உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-47

 


அத்தியாயம்-47

தெருகூத்து –அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளில் ஒன்று.. சினிமாக்கள் வருவதற்கு முன்பு கிராமங்களில் பிரபலமாக இருந்து வந்த கலை  இன்று இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது...

இரண்டு , மூன்று தலைமுறை முன்னால் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அதுவும் இந்த மாதிரி கோடை அம்மன் திருவிழாவிற்கு இந்த தெருகூத்துதான் மக்களின் சிறந்த பொழுது போக்கு...

இன்றைய நவீன காலங்களில் சினிமா வந்ததற்கு பிறகு மக்களின் நாட்டம் அதன் மேல் திரும்பியது.... இப்பொழுது அதுவும் குறைந்து தொலைகாட்சி சீரியல் அவர்களின் பொழுதுகளை ஆக்கிரமித்து கொள்ள ஆரம்பித்தன..

நகரங்களில் மட்டும் இல்லாமல் கிராமங்களிலும் மக்கள் பக்கத்து வீடுகளுக்கு சென்று கதை பேசுவது குறைந்து தங்கள் வீட்டிற்குள்ளயே முடங்கி சுறுங்கி விட்டனர்....

அதனாலயே இந்த முறை நம் பழைய வாழ்க்கை முறையை நினைவு படுத்தும் வகையில் தெருகூத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்  சரவணன்...

சமீப காலங்களில் இந்த மாதிரி திருவிழாக்களில் ஆடல் பாடல் (dance) நிகழ்ச்சி இருக்கும்.. இல்லையென்றால் அந்த கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவர்களே கதை எழுதி நடித்து அறங்கேற்றும் மேடை நாடகங்கள் இருக்கும்....

திருவிழா ஏற்பாடு செய்ய கூடியிருந்த கூட்டத்தில், இந்த வருடம் புதிதாக கூத்து வைக்கலாம் என்று சரவணன் சொல்ல ஒரு சில இளைஞர்கள் எதிர்த்தாலும் அங்கு இருந்த பெரியவர்கள் தங்கள் இளமைக்காலங்களை நினைவு கூறும் வகையில் இருப்பதால் கூத்தே வைக்கலாம் என்று முடிவு செய்தனர்...

அதை பற்றி ஜனனி பவித்ராவிடம் கூற அவளுக்கு இந்த கூத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்ற, ஆதியின் பெரியப்பா ஜனனி மற்றும் பவித்ராவை இரவு 10  மணிக்கு கோவிலுக்கு அழைத்து கொண்டு சென்றார்...

கோவில் முன்பு இருந்த காலியான திடலில்  ஒரு பக்கம் மேடை போட்டு சுற்றிலும் தென்னங்கீற்றால் தடுத்து சிறியதாக அலங்காரம் செய்யபட்டிருந்தது... அந்த நாடக மேடையின் நடுவில் இருந்த தடுப்பில் மூன்று நான்கு திரைச்சீலைகள் தொங்க விட பட்டு காற்றில் ஆட, அது அந்த நாடகத்தில் வரும் காட்சிக்கு பொருத்தமாக இருக்க வேண்டி இப்பயே அதை  ரெடி பண்ணி வைத்திருந்தனர்...

மைக் ஐ டெச்ட் பண்ணி கொண்டிருந்தார் அந்த கூத்தின் ஒருங்கிணைப்பாளர்...

சரவணுனும் அவர்களுக்கு வேண்டிய  ஏற்பாடுகளை செய்து கொடுத்துக் கொண்டிருந்தான் மேடையில்..

மேடைக்கு முன்னால் அந்த ஊர் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாயை கொண்டு வந்து போட்டு அதில் கும்பல் கும்பலாக அமர்ந்து இருந்தனர்...அந்த ஊர் மக்களும் திருவிழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் என்று அனைவரும் ஒன்றாக திரண்டிருந்தனர்  அங்கே... 

ஜனனி அப்பா அவர்களை அங்கு விட்டுவிட்டு ஊர் பெரியவர்களிடம் பேச சென்று விட, ஜனனி காலியாக இருந்த ஒரு  இடத்தில் அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த  பாயை விரித்து போட்டு இருவரும் அதில் அமர்ந்தனர்...

அதே  நேரம் அந்த ஊர் தலைவர் அங்கு வந்ததும் கூத்து ஆரம்பிக்க, அவர் வரவேற்புரை ஆற்றி அந்த நாடக குழுவை அறிமுகப்டுத்தி தன் பேச்சை முடிக்க இறை வணக்கத்துடன் அந்த கூத்து ஆரம்பமானது...

அந்த திரையில் கோவில் போன்ற காட்சி தோன்ற, அந்த நாடக குழுவில் இசை பாட்டு பாட  என்று அமர்ந்திருந்த இரண்டு பேர் குழுவில் ஒருவர் விநாயகர் துதியை அழகாக பாடி கூத்தை ஆரம்பித்து வைத்தார்....

