என் மடியில் பூத்த மலரே-9



அத்தியாயம்-9 

சுசிலாவின் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் கண்கள் வியப்பில் விரிந்தன...

அந்த பெண்ணும் ஜானகியை கண்டுகொண்டு

“என்ன ஜானகிம்மா?? என் பேச்சில மயங்கி என்னை பிரிய முடியாமல் என்னை காண, என் பேச்சை கேட்க ஓடோடி வந்திட்டீங்களா நாதாய்” என்று இழுத்து பேசினாள் சிரித்தவாறு....

“ஆமாம் நாதா... ” என்று ஜானகியும் அவளின் பாஷையில் பேசவும் சுசிலாவுக்கு தான் தலை சுற்றியது இப்போ!!! .. என்ன நடக்கிறது இங்கே!!

என்று குழம்பி கொண்டிருந்தார்...

அதற்குள் அந்த பெண் தன் கையில் வைத்திருந்த போன் ஞாபகம் வரவும்

“டாக்டர்... கமலா மேடம் உங்க கிட்ட பேசனுமாம... லைன்ல இருக்காங்க “ என்று போனை சுசிலாவின் கையில் கொடுத்தாள்...

“ஒரு நிமிடம்” என்று போனை கையில் வாங்கி கொண்டு உள்ளே எழுந்து சென்றார் சுசிலா.. பேசி முடித்ததும் திரும்பி வந்தவர், ஜானகியும் அந்த பெண்ணும் வழவழத்து கொண்டிருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தார்..

அதுவும் ஜானகியின் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி அவருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது... எவ்வளவு நாள் ஆச்சு இந்த ஜானகி இப்படி மனம் விட்டு சிரிச்சு என்று அவளையே ரசித்து இருந்தார்..பின் அவர்கள் அருகில் வந்தவர்

“சரி பாரதி.. நான் கமலா கிட்ட பேசிட்டேன்... உன்னை அப்புறம் கூப்பிடறேன் “ என்று அனுப்பி வைத்தார்.

பாரதி வெளியில் சென்றதும்

“ஜானு.. பாரதிய எப்படி தெரியும் உனக்கு?? “ என ஆச்சர்யதுடன் கேட்டார் சுசிலா.. ..

“அது வந்து .... காலையில் நடந்ததை சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தார் ஜானகி

“சொல்லு ஜானகி.. எப்படி தெரியும்?? “

“அது வந்து.. நீ சொன்னா திட்ட கூடாது” என்று முன்னாடியே பர்மிசன் வாங்கி கொண்டு கோயிலில் காலையில் நடந்ததை சொன்னார்...

அதை கேட்டதும் சுசிலாவின் உடல் ஒரு முறை நடுங்கியது...

“என்ன ஜானகி?? .. இப்படியா கவன குறைவா இருப்ப?? ... ஏதாவது ஒண்ணு ஆயிருந்தால்” என்று தன் கண்களை இறுக மூடினார் சுசிலா...

சுசிலாவின் வேதனை ஜானகிக்கு புரிந்தது..

“ஹே !!! சுசி.. எனக்கு ஒன்னும் ஆகலை... அதான் என் முருகன் ... இல்ல முருகி வந்து காப்பாத்திட்டா இல்லை”

“முருகியா??? “ என்று புரியாமல் பார்த்தார்

முருகனோட பெண்பால் முருகி.. இது எப்படி இருக்கு!! ” என்று சிரித்தார்...

“எப்படி டீ !! இப்படி எல்லாம்...”

“ஹ்ம்ம் எல்லாம் அந்த பாரதி கூட இருந்த கொஞ்ச நேரத்துல தொத்திகிச்சு

“ஆமாம் பாரதி எப்படி இங்க?? .. உனக்கு எப்படி தெரியும் அவளை ” என்று இப்பொழுது சுசிலாவை கேட்டார்...

