உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-32

 


அத்தியாயம்-32

காரில் இருவரும் அமர்ந்து கொள்ள, ஆதித்யா காரை ஸ்டார்ட் பண்ண,  எங்கிருந்தோ  அந்த வாண்டுகள் ஓடி வந்தன அவன் காரை நோக்கி... அனைவரும் அவர்களுக்கு கை அசைத்து விடைபெற ஆதியும் பவித்ராவும் அவர்களுக்கு கை அசைத்து விடை பெற்றனர் சிரித்தவாறு...   

சிறிது தூரம் சென்றதும் ஆதி பவித்ராவிடம் திரும்பி

“ஏன்... டி... இங்க சென்னையில  இருக்கிற வீட்டுக்கு தான போர.. என்னவோ உன் அம்மாவை விட்டு வேற நாடு போற மாதிரி எதுக்கு உன் அம்மா கிட்ட அழுது சீன் போடற?? .. நான் என்னவோ உன்னை கொடுமை படுத்தற மாதிரியும் நீ அழுது கிட்டே என் வீட்டுக்கு வர்ற மாதிரியும் எதுக்கு அப்படி ஒரு சீன்?? “ என்று முறைத்தான்...

அவளும் மூக்கை உறிஞ்சிகிட்டே

“ஹ்ம்ம்ம் இதெல்லாம் அம்மா பாசம்... ஏன் கல்யாணம் ஆகி  பக்கத்து தெருவுக்கே போனா கூட அதெல்லாம் தானா கண் கலங்கும்....  இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது??..

நீங்களும் ஒரு பொண்ணை பெத்து வளர்த்து அதுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கிறப்ப தெரியும் அதோட வலி.. “ என்று முறைத்தவள் பின் ஏதோ நினைவு வர தன் நாக்கை கடித்து கொண்டாள்..

அவள் சொன்னதின் அர்த்தம் புரிய, ஆதியும்

“ஹா ஹா ஹா.. நான் இன்னும் பர்ஸ்ட் ஸ்டெப் ஏ எடுத்து வைக்கல பேபி.. அதுக்குள்ள நீ என் புள்ளைக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு போய்ட்டியே டீ .. நீ சூப்பர் பாஸ்ட் தான் பேபி... என்ன அதுக்கான வேலைய ஆரம்பிக்கலாமா?... நான் ரெடி...  நீ ரெடியா?? “என்று கண் சிமிட்டினான் குறும்பாக பார்த்தவாறு..

“சீ!! எப்ப பார் உங்க புத்தி அங்கயே வந்து நிக்குது.. கோவிலுக்கு போறப்போ பேசற பேச்சா இது.... கருமம்..  கருமம்.. “என்று திட்டிகொண்டே அவனை முறைத்து விட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து வந்தாள்..

அவனும் உல்லாசமாக சிரித்து கொண்டே இதுவரை அணைத்து வைத்திருந்த தன் அலுவலக அலைபேசியை எடுத்து ஆன் பண்ண, பல மிஸ்ட் கால்களும், மெசேஜும் வந்தன... உடனேயே ஒரு அழைப்பும் வர,  தன்  அலைபேசியை  காரில் பொறுத்தி பின் அந்த அழைப்பை ஏற்று பேசினான்...

அது  ஒரு வெளிநாட்டு க்ளைன்ட் இடம் இருந்து வந்த அழைப்பு... அவர்கள் ஏதோ  கம்ப்லெய்ன்ட் பண்ண அவன் பொறுமையாக விளக்கினான்...அவன் சொல்லுவதை அவர்கள் முதலில் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்ததும் பின் தன்னுடைய ஆளுமையில் அவர்களை சம்மதிக்க வைத்து முடித்தான்...

முதலில் அவன் பேச்சை ஓரக்கண்ணால் கவனித்தவள் அவன் பேசிய விதத்திலும் அவனுடைய சரளமான , ஸ்டைலான ஆங்கில உச்சரிப்பிலும் மயங்கி நன்றாக திரும்பி அவனையே பார்த்து வந்தாள் பவித்ரா....

இப்பொழுது இருப்பவன் முற்றிலும் வேறாக தெரிந்தான் அவளுக்கு... அவன் உடலில் ஒரு இறுக்கமும் முகத்தில் ஒரு சிறந்த தொழிலதிபருக்கான அந்த களை  தெரிந்தது.... பேசும் பொழுது அவன் கண்ணில் ஒரு தீவிரம் எதிரில் இருப்பவரை கட்டிப்போடும் ஒரு அளுமையும் தெரிந்தது அவன் குரலில்....

