காந்தமடி நான் உனக்கு!!-33

 


அத்தியாயம்-33

த்யா தன் அன்னையின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதித்து இருந்தாலும், வளர்மதியின் உடல்நிலை கருதி அமுதன் உடனேயே திருமண ஏற்பாட்டை செய்யவில்லை.

அதோடு சத்யாவுக்கும் கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான். கூடவே அவனுடைய மென்பொருள் நிறுவனம் துவக்கவிழாவும் அருகில் வருவதால், அதை முடித்து விட்டு இந்த திருமண பேச்சை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தான்.

அங்குதான் தவறு செய்தானோ என்று பின்னாளில் வருந்தினான். அவள் சம்மதம் சொன்ன உடனேயே திருமணத்தை சிம்பிளாக நடத்தி இருக்க வேண்டுமோ என்று பின்னாளில் வருத்தபட்டான் அமுதன்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல வாய்ப்பு கிடைக்கும்பொழுதே அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது என்பதை தன் திருமண விஷயத்தில் ரொம்பவும் தாமதமாக உணர்ந்து கொண்டான் அமுதன்.

என்ன செய்ய?  எல்லாம் அந்த காலம் போட்டு வைத்திருக்கும் கணக்கு. நாம் எப்படித்தான் திட்டமிட்டு செயல் ஆற்றினாலும், காலம் போட்டு வைத்திருக்கும் கணக்கை நாம் மாற்ற முடியாதே.

அமுதன் வளர்மதியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு கூடவே ஒரு நர்ஸ் ஐயும் உடன் இருக்க வைத்து விட்டே தன் வேலையை கவனிக்க சென்றான்.

தன் திருமண திட்டத்தை வளர்மதியிடமும் சொல்லி இருந்தான். அவரும் தன் மகள் திருமணத்திற்கு சம்மதித்து விட்ட சந்தோஷத்தில் சீக்கிரமாகவே எழுந்து நடமாட ஆரம்பித்து விட்டார். அதோடு இப்பொழுது முகத்தில் என்றும் இல்லாத உற்சாகம்.

அவர் மட்டுமா? சத்யாவின் தங்கைகளும் அவளை அடிக்கடி அமுதனுடன் வைத்து ஓட்டி கொண்டிருந்தனர். அமுதனும் எவ்வளவு வேலை இருந்தாலும் இரவில் அழைத்து அவளிடம் பேசிவிடுவான்.

சில நேரம் வேண்டும் என்றே அவளை சீண்டி,  அவளை சினம் கொள்ள வைத்து என தினமும் அவன் இருக்கிறான் என்று அவளுக்கு உணர்த்தி கொண்டிருந்தான்.

ந்த நிலையில்தான் ஒருநாள் சத்யா அவனை பார்க்க அவனுடைய அலுவலகத்துக்கு வந்திருந்தாள்.

 ஆர்.ஆர் நகரில் இருக்கும் குளோபல் வில்லேஜ் டெக் பார்க் ல்,  நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த ஒரு புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தை வாங்கி அதை ஆரவ் சாப்ட்வேர்ஸ் ஆக மாற்றும் வேலையில் தான் அமுதன் பிசியாக இருந்தான்.

ஏற்கனவே இந்த துறையில் வெற்றிகரமாக கால் பதித்தவர்கள் மற்றும் திறமையான எம்ப்ளாய்ஸ் ம் இருப்பதால் அவர்களை கை விட்டு விடாமல் அந்த நிறுவனத்தை குறைந்த விலைக்க்கு வாங்கி அதை ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் உடன் இணைத்து விட்டான்.

அந்த நிறுவனத்தை நடத்த, போதுமான ஃபன்ட் வர இருப்பதால் முன்பு விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் இந்த மென்பொருள் நிறுவனத்திற்கே ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருந்தனர்.

அதனாலயே நிறுவனம் பெயர் மாற்றம் மற்றும் அலுவலகத்தில் மாற்றங்கள் செய்து அவனுடைய இன்டீரியர் டிசைனை இம்ப்ளிமென்ட் பண்ண என படு பிசியாக இருந்தான்.

தன் மற்ற தொழில்களை விட்டு விட்டு இப்பொழுது 24 மணி நேரமும் இஙகயேதான் இருக்கிறான்.

