உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-13




 அத்தியாயம்-13

தான் ஹோம் மினிஸ்டர் பதவியை ஏற்ற பின் செய்யும் முதல் வேலை என்பதாலும், முதல் முதலில் அவனுக்கு சமைப்பதாலும், சமையல் செய்யும் வள்ளியையும் இன்னொரு பெண்ணையும் துணைக்கு வைத்து கொண்டு அந்த கிச்சனையே தலைகீழாக புரட்டி கொண்டிருந்தாள் பவித்ரா...

ஆதித்யா வாங்கி கொடுத்திருந்த ஐ-போனில் ஒவ்வொரு ரெசிபியாக தேடி அதை வள்ளியிடம் விளக்கி கொண்டிருந்தாள்... அவள் சொல்லுவதை வள்ளியும் அப்படியே செய்தாள்...

அதை செய்து கொண்டிருக்கும் பொழுதே வள்ளியின் முகத்தில் ஒரே யோசைனயாக இருந்தது... இதை கேட்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தி பின் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.. பவித்ராவும் தான் இருந்த பிசியில் வள்ளியின் முகத்தில் தோன்றிய அந்த சந்தேக ரேகைகளை கவனிக்கவில்லை...

இரண்டு மணி நேரம் போராடி ஒரு வழியாக மதிய உணவை தயாரித்தனர் மூவரும். பின் அனைத்தையும் கொண்டு வந்து டைனிங் டேபிலில் வைத்தனர்...

பவித்ரா அதற்கு மேலும் கொஞ்ச டெகரேசன் செய்தாள்.. மீண்டும் ஒரு முறை எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று சரி பார்த்து திருப்தி அடைந்தவளாக ஆதித்யாவை சாப்பிட அழைக்க சென்றாள்..

அவன் அலுவலக அறையை அடைந்தவள் மெதுவாக கதவை தட்டினாள்... பதில் எதுவும் வராமல் போகவும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்...

ஆதி ஏதோ ஒரு பைலை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்ததால் அவள் வந்து நின்னதை கவனிக்கவில்லை...

“சரியான வொர்க்காலிக் போல... இத வைத்தே எப்படியாவது இவனை வீட்டுக்குள்ளயே மடக்கனும்” என்று யோசித்தவள் பின் அவன் அருகில் சென்றூ

“லன்ச் ரெடி பாஸ் .. சாப்பிட வாங்க... “ என்று அதே ஆங்கிலேயர் பாணியில் இடைவரை குனிந்து பாவனை செய்தாள்... அவளின் குரலை கேட்டு திரும்பியவன் அவளின் அந்த பாவணையை ரசித்தவாறு

“அதுக்குள்ள ரெடி பண்ணிட்டியா??? சூப்பர் பாஸ்ட் தான் போ “ என்று சிரித்தவாறு தான் பார்த்து கொண்டிருந்த பைலை மூடி வைத்துவிட்டு எழுந்து அவளுடன் டைனிங் ஹாலுக்கு சென்றான்... அங்கு இருந்த வாஷ்பேஷனில் கை கழுவியவன் டேபிலுக்கு அருகில் வரவும், அவன் அமர வசதியாக ஒரு இருக்கையை நகர்த்தி வைத்தாள்..

“வாவ்... உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு... “ என்று சிரித்தவாறே அந்த இருக்கையில் அமர்ந்தவன் அங்கு இருந்த உணவு வகைகளை கண்டு அதிர்ந்தான்...

“என்னடி இது?? ... எல்லாம் வெஜ் ஆ இருக்கு... எனக்கு வெஜ் பிடிக்காது. நான்வெஜ் இல்லாமல் என்னால சாப்பிட முடியாது னு வள்ளி சொல்லலை?? “ என்று அவளை பார்த்து முறைத்தான்..

அதை கண்டதும் குத்தாட்டம் போட்டாள் பவித்ரா மனதுக்குள்...

“இத.. இத இதத்தான் எதிர்பார்த்தேன் “ என்று வீர சிரிப்பை சிரித்துக்கொண்டாள்...

