காந்தமடி நான் உனக்கு!!-25

 


அத்தியாயம்-25

ட்டுமான தொழில் பெரும் வெற்றி பெற்றுவிட, அதனை அடுத்து மோட்டார் வாகனங்கள் தயாரிப்பிலும்,  அதற்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிலையும் ஆரம்பித்தார் மதியழகன்.  

அவர் மகன் பிறந்த நேரம்,  அவர் தொட்டதெல்லாம் பொன்னாகியது.  எல்லா தொழில்களுமே சக்சஸ் ஆகிவிட, தன் அனைத்து தொழில்களையும் இணைத்து ஆரவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் என்று பெயரிட்டார்.

ஆரவ் வளர வளர, ஆரவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ம் கிடுகிடுவென வளர்ந்து நின்றது.  அதற்கு மதியழகனின் அயராத உழைப்புத்தான் காரணம் என்றால் மிகையல்ல.

ஆரவ் தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் பொருளாதார நிலை உச்சத்தை தொட்டு இருந்தது. பல மில்லியன் டாலர்களாக அதன் மதிப்பு கூடியிருந்தது.

அவருடைய அடுத்த கனவான,  தன் தொழில்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆரவ் டவுன்ஷிப்பையும் உருவாக்கி விட்டார்.

ஓயாமல் ஓடி ஓடி உழைத்து, தொழிலில் தான் நினைத்ததை எல்லாம் சாதித்து விட்ட பெருமை மதியழகனுக்கு.

அதன் பிறகுதான் தன் மகன் மீது கவனத்தை செலுத்தினார் மதியழகன்.  

தனக்குப் பிறகு,  தன் மகன் இந்த தொழில்களை திறம்பட நிர்வகிக்க வேண்டும் என்று எண்ணி அவனை வெளிநாட்டில் சென்று படிக்க வைத்தார்.

ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் எம்.பி.ஏ படித்து முடித்து,  அங்கேயே சில வருடங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டான்.  சென்ற வருடம் தான் இந்தியா திரும்பி வந்திருந்தான்.

தன் அலுவலகத்தில் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள அமுதன் தயாராக இருக்க,  ஆனால் மதியழகன் உடனே அந்த பொறுப்பை அவனுக்கு கொடுத்து விடவில்லை.

என்னதான் ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் படித்திருந்தாலும்,  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவருடைய கொள்கை.

எதையும் முதலில் அனுபவத்தால் அறிந்து , தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

அவருக்கு சிறு வயதிலிருந்தே வறுமையின் கொடுமையும்,  ஏழ்மையின் இழிபாடுகளும்  மனதில் பட்டதால் தான்,  வேகமாக முன்னேற வேண்டும் என்ற துடிப்பு வந்தது.

அதோடு கீழ்தட்டு மக்களின் உணர்வுகளும் நன்றாக புரிந்தது. அதனால் தான் தொழிலில் பல வித்தியாசமான ஐடியாக்களை அவரால் இம்பிளிமெண்ட் பண்ண முடிந்தது.

அதே மாதிரி தன் மகனும் அறிந்துகொள்ள வேண்டும். இதுவரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்து விட்டவன் அவன்.

பிறந்ததிலிருந்தே சில்லென்ற குளுகுளு ஏசியிலும், வெளியில் செல்ல ஏசி கார்,  வீட்டிற்குள்ளேயே ஸ்விம்மிங் பூல்,  விளையாட அனைத்து வகையான விளையாட்டுப் பொருட்கள், எல்லா வகையான விளையாட்டு மைதானங்கள், என பான் வித் சில்வர் ஸ்பூனாக வளர்ந்து விட்டான். 

அவனை அப்படியே தொழிலில் ஈடுபடுத்த அவருக்கு யோசனையாக இருந்தது.

அதனால்தான் அவருக்கு ஒரு திட்டம் மனதில் உருவானது.

நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை பற்றி தன் மகன் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் அவன் தன் தொழில்களை திறம்பட நிர்வகிக்க முடியும் என்று முடிவு செய்தவர் அவனை அழைத்து தன்னுடைய விண்ணப்பத்தை முன் வைத்தார்.

அதாவது அவன் ஒரு வருடத்திற்கு,  அவனுடைய சொந்தக்காலில் நின்று சம்பாதிச்சு அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். யார்கிட்டயும் தன்னை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.

அவனைப் பற்றிய உண்மையை யாரிடமும் சொல்லக்கூடாது.  அதேபோல பணத் தேவைக்காக அவரை அணுகக் கூடாது. அவனுக்கு யாரும் பண உதவியும்  செய்யவும் கூடாது. அவனே சம்பாதித்து அவன் வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார்.

ஆரவ் முதலில் இந்த திட்டத்திற்கு மறுத்தாலும் அவன் தந்தையின் சாதுரியமான பேச்சால்,  அந்த சேலஞ்ச் ஐ ஏற்றுக் கொண்டான்.

இல்லையில்லை...அவனை ஏற்றுக் கொள்ளும்படி வைத்து விட்டார் மதியழகன்.  

அதன்படி அவன் கையில் வெறும் சொற்ப பணத்தை மட்டும் கொடுத்து அவனிடம் எந்த ஒரு கிரெடிட் கார்ட்,  டெபிட் கார்டு அதெல்லாம் இல்லாமல் அவன் அணிந்திருந்த ஆடை மற்றும் ஒரு மாற்று உடை உடன்  அவனை வீட்டிலிருந்து அனுப்பி வைத்தார் மதியழகன்.

முதனுக்கு அவனுடைய தந்தை தான் எல்லாமே.

அவன் தாய் ரூபாவதி,  அவனை பத்துமாதம் சுமந்து பெற்று எடுத்தது மட்டும் தான்.  மத்தபடி வளர்த்தது எல்லாம் மதியழகனும், அந்த வீட்டில் இருக்கும் வேலை ஆட்களும் தான்.

முக்கால்வாசி நேரம் மாதர் சங்கம்,  சோசியல் சர்வீஸ்,  என்று கிளம்பி விடுவார் ரூபாவதி.

அமுதன் தன் அன்னை முகத்தை பார்த்து வளர்ந்தது கொஞ்ச நாட்கள் தான்.

ஆனால் அதற்கு நேர்மாறாக மதியழகன் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் தன் மகனுடன் நேரத்தை செலவிட்டார். அதனால் அவன் மனதில் அவனுடைய தந்தை தான் எப்பொழுதும் ஹீரோ.

அவர் சொல்லுக்கு என்றைக்கும் மறுத்துச் சொல்ல மாட்டான். அதே போல இன்றும் அவன் தந்தை சொல்லியதை வேதம் என்றும் எடுத்துக் கொண்டான். அவர் சொல்லுவதில் ஏதோ இருக்கு என்று புரிந்து கொண்டவன் அந்த சவாலை ஏற்று கொண்டான்.   

அதன்படி மும்பையில் இருந்து பெங்களூர்க்கு  ட்ரெயின் மூலமாக வந்து சேர்ந்தான்.

வரும் பொழுது ஏ.சி கோச்சில் புக் பண்ணாமல்,  சாதாரண ஸ்லீப்பர் கோச் ல்  பயணித்தான்.  கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் பயணம் அது.  

பகல் நேரங்களில் சுடும் வெய்யில் சுட்டெரிக்க,  அவனால் அந்த ரயில் பெட்டிக்குள் அமரவே முடியவில்லை. எப்பொழுதும் குளுகுளு ஏசியில் வளர்ந்தவனுக்கு, அந்த கொளுத்தும் வெய்யிலை சமாளிக்க முடியவில்லை.

