அழகான ராட்சசியே!!!-1

 


அழகான ராட்சசியே!!!

 

முன்னுரை:

எனது காதோடுதான் நான் பாடுவேன் கதையில் கெஸ்ட் ரோலாக வந்த மகிழன்தான் இந்த கதையின் நாயகன்...  

காதோடுதான் நான் பாடுவேன்  கதையை படித்திராதவர்களுக்கு அதன் சிறு சுருக்கம்...

சிவகாமி – இராணுவத்தில் பணிபுரிந்து இறந்த ஒரு இராணுவ அதிகாரியின் மனைவி.. அவருக்கு நிகிலன், மகிழன் மற்றும் அகிலா என்று மூன்று பிள்ளைகள்... தன் கணவன் இறந்த பிறகும் தனி ஆளாக நின்று  தன் பிள்ளைகளை  வளர்த்து விட்டார்..

நிகிலன் IPS முடித்து சென்னையின் புகழ் பெற்ற அசிஸ்டன்ட் கமிஷ்னர்  ஆக இருக்கிறான்... மகிழன் IT  துறையில் வேலை பார்க்கிறான்...

31 வயது முடிந்தும் நிகிலன் திருமணத்திற்கு ஒத்து கொள்ளாததால் தன் அன்னையுடன் இணைந்து நாடகமாடி நிகிலனுக்கு மதுவந்தினியுடன் திருமணத்தை  நடத்தி வைக்கிறான் மகிழன்..

அதனால் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவன் தன் அண்ணன் மகள் பிறந்த பிறகு திரும்ப வந்து தன் குடும்பத்துடன் இணைகிறான்...

இனி அவன் வாழ்வில் நடக்கும் சம்பங்கள்தான் இந்த பயணம்..இந்த கதையின் நாயகன் மகிழன் என்றாலும் அவன் குடும்பத்தை சேர்ந்த உங்கள் மனதுக்கு பிடித்த உறுப்பினர்கள் சிவகாமி, நிகிலன், மது,  அகிலா ஆகியோரும் இந்த கதையில் அப்பப்ப வந்து போவார்கள்..  

கதை சுருக்கம் :

இந்த கதையின் நாயகன் மகிழன்  ஐ.டி துறையில் வேலை பார்ப்பவன்... நாயகி சந்தியாவும்  அதே துறையில் வேலை பார்ப்பவள்... விதிவசத்தால் இருவருக்கும் முதல் சந்திப்பிலயே பிடிக்காமல் போய்விடுகிறது.

மகிழன் அந்த அலுவலகத்தில் தனிக்காட்டு ராஜா போல பெரும் செல்வாக்குடன் விளங்குபவன். எங்கு சென்றாலும் அவனை மெச்சி கொள்வார்கள். அந்த அளவுக்கு திறமையானவனும் கூட.

ஆனால் அது சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. மகிழனை பார்க்கும்பொழுதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து வந்தாள். மகிழனும் அவளைக்கண்டாலே பத்து அடி தள்ளி சென்று விடுவான்.

இந்த நிலையில் ஒருநாள் அலுவலகத்தில் நடைபெற்ற கல்ச்சுரல் போட்டியில் இருவரும் பங்கேற்கின்றனர். அவளின் அழகில்  மயங்கி தன்னை மறந்து மகிழன் சந்தியா பக்கம் சாய்ந்து விடுகிறான்.

ஆனால் சந்தியா அவன் காதலை ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து மகிழனை வெறுத்து வருகிறாள்.

சந்தியா மனம் மாறி  மகிழனை ஏற்றுக்  கொண்டாளா? மகிழன் தன் காதலில் வெற்றி பெற்றானா? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள். இதுவும் மனதுக்கு இதமான ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை. படித்து உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்

  

அத்தியாயம்-1

சென்னை OMR...

காலை பதினொன்று மணிக்கு மேல் ஆகியும் இன்னும் மக்கள் தங்கள் அலுவலகத்துக்கு அவசரமாக பறந்து கொண்டிருந்தனர்....

அட்லீஸ்ட் மதியத்திற்கு முன்னதாகவாது அலுவலகத்துக்கு சென்று விட வேண்டும் என்று ஒவ்வொருவரும் தங்கள் வாகனங்களை விரட்டி கொண்டிருந்தனர்..

