காந்தமடி நான் உனக்கு!!-12

 



அத்தியாயம்-12


 “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ஆன்ட்டி...” என்று வளர்மதியின் காலில் விழுந்திருந்தான் அமுதன்.

அவ்வளவு பெரிய ஆண்மகன். தன் காலில் விழவும் பதறிப்போன வளர்மதி உடனே குனிந்து

“அச்சோ... என்னப்பா இது? இந்த காலத்துல போய் காலில் எல்லாம் விழுந்து கொண்டு. அதுவும் என் காலில்...” என்று அவனை தூக்கினார் வளர்மதி.

“நம்மை விட வயதில் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது நம் பண்பாடு ஆன்ட்டி. உங்களை மாதிரி நல்லெண்ணம் இருப்பவர்கள் தலையை தொட்டு ஆசிர்வதித்தால் அது கோடி புண்ணியம் செய்ததுக்கு சம்மாகும்.

என்னை பொறுத்தவரை நீங்கள் என் மீது உண்மையான அக்கறை வைத்து இருப்பவர். ரோட்டில் அனாதையாக கிடந்த என்னையும் ஆதரித்து, அடைக்கலம் கொடுத்து இப்பொழுது எனக்கு என்று ஒரு அடையாளத்தையும் உருவாக்கி கொடுக்க காரணம் நீங்க...” என்று தழுதழுத்தான் அமுதன்.

அன்று தான் அமுதனுக்கு முதல் மாத சம்பள நாள்...

முதல்முறையாக அவன் கஷ்டபட்டு உழைத்ததற்கான் ஊதியத்தை கையில் வாங்கியபோது அவன் கண்கள் கலங்கின. சம்பளம் பெரிதாக இல்லைதான்.

ஆனாலும் இந்த சம்பளத்துக்கே கூட வழியில்லாமல் சுற்றியது நினைவு வர, இந்த வேலை இல்லாமல் எத்தனை நாட்கள் கஷ்டபட்டான் என்பதும் கண் முன்னே வர, அந்த சொற்ப சம்பளமும் கூட அவனுக்கு லட்சரூபாய்க்கு சமமாக தெரிந்தது.

அதை கண்களில் ஒற்றி கொண்டான். வீட்டிற்கு வந்ததும் அதை கொண்டு வந்து வளர்மதியிடம் கொடுத்து ஆசி வேண்டி அவர் காதில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான்.

வளர்மதி பதறி அவனை தூக்க, அவருக்குத்தான் விளக்கம் சொல்லி கொண்டிருந்தான் அமுதன்.

“ஆஹான்... இது நல்லா இருக்கே நியாயம். பாடுபட்டவன் ஒருத்தன்; பலனை அனுபவிப்பது இன்னொருத்தனா?  கஷ்டபட்டு வேலை வாங்கி கொடுத்தது நானு. ஆனால் புகழாரம் எல்லாம் அங்கேயா? திஸ் இஸ் நாட் ஃபேர்...”  என்று செல்லமாக சிணுங்கியவாறு தன் முகத்தை நொடித்தாள் சத்யா.

“என்னதான் நீ எனக்கு உதவி செய்திருந்தாலும் ஆன்ட்டி உனக்கு சம்மதம் கொடுத்திராவிட்டால் உன்னால் எனக்கு உதவியிருக்க முடியாது சத்யா

அவங்களோட முழு சப்போர்ட்டும் இருந்ததாலதான் நீயும் எனக்கு ஆதரவு கொடுக்க முடிந்தது. அதுக்குத்தான் ஆன்ட்டிக்குத்தான் ஃபர்ஸ்ட் தேங்க்ஸ்...” என்று பளீரென் வெண்பற்கள் தெரிய புன்னகைத்தவன்

“ஸ்வீட் எடுத்துக்கங்க ஆன்ட்டி.... “  என்று காந்த புன்னகை மின்ன அந்த ஸ்வீட் பாக்சை வளர்மதியின் முன்னே நீட்ட, அவருக்கோ  ஆனந்தத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது.

தன் கணவன் இறந்த பிறகு தன் மூன்று மகள்கள் மட்டுமே உலகம் என்று அந்தக் கூட்டுக்குள் ஒடுங்கிவிட்ட பெரியவளுக்கு ஏனோ அமுதனை கண்டதில் இருந்தே  ஒரு இனம்புரியாத பாசப்பிணைப்பு.