உடல் எல்லாம் வேர்த்து கொட்ட, கூடவே தன் மேலே திராவகத்தை வீசியதை போல, அவன் உடல் எல்லாம் பற்றி எரிந்தது வெம்மையால்.

அதோடு அந்த பெட்டியின் சுகாதாரம் அவனை முகம் சுளிக்க வைத்தது.

இதுவரை இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்திராதவனுக்கு,  அழுக்கேறிய இருக்கைகளும், நாற்றம் அடிக்கும் பாத்ரூம்களும், ஆங்காங்கே துப்பி வைத்திருந்த பான்பராக் கறைகள், காவி பற்கள் காட்டி சிரிக்கும் அழுக்கு உடை அணிந்த மக்கள் என அந்த சூழ்நிலையை கண்டு முகத்தை சுளித்தான் ஆரவமுதன்.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று வியப்பாக இருந்தது.

அவன் வார்ட்ரோபில் இருக்கும் ஆடைகளை தினம் ஒன்றாக போட்டால் கூட, போட்டதை திருப்பி போடாமல் அனைத்தையும் போட்டு முடிக்க பல வருடங்கள் ஆகும்.

அதே போல எத்தனை விதமான காலணிகள், சன் கிளாஸ்கள், விலை உயர்ந்த கடிகாரங்கள், பெர்ப்யூம்கள் என சொகுசாக வாழ்கிறவனுக்கு,  அங்கே கிழிந்த நைந்து போன ஆடையும், நல்ல ஒரு காலணி இல்லாமல் பிய்ஞ்சு போனதும் அதுகூட இல்லாமல் சில பேர் அங்கே இருப்பதையும் கண்டவனுக்கு மனதை சுட்டது.

அதை எல்லாம் பார்த்தவனுக்கு, ஆரம்பத்திலேயே அவனுக்கு பெரும் சவாலாக இருந்தது. இப்படி ஒரு வாழ்க்கையை அவனால் வாழ முடியுமா என்று ஆயாசமாக இருந்தது.

ஆனால் அதே நேரம் அவன் பார்வை மற்றவர்களை அளவிட்டது.

அதே ரயில் பெட்டியில் இருந்தவர்கள் எல்லாம் வெகு இயல்பாக, அந்த வெய்யிலை பொருட்படுத்தாமல் சந்தோஷமாக சிரித்து பேசுவதும், ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டும், ஒரு சில இருக்கைகளில் ஊர் வம்பு பேச என ஜாலியாகத்தான் இருந்தனர்.

தன்னால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை. என்று யோசித்தான். தானும் அவர்களை போல ஒரு மனிதன் தானே. என்னாலயும் இதை எல்லாம் தாங்க முடியும் என்று தனக்குத்தானே சியர் அப் பண்ணி கொண்டவன்   

முக்கால்வாசி நேரம் அந்த ரயில் பெட்டியின் கதவருகில் வந்து நின்று கொண்டான். அந்த வெய்யிலுக்கு சில நேரம் சில்லென்று மோதிச்செல்லும் அந்த அபூர்வ தென்றல் அவனுக்கு பெரிய வரமாக தெரிந்தது.

மீண்டும் ஒருமுறை தன்னை தீண்ட மாட்டாளா அந்த தென்றல் காதலி என அவன் மனம் குறுகுறுத்தது.

கடினமான சூழலிலும் அதை கண்டு ஸ்டக் ஆகி, அதற்குள்ளேயே உருண்டு புரளாமல், இப்படி ஆகி விட்டதே என்று அழுது புலம்பாமல்,  அந்த சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பக்குவம் வரவேண்டும் என்பதுதான் மதியழகனின் முதல் திட்டம்.

அதில்  ஆரவ் நன்றாகவே தேர்ச்சி பெற்றிருந்தான்.

அந்த புழுக்கத்தை குறைக்க, அதில் சர்வைவ் பண்ண, அவனுக்கு கிடைத்த வாய்ப்பை, வழிகளை ஆராய்ந்து அதை பயன்படுத்தினான்.