இவன்தானா தன்னிடம் அப்படி வம்பு இழுப்பவன்?? .. தன்னை சீண்டுபவன் என்று அவளாலயே நம்ப முடியவில்லை...அவனின் இந்த முகத்தை பார்க்கும் பொழுது அவளுக்குமே நடுக்கமாக இருந்தது... யாரும் தன்னை நெருங்க முடியாது  என்பதை போன்ற தோற்றத்தில்   முற்றிலும் வேறாக மாறி போயிருந்தான்....

“இவனிடமா நான் இவ்வளவு வாயாட முடிகிறது?? .. “ என்று யோசித்தவளுக்கு இல்லை... அவன் இல்லை இது.. இப்ப இருப்பவனிடம் நான்கிட்ட கூட  நெருங்கி இருக்க முடியாது... “ என்று எண்ணிக் கொண்டே அவனையே இமைக்க மறந்து பார்த்து வந்தாள் பவித்ரா..

தன் பேச்சை முடித்தவன் அந்த அழைப்பை துண்டித்து பின் இவள் பக்கம் திரும்பி

“ஹோய். பொண்டாட்டி..எத்தனை மார்க் போட்ட எனக்கு??  என்னையே வச்ச கண் வாங்காமல் பார்த்துகிட்டு வர்ற?? “ என்று குறும்பாக சிரித்தான் ஆதித்யா.. ஒரு சில  விநாடிகளிலயே அவன் மொத்த இயல்பும் மாறி இருந்தது இப்பொழுது... இப்பொழுது பழைய ஆதி திரும்பி இருந்தான்...

அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..

“எப்படி இப்படி வித வித மா முகத்தை மாத்தறான்.. “ என்று....

ஆதி அவள் முன்னே சொடக்கு போட்டு

“உன்னைத்தான் பேபி.. என்ன தூங்கிட்டியா?? “ என்று மீண்டும்  சிரித்தான்.. அதற்குள் சுதாரித்துக் கொண்டவள்

“ஐய.. உங்களை போய் யார் சைட் அடிப்பா?? இந்த பக்கம் பார்க்கற மாதிரி எதுவும் இல்லைனு அந்த பக்கம் உங்க சைட் சன்னல் வழியா பார்த்துகிட்டு வர்ரேன்.. “ என்று சமாளித்து மீண்டும் அவனை முறைப்பது மாதிரி காட்டி தன் முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டாள்...

“அதான... நீ மட்டும் உண்மைய ஒத்துகிட்டா, போன  சுனாமி மீண்டும் வந்திடாது.. “ என்று சிரித்துக் கொண்டே

அவள் முன்பு சொன்ன வழியை பின் பற்றி தன் காரை ஓட்டி கொண்டிருந்தான் அந்த கோவிலை நோக்கி.. 

கார் கோவிலை அடைந்ததும் அதன் அருகில் நிறுத்தியவன்,

“நான் இங்கயே வெய்ட் பண்ணிகிட்டு இருக்கேன்.. நீ சீக்கிரம் போய்ட்டு வா.” என்றான் ஆதித்யா

பவித்ராவுக்கு தன் அன்னை சொன்ன கல்யாணத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து தான் முதல் முதலா கோவிலுக்கு போகணும் என்று சொன்னது நினைவு வர, இவனை எப்படியாவது கூட அழைத்து கொண்டு போக வேண்டும் என்று எண்ணி

“அம்மா நம்ம இரண்டு பேரையும் சேர்ந்து போகணும்னு சொல்லி இருக்காங்க பாஸ்.. அதனால இன்னைக்கு ஒரு நாள் என் கூட  வாங்களேன்.. “ என்று முனகினாள் அவள் முகத்தையும் கண்ணையும் சுருக்கி, பாவமாக வைத்து கொண்டு...

அதை கண்ட ஆதி

“அடிப்பாவி.. இப்பத்தான் மூஞ்சை தூக்கி வச்சுகிட்டு என்கிட்ட அப்படி எகிறின... இப்ப உனக்கு ஒரு காரியம் ஆகணும்ன உடனே அப்படியே பல்டி அடிக்கிறியே... முகத்தை பார் எப்படி வச்சிருக்கா...

இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதை போல இவளா முன்னாடி அப்படி முறைத்தவள்?? என்று தோன்றியது அவனுக்கு..