“ஹ்ம்ம்ம் என் ப்ரென்ட் கமலா தெரியும் இல்லை. திருச்சியில இருக்கிறாளே.. அவளோட ஹாஸ்பிட்டல் தான் பாரதி வேலை பார்க்கிறாள்.. அவ அப்பாவிற்கு இதயத்துல ஒரு சிறிய.... என்று நிறுத்தி இல்லை பெரிய பிரச்சனை... அங்க திருச்சியில முடியாதுனு இங்க அனுப்பிச்சிருக்காங்க...

ஆபரேசனுக்கு நிறைய செலவு ஆகும்.. இவங்க கிட்ட அந்த அளவுக்கு பணம் இல்லை.. நான் இங்க இருக்கிற ஹார்ட் சர்ஜியன் கிட்ட பேசி டாக்டர் செலவை ப்ரீ பண்ணிட்டேன்.. ஆனால் மருத்துவ மனைக்கு கட்டற ஃபீஸ் கட்டணும்...அப்புறம் மற்ற செலவு....

அதான் கமலா கிட்ட உதவி கேட்டிருப்பா போல.. கமலா எங்கிட்ட சொன்னா... ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா என்று “ என்று விளக்கினார்..

“ஐயோ !!! மனதுக்குள்ள இவவளவு கவலையை வச்சுகிட்டா அந்த சின்ன பொண்ணு எங்கிட்ட அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டிருந்தா??? எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே”

“அதான் பாரதி ஜானு.. அவ இருக்கிற இடத்துல எல்லாரையும் சந்தோஷமாக வச்சுக்கனும்னு நினைப்பா.. யாரும் கவலையா இருந்தா அவளுக்கு பிடிக்காது. எப்படியாவது அவங்களை சிரிக்க வச்சுட்டுதான் நகருவா...

கவலைபட்டு என்ன ஆகிடபோறது.. இருக்கிற வரை நல்லா சிரிச்சுகிட்டே இருக்கனும்” என்று சொல்வாளாம்... கமலா இவளை பற்றி நிறைய சொல்லியிருக்கா....

“ஹ்ம்ம்ம் நானும் பார்த்தேன்....நான் கொஞ்சம் கவலையா இருக்கிறதை பார்த்துதான் அந்த பொண்ணு அப்படி என்னை சிரிக்க வச்சா... நல்ல தங்கமான குணம் அவளுக்கு.. அவளுக்கா இப்படி ஒரு கஷ்டம் வரனும்..

ஆமாம் ஆபரேசனுக்கு எவ்வளவு பணம் ஆகும்???

“ஒரு 10 லட்சமாவது ஆகும் ஜானு. யார் கிட்ட கேட்க என்று தான் கவலையா இருக்கு”

“கவலையை விடு சுசி... நானே அந்த பணத்தை கொடுக்கறேன்”

“என்னடி சொல்ற??? உங்கிட அவ்வளவு பணம் ஏது?? ஆதி கிட்ட கேட்டா அவன் தப்பா நினைப்பான்”

ஆதி மாதம் மாதம் எனக்குனு ஒரு தொகையை என் வங்கி கணக்கில போட்டுடுவான் சுசி.. நான் ஏதாவது செலவு பண்ணட்டும் என்று.. நான் என்னத்தை செலவு பன்றேன்... அந்த பணம் அப்படியேதான் தூங்கிட்டு இருக்கு.... “

"இருந்தாலும்…"

"இங்க பார் சுசி.. அவள் போக இருந்த என் உயிரை காப்பாற்றி கொண்டு வந்திருக்கா.. அவ செஞ்ச உதவித்து முன்னாடி இந்த பண உதவி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை...எவ்வளவு பணம் இருந்தும் என் ராம் உயிரை காப்பாற்ற முடியலையே... இந்த பொண்ணோட அப்பாவையாவது காப்பாற்றட்டும் இந்த பணம்..

நீ தயங்காம ஆபரேசனுக்கு ரெடி பண்ணு... எவ்வளவு ஆனாலும் நான் தர்ரேன்...