அப்படி பிஸியான ஒரு நாளில்தான் சத்யா அவனை தேடிக் கொண்டு அவனுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தாள். ரிசப்சனில் அவனை அழைத்து அவளின் வருகையை சொல்ல, அடுத்த இரண்டு நிமிடத்தில் அவனுக்கு ஒரு முக்கியமான க்ளைன்ட்  மீட்டிங் இருந்தது.

ஆனால் வராதவள் வந்திருக்கவும் அதுவும் தன்னைத்தேடி அலுவலகத்துக்கே வந்திருக்கவும் ஏதோ விஷயம் பெரிது என உள்ளுணர்வு உறுத்த அவனுடைய அந்த முக்கியமான மீட்டிங்கை நாளைக்கு ஒத்தி வைத்து அவனாகவே அவளை தேடி ரிசப்சனுக்கே வந்து விட்டான்.

அனைவருக்குமே அப்பொழுதே ஆச்சர்யம். ஒரு எம்.டியே நேரில் வந்து அழைத்து செல்கிறார் என்றால்? அனைவரின் பார்வையும் சத்யாவின் மீது பட்டு சென்றது. ஆனால் சத்யாவோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் முகம் இறுகி,  தலையை குனிந்தவாறு அவனை பின் தொடர்ந்தாள்.

தன் அறைக்கு அழைத்து சென்றவன் கதவை மூடி விட்டு

“வெல்கம் டு அவர் ஆபிஸ் டியர் ஹைனஸ்...” என வரவேற்று அவளின்  தோளில் இரு பக்கமும் கை வைத்து முன்னால் நகர்த்தி சென்று அவனுடைய எம்.டி இருக்கையில் அமர வைத்தான்.  

அதைக் கண்டு திடுக்கிட்ட சத்யா வேகமாக அந்த இருக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.  

“என்ன செய்றீங்க அமுதன்?  இது உங்க சீட். நான் எப்படி இதுல? “  என்றாள் அவனை முறைத்தவாறு.

“ஹா ஹா ஹா  நான் வேறு நீ வேறு அல்ல பொண்டாட்டி. என் சீட் னாலும்  அது இனி உன் சீட் தான். ஏனென்றால் என்னில் தான் நீ இருக்கிறாயே...”  என்று காதலுடன் சொல்ல, அதை கண்டவளுக்கோ கண்ணோரம் கரித்தது.

இவ்வளவு காதலை தான் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. அவள் கண்ணில் தெரிந்த ஏக்கத்தையும், பரிதவிப்பையும் கண்டு கொண்டான் அமுதன்.  

அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்

“ஹ்ம்ம் சொல்லுங்க பொண்டாட்டி. என்ன விஷயம்?  இவ்வளவு தூரம் இந்த புருஷனைத் தேடி வந்திருக்கீங்க?  திரைப்படத்தில் காட்டுவதைப் போல ஒரு வேளை சாப்பாடு எதுவும் கேரியரில் வைத்து எடுத்துகிட்டு வந்திருக்கிங்களா? “என்று குறும்பாக  கண் சிமிட்டி சிரித்தான்.

அவளும் முயன்று வரவழைத்து தன் முகத்தில் எரிச்சலை காட்டி

“ப்ச்...அமுதன்... இன்னொரு தரம் என்னை பொண்டாட்டி என்று  அழைக்காதீர்கள்...”  என்றாள்  கண்டிப்புடன்.

“அடடா... வைப் க்கு தமிழ் ல  பொண்டாட்டி என்றுதானே அர்த்தம். இல்லை... வேற மாதிரி லைக் மனைவி,  சகி என்று அழைக்க வேண்டுமா?  டன்... அப்படியே கூப்பிட்டால் போச்சு....”  என்றான் கண்களால் சிரித்தவாறு.

அதை மறுத்து மீண்டும் அவள் ஏதோ சொல்ல முயல,

“ஒன் செகண்ட் பேபி. முதன்முதலா நம்ம ஆபிஸ்க்கு வந்திருக்க. ஏதாவது ஸ்வீட் சாப்பிடு. ஹாட் ஆர் கோல்ட் ? “ என்றவன் ஏதோ நினைவு வந்தவனாக

“கோல்ட் தான்... அதுவும் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம். ஓகே வா? “ என்று கண் சிமிட்டி சிரித்தவன் அடுத்த நிமிடம் தன் கையில் இருந்த ரிஸ்ட் வாட்ச் ல் பட்டணை தட்டி

“ஒரு கப் ஐஸ்கிரீம்...”  என்று ஆர்டர் கொடுத்தான்.  