அதுவும் பசி மயக்கத்தில், கண்கள் சொருக அவனை கண்டதுமே அவருடைய தாய்மை உணர்வு பொங்கி எழ,  அவன் யாரென்று கூட விசாரிக்காமல் முதலில் அவனின் பசிக்கு உணவு அளித்தார்.

அதன் பிறகும் அவனை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் வீட்டிலேயே தங்க வைத்து மூன்று வேளையும் தன் கையாலேயே உணவளித்தார்.

வளர்மதியின் பிறந்த வீட்டிலும் சகோதரிகள் மட்டுமே. தனக்கு ஒரு சகோதரன் இல்லையே என்ற குறை எப்பவும் அவர் மனதில் உண்டு.

அதே போல அவருக்கு பிறந்ததும் மூன்றும் பெண்களாக இருந்து விட, ஒரு ஆண்மகனை கண்டதுமே அவருக்கு ஒரு சகோதர தாய்மை உணர்வு. இனம்புரியாத பாசப்பிணைப்பு.

இப்பொழுது தன்னை மதித்து, தன்னை முன்னிறுத்தி தன் காலில் விழுந்து ஆசி வாங்கவும்,  இனிப்பை அவருக்கே முதன்முதலாக கொடுக்கவும் அப்படியே உருகிப் போனார் வளர்மதி.

அமுதன் நீட்டிய இனிப்பை எடுத்து கொண்டவர்

“ரொம்ப நன்றி அமுதா... உன் நல்ல மனசுக்கு சீக்கிரமாவே இன்னும் பெரிய வேலை கிடைக்கணும். நீ இன்னும் பெரிய லெவலுக்கு வரணும். அந்த கடவுள் உன் பக்கம் எப்பவும் துணை இருப்பார்...”  என்று அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.

அதைக் கண்டு சத்யாவுக்குமே மனம் நெகிழ்ந்து போனது.

இதுவரை தன் அன்னை இப்படியெல்லாம் யாரிடம் இலகுவாக பழகியதில்லை...மனம் விட்டு பேசியதும் இல்லை. ஆனால் அமுதனிடம் ஒரு உரிமையோடு அவர் பழகுவது அவள் மனதுக்கும் இதமாக இருந்தது.

அவன் தன் அன்னையிடம் முதலில் ஆசி வாங்கியதை கிண்டல் அடித்தாலும் அதை ரசிக்கத் தான் செய்தது பெண்ணவளுக்கு.

சத்யாவிற்கும் இனிப்பை வழங்க, அவளும் ஒரு முறை அவனை வாழ்த்தி இனிப்பை எடுத்து கொண்டாள்.

சற்று நேரத்தில் திரும்பி வந்திருந்த சத்யாவின் தங்கைகள் அமுதன் நீட்டிய இனிப்பை எடுத்துக் கொண்டு அவர்களும் ஆரவாரம் செய்தனர். அதோடு நிக்காமல்

“ப்ரோ...இந்த ஸ்வீட் எல்லாம் எங்களுக்கு பத்தாது. எங்களுக்கு வேற...வேற... வேற லெவல் ல ட்ரீட் வேண்டும்...” என்று கண் ஜாடையால் எதையோ காட்ட,  அவனும் புரிந்து கொண்டவன் மெல்ல புன்னகைத்தவாறு வளர்மதி இடம் அனுமதி வாங்கிக் கொண்டு மூன்று பேரையும் அருகில் இருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றான்.  

வித்யாவுக்கும் நித்யாவுக்கும் பயங்கர சந்தோசம்...

ஐஸ்க்ரீமை விட இப்படி வெளியில் வந்து குடும்பமாக உட்கார்ந்து கடையில் சாப்பிடுவது அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

அவர்கள் தந்தை இருக்கும் வரை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அவர்களை அழைத்துக்கொண்டு வெளியில் சென்று வருவார். அவரின் திடீர் மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறி விட,  அதை தூக்கி நிறுத்த வேண்டி அதிலேயே சத்யாவின் முழு கவனமும் இருந்தது.  

சிறுபிள்ளைகளான தங்கைகளின் ஆசைகள் அவளுக்கு தெரியாமல் போனது.  அவர்களும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மறைத்து விட்டனர். அப்பவும் எப்பொழுதாவது ஒரு முறை வெளியில் அழைத்து வருவாள் சத்யா.

இன்று அமுதன் அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்க,  இருவருக்குமே பயங்கர சந்தோசம்

அதனால் சத்யா மறுக்க மறுக்க அவர்களுக்கு பிடித்த ஐஸ்கிரீமை ஆர்டர் பண்ணிவிட்டு கதை அடிக்க ஆரம்பித்தனர்.