ஆனால் ஒன்னு.. நான் தான் கொடுத்தேன் என்று அவளுக்கு தெரிய வேண்டாம்... தெரிந்தால் மனசு கஷ்ட படுவா... எங்கிட்ட அப்புறம் சரியா பேச மாட்டா.. "

“ஹ்ம்ம் சரி ஜானகி... ரொம்ப நன்றி.. சரியான நேரத்தில ஒரு குடும்பத்துக்கு உதவுற... "

"இருக்கட்டும் சுசி... ஆமாம்... அவங்க அப்பா எந்த அறையில இருக்காங்க.. நான் பார்த்துட்டு போறேன்“ என்று அறையின் எண்ணை குறித்து கொண்டு அங்கு சென்று கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்..

பாரதியின் அப்பா படுக்கையில் கண்ணை மூடி படுத்து இருந்தார்... பாரதி அவர் அருகில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருந்தாள்.. அவளின் அப்பாவின் நிலையை கண்டதும் ஜானகிக்கு நெஞ்ஜை பிசைந்தது.. பாரதிக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று தோன்றியதும் சுசிலா ‘அவளுக்கு யாரும் சோகமா இருந்தால் பிடிக்காது. எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும்” என்று கூறியது நினைவு வரவும்.. தன் வருத்தத்தை உள்ளே மறைத்து கொண்டு

“என்ன முருகா??? நீயே அனைத்து புத்தகங்களையும் கரைத்து குடித்த ஒரு தமிழ் கடவுள். நீ போய் இப்படி பரிட்சைக்கு படிக்கிற மாதிரி படிச்சுகிட்டிருக்க “ என்றவாறே மெல்ல நுழைந்தார்...

ஹா ஹா ஹா ... வா பக்தை... நான் படித்ததோ சங்க காலத்தில்... இப்ப இந்த நவீன உலகத்தில புதுசு புதுசா நிறைய விசயங்கள் வந்து விட்டன.. நானும் எல்லாம் படித்து அப்டேட் ஆகிகிட்டா தான் என் பக்தர்களை ரக்ஷிக்க முடியும்” என்று அவளும் சிரித்தாள்..

இவர்களின் பேச்சு சத்ததை கேட்டு மெல்ல கண் விழித்தார் தர்மலிங்கம்..

“என்ன பாப்பா.. இது.. நம்ம ஊரு மாதிரியே இங்கயும் வாயாடிகிட்ட இருக்க??? பாத்து மரியாதை கொடுத்து பேசனும்” என்று பாரதியை அடக்கியவர் அப்பொழுது தான் ஜானகியை கவனித்தார்...

“இருக்கட்டும் அண்ணா!! நாங்கல்லாம் இப்படி கலகலப்பா பேச ஆள் இல்லாமல் இருக்கோம்”

தன்னை அண்ணா என்று அழைத்த ஜானகியை மகிழ்ச்சி பொங்க பார்த்தார் தர்மலிங்கம்....

அவரின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டு

“ஐயோ !! சாரிண்ணா.. நான் பாட்டுக்கு வந்த உடனே அண்ணானு சொல்லிட்டேன்.. ஏதோ உங்களை பார்த்த உடன் எனக்கு ஒரு அண்ணனை பார்த்த மாதிரி இருந்தது.. அதான் அப்படி கூப்பிட்டுட்டேன்.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்க” என்று அவசரமாக கூறினார்..

“தப்பா எல்லாம் இல்லம.. எனக்கு தங்கச்சி, தம்பினு கூட பிறந்தவங்க யாரும் இல்லை மா யாரும் இதுவரைக்கும் என்னை அண்ணானு கூப்பிட்டதில்லை... அதான் முதன் முதல்ல கேட்கவும் ரொம்பவும் சந்தோஷமா இருந்தது...” என்று தழுதழுத்தார் தர்மலிங்கம்.

“ஸ்ஸ்ஸ் அப்பா... போதும் போதும்.. உங்க பாசமலர் படம்.. டாக்டர் உங்களை உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக்கார் .. உங்க தங்கச்சி கிட்ட மெதுவா பேசுங்க” என்று தன் தந்தையின் நிலையை ஜானகிக்கு குறிப்பாக உணர்த்தினாள்.

அபொழுது தான் ஜானகிக்கு உரைத்தது.. அவர் ஒரு இதய நோயாளி என்று..