“நீ என்னதான் மூஞ்சை மாற்றினாலும் இந்த ஆதி கிட்ட உன் வேலை நடக்காது டி.. “ என்று மனதுக்குள்  சிரித்து கொண்டவன்

“ஹே.. எனக்கு இந்த கோவிலுக்கு போறது, சாமி முன்னாடி நின்னு எனக்கு அத கொடு, இத கொடு னு பிச்சை கேட்கறது.. இதெல்லாம் பிடிக்காது.. அதனால் என்னால் அங்கெல்லாம் வர முடியாது..

நீ ஆசைபட்டியேனு தான் கூட்டிகிட்டு வந்தேன்.. உனக்கு விருப்பம் இல்லைனா சொல்.. இப்படியே போய்டலாம்.. “ என்று முறுக்கினான் அவளை முறைத்துக் கொண்டே...

அதற்குள் அவன் எண்ணம் புரிந்தவள் சுதாரித்துக் கொண்டு இவனை இவன் வழிக்கே போய் தான் மடக்கணும் என்று எண்ணி  

“ஹ்ம்ம்ம் நான் மட்டும் தனியா  போவேன் பாஸ்.. ஆனால் போனதரம் இங்க வந்தப்போ ஒருத்தன் என்கிட்ட வம்பு பண்ணினான்.. அவனே இப்பவும் இருந்தால்??...

அவனுக்கு நான் இப்ப தி க்ரேட் ஆதித்யாவோட பொண்டாட்டி னு காமிக்க வேண்டாம்.. அதுக்கு நீங்க கூட வந்தாதான் அவனுக்கு தெரியும் பாஸ்... இனிமேல் என்கிட்ட வம்பு பண்ண மாட்டான்...

இந்த மல்டி மில்லினரோட பொண்டாட்டியை ஒருத்தன் வம்பு பண்ணலாமா?? அதுக்கப்புறம் உங்க இஷ்டம்... “என்று மடக்கினாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு...

சிறிது நேரம் யோசித்தவன்

“சரி சரி  வந்து தொலைக்கிறேன்.. ஆனால் இன்னைக்கு மட்டும்தான்... இனிமேல் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் கூட்டி போனு தொல்லை பண்ணக்கூடாது...  “ என்று முறைத்தவாறு காரை விட்டு கீழ இறங்கி இருவரும்   அந்த கோவிலை நோக்கி நடந்தனர்...

வழியில் பவித்ரா  ஒரு அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டாள்

பின் இருவரும் ஜோடியாக அந்த கோவிலில் நுழைந்தனர்.. பவித்ரா ஆதித்யா வின் பெயர், அவன் ராசி, நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை பண்ணினாள்.. அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. அவனுக்கே தெரியாது இதெல்லாம். இவளுக்கு எப்படி தெரியுமாம்?? என்று யோசித்தான்...

பவித்ரா அவனிடம் நெருங்கி

“பாஸ்... இது  ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன்... நாம என்ன வேண்டினாலும் அப்படியே நடக்கும்.. நல்லா வேண்டிக்கோங்க... “ என்று மெதுவாக சொன்னாள்...

“ரியலி??  நான் எது  கேட்டாலும் நடக்குமா?? “என்று அவளை குறும்பாக பார்த்து கண்ணடிக்க, அவளோ அவனை எரித்து விடுவதை போல பார்த்து முறைத்தாள்...

அவனும் சிரித்துக் கொண்டே சிறிது நேரம்  கண் மூடி நின்றான்.. பின் ஐயர் நீட்டிய தட்டில் ஒரு 500 ரூபாய் நோட்டை வைத்தான்...  ஐயருக்கு வாயெல்லம் பல்லாயிற்று...

“நீங்க இரண்டு பேரும் இப்படியே சந்தோஷமான தம்பதிகளா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கனும்.. “ என்று வாழ்த்தி சென்றார்...  

பின் இருவரும் கோவிலை சுற்றி வந்ததும் அருகில் இருந்த மண்டபத்தில் பவித்ரா ஏறி காலை மடக்கி அமர்ந்து , ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.. அவனுக்கு அந்த மாதிரி அமர்வது கஷ்டமாக இருந்தது.. அதனால் காலை தொங்க விட்டு அவளின் அருகில் அமர்ந்தான்

“என்னடி இது?... இங்கல்லாம் உட்கார்ர??.. அதான் சாமி கும்பிட்டாச்சு இல்ல.. வா போகலாம் “ என்றான்..

“இருங்க பாஸ்... இப்படி உட்கார்ந்து விட்டு போனால் தான் நாம  வேண்டிகிட்டது பழிக்குமாம்.. கொஞ்ச நேரம் தான்.. போய்டலாம்..” என்றவள், அவனின் நெற்றியை பார்த்தவள் அவன் குங்குமம் வைக்காததால் எழுந்து சென்று குங்குமத்தை எடுத்து வந்து அவன் நெற்றியில் வைத்து விட்டு, குனிந்து முன்பு மாதிரி ஊதி விட்டாள்...

