காந்தமடி நான் உனக்கு!!-30

 


அத்தியாயம்-30

ன்ட்டி...சதுவை ஐ மீன் சத்யாவை, உங்க பொண்ணு சத்யாவை எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா? நான் அவளை மனதார விரும்புகிறேன். அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்.  

அவளை என் கிட்ட கொடுத்துடுங்களேன்...நான் பத்திரமா பார்த்துக்குவேன்...” என்று முகத்தில் சிறு வெட்கத்துடனும், கண்கள் பளபளக்க தயக்கத்துடனும் வளர்மதியை பார்த்து கேட்டிருந்தான் அமுதன்.

சத்யாவோ இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நேரடியாக தன் அன்னையிடம் இப்படி கேட்டு வைப்பான் என்று அவள் எண்ணியிருக்கவில்லை. ஆனால் கேட்டு விட்டானே...தன் அன்னை என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற பதட்டத்துடன் அவள் பார்வை அவள் அன்னையிடம் சென்றது.

அவரும் அவன் சொன்ன செய்தியைக் கேட்டு, பெரிதும் அதிர்ந்து போகாமல், எதிர்பார்த்த விஷயம்தானே என முகம் பூரிக்க, முகத்தில் ஒரு நிம்மதியும் சந்தோசமும் வந்திருக்க,  ஒரு திருப்தியான புன்னகையுடன் தன் பார்வையை சத்யாவின் பக்கம் செலுத்தினார்.  

தன் மகள் என்ன சொல்ல போகிறாள் என்பதை ஆராயும் விதமாக வளர்மதி சத்யாவை பார்க்க,  சத்யாவும் அதேநேரம் தவிப்புடன் தன் அன்னையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

தன் மகளின் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டு கொண்ட வளர்மதி, ஒரு புன்சிரிப்புடன் இருவரையும் பார்த்தவர்  

“எனக்கு ரொம்பவும் சந்தோஷம் தான் அமுதா. ஆனால் சத்யாவிற்கு இதில் பிடித்தம் இருக்கவேண்டும். ஏனென்றால் இது அவள் வாழ்க்கை. அவளுடைய முழு சம்மதத்தோடு தான் நடக்க வேண்டும்... அதனால்..”  என்று சத்யாவை பார்த்தவர்

“நீ என்ன சொல்ற சத்யா? என்றார் ஆர்வமாக

அவளோ எதுவும் யோசிக்காமல் பட்டென்று

“எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை மா. முதலில் இவரை இங்கிருந்து போகச் சொல்லுங்க...”  என்று எரிந்து விழுந்து வார்த்தைகளை கொட்டினாள்.  

அதைக் கேட்டு வளர்மதி அதிர்ந்து போனாலும்,  அமுதன் முகத்திலோ அதே குறுநகை தான்

அவள் இப்படித்தான் சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்ததால் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. மாறாக மிக மெல்லிய குரலில்

“என்னாச்சு சத்யா?  ஏன் இந்த திருமணம் வேண்டாம் என்கிறாய்? “ என்றான் கொஞ்சமாய் அடிபட்ட பாவத்துடன். அவள் அன்னை சொன்னால் ஒத்துக்கொள்வாள் என்று இருந்த சிறு நம்பிக்கையும் இப்பொழுது பொய்த்து போனது.  

அவளும் தன் கண்களை ஒரு முறை இறுக்க மூடி திறந்தவள்,   

“லுக் மிஸ்டர் ஆரவமுதன். நான் காதலித்தது, காதலிப்பது நான் முதன் முதலாக பார்த்த அமுதனைத்தான். இந்த ஆரவமுதனை இல்லை. எனக்கு பிடித்தவன் அமுதன் மட்டும் தான்.

ஆனால் அந்த ஆரவ் உங்களோடு ஒட்டிக் கொண்டிருப்பதால்,  என்னால் உங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது...”  என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பியவாறு இறுகிய முகத்துடன் குரலில் தீவிரத்துடன்.

அவள் பேசியதிலிருந்து அவள் எங்கு வருகிறாள் என்பதை கண்டு கொண்டான் அமுதன். உள்ளுக்குள் சிறு நிம்மதி. அவள் தன்னை காதலிப்பதாக ஒத்துக்கொண்டாளே. அதுமட்டும் சந்தோஷம்தான். அவளுக்கு தன்னுடைய இப்போதைய ஸ்டேட்டஸ் தான் தடையாக இருக்கிறதோ என்று யோசித்தவன்

“என்ன சது...? நான் பணக்காரன் என்று யோசிக்கிறாயா? என்றான் பதட்டத்துடன்.

