உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-57

 


அத்தியாயம்-57

திடீரென்று பவித்ராவின் கை தன் கன்னத்தில் இறங்க, இதை எதிர்பார்த்திராத ஆதித்யா,  ஒரு நொடி அதிர்ந்து அவன் பிடியை தளர்த்த அதற்குள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பாய் துள்ளி குதித்து தள்ளி நின்று கொண்டாள் பவித்ரா...

பவித்ரா அறைந்த சத்தத்தில் அங்கு இருந்தவர்கள் திரும்பி இவர்களை பார்க்க, ஆதிக்கோ பெரும் அவமானமாக போயிற்று..

இதுவரை பெரிய மனிதனாக வலம் வந்தவன் மற்ற பெண்களின் கனவு நாயகனாக இருப்பவன் இப்படி கேவலம் ஒரு பெண்ணிடம் அடி வாங்கி நிற்பதை உணர்ந்து அவனுக்கு  பெரும் அவமானமாக இருக்க கூனி குறுகி நின்றான்...

தான் எதிலோ முதல் முதலாக  தோற்று விட்டதை போல இருந்தது அவனுக்கு..

அவனை அண்ணாந்து பார்க்கும் எல்லார் முன்னாடியும் தலை குனிந்து விட்ட மாதிரி இருந்தது...

இதுக்கெல்லாம் காரணமானவள் மீது அவன் கோபம், ஆத்திரம் எல்லாம் திரும்ப அவளை எரித்து விடுவதை போல பார்த்தவன்

“ஏய்... நீ என்ன பெரிய உழக அழகியா??  இல்ல மதுரையை எரித்த கண்ணகியா?? .. எவ்வளவு திமிர்   உனக்கு??... உன் திமிரை அடக்கி காட்டறேன் டீ ...

உன் கைய பிடிச்சதுக்கே என்னை அடிச்ச இல்லை... நீயே வருவ என்  பெட் ரூமுக்கு.. நீயே என்னை தேடி வருவ என்  பெட் ரூமுக்கு... வர வைப்பான் இந்த ஆதித்யா.. உன்னை விட  மாட்டேன்...  “ என்று    சவால் விட்டு உறுமினான் அடிபட்ட புலியை போல....

அதை கேட்டதும் பவித்ராவும் வெகுண்டு எழுந்தாள்... இதுவரை அவனை அடித்து விட்டமே என்று உள்ளுக்குள் வருந்தியவள் அவன் பேசியதை கேட்டதும் பொங்கி எழுந்தாள்...

அவள் முகமும் கோபத்தில் கொந்தழிக்க அவனை நேராக பார்த்து

“நினைப்பு தான்... இந்த பவித்ரா நிழலை கூட உன்னால தொட முடியாது.. பவித்ரா நிழல் கூட நீ  இருக்கும் பக்கம் திரும்பாது.. முடிஞ்சால் நீ சொன்ன மாதிரி  செஞ்சு காமி... நீ  பண்ணின தப்புக்கு தான் நான் தண்டனை கொடுத்தேன்...

இனிமேலாவது எந்த பெண்ணிடமும் வாலாட்டாம ஒலுங்கா நடந்துக்கங்க.. மைன்ட் இட் .. ” என்று அவளும் அவனுக்கு சரிக்கு சமமாக சவால் விட்டாள்..

இதையெல்லாம் கண்டு ஆனந்தத்தில் மிதந்தது அந்த ஜோடி கண்களும் அந்த கண்களுக்கு சொந்தக்காரனான அந்த ரிஷி...

அந்த கான்ப்ரென்ஸில் கலந்து கொள்ள வந்ததில் இருந்தே அவன் பவித்ராவையே பார்த்து கொண்டிருந்தான்... ஆனால் அவள் இவனை கண்டு கொள்ளாமல் அந்த ஆதித்யாவையே பார்த்து கொண்டிருக்க, அவனுக்கு ஆத்திரமாக வந்தது..

மற்ற பெண்களை போல இவளும் அந்த ஆதி பின்னாடியே போய்டுவாளோ என்று நினைத்தவனுக்கு பவித்ரா ஆதியை அடித்தது அவன் மனதில் பாலை வார்த்தது...

இவள் கொஞ்சம் வித்தியாசமானவ தான் போல.. இவளை எப்படியாவது நாம  மடக்கிடலாம்.. பார்க்கலாம்.. எங்க போய்ட போறா.. “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.. 

