மட்டும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்...

அதற்குள் மேலெ சென்ற நிகிலன் வேகமாக வேறு உடைக்கு மாறி கீழ வந்தான்.. அதை கண்ட சிவகாமி எழுந்து

“நிகிலா... “என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்..

“அம்மா.. மண்டபத்துல இன்னும் செட்டில் மென்ட் முடியலை... நான் போய் பார்த்து முடிச்சிட்டு அப்படியே ஸ்டேஷனுக்கு போறேன்..” என்றான்..

“நைட் கொஞ்சம் சீக்கிரம் வந்திருடா.. இன்னைக்கு நாள் நல்லா இருக்காம். இன்னைக்கே முதலிரவு வச்சுக்கலாம் னு... “ என்று அவர் முடிக்கு முன்னே

அவன் முகம் எரிமலையாக மாறி இருந்தது..

“அம்மா... நீ சொல்ற மாதிரி எல்லாம் என்னால ஆட முடியாது... அதுக்காக தான் நான் இந்த கலயாணம் கறுமாதி இதெல்லாம் எனக்கு வேண்டாம் னு இருந்தேன்.. என்னை கொண்டு வந்து இப்படி மாட்டி விட்டுட்டு அதை செய் இத செய் னு ஏதாவது சொன்னீங்க அப்புறம் உங்க செல்ல மகன் ஓடிப்போன மாதிரி நானும் எங்காவது போய்டுவேன்....

இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன்... அதனால என்னை எதுவும் தொந்தரவு பண்ணாதிங்க... " என்று குமுறிவிட்டு வேகமாக வெளியேறினான்...

மற்றவர்கள் முன் பெத்த தாய் என்று கூட பார்க்காமல் தன் மகன் கத்தியதை நினைத்து சிவகாமியின் கண்கள் கலங்கின..

அதற்குள் அருகில் இருந்த அந்த பெண்

“விடு சிவகாமி.... அவனுக்கும் இது எதிர்பாராதது தான.. தம்பிய கட்டிக்க போறதாயிருந்தவ தனக்கு தாரமாகி வந்தா அவனாலயும் எப்படி உடனே ஏத்துக்க முடியும்..?? கொஞ்சம் விட்டு பிடி.. “ என்று சிவகாமிக்கு அட்வைஸ் பண்ணினார்...

இந்த கலவரத்தில் இந்த வீட்டிற்கு புதுசா வந்திருக்கிற மருமகளையும் பார்க்க வேண்டுமே என்று எண்ணி தன் கண்களை துடைத்து கொண்டு மது இருந்த அறைக்கு சென்றார் சிவகாமி..

அங்கு மது இன்னும் திருமண புடவையை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்து இருக்க, அவள் அருகில் சென்றவர்,

“மது மா... நீ வேற புடவை மாத்திக்க...” என்றவர் அருகில் இருந்த ஒரு கப்போர்டை திறந்து அதில் இருந்த புடவைகளை காட்டி,

“இதெல்லாம் நான் என் மருமகளுக்காக அப்பப்ப வாங்கி வச்சது....உனக்கு திருமண புடவைக்கு பிளவுஸ் தைக்கிறப்பயே இதுக்கும் பிளவுஸ் தச்சி வச்சுட்டேன்... இதுல உனக்கு எது பிடிக்குதோ எடுத்துக்கோ... “ என்று தன் கவலையை மறைத்து கொண்டு சிரித்தார்...

“பரவாயில்லை..... “ என்று இழுத்தவள் அவரை எப்படி அழைப்பது என்று புரியாமல் குழம்பி நின்றாள் மது ..

இப்பதான் நிறைய பேர் மாமியாரை அம்மானு கூப்பிடறாங்க.. சில பேர் அத்தைனு கூப்பிடறாங்க.. அதனால அவளுக்கு எப்படி அழைப்பது என்று குழம்ப, அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்ட சிவகமி,

“நீ என்னை அத்தைனு கூப்பிடு மது... தயவு செய்து அம்மானு மட்டும் கூப்பிடாதா... எங்க வீட்ல ஏற்கனவே மூனு வாலுங்க அம்மா அம்மா னு,, கூப்பிட்டு என் காதே புளிச்சு போச்சு...இப்ப யாராவது அம்மானு கூப்பிட்டாலே அலர்ஜியா இருக்கு...

என் மருமக வாயால அத்தை னு கூப்பிட்டு கேட்கதான் இத்தனை நாளா காத்துகிட்டிருந்தேன்.... ஒரு வழியா என் ஆசை இப்பதான் நிறைவேறுச்சு.. அதனால அத்தைனு கூப்பிடு... “ என்று சிரித்தார்...

அவரின் வெளிப்படையான பேச்சு மதுவிற்கு கொஞ்சமாக பிடித்து போக, அவளும் புன்னகைத்து

“சரிங்க அத்தை.. “ என்று மெல்ல சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் இப்படி சிரிச்சா என் மருமக இன்னும் அழகா இருக்கா.. நீ எத பத்தியும் கவலைப்படாமல் சிரிச்சுகிட்டே இருடா.. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.... “ என்று சொல்லியவாறு அவளின் சடையில் இருந்த அலங்காரங்களை எடுத்து விட்டார்..

அகிலாவும் வந்து உதவி செய்ய ஒரு வழியாக அவள் நீண்ட சடையில் தைத்திருந்த அந்த அலங்காரங்களை எல்லாம் கழற்றி மதுவின் கையில் ஒரு புடவையை கொடுத்து

“நீ போய் குளிச்சிட்டு இத மாத்திகிட்டு இங்கயே படுத்து கொஞ்ச நேரம் தூங்கு டா ... நாங்க வெளில இருக்கோம்.. எதுவும் வேணும்னா அகிலாவ கூப்பிடு... அவ வந்து உனக்கு உதவி செய்வா... “ என்று அவள் கன்னத்தை வருடி அகிலாவையும் கூட்டிகிட்டு அந்த அறை கதவை மூடிவிட்டு சென்றார் சிவகாமி...

மதுவுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது.. ஏதோ இவங்க பார்க்க கொஞ்சம் நல்லவங்களா இருக்காங்க.. என் பக்கத்து வீட்டு அக்கா மாமியார் மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்ல மாட்டாங்களா இருக்கும்... பார்க்கலாம்.. “ என்று மனதுக்குள் சொல்லியவள் பின் குளித்து முடித்து சிவகாமி கொடுத்திருந்த புடவையை கட்டி கொண்டு வந்தவள் மீண்டும் அந்த கட்டிலில் அமர்ந்தாள்...