“ப்ச்.. அதுவும் ஒன்று. ரெண்டு விஷயம் நம்மிடையே தடுக்கிறது மிஸ்டர் ஆரவமுதன்.

ஒன்று நீங்கள் பெரிய பணக்காரர். உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது உங்கள் காலடியில் வந்து கிடக்க எத்தனையோ பெண்கள் தயாராக இருக்கிறார்கள்

அதோடு உங்களுக்கெல்லாம் காதல் கத்திரிக்காய் என்பது மிக எளிதானது எளிதாகவே ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு தாவும் சுபாவம் கொண்டவர்கள்

இரண்டாவது நான்...என் மனம். பான் வித் சில்வர் ஸ்பூனாக பிறந்த உங்களுக்கு என் மனம் புரியாது. ஒரே நேரத்தில் பத்து வகையான சாப்பாட்டை செய்து வைத்து எதை சாப்பிடுவது என்று திணறிப் போகும் அந்த பணக்கார வாழ்க்கை எனக்கு ஒத்து வராது.

ஒவ்வொரு நாளும் இன்று என்ன சமைப்பது என்று குழம்பி,  ஏதாவது ஒன்றை, ஒரு ஐட்டத்தை சமைத்து அதையையும் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் சாப்பிடும் இந்த மிடில் க்ளாஸ் வாழ்க்கை தான் எனக்கு செட் ஆகும். பிடிக்கவும் செய்யும்.

உங்களுடைய லைப்ஸ்டைல்க்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோங்க. தயவு செய்து என்னை கம்பெல் பண்ணாதீங்க... எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை...உங்களை பிடிக்கவில்லை...”  

என்று கஷ்டப்பட்டு வரவழைத்த கோபத்துடன் சொல்லி முடித்தவள் விறுவிறுவென்று எழுந்து தன் அறைக்குள் சென்று  கதவை சாத்திக் கொண்டாள் சத்யா.

அமுதனுக்கோ தர்மசங்கடமாகவுக் வேதனையாகவும் இருந்தது. அதுவும் அவள் கடைசியாக சொன்ன எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை...உங்களை பிடிக்கவில்லை.. என்பதே திரும்ப திரும்ப அவன் செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

எப்படி அவளுக்கு என்னை பிடிக்காமல் போனது? இல்லையே... சற்றுமுன் அவள் கண்களில் அப்படி ஒரு காதலை கண்டிருந்தேனே. என் அணைப்புக்கு அவளும் உருகி, குழைந்து என்னோடு ஒன்றிப் போனாளே...

 

என்னை பிடிக்கவில்லை என்றால்,  எப்படி அவளால் என்னை கட்டிக்க முடியும்? இல்லை.. இவளுக்கு என்னை பிடித்திருக்கிறது. ஆனால் அதை மறைக்கிறாள்.

அவள் சொல்கிற மாதிரி என்னுடைய ஸ்டேட்டஸ் தான் அவளுக்கு தடையாக இருக்கிறதா? இவளை எப்படி சமாளிப்பது, சம்மதிக்க வைப்பது? என்று குழப்பமாக இருந்தது.

தான் அவளை புறக்கணித்ததால், இத்தனை நாட்களாக கண்டு கொள்ளாததால் தான் தன் மீது கோபமாக இருக்கிறாள் என்று இதுவரை எண்ணி இருந்தான் அமுதன்.

ஆனால் அவள் பட்டியலிட்டதை பார்த்தபொழுது அவளுக்கு அவனுடைய ஸ்டேட்டஸ் தான் ப்ராப்ளம் என்று புரிந்தது. அப்படி என்றால் அவளுக்கு எப்படியாவது தன் மனதை புரிய வைத்துவிட் வேண்டும் என்று எண்ணியவன்

தன் முயற்சியை விடாமல் அவளை சமாதானபடுத்துவதற்காக, மீண்டும் அவளுடைய அறைக்குள் சென்றான்.

“சது....” என்று தன்னுடைய அடிவயிற்றில் இருந்து காதலுடன் அழைக்க, சத்யாவுக்கோ உயிர் வரை சென்று வலித்தது அவனின் அந்த குரல். அவள் கேட்டு மயங்கிய வசீகர, காந்தக் குரல்.

அவன் குரலை கேட்டதும் அவனை திரும்பி பார்க்க சொல்லி அவள் மனம் தவித்தாலும், முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டாள்.

அவள் பிடித்திருந்த ஜன்னல் கம்பியை இறுக்கி பிடித்து கொண்டு,  தன் உடலை விறைத்து கொண்டு,  ஜன்னலுக்கு வெளியில் யாருமே இல்லாத தெருவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சத்யா.