அதன்பின் அவர் உடல்நி லையை பற்றி விசாரித்து விட்டு கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடைபெற்றார்...ஏனோ!! அந்த குடும்பத்தை பார்த்ததில் அவங்களை பற்றி தெரிந்து கொணட்தில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி நிறைந்து இருந்தது அவர் மனதில் ...

கிளம்பும் பொழுது

“ஆமா! சாப்பாட்டுக்கு என்ன செய்யற பாரதி..”

“இங்க வெளியிலதான் வாங்கிக்கறேன் மா...

“இனிமேல் நான் சமைத்து எடுத்து வர்ரேன்..”

“அதெல்லாம வேண்டா ம.. உங்களுக்கு எதுக்கு சிரமம்??? “ என்று அவசரமாக மறுத்தார் பாரதியின் அப்பா

“இப்பதான் என்னை உங்க தங்கச்சினு சொன்னீங்க.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?? உங்க தங்கச்சி ஊர்ல வந்து இருந்துகிட்டு வெளில சாப்பிடுவீங்களா??..அதனால தினமும் மதியம் நானே சாப்பாடு எடுத்து வர்ரேன்.. எனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்..பாரதி கூட பேசிகிட்டு இருக்கலாம் “ என்று அவர் வாயை அடைத்தார் ஜானகி 



றுநாள் ஆதி கிளம்பி அலுவலகம் சென்றதும் ஜானகியே மதிய உணவை சமைத்து எடுத்து வந்தார்...சுசிலாவிற்கும் அது உணவு நேர இடைவேளை என்பதால் அவரையும் அழைத்து வந்து அனைவருக்கும் பரிமாறினார்... பின் சிறிது நேரம் பேசிகொண்டு இருந்து விட்டு சென்றார்...

அடுத்த நாள் ஆபரேசன் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. ஜானகியே எல்லா பணத்தையும் கட்டியிருந்தார்...

ஊரிலிருந்து யாரையும் வரவேண்டாம் என்று விட்டாள் பாரதி..

காமாட்சி பாட்டி கடைசியா ஒரு தரம் பார்த்துடறோம் என்றதுக்கு

“கடைசினு சொல்லாத ஆயா.. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.. அவரை நல்ல படியா நான் திரும்ப கூட்டிகிட்டு வருவேன்... இல்லைனா அந்த ஊருக்கு திரும்ப வரவே மாட்டேன்...” என்று சத்தம் போட்டாள்..

ஆபரேசன் தியேட்டருக்கு போகும் முன்னே தர்மலிங்கம் தன் குடும்பத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால்

ஜானகியின் மொபைலில் இருந்து வீடியோ கால் பண்ணி அனைவருடனும் பேசிவிட்டு தான் உள்ளே சென்றார்...

ஜானகி காலையிலயே கோயிலுக்கு சென்று அவர் பேரில் அர்ச்சனை பண்ணி விபூதிய நெற்றியில் வைத்து விட்டார்..

“தைரியமா இருங்க அண்ணா.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.. ஜம்முனு நீங்க திரும்பி வருவீங்க” என்று புன்னகைத்தார்.

மனம் நெகிழ்ந்தது தர்மலிங்கத்துக்கு.. தன் சொந்த தங்கச்சியா இருந்தால் கூடஇந்த அளவுக்கு பாசமா இருந்திருக்காது “ என்று மனதினில் நினைத்தவர் இந்த மாதிரி உறவுகள் கூட இன்னும் கொஞ்சம் நாள் வாழ விடு முடுகா என்று வேண்டி கொண்டே சென்றார்..

ஆபரேசன் நடந்து கொண்டிருக்கும் பொழுது பாரதி கூடவே ஜானகியும் இருந்தார்.. என்னதான் வெளியில் தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள் கலங்கி கொண்டுதான் இருந்தாள் பாரதி.. அருகில் அமர்ந்து இருந்த ஜானகியின் கையை இறுக கட்டி பிடித்துகொண்டே கந்த சஷ்டி கவசத்தை எத்தனை முறை சொன்னாள் என்று அவளுக்கு தெரியாது..