அதுவும் அடுத்ததாய் வந்த ஸ்டேசனில், அந்த பெட்டியில் நெருக்கியடித்து ஒரு கூட்டம் ஏறியதை கண்டதும் அரண்டு போனான்.

மும்பையிலும் இதே மாதிரிதான் ரயிலில் நெருக்கியடித்து பயணம் செய்பவர்களை பார்த்து இருக்கிறான். ஆனால் ஒருமுறை கூட அவன் அப்படி சென்றதில்லை.

ஆனால் இப்பொழுது அதையே அனுபவிக்க, அந்த கூட்டத்தில் இடிபட்டு மிதிபட்டு நொந்து நூடுல்ஸ் ஆனவனுக்கு தலை சுற்றியது. எப்படியோ சமாளித்து அந்த கும்பலில் இருந்து வெளி வந்துவிட்டான்.

அப்போது தான் அவன் ஒன்றும் சாப்பிடவில்லை என்பது உறைத்தது. ரயிலின் உள்ளேயே விற்பனை செய்த உணவை வாங்கி ஒருவாய் வைத்தவனுக்கு குமட்டி கொண்டு வந்தது.

அவன் வீட்டில் எப்பொழுதும் பல விதமான உணவுகள் இருக்கும். வெஸ்டர்ன், சௌத் இன்டியன், நார்த் இன்டியன் என விதவிதமான உணவு வகைகளை பார்த்தும் அதை உண்டும் வந்தவனுக்கு அந்த ரயில் கேட்டரிங் உணவு ருசிக்கவில்லை.

ஆனாலும் பசி ருஷி அறியாது என்று தன்னைத்தானே தேற்றி கொண்டவன் கஷ்டபட்டு அந்த உணவை வயிற்றுக்குள் தள்ளி சமாளித்து வைத்தான்.

ப்படியோ அந்த பயணத்தை சமாளித்து பெங்களூர் வந்துவிட்டான்.  

ரயில் நிலையத்திலயே குளித்துவிட்டு, ரெப்ரெஸ் ஆகி கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தவன் அன்றே வேலை தேடி சில இடங்களில் அலைந்தான்.

தனக்கு வேலை எளிதாக கிடைத்து விடும் என்று எண்ணி இருந்தவன் எண்ணத்தில் மண் விழுந்தது.

எல்லா இடத்திலும் முதலில் அவனுடைய  கல்வித்தகுதியை கேட்டனர்.  அவன் அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி, அவனால் தன் தகுதி எம்.பி.ஏ என்றும் சொல்ல முடியவில்லை.

கூடவே வேறு ஏதாவது கேட்டாலும் தான் மாட்டிக் கொள்வேன் என்பது புரிய பத்தாம் வகுப்பு ஃபெயில் என்று சொல்லி சமாளித்து விட்டான்.

ஆனால் பத்தாம் வகுப்பு ஃபெயில்க்கு யார் வேலை தருவாங்களாம்.  எப்படியோ அலைந்து திரிந்து, வேலை தேட,  கையிலிருந்த மிச்சம் காசும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. வேலைதான் கிடைத்த பாடில்லை.

அடுத்ததாய் தன் கையில் இருந்த காசுக்கு தகுந்த மாதிரி தன் தேவைகளை சுருக்கி கொண்டான் ஆரவமுதன். காலை உணவை தவிர்த்து வெறும் டீ மட்டும் குடித்தான். மதியம் ஒரு நேரம் மட்டும்தான் சாப்பிடுவது.

அப்படியும் அவனுடைய  கையிருப்பு குறைய ஆரம்பிக்க, அவனால் எந்த வேலையும் தேடிக்க முடியவில்லை.

