காதோடுதான் நான் பாடுவேன்-41


அத்தியாயம்-41

மூன்று நாட்களுக்கு பிறகு மதுவை டிஸ்சார்ஜ் பண்ணினர்...

மருத்துவமனையில் இருந்து சண்முகம் தன் மகளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூற ஒரு பார்வையில் அவரை ஆப் பண்ணினான் நிகிலன்.....

“மாமா... உங்க பொண்ணை கூட்டி போய் வச்சுகிட்டு செல்லம் கொஞ்சினீங்க... அதெல்லாம் முடிஞ்சு போச்சு.. என் பொண்ணை இனிமேல் உங்க வீட்டுக்கு அனுப்ப முடியாது... அவ எப்பவும் என்னோடதான் இருப்பா... வேணும்னா உங்க பொண்ணை கூட்டிகிட்டு போய் கொஞ்சுங்க...” என்றான் முறைத்தவாறு...

அதை கேட்டு சாரதா நமட்டு சிரிப்பை சிரித்தார்....

“என்னாச்சு அத்தை?? எதுக்கு சிரிக்கறீங்க?? “ என்றான் நிகிலன் புரியாதவனாக...

அவரும் சிரித்தவாறே

“இல்ல மாப்பிள்ளை.. மது பிறந்தப்ப இவர் என்னை எங்கப்பா வீட்டுக்கு அனுப்பாமல் மதுவை தூக்கிகிட்டு அவர் வீட்டுக்கு வந்திட்டார்.. என்னை ஒருநாள் கூட எங்கப்பா அம்மா கூட இருக்க விடலை..

அன்னைக்கு எங்கப்பாவுக்கு வந்த நிலை இன்னைக்கு அவருக்கும் அதே நிலை னு நினைக்கிறப்போ சிரிப்பு வந்திடுச்சு.. “ என்று சிரிப்பை அடக்கி கொண்டு சிரித்தார் சாரதா...

“போதும் நிறுத்துடி.. உங்கப்பன் வீட்டு புராணம்... உங்கப்பனும் நானும் ஒன்னா.??. என் பேத்தியை தங்க தட்டுல வச்சு தாங்குவேன்.. உங்கப்பன் அப்படியா?? உன் அப்பன் வீட்ல ஒரு பேன் கூட கிடையாது... அங்க எப்படி என் பொண்ணை அனுப்பறதாம்... “ என்று முறைத்தார் சண்முகம்...

“எங்கப்பாவை இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதே... “ என்று சாரதா  கழுத்தை நொடிக்க, மது ஓரக் கண்ணால் தன் கணவனை பார்த்தாள்.. அவனும் அடிக்கடி அவள் அப்பாவை இப்படித்தான் சொல்லி திட்டுவது நினைவு வர, உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்....

அவர்கள் சண்டையை கண்ட சிவகாமி

“அடடா... பேத்தி வந்தும் உங்க சண்டை இன்னும் தீரலையா ??... அவ வந்து குச்சி எடுத்து மிரட்டினாதான் இரண்டு பேரும் அடங்குவீங்களாக்கும்..” என்று சிரிக்க , பின் அனைவரும் சிரித்தவாறே கிளம்பி நிகிலன் வீட்டிற்கு வந்தனர்..

சிவகாமி மனம் நிறைந்த பூரிப்புடன் தன் மருமகளையும் பேத்தியையும் தன் மகனையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்..

பூஜை அறைக்கு சென்று அந்த வேலன் முன்னாள் தன் பேத்தியை போட்டு அவனுக்கு மனதார நன்றி சொன்னார்...

பின் மதுவை அழைத்து சென்று அவள் இன்னும் கொஞ்ச நாளைக்கு மாடி ஏற வேண்டாம் என்று தன் அறையிலயே தங்க வைத்தார் சிவகாமி...

அப்பொழுது ரமணியும் வந்து சேர, குழந்தை பிறந்து மூன்று நாள் கழித்து வந்த ரமணியை மது கோபத்தோடு பார்த்து முறைத்தாள்...

“மது கண்ணா... என் பேத்தியை பார்க்காமல் என்னால் மட்டும் இருக்க முடியுமா?? அங்க வசந்தி பாவம் இல்ல...அவள தனியா விட்டுட்டு வர முடியலை அதான்...” என்றார் வேதனையுடன்....