ஜானகியும் அவருக்காக அந்த முருகனிடம் வேண்டி கொண்டே இருந்தார்...

அந்த இரு பெண்களின் வேண்டுதலும், அவர் குடும்பத்தின் பாசமும் அவரின் ஆபரேசன் நல்ல படியாக முடிய வைத்தது...

வெளியில் வந்த டாக்டர் “இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரை பார்க்கலாம்.. ஆனால் உணர்ச்சி வசப்படும்படி எதுவும் சொல்ல கூடாது” என்று கூறி சென்றார்...

பாரதிக்கு இப்பதான் உயிரே வந்தது.. ஜானகியை அப்படியே கட்டி கொண்டாள்.. அவளின் நிலையை புரிந்து மெல்ல அவளின் தலையை தடவி கொடுத்தார் ஜானகி...

மெல்ல தெளிந்தவள் ஊருக்கு போன் பண்ணி அனைவருக்கும் தகவல் சொன்னாள்.. அனைவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர்....

அதன் பிறகு அவரை நார்மல் வார்டுக்கு மாற்றி இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு போய்டலாம்.. இன்னும் ஒரு அறு மாதத்திற்கு நல்ல ஓய்வு வேணும் என்று சொன்னார் டாக்டர்...

தினமும் மதிய உணவை அவருக்கு தகுந்த உணவாக சமைத்து எடுத்து செல்வார் ஜானகி.. ஊரில் இருக்கும் பாரதி குடும்பம் அனைவருமே அவருக்கு பரிச்சயமாகினர்.. அனைவருடனும் போனில் தினமும் பேசுவார்.. பாரதியின் அம்மா ஒரு நாள் பேசும்பொழுது அவருக்கு ரொம்பவும் நன்றியை தெரிவித்தார்

“இப்படி யாரும் இல்லாத ஊரில் இந்த பாரதி பொண்ணு மட்டும் அவரை தனியா பாத்துக்கதே.. எங்களையும் யாரையும் வரவேண்டம் னு சொல்லிடுச்சே....எப்படி சமாளிக்க போகுதோ என்று கவலையா இருந்தது.. தெய்வமா வந்து நீங்க உதவி செய்றீங்க. ரொம்ப நன்றிமா “

“இருக்கட்டும் அண்ணி.. பாரதி என் உயிரையே காப்பாத்தியிருக்கா... அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்லை...அவள் எல்லாத்தையும் தனியா சமாளிச்சிடுவா..நீங்க ஒன்னும் கவலை படாதிங்க ” என்று சிரித்தார்..

ஜானகி தினமும் மதியம் சென்று கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்து பேசிவிட்டு வருவார்..... முக்கால்வாசி நேரம் அவர் தன் பையனை பற்றியே பெருமையாக பேசுவார்

ஒருநாள் அப்படி பேசிக்கிட்டு இருக்கும் பொழுது தர்மலிங்கம்

“ரொம்ப நன்றிம்மா... இவ்வளவு தூரம் கூட இருந்து உதவி செய்ததுக்கு. இல்லைனா இந்த ஊர்ல யாரையும் தெரியாமல் கஷ்டபட்டிருப்போம்” என்று நெகிழ்ந்தார்..

“இதுல என்ன இருக்கு அண்ணா.. நீங்க பாரதிக்கு தான் நன்றி சொல்லணும்.. அவள் தான் தனி ஆளா நின்னு உங்களை பார்த்து கிட்டாள் இல்லை...

“என் சின்ன பாப்பா கூட இருந்தால் எனக்கு யானை பலம் மாதிரி தங்கச்சி.. எல்லாத்தையும் சமாளிச்சுடுவா “ என்று பெருமையாக சொன்னார்...

“என் பையனும் அப்படித்தான்.. எத்தனை கஷ்டம் வந்த போதும் தனியாகவே நின்னு சமாளிச்சுட்டான்” என்று சொல்லும் பொழுதே அவரின் முகத்தில் பெருமிதம்..