“நல்ல வேளை.. இந்த அம்மா திட்டி திட்டியாவது இந்த புடவையை சுத்த கத்து கொடுத்தாங்களே.. இல்லைனா இப்ப நல்லா முழிச்சுகிட்டு நின்னுகிட்டிருந்திருக்கணும்... தங்க்ஷ் மம்மி....”

என்று மனதுக்குள் தன் அம்மாவிற்கு நன்றி சொன்னவள் அப்பொழுது தான் தன் பெற்றோர்களின் நினைவு வந்தது....

“சே... நேற்று வரை எவ்வளவு ஜாலியா இருந்தேன்.. இப்படி ஒரு மஞ்ச கயித்த கட்டி காலையில வரைக்கும் யாருனே தெரியாத இந்த காட்டுல கொண்டு வந்து தள்ளிவிட்டுட்டு போய்ட்டாங்களே... I hate them.. “என்று மனதுக்குள் தன் பெற்றோர்களை திட்டியவள் கால்களை கட்டிலில் மடித்து குத்துக்கால் வைத்து உடகார்ந்து கொண்டு முகத்தை முழங்காலில் புதைத்து கொண்டாள்..

அவள் கண்களில் இருந்து நீர் எட்டி பார்த்தது.. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தவள் பின் தலையை நிமிர்த்தி பார்வையை சுழல விட்டாள்..

அது ஒரு விசாலமான அறை .. அதன் நடுவில் அந்த கட்டிலும் அதன் மேல அவள் தனியாக உட்கார்ந்து இருப்பதையும் உணர்ந்து,

இராமயணத்துல சீதை அசோக வனத்தில் சோகமாக அமர்ந்திருக்கும் காட்சி நினைவு வந்தது...

இராவணன் சீதையை சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்று, அவனின் ராஜ்ஜியத்தின் சிறப்புகளையும் ,வளங்களையும் சீதைக்கு காட்டி அவளை தன் வசம் கவர முயல, சீதையோ அதை எல்லாம் ஏறெடுத்தும் பார்க்காமல் அதோடு அவன் அழித்த அந்த வசதி மிகுந்த அரண்மனையை மறுத்து அசோக வனத்தில் அந்த அசோக மரத்தடியில் தான் இருப்பேன் என்று அடம்பிடித்து சீதை அந்த காட்டில் வசிப்பாள்...

அவளை சுற்றிலும் அரக்கிகள் சுழ்ந்து இருப்பர்... தன் நிலையும் அதை போல இருப்பதாக தோன்றியது மதுவுக்கு...

“இப்படி நேற்றுவரை யாருனே தெரியாத இந்த காட்டில் கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்களே...” என்று புலுங்கியவள் சுற்றிலும் கண்களை சுழல விட்டு

“இந்த இடமும் அந்த காடு மாதிரிதான் இருக்கு... என்ன இங்கு அந்த அரக்கிகள் மிஸ்ஸிங்.. மற்றபடி பீலிங்ஸ் ஒன்னுதான்..” என்று அந்த நிலையிலும் தனக்குள் சிரித்து கொண்டாள்...

பின் சீதாவிற்கு உதவி செய்த அவள் தோழி திரிசடை நினைவு வர,

“அங்கு திரிசடை மாதிரி இங்கு எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்?? “ என்று நினைக்கையிலயே அறைக்கதவை திறந்து கொண்டு

“தூங்கறீங்களா அண்ணி ?? .. “என்று அகிலா உள்ளே வந்தாள்

“இவதான் திரிசடையோ??? “என்று மனதுக்குள் அகிலாவை அந்த திரிசடை அரக்கி மாதிரி கற்பனை பண்ணி சிரித்து கொண்டாள் மதுவந்தினி...

(ஹீ ஹீ ஹீ... இது மட்டும் அகிலா குட்டிக்கு தெரிஞ்சது மது நீ காலி.... )

மதுவின் அருகில் வந்த அகிலா,

“மஹாராணியாரே.. இந்த சேவகன் இல்ல சேவகி கொண்டு வந்துள்ள செய்தி என்னவென்றால்,

தாங்கள் துயில் கழைந்து எழுந்து முகம் கழுவி அலங்கரித்து கொண்டு இந்த மல்லிகையை சூடிக்கொண்டு நமது அரசபைக்கு வர வேண்டுமாம்... இது இந்த மகிழ்மதி கோட்டை ராஜமாதா சிவகாமி தேவியின் உத்தரவு... “

“நான் விடை பெறுகிறேன்... இன்னும் அந்த ராஜகுமாரன் பாகுபலி நிகிலன் அவர்களுக்கு வேற செய்தி வைத்திருப்பார்கள்... நான் போய் அந்த பணியை நிறைவேற்றனும்.. அப்ப உத்தரவு வாங்கிக்கறேன்.. மஹாராணி... “ என்று இடைவரை குனிந்து தன் கையை முன்னால் நீட்டி பணிவுடன் கூறவும், அவளின் செய்கையால் சிரிப்பு வந்தாலும் அவள் என்ன சொன்னாள் என்று ஒன்றும் புரியாமல் முழித்தாள் மது ....

அவள் முழிப்பதை கண்ட அகிலா சிரித்துகொண்டே,

“அண்ணி உங்களை ரெடியாகி ஹாலுக்கு வர சொன்னாங்க உங்க மாமியார்.....

அப்புறம் எப்படி இருந்தது என் வசனம்?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினாள்...

அதை கண்டு மெதுவாக புன்னகைத்தாள் மது....

பின் அவளின் அருகில் வந்த அகிலா

“அண்ணி.... உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா ?? ... நீங்க பாகுபலி பார்ட் 2 பார்த்தீங்களா?? அதுல நம்ம பிரபாஸ் அந்த யானையை எப்படி சண்டை போட்டு அடக்குவார்...!!! அதெல்லாம் தேவையே இல்ல அண்ணி... நம்ம வீட்டு பாகுபலி நிகிலன் கிட்ட விட்டிருந்தா முறச்சே அந்த யானையை தன் காலடியில் விழ வைத்திருப்பான்..

ஹா ஹா ஹா “ என்று வாய்விட்டு சிரித்தாள் அகிலா...

அதை கண்டு மதுவின் புன்னகை இன்னும் கொஞ்சம் பெரிதானது....