வசந்தி பெயரை கேட்டதும் மதுவும் மனம் இறங்கி

“இப்ப வசந்தி எப்படி இருக்காங்க ரமணி மா... ?? “ என்றாள் கவலையாக..

“ஹ்ம்ம்ம் ஏதோ இருக்கா... “ என்று பெருமூச்சு விட்டார்...

மது உண்டாகியிருக்கும் செய்தி கேட்டதும் அதுவும் மதுவின் வளைகாப்பு புகைபடங்களை கௌதமின் அலைபேசியில் கண்டதும் வசந்திக்கு யோசனையாக இருந்தது...

அன்று மது அவளுக்கு சொன்ன அட்வைஸ் நினைவு வந்தது...

மது சொன்ன மாதிரி திருமணம் ஆகி இத்தனை நாள் ஆகியும் குழந்தை பெத்துக்காமல் இருப்பதால் ஒரு வேளை தன் கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசம் எதுவும் குறைந்து விட்டதோ என்று ஆராய்ந்தாள்..

காமால கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம் .. அது மாதிரி சந்தேக கண்ணோட பார்க்க கௌதம் முன்பு போல அவள் மேல பாசம் வைக்க வில்லையோ என்று இருந்தது...

உடனே தானும் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்க முதல் இரண்டு மாதம் கருத்தரிக்கவில்லை...

உடனே அதற்கு மேல் பொருமை இல்லாமல் கௌதமை கட்டாய படுத்தி செயற்கை கருத்தரிப்பு மையத்தை அணுகி ட்ரீட்மென்ட் மூலமாக தன் கணவனின் குழந்தையை சுமக்க வேண்டி ட்ரீட்மென்ட் ஆரம்பித்தாள்..

கௌதம் எவ்வளவோ சொல்லியும் அவன் பேச்சை கேட்கவில்லை வசந்தி...

முதல் முயற்சியிலயே அது சக்ஸஸ் ஆகிவிட, அவளுக்கு ரொம்ப சந்தோசம்....

பத்து நாட்கள் முன்புதான் அவள் கர்ப்பம் உறுதியானது...அதை கண்டதும் அவளை விட கௌதம் தான் துள்ளி குதித்தான்... அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க மது சொன்னது எவ்வளவு உண்மை என்று அப்பொழுதுதான் புரிந்தது வசந்திக்கு...

தன் மருமகள் உண்டாகி இருப்பதை கேள்வி பட்டு ரமணியும் மகிழ்ந்து போனார்...தன் மருமகள் மீது இருந்த கோபம் எல்லாம் அடுத்த நொடியே மறைந்து விட்டது...

தங்கள் குல வாரிசை சுமக்கும் தன் மருமகளை உடனே சென்று பார்த்து அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்து தர துடித்தது அவர் தாய் உள்ளம்....

ஆனால் தன் மருமகளின் குணம் அறிந்து அவர் நேரில் சென்றாலும் தன்னை அவள் மதிக்க மாட்டாள் என்று தயங்கி தன் ஆசையை உள்ளுக்குள் போட்டு பூட்டி கொண்டார்....

அடுத்த நாள் வசந்தி தன் பெற்றோர்களிடம் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ள அவர்களோ ஏதோ சுரத்தில்லாமல் கேட்டதை போல இருந்தது...

கௌதம் கொண்டாடிய அளவுக்கு அவர்கள் பெரிதாக அவள் மீது அக்கறை காட்டவில்லை....

இந்த நிலையில் ஒரு நாள் கௌதமை அழைத்து கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தாள்.. உள்ளே சென்றவள் வீட்டில் யாரும் இல்லாமல் போக நேராக மாடிக்கு சென்றவள் அவள் பெற்றோரின் அறையை அடைந்து கதவை தட்ட யாரும் திறக்கவில்லை....

பின் அவளாக கதவை தள்ளி திறக்க உள்ளே கண்ட காட்சியில் அப்படியே அதிர்ந்து உறைந்து நின்றாள்....

அவள் பெற்றோர்கள் இருவரும் சீலிங் பேனில் உயிரற்ற உடல்களாக தொங்கி கொண்டிருந்தனர்....