அன்றைய கூத்து மகாபாரதத்து அர்ஜுனன் கதையை எடுத்து கூறுவதாகும்...  பாரதத்தில் அர்ஜுனன் முக்கிய கேரக்டர்  என்பது அனைவரும் அறிந்ததே... அவனுடைய சிறுவயதில் இருந்து பின் பாரத போர் வரை அவனுடைய பங்களிப்பை சுருக்கி முக்கிய நிகழ்ச்சிகளை கதையாக நடித்து காட்டுவதாக இருந்தது...

 அதன்படி அர்ஜுனனின் சிறுவயது பற்றி விவரிக்க அதில் முக்கியமாக அவன் துரோனாச்சாரியரிடம் வில் வித்தை கற்பதும் அதில் அவர் வைத்த போட்டியில் அர்ஜுனன் அந்த மரத்தில் இருந்த கிளியை குறி தவறாமல் அடித்ததும் அழகாக பாடல் பாடிகொண்டும் நடுவில் அதையே விவரித்தும் நடித்தனர்...

பவித்ராவுக்கு முதலில் அந்த கூத்து பாடல் ஒன்றும் புரியவில்லை...டீ வி யில் வரும் மஹாபாரதம் போல  இருக்கும் என்று எண்ணி வந்தவளுக்கு இது வித்தியாசமக இருந்தது...  

கதையை அவர்கள் பாடல் வழியாக விளக்கும் பொழுது முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தாள்.. ஜனனி ஏற்கனவே இது மாதிரி அவள் அப்பா ஊரில் பார்த்து இருப்பதால் பவித்ராவுக்கு விளக்கினாள்...

சிறிது நேரத்தில் பவித்ராவுக்கும் ஓரளவு புரிய ஆரம்பித்தது...

“ஹ்ம்ம்ம் சூப்பரா வித்தியாசமா இருக்கு ஜனி.. “என்றாள் கண்ணை விரித்து...

“இதுக்கெல்லாம் சரவணன் அண்ணன் தான் காரணம் அண்ணி... “ என்றாள் ஜனனி...

“ஓ... நானும் பார்த்தேன்.. சரவணன் மாமா இந்த ஊருக்காக நிறைய செய்வார் போல இருக்கு....“ என்றாள்  சரவணனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில்

“ஆமா  அண்ணி... நிஷா அண்ணா கூட சரவணன் அண்ணனை நிறைய தடவை சென்னைக்கே வர சொல்லி கூப்பிட்டாங்க.. ஆனால் இந்த ஊரை விட்டு வரமாட்டேன்... விவசாயம் தான் செய்வேன்.. இந்த ஊர் மக்களுக்கு விவசாயத்தை பற்றி விழிப்புணர்வு கொண்டு வரணும். “ அப்படீனு இங்கயே தங்கிட்டார்....

அண்ணா மாதிரி இன்னும் சில பேர் பக்கத்து ஊர்லயும் இருக்காங்க.. எல்லாரும் சேர்ந்து தான் புதுசா விவசாய முறைகளை அறிமுகபடுத்தி  இங்கு விளையும் பொருட்களை நேரடியாக சந்தை படுத்தவும் சொல்லி கொடுத்தாங்க...

அதனால அண்ணாவுக்கு இந்த ஊர் மட்டும் இல்லாம சுத்தி இருக்கிற எல்லா ஊர்லயும் நல்ல பழக்கம் அண்ணி.... “ என்றாள்...

“ஹ்ம்ம்ம் இன்ட்ரெஸ்டிங்... “என்று சிரித்தாள் பவித்ரா....

“ஆமா... இதெல்லாம் நல்லா பார்த்து பார்த்து செய்றவர் தன் மனைவியை தேர்வு செய்யறதில் மட்டும் கோட்டை விட்டுட்டார்... நிஷா அண்ணா பார் எவ்வளவு சூப்பரா உங்கள செலக்ட் பண்ணார்... “ என்றாள் முகத்தில் சிறு வேதனையுடன்....

அதை கேட்டு புரியாமல் முழித்த பவித்ரா,

“நீ  என்ன சொல்ற ஜனி... சரோஜாவும் நல்லவங்க தான... மாமா வா அவங்கள செலட்க் பண்ணினார்..??

“ஹ்ம்ம்ம் ஆமா  அண்ணி.. அண்ணனோடது லவ்  மேரேஜ்.. “

“வாவ்... பார்த்தா அமைதியா இருக்கார்... அவர் கூட  லவ் பண்ணாரா?? ஹே.. அந்த கதையை சொல்லேன்... “  என்றாள்  ஆர்வமாக

“ஹ்ம்ம்ம்ம் அண்ணா இந்த மாதிர் ஒரு திருவிழாவுக்கு பக்கத்து ஊர்க்கு போயிருந்தார்...

நேற்று மாதிரி சரோ அண்ணி மாவிளக்கு எடுத்துகிட்டு வந்திருக்காங்க... அதுவும் மாவிளக்கு மெலுகுவர்த்தி எரியறப்போ அண்ணா அவங்களை பார்த்தாரம்....

உடனே “ஒளியிலே தெரிவது தேவதையா?? “ அப்படீனு பேக்ரவுண்ட் சாங்க் கேட்க, அண்ணா அண்ணியோட முதல் பார்வையிலயே ப்ளாட் ஆயிட்டான்....