“போச்சுடா... எங்கடா உங்க அருமை புத்திரனை பற்றி இன்னைக்கு இன்னும் பேசாம இருக்கீங்களே னு நினைச்சுகிட்டே இருந்தேன்.. கரெக்டா சொல்லீட்டீங்க... “என்று ஜானகியை வம்பிழுத்தாள் பாரதி..

“ஆமாம் டீ வாயாடி.. என் பையன் ராஜாவாக்கும். அவனை பார்த்தா அப்படியே வாயடைத்து போயிடுவ நீ “என்று சிரித்தார்..

“பார்க்கலாம்.. பர்க்கலாம்.. நான் வாயடைத்து நிற்கறனா.. இல்லை உங்க லவகுஷன் ராஜகுமாரன் என்னை பார்த்து வாயடைத்து நிற்கராரனு ” என்று கழுத்தை நொடித்தாள் பாரதி

அதற்குள் சுசிலா அழைத்து வர சொன்னதாக ஜானகியை கூப்பிட்டார் ஒரு நர்ஸ்..

“இருங்க பார்த்திட்டு வந்திடறேன் “ என்று கிளம்பியவர்

“சுசி இப்ப எதுக்கு கூப்பிட்டிருக்கா?? “ என்று யோசித்தவாறெ அவர் அறையை அடைந்தார்...

அங்கு ஒரு 28 வயது மதிக்க தக்க பெண் அமர்ந்திருந்தாள்..

“எதுக்கு சுசி வர சொன்ன?? என்றவாறெ இருக்கையில் அமர்ந்தார்..

“நம்ம ஒரு விளம்பரம் குடுத்து இருந்தோம் இல்லையா..அது விஷயமாதான் இந்த பொண்ணு வந்திருக்கா... “

“என்ன விளம்பரம் ?? “ என்று யோசித்தவர் பிறகு தான் ஞாபகம் வந்தது அது வாடகை தாய்க்கான விளம்பரம்..

“எப்படி.. இதை மறந்தேன்?? என்று தன் தலைய மானசீகமாக கொட்டி கொண்டு அந்த பெண்ணை அளவெடுத்தார் ஜானகி

அந்த பெண்ணும் ”வணக்கம் ஆன்டி “ என்று அவளை வணங்கினாள்...

ஏனோ !! பார்த்த உடனே அந்த பொண்ணை பிடிக்க வில்லை... கொஞ்சம் அந்த பெண்ணை பற்றி விசாரித்தார்... அவள் அளித்த பதில் ஜானகியின் மனதுக்கு பிடித்தமானதாக இல்லை...

“சரி மா... நாங்க யோசித்து சொல்றோம்” என்று அந்த பெண்ணை அனுப்பி வைத்தார்...

“ஏன் ஜானகி.. இந்த பெண் நல்ல மாதிரி தானெ தெரியுது.. அப்புறம் ஏன் வேண்டாம்ன??“

“இல்லை சுசி.. அந்த ஷ்வேதாவும் பார்த்த உடன் எப்படி நலல பொண்ணா தெரிஞ்சா... ஆனால் அப்புறம் பார்த்தா தானே அவள் உள்ள எவ்வளவு விஷம் இருந்ததுனு நமக்கு தெரிந்தது.. அதனால தான் எதையும் நல்லா விசாரிக்கிறேன்” என்றவரின் பார்வை எதேச்சையாக சுசிலாவின் மேஜை மீது இருந்த ஒரு விண்ணப்பதின் மேல் நின்றது..

அதில் கீழே பாரதி என்று கையொப்பம் இருந்ததால் கொஞ்சம் ஆர்வத்துடன் அதை எடுத்து பார்த்தார்...

அதை பார்த்ததும் அதிர்ந்து போனார்...

அதில் அவங்க அப்பா தர்மலிங்கத்தின் உயிர்க்கு ஏதாவது ஆனால் அவரின் உறுப்புகள் அனைத்தையும் தானமாக கொடுக்க சொல்லி எழுதிய விண்ணப்பம் அது....