“அப்பாடா... மஹாராணியார் சிரிச்சுட்டாங்க... அகிலா... இவங்கள சிரிக்க வச்ச பெருமை உன்னையே சேரும்.. “ என்று தன்னை பார்த்து விரலை நீட்டி சிரித்து கொண்டாள்....

“ஹ்ம்ம்ம்ம் அப்புறம் அண்ணி... இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன்...

உங்களை பார்க்க நம்ம பக்கத்து வீட்ல இருந்து பார்வதி ஆன்ட்டி வந்திருக்காக,,, எதிர்த்த வீட்ல இருந்து ஈஸ்வரி ஆன்ட்டி வந்திருக்காக.. வாமா மதுவந்தினி .... “ என்று இழுத்தவள்

“அண்ணி... அந்த மின்னல் மாதிரி இப்படி போய்ட்டு அப்படி ஓடி வந்திராதிங்க... இப்ப வந்திருக்கிறவங்க எல்லாம் இந்த தெருவின் டெரர் ஆன்ட்டி ஸ்... ஒருத்தங்கள விட்டு வைக்க மாட்டாங்க வம்பு பேச...

உங்களை எப்படி படுத்த போறாங்களோ?? என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அப்புறம் அவங்க ஏதாவது சொன்னால் நீங்க கண்டுக்காதிங்க... “ என்று தன் அண்ணியை முன்பே தயார் படுத்தினாள் அகிலா...

அதை கேட்டு கொஞ்சம் மிரண்டாள் மது...

“ஐயோ... அண்ணி.. இதுக்கெல்லாம் எதுக்கு பயந்துக்கறீங்க... சும்மா ஒரு பில்டப் க்கு தான் சொன்னேன்.. நீங்க சும்மா போய் பாருங்க.. நீங்க ரெடியாகி இருங்க... நானே வந்து கூட்டி கிட்டு போறேன்.. “ என்று குதித்து கொண்டே வெளியில் ஓடினாள் அகிலா....

மதுவும் எழுந்து முகம் கழுவி தன் நீண்ட கூந்தலை பின்னி அகிலா வைத்து விட்டு சென்றிருந்த மல்லிகையை எடுத்து மடித்து தலையில் வைத்து கொண்டு முகத்திற்கு இலேசாக பவுடர் போட்டு, கண்ணாடியில் பார்க்க எல்லாம் சரியாக இருந்தது...

ஆனால் முகத்திலும் கண்ணிலும் ஏதோ ஒன்று குறைவதை போல இருக்க அப்பொழுது தான் இந்த திருமண கலாட்டாவில் தன் முகத்தில் ஒரு வித கவலை அப்பி கொண்டிருப்பதை போல இருந்தது...

“இப்படியே போனால் இப்ப வந்திருக்கிறவங்க மறுபடியும் அந்த ஓடி போனவனை நினைத்து தான் நான் கவலை படுவதாக மறுபடியும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.. இனிமேல் எக்காரணத்தை கொண்டும் முகத்தில் எதையும் காட்ட கூடாது...


ந்த திருமணத்தில் நடந்த கூத்தால் எனக்கு ஒன்னும் பாதிப்பு இல்லைனு காட்டிக்கணும்.. “ என்று முடிவு செய்தவள் முகத்தில் முயன்று புன்னகையை வர வழைத்தாள்... கொஞ்சம் பெட்டராக இருக்க,

இப்படியே மெய்ன்டெய்ன் பண்ண வேண்டியதுதான்.. “ என்று எண்ணி மேலும் சிரித்து பார்த்து கொண்டாள்..

அப்பொழுது அகிலா வரவும் அவளுடன் வரவேற்பறைக்கு சென்றாள் உள்ளுக்குள் கொஞ்சம் பயந்தவாறு....

அகிலா சொன்ன மாதிரி மூன்று ஆன்ட்டிகள் உட்கார்ந்து இருக்க சிவகாமி அவர்களுக்கு ஏற்கனவே சாப்பிட கொடுத்து உபசரித்திருக்க, அவர்களும் கல்யாண பட்சனங்களை சாப்பிட்டுக் கொண்டே கதை பேசி சிரித்து கொண்டிருந்தவர்கள் மதுவை கண்டதும் ஆச்சர்யத்துடன் மேலும் கீழும் ஆராய்ந்தனர்.... பின் சிவகாமியை பார்த்து

“பரவாலை சிவகாமி ... உன் மருமக அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா... நீ அந்த வடிவேலனை வேண்டிகிட்டது வீண் போகலை.. இப்படி தங்கமான மருமகளை உனக்கு கொடுத்திருக்கான்... “ என்றனர்..

அதை கேட்டு சிவகாமி மனம் பெருமையில் நிறைந்தது.. மதுவும் நிம்மதி மூச்சு விட்டாள்...பின் அவர்கள் எழுந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பரிசை மதுவிடம் கொடுத்து

“நாங்க காலையில் கல்யாணத்துக்குவரமுடியல மா.. அதான் இப்ப உன்ன பார்த்துட்டு போலாம்னு வந்தோம்... “என்று சிரித்தனர்...மீண்டும் ஒரு முறை மதுவை ஆராய்ந்தவர்கள்

“பொண்ணு நல்லாதான இருக்கா.... இப்படி பட்ட நல்ல பொண்ணை விட்டுட்டு அந்த மகிழன் எதுக்கு ஓடிப்போனான்?? “என்று தாங்கள் வந்த வேலையை ஆரம்பித்தனர்..

அதை கேட்டு மதுவின் முகம் இருள ஆரம்பித்தாலும் தனக்குள் சொல்லி கொண்ட மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாமல் பல்லை கடித்து கொண்டு இலேசாக புன்னகைத்தவாறு நின்றாள்....

“ஹ்ம்ம்ம் அவனுக்கு கொடுத்து வைக்கல.. ஆனா கெட்டதிலும் ஒரு நல்லதா இத்தனை வருசமா கல்யாணம் ஆகாம இருந்த நிகிலனுக்கு கல்யாணம் ஆயிடுச்சே... அதுவே போதும்...

31 வயது ஆனதால நிகிலனுக்கு பொண்ணு கிடைக்கிறது தான் கஷ்டமா இருந்திருக்கும்... அதான் இப்ப தீர்ந்து போச்சு.. மகிழனுக்கு 28 தான ஆகுது.அவனுக்கு பொண்ணு ஈசியா கிடச்சிரும்...

என்ன தம்பிக்கு நிச்சயம் பண்ணி அண்ணனுக்கு கழுத்த நீட்ட வேண்டியதா போச்சு... “ என்று பாவமாக மதுவை பார்த்தனர்...