அப்புறம் என்ன அடிக்கடி அந்த ஊருக்கு போறதும் தெரியாமல் சரோ அண்ணிய சைட் அடிக்கிறது னு அவன் காதலை டெவலப் பண்ணான்...

அப்பதான் அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ண, எடுத்த உடனே கட்டினா சரோ  அண்ணியதான் கட்டுவேன் னு  சொல்லிட்டான்...

அம்மா அப்பாவும் அவங்கள பத்தி விசாரிக்க,  நல்ல குடும்பமாக இருந்ததால ஓகே  சொல்லிட்டாங்க...

ஆனால் அப்பயே அண்ணி குணம் கொஞ்சம் சரியில்லை னு  அம்மா கேள்வி பட்டு அண்ணா கிட்ட இந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க.. ஆனால் அண்ணா கேட்பதா இல்லை.. பிடிவாதாமா இருந்து அண்ணிய கல்யாணம் பண்ணினான்.... “என்று பெருமூச்சு விட்டாள் ஜனனி...

“ஏன் ஜனி .. சரோ அக்கா  நல்ல மாதிரிதான இருக்காங்க... ஏன்  அப்படி சொல்ற??

“ஹ்ம்ம்ம் நல்லவங்க தான்அண்ணி.. ஆனால் கொஞ்சம் பணத்தாசை பிடிச்சவங்க.. யாரையும் மதிக்க மாட்டாங்க... மெய்னா அம்மாவையும் என்னையும் கண்டாலெ அவங்களுக்கு பிடிக்காது...

அம்மாவும் எவ்வளவோ அவங்கள நெருங்க முயன்றாங்க... ஆனால் சரோ அண்ணி அம்மாவ பெருசா கண்டுக்கறது இல்ல... மதிக்கறதும் இல்ல.. அதிலிருந்து அம்மா ஒதுங்கிகிட்டாங்க..

அப்பயும் ஏதாவது வம்பு சண்டைஇழுக்க ட்ரை பண்ணுவாங்க... ஒரு வேளை அவங்க தனிகுடித்தனம் போக எண்ணியோ என்னவோ...

அம்மா எதுவும் எதிர்த்து பேசாததால் அவங்களும் கொஞ்ச நாள் ட்ரை பண்ணிட்டு விட்டுட்டாங்க..

நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சேன் அண்ணி அவங்க கூட பிரெண்ட்லியா இருக்க... ம்கூம்... அவங்களாவது பரவால.. அவங்க தங்கச்சி இருக்காளே அந்த நந்தினி...  அவ சொல்லி கொடுத்து தான் அண்ணி இன்னும் மோசமா பிகேவ் பண்ணுவாங்க...” என்று தன் மனதில் பூட்டி வைத்திருந்த குறையெல்லாம் பவித்ராவிடம் கொட்டினாள் ஜனனி..

அதற்குள் அர்ஜுனன் த்ரௌபதி திருமண காட்சிகள் மேடையில் நடித்து கொண்டிருக்க, இருவரும் தங்கள் அரட்டையை நிறுத்தி விட்டு அதில் ஆர்வமானார்கள்....

சுயம்வரத்தில் அர்ஜுணன் அந்தணனாக சென்று த்ரௌபதி ஐ வென்றதும் பின் அவர்கள் அன்னை குந்தியின் வாக்கிற்கு ஏற்ப த்ரௌபதி  ஐ பாண்டவர்கள் ஐந்து பேரும் மணம் முடித்த காட்சிகளை  தத்ரூபமாக நடித்து காட்டினர்...

அர்ஜுனன் வேடமிட்டு இருந்தவரை கண்டதும் அருகில் இருந்த ஒரு தாத்தா

“என்னமா இருக்கான்யா நம்ம  அர்ஜுனன்?? .. எத்தன வருசம் கழிச்சு பார்த்தாலும் எத்தன ஹீரோ வந்தாலும் அர்ஜுனன் மாதிரி யாரும் வரமுடியாது... “  என்று சிரித்தார்..

அவர் பேச்சை கேட்டு ஆர்வமான பவித்ரா அவரிடம் பேச்சு கொடுத்தாள்.

“ஏன்  தாத்தா..உங்களுக்கு அர்ஜுனன் னா ரொம்ப பிடிக்குமா?? “ என்றாள்..

“ஹ்ம்ம் ஆமா  பாப்பா.. அந்த காலத்துல நானும் எத்தனையோ கூத்து பார்த்திருக்கேன்... ராமாயண கதை, கோவலன் கண்ணகி, நளன் தமயந்தி, அரிச்சந்திரன், பொன்னர் சங்கர் கதை அவ்வளவு ஏன் முருகன் வள்ளி திருமணம் கூட கதையா நடத்துவாங்க... எல்லா கதையை விட அர்ஜுனன் கதைதான் எனக்கு  பிடிக்கும்...

கௌரவர்கள் அத்தனை பேரையும் வீழ்த்தி பாண்டவர்கள் ஜெய்ப்பதற்கு அர்ஜுனன் தான் முக்கியமா இருந்தான்.... அவன  மாதிரி ஒரு சிறந்த மாவீரன பார்க்க முடியாது..