அதை நேரில் பார்க்கவும் அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே மயங்கி சரிந்தாள் வசந்தி....

அவள் சரிவதை கண்டு கீழ அமர்ந்திருந்த கௌதம் வேகமாக மாடி ஏறி வந்து கீழ கிடந்தவளை அள்ளி தன் மடியில் வைத்து கொண்டு அவள் கன்னம் தட்டி எழுப்பியவாறு உள்ளே நோக்க, அங்கு கண்ட காட்சியை கண்டு அவனுமே அதிர்ந்து போனான்.....

பின் தன்னை சமாளித்து கொண்டு நிகிலனுக்கு அழைத்து விசயத்தை சொல்ல, நிகிலன் அருகில் இருக்கும் ஸ்டேசனில் இருக்கும் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி அங்கு சென்று பார்க்க சொல்லி சிறிது நேரத்தில் அவனும் வந்து சேர்ந்திருந்தான்....

இன்ஸ்பெக்டரும் மற்ற காவலர்களும் தங்கள் பார்மாலிட்டீஸ் ஐ பார்த்து கொண்டனர்.....

கௌதம் வசந்தியை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க, அவளோ விழிப்பு வரும்பொழுதெல்லாம் அவள் கண்ட காட்சி கண் முன்னே வர வீல் என்று அலறி மயக்கமானாள்..

அதனால் அவளை அமைதி படுத்த தூக்கத்திலயே வைத்திருந்தனர்.....

இந்த அதிர்ச்சியில் அவள் கருவும் கலைந்து விட்டது...

பின் போலீசார் நடத்திய விசாரணையில் அவள் பெற்றோர் நடத்தி வந்த தொழில்கள் எல்லாம் நஷ்டத்தில் போக அதை சமாளிக்க என்று வெளியில் கடன் வாங்கி நடத்தி வர, அந்த கடன் வளர்ந்து அவர்கள் தொழிலே மூழ்கும் நிலைக்கு வந்து விட்டது...

கடைசியில் அதை சமாளிக்க முடியாமல் கௌரவமாக வாழ்ந்த சொசைட்டியில் தலை குனிந்து வாழ முடியாது என முடிவு செய்து தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்...

அவர்கள் வீடு தொழில்களை எல்லாம் கடன் கொடுத்தவர்கள் எடுத்து கொள்ள, வசந்திக்கு எந்த சொத்தும் இல்லாமல், அத்தோடு பிறந்த வீட்டினர் என சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் நடுத் தெருவில் நிக்கும் நிலைக்கு தள்ள பட்டாள்...

கௌதம் தான் அவளின் பெற்றோருக்கு செய்யும் இறுதி காரியங்களை செய்து அனைத்தையும் செட்டில் செய்து முடித்தான்...

தன் நிலை அறியாமல் வசந்தி மருத்துவமனையிலயே இருந்தாள் ஒரு வாரமாக... ரமணிதான் விசயத்தை கேள்வி பட்ட உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்து கூடவே இருந்து வசதியை பார்த்து கொண்டார்...

தன் மருமகளை விட்டு பிரியாமல் அந்த மருத்துவமனையிலயே தங்கி விட்டார்.. அவருக்கு துணையாக சிவகாமியும் அப்பப்ப வந்து பார்த்து சென்றார்..

ஒரு வாரம் ட்ரீட்மென்ட் க்கு பிறகு கொஞ்சம் தேறியவள் தன் நிலையை கண்டு உள்ளுக்குள் மருகினாள் வசந்தி..அதுவும் தன் குழந்தை கருவிலயே கலைந்து விட்டதை தெரிந்து கொண்டு இன்னும் உடைந்து போனாள்...

தான் பெரிய பணக்காரி.. மற்றவர்கள் எல்லாம் தன் கால் தூசிக்கு சமம் என்று எவ்வளவு கர்வமாக இருந்தாள் இதுவரை..

யாரையும் மதிக்காமல் எல்லாரையும் அலட்சிய படுத்தி வந்தவள், இன்று தன் சொத்துக்கள் எல்லாம் பறி போன போதும் முகம் சுழிக்காமல், தன் மாமியார், நிகிலன் குடும்பத்தார் என்று அத்தனை பேரும் தன்னை தாங்குவதை கண்டு உடைந்து போனாள்..