அவளின் தொடுகையில் சிலிர்த்து, குளிர்ந்து தான் போனான் ஆதித்யா...

பின் அவள் அர்ச்சனை தட்டில் இருந்த தேங்காயை எடுத்து அருகில் தரையில் தட்டி உடைத்தாள்.. அதில் ஒன்றை எடுத்து வாயில் கடித்து சாப்பிட்டாள்...அதை கண்டு முகம் சுளித்தவன்

“ஹே... என்னடி.. இது??  கண்ட இடத்துல எல்லாம் உடைக்கிற... அதயும் அப்படியே சாப்பிடற வாஷ் பண்ணாம... வீட்டுக்கு போய் சாப்பிடறதுக்குள்ள என்ன அவசரம்?? ... “என்று அவளை முறைத்தான்

“ஹலோ  பாஸ்.. கோவிலுக்கு வந்தா, சாமி கும்பிட்டு பின் இப்படி உட்கார்ந்து இந்த தேங்காயை உடைத்து சாப்பிடாமல் போனால் நாம கோவிலுக்கு  வந்த புண்ணியமே கிடைக்காது..

இந்த மாதிரி தேங்காயை உடைத்து அதை இப்படி கரண்டு சாப்பிடறதோட  ருசியே தனிதான் .. நீங்களும் சாப்பிட்டு பாருங்க பாஸ்.. உங்க ஆரோக்கியத்திற்கு நான் கேரண்டி” என்று ஒரு சில்லை அவன் கையில்  தினித்தாள்...

அவனும் மெதுவாக வாயில் வைத்து கடித்து பார்த்தான்.. சுவையாகத்தான் இருந்தது.. மெதுவாக கறண்டு சாப்பிட ஆரம்பித்தான்.. வித்தியாசமாக இருந்தது அந்த அனுபவம் அவனுக்கு...

“அடிப்பாவி... ஒரு மல்டி மில்லினரை கோவில்ல இப்படி தரையில உட்கார்ந்து பிச்ச காரங்க மாதிரி இந்த தேங்காயை கரண்டு சாப்பிட வச்சுட்டாளே!!! இன்னும் அந்த வாசல்ல இருந்த பிச்சைகாரங்க கூட ஒன்னா உட்கார்ந்து பிச்சை எடுக்காதது தான் பாக்கி...

இன்னும் கொஞ்ச நாள் போனா அதையும் செய்ய வச்சிடுவா போல இருக்கு இந்த குட்டச்சி.. “ என்று மனதுக்குள் புலம்பினான்

“பாத்து ஆதி... நீ மைன்ட் வாய்ஸ்  னு பிச்சை எடுப்பதை கமென்ட் பண்ணி, இது மட்டும் அவளுக்கு கேட்டுச்சு அப்புறம்  பிச்சை எடுத்தால் என்ன தப்பு?? பிச்சை எடுப்பதின் நன்மைகள்.. அப்படீனு ஒரு பிரசங்கமே நடத்திடுவா...

ஜாக்கிரதையா இருந்துக்கோ... “ என்று எச்சரித்தது அவன் மனசாட்சி... அதை  நினைத்து சிரித்துக் கொண்டான்...

பின் பவித்ராவை பார்த்து

“ஹே .. எங்கடி?? உன்னை யாரோ ஒருத்தன் பாலோ பண்றானு சொன்ன.. எங்க அவன் ?? “என்றான் சுற்றிலும் தேடி பார்த்து யாரும் இவளை பார்க்காததை கண்டு.. அதை கண்டவள்  

“இந்த பவித்ரா கிட்ட போய் எவனாவது வாலாட்ட முடியுமா??  நான் சொன்ன கதையை அப்படியே நம்பி அதுக்கு வேற சாட்சி கேட்கறானே.. இவன் எல்லாம் மல்டி மில்லினர்னு பெருமை அடிச்சுக்கறான்.. “ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவள்

“அது வந்து பாஸ்.. நீங்க என் கூட வரவும் நான் ஏதோ பாடிகார்ட் அரேன்ஞ்       பண்ணிட்டேனு நினைத்து எஸ்கேப் ஆகியிருப்பான்.. இனிமேல் வர மாட்டான் பாஸ்.. நீங்க அவனை விடுங்க.. “

“ஏன் டீ... என்னை பார்த்தால் என்ன உனக்கு பாடிகார்ட் மாதிரியா இருக்கு?? “என்று முறைத்தான்..