பவித்ரா வேகமாக  நடந்து அந்த ஹாலை விட்டு வெளியேறியவள் அப்பொழுது வந்த ஏதோ ஒரு ஆட்டோவில் ஏறி அது எங்கு கடைசி வரைக்கும் செல்கிறதோ அங்கு இறங்கி மீண்டும் அடுத்த ஆட்டோ பிடித்து தன் வீடு வந்து சேர்ந்தாள்....

அவள் எப்படி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது.. 

உள்ளே வந்தவள் நேராக தன் அறைக்கு சென்று பெட்டில் தொப்பென்று விழுந்து அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து கொண்டு வர ஓவென்று கதறி அழுதாள்...

இதுவரை தன் அழுகையை வெளிகாட்ட கூடாது தைர்யமாக இருக்கணும் என்று அவள் கற்ற பாடத்தை செயல் படுத்தி கட்டுபடுத்தி வந்தவளுக்கு அதற்கு மேல் தாங்க முடியாமல் கதறி தீர்த்தாள்...

பார்வதி பக்கத்து வீட்டிற்கு சென்றிருந்ததால் தன் மகள் திரும்பி வந்ததும் அவள் அழுவதும் அவருக்கு தெரியவில்லை..

சிறிது நேரம் அழுது முடித்தவள், தன்னை தேற்றிக் கொண்டு

“நான் ஏன்  அழ வேண்டும்?? தப்பு செய்தவன் அவன்.. அவன் தான் அழ வேண்டும்.. நான் எதுக்காக அழ வேண்டும்.. “என்று மீண்டும் வெகுண்டு எழுந்தவள் குளியல் அறைக்கு சென்று முகத்தில் நீரை அடித்து நன்றாக அழுந்த கழுவினாள்....

தன் அன்னையிடம் எதுவும் காட்டிக்க கூடாது என்று தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்..

ஆனாலும் அவன் முகமும் அவன் கடைசியாக பேசிய பேச்சுக்களும் நினைவில் அடிக்கடி வந்து அவள் மனதை கிழித்தது...

அவன் அவளிடம் சவால் விட்டதுக்கு பவித்ரா கலங்கவில்லை...இது மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கிறாள்...

ஆனால் முதன்முதலாக தன்  மனதை பாதித்த ஒருத்தனை நல்லவன் என்று நம்பி இருந்தவன் கடைசியில் பொய்த்து போய் விட்டானே.. “ என்று தான் அவள் அழுகை..

.தன் அழுகைக்கான காரணம் தெரியாமல் அழுது முடித்தவள் தன் மனதில் மீண்டும் உறுதி செய்து கொண்டாள் இதை  பற்றி மீண்டும் நினைக்க கூடாது என்று....

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாள்.. முதல் ஒரு வாரம் அவன் மிரட்டியதை போல தனக்கு ஏதாவது ஆபத்து இருக்குமோ?? தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்று எச்சரிக்கையுடனும், விழிப்போடும் தன் அலுவலகத்துக்கு சென்று வந்தாள்..

ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்காததால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. நாளடைவில் அந்த சம்பவத்தை மறந்து போனாள்...

“மீண்டும் அவனை சந்தித்தது என் திருமணத்தில் தான்... “ என்று நிறுத்தியவள் ஒரு பெருமூச்சை விட்டு

திருமணத்திற்கு பிறகு நடந்த நிகழ்ச்சிகளையும் சுருக்கமாக சொன்னாள்....

ஆனால் ஒன்றை மட்டும் சரண்யாவிடம் மறைத்து விட்டாள்....

அது  என்னதான்  அந்த சம்பவத்தை மறந்தாலும் அவள் ஆழ் மனதில் எப்பவும் அவன் முகமும் குறும்பு பார்வையும் அடிக்கடி வலம் வரும்...

தன் அன்னை தன் திருமண பேச்சை எடுத்ததும் அவளை அறியாமலயே அவன் முகம் தான் நினைவு வந்தது...

அவன் கெட்டவன் என்று தெரிந்துமே ஏனோ  அவன் நினைவில் இருந்து வெளியில் வர முடிய வில்லை..  அதனாலயே தன் திருமண ஏற்பாடுகளில்  எந்த சுவாரசியம் இல்லாமல் கடமைக்காக ஒத்து கொண்டதும் மணவறைக்கு வரும் பொழுதும் அவள் மனம் அடித்து கொண்டேதான் இருந்தது...