அதோடு தன் பெற்றோர்களின் இறப்பு அடிக்கடி கண் முன்னே வர, வரும் பொழுதெல்லாம் மூர்ச்சையாகி விட, அவளை அந்த நினைப்பு வராமல் பார்த்துக் கொண்டார் ரமணி...

வசந்தி ரமணியை எப்படி எல்லாம் கஷ்ட படுத்தினாள்.... ஏன் அவள் மாமனார் இறப்பதற்கே அவள்தான் காரணமாக இருந்தாள்..... அவருடைய ஒரே மகனை அவரிடம் இருந்து பிரித்து அனாதையாக அந்த நமது இல்லத்தில் தங்க வைத்தாள்......

தான் அவரை இவ்வளவு கஷ்டபடுத்தியும் அதையெல்லாம் மறந்து தன்னை மன்னித்து ஒரு தாயாக அவளை தாங்கிய தன் மாமியாரை கண்டு அவளுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது...

வாழ்க்கையே வெறுத்து விட்டதை போல எப்பவும் விட்டத்தை பார்த்து வெறித்து கொண்டே இருந்தாள்...

கௌதம், ரமணி, சிவகாமி என அனைவரும் அவளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவள் பழைய நிலைக்கு வரவில்லை...நிகிலன் கூட அவளை மன்னித்து அவளிடம் பேசி பார்த்து விட்டான்...

ஆனால் அவளோ தான் செய்த குற்றம் அவளை உள்ளுக்குள் வருத்த அதோடு கண் முன்னே கண்ட அவள் பெற்றோர்களின் மரணம் அவள் மனநிலையை பாதிக்க அதில் இருந்து வெளி வர பிடிக்காமல் உள்ளுக்குள்ளயே சுருண்டு விட்டாள்.....

பாரதியும் அவளுக்கு தெரிந்த மனநல மருத்துவரின் உதவியுடன் அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறாள்.....

இன்னும் பெரிதாக முன்னேற்றம் இல்லை...

ஒரு வாரத்திற்கு பிறகு வசந்தியை மருத்துவமனையில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் கௌதம்...

ரமணி நமது இல்லத்தில் இருந்து காலி பண்ணி தன் வீட்டிற்கே வந்து விட்டார்.. தன் மருமகள் பக்கதில் இருந்தே அவளை எதுவும் யோசிக்க விடாமல் ஏதாவது பேசி கொண்டே அவளை பார்த்து வருகிறார்...

அதை எல்லாம் சொல்லி பெருமூச்சு விட்டார் ரமணி...

வசந்தியின் நிலையை கேட்டதும் அனைவருக்குமே கஷ்டமாக இருந்தது.....

அரசன் அன்று கொல்வான்... தெய்வம் நின்று கொல்லும்... என்ற பழமொழிக் கேற்ப, வசந்தி ஆடிய ஆட்டத்திற்கு அந்த கடவுள் தக்க தண்டனை கொடுத்து விட்டான் என்றே தோன்றியது அனைவருக்கும்....

“ஆனாலும் கடவுள் அவளை இந்த அளவுக்கு தண்டிச்சிருக்க வேண்டாம்.. “ என்று பெருமூச்சு விட்டனர்...

மதுதான் ரமணியை கட்டி கொண்டு

“நீங்க ஒன்னும் கவலை படாதிங்க ரமணி மா... உங்க நல்ல மனசுக்கும் கௌதம் அண்ணா மனசுக்கும் வசந்தி சீக்கிரம் சரியாகிடுவாங்க.... நீங்க நம்பிக்கையோடு இருங்க.... “ என்று ஆறுதல் சொன்னாள்....

“ஹ்ம்ம்ம்ம் நானும் அந்த நம்பிக்கையில் தான் நடமாடிகிட்டிருக்கேன் மது கண்ணா... பார்க்கலாம்... அந்த வேலன் எப்படி எழுதி வச்சிருக்கானோ ?? “ என்று பெருமூச்சு விட்டவர் பின் தன் கவலையை மறந்து தொட்டிலில் கிடந்த தன் பேத்தியை கையில் அள்ளி அவளை கொஞ்ச ஆரம்பித்தார் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்......



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!