அவளோ அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று மறுக்க,  

“சது... ஒரு ஐஸ்கிரீம் ல ஒன்னும் ஆகிடாது. சரி வா.. உட்கார்ந்து பேசலாம்...”  என்று அவளை இருக்கையில் அமர வைத்தவன் அவனும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவள் முகத்தை பார்த்தான்.

சத்யாவும் அருகில் இருந்த டேபிலின் மீது இரண்டு கரங்களையும் வைத்துக் கொண்டு, பின் தன் கை விரல்களுக்குள் ஒன்றுக்குள் ஒன்றாக விட்டு அலைந்து  கொண்டே  என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் இருந்த யோசனையை கண்டதும் திக் என்றது அமுதனுக்கு.

எப்பொழுதும் படபடவென்று பொரிந்து தள்ளுபவள், இன்று அமைதியாய் இருப்பதை காண, இது என்னவோ புயலுக்கு முன் வரும் அமைதி போல இருக்கே என்று நெஞ்சம் படபடத்தது.

ஆனாலும் தன்னை மறைத்து கொண்டவன், அவளை ஆழ்ந்து பார்த்தவாறு

“ஹ்ம்ம் சொல்லுமா. வாட் இஸ் ஈட்டிங் இன் யுவர் ஹெட்?. எதுவாக இருந்தாலும் மறைக்காமல், தயங்காமல் உன் மனதில் இருப்பதை சொல். இந்த அமுதனோட பொண்டாட்டி தயங்காமல் மனதில் இருப்பதை பட்டுனு சொல்ல வேண்டாமா? “ என்றான் சிரித்தபடி.

அதைக்கேட்டு இன்னும் வேதனையானது பெண்ணவளுக்கு.

அவன் வார்த்தைக்கு வார்த்தை அவளை பொண்டாட்டி என்று உரிமையோடு அழைக்க, அவளோ அதை மாற்ற, அதை தடுக்கத்தானே வந்திருக்கிறாள். அது தெரியாமல் அவன் திரும்ப திரும்ப பொண்டாட்டி என்று சொல்லவும் மனதை பிசைந்தது.

“ப்ச்...இன்னொரு தரம் என்னை பொண்டாட்டி என்று சொல்லாதிங்க அமுதன். அதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான் அப்படி கூப்பிடணும். அதுக்கு முன்னாடி அப்படி கூப்பிடாதீங்க...”  என்றாள் வரவழைத்த எரிச்சலுடன்.

“ஹா ஹா ஹா மேரேஜ்?  என்ன சது?  ஊரெல்லாம் கூட்டி பத்திரிக்கை வைத்து, பத்து பேர் சுத்தி நின்னு அட்சதை போட்டு,  நான் உன் கழுத்தில் தாலியைக் கட்டினால் தான் திருமணமா சது?  அது சும்மா நீ என் மனைவி என வெளி உலகத்துக்கு சொல்லத் தான்.

உன்னை  என்று நான் முதன்முதலாக பார்த்தேனோ?  உன்னை,  உன் குரலைக் கேட்டேனோ? அந்த கணமே நீ என்னுள் வந்து விட்டாய் கண்மணி. எப்பொழுதோ உன் கழுத்தில் நான் மனதார தாலி கட்டி,   குடும்பமும் நடத்த ஆரம்பிச்சாச்சு

நீ எப்பொழுதோ  மிஸஸ் சத்யா ஆராவமுதன் ஆகிவிட்டாய் செல்லம்மா. இப்ப சொல்லு. நான் பொண்டாட்டி  னு சொல்றது சரியா,  இல்லையா? “ என்று ஒற்றை புருவத்தை உயர்த்தினான் அதே காதலோடு.

அதைக் கேட்டவள் இன்னுமே வேதனைப்பட்டு போனாள். இப்படி ஒரு நல்லவனோடு நான் வாழ கொடுத்து வைக்க வில்லையே என மன அடித்து கொண்டது.

ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டவள்

“ப்ச்... சும்மா விளையாடாதீங்க அமுதன். நீங்க மனதார தாலி கட்டினால், அது ஒன்னும் நமக்கு கல்யாணம் நடந்த மாதிரி இல்லை. நீங்க முதல்ல சொன்னதுதான் ஒரு உண்மையான கல்யாணம்...”  என்றாள் அவனை முறைத்தவாறு.

“ரைட்.. அப்படியே வைத்துக்கொள். அதுதான் நமக்கு திருமணம் ஆகப் போகிறது தானே.  நீதான் ஆன்ட்டி முன்னால் சம்மதம் சொல்லி விட்டாயே. அப்படி என்றால் என் வருங்கால பொண்டாட்டி என்று சேர்த்து சொல்லிக்கிறேன். டீல்? “  என்றான் கன்னம் குழிய சிரித்தபடி.  

“இல்லை..வந்து.. அதைப் பற்றித்தான் பேசணும்...” என்று தயங்கினாள்.

அவள் தயங்குவதை கண்டதுமே ஏதோ திருமணத்தை மறுத்து  சொல்லப் போகிறாள்  என்று அவனுடைய அறிவு அபாய மணியை ஒலிக்க வைத்தது.

அவளும் அதற்குத் தகுந்த மாதிரி மெல்ல இழுத்து ஆரம்பித்தாள்

“இல்லை...வந்து...அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்தில் அம்மாவுக்காக அப்படி சொல்லி வைத்தேன் அமுதன். ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடுங்கள்...”  என்று படபடப்புடன் கூறி முடித்தாள்.  

கடைசியில் அவன் பயந்த மாதிரியே நடந்து விட்டது. அவள் திருமணத்தை மறுக்க போகிறாள் என்று ஒலித்த அபாய மணி இப்பொழுது பழித்து விட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவள் சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அமுதன்

“ஏனோ? “  என்றான் இடுங்கிய கண்களுடன்.

“ஐயோ...எத்தனை முறை காரணத்தை சொல்வது?  திரும்பத் திரும்ப அதே டயலாக்கை என்னை  சொல்ல வைக்காதீர்கள்.  எனக்கும் உங்களுக்கும் செட் ஆகாது. எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை. எப்படியாவது இதை நிறுத்தி விடுங்கள்....”  என்றாள் தழுதழுத்தவாறு...

“முடியாது சது. நீ உண்மையான காரணத்தை சொல்லாமல் இந்த திருமணத்தை நிறுத்த மாட்டேன். அதோடு நீ உன் அம்மாவிற்கு வாக்கு கொடுத்து இருக்கிறாய். அது ஞாபகம் இருக்கட்டும்...”  என்றான் அவளை வெறித்துப் பார்த்தவாறு.

“அது ஞாபகம் இருப்பதால்தான் நானாக இந்த திருமணத்தை நிறுத்த முடியாது. ஆனால் நீங்கள் மனது வைத்தால் நிறுத்தி விட முடியும்னுதான்  உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். ப்ளீஸ் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடச் சொல்லுங்களேன்... “ என்றாள் தவிப்புடன்.

“அதுதான் ஏனென்று கேட்கிறேன்?  நீ போட்ட எல்லா கண்டிஷனையும்  நான் ஒத்துக் கொண்டுவிட்டேன். என்னுடைய பணம்,  அந்தஸ்து அதையும் கூட விட்டு வர தயாராக இருக்கிறேன். பிறகு என்னதான் டி பிரச்சினை உனக்கு? “  என்றான் சற்றே சிடுசிடுத்தவாறு.

“ஆமாம்...பிரச்சனை தான்...எனக்கு பிரச்சனை தான்...” என தலையை குனிந்து கொண்டாள் சத்யா. அதில் துணுக்குற்றாலும் அவனும் விடாமல்

“அப்படி என்ன தான் டி உன் பிரச்சனை? அதையாவது சொல்லித் தொலை கண்டிப்பா அதுக்கு ஒரு சொல்யூஸன் இருக்கும். என்னதான் அது என்று பார்க்கலாம்..”  என்று அவளை பேச வைக்க முயன்றான்.