அவன பார்க்கையிலயே அப்படியே புல்லரிக்கும்...

நான் கூத்து முடிஞ்சு வீட்டுக்கு போய் நானும் அர்ஜுனன் மாதிரி வேசம் கட்டி ஒரு குச்சிய எடுத்து அர்ஜுனன் வாளை சுத்துவது மாதிரி நானும் சுழற்றுவேன்.... “ என்று சிரித்தார்... அவர் கண்ணை மூடி அந்த காலத்தை மனதில் ஓட்டி பார்த்து ரசித்தார்...

பின் கண்ணை திறந்தவர்

“அதான் அந்த அர்ஜுனன் ஐ மறுபடியும் பார்ப்பதற்காக பக்கத்து ஊர்ல இருந்து வந்திருக்கோம் பாப்பா... “ என்று சிரித்தார்...

“ஹ்ம்ம்ம் அர்ஜுனன் வீரத்தில மட்டுமா பேர் போனவன்... பொண்ணுங்களை மயக்குறதிலயும் தான்... அவனுடைய வீரத்தையும் அழகையும் கண்டு எத்தனை இளவரசிங்க அவன் பின்னால வந்தாங்க... “ என்று சிரித்தார் அவர் அருகில் இருந்த மற்றொரு பெரியவர்....

“அது  எப்படி தாத்தா..??  “ என்றாள் பவித்ரா மேலும் ஆர்வமாக....

“ஹா ஹா ஹா இல்லனா 4 பொண்டாட்டி கட்டியிருக்க முடியமா?? நம்ம புராண கதைகள் லயே  அதிக பொண்டாட்டி கட்டியவன் அர்ஜுனன் மட்டும்தான்....” என்று சிரித்தார்...

“4 வொய்ப் ஆ?? .. தாத்தா... அவருக்கு இரண்டு வொய்ப் தான..  ஒன்னு த்ரௌபதி.. இன்னொன்னு கிருஷ்ணன் ஓட தங்கை சுபத்ரா... நீங்க என்ன தாத்தா 4 பொண்டாட்டினு  சொல்றீங்க... “  என்றாள் பவித்ரா குழப்பமாக...

“ஆமா பாப்பா... மத்த இரண்டு பேரும் அவ்வளவா வெளில தெரியல...நீ சொன்ன ரெண்டு பேரோட, உலுப்பி(Ulupi ) னு ஒரு பொஞ்சாதியும் சித்ரங்கதா (Chitrangada ) னு இன்னொரு பொஞ்சாதியும் சேர்த்து நாலு பேர் முறையா கட்டிகிட்டவங்க... இவங்க இரண்டு பேரும் அவங்க அப்பா ராஜ்யத்திலயே இருந்துகிட்டாங்க...

 அதைவிட அஞ்சாவதா அல்லி னு இன்னொருத்தியையும் தேடி போனான்.. ஆனா அவ கட்டிக்க மாட்டேனுட்டா... ஆனாலும் விடாமல் துரத்தி கட்டாயபடுத்தி தாலி கட்டிட்டான்  இல்ல..”  என்று அர்ஜுனன் அல்லியை  மணந்த கதையையும் கூறினார்... 

முதலில் பேசிய பெரியவர்

“சில பேர் 7 பொண்டாட்டி கட்டினானும் சொல்லுவாங்க... ஹ்ம்ம்ம் நாமெல்லாம் ஒருத்திய கட்டிகிட்டே சமாளிக்க முடியாம திண்டாடறோம்.. . அர்ஜுனன் எப்படி இத்தன பேர கட்டி மேய்ச்சானோ..    என்று பெருமூச்சு விட்டார்...

அதற்குள் அருகில் இருந்த மற்றொருவர்,

“என்ன மாமா... ஒன்னோட நின்னு போச்சுனு ரொம்ப வருத்த படறீங்க போல.. அக்காகிட்ட சொல்லவா உங்க வருத்தத்தை... “ என்று கிண்டலாக சிரித்தார்...

“நீ வேறய்யா... சுமாரா ஓடி கிட்டிருக்கிற குடும்பத்துல குழப்பத்தை கொண்டு வந்திடாத.. நான் சொன்னது மட்டும் என்  பொஞ்சாதி காதுக்கு போச்சு, அப்பயே மூட்ட முடிச்ச கட்டிகிட்டு அவ  ஆத்தாவூட்டுக்கு போய்டுவா...

அப்புறம் நான் லொங்கு லொங்குனு அவ பின்னாடியே போய் கைய கால பிடிச்சு திரும்பவும் சமாதான படுத்தி கூட்டிகிட்டு வரணும்....

ஹ்ம்ம்ம்ம் கல்யாணம் ஆன அடுத்த நாள் ல இருந்து இதே  போராட்டம் தான் அவ கூட.. பேரன் பேத்தி எடுத்தும் இன்னும் அவ ஆத்தா வூட்டுக்கு போறத மட்டும் நிறுத்தின பாடில்ல.. “என்று சிரித்தார் அந்த தாத்தா...