சத்யாவும் முதலில் தன் தங்கைகளை அடக்கி வாசிக்க சொல்லி கட்டுப்படுத்த முயன்றாள்தான். ஆனால் அவர்களோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சந்தோஷமாக சிரித்து பேசி ஐஸ்க்ரீமை சுவைத்து சாப்பிட்டனர்,

சத்யா அவர்களை பார்த்து முறைத்து கொண்டிருக்க, அதை கண்ட அமுதன் அவளை சமாதானபடுத்தினான்.

“விடு சத்யா...இந்த வயதில் தான் அவர்கள் சுதந்திரமாக சந்தோசமாக நினைத்ததை பேசி,  விரும்பியதை சாப்பிட்டு அனுபவிக்க வேண்டும். அவர்களை ப்ரீயா விடு...”  என்று அவளுக்கு அறிவுறுத்த அதற்கு மேல் அவளும் விட்டுவிட்டாள்.  

கூடவே அவளுமே சிறுபிள்ளையாக மாறி தன் தங்கையுடன் சேர்ந்து அரட்டை அடித்தவாறே ஐஸ்கிரீமை சுவைத்து சாப்பிட்டாள்.

மூன்று பேரும் இருக்கையில் ஒரு வரிசையில் அமர்ந்திருக்க மறு பக்கமாக அமர்ந்திருந்த அமுதனுக்கு அவர்கள் மூவரையும் மலர்ந்த முகத்துடன் பார்க்க, மனம் நிறைந்து போனது.

அதுவும் அவன் பார்வை அடிக்கடி சத்யாவிடம் சென்று நின்றது.

அவள் அந்த ஐஸ்கிரீமை சுவைக்கும் அழகை பார்த்து அவன் மனமோ எகிறிக் குதித்தது.

அவள்  இதழில் ஒட்டியிருந்த அந்த துளி ஐஸ்கிரீமை பார்த்ததும் அவன் இதழ்கள் அவனையும் மீறி அனிச்சையாய் துடித்தன. அதை தன் இதழ்களால் ஒற்றி எடுக்க தவித்த தன் இதழ்களை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு மறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான்...  

சில நொடிகள் மட்டுமே...மீண்டும் அவன் பார்வை அவனுக்கு அடங்காமல் அந்த பெண்ணைவளின் மீதே நிலைத்து நின்றது.

தன் தங்கைகளுடன் அரட்டையடித்தவாறு ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்த சத்யாவும் ஓரக் கண்ணால் அவன் பார்க்காதவாறு அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுடைய அழுத்தமான உதடுகளில் அந்த மென்மையான இலகுவான ஐஸ்கிரீம் பட்டு உருகி கரைந்து அவன் தொண்டைக்கு உள்ளே செல்வதை காண அவளுக்குமே  தித்திப்பாக இருந்தது.

அவனின் அந்த முரட்டுத்தனமான, அழுத்தமான இதழ்களில் தன் இதழையும் ஜோடி சேர்த்து கொள்ள அவள் மனம் தவித்தது.  

தன் எண்ணம் போகும் போக்கை கண்டு உடனே அதிர்ந்து போனவள்

“சீ...என்ன இப்படி ஒரு நினைப்பு? என்று தலையில் மானசீகமாக குட்டு வைத்துக் கொண்டவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

ஆனாலும் ஓரப் பார்வை அடிக்கடி அவனிடமே சென்று நின்றது. தன் தங்கைகளுடன் பேசி சிரிக்கும்பொழுது விரிந்த காந்த புன்னகை பெண்ணவளை அவன் பக்கமாய் கட்டி இழுக்க,  அதோடு அவனுமே அடிக்கடி தன்னை பார்ப்பதும் சத்யாவிற்கும் புரிந்தது.

இது என்றல்ல.. கொஞ்ச நாட்களாகவே அவன் பார்வை தன் மீது அடிக்கடி படிவதும், அதில் ஏதோ ஒரு செய்தி சொல்ல துடிப்பதை போலவும் தெரிந்தது சத்யாவுக்கு.

ஒருவேளை இதெல்லாம் தன் கற்பனையோ? என்று எண்ணியவன் அவன் தன் தங்கைகளிடம் பேசும் பொழுது அவனையே உற்று கவனித்தாள்.