அமுதன் அவள் அருகில் நெருங்கி வர, அவளோ அவசரமாய் அவன் அருகாமையில் இருந்து நகர்ந்து நின்று கொண்டவள்

“இப்படி கிட்ட வராதிங்க அமுத..மிஸ்டர் ஆரவமுதன். எதுனாலும் தள்ளி நின்னு சொல்லிட்டு கிளம்புங்க...” என்றாள் பட்டும் படாமலும் அதே வெறித்த பார்வையுடன்.  

அதைக்கேட்டு இன்னுமே வருத்தபட்டான் அமுதன்.

“நான் சொல்வதை கொஞ்சம் கேள் மா. நான் இப்பொழுது மல்ட்டி மில்லினராக இருந்தாலும், என்னுடைய டாட் வழி கிராண்ட் பேரன்ட்ஸ் நடுத்தர வர்க்கத்தில், அதுக்கும் கீழ்நிலையில் இருந்து வந்தவர்கள் தான்.

அதனால் இப்ப இருக்கிற இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் இப்போதைய நிலை. என்னுடைய நதிமூலம், ரிஷிமூலம், வந்து ஒரு சாதாரண மிடில் கிளாஸ் தான். மிடில் கிளாஸ் கூட இல்லை. அதைவிட ரொம்பவும் கஷ்டப் பட்டவர்கள்

நான் பணத்தாலும்,  ஸ்டேட்டஸ் லயும் மேல இருந்தாலும், அன்புக்கும் பாசத்துக்கும் ரொம்பவும் ஏங்கி கிடக்கிறவன். அந்த வகையில் நான் பரம ஏழை. மா

நீ அந்த வகையில் எவ்வளவோ கொடுத்து வைத்தவள் சது. அன்பான அம்மா, பாசமான தங்கைகள், நட்பான அக்கம் பக்கத்தார் என்று நீ வாழும் வாழ்க்கையை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கும். நீ ரொம்ப பணக்காரி.

வறண்ட பாலைவனமாய் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில் தேவதையாய் நீ வந்த. நீ வந்த அந்த தருணம் என்றுமே மறக்கமுடியாத இனிய தருணம்.

நான் வெளிநாட்டில் படித்த பொழுது கூட அந்த அளவுக்கு எதுவும் மனதில் ஒட்டவில்லை. எத்தனையோ பெண்கள் என்னை சுற்றி வந்திருக்கிறார்கள். எல்லா வகையான இன்பத்தையும் அனுபவித்து இருக்கிறேன்.

ஆனால் எதுவும் என் மனதில் ஒட்டவில்லை. ஜஸ்ட் லைக் தட் என்று அடுத்த நாள் வேறொன்றுக்கு மனம் தாவிவிடும்.  

ஆனால் உங்களின் அன்பும், பாசமும் முகம் தெரியாத என் மீது வைத்திருந்த நம்பிக்கை எல்லாமே பசுமரத்தாணியாய் என்னுள்ளே பதிந்துவிட்டது.

நான் இங்கு வாழ்ந்த அந்த ஒரு வருடம்தான், முதன்முதலாக வாழ்வில் உண்மையான சந்தோஷத்தை அனுபவித்தேன். என்னுடைய அந்த சந்தோஷம் ஒரு வருடத்தோடு முடிந்து போய் விடக் கூடாது என் லைஃப் ஃபுல்லா வர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்

அதற்கு நீ என் துணையாய் என்னுடன் வர வேண்டும் சது. ப்ளீஸ் அன்டர்ஸ்டான்ட்...” என்றான் பாவமாக அவள் காதலை யாசித்து  வேண்டி நின்றான்.

ஆனால் அவளோ கொஞ்சமும் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவில்லை. தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றதையே திரும்ப திரும்ப பாடிக்கொண்டிருந்தாள்.

அமுதன் அதற்கு மேலும் எவ்வளவோ தூரம் எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றான். சத்யாவோ கடிவாளம் இட்ட குதிரையாய்,  தன் பிடிவாதத்திலயே நின்றிருந்தாள்.

அவனும் கொஞ்ச நேரம் போராடிப் பார்த்து விட்டு பின்  தொங்கிய முகத்துடன் கிளம்பிச் சென்றான்.

“அவள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரட்டும் அமுதா. அதுவரை கொஞ்சம் வெய்ட் பண்ணுப்பா...”  என்று அவனை சமாதானம் சொல்லி கனத்த மனதுடன் அனுப்பி வைத்தார் வளர்மதி...


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!