“ஹீ ஹீ ஹீ.. எனக்கு அப்படி தோணலை பாஸ்.. அவனுக்கு அப்படி தெரிஞ்சிருக்கும் ... அதான் ஓடிட்டான்.....”என்று சொல்லி சமாளித்தாள்...  

அப்பொழுது

“யாரு பவித்ராவா.?? . எப்படி இருக்க டீ  மா?? “ என்று அவள் அருகில் அமர்ந்தார் ஒரு மாமி..

“நான் நல்லா இருக்கேன் மாமி.. நீங்க எப்படி இருக்கிங்க...ஆத்துல மாமா நல்லா  இருக்காரா?? ” என்று பதிலுக்கு விசாரித்தாள் பவித்ரா

“ஹ்ம்ம்ம் எல்லாரும் ஷேமமா இருக்கோம் டி  மா... இவர் தான் உன் ஆத்துக்காரரா?? புள்ளையாண்டான் உனக்கு பொருத்தமா இருக்கான்.. ஆமாம் தம்பி எங்க வேலை செய்யறார்  “என்றார் அந்த மாமி ஆதியை பார்த்தவாறு...

இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

பின் அவள் மெதுவாக “AN Group of Companies “  என்று ஆரம்பிக்கவும்

“ஓ.. அதுலயா தம்பி வேலை பார்க்கறார்?? .. அது நல்ல கம்பெனி ஆச்சே.. எங்க ஆத்து மாப்பிள்ளை கூட அங்க தான் வேலை செய்யறார்... அசிஸ்டன்ட்.. மேனேஜர் ஆ இருக்கார்.. நல்ல சம்பளம்..” என்று மாமி பெருமை அடித்தார்...  

“ஒ.. அப்படியா ஆன்ட்டி..  நான் இப்பதான் ஜாய்ன் பண்ணி இருக்கேன்... அந்த கம்பெனி பற்றி சொல்லுங்களேன் “என்றான் ஆதித்யா குறும்பாக பவித்ராவை பார்த்து கொண்டே... இது அவனை பற்றி அவள் தெரிந்து கொள்ளட்டும் என்று...

“ஹ்ம்ம்ம் இப்ப இருக்கிற கம்பெனில இதுதான் பெஸ்ட் னு சொல்றாங்க.. அங்கு வேலை செய்யறவங்களுக் கெல்லாம் நிறைய சலுகைகள் இருக்காம்... கடை நிலை ஊழியர் ல இருந்து மேல  வரைக்குமே அவங்கவங்க நிலைக்கு தகுந்த மாதிரி நிறைய பெனிபிட்ஸ் இருக்காம்..

இங்க வேலைக்கு சேர்ந்தவங்க எப்பவும் வேலையை விட்டு போறதில்லையாம்..அந்த கம்பெனியோட MD அவ்வளவு தங்கமானவராம்...   எங்க மாப்பிள்ளை எப்பவும் அவரை பற்றியும் அந்த கம்பெனி பற்றியும் புகழ்ந்து தள்ளுவார்...

எங்க மாப்பிள்ளைக்கு கூட இப்ப தான் கம்பெனிலயே கார் கொடுத்திருக்காங்க... இல்லைனா நாங்க தான் இந்த பொங்கலுக்கு தலை பொங்கல் சீரா கார் வாங்கி கொடுத்திருக்கனும்..

எப்படியோ அந்த MD எங்களை காப்பாத்திட்டார்...அவர் பொண்டாட்டி புள்ளைங்களோட நல்லா இருக்கனும்...” என்று மேலும் சிறிது நேரம் புகழ்ந்து தள்ளினார். பின் ஆதியை  பார்த்து

“நான் வேணா எங்க ஆத்து மாப்பிள்ளை கிட்ட ரெகமன்ட் பண்றேன்.. உங்களுக்கு எதுவும் ப்ரமோசன் வேணும்னா சொல்லுங்க.. “ என்று நிறுத்தினார் அந்த மாமி... அதை கேட்டதும் புரை ஏறியது பவித்ராவுக்கு...

அவளின் தலையை தட்டியவன்

“தாங்க்ஸ் ஆன்ட்டி.. அப்படி எதுவும் வேணும்னா நான் சொல்றேன்”  என்றான் சிரித்து கொண்டே...பின் இருவரும் எழுந்து அந்த மாமியிடம் விடை பெற்று காரை எடுத்து கிளம்பினர்...






Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!