சிலரோ இந்த நேரத்துக்குள்  அலுவலகத்தை அடைந்து விடலாம் என்று கால்குலேசன் போட்டு வீட்டில் இருந்து கிளம்பி இருக்க, எதிர்பாராத போக்குவரத்து நெரிசலால் அவர்கள் போட்ட கணக்கு தப்பாகி விட, அவர்கள் அட்டென்ட் பண்ண வேண்டிய மீட்டிங் சென்னை ட்ராபிக் விலகும் வரை காத்திருக்காமல் அது பாட்டுக்கு ஆரம்பித்து இருந்தது....

உரிய நேரத்தில் அலுவலகத்தை அடைய முடியாமல் அந்த ட்ராபிக் ஐ திட்டி கொண்டே அலைபேசியிலயே கான்ப்ரன்ஸ்  காலில் என்ட்ரியாகி உரையாடலை கவனித்து வந்தனர்...

காரில் வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.. இரைச்சல் இல்லாமல் கான்ப்ரன்ஸ்  ல்  அட்லீஸ்ட் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என உள்வாங்கி கொள்ள முடியும்...

ஆனால் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பாடுதான் திண்டாட்டம்...

முக்கியமான conference call ஆக இருக்கும் பட்சத்தில் மேனேஜர் திட்டுவாரே என்று பயந்து கொண்டு அவர்களும் கான்பிரன்ஸ்  அட்டென்ட் பண்றேன் பேர்வழி என அலைபேசியில் கான்பிரன்ஸ் நம்பரை தட்டி விட்டு தங்கள் பெயரை சொல்லி ஒரு அட்டென்டன்ஸை போட்டுவிட்டு  பின் அலைபேசியை ம்யூட்( mute) ல் போட்டு தங்கள் பாக்கெட்டில் போட்டு விடுவர்...

அங்கு என்ன பேசுகிறார்கள் என கேட்க ஆர்வம் இருந்தாலும் வாகன இரைச்சலில் சரியாக கேட்காது... ஏதாவது கேள்வி வந்தால் மற்றவர்கள் கேட்டது ஒன்றும் இவர்கள் பதில் சொல்வது ஒன்றுமாக ஏதோ உளறி  சமாளித்து முடிப்பர்....

ப்படியாக போய் கொண்டிருந்த  அந்த பரபரப்பான நாளில் மற்றவர்களை போல அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிட்டதே என பதற்றம் எதுவும் இல்லாமல் கூலாக தன் ஸ்கூட்டியை ஓட்டி கொண்டிருந்தாள் அவள்....

முகத்தை ஒரு துணியால் மூடி வெறும் கண்கள் மட்டும் வெளியில் தெரிய, தலையில் ஹெல்மெட்டும், கைகளுக்கு  கை உறை அணிந்து எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ,  இலகிய முகத்துடன் தன் வண்டியை ஓட்டி கொண்டிருந்தாள்...

அவ்வளவு நெரிசலிலும் டென்சன் ஆகாமல், மற்றவர்களை போல ட்ராபிக் ஐ திட்டாமல்  கிடைக்கும் குறைந்த இடைவெளியிலும் இடம், வலம் என புகுந்து லாவகமாக தன் வாகனத்தில் பறந்து கொண்டிருந்தாள்...   

சிறிது தொலைவில் டிராபிக் சிக்னல் வந்திருக்க, தன் வண்டியை மெதுவாக்கி  நிறுத்தியவள் சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்..

சில விநாடிகளில் வேடிக்கை பார்ப்பது போர் அடிக்க, அருகில் நின்றிருந்தவர்கள்   ஒவ்வொருவரையும் உற்று நோக்கி அவர்களை  பற்றி மனதினில் கமென்ட் பண்ணி சிரித்து கொண்டிருந்தாள்...

திடீரென்று அவள் ஹேன்ட்பேக்கில் இருந்த அலைபேசி  அலறியது...

அழகான பாடல்தான் ரிங்டோனாக வைத்திருந்தாள்....

செந்தூர பூவே ….  !!!

செந்தூர பூவே...  செந்தூர பூவே...

ஜில்லென்ற காற்றே...  என் மன்னன் எங்கே

என் மன்னன் எங்கே

நீ கொஞ்சம் சொல்லாயோ !!!