மதுவுக்கோ பொறுமை காற்றில் பறந்து கொண்டிருந்தது.. சிவகாமியும் பல்லை கடித்து கொண்டு இருந்தார்...

மதுவை மேலும் உற்று பார்த்தவர்கள்

“பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே... ஒரு 21 இல்ல 22 வயதுதான் இருக்கும் போல.. நிகிலனோட வயதுக்கு பார்த்தா ரொம்ப வித்தியாசமா இருக்குமே.. “ என்று அவர்கள் வயது வித்தியாசத்தை வைத்து அந்த ஈஸ்வரி யோசனை பண்ண, பின் அவரே தெளிந்து

“ஹ்ம்ம்ம்ம்ம் நீ பார்க்கிறப்போ மகிழனுக்குனு தான் பொண்ணு பார்த்திருப்ப.. அவன் வயதுக்கு இந்த பொண்ணு வயது பொருத்தமாக இருந்திருக்கும்.. இப்படி மாப்பிள்ள மாரி அண்ணனுக்கு பொண்டாட்டியா வருவானு நீ மட்டும் கனவா கண்ட.. அதனால் தான் வயது வித்தியாசம் இருந்தும் கை விடாம இந்த பொண்ணு வாழ்க்கையை காப்பத்திட்ட சிவகாமி... “ என்க,

மதுவுக்கு பொறுமை ஓடிப்போய் முகம் இறுகி கண்ணில் நீர் கட்டியது.. தன்னை வெளிக்காட்டாமல் தலையை குனிந்து கொண்டாள்...

அதை கண்ட சிவகாமி அவர்களை மேலும் பேச விடாமல் தடுக்க

“என்னவோ ஈஸ்வரி.. அந்த முருகன் எப்படி எழுதி வைத்திருக்கானோ அப்படி தான் நடக்கும்.. “என்று பெருமூச்சு விட்டவர், மதுவை பார்த்து

“மது மா.. நீ போய் வீட்டை எல்லாம் சுத்தி பார்.. எவ்வளவு நேரம் நின்னுகிட்டிருப்ப...

அகிலா.. அண்ணிய கூட்டிகிட்டு போய் வீட்டை சுத்தி காட்டு.. “ என்றார்...

மதுவிற்கோ அந்த அரக்கிகளிடம் இருந்து தப்பிச்சு விட்டதாக தோன்றியது..மனதில் 1000 முறை தன் மாமியார்க்கு நன்றி சொன்னாள் மது....

அதே நேரம் எதையோ எடுக்க வந்த நிகிலன் அவர்கள் பேசுவதை கேட்டு அதுவும் வயது வித்தியாசத்தையும் தம்பிக்கு பார்த்தவள் அண்ணனுக்கு மனைவி ஆகிட்டா... என்றதையும் கேட்டு கொதித்தவன் உடல் விறைக்க வேகமாக உள்ளே வந்து மாடியில் கட கட வென்று தாவி ஏறியவன் தான் எடுக்க வந்ததை எடுத்து கொண்டு மீண்டும் அதே வேகத்தில் கீழ இறங்கி தன் அன்னையை பார்த்து அனல் கக்கும் பார்வையை செலுத்தி விட்டு வேகமாக வெளியேறினான்...

சிவகாமியோ

“ஐயோ !! ஏற்கனவே அவன் கொதிச்சுகிட்டு இருக்கான்.. பத்தாததுக்கு இவளுங்க வேற அவனை சீண்டி விட்டுட்டாளுங்களே.. யார் அழுதா இவங்களை இப்ப வர சொல்லி... “ என்று மனதுக்குள் அர்ச்சனை பண்ணினார்....

மதுவை அழைத்து சென்ற அகிலா

“என்ன அண்ணி?? ... எப்படி இருந்தது நம்ம டெர்ரர் ஆன்ட்டீஸ் இன்டர்வ்யூ ?? “ என்றவள் மதுவின் முகம் இன்னும் கருத்து இருக்கவும்

“நீங்க ஒன்னும் கண்டுக்காதிங்க அண்ணி.. அவங்க அப்படிதான்... சரி வாங்க நாம இந்த அரண்மனைய சுத்தி பார்க்கலாம்.. “ என்று சிரித்து கொண்டே சமையல் அறைக்கு அழைத்து சென்றவள்

“அண்ணி.. இது கிச்சன்.. இங்கதான் சமைப்பாங்க... இது பூஜை ரூம்.. இங்க தான் பூஜை எல்லாம் பண்ணுவாங்க... இது பாத் ரூம் இங்கதான் குளிப்பாங்க...இது ஜிம்.. நம்ம வீட்டு ராஜகுமாரன்கள் இங்கதான் உடற்பயிற்சி செய்வாங்க.... அப்புறம் இது பெட்ரூம்.. இங்க தான் தூங்குவாங்க... “ என்று ஒவ்வொறு அறையாக காட்டி விளக்க, மது தன் கடுப்பை மறந்து அவளை பார்த்து முறைத்தாள்....

“இது எனக்கு தெரியாதா?? இதுக்கு ஒரு விளக்கமா??? “ என்ற மாதிரி மது தன்னை முறைப்பதை கண்ட அகிலா,

“வாவ்... சூப்பர் அண்ணி... நீங்க பாசாயிட்டீங்க.. “ என்று கைதட்டி சிரித்தாள்...

“பாசாகிட்டனா?? “ என்று புரியாமல் மது அகிலாவை பார்க்க

“ஹீ ஹீ ஹீ... எங்க வீட்டுக்கு மெம்பரா சேரணும்னா பேசிக் குவாலிபிகேசன் முறைக்கிறது தான்... நல்ல முறைக்காட்டியும் கொஞ்சமாவதாவது முறைக்க தெரிஞ்சிருக்கணும்...

அதான் உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வச்சேன்.. அதன் படி நீங்களும் நல்லாவே முறைக்கறீங்க.. சோ you are qualified to join our family...Welcome to our family and முறைப்பவர்கள் சங்கம்.. “என்று அவள் கையை பிடித்து குலுக்கி வாழ்த்து சொன்னாள் அகிலா...

அதை கண்டு மதுவின் புன்னகை பெரிதானது...