அவனுடைய முறுக்கேறிய தேகத்தையும், கட்டுகோப்பான சிக்ஸ் பேக் மேனியையும், அவன் முகத்தில் தெரிந்த தேஜஸ் ஐயும் கண்டு அவனை மாடலிங் செய்யலாம் வர்ரியா என்றனர் ஒரு சிலர்.

அவனுக்கு அதில் ஆர்வம் இல்லை. கூடவே தன் தொழிலுக்கு உதவும் வகையில் ஏதாவது தொழிலில் ஈடுபடவேண்டும். அப்பொழுதுதான் அனுபவம் கிடைக்கும் என்றதால் மாடலிங் ஐ மறுத்துவிட்டான்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிச்சென்றது. அலைந்த  அலைச்சல் தான் மிச்சம் அமுதனுக்கு. கையிலிருந்த காசு முழுவதுமாக தீர்ந்து போய்விட, அவன் மனமோ சோர்ந்து போனது.

அப்பொழுதுதான் ஒரு வேலை வாங்குவது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் ஆரவமுதன். அதோடு நடுத்தர மற்றும் கீழ்த்தர மக்களின் வாழ்க்கையும், அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களும் நன்றாக புரிந்தது அவனுக்கு.

பொருள் ஈட்ட, அவர்கள் எவ்வளவு கஷ்டபடுகிறார்கள். ஒரு நேரம் உணவிற்கு,  ஒரு வெரைட்டிக்கே எத்தனை பேர் முடியாமல் கஷ்டபடுகிறார்கள்.

ஆனால் அவன் வீட்டில் ஒவ்வொரு வேளையும் அத்தனை விதமான உணவுகள் வரிசையில் அமர்ந்து இருக்கும். அதை நினைத்த பொழுது தானாக நாக்கில் எச்சில் ஊறியது.

எத்தனையோ முறை துச்சமாக மதித்த உணவு வகைகள் எல்லாம் இப்பொழுது அமிர்தமாக அவன் கண் முன்னே வந்தன.

பேசாமல் தன் வாழ்க்கைக்கே திரும்ப போய்விட வேண்டும் போல இருந்தது. அவனால் இந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையை வாழ முடியாது என்று தோன்றியது.

ஆனாலும் தன் தோல்வியை ஒத்துக் கொண்டு தன் தந்தையிடம் திரும்பி போக மனம் வரவில்லை. முன்வைத்த காலை பின்வைக்க, அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

அதோடு அவன் தந்தை உடைய இளமைக்காலத்தை பற்றி அவனிடம் சொல்லி இருக்கிறார்.

அவரும் அந்த வயதில் இப்படித்தான் கஷ்டபட்டார் என்று சொல்லி இருக்க,

“அவரால் இதையெல்லாம் தாங்கி கொள்ள முடிந்தால் என்னாலும் தாங்கி கொள்ள முடியும். என்னாலும் இதை எல்லாம் சமாளித்து ஜெயிக்க முடியும்.

என் தந்தை கடந்து வந்த கஷ்டமான முல் பாதையை என்னாலும் கடக்க முடியும். என்ன ஒருவருடம் தானே. சமாளித்து விடலாம்...”  என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி கொண்டவன்,  கடைசி வரை முயன்று பார்க்க வேண்டும் என்று பல்லைக் கடித்தவன் தன்னுடைய பசியையும் பொறுத்துக் கொண்டான்.  

ப்பொழுது தான் பெங்களூரின்  இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் கார்மென்ட்ஸ் பேக்ட்டரியை பற்றி கேள்விப்பட்டவுடன் அங்கே ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிப் பார்க்கலாம் என்று வந்திருந்தான்.

அப்பொழுதுதான் காலையில் இருந்து சாப்பிடாதது, கண்ணை இருட்டி கொண்டு வர, எவ்வளவு முயன்றும் தன்னை கட்டு படுத்த முடியாமல் மயக்கம் வர, சாலையில் சுருண்டு விழுந்து இருந்தான் அமுதன்.  