 

என்று அவளின் அலைபேசி அவள் மன்னனை தேடி அழைத்தது...

தன் ஸ்கூட்டியில் அமர்ந்து இருந்தவள் குனிந்து முன்னால் வைத்திருந்த தன் ஹேன்ட்பேக்கை திறந்து தன் அலைபேசியை எடுக்க மனமில்லாமல் விட்டு விட, அது மீண்டும் மீண்டும் அவள் மன்னனை தேடி அலறியது....

டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருந்ததால் அனைத்து  வண்டிகளும்  ஆப் ஆகி சைலன்ட் ஆக நிற்க, அவள் அலைபேசியில் இருந்து சத்தமாக ஒலித்த அந்த பாடல் அனைவரின் காதிலும் விழுந்தது....

அந்த பாடலும் அதன் வரிகளையும்  கேட்டு எல்லோரும் திரும்பி அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்...

அதிலும் அருகில் நின்ற சில இளைஞர்கள் இவளை பார்த்து  குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அவளோ கையை நீட்டி கொன்னுடுவேன் .... என்ற ஆக்சனை காட்டி அவர்களை பார்த்து முறைத்தாள்.....

அதற்குள் அவள் எடுக்காததால்  அணைந்திருந்த அவள் அலைபேசி மீண்டும் அலர, அதற்குமேல் பொறுக்க முடியாமல் அவசரமாக குனிந்து அதை எடுத்தவள் தன் இயர் போனை  அதில் சொருகி, பின் கேட்கும் பகுதியை தன்  காதில் சொருகி கொண்டு அதன் திரையை பார்த்து பின்  அவசரமாக அதை ஆன் பண்ணினாள்...

“ஆங்... சொல்லுடி வம்பு... எப்படி இருக்க?? “ என்றாள் சிரித்தவாறு...

“ஹோய்... எத்தன தரம் சொல்றது.. என்னை அப்படி கூப்பிடாதனு.. எங்கப்பா அம்மா எவ்வளவு ஆசையா எனக்கு  அன்பழகி னு பேர் வச்சிருக்காங்க...

அத சொல்லி  கூப்பிட நீளமா இருந்தா சுறுக்கி அன்பு னு கூப்பிடு.. இல்லையா அழகி னு கூப்பிடு.. அதை எல்லாம் விட்டுட்டு  அது என்னடி வம்பு னு கூப்பிடற?? “ என்றாள் மறுமுனையில் இருந்தவள்  கடுப்புடன்.....

“ஹீ ஹீ ஹீ நோ டென்சன் வம்பு.... நீ சொன்னியே அன்பு னு... அந்த அன்பு, டார்லிங், டியர், ப்யார் இதெல்லாம்  என் வருங்கால புருசனுக்காக நான் ரிசர்வ் பண்ணி வச்சிருக்க keywords…

அதயெல்லாம் அடுத்தவங்களுக்கு யூஸ் பண்ணினா syntax error  வரும் டீ...

ஹ்ம்ம் அப்புறம் இன்னொரு பேர் சொன்னியே என்ன அது??  “ என்று யோசிப்பவள் போல ஆக்சன் பண்ணியவள்

“ஆங் அழகி னு... ஹீ ஹீ ஹீ நான் எப்பவும் யாருக்கும் சம்பந்தம் இல்லாத பெயரை எல்லாம் சொல்லி கூப்பிடறதில்லை... சோ அந்த பெயர் உனக்கு செட் ஆகாது.... இல்லை நீ அந்த பெயருக்கு செட் ஆக மாட்ட... அதனால் உனக்கு வம்புதான் பெர்பெக்ட் மேட்ச்.... எப்புடி??  என்று சிரித்தாள் அவள்.....

“ஷப்ப்பா... உன்கிட்ட வாய் கொடுத்து மீள முடியுமா.. எப்படியோ கூப்பிட்டு தொலை... சரி எங்க இருக்க?? “ என்றாள் அந்த அன்பழகி கடுப்புடன்...

ஹ்ம்ம் ஒத்துகிட்டா சரி.... “ என்று சிரித்தவள் மறுபக்கம் மீண்டும் கடுப்பாகும் முன்

“on the way..டி.” என்றாள் சிரித்தவாறு

“என்னது?? ஆன் தி வே யா?? அடிப்பாவி.. நான் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணினப்போ ஆன் தி வே ன.. அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணினப்பயும் ஆன் தி வே ன .. இப்பயும் ஆன் தி வே யா??