அப்பாடா.. ஒரு வழியா உங்க முகத்துல புன்னகை பூ கடைசியா பூத்திருச்சு.. நானும் உங்கள் முகத்தில் இந்த பூவை பூக்க வைக்க என்னெல்லாம் செஞ்சு போராடி கிட்டிருக்கேன்.. அப்படியே மொட்டு அவிழ்ந்து கொஞ்சம் கொஞ்சமா பூ விரியற மாதிரி இப்பதான் கொஞ்சமா உங்க பூ விரிய ஆரம்பிச்சிருக்கு.... இன்னும் நல்லா பூத்தா இன்னும் சூப்பரா இருக்கும்...

ஹ்ம்ம்ம் பூக்க வச்சிடலாம்.. இந்த அகிலா எதுக்கு இருக்கா.. “ என்று தன் காலரை தூக்கிவிட்டு கொள்ள மது மீண்டும் புன்னகைத்தாள்...

பின் மதுவை மாடிக்கு அழைத்து சென்றாள் அகிலா..

மாடியில் இருந்து ஏறியதும் நேராக நடை பாதை செல்ல அதன் இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு அறைகள் இருந்தன...முதல் அறை மூடி இருக்க, அதை காட்டி

“மஹாராணியாரே... இதுதான் பாகுபலி நிகிலன் உறைவிடம்.. தங்களின் அந்தப்புரம்... “என்று அவள் காதில் கிசுகிசுத்தவள்

“இந்த ரூமுக்குள்ள போறதும் ஒன்னுதான்.. அந்த சிங்கத்தோட கூண்டுக்குள்ள போறதும் ஒன்னுதான்.. யாராவது போனால் கடிச்சு குதறிடுவான்... எனிவே நீங்க இங்கதான வாழ போறிங்க... அந்த அறையை அப்புறம் பார்த்துக்கலாம்.. வாங்க நாம அடுத்த அறையை பார்க்கலாம்... “ என்று அவளை அடுத்த அறைக்கு அழைத்து சென்றாள்..

முதல் அறையை ஒட்டியிருந்த அடுத்த அறைக்கு சென்றவள்

“இதுதான் இந்த மகிழ்மதி கோட்டையின் சின்ன இளவரசர் மகிழன் அறை.. “ என்று அகிலா சொல்ல, அதன் உள்ளே காலடி எடுத்து வைத்து கொண்டிருந்த மது மகிழன் என்ற பேரை கேட்டதும் தீச்சுட்டதை போல காலை வெடுக்கென்று வெளியில் இழுத்துக் கொண்டாள்....

அதை கவனித்த அகில,

“ஒன்னும் பயப்படாதிங்க அண்ணி.. உள்ள வாங்க..எப்படியும் நாளையில் இருந்து இதை எல்லாம்நீங்கதான் கூட்டி பெருக்கி துடைக்க ப்ஓறீங்க.. அதனால இப்ப பார்க்கிறதால ஒன்னும் தப்பில்லை....”என்று சிரித்தாள்..

“என்னது?? இவ்வளவு பெரிய வீட்டை பெருக்கி துடைக்கணுமா?? “என்ருமதுமனதுக்குள் அலற, அதை கண்டு கொண்டவள்

“ஹா ஹா ஹா.. என்ன அண்ணி?? பயந்துட்டீங்களா... அதெல்லாம் நீங்க செய்ய வேண்டாம்.. ராஜ மாத கஷ்டபடக்கூடாது னு நம்ம பாகுபலி எல்லா வேலைக்கும் ஆள் வச்சிருக்கான்... சோ நீங்க தப்பிச்சீங்க... சரி வாங்க. அந்த மங்கி மகிழன் ரூமை எப்படி வச்சிருக்கானு சுத்தி பார்க்கலாம்.. “ என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே சென்றாள்..

மதுவுக்கோ அந்த அறைக்குள் செல்ல மனமே இல்லை... அகிலா கையை பித்து இழுக்கவும் வேறு வழி இல்லாமல் உள்ளே சென்றாள்.. அதுவும் விசாலமான அறை .. குளியல் அறை இணைந்து இருக்க, அந்த அறையை ஒட்டி பால்கனியும் இருந்தது.. நான்கு அறைகளுமே ஒரே மாதிரி அமைப்பில் பால்கனியோடு இணைந்திருந்தன..

நேற்று இரவு அவசரமாக கிளம்பி திருமண மண்டபத்திற்கு சென்றிருப்பான் போல.. அவன் கடைசியாக பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் அப்படியே கிடந்தன.. அவன் கழட்டிவிட்ட ட்ரெஸ்கள் இன்னும் சில கேங்கரில் அப்படியே மாட்டி இருந்தன...

சில ட்ரெஸ்கள் படுக்கையின் மேல அப்படியே கிடந்தன..

அறையின் மூலையில் ஒரு பெரிய டேபில் ம் அலுவலகத்தில் அமரும் முறையான சுழல் நாற்காலியும் இருந்தன.. இரவு நீண்டநேரம் இங்கு அமர்ந்து வேலை செய்வான் போல...மேஜையின் மீது சில சாப்ட்வேர் எஞ்சினியரிங்க் சம்பந்தமான புத்தகங்கள் அடுக்கி வைக்கபட்டிருந்தன.....

மதுவின் பார்வை மேஜையின் மீது இருந்த புகைபடத்திற்கு செல்ல, அங்கு ஒரு தம்பதியர் சேரில அமர்ந்திருக்க, அந்த குடும்ப தலைவரின் மடியில் ஒரு 3 வயது பெண் குழந்தை கொலுகொலு கன்னங்களும் உருண்டை விழிகளும் அடர்ந்த முடியுடன் அழகாக கை தட்டி சிரிக்க, அவர்கள் பின்னால் இரண்டு சிறுவர்கள் 12 , 15 வயதிருக்கும் நின்று கொண்டு அழகாக புன்னகைத்தார்கள்...

மீண்டும் மது உற்று அவர்களை பார்க்க, அதில் தெரிந்த அனைவரும் மகிழ்ச்சி பொங்க சிரித்துக் கொண்டிருந்தனர்...

மது அந்த புகைபடத்தையே பார்த்துகொண்டிருப்பதை கண்ட அகிலா

“இதுதான் அண்ணி எங்க அப்பா... உங்க மாமனார்... என்ன மாதிரியே இருக்கார் இல்ல... நான் ன அவருக்கு உசிராம்... எனக்கு சரியா ஞாபகம் இல்லாதப்பயே இறந்துட்டார்... “ என்று தழுதழுத்தவள் நொடியில் தன்னை சமாளித்து கொண்டு

அவர் மடியில உட்கார்ந்து இருக்கிற க்யூட் பேபி நான்தான்.. எப்படி இருக்கேன் ??? “ என்று சிரித்தாள்...