மனம் முழுவதும் அவன் நினைவு மட்டுமே...

அதனால் தான் கையில் தாலியுடன் தன்  மனதில் இருப்பவனையே மணமேடையில் கண்டதுமே அவளுக்கு அப்படி ஒரு நிம்மதி....

ஆனால் இதெல்லாம் ஏன் என்று அவள் ஆராய்ந்திருக்கவில்லை.. அப்படி செய்திருந்தால் இவ்வளவு கஷ்ட பட்டிருக்க வேண்டாம்... தன்னையும் வருத்தி அவனையும் வருத்தியிருக்க வேண்டாம்.....

ன் கதையை முழுவதும் சொல்லி முடித்து சேரின் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் கண்களை அழுந்த மூடிகொண்டாள் பவித்ரா... அவள் உள்ளுக்குள் வேதனை படுவது அவள் கண்களில் பிரதிபலித்தது...

சரண்யாவோ அதையெல்லாம் கேட்டு ஆச்சர்யத்தில் வாய் பிளந்து அமர்ந்து இருந்தாள்...

பின் பவித்ராவை பார்த்து

“ஹே.. ஜான்சி ராணி... இவ்வளவு நடந்திருக்கு.. நீ என்கிட்ட ஒன்னுமே சொல்லலை பார்த்தியா??  உன் கல்யாணத்தப்பயே நான் கண்டுபிடிச்சுட்டேன்...  உங்களுக்குள் ஏதோ ஒன்று இருக்குனு..

ஆனால் நீதான் இல்லைனு சொல்லி சமாளிச்சுட்ட... கள்ளி...என்கிட்ட சொல்லக் கூடாதுனு மறைச்சிட்ட இல்ல “ என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் சரண்யா...

“அப்படி எல்லாம் இல்ல சரண்.. நான் மட்டும் சம்பந்தபட்டது என்றால் உன்கிட்ட சொல்லியிருப்பேன்.. இது அவரும் சம்பந்தபட்டது இல்லையா.. அதான் யாரிடமும் சொல்ல தோணலை.. “ என்று  மெல்ல புன்னகைத்தாள்...

“அடேங்கப்பா.. புருசன் மானத்தை எப்படி எல்லாம் காப்பாத்தியிருக்க... இவ்வளவு புத்திசாலியா யோசிக்கிற நீ இப்படி உன்னையே தெரிஞ்சுக்காம அடி  முட்டாளா இருந்திட்டியே ஜான்சிராணி.. இத நான் எங்க போய் சொல்ல?? “ என்று இழுத்தாள் சரண்யா...

“என்னடி சொல்ற?? என்ன நான் தெரிஞ்சுக்கலை?? “ என்றாள் குழப்பத்துடன்....

“ஹ்ம்ம்ம்ம் உன்  மனசுல இருக்கிற காதலைத்தான்... “  என்று கண்சிமிட்டி சிரித்தாள் சரண்யா...

“காதலா?? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. நீயா ஏதாவது உளறாத.. “என்று சொல்லி சமாளித்தாள் பவித்ரா

“ஹா ஹா ஹா  இந்த வருஷத்தோட பெஸ்ட் சமாளிப்பு அவார்ட் உனக்கு தான்  டி  கொடுக்கணும்.. “  என்று அவள் குண்டு கன்னத்தை பிடித்து ஆட்டி சிரித்தவள்

“சரி.. நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.. “ என்றவள் பவித்ராவை நேராக அவள் கண்களை பார்த்து

“உனக்கு என் ஹீரோ...  அதான் உன் புருசனை பிடிக்குமா?? “ என்றாள்

“இது என்ன முட்டாள்தனமான கேள்வி?? “ என்ற தோரனையில் சரண்யாவை முறைத்தவள்

“ஹ்ம்ம்ம் பிடிக்கும்.. “ என்றாள்

“எப்ப இருந்து??

“எப்ப இருந்து அவனை பிடிக்க ஆரம்பித்தது?? “ என்று யோசிக்க ஆரம்பித்தாள் பவித்ரா... ஆனால் அவளுக்கு சரியாக விடை கிடைக்கவில்லை...

“தெரியலடி.. ஒரு வேளை எங்கள் திருமணத்திற்கு பிறகு அவர் நடவடிக்கை எல்லாம் பார்த்து பிடிக்க ஆரம்பிச்சிருக்கலாம்.. “ என்றாள் யோசனையுடன்...