உன் வீடு இருக்கிற தொலைவுக்கு நான் போன் பண்ணின நேரத்துக்கு நீ இரண்டு தரம் ஆபீஸ் வந்திட்டு உன் வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்கலாம் டீ... ஒழுங்கா  உண்மைய சொல்.. எங்க இருக்க??  என்றாள் டென்சனாகி

“ஹீ ஹீ ஹீ அகைன்  நோ டென்சன் வம்பு டார்லிங்... நான் அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு கிடையாது..... எப்பவும் ஒரே பேச்சுதான்... அதான் ஆன் தி வே னு சொன்னேன்..” என்று சிரிக்க மறுபக்கம் அவள் கடுப்பாகி போனை தூக்கி எறிய போக அதை கண்டு கொண்டவள்

“நோ.. நோ..நோ..  வம்பு டார்லிங்... அதை தூக்கி போட்டிடாதா... போன வாரம் நீ இப்படி தூக்கி போட்டுத்தான் உன்னுடைய பழைய போன் உடைஞ்சு போச்சு...  இன்னொரு போன் வாங்க என்னை கடை கடையா இழுத்தடிச்ச..

அதனால இந்த போனையும் போட்டு உடைச்சிடாத...வாரம் ஒரு போன் வாங்க உன் அக்கவுண்ட்ல பேலன்ஸ் இருக்கலாம்... ஆனா உன்கூட வாராவாரம் கடை கடையா ஏறி இறங்க என்னால ஆகாதுடி... அதனால நானே சொல்லிடறேன்... “ என்று  சிரித்தவள்

“நீ முதல் தரம் போன் பண்றப்ப ஆன் தி வே டூ பாத்ரூம்....நீ திரும்ப  பண்ணினப்போ ஆன் தி வே டு மை பேவரைட் பிளேஸ்  கிச்சன்இப்ப நிஜமாகவே   ஆன் தி வே டு மை மோஸ்ட் ஹேட்டட் பிளேஸ் அந்த வீணாப்போன ஆபீஸ்... “   என்று சிரித்தாள்..

“அடிப்பாவி .. அப்ப நான் முதல்ல போன் பண்ணினப்போ நீ எழுந்திருக்கவே இல்லையா?? “ என்று  முறைத்தாள் அன்பு...

“ஹீ ஹீ ஹீ சீக்கிரம் எழனும்னு தான் அலார்ம் வச்சுதான் படுத்தேன் டி.. அதுவும் சரியா அடிச்சது போல... நல்ல தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுதே னு ஓங்கி ஒரு  தட்டு தட்டிட்டேன் போல....

அதுவும் உடனே என்கிட்ட பயந்துகிட்டு கப் சிப் னு ஆப் ஆய்டுச்சு.. அப்புறம் நீ போன் பண்ணினப்ப தான் மனசே இல்லாம எழுந்தேன்....”

“அப்ப ஏன் டி பொய் சொன்ன?? “ என்றாள் அன்பு

“என்னது பொய்யா?? அப்படீனா?? அதுக்கு ஸ்பெல்லிங் சொல்லுடி??

சரி சரி.. முறைக்காத....  நீ கேட்டப்ப எல்லாம்  ஆன் தி வே னு தான சொன்னேன்.. நீயும் எங்க ஆன் தி வே னு கேட்கலை..  நானும் சொல்லலை.. இதுல பொய் எங்க வந்துச்சாம்.. “ என்று தன் தோளை குலுக்கினாள் சிரித்தவாறு...

“ஐயோ.. முருகா...  காலங்காத்தால இவகிட்ட என்னைய கோர்த்து விட்டுட்டியே... நீ நல்லா  இருப்பியா?? “ என்று புலம்பினாள் அன்பு..

“ஹீ ஹீ ஹீ இந்த சின்ன மேட்டர்கெல்லாம் போய் எதுக்குடி அவர டிஸ்டர்ப் பண்ற... சரி நீ சொல்ல வந்த மேட்டர் என்ன?? .. எதுக்கு இப்படி விடாம ரிமைன்டர் வர்ர மாதிரி தொடர்ந்து போன பண்ணிகிட்டிருக்க?? “...