ஆம்.. பவித்ரா வள்ளியிடம் அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டபொழுது அவளோ

இந்த உலகில் உள்ள எல்லா ஓடறது, பறக்கறது, தாவறது, நீந்தறது என்று அத்தனை ஜீவராசிகளையும் சொல்லி ஒவ்வொன்னையும் எப்படி செய்தால் தன் ஐயாவுக்கு பிடிக்கும் என்று விளக்கினாள்

“ஏன் உங்க ஐயாவுக்கு சைவம் எதுவும் பிடிக்காதா?? ” என்றாள் சந்தேகமாக

“ஐயோ!!! சைவம் மட்டும் இருந்தது அவ்வளவுதான்... பயங்கர டென்சன் ஆகிடுவார்.. அதுவும் மதிய சாப்பாட்டுக்கு எல்லாமே அசைவம் தான் வேணும்... ஒரு தரம் தெரியாமல் சைவம் செஞ்சதுக்கு காச் மூச்சுனு கத்திட்டார்...என்று தன் ஐயாவின் பெருமையை விளக்கி கொண்டிருக்கையில் பவித்ராவின் சின்ன மூளையில் பெரிய மின்னல் அடித்தது...

“ஹ்ம்ம்ம் பெரிய மஹராஜாவுக்கு சைவம்னா பிடிக்காதா..?? அப்படீனா இன்னைக்கு எல்லாமே சைவம் மட்டும் தான்... அதை கண்டு அவன் அலறி ஓடனும்.. அத கண்டு நான் ரசிக்கணும்.. அப்படி ஓடினாலும் பிடித்து உட்கார வைத்து அவன் இதை எல்லாம் சாப்பிட்டு முழி பிதுங்குவதை கண்டு ரசிக்கணும் “என்று திட்டமிட்டவள் சைவ வகைகளாக தேடித்தேடி வள்ளியை செய்ய வைத்தாள்...

வள்ளியும் முதலில் அவள் சொல்வதை செய்தாலும் பின் எல்லாம் சைவமாக செய்யவும்

“ஐயோ.. இது ஐயாவுக்கு பிடிக்காதே. இதை எப்படி சொல்வது.. புது எஜமானி எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று குழம்பி பின் எதுவும் கேட்காமல் விட்டு விட்டாள்..

தான் நினைத்த மாதிரியே அவன் அங்கு இருந்த உணவு வகைகளை கண்டு அலறவும்

“ஆஹா.. முதல் ஸ்டெப் சக்ஸஸ்... அதே மாதிரி இதை சாப்பிட வைத்து அவனை முழிக்க வைக்கனும் “என்று எண்ணிக்கொண்டவள் அவன் இன்னும் கோபமாக அவளை முறைத்துக்கொண்டு இருப்பதை கண்டு

“ஹ்ம்ம்ம் வள்ளி எல்லாம் சொன்னாங்க பாஸ்... ஆனால் இன்று சனிக்கிழமை யா பெருமாளுக்கு உகந்த நாள்.. அவருக்கு நான்வெஜ் பிடிக்காதா... அதனால இன்று நோ நான்வெஜ் .. ஒன்லி வெஜ்” என்று சிரித்தாள் குறும்பாக

“என்னது??? பெருமாளா.. யார் அவர்?? அவருக்கு நான்வெஜ் பிடிக்காதுனா அவருக்கு கொடுக்காத.. நான் என்ன பாவம் பண்ணினேன்...

“இதெல்லாம மனுசன் சாப்பிடுவானா... நீயே கொட்டிக்க என்னை ஆள விடு” என்று எழுந்திருக்க போனவனை அவசரமாக கையை பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர்த்தினாள்..

“ஹலோ... கொஞ்சம் இருங்க பாஸ்... நான் இந்த வீட்டு ஹோம் மினிஸ்ட்டராக்கும்... நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கனும்ம்.. அதோடு நான் சொல்ற மெனுதான் இன்னைக்கு லன்ச்க்குனு நீங்கதான சொன்னீங்க... அதுக்குள்ள மறந்திட்டீங்க.. நீங்க கொடுத்த இந்த பதவியை நீங்களே மதிக்கலைனா இந்த வீட்டு வேலைக்காரங்க எப்படி மதிப்பாங்க ..” என்று திருப்பி முறைத்தாள்...

“அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற??? “ என்றான் கொஞ்சம் இறங்கி...

“ஹ்ம்ம்ம் அப்படி வா வழிக்கு” என்று முனகியவள்

“இதை எல்லாம் நீங்க இன்று சாப்பிடனும் பாஸ்...”என்று மடக்கினாள்

“ஹே... இதெல்லாம் ஆடு மாடு சாப்பிடறது டி .. இதை எப்படி நான் சாப்பிட முடியும்... ஆளை விடு “ என்று மீண்டும் எழுந்தான்

“ஹ்ம்ம்ம்ம் அப்படீனா இந்த ஹோம் மினிஸ்டர் பதவியை நான் ராஜினாமா பண்றேன்... எனக்கு வேண்டாம்... நீங்களே வச்சுக்குங்க “ என்று அவனுக்கு செக் வைத்தாள்...