அதை கேட்டு மற்றவர்களும் வாய்விட்டு சிரிக்க, அவர்களின் அந்த கிராமத்து வெகுளி தனமும் ஒருவரை ஒருவர் கேலி செய்து பேசும் பேச்சுக்களும் பவித்ராவிற்கு வியப்பாக இருந்தது....

அந்த கிராமத்து பேச்சையும் அந்த தள்ளாடும் வயதிலும் ஒருவருக்கொருவர் கிண்டலடித்து அவர்கள் வாய்விட்டு சிரிப்பதையும் தன் அலைபேசியில் பதிந்து கொண்டாள்..

அதோடு அவள்  மனதில் அர்ஜுனன் பற்றி அந்த தாத்தா சொன்னது நினைவு வந்தது.. அர்ஜுனன் ஐ அவளுக்குமே பிடிக்கும் எவ்வளவு பெரிய மாவீரன் என்று வியந்திருக்கிறாள்...

ஆனால் அவனின் மறுபக்கம் இப்படி மோசமா இருக்கே... அவனுமே பொண்ணுங்க பின்னாடி சுத்தினவன் என்று கேட்க, அவளுக்கு தன் கணவனின் நினைப்பு வந்தது...

அவனுமே தொழிலில் சிறந்த மாவீரன் தான்... அவனுக்கு எதிராக யார் எழுந்தாலும் அவர்களை வீழ்த்தி விட்டுதான் மறு வேலை.. அந்த ரிஷியை அடக்கியவன்...அப்படிபட்டவன் பொண்ணுங்க விசயத்தில் மட்டும் ஏன் இப்படி போனான் ?? “ என்று யோசித்தாள்...

அவனையும் அந்த அர்ஜுனன் மாதிரி சுத்தி 4 வொய்ப் இருக்கிற மாதிரி அதில் ஒருத்தி நந்தினியாக கற்பனை பண்ணி பார்த்தவளுக்கு குமட்டி கொண்டு வந்தது...

“சீ.... இந்த அர்ஜுனன் ரொம்ப மோசம்..  I hate him.. என் புருசன் எனக்கு மட்டும் தான் அந்த இராமன் சீதா மாதிரி... “ என்று யோசித்தவள்

இராமன் சீதாவை தவிர எந்த பொண்ணையும் பார்வையால் கூடதீண்டியதில்லை.. தன்னை காண வந்த மண்டோதரி நிழலை கூட ஏறிட்டு பார்க்காமல் அதோடு அந்த நிழல் தன்னை தீண்டாமல் காத்து  ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தவன்...” என்று பெருமையாக இருந்தது...

ஆனால் அவனுமே தன் மனைவியை நம்பாமல் ஊர் பேச்சை கேட்டு சீதையை தீக்குளிக்க வைத்தவன் இல்லையா?? ... என்னதான் ஊர் வாயை அடைக்க என்றாலும் அவன் தீக்குளிக்க சொன்னதாலயே அவன் மனைவியை சந்தேகிக்கறான்.. என்றல்லவா ஆனது?? ...

அடிப்படை நபிக்கையே இல்லாமல் எப்படி அவன் ஒரு மனைவிக்கு நல்ல கணவனாக முடியும்?? ம்ஹும்ம் I hate Rama too… “ என்று தன் மனதுக்குள் விவாத மன்றம் நடத்தினாள்...

சிறிது நேரம் தனக்குள்ளே வாதிட்டவள் பின் ஒரு முடிவும் கிடைக்காததால் திரும்பி ஜனனியை பார்க்க அவளோ பவித்ராவின் மடியில் படுத்து நன்றாக உறங்கியிருந்தாள்...

அவளின் தலையை வருடியவாறே மீதி கூத்தையும் ரசித்து பார்க்க, அதிகாலையில் முழு கதையையும் முடித்து நாடகம் முடிந்தது..

பாதிபேர் அங்கயே உறங்கியிருக்க, மீதி பேர் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் இளமை காலத்தை திரும்பி பார்த்த சந்தோசத்துடன் எழுந்து தங்கள் வீட்டிற்கு சென்றனர்...

அப்பொழுது சரவணன் அவர்கள் அருகில் வர, பவித்ரா ஜனனியை தட்டி எழுப்பி பின் அவர்கள் இருவரையும் தன் காரில் அழைத்து கொண்டு சென்றான் சரவணன்...

இத ஏற்பாடு பண்ணிய சரவணனுக்கு நன்றி சொன்னாள் பவித்ரா.. அவனும் அதை புன்னகையோடு ஏற்று கொள்ள, பின் இருவரும் அந்த ஊர் வளர்ச்சியை பற்றி பேசிக் கொண்டே வீட்டை அடைந்தனர்...

வீட்டை அடைந்ததும் உள்ளே சென்றவள் அங்கு மரகதம் இன்னும் சில  பெண்களுடன் சமையல் அறையில் பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருந்தார்... பவித்ரா அங்கு சென்று பார்க்க, எல்லாரும் உட்கார்ந்து வெங்காயம் உரித்து கொண்டிருந்தார்கள் கதை பேசிய படியே...