“அடிப்பாவி.. மணியை பார்.. நீ எப்ப ஆபீஸ் வந்து சேருவ??

ஆபீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் முகத்தை சுழித்தவள்,

“ஹே இருடி.. காது சரியா கேட்கலை.... அதோட க்ரீன் சிக்னல் வந்திருச்சு.. நான் வண்டியை ஸ்டார்ட் பண்ணிக்கிறேன்.... ஒரு நிமிசம் கழிச்சு பேசு..” என்றவள் காதில் இருந்து ஹெட் போனை எடுக்காமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்டினாள்....

“அதான.. ஆபீஸ் னு சொன்னா உடனே ஆப் ஆயிடுவியே... நீயெல்லாம் என் டீம் மேட் ஆ  வந்து என் உயிர வாங்கற டீ..... “ என்ற அன்பழகியின் புலம்பல் கேட்டாலும் அதற்கு  சிரித்து கொண்டே முன்னே சென்றாள்.....

ஓரளவுக்கு ட்ராபிக் சரியாகி மக்கள் அவரவர் பாதையில்  பறந்து கொண்டிருக்க, இரைச்சல் இல்லாத இடம் வரவும்

“ஹ்ம்ம்ம் இப்ப சொல்லுடி... ஆபீஸ் னு ஏதோ ஆரம்பிச்சியே...  ஆபீஸ்க்கு என்ன ஆச்சு?? “ என்றாள் அந்த ஸ்கூட்டி பெண்...

“ஆங்...  ஆபீஸ்க்கு ஒன்னும் ஆகலை... நீதான் எப்ப வந்து சேருவனு கேட்டேன்..

இன்னைக்கு Sprint Planning மீட்டிங் இருக்குடி... பாஸ் எல்லாரையும் கட்டாயம் அட்டென்ட் பண்ணனும் னு  சொல்லிட்டார்... எல்லாரும் வந்தாச்சு.. நீதான் மிஸ்ஸிங்.. சீக்கிரம் வந்து சேர சொல்லிதான் கூப்பிட்டேன்... “  

“Sprint Planning மீட்டிங் க்கு எல்லாம் Testers எதுக்குடி ??.. அது முக்கியமா டெவலப்பர்ஸ் ( developers)   க்கு தான.. என்னதான் விழுந்து விழுந்து பிளான் பண்ணினாலும் அவனுங்களும் சரியான நேரத்துக்கு code அடிச்சு முடிக்க மாட்டானுங்க...

நாமளும் டெஸ்ட் பண்ணி  முடிக்க மாட்டோம்... இதுக்கு எதுக்கு ஒரு Planning மீட்டிங் னு போட்டு டைம் அ வேஸ்ட் பண்றாங்க ??”  

“ ஹ்ம்ம்ம்ம் அதெல்லாம் நீயே வந்து பாஸ் கிட்ட சொல்லிக்கோ.. இந்த மீட்டிங் இம்பார்ட்டன்ட்... எல்லாரும் கன்டிப்பா அட்டென்ட் பண்ணனும் னு சொல்லிட்டார்..கூடவே உனக்கு போன் பண்ணி சொல்லவும் சொல்லிட்டார்....

அதான் நான் உனக்கு இத்தனை தரம் போன் அடிக்க வேண்டியதா போச்சு...இல்லைனா நீ எந்த குட்டி சுவர்ல புரண்டுகிட்டிருந்தா எனக்கென்னனு போய்கிட்டே இருந்திருப்பேன்....” என்றாள் அன்பு  நக்கலாக சிரித்தவாறு..

“ஹ்ம்ம்ம் பாருடா... நீயெல்லாம் என்னை நக்கல் அடிக்கிற அளவுக்கு முன்னேறிட்ட.... ஆமாம்... இத்தனை  நாளா டெஸ்டர்ஸ் அவ்வளவா இந்த மீட்டிங் ஐ அட்டென்ட் பண்ணலை இல்ல.. இப்ப மட்டும் என்னவாம் ??  “என்றவாறு பேசிகொண்டே இருக்க, அதற்குள் அவள் வேலை செய்யும் அலுவலகத்தை அடைந்திருந்தாள்........