“என்ன சுசி இது?? எப்படி அந்த பொண்ணு இப்படி எழுதி கொடுத்திருக்கா??? அவங்கப்பா கண்டிப்பா திரும்ப வந்திடுவார்னு அவ்வளவு நம்பிக்கையா இருந்தாளே.. எப்படி இப்படி ஒரு விண்ணப்பத்தை கொடுக்க மனது வந்தது “ என்று நம்ப முடியாமல் கேட்டார்....

“ஹ்ம்ம்ம்ம் அதுதான் பாரதி... எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் அடுத்தவங்களுக்கு உதவி செய்வாள்... நம்ம கமலா ஹாஸ்பிட்டல வேலை செய்யும்பொழுது கூட தன் வேலையை விட்டு மற்ற வேலையும் இழுத்து போட்டுகிட்டு செய்வாளாம்..இங்க கூட சும்மா இருக்கிற நேரம் எல்லாம் யாருக்காவது உதவி செய்துகிட்டு இருப்பா.. அவள் சும்மா ஒரு இடத்துல உட்கார்ந்து நான் பார்த்ததில்லை..

அதே மாதிரி பணத்துக்காகவும் அலைய மாட்டா போல .. இப்ப கூட பாரு அவங்க அப்பா ஆபரேசனுக்காக யார் பணம் கொடுத்தாங்க னு சொல்லுங்க?? .. நான் கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுக்கனும்னு என்னை அரிச்சுகிட்டிருக்கா... பேசாமல் நீதன் கொடுத்தேனு சொல்லிடவா??

“ஐயோ!! வேண்டாம் சுசி.. அப்புறம் அவ ஒரு மாதிர் கில்டியா பீல் பண்ணுவா... அவ எங்கிட்ட எப்பவும் நார்மலா பேசனும்னு தான் எனக்கு ஆசை.. அவங்கப்பாவை பார்க்கறதுக்கு முன்னாடியே நான் செலவை ஏற்றுகிறேன் னு சொன்னவ நான்.. நான் அவரை பார்த்ததும் அவரில் ஒரு சகோதரனை கண்டதும் இது ஒரு தங்கச்சி அண்ணனுக்கு செஞ்சதாகவெ இருக்கட்டும்.. அவகிட்ட எதுவும் சொல்லிடாத “ என்று தடுத்தார்...

ஆனால் யாருக்கு தெரிய கூடாது என்று அவர்கள் நினைத்தார்களோ அவளே வெளியில் இருந்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தாள்.. அதை கேட்டதும் பாரதியின் மனம் குழுங்கியது...

ஜானகி மேல ரொம்பவும் மதிப்பு வந்தது.. இந்த காலத்தில் கூட இப்படி இருக்காங்களா?? இவர் செஞ்ச உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்” என்று எண்ணி கொண்டே அந்த இடதை விட்டு நகர்ந்து சென்றாள்..

அறையினுள்ளே

“நீ சொல்லிடாதனு சுலமா சொல்லிட்ட... அவளை சமாளிப்பதற்குள் எனக்கு தான் மூச்சு வாங்குது”

“ஹா ஹா ஹா.. நல்லா அனுபவி. இவ்வளவு பெரிய டாக்டர் ஒரு சின்ன பொண்ணை சமாளிக்க முடியலைனு சொல்றியே.. நீயெல்லாம் என்னத்த டாக்டர்க்கு படிச்சியோ “

“ஆமாம் டீ... சின்ன பொண்ணா இருந்தால் சமாளிச்சுடலாம்.. அடம்பிடிக்கறதுகளை எல்லாம் எப்படி சமாளிக்கிறது.. அந்த வகையில் அவ உன்னையும் ஆதியையும் மாதிரியே உரிச்சு வச்சிருக்கா. உங்க மூனு பேரையும் ஒரே விட்டுக்குள்ள வைக்கலாம்...” என்று சிரித்தார்..

“ஹ்ம்ம் சரி அத விடு.. பாரதியை பற்றி சொல்லு” என்று ஆர்வமாக கேட்டார்..