மதுவும் புன்னகைக்க, அகிலா தொடர்ந்தாள்

“பின்னாடி இருக்கிறது இரண்டும் என் அண்ணன்கள் னு சொல்லவே வேணாம்....அதிசயமா அப்ப நிகிலன் அண்ணா நல்லா சிரிச்சிருக்கான்... அதான் இந்த மங்கி மகி அண்ணா ப்ரேம் போட்டு அவன் டேபிலில் வச்சிருக்கானாக்கும்... “ என்று சிரித்தாள்..

மதுவும் சிரித்து கொக்ண்டே அந்த குடும்பத்தை ரசித்து பார்த்தாள்.. பின் அவள் பார்வை அருகில் இருந்த மற்றொரு புகைபடத்திற்கு செல்ல, அதில் நால்வர் இருந்தனர்... சிவகாமியும் அகிலாவையும் அடையாளம் கண்டு கொண்டன மதுவின் கண்கள்....

சிவகாமி ஓரமாக நிக்க, அவர்களின் நடுவில் அகிலா இரண்டு ஆண்கள் தோள் மீது கை போட்டு குறும்பாக சிரித்து கொண்டிருந்தாள்... அதில் அகிலாவின் இடதுபக்கம் இருந்தவன் கொலுகொலு கன்னமும் புன்னகை தவழும் சிரித்த முகமும் குறும்பு மின்னும் கண்களும் நிறைந்து ஆக்டர் மாதவனை நினைவு படுத்த அகிலாவின் வலது பக்கம் இருந்தவனோ முதலாவது நின்றவனுக்கு அப்படியே எதிர்மாறாக இருந்தான்...

கடுகடுவென்று இருந்த முகமும், இடுங்கிய கண்களும் சிரிக்க மறந்த உதடுகளும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கையில் கூட விரைத்து கொண்டு நிற்பது அப்படியே தெரிந்தது...

அந்த ஆண்கள் இருவரின் முகத்தையுமே இதுவரை கண்டிராத மது , அகிலா இது வரை தன் குடும்பத்தை பற்றி அடித்த கதையில் இருந்தே அவர்கள் யாரென்று புரிந்தது...

முதலில் இருப்பவன் தான் தன்னை நிச்சயித்து மணமேடை வரை கொண்டு வந்து விட்டு பாதியில் ஓடிப்போன மகிழன் என்பதும் அடுத்தவன், தம்பி பாதியில் ஓடிப்போக, வேற வழி இல்லாமல் இன்ஸ்டன்ட் மாப்பிள்ளையாகி தனக்கு மாலையிட்டு கணவனாக மாட்டிக் கொண்டவன் என்று புரிந்தது...

இதுவரை தன் கணவனாகியவன் முகத்தை கூட பாராமல் வெறுத்து இருந்தவள் மெல்ல நிமிர்ந்து அந்த புகைப்படத்தை மீண்டும் பார்க்க, மகிழனின் சிரித்த முகத்தை கண்டதும் அவளுள்ளே கசப்பும் அவன் அருகில் நின்ற தன் கணவனாகியவனின் இடுங்கிய கண்களை கண்டதும் பயமும் ஒன்றாக கலந்து அவள் மனதை பிசைந்தது...

அதற்குள் அகிலா,

“போதும் அண்ணி... உங்க ஆளை இப்பயே சைட் அடிக்காதிங்க.. சைட் அடிக்கிற மாதிரியா இருக்கான்... சரியான டெர்ரர் மூஞ்சி... இந்த டெர்ரர் மூஞ்சிய தான் தினமும் நேர்ல பார்க்க போறீங்களே.. அப்புறம் பார்த்துக்கலாம் வாங்க.. நாம இப்ப அடுத்த அறைக்கு போகலாம்.. “ என்று அவளை வெளியில் அழைத்து சென்றாள் அகிலா...

மகிழன் அறைக்கு எதிர்புறம் இருந்த அறைக்கு அழைத்து சென்றவள்

“அண்ணி... இதுதான் இந்த கோட்டையின் இளவரசியோட அறை.. வங்க.. “என்று உள்ளே செல்ல, அறைக்குள் நுழைந்ததும் மதுவின் கண்கள் விரிந்தன..

சுவற்றின் அழகழகான கார்ட்டூன் கேரக்டர்கள் அழகாக பெய்ன்ட் பண்ணியிருந்தன... டோரா, சோட்டா பீம், ஏன் டாம் அன்ட் ஜெர்ரி கூடஇருந்தன... அறை முழுவதும் பலவிதமான டெடிகளும் பார்பி டாலும் ஆங்கங்கே பரப்பி இருந்தன...

அங்கு இருந்த பெரிய படுக்கையில் ஒரு பெரிய டெடி அமர்ந்து உறங்கி கொண்டிருந்தது.. புத்தகங்கள் வைக்க செல்ப்ம் உட்கார்ந்து படிக்க மேஜை நாற்காலியும் போட பட்டு அறை நேர்த்தியாக இருந்தது...

அதை கண்டதும் மதுவிற்கு அவள் அறை ஞாபகம் வந்தது.. அவள் டெடியும் அவள் பில்லோ என்று அனைத்தும் நினைவு வர அதை எல்லாம் அங்கயே விட்டுட்டு வந்திட்டமே... “ என்று கண்ணை கரித்தது..

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவள் அகிலாவின் கதையை கவனித்தாள்..

அகிலாவும் தனக்கு பேச ஒரு ஆள் கிடைக்கவும் வாய் ஓயாமல் கதை அடிக்க மதுவும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்... அகிலாவின் குறும்புதனமான பேச்சும் ஆக்சனும் மதுவை கவர்ந்துவிட கொஞ்ச நேரத்துலயே அவர்களுக்கிடையில் நல்ல நட்பு உருவானது...

முழுவதும் அகிலாவே பேசினாலும் அப்பப்ப மதுவையும் கொஞ்சம் வாயை திறக்க வைத்தாள் அகிலா... இருவரும் கதை அடித்து கொண்டிருந்தனர் இரவு வரை...

மணி 8 ஆனதும் சிவகாமி கீழ இருந்து இருவரையும் சாப்பிட அழைக்க அப்பொழுது தான் மணியை பார்த்தனர் இரு பெண்களும்... பின் சிரித்து கொண்டே இருவரும் கீழ இறங்கி வர, அங்கு இருந்த மற்ற இரு உறவுக்கார பெண்களும் சென்றிருந்தனர்...