“ஒரு நிமிசம் டீ... வண்டிய பார்க் பண்ணிடறேன்.. நீ லைன்லயே இரு... “ என்றவள் ஸ்கூட்டியின் முன்னால் இருந்த பொருட்கள் வைக்கும் பெட்டியில் இருந்த தன் ஐடி கார்டை எடுத்து செக்யூரிட்டியிடம்   காண்பித்து அவர் கை அசைத்து உள்ளே அனுமதிக்கவும் தன் வண்டியை நகர்த்தி  பார்க்கிங் ஐ நோக்கி விரட்டினாள்...  

“ஹ்ம்ம் சொல்லுடி வம்பு.. இப்ப ஏன் மீட்டிங்  கம்பல்சரி அட்டென்ட் பண்ணனும் ன்றாங்க.. “ ..

“அது எனக்கு தெரியாதுடி மா... நம்ம ப்ராஜெக்ட் க்கு புதுசா ஒருத்தன்.. இல்ல ஒருத்தர் வந்திருக்கார்... அவர் போட்ட ரூல்ஸ் ஆம்... “ என்றாள் அன்பு...

“எவ  அவன்??  சரி டி.... நான் நேர்லயே  வந்து மீதி கதையை கேட்டுக்கறேன்..... பை டி “ என்றவாறு தன் வண்டியை நிறுத்தியவள் தன் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி கீழ வைத்து விட்டு கையில் அணிந்திருந்த கை உறையை கழற்றி  வைத்து விட்டு பின் தன் முகத்தில் அணிந்திருந்த திரையை விலக்கி முன்னால் விழுந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கி பின்னால் தள்ளினாள்......

மீண்டும் ஒரு முறை குனிந்து தன் ஸ்கூட்டியின் கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்டாள்...

அழகான எடுப்பான நாசி,   யாரையும் துச்சமாக மதிக்கும் கண்கள் அந்த  நாசியின்  மீதிருந்த சின்ன பொட்டாக இருந்த அவளின் மூக்குத்தி அவள் அழகை இன்னும் எடுத்து காட்டியது...

கண்ணை உறுத்தாத டாப்ஸ் ம்  அதுக்கு பொருத்தமான லெகின்ஸ் ம்  அணிந்திருந்தாள்..

பெண்களின் சராசரி உயரம்.. கொஞ்சம் பூசிய உடல்.. குண்டு  கன்னங்கள்.. இப்ப இருக்கும் தலைமுறை பெண்களை மாதிரி தன் நீண்ட  முடியை step cutting  என்ற பெயரில் குட்டையாக வெட்டி விட்டு க்ளிப் எதுவும் போடாமல் லூசாக விட்டிருந்தாள்...

வண்டியை பார்க்கிங் ல்  நிறுத்தியதும் தன் கவசங்களை எல்லாம் கழற்றி  வைத்து விட்டு, முன்னால் இருந்த தன் ஐடி கார்டை எடுத்து கழுத்தில் மாட்டி கொண்டு தன் லேப்டாப் பேக்கை தூக்கி பின்னால் மாட்டி கொண்டு அந்த பார்க்கிங்  ல் இருந்த படிகட்டை( stairs)  நோக்கி துள்ளலுடன் நடந்தாள் அவள்... சந்தியா.. நம் பயணத்தின் நாயகி...

ந்தியா என்றதும் உங்களுக்கு  தெரிந்திருக்குமே இவள் யாரென்று..!!! .

யெஸ்... காதோடுதான் நான் பாடுவேன்  ல்  அறிமுகமான நம்ம மதுவந்தினியின் தோழி சாத் சாத் அதே சந்தியா தான் இவ. நம் இந்த புது பயணத்தின் நாயகி... 

(ஹீ ஹீ ஹீ.. நான் கரெக்டா கண்டுபிடிச்சிட்டேனு நீங்க காலரை தூக்கி விடறது தெரியுது பிரண்ட்ஸ்.. அப்படி தூக்கி விடலைனாலும் நம்ம சந்தியா பெயரை சொல்லி உங்க காலரை தூக்கி விட்டுக்கங்க....ஹா ஹா ஹா )

சந்தியா23 வயது முடிந்து 24 ஆவது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் பருவ மங்கை....அவள் தோழி மந்தி என்கிற மதுவந்தினி திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கும் தாயாகி விட, அதை கண்டவள்  தனக்கும் திருமணம் செய்து வைக்க சொல்லி தன் தந்தையிடம் நச்சரித்து வருகிறாள்....