அவளும் இருபக்கமும் தலையை ஆட்டி

“இல்லை...  என் பிரச்சனைக்கு சொல்யூஸன் இல்லை. இது காய்ந்துபோன வடு. அதற்கு மருந்து போட வேண்டாம். என்னை இப்படியே விட்டு விடுங்கள்...”  என்றவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அதைக்கண்டு தவித்து போனான் அமுதன். உடனே எழுந்து வந்து அவளை தன் இடையோடு கட்டி கொண்டவன் அவள் தலையை மெல்ல வருடிவாறு

“சது மா. எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி ஒரு சொல்யூஸன் ஐ கண்டுபிடிக்கலாம். நீ பாட்டுக்கு உன் மனதிற்குள் போட்டு  புகைத்துக் கொண்டே இருக்காதே. அது உனக்கும் நல்லது இல்ல. எனக்கும் நல்லது இல்ல.

ஓபன் அப். உன் மனதில் இருப்பது என்னவோ அதை தைரியமாக சொல். எதுவாக இருந்தாலும் இந்த அமுதன் உனக்கு எப்பொழுதும் துணை நிற்பான்.  ப்ளீஸ் டா செல்லம். உன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்...” என்று வாஞ்சையுடன் அவள் தலையை வருடிக் கொடுக்க,  அதில் இன்னுமே நெகிழ்ந்தவள் அவன் இடுப்பில் முகத்தை புதைத்து கொண்டு இன்னும் குலுங்கினாள்.

அவனும் அவள் முதுகை ஆதரவாக வருடி கொடுத்தவன்,  அவள் சுதாரிக்க கொஞ்சம் டைம் கொடுத்தான்.

அவளும் கொஞ்ச நேரம் குலுங்கி அழுதவள்    பின் கொஞ்சம் தெளிந்தவளாய் அவனிடம் இருந்து தன் முகத்தை விலக்கி கொண்டு,  தன் புடவை முந்தானையை எடுத்து தன் கண்களை துடைத்துக் கொண்டு முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.

அதே நேரம் அருகில்  இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதை ஒரு க்ளாசில் ஊற்றி அவள் வாயில் புகட்டினான். அவளுக்கும் அது தேவையாக இருக்க , கடகடவென்று அதை குடித்து முடித்தவள், இப்பொழுது தன்னை சமனப்படுத்திக் கொண்டு, நேராக இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.

அமுதனும் ஒரு இருக்கையை இழுத்து போட்டு அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டவன்,  அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொதித்து கொண்டு அவள் கை விரல்களுக்குள் தன் கை விரலை விட்டு விட்டு எடுத்து விளையாண்டு கொண்டிருந்தான்.

அவளும் தன் கையை விலக்கி கொள்ள முயலவில்லை. ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டவள்  

“ஆல் ரைட்...என் மனதில் இருப்பதை நான் சொல்லி விடுகிறேன் அமுதன். ஆனால் அதற்கு பிறகு நீங்கள் என்னை தொந்தரவு செய்யக்கூடாது. இந்த திருமணத்தை உடனே நிறுத்தி விட வேண்டும்...”  என்று எச்சரிக்கையுடன் ஆரம்பித்தாள்.

“சது... எதுவாக இருந்தாலும்  பிறகுதான் எந்த முடிவையும் சொல்வான் இந்த அமுதன். நீ முதலில் உன் மனதில் இருப்பதை சொல்...பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்...”  என்க,  அவளும் அதை எப்படி சொல்வது என்று தயங்கியவள் பின் வரவழைத்த தைரியத்துடன் ஆரம்பித்தாள்.

“வந்து... நான் இந்த திருமணத்தை  மறுப்பதற்கு காரணமாக சொல்லியது எல்லாம் உண்மையான காரணம் இல்லை...ஐ மீன் உங்க ஸ்டேட்டஸ் ஐ காட்டி உங்களை வேண்டாம் என்று மறுத்தது உண்மையான காரணம் அல்ல...” என்றாள் எங்கோ வெறித்தபடி.

அவன் எதிர்பார்த்ததுதான். அவள் வேற எதையோ மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த திருமணத்தை மறுக்கிறாள் என்று அமுதன் ஏற்கனவே கணக்கிட்டு இருந்தான்.

ஆனால் என்ன காரணம் அது என்றுதான் அவனுக்கு தெரியவில்லை. அவனும் எத்தனையோ வழிகளில் அதை அறிந்து கொள்ள முயன்று விட்டான்.

ஆனால் அவளோ கழுவுற மீனில் நழுவுற மீனாய் நழுவி சென்றாளே தவிர, தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்ல வில்லை. இப்பொழுது அவளாகவே அவன் ஸ்டேட்டஸ் காரணமில்லை என்று சொல்லவும் பெரிதாக ஆச்சர்யபடவில்லை அமுதன்.