அந்த இன்ஸ்ட்ரக்டர் அம்மா மட்டும் சிவகாமியுடன் அமர்ந்து டைனிங் டேபிலில் பேசிக்கொண்டிருந்தார்...

இவர்கள் இருவரும் அங்கு செல்ல, அந்த அம்மா இவர்களை பார்த்து

“என்ன அகி குட்டி... அண்ணிய ரொம்ப புடிச்சிருச்சு போல... அப்படியே ஒட்டிகிட்ட?? “ என்றார் சிரித்தவாறு

“ஹ்ம்ம்ம்ம் ஆமா பாட்டி... அண்ணி சோ ஸ்வீட்... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... என்று திடீரென்று மதுவை கட்டிகொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்... மதுவிற்கு இது மாதிரி யாரும் இதுவரை செய்ததில்லை என்பதால் அதிர்ச்சியில் முழித்தாள் கன்னம் சிவந்து..

“என்ன அண்ணி.. பயந்துட்டீங்கள?? இது மாதிரி நிறைய சர்ப்ரைஸ் இருக்கு.. “ என்று கண்ணடித்தாள்...

பின் இருவரும் நாற்காலியை நகர்த்தி அமர,

“சிவகாமி.. மருமகளுக்கு நிறைய சப்பாத்தி எடுத்து வை. பாவம் மதியமே சரியா சாப்பிடலை.. “ என்றார் அந்த பெண்.

சிவகாமியும் சிரித்து கொண்டே இரண்டு சப்பாத்தியை எடுத்து வைத்து அவர் செய்திருந்த காலி ப்ளவர் குருமாவை தட்டில் வைக்க, மதுவும் தயங்கியவாறு மெல்ல பிட்டு வாயில் வைத்தாள்...

அதுவரை தெரியாத பசி அப்பொழுது தான் தெரிய ஆரம்பித்தது அவளுக்கு.. அதன் சுவை நன்றாக இருக்க

“சூப்பரா இருக்கு அத்தை... எங்க அம்மா பண்ற மாதிரியே..” என்று மது வாய் திறந்து பதில் சொல்ல, அதை கேட்ட அகிலா

“பாத்து மா... அண்ணி உனக்கு நல்லா ஐஸ் வக்கிறாங்க....அப்படியே மாமியார்க்கு ஐஸ் வச்சு உங்களை டவுன் ஆக்கி இந்த ராஜ்ஜியத்தை பிடிச்சுக்க போறாங்க...இல்லைனா இந்த வாயில் வைக்க முடியாத குருமாவை போய் நல்லா இருக்குனு சொல்லுவாங்களா.. நீ எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ... “ என்று கண்ணடித்தாள்..

அதை கேட்டு அப்படி இல்லை என மது பதற

“ஏய் அகிலா.. நீ சும்மா இருக்க மாட்ட... மது பயந்துக்கறா பார்... “ என்று தன் மகளை அதட்டியவர், பின் தன் மருமகளை பார்த்து

“அவ சும்மா சொல்றா மது.. குருமா நல்லா இல்லாமல் தான் இதோட நாலு சப்பாத்தி முழுங்கிட்டா அவ... நீ அவ சொல்றதெயெல்லாம் கண்டுக்காத.. நீ சாப்பிடு.. “ என்று சிரித்தார்...

மதுவும் மெல்ல சிரித்துகொண்டே தட்டில் இருந்த இரண்டு சப்பாத்தியையும் காலி பண்ண, அடுத்து எப்படி கேட்பது என்று தயங்கினாள்..

“இதே என் வீடா இrருந்தால் உரிமையோடஎடுத்து போட்டு சாப்பிடலாம்.. இங்க சாப்பிடறதுக்கு கூட அடுத்தவங்கள கேட்க வேண்டி இருக்கே.. இப்படி ஒரே நாள் ல என்னை பிரிச்சு கொண்டு வந்து இங்க விட்டுட்டு போய்ட்டாங்களே.. “ என்று மனதுக்குள் புலம்பினாள் மது ..

அதற்குள் அவள் தட்டில் கை வைத்து யோசித்து கொண்டிருப்பதை கண்ட சிவகாமி இன்னும் இரண்டு சப்பாத்தியை எடுத்து மது தட்டில் வைத்து

“மது மா... இனிமேல் இதுதான் உன் வீடு.. உன் வீட்டில எப்படி ப்ரியா இருப்பியோ அதே மாதிரி இங்கயும் ப்ரியா இரு.. உனக்கு வேணுங்கிறத கேட்டு உரிமையோட சாப்பிடு.. யார் என்ன சொல்வாங்கனெல்லாம் யோசிச்சுகிட்டிருக்க வேணாம்...

நான் உன்னை அம்மானு தான் கூப்பிட வேணாம்னேன்.. ஆனால் நான் உன் அம்மா மாதிரி தான்.. நீயும் எனக்கு அகிலா மாதிரி தான.. அவ எப்படி உரிமையோட பேசறாளோ, சண்டை போடறாளோ அதே மாதிரி உனக்கும் எல்லா உரிமையும் இங்க இருக்கு...

இப்படி தயங்க கூடாது.. என்ன புரிஞ்சுதா?? “ என்று அவள் தலையை வாஞ்சையுடன் தடவினார்...

மதுவுக்கு கண்ணை கரித்தது.. தன் மனதில் இருந்த தயக்கத்தை அப்படியே சொல்றாரே... நல்ல மாமியார் போல... அந்த பக்கத்து வீட்டு அக்கா மாமியார் மாதிரி இல்ல.. “ என்று நிம்மதியடைந்து தலை ஆட்டி சிரித்தாள்...

பின் சிவகாமி சாப்பிட்டு முடித்து தன் அலைபேசியை எடுத்து ஏதோ நம்பரை அழுத்தவும் அதற்கு பதில் இல்லாமல் போகவும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அலுத்து போனார்...

அருகில் இருந்த அந்த அம்மா, சிவகாமியை பார்த்து,

“என்னாச்சு சிவகாமி?? நிகிலன் போனை எடுக்கலையா ?? “ என்றார்...

“ஆமா அத்தை.. முதல்ல ரிங் போச்சு.. இரண்டு ரிங்க் லயே ஆப் ஆயிருச்சு.. மறுபடியும் போட்டா இப்ப ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்குனு வருது... இந்த பய ஏன் தான் இப்படி இருக்கானோ.. “ என்றார் வருத்தத்துடன்...