பவித்ரா இதெல்லாம் எதற்கு என்று கேட்க, இது அன்றைய கெடா விட்டு விருந்துக்காக இப்பயே ரெடி பண்ணிகொண்டிருப்பதாக  மரகதம் கூற, அதன் விளக்கத்தை கேட்டும் மேலும் அவர்கள் கதையில் ஆர்வமாகி அவளும் அங்கயே அமர்ந்து கொண்டாள்...

ஜனனி தன் அன்னையிடம் மதியம் வரை அவளை எழுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்... 

கதை கேட்டு கொண்டிருந்த  பவித்ரா ,  சிறிது நேரத்தில் கண் சொக்கி விழ, மரகதம் அவளை மாடிக்கு அனுப்பி வைத்தார்... அறைக்குள் வந்தவள் ஆதி ஏற்கனவே எழுந்து வெளியில் சென்று விட படுக்கையில் விழுந்து அப்படியே உறங்கி போனாள்....

சிறிது நேரத்தில் தன் அறைக்கு திரும்பி வந்த ஆதி, அசந்து உறங்கும் தன் மனைவியை சிறிது நேரம் ரசித்து நின்றான்.... நேற்றைய இரவு சம்பவங்கள் நினைவு வர, அதிலும் கடைசியாக அவள் நாக்கை துருத்தி அழகு காமித்த அந்த முகம் கண் முன்னே வர, அவன் முகத்தில் தானாக புன்னகை அரும்பியது...

“சரியான வாலு டீ.. “ என்று சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தவன் அருகில் இருந்த போர்வையை எடுத்து அவளுக்கு, போர்த்தி விட்டு பின் குளியலறைக்கு சென்றான் அதே புன்னகையுடன்...

தியம் கண் விழித்தவள் மணியை பார்க்க, அது 1 மணி  என காட்டியது...

“ஐயோ!!! இவ்வளவு நேரமா தூங்கறது?? சே.. எல்லாரும் என்ன நினைப்பாங்க?? என்று தன்னைத் தானே திட்டிகொண்டே அவசரமாக குளித்து முடித்து கீழ  சென்றாள்....

அந்த வீட்டின் வரவேற்பறையில் நிறைய பேர் இருந்தனர்.. அது ஒரு பெரிய வர்வேற்பறை என்பதால் வந்தவர்க்ள் அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தனர்.. எல்லாரும் புதுமுகமாக இருந்தது பவித்ராவுக்கு..

தயங்கியவாறே கண்களால் சுற்றி பார்க்க, மரகதம் யாருடனோ பேசி கொண்டிருப்பது தெரிய, அங்கு சென்றாள்.. அருகில் சென்றதும்

“சாரி.. அத்தை.. கொஞ்சம் அசதியில தூங்கிட்டேன்.. “ என்றாள் வருத்தமாக...

“அடடா... அதுக்கு என்ன பவித்ரா... நீயாவது இப்பயே எழுந்துட்ட.. உன் கூட வந்தவ இன்னும் குப்புற அடிச்சி தூங்கறா... “என்று சிரித்தவர் அருகில் நின்றிருந்த தம்பதிகளை காட்டி

“பவி... இவங்கதான் என் சம்மந்தி.. சரோவோட அப்பா அம்மா.. இவ என் தங்கை மருமக “என்று இறுவரையும் அறிமுக படுத்த, பவித்ரா அவர்களுக்கு வணக்கம் சொன்னாள்...

“பரவாயில்ல.. பட்டணத்து பொண்ணா இருந்தாலும் நல்ல மரியாதை தெரிஞ்ச பொண்ணா இருக்கா... உன் மாமியார் வாணி எனக்கு ரொம்ப பழக்கம் மா... எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்காங்க... அவங்களுக்கு மருமகளா வர நீ கொடுத்து வச்சிருக்கணும்... “என்று அவள் கன்னத்தை வருடி சிரித்தார்  சரோஜாவின் அன்னை...

பவித்ராவுக்கும் அவர்களை பிடித்து விட சகஜமாக வாயடிக்க ஆரம்பித்தாள்...பின் மரகதம் இன்னும் சிலரை பவித்ராவுக்கு அறிமுக படுத்த, எல்லாருமே அவளை பண்ணை விட்டு மருமகளாக பார்த்து தங்கள் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்...

பவித்ராவும் எல்லாரிடமும்  கலகலப்பாக பேச, அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி...

பின் சாப்பாட்டு பந்தி ஆரம்பிக்க, இன்றைய  முறையில் டேபில் சேர் இல்லாமல், பந்தி பாய் விரித்து அனைவரும் தரையில் அமர, வாழை இலை போட்டு, அனைத்து அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டது...

அந்த கிராமத்தை தவிர, சுற்றிலும் இருக்கும் எல்லா கிராமங்களில் இருந்தும் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரும் வந்திருக்க, ஒருவருக்கொருவர்  கேலி பேசி கொண்டும் கிண்டல் அடித்து கொண்டும் சாப்பிட, பவித்ராவுக்கு அதெல்லாம் பார்க்க வித்தியாசமாக இருந்தது...