அவள் சேட்டையை கண்ட அவள் தந்தையோ

“உனக்கு இன்னும் பொறுப்பு வரணும்... நீ இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்க... ஒரு குடும்பத்தை பார்த்துக்கற அளவுக்கு பொறுப்பு இன்னும் வரலை...

அதை ஃபர்ஸ்ட் டெவலப் பண்ணு..  உன்னை வச்சுகிட்டு நான் படற கஷ்டம் என் மாப்பிள்ளையும்  படக் கூடாது.. உனக்கு 25 வயசுலதான் கல்யாணம் னு.. “ சொல்லி  தடா போட்டுட்டார்....

அதை கேட்டவள்

“எங்கயாவது இப்படி ஒரு அப்பா இருப்பாங்களா?? அந்த மந்தியோட அப்பா, அவளுக்கு எப்படா 21 வயது ஆகும் னு பார்த்துகிட்டே  இருந்துட்டு 21 வயது ஆனதும்  உடனே கல்யாணத்தை பண்ணி அவர் கடமைய முடிச்சிட்டார்...

இப்ப ஜாலியா உட்கார்ந்து அவர் பேத்தியை கொஞ்சிகிட்டு இருக்கார்...  

அவர் ஸ்மார்ட் அப்பா... என் அப்பா வேஸ்ட் அப்பா... பேட் டாடி... “என்று தன் தந்தைக்கு மனதுக்குள் அர்ச்சனை பண்ணுவாள் தினமும்....

படிப்பிலும் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவள்.. ஏதோ டிகிரி படிக்க வேண்டுமே என்று  B.Sc Physics எடுத்து படித்தாள்...

கூட படிக்கும் தோழிகள் எல்லாரும் கல்லூரி முடிந்ததும் மீதி இருக்கும் நேரத்தில்  கம்ப்யூட்டர் கோர்ஸ்  பண்ண, அவளை வீட்டில் வைத்து சமாளிக்க முடியாமல் அவளையும் ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டார் அவள் தந்தை...

சாப்ட்வேர்  டெஸ்ட்டிங் (Software Testing) கோர்ஸ் அது..

ஆரம்பத்தில் அதில் விருப்பம் இல்லாமல் டைம் பாஸ்க்காக அந்த பயிற்சி மையத்திற்கு  சென்று வந்தவள் கொஞ்ச நாளில் அந்த கோர்ஸ் பிடித்து விட, ஆர்வமாக எல்லா Testing Tools ஐயும் கற்று கொண்டாள்...

அந்த பயிற்சி மையத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த ஒரு சிறு நிறுவனத்தில் ஆறு மாதம் Trainee ஆக வேலை செய்தாள்.. அதை வைத்தே அடுத்து ஒரு பெரிய IT நிறுவனத்தில் டெஸ்ட்டராக ஜாயின் பண்ணினாள்...

இது இரண்டாவது வருடம் அவளுக்கு...

விளையாட்டாக பேசினாலும் வேலை என்று வந்துவிட்டாள் கில்லியாக இருப்பாள்...

மற்றவர்கள் சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாத டிபெக்ட் ( defect) ஐ கூட டெஸ்ட் பண்ண ஆரம்பித்த சில டெஸ்ட்களிலயே கண்டுபிடித்து விடுவாள்....   ஆனால் பேசுவது மட்டும் அது என்னவோ பிடிக்காத வேலை என்பதை போல இருக்கும்.....

அவளுடைய துடுக்குதனமான பேச்சாலும் அலட்டிக் கொள்ளாத குணத்தாலும் விரைவிலயே அவள் டீமில் பிரபலம் ஆனாள்..

அவள் டீம் மட்டும் அல்லாமல் அந்த தளத்தில் இருக்கும் மற்ற ப்ராஜெக்ட் லயும் சந்தியா என்றால் அலறுவார்கள்....

அப்படி பட்ட நம் நாயகியிடம் நம்ம நாயகன்  மங்கி மகி மாட்டி கொண்டு  எப்படி முழிக்க போகிறான் என்று  வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!