“ஹ்ம்ம்ம் நான் சொல்லவா??  “என்று தன் புருவங்களை கிண்டலாக உயர்த்திய சரண்யா

“நீ அவரை முதன் முதலா லிப்ட் ல  சந்திச்ச அந்த நொடியே உனக்கு அவரை பிடிக்க ஆரம்பிச்சது... அதாவது நீ அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட...

லவ் அட் பர்ஸ்ட் சைட் னு சொல்லுவாங்க இல்ல.. அtதுமாதிரி உனக்கு லவ் அட் பர்ஸ்ட் டச்.. “என்று குறும்பாக சிரித்தாள் சரண்யா..

அதை கேட்டு பவித்ரா குழப்பமாக முழிக்க

“என்ன அப்படி முழிக்கிற?? ... அது தான்டி நிஜம்.. நீ கால் தடுக்கி அவர் மேல விழுந்த இல்ல.. அவர் முகத்தை கூட பார்க்காமல் அவர் மீது நீ சாய்ந்திருந்த அந்த சில விநாடிகள் லயே அவர் உன் மனதுக்குள் வந்து விட்டார்...

அந்த சில விநாடிகள் நீ நிம்மதியாகவும் உனக்கான இடமாகவும் உணர்ந்த தான... அவர் முகத்தையோ உருவத்தையோ குணத்தையோ எதுவுமே தெரியாமல்

இதுதான் உன் இடம்.. இது தான் உன் நிம்மதி.. என்று உணர்ந்த இல்ல.. இதுக்கு பேர் தான் டி

கா.. த... ல்.... “

 என்று மெல்ல நிறுத்தி ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்க, பவித்ராவின் மனதில் திடீரென்று மலைச்சாரல்...

அதுவரை அணை போட்டு தேக்கி வைத்திருந்த ஆற்று நீர் அணையை உடைத்து கொண்டு பாய்ந்து வருவதை போல உள்ளுக்குள் அப்படி ஒரு உணர்வு...

கண்களை அகல விரித்து சரண்யாவை ஆச்சர்யமாக பார்த்தவள்

“நிஜமாகவா?? “ என்றாள் இன்னும் நம்ப முடியாமல்...

“ஹ்ம்ம்ம் ஆமான் டி ஜான்சி ராணி.. காதல் என்பது ஒரு  விவரிக்க முடியாத பீலிங்... கண்ணால் பார்த்தால் மட்டும் தான் காதல் வரணும்னு இல்லை.. தன் இணையை கண்ட , உணர்ந்த அடுத்த நொடி பூப்பதுதான் காதல்..

தன் இணையை கண்டு கொள்வதில் தான் ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் இருக்கும்.. சில பேருக்கு பார்த்த உடனே தோணும்.. சில பேர் பழக பழக அதை உணர்ந்து கொள்வார்கள்...

நம்ம கல்ச்சர்ல அரேஞ்ச்டு மேரேஜ் ல் பொண்ணு பார்க்க வரும் பொழுது அந்த சில விநாடிகள் ளயே  தன் இணையை உணர்ந்து கொண்டு இணைவது தான் திருமண வாழ்க்கை..

அப்படியும் காதல் தோணலைனா   திருமணத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பொழுது அவர்களுக்குள் காதல் மலரும்...

அப்படியும் இல்லாமல் தங்களுக்குள் காதல் என்ற ஒன்றே தோன்றாமல் வெறும் கடமைக்காக மட்டுமே வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் விதியின் ஆட்டத்தால் தவறாக இணைந்தவர்கள்..

இல்லையா காதல் என்ற ஒன்றை உணராமல் உன்னை மாதிரி முரண்டு  பண்றவங்களும் உண்டு..

அவ்வளவு ஏன் இந்த காதல் இருக்கே.. அது இன்னும் வித்தியாசமாக கூட வரும்..எத்தனை சினிமாக்கலில் பார்த்திருக்கிறோம்..  குரலை கேட்டு மட்டுமே வளரும் காதல்.. கடிதங்கங்களில் பரிமாறும் காதல்..

நம்ம புராண கதைகளில் கூட மீரா கண்ணனின் பெருமையை கேள்வி பட்டு காதல் வயபட்டு தன் கணவனிடம் ஒன்ற முடியாமல் கடைசியில் தன் காதலனிடம் சேர்ந்த கதை தெரியுமில்லை..