“சரியான இம்ஸடீ உன்னோடா... சரி சரி சாப்பிட்டு தொலைக்கிறேன்.. ஆனால் இன்னைக்கு மட்டும் தான்... இனிமேல் நொ வெஜ் .. என்ன புரிஞ்சுதா?? “

“யெஸ் பாஸ்... இப்ப Lets start from starter” என்று சொல்லி அவனுக்கு அருகில் இருந்த வெஜிடபுள் சூப்பை ஊற்றி அதன் மேல் கொஞ்சம் பெப்பர் தூளை போட்டு கொடுத்தாள்...

அதை கண்டதும் முகத்தை சுழித்தான்....

“இது என்ன கஞ்சி மாதிரி இருக்கு... மாடு குடிக்கறதை எல்லாம் என்னை குடிக்க வச்சு கொடுமை பண்றாளே “என்று மனதுக்குள் புலம்பியவாறு ஒரு ஸ்பூன் எடுத்து மெல்ல வாயில் வைத்தான் பயந்தவாறே...

முதலில் என்னவோ போல் இருந்தாலும் பின் அதன் சுவை கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது...பின் அதை ருசித்து குடிக்க ஆரம்பித்தான்..

இதை குடித்ததும் துப்புவான் என்று எதிர்பார்த்த பவித்ரா முதலில் முகத்தை சுழித்தாலும் பின் அவன் விரும்பி குடிப்பதை கண்டவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது..

“ஹ்ம்ம்ம் இருக்கட்டும் அடுத்த இன்னிங்ஸ் ல நான் தான் ஜெயிப்பேனாக்கும் “என்று சிரித்துக் கொண்டவள் அடுத்த ஐட்டங்களை எடுத்து அவன் தட்டில் வைத்தாள்...

உருளைக் கிழங்கு பொரியல், சேப்பங் கிழங்கு வறுவல், வாழைக்காய் வறுவல், புடலங்காய் கூட்டு மற்றும் தயிர் வடை என்று பக்கா சைவமாக பண்ணி இருந்தவைகளை எடுத்து அவன் தட்டில் வைத்தாள்... பின் ஒரு கப்பில் தயிர் வடையை எடுத்து அதன் மேல் தயிரை ஊற்றி அவனிடம்கொடுத்தாள்...

அதை வாங்கியவன் அந்த தயிர் வடையை பயந்த படியே எடுத்து வாயில் வைத்தவன் அதன் சுவை வித்தியாசமாக இனிப்பும், புளிப்பு, காரம் என்று அத்தனையும் கலந்து வித்தியாசமாக இருக்கவும் விரும்பி சாப்பிட்டான்.. அதே மாதிரி தட்டில் இருந்த அனைத்து வகைகளையும் நன்றாக ருசித்து சாப்பிட ஆரம்பித்தான்..

அதை கண்டதும் அதிர்ந்த பவித்ரா

“ என்னவோ வள்ளி, இந்த ஐயா நொய்யா சைவத்தை கண்டால் தலை தெறிக்க ஓடுவானு சொன்னாங்க.. இவன் என்னடானனா இப்படி வழிச்சு வழிச்சு சப்பிடறானே.. “என்று புலம்பினாள்..

தட்டில் இருந்த அனைத்து வகைகளையும் காலி பண்ணியவன்

“வாவ்... சூப்பர் பேபி.... எல்லா ஐட்டமும் சூப்பரா இருக்கு.. Now lets start main course “ என்று சிரித்தான்...

அவனின் சிரிப்பை கண்டு வயிறு எரிந்தவள் அட்லீஸ்ட் இதையாவது துப்பனும் என்று எண்ணிக்கொண்டே சாதத்தை வைத்து அதன் மேல முருங்கைக்காய் சாம்பார் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றினாள்.. நெய் ஸ்மெல்லுக்காக இவன் முகத்தை சுளிப்பான் என்று...

அவனோ அதுவும் வித்தியாசமாக இருக்கவும் விரும்பி சாப்பிட ஆரம்பித்தான்.. அதோடு அடுத்து அவள் ஊற்றிய செட்டிநாடு ஸ்டைலில் பண்ணி இருந்த வத்த குழம்பும் இன்னும் சுவையாக இருப்பதாக சொல்லி மீண்டும் ரசித்து சாப்பிட்டான்...

கடைசியாக ரசம் மற்றும் தயிரில் முடித்தான்.. திருப்தியாக சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று கை கழுவி விட்டு வந்து அமர்ந்தான்... ...பின் கொஞ்சமாக நாட்டு சக்கரை கலந்து மிதமான இனிப்பில் செய்து இருந்த மில்லட் பாயாசத்தை ஒரு கப்பில் ஊற்றி கொடுத்தாள்...