பண்ணையில் வேலை செய்பவர்களையும் அழைத்திருந்தார் மரகதம்....ஜனனியும் எழுந்து வந்து விட, இன்னும் அந்த இடம் கலை கட்டியது.. பவித்ராவும் ஜனனியும் பரிமாறுவதில் உதவி செய்ய, எல்லாரும் ரசித்து சாப்பிட்டனர்..

மரகத்திற்கு பவித்ரா இப்படி எல்லாரிடமும் சிரித்து பேசுவதும், இனிமையாக பழகுவதையும் காண, மனதுக்குள் சின்ன வருத்தம். தன் மருமகளும் இந்த மாதிரி அமைஞ்சிருக்க கூடாதா என்று...

சரோ யாரிடமும் சட்டுனு பேச மாட்டாள்.. யாரையாவது அறிமுக படுத்தினாலும் சரியாக முகம் கொடுத்து பேச மாட்டாள்.. இதோ இப்ப நடந்து கொண்டிருக்கும் இந்த விருந்திலும் தலை   காட்டாமல் அவள் தோழி ஒருத்தி வந்திருக்க, அவளுடன் கதை அடித்து கொண்டே அறைக்குள்ளயே அடைந்து கிடக்கிறாள் இங்க வந்தால் வேலை செய்ய வேண்டுமே என்று..

“ஹ்ம்ம்ம் நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்.. “என்று பெருமூச்சு விட்டு தன் வேலையை பார்க்க சென்றார் மரகதம்...

அப்பொழுது சரவணனின் நண்பர்கள் பட்டாளம் வந்திருக்க, அந்த இடமே அதிர ஆரம்பித்தது... எல்லாருமே சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்து வந்தவர்கள்... ஒவ்வொரு கிராமங்களிலில் வெவ்வேறு நாட்களில் இந்த திருவிழா நடைபெறுவதால் ஒருவருக்கொருவர் மற்ற ஊர்களுக்கு கெடா விருந்துக்கு செல்வது வழக்கம்...

அவர்கள் அனைவருக்கும் ஜனனி பழக்கம் என்பதால், ஜனனி அவர்களுடன் வழவழத்து கொண்டிருக்க, இடையில் பவித்ராவையும் கோர்த்து விட்டாள்...அவளும் அவர்களுக்கு இணையாக கவுண்டர் கொடுத்து கிண்டல், கேலி என இறங்க, இன்னும் கலை கட்டியது...

இதை  எல்லாம் கவனித்து கொண்டிருந்த ஆதிக்கு ஆச்சர்யமாக இருந்தது...

ஊர் தலைவர்கள் மற்றும் இன்னும் சில பெரிய ஆட்கள் விருந்துக்கு  வந்திருக்க்க, அவர்கள் எல்லாம் ஆதியை காண வர, ஆதியும் அவர்களுடன் பேசி கொண்டிருந்தான்... என்னதான் வாய்  அவர்களுடன் பேசினாலும் அவன் கண்கள் தன்னவளையே சுற்றி வந்தது....

அவளின் அந்த கலகலப்பான பேச்சை கேட்டவன்

“ எப்படி??  சென்னையிலயே வளர்ந்தவ இரண்டே நாளில் இந்த அளவுக்கு கிராமத்து மக்களுடன் ஒன்ற முடிகிறது?? “ என்று ஆச்சர்யமாக பார்த்ஹான் அவளை.. 

அவனே கொஞ்சம் விலகிதான் இருப்பான்.. அவன் பிறந்த  கிராமம் என்றாலும் சென்னையிலயே வளர்ந்து விட்டதால் அவனால் இங்கு ஒட்ட முடியவில்லை.. அதோடு இங்கு வந்தே பல வருடங்கள் ஆகி விட்டன.. அதனால் இங்கு இருக்கும் பழக்கத்திற்கு அவன் எப்பவும் ஒதுங்கி இருப்பான்...

ஆனால் பவித்ரா அவர்களுக்கு இணையாக வம்படித்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யமாகி அவளையே ஓரக்கண்ணால் ரசித்து கொண்டிருந்தான்...

அப்பொழுது சில ஆண்கள்  வரவேற்பறையிலிருந்து தோப்பிற்கு செல்லும் வழியில் ஒதுக்கு புறமாக இருந்த அறைக்கு சென்று வருவதை கண்ட பவித்ரா

“ஜனி ... ஏன்  அவங்க மட்டும் அந்த ரூம்க்கு போய்ட்டு வர்ராங்க.?? .. என்ன இருக்கு அங்க ?? “ என்றாள் பவித்ரா

“ஹீ ஹீ ஹீ.. அங்க ஸ்பெஷல் விருந்து அண்ணி.. “ என்று கண்ணடித்தாள் ஜனனி..

“ஸ்பெஷல் விருந்தா?? அப்ப வா  நாம அங்க போகலாம்.. எனக்கு அந்த ஸ்பெஷல் வேணும் ..” என்று  சொல்லி முன்னே நடக்க, வாய் விட்டு சிரித்த ஜனனி பவித்ராவின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.. பின் அவள் காதருகில் வந்தவள்

“அது சரக்கு...என்று யோசித்தவள் ஹ்ம்ம்ம்ம் சரக்குனா... ஆங்  ட்ரிங்க்ஸ் பார்ட்டி அண்ணி...இப்ப சொல்லுங்க உங்களுக்கு வேணுமா?? “ என்று மீண்டும் கண்ணடித்தாள்...