அவ்வளவு ஏன்.. இந்த டிஜிட்டல் உலகத்துல வெறும் சேட்டிங்  மூலமாகவே எத்தனை காதலர்கள் உருவாகியிருக்காங்க தெரியுமா?? .. “  என்று காதலை பற்றி இன்னும் விளக்கினாள் சரண்யா...

அதை எல்லாம் கேட்டு அதிசயத்த பவித்ரா

“நீ சொல்றது எல்லாம் உண்மையா சரண்??  நான் உண்மையிலயே அவரை லவ் பண்றேனா?? “ என்றாள் இன்னும் நம்பாமல்..

“போடி..  அடி முட்டாள் டீ நீ .. அப்படி காதல் இல்லைனா, நீ உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணப்போறாருனு தெரிந்த அடுத்த நொடியே மேடையில் இருந்து எழுந்திருப்ப.. அப்படியே தாலி கட்டினாலும் சீட் பண்ணி கல்யாணம் பண்ணவரோட ஒன்னா இருந்திருக்க மாட்ட..

உன் கேரக்டர்க்கு,  தாலிய கழட்டி மூஞ்சியில வீசிட்டு போயிருப்ப...” என்று சிரித்தாள் சரண்யா

“இல்லடி.. அம்மாவுக்காக.. “என்று பவித்ரா சொல்ல வர

“ஹா ஹா ஹா அது உன்னையே நீ ஏமாத்திக்கறதுக்காக சொல்லிக்கிற மொக்க காரணம் டி...

ஏன் டி.. .உன்  பக்கத்து வீட்டு பொண்ணுக்கு ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க.. மாப்பிள்ளை நல்லவன் இல்லைனு தெரிஞ்ச உடனே நீ கோர்ட் படி ஏறி அவளுக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்து வேற ஒரு நல்ல வாழ்க்கையை அந்த பொண்ணுக்கு அமைச்சு கொடுக்கல??

அப்ப அந்த பொண்ணோட அம்மா, உன் அம்மா எல்லாமே எவ்வளவு சொன்னாங்க..  கட்டின புருசன் நலலவனோ கெட்டவனோ அவனோடதான் இருக்கணும் அப்படீனு...

ஆனால்   நீ அதை எல்லாம் கண்டுக்காம தீவிரமா நின்னு டைவர்ஸ் வாங்கி கொடுக்கல?? அப்படிபட்ட நீயாவது உன் அம்மாவுக்கா பயந்துகிட்டு பிடிக்காத ஒருத்தனோட வாழறது ஆவது...

உன்னை அறியாமலயே உன் ஆழ் மனது அவரை விரும்பியிருக்கறதால தான் அவர் பண்ணின தப்பையெல்லாம் மன்னித்து அவர விட்டு விலக தோணலை உனக்கு..

அதோட அந்த நந்தினி பழி போட்டப்போ கூட உன் மனசுல அன்பு இருக்கிறதால தான்  அவரை கெட்டவன் னு  நம்ப முடியாமல்  அறிவு பூர்வமா யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்க..

உன் மனசுல இருக்கிற காதல் அப்பப்ப தலை காட்டியதால தான் அவரை பார்க்கிறப்ப எல்லாம் மயங்கி  இருந்திருக்க.. அதுக்குள்ள உன் ஈகோ  முழிச்சுகிச்சுனா அது  உன் காதலை கீழ தள்ளி விட்டுடுது.. அதனாலதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்..

இப்ப ஒரு வாரம் பிரிந்து இருந்தப்பதான் உன் காதல் மனது வெளில வந்திருக்கு.. உன் ஈகோவை எல்லாம் விட்டு நீயே தான அவர தேடி போன..

அப்பவும் கடைசியில உன் ஈகோ தலை தூக்கியிருச்சு போல..

இன்னைக்கு காலையில் உன்  காதல் மனது உன் ஈகோவை தள்ளி விட்டுடுச்சு.. அதான் அந்த ஸ்வீட்டி உன் புருஷனை பத்தி சொன்னதும் அறிவு பூர்வமா யோசிக்காம அவர் மேல் இருந்த காதலில் அவர் தப்பாயிட்டாரேனு நினைச்சுதான் அவர் கிட்ட நீ அப்படி பேசியிருக்க..

காதலிக்கிற எந்த பொண்ணும் தன் புருசன் அடுத்த பொண்ண பார்த்தாலே பிடிக்காது.. அதான் அந்த ஸ்வீட்டி அவர பத்தி தப்பா சொல்லவும் உன் பொறாமையால நீ அவர்கிட்ட சண்டை போட்டிருக்க..