“ஹே!!! பேபி.. அல்ரெடி வயிறு புல்... நோ ப்ளேஸ்.. இது என்னது??? “ என்றான்

“இது டெஸ்ஸர்ட் பாஸ்.. இதை சாப்பிட்டால் நல்லா டைஜெஸ்ட் ஆகும்.. இதையும் குடிங்க... “ என்று அவன் கையில் திணித்தாள்...

அதன் சுவையும் அருமையாக இருக்கவும் ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தான்..அதைக்கண்ட பவித்ரா

“அடப்பாவி... என்னவோ இந்த புலி பசித்தாலும் புல்லை திங்காது ன்ற ரேஞ்சுக்கு இந்த வள்ளி அக்கா சொன்ன பில்டப்பை நம்பி இந்த புலியை புல்ல திங்க வைக்கணும் இல்லையா ஓடாவாது வைக்கனும்னு மாஸ்டர் ப்ளான் போட்டால், இந்த புலி புல்லை மட்டும் இல்லை அதோட வேரைக்கூட விடாமல் வழுச்சி சாப்பிட்டுடுச்சே....

சே!!! முதல் ப்ளானே சொதப்பிடுச்சே... இப்படி பல்ப் வாங்கிட்டமே... இப்படீனு தெரிஞ்சிருந்தா அந்த சாம்பாரிலாவது ஒரு கை உப்பை அள்ளி போட்டிருக்கலாம் “ என்று நினைக்கையில்,

“வேண்டாம் பவித்ரா...எதுல வேணும்னாலும் விளையாடு.. ஆனால் சாப்பாட்டுல விளையாடக் கூடாது.. நாம ஓடி உழைக்கிறதே இந்த அரை வயிறு சாப்பாட்டுக்காக தான்... அதையும் அடுத்தவங்க வயிற்றில அடிக்க கூடாது.. என்ன புரிஞ்சுதா” என்று மிரட்டினார் அவள் அம்மா பார்வதி

“ஐயயோ!! என்ன இந்த அம்மா நேர்ல தான் திட்டுவாங்கனா இப்ப நம்ம நினைப்புலயும் வந்து நேர்ல திட்டற மாதிரியே திட்டறாங்களே... இனிமேல் எதுவும் தப்பா கூட நினைக்க முடியாது போல.. “ என்று அசடு வழிந்தாள்...

அவன் இன்னும் அந்த பாயாசத்தை விடாமல் சுரண்டி கொண்டிருப்பதை கண்டவள் இஞ்சி தின்ன குரங்காக அவள் முகம் மாறுவதை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தினாள்...

ஒரு வழியாக குடித்து முடித்தவன்

“வாவ்... அமேஸிங் லன்ச் பேபி.. இப்படி ஒரு சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை... அதுவும் வெஜ் லயே இவ்வளவு வெரைட்டி பண்ண முடியும்னு இப்ப தான் தெரியுது... சூப்பர்.. இனிமேல் ஒவ்வொரு சனிக்கிழமைக்கும் இதே மாதிரி பண்ணிடு” என்று சிரித்தான்...

பவித்ரா தன் ஆத்திரத்தை கட்டு படுத்திக்கொண்டு

“ஹீ ஹீ ஹீ அப்படியே பாஸ் “ என்று அசடு வழிந்தாள்....

“ஹ்ம்ம்ம்ம் இவ்வளவு சூப்பரா செஞ்சு அசத்திய உன் கைக்கு ஏதாவது பரிசு கொடுக்கனுமே ?? என்ன கொடுக்கலாம் “ என்று யோசித்தவன் பின் அவள் கையை இழுத்து அழுந்த முத்தமிட்டான்...

அவனின் இந்த எதிர்பாராத முத்தத்தால் கொஞ்சம் கிறங்கி போய் நின்றாள் பவித்ரா... அவளின் அந்த கிறங்கிய நிலை அவனை மீண்டும் தூண்ட அவள் முகத்தை தன் கையில் ஏந்தி அவளின் அந்த சிவந்த ரோஜா இதழை நோக்கி குனிந்தான்....