அதை  கேட்டு அதிர்ந்த பவித்ரா

“என்னது?? ட்ரிங்க்ஸ் பார்ட்டி யா?? அதுவும் வீட்ல??  கிராமத்துல கூட இதெல்லாம் பண்ணுவாங்களா?? என்றாள் ஆச்சர்யமாக....

“பண்ணுவாங்களாவா?? இது  மாதிரி திருவிழானா மெய்னா கெடா வெட்டு இருக்கும்.. கெடா வெட்டு இருந்தா சரக்கு கண்டிப்பா இருக்கும்... இது வாங்கி கொடுக்கலைனா வர்ற சொந்தகாரங்களுக்கு மரியாதை செய்யாத மாதிரி ஆகிடும்...

பெருசுங்க எல்லாம் சண்டைக்கு வந்திடும்.. அதனாலயே அண்ணா இதை எல்லாம் வாங்கி வச்சுடுவான் அண்ணி...”

“ஓ.. குடிக்கிறது தப்பில்லையா?? அது எப்படி திருவிழால போய் இந்த மாதிரி பண்றாங்க?? “என்றாள் இன்னும் மனம் ஒப்பாமல்...

“ஹ்ம்ம்ம்ம் இங்க இருக்கிற மக்கள் நாள் முழுவதும் வயல்ல வேகாத வெய்யில்ல நின்னு வேலை செய்யறவங்க அண்ணி.. அவங்க கஷ்டத்தை போக்க அப்பல்லாம் கல் குடிப்பாங்க.. அது  உடம்புக்கு நல்லதாம்.. வலி எல்லாம் போய்டுமாம்...

ஆனா இப்ப எங்க அதெல்லாம் தொடறாங்க.. அதான் கவர்ன்மென்ட் ஏ டாஸ்மார்க் னு ஊருக்கு ஊர்  திறந்து வச்சு ஆல்கஹால் விக்க ஆரம்பிச்சதுல இருந்து  முக்கால் வாசி பேர் டாஸ்மார்க் பக்கம் போய்டறாங்க...

உங்களுக்கு ஒன்னு தெரியுமா அண்ணி ??   டாஸ்மார்க் அதிகம் திறந்ததே கிராமங்களில் தான் அண்ணி.. நம்ம கவர்ன்மென்ட்க்கு பாதி வருவாய் இந்த மாதிரி கிராமங்களில் இருந்துதான் போகுது.... “ என்று கதை அடித்து கொண்டிருந்தாள்..

பவித்ரா அவள் முதலில் சொன்னது புரியாமல்

“கல் லுனா என்ன ஜனி ?? “ என்றாள்...

“ஓ.. கல்லுனா தெரியாது??  பனை மரத்துல இருந்து அதோட பாலையை சீவி விட்டு ஒரு சட்டிய கட்டி விட்டுவாங்க அண்ணி... அது இறங்கினதுக்கப்புறம் அதை கொஞ்சம் புளிக்க வச்சு குடிக்கிறது.. இந்த விஸ்கி, பிராண்டி எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே நம்ம முன்னோர்கள் கண்டு பிடித்த இயற்கையான மதுபானம்..

இந்த வெயில் காலத்துல நிறைய கிடைக்கும்..வேணும்னா நீங்களும் டேஸ்ட் பண்ணி பாருங்க... .  “ என்று சிரித்தாள்..

அதை கேட்ட பவித்ராவுக்கு, நேற்று ஆதி சொன்ன

“நந்தினி ஏதோ ஒரு டிரிங்கை கொடுத்தா.. அதுக்கப்புறம்... “ என்று அவன் சொன்னது நினைவு வர, அவள் மூளையில் மின்னல் வெட்டியது....

ஒரு வழியாக  அனைவரும் விடை பெற்று சென்றிருக்க, மரகதம் குடும்பம் மட்டும் சாப்பிட அமர்ந்தனர்...

சரோஜாவும் நந்தினியும் அப்பொழுது தான் அறையை விட்டு வெளியில் வந்தனர்..

நந்தினியின் பெற்றோர் வந்திருப்பதாலோ இல்லை ஆதி நேற்று திட்டியதாலோ , நந்தினி ஆதியிடம் வழக்கம் போல  குழைய வில்லை.. அவனிடமிருந்து விலகி இருந்தாள்...

பவித்ராவும் ஜனனியும் இதை கவனித்து ஒருவருக்கொருவர் ஜாடை காட்டி சிரித்து கொண்டனர்...


Comments

  1. I like the way you write. Even the importance and present state of theru koothu was narrated well. I can remember and cherish the way you articulate everything.. I just want to know out of curiosity. How many more parts or athiyayam this story has..

    ReplyDelete
    Replies
    1. Thanks pa! it might be another 10 more. I hope you are not getting bored :)

      Delete
    2. It's not boring.. But what to know the pending episodes.. I'm eagerly waiting for the update

      Delete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!