“ஹ்ம்ம்ம்ம் தனக்கு கல்யாணம் னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே லீவ் போட்டிருப்பான்.. தம்பிக்கு தான கல்யாணம் னு லீவ் போட்டா னோ இல்லையோ.. ஏதாவது வேலையா இருக்கும்.. சரி நீ அவன் பிரெண்ட் யாராவது இருந்தால் போன் பண்ணு.. “ என்றார்...

“அந்த விளங்காதவன் கௌதம் க்கு போட்டேன் அத்தை... அவன் நம்பரும் ஸ்விட்ச் ஆப் னு வருது... அவன் போன ஆப் பண்ணி வச்சுட்டு எங்க பொண்டாட்டி பின்னாடி சுத்தறானோ?? எனக்குனு வந்து வாய்க்குது பார்.... “ என்று சலித்து கொண்டார்...

“ஹ்ம்ம்ம் சரி விடு.. இன்னைக்கு நிறைஞ்ச நாள் .. நல்ல முகூர்த்தம்.. 9 லயிருந்து 10 சாந்திமுகூர்த்தம் நடந்தா நம்ம வம்சத்துக்கே நல்லது... அதான் அந்த சடங்கையும் இருந்து முடிச்சிட்டு போய்டலாம்னு நான் இருந்தேன்... இந்த பெரியவன் இப்படி முறுக்கிட்டு போவானு யார் கண்டா...

நாம ஒன்னு நினைச்சா அந்த வடிவேலன் வேற மாதிரி நினைச்சிருக்கான் போல.. “என்று நிறுத்தினார்...

முதலில் அவர்களின் பேச்சை கண்டுக்காத மது, பின் நிகிலன் என்ற பெயர் காதில் விழவும் அது தான் தன்னை மணந்தவன் பெயர் என்று அகிலா சொன்னதில் இருந்து புரிந்து கொண்டவள் அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்...

அந்த அம்மா சாந்திமுகூர்த்தம் என சொல்லவும் மதுவுக்கு திக் என்றது... திருமணம் என்றால் கூடவே இதுவும் இருக்கும் என்பதை அவள் மறந்திருந்தாள்... இப்ப இந்த அம்மா வேறு அதை பற்றி பேசவும் மதுவின் வயிற்றில் புளியை கரைத்தது...

அவசரமாக அந்த முருகனை அழைத்தாள்..

“வேல்ஸ்... இதுவரைக்கும் தான் நான் கேட்டது எதயும் நீ செய்யல... அட்லீஸ்ட் இந்த ஒரு விசயத்துலயாவது எனக்கு ஹெல்ப் பண்ணேன்.. ஏதாவது பண்ணி அந்த ஆளை அங்கயே இருக்க வச்சிடு..

இல்லைனா இந்த அம்மா இன்னும் சடங்கு அது இதுனு என்னை கொடுமை படுத்துவாங்க... ப்ளீஸ்..... ஹெல்ப் மீ.... “ என்று அவசர அப்ளிகேசனை போட்டாள் மது....

அந்த வேலனும் சிரித்து கொண்டே

“ஹ்ம்ம்ம் உன் விண்ணப்பதை ஏற்று கொண்டேன் மது...நீ பயப்படாமல் இரு “ என்று குறும்பாக சிரித்தான்...

கொஞ்சம் நிறுத்திய அந்த அம்மா

“சரி சிவகாமி.. அப்ப நான் காலையிலயே கிளம்பறேன்.. இந்த கல்யாணத்துல எல்லா சடங்கும் நம்ம ஊர் வழக்கபடி நடக்கணும்னு நீ கேட்டதால தான் நான் இதுவரை கூட இருந்து நம்ம வழக்கபடி எல்லா சடங்கையும் செய்தது..

இது மட்டும் நின்னு போச்சு.. என்ன செய்ய?? ... நான் உனக்கு எல்லாம் சொல்லி தர்ரேன்.. நாளைக்கும் நல்ல நாள் தான்.. அதனால நீயே முன்னாடி நின்னு இந்த ஒரு சாங்கியத்தையும் பண்ணிடு... “என்றார்...

“ஐயோ.. நான் எப்படி.. நீங்க இருந்க அத்தை.. இன்னும் ஒரு நாள் தான .. “என்று பதறினார் சிவகாமி...

“வீட்ல எல்லாம் போட்டது போட்ட படி இருக்கு சிவா... எனக்கும் ஆசைதான்..கூட இருந்து எல்லாம் செய்யணும்னு... ஆனா என்ன பண்றது?? நீ அமங்கலினு எதுவும் தயங்க வேண்டாம்.. மனசு நல்லா இருந்தா போதும்.. நீ, நான் சொல்ற மாதிரி செய்... இல்லைனா போன் பண்ணு... நான் உனக்கு எல்லா விவரம் போன்ல சொல்றேன்.. “ என்று சிரித்தார்..

அதை கேட்ட மது மேலும் அதிர்ந்தாள்..

“ஐயோ.. அப்ப மறுபடியும் நாளைக்கு இதே பிரச்சனையா??

அப்ப வேல்ஸ் என்னோட அப்ளிகேசன் ல To Date ஐ இன்னும் ஒரு வாரத்துக்கு ... ம்ஹூம் இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு extend பண்ணிக்கோ...

அந்த ஆள் நைட் வீட்டுக்கு வரவே கூடாது... என்னை எப்படியாவது இந்த கண்டத்துல இருந்து தப்பிக்க வச்சிடு.... நீ என் பிரெண்ட் தான.. இது கூட செய்ய மாட்டியா?? “ என்று கெஞ்சினாள் மனதுக்குள்....

அதை கேட்ட அந்த சிங்கார வேலன்

“அஹா... இத தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கறதுனு சொல்றது.. போனா போகுது னு ஒரு நாளைக்கு உன்னோட வேண்டுதலை ஏத்துக்கலாம்னா ஒரேடியா 6 மாசம் இழுக்கறியே மதுகுட்டி....

அப்ப நான் எப்ப என் ஆட்டத்தை முடிக்கிறதாம்?? ....அதெல்லாம் முடியாது.. உனக்காக ஒரே ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.. அவ்வளவுதான்... “ என்று வாய்விட்டு சிரித்தான் அந்த சிங்காரவேலன்.....



Comments

  1. நல்லா இருக்கு
    மகிழ் ஏன் போய்ட்டான்

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!