அதற்குள் சுதாரித்துக்கொண்ட பவித்ரா அவர்கள் இன்னும் டைனிங் ஹாலில் இருப்பதை உணர்ந்து உடனே அவனை பிடித்து தள்ளியவள் வேகமாக இரண்டுஅடி தள்ளி நின்று கொண்டு

“என்ன இது ... டைனிங் ஹாலில் வச்சு ?? “ என்று அவனை திட்ட ஆரம்பித்து மெல்ல முனகலில் முடித்தாள்...அவளின் நிலையை கண்டவனும் உல்லாசமாக

“அப்ப நம்ம ரூமுக்கு போய்டலாமா?? “ என்று குறும்பாக கண்ணடித்தான்.. அதற்குள் தன் நிலைக்கு வந்த பவித்ரா

“சீ!!. புத்தியை பார்..நான் ஏற்கனவே சொன்னது தான் பாஸ்... நம்ம கேம் முடியற வரைக்கும் நோ டச்சிங் “ என்று முறைத்தாள்.. .

அவளின் சீ யில் இன்னும் மயங்கியவன்

“அப்படீனா சீக்கிரம் இந்த கேமை முடிக்கனும்ம்... என்னால் இனிமேல் பொறுமையா இருக்க முடியாது “ என்றான் மீண்டும் அதே குறும்பு மின்ன...

“அப்ப அதுக்கான வேலையை பாருங்க “ என்று சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் ஓகே பேபி... Anyway thanks for the wonderful lunch…உன் கைக்கு சீக்கிரம் தங்க வளையல் வாங்கி தர்ரேன் ”என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம் அப்படீனா நம்ம வள்ளி அக்கா கை அளவு எடுத்துக்கங்க... ஏனா, இதை எல்லாம் அவங்க தான் செஞ்சாங்க”

“ஹ்ம்ம்ம் செஞ்சது அவங்கனாலும் ப்ளான் உன்னோடது தான...உன்னோட மாஸ்டர் மைன்ட்க்கு தான் பெரிய கிப்ட் ஆ கொடுக்கணும் “என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம் அப்படீனா பிளாட்டினத்துல வாங்கி கொடுங்க.. தங்கம் எல்லாம் இப்ப ரொம்ப சீப் ஆகிடுச்சு. இப்ப எல்லாம் டைமன்ட் இல்லைனா பிளாட்டினம் தான்” என்று சிரித்தாள்...

“அவ்வளவு தான.. சரி வாங்கிட்டா போச்சு.. “ என்று சிரித்தவன் நகர ஆரம்பித்தான்.. அப்பொழுதுதான் நினைவு வந்தவளாக

“கொஞ்சம் இருங்க பாஸ் “ என்றவள் அவசரமாக அந்த தட்டில் இருந்த பீடாவை எடுத்து

“எங்க வாயை திறங்க” என்றவள் அவன் வாயை திறக்கவும் அவள் கொஞ்சம் எக்கி அவன் வாயில் அந்த பீடாவை திணித்தாள்...

அவனின் அருகில் நெருங்கி அதுவும் அவள் நுனிக்காலில் எட்டி நின்று கொண்டிருந்த கோலம் ஆதியை நிலை குலைய வைத்தது... அவளின் அந்த மெல்லிய இடையை அணைத்துக் கொள்ள அவன் கைகள் துடித்தன... இருந்தாலும் தன்னை முயன்று கட்டுபடுத்தி கொண்டவன்

“என்ன இது?? “ என்று முறைத்தான்...

“ஹ்ம்ம்ம் இது பீடா பாஸ்... நீங்க சாப்பிட்டதெல்லாம் வயிற்றுக்குள்ள போய் சண்டை போடாமல் இருக்க மருந்து.. இதை நல்லா மென்னு சாப்பிட்டு அப்படியே முழுங்கிடுங்க “ என்று சிரித்தாள்...

அவளின் அந்த கன்னம் குழிய சிரித்து நின்றவளின் குழியில் நின்றது அவனின் கிறங்கிய பார்வை.. அவள் கன்னக் குழியை தொட்டு பார்க்க துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்... இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான்...

பவித்ராவும் அவனின் அந்த மயங்கிய நிலைய கண்டுகொண்டவள் கன்னம் சிவக்க உள்ளுக்குள் சிலிர்த்தாள்.... பின் அவளும் அமர்ந்து எதையோ கொஞ்சம் சாப்பிட்டாள்...

அவள் திட்டம் பல்ப் வாங்கினாலும் அவன் ரசித்து சாப்பிட்டது என்னவோ அவளுக்கு மனம் நிறைந்து இருந்தது... அவன் அருகில் இருந்து அவனுக்கு ஒவ்வொன்னாக பரிமாரியதே அவளுக்கு வயிறு நிறைந்து இருந்தது.. 

அதற்கு மேல் அவளால் சாப்பிட முடியாததால் கொஞ்சமாக கொறித்து விட்டு பின் எல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டு தன் அறைக்கு சென்றாள் மனதுக்குள் சிரித்தவாறு...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!