அப்பொழுது அவன் பார்வையில் முழு மொத்த நட்புணர்வும்,  அதையும் தாண்டி அவர்கள் மீதான அக்கறையும் கரிசனமும் மட்டுமே இருந்தது.

ஆனால் அதே அவளிடம் பேசும்பொழுதும் அவளை பார்க்கும் பொழுது மட்டும் அந்த பார்வையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருந்தது,

அதற்கான அர்த்தம் புரிவதை போல இருந்தாலும் அதை முழுவதுமாக நம்ப வைத்துக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது.

எதுவாக இருந்தாலும் அவனே அவன் மனதை திறக்கட்டும் என்று அமைதி காத்தாள். ஆனால் இதுவரை அப்படி வாய் திறந்து எதுவும் அவளிடம் சொல்லி இருக்கவில்லை.

மாறாக அவனுடைய நன்றி உணர்வை மட்டும் தான் இதுவரை வெளியில் காட்டிக் கொண்டிருக்கிறான் அமுதன்.

ஆனால் அந்த பார்வை?  அது சொல்கிறது ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை...

“இதோ இப்பொழுது கூட என்னைத் தான் பார்த்து சைட் அடித்துக் கொண்டிருக்கிறான்.  ஆனால் தைரியமாகத் தான் சொல்ல சாருக்கு மனம் வரவில்லை...”  என்று உள்ளுக்குள் நக்கலடித்து கொண்டவள் இதழில் குறுநகை தவழ, அந்த ஐஸ்கிரீமை சுவைக்க ஆரம்பித்தாள்.

ன்றிரவு படுக்கையில் விழுந்த இருவர் மனமும் ஒரு வித கிளர்ச்சியில் இருந்தது.

சத்யாவும் அவனை அடிக்கடி பார்த்ததை அமுதன் தன் ஓர விழியால் கண்டு கொண்டான். அவனுக்கும் அவள் மனம் புரிகிறது தான்.

ஆனால் தன் மனதை வெளிப்படுத்த மட்டும் முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. வெளிப்படையாக தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்ல தயங்கியது.

அது வேறொன்றும் இல்லை...அவனுடைய பொருளாதார நிலை தான்.  

அவன் ஒருத்தன் பிழைப்புக்கே  இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்று கஷ்டப்படும் பொழுது இந்த நிலையில் வேறு ஒருத்தியையும் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்று கொஞ்சம் அறிவு பூர்வமாக யோசித்தான்.  

ஆனால் அவனுடைய மறுமனமோ

அப்படி என்றால் உன் நிலையை உயர்த்திக் கொள்...”  என்று அவனுக்கு அறிவுரை சொல்ல,  அதுவரை இருக்கிற வேலை மட்டும் போதும் என்று இருந்தவனுக்கு அப்பொழுது தான் இன்னும் மேலே வரவேண்டும்.

வெளியில் சொல்லிக் கொள்ளும் படியான வேலையில் அமர வேண்டும்.  அப்பொழுதுதான் தைரியமாக தன் காதலை அவளிடம் சொல்ல முடியும்...” என்று யோசித்தவன் அடுத்த நொடி திடுக்கிட்டுப் போனான்.

“காதல்...?  காதலா...?  நான் காதலிக்கிறேனா..?? என்று திரும்ப திரும்ப தனக்குத் தானே கேட்டுக் கொள்ள

“அட மடையா... இது கூடவா தெரியவில்லை. நீதான் அந்த புள்ளையை பார்த்த உடனே...இல்லை...இல்லை... அந்த புள்ளை குரலை கேட்ட உடனே கவுந்திட்டியே.  

இது என்ன தேவையில்லாத கேள்வி. சட்டு புட்டுன்னு சீக்கிரம் அந்த புள்ளைகிட்ட ப்ரொபோஸ் பண்ணு. நானும் கொஞ்சமாவது ரொமாண்ஸ் சீன் பார்க்க வேண்டும். உன் அழுது வடிந்த முகத்தையே பார்த்துகிட்டு இருக்கிறது செம கடியா இருக்கு...”  என்று அவனுடைய மனஸ் குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க,  அவனுக்கோ வெட்கமாக இருந்தது.

சீக்கிரம் தன் மனதில் இருப்பதை சத்யாவிடம் சொல்லி விடவேண்டும் என்று குறித்து கொண்டான் அமுதன்.

கிட்டத்தட்ட சத்யாவுக்கும் அதே நிலைதான் அப்பொழுது.  