முகம் தெரியாத தன்னை யார் கண்டுக்க போறாங்க என்று வேதனையாக இருந்தது. அவன் உடல் ஒத்துழைக்கவில்லை என்றாலும் அவன் மனம் விழித்து கொண்டேதான் இருந்தது.

யாராவது தன்னை தூக்கி விடமாட்டார்களா என்று அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் துடித்து கொண்டு இருந்தது.

கடந்த ஒரு மாத காலமாக அலைந்து திரிந்ததில் மனிதர்களை நன்றாகவே எடை போட கற்றுக் கொண்டிருந்தான்.  எல்லோருமே நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கி செல்பவர்களாக இருந்தனர்.

இல்லையென்றால் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்ப்பவர்கள்.

மற்றவர்களுக்கு தான் காட்சி பொருளாக இருக்கிறமே என்று அவன் தன்மானம் சுட,  எப்படியாவது எழுந்து கொள்ள வேண்டும் என்று முயல, ம்ஹூம் அவன் உடல் கொஞ்சமும் ஒத்துழைக்கவில்லை. ஒரு இன்ச் கூட அவனால் அசையமுடியவில்லை.

தனக்கு உதவாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் மக்களை காண எரிச்சலாக இருந்தது. யாரையும் பார்க்க பிடிக்காமல் கண்ணை இறுக்க மூடி விழுந்து கிடந்தவன் செவியில் வந்து விழுந்தது ஒரு பெண்ணின் இனிய குரல்.

அந்த குரலை கேட்டதும் அவனையும் மறந்து,  அந்த குரல் அவன் உள்ளே ஊடுருவி பாய்ந்தது. ஏதோ தேவதையே வானத்தில் இருந்து தன்னை ரட்ஷிக்க  இறங்கி வந்துவிட்டதை போல அவன் உள்ளே அப்படி ஒரு பரவசம்.

“காற்றோட்டம் வரவேண்டும்...  கொஞ்சம் வழி விடுங்க...”  என்ற அக்கறையான, பதட்டமான, கண்டிப்பான குரல்.  

அனைவரையும் அவனை விட்டு தள்ளி நிறுத்தியவள் தன் ஹேன்ட் பேக்கில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து அவன் முகத்தில் பளீரென்று தண்ணியை தெளித்தாள்.

அதன் குளிர்ச்சியிலும் அவள் சுளீரென்று அடித்த வேகத்திலும் லேசாக இமைகளை திறக்க முயன்றான். தன் கண்களை சுருக்கி கஷ்டப்பட்டு இமைகளை திறந்து,  அவளின் முகத்தை கொஞ்சமாய் பார்த்தவன், அடுத்த நொடி அப்படியே ப்ரீஸ் ஆகி போனான் அமுதன். .  

அவளின் அகன்ற விழிகள் அவனுக்குள் ஊடுருவி பாய்ந்தது அந்த நிலையிலும். அவளின் பால் வண்ண முகம், கருணை சொட்டும் கண்கள், குறும்பு தாண்டவமாடும் இதழ்கள் எல்லாம் அந்த நொடியே அவன் மனதில் ஆழ பதிந்து போயின.

அதுவும் அவளின் அந்த கண்,  அவனையும் அறியாமல், அவனை உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆழியை போல மெதுமெதுவாய் திறந்த அவள்  கண்களுக்குள் அவனையுமறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்து கொண்டிருந்தான்.

அதுவரை இருந்த வலி, வேதனை எல்லாம் மாயமாய் மறைந்து விட்டதை போல இருந்தது. உடலிலும் புது தெம்பு வந்திருந்தது. புதிதாக பிறந்ததை போல ஒரு பூரிப்பு அவன் உள்ளே.

மனிதர்களில் இவளைப்போல, இந்த ஏஞ்சலை போலவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நிம்மதியுடன் இன்னுமே வாகாக சாய்ந்து கொண்டான் ஆரவமுதன்..!

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!