“அவளுக்கு இந்த சமூக சேவையில் ரொம்ப ஆர்வம்... 6 மாதம் ஒரு முறை இரத்த தானம் செய்வாளாம்...அதிலும் இந்த மாதிரி உறுப்பு தானம்(organ donation) செய்றதை பற்றி கமலா யார் கிட்டயோ பேசப்போய், அதை எதேச்சையாக கேட்டுகிட்டிருந்த பாரதிக்கு ரொம்பவும் ஆச்சர்யமா இருந்ததாம்...

அதை பற்றி மேலும் கேட்டு தெரிந்துகொண்டு, அங்குள்ள கிராமங்களில் அதை பற்றிய விழிப்புணர்வு கொண்டு வரணுமுன்னு கமலாவை வற்புறுத்தி ஒரு பெரிய முகாமை நடத்த வச்சு அங்குள்ள கிராமங்களிலயே நிறைய பேர்களை உறுப்பு தானத்தில் சேர்த்து விட்டிருக்கான பாரேன்..

நாம் இறந்த பிறகு மண்ணோட மக்கி போற இல்ல எறிந்து வீணாகி போற உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவியா இருக்கும் பொழுது அதை ஏன் வீணாக்கனும் என்று எல்லாரிடமும் வாதிடுவாளாம்...இவ பேசி பேசியே முக்கால் வாசி பேரை இதுக்கு ஒத்துக்க வச்சிருக்கா...

நம்ம நகரங்களில் கூட உறுப்பு தானம் என்பது குறைவு தான்..ஆனால் இந்த சின்ன பொண்ணு அங்குள்ள கிராமங்களிலயே சாதிச்சிருக்கான எனக்கே ஆச்சர்யமா இருக்கும்..

அவளோட இந்த முயற்சியால ரெண்டு மூனு பேருக்கு கண் பார்வை திரும்ப கிடைச்சிருக்கு... கிட்னி கிடைச்சிருக்கு.. ஏன் கற்ப பை கூட மாற்றி வச்சிருக்காங்கன பாரேன்...

அவர் கூறியதை கேட்டதும் ஜானகியின் மூலையில் மின்னல் வெட்டியது... அவர் முகத்தில் ஒரு பிரகாசம் வந்தது..

ஜானகியின் முக மாற்றத்தையும், அவருக்குள் திடீரென்று தோன்றிய எண்ணத்தையும் அறியாமல் பாரதியை பற்றி புகழ்ந்து தள்ளி கொண்டிருந்தார் சுசிலா.....

பேசி முடித்ததும்

“என்னடீ இப்பயாவது தெரியுதா பாரதியை பற்றி??? “ என்று ஜானகியை பார்த்தார்..

அவரோ பலத்த யோசனயில் இருந்ததால் மெல்ல வெளியில் வந்து

“என்ன கேட்ட சுசி?? “

“ஹ்ம்ம்ம் பாரதிய பற்றி தெரிங்சுகிட்டியானு கேட்டேன்” என்றார்...

“ஆமாம் சுசி...நல்லா தெரிஞ்சுகிட்டேன்... சரி நான் அப்ப கிளம்பறேன்” என்று அவசரமாக கிளம்பினார்..

“என்னாச்சு இவளுக்கு??? இப்ப வரை நல்லாதானெ பேசிகிட்டு இருந்தா??? திடீர்னு மந்திருச்சு விட்டவ மாதிரி போறாளே !! என்று குலம்பி கொண்டே தன் வேலையை கவனித்தார் சுசிலா...

காரில் திரும்ப வரும்பொழுது சுசிலா பாரதியை பற்றி சொன்னது திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது...

அவர் மனதில் ஒரு ஆசை உதயமானது.. ஆனால் இது நடக்குமா?? என்ற சந்தேகமும் கூடவே வந்தது.. இல்லை எப்படியாவது இத நடத்தி காட்டனும் “என்று நினைத்து கொண்டே தன் வீட்டை அடைந்தார்... வந்தவர் நேராக பூஜை அறைக்குள் சென்று அந்த முருகனிடமே முடிவை வைத்தார்...

அந்த வேலனும் சிரித்து கொண்டே அவருக்கு வேண்டிய உத்தரவை கொடுத்து தன் ஆட்டத்தின் அடுத்த காயை நகர்த்தினான்...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!