“ஹ்ம்ம்ம் தெரியும் சது... மேல சொல்...” என்றான் வெகு இயல்பாக.

அதை கேட்டு ஆச்சர்யபட்டவள், 

“எப்படி? அம்மு...  நான் சொல்லும் காரணம் பொய் என்று தெரிந்தும் அதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. என் மீது அவ்வளவு நம்பிக்கையா?” என்றாள் ஆற்றாமையோடு.

“ஹ்ம்ம்ம் நம்பிக்கை தான் செல்லம்மா. அதை விட, நீ திருமணத்தை மறுக்க ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் எனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னோடு மட்டும்தான் என்று என்றோ முடிவு செய்து விட்டேன்,

சோ.. நீ எத்தனை காரணத்தை சொல்லி மறுத்தாலும் என்னை பொறுத்தவரை அது எல்லாம் தூக்கி கிடப்பில் போட வேண்டிய காரணங்கள் தான். ஐ டோன்ட் மைன்ட் தெம்.

உன்னுடைய மன திருப்திக்காக நீ உன் மனதில் அரித்து கொண்டிருப்பதை சொல்ல எண்ணினால் தாராளமாக சொல்லலாம். ஆனால் நீ சொல்லப் போகும் எந்த காரணமும் என் முடிவை மாற்றாது. அதை முதலில் நினைவில் வைத்துக்கொள்...” என்றான் உறுதியான குரலில்.

அவனின் உறுதியையும், தன் மீது அவன் வைத்துள்ள அசைக்க முடியாத, எல்லையில்லாத காதலையும் கண்டவளுக்கு ஒரு பக்கம் பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.

ஆனால் அதே நேரம் இன்னொரு பக்கமோ இப்படிபட்ட நல்லவன் உடன் எனக்கு வாழ கொடுத்து வைக்க வில்லையே என்ற ஆற்றாமை பொங்கி வந்தது. இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அல்லாடி கொண்டிருந்தாள் அந்த பேதைப்பெண்.

அவளின் முகத்தில் வந்து வந்து போன குழப்ப ரேகைகளை கண்டவன், அவளை மேலும் வருத்தப்பட வைக்க விரும்பாமல்   

“சரி... சொல்லுடா... அப்படி என்னதான்  இந்த குட்டி மண்டைக்குள் புகுந்து குடைஞ்சுகிட்டு இருக்கு..ஸ்பீக் அவுட்.அப்ப்தான் உன்னால் ரிலாக்ஸ் ஆக முடியும்...கம் அவுட்...” என்று அவள் தலையை மீண்டும் செல்லமாக ஆட்டி புன்னகைத்தான்.     

அவளும் ஒருவாறு தன்னை சமாளித்து கொண்டு தன் மனதில் இருப்பதை சொல்ல ஆரம்பித்தாள்.

“வந்து...வந்து...நான் திருமணத்திற்கு, திருமண வாழ்க்கைக்கு  தகுதி இல்லாதவள் அம்மு.

உங்களுக்கு மனைவியாக, சரிபாதியாக, மணமேடையில்  உங்கள் பக்கத்தில் வந்து அமர, கொஞ்சமும் தகுதியில்லாதவள். அபாக்கியவதி நான்...”  என்றாள் கண்ணில் பெருக்கெடுத்து வழியும் கண்ணீருடன்.

அதைக்கேட்டு திடுக்கிட்டான் அமுதன். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“வாட் யூ மீன்?  எனக்கு புரியல. புரியிற மாதிரி சொல்லு டா...”  என்று மீண்டும் அவளை யோசனையாக பார்க்க

அவளோ தன் கைகளை அவனிடம் இருந்து உருவி, தன் முகத்தை மூடிக் கொண்டு

“ஐம் நாட் அ வெர்ஜின்(virgin). நான் கெட்டுப்போனவள்...பெண்களின் பொக்கிஷமான கற்பை இழந்தவள்...கலங்கப்பட்டவள்...யெஸ்...நான் கலங்கபட்டவள்..கரை பட்டவள்... ஐ வாஸ் ரேப்ப்ட்...அமுதன்..... “  என்று குலுங்கி அழுதாள் சத்யா...!





Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!