அவள் மனமும் இன்று ஏனோ ரொம்பவும் நிறைந்து இருந்தது. அதுவும் இன்று ஐஸ்கிரீம் பார்லரில் முதன்முதலாய் அவன் பார்வை அத்துமீறி தன்னிடம் வந்து நின்றதை அவளும் கண்டு கொண்டாள் தான்.

இதுவரை அவனுடன் பழகியதில், அமுதன் எப்பொழுதும் ஒரு ஒதுக்கத்துடன் கண்ணியமாக நடந்து கொள்வான்.  

அவன் பார்வை எப்பொழுதும் கழுத்துக்கு கீழே சென்றதில்லை. அவள் கண்களை மட்டுமே பார்த்து பேசுவான்.  

ஆனால் இன்று அந்த பார்வையில் நட்பைத் தாண்டி வேற ஒன்று இருந்தது. அது.... காதல்....அந்த காதலின் மோகத்தால் தான் அவன் பார்வை அத்துமீறி தன் இதழை வருடியதும்,  அதையே ஏக்கமாக பார்த்ததும் அவளின் பெண்மைக்கும் உறைத்தது தான்.  

வேறு யாராவது அப்படி அவளை விரசமாக பார்த்து இருந்தால்,  உடனே லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியிருப்பாள்.  ஆனால் ஏனோ அவனிடம் அப்படி நடந்துக் கொள்ள முடியவில்லை.

மாறாக அவள் இதழை தீண்ட அனுமதித்ததும் கூடவே அவளுமே அவனுக்கு திருப்பிக் கொடுக்கும் விதமாய் அவன் இதழை பார்வையால் தீண்டியதும் நினைவில் வர, இப்பொழுதும் அவள் தேகம் சிலிர்த்தது.

“சீக்கிரம் என் காதலை அவனிடம் சொல்லி விட வேண்டும்...”  என்று எண்ணியவளுக்கு அடுத்த நொடி தூக்கிவாரிபோட்டது.  

அமுதனுக்கு எழுந்த அதே கேள்வி தான் பெண்ணவளுக்குமே..

“காதலா?  இது காதலா?  நான் காதலிக்கிறேனா  ? “ என தனக்குள்ளே சுயபரிசோதனை செய்ய,  அவளின் அனைத்து செல்களும் யெஸ் என்று துள்ளி குதிக்க, இன்பமாய் அதிர்ந்து போனாள் சத்யா.

எப்பொழுது இருந்து இது என்று அவசரமாய் யோசிக்க, அவனை , அமுதனை ரோட்டோரமாய் மயங்கிய நிலையில் பார்த்த அந்த கணமே அவள் மனதில் அவன் வந்துவிட்டது புரிந்தது.

இல்லை என்றால் யார் என்றே தெரியாதவன்,  முன்ன பின்ன அறியாதவனை தைர்யமாக வீட்டிற்கு கூட்டிகிட்டு வந்திருக்க மாட்டாள்.

அழைத்து வந்தவனை அவள் வீட்டிலேயே தங்க வைத்திருக்க மாட்டாள். அவனுக்கு வேலை வாங்கி தரவேண்டும் என்று சிபாரிசு பண்ணி இருக்க மாட்டாள்.

அவனுக்காக இதை எல்லாம் செய்தாள் என்றால்?  அது அவன் மீது கொண்ட காதலால்தான். அதுவும் மயங்கிய நிலையில் அவனின் காந்தமாய் கட்டி இழுத்த கண்களை பார்த்து வந்த காதல்...  

அதை நினைத்து மெல்லியதாய் சிலிர்த்து போனாள்.

எப்படி தன் காதலை அவனிடம் சொல்லுவது என்று அடுத்த தயக்கம்...

“முதலில் அவன் செட்டில் ஆகட்டும். பிறகு சொல்லிக் கொள்ளலாம்...” என்று தன் மனதை கட்டுபடுத்தி கொண்டாள் சத்யா.

இருவருமே அன்றிரவு  ஒருவித ஏகாந்த நிலையில் மனம் நிறைவுடன்  கண் மூட, காதுக்குள் ஒலித்தது எப்பவோ கேட்ட பாடல் ஒன்று...!


சொல்லத்தான் நினைக்கிறேன்... சொல்லாமல் தவிக்கிறேன்...

காதல் சுகமானது..!!

வாசப்படி ஓரமாய்... வந்து வந்து பார்க்கும்...

தேடல் சுகமானது..!!



Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!