இப்ப புரியுதா?? நான் சொல்றது?? “என்று சிரித்தாள் சரண்யா..

இன்னுமே அதை  நம்ப முடியாமல

“நீ  சொல்றது  எல்லாம் நிஜமாலுமா சரண்?? “   என்றாள்

"ஹ்ம்ம்  சத்தியமான உண்மை டி அம்மா... அப்புறம் இன்னொரு உண்மை  சொல்றேன் கேட்குறியா?? " என்று புதிர் போட்டாள்..

“என்னது  அது?? " என்றாள் பவித்ரா  ஆர்வமாக

"ஹ்ம்ம்ம்ம் உன்னை  மாதிரியே உன்  புருசனும்  அவரோட காதலை மறச்சு வச்சிருக்கார் உன்கிட்ட  சொல்லாம... " என்றாள் குறும்பாக கண் சிமிட்டி

"வாட்?? அவர்  என்ன  லவ் பண்றாரா?? சும்மா உளறாத டி..  " என்றாள் அவளை முறைத்தவாறு

"ஹா ஹா ஹா ஹலோ மேடம்.. நான் உளறலை.. நீ தான் அதை புரிஞ்சுக்காம முட்டாளா இருந்திருக்கிற...

உன்னை மாதிரி அவருமே உன்னை பார்த்த உடனே காதலிக்க ஆரம்பிச்சிருக்கனும்.. இல்லை னா  சும்மா உன்னையே சுத்தி வந்து எதுக்கு அன்னைக்கு பேசணும்??  

பழி வாங்கனும்னு எதுக்கு கல்யாணம் வரைக்கும் வந்திருக்கணும்.. பழி வாங்க எத்தனையோ வழிகள் இருக்கே...

சும்மா அதெல்லாம் அவருக்காக அவரே சொல்லிகிட்ட காரணங்கள்.. உண்மையிலயே  உன்னை தன் பக்கத்துலயே  வச்சுக்கணும் னு   தான் இவ்வளவும்..

கல்யாணத்தப்பயே பார்த்தனே அவர் கண்ணில் அப்படி ஒரு காதல்.. நீயும் தான் அப்படி உருகி நின்னீயே அவர பார்த்ததும்...  இரண்டு பேரும்...கடைசியில பார்த்தா ஒருத்தருக்கு ஒருத்தர் மறச்சு ஏமாத்திகிட்டு 6 மாசத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்களே ஜான்சி ராணி... 

எனக்கு என்னவோ  அவர்  உன்மேல் இருக்கிற காதலை  முன்னாடியே உணர்ந்துட்டார் னு  நினைக்கிறேன்.. சும்மா உன்கிட்ட  மறச்சு நாடகம் ஆடிகிட்டிருக்கார்.. " என்றாள் சிரித்தவாறு..

அபொழுது தான் அவன்  அப்பப்ப சொல்லும் விது என்ற பெயர்  நினைவில் வந்தது...

ஆனால் அப்ப அதை  அவள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை...

"அப்ப உண்மையிலயே  என் ஷா என்னை காதலிக்கிறானா?? " என்று  தனக்குள்ளே கேட்டு கொண்டவள் மனமெல்லாம் இனித்தது...

மனமெல்லாம் புது வித  உற்சாகம் தொற்றி கொண்டது... கணவனால் காதலிக்க படுவது எவ்வளவு சுகம் என்று  இப்பொழுது உணர்ந்தாள் பவித்ரா....

இதுவரை விளையாட்டு பிள்ளையாக வழைய வந்தவள் முதல் முதலில் காதல் மலர, தன்னையும் ஒருத்தனின் மனைவியாக எண்ணி பார்க்க, அவளுல் சிலிர்த்தது...

இப்பயே அவனை பார்க்கவேண்டும்.. இறுக்க கட்டி கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து கொள்ள துடித்தது அவள் உள்ளமும் உடலும்...

ஆனால் உடனேயே  காலையில் அவன் திட்டிவிட்டு சென்றதை நினைத்து மனம் வாடினாள்..அவளின் முக வாட்டத்தை கண்ட சரண்யா 

“இன்னும் என்னடி?? ஏன்  டல்லா இருக்க?? “ என்றாள் சரண்யா அக்கறையாக

 “அவர் என் மேல கோபமாயிட்டார் டி .. என் மூஞ்சியிலயே முழிக்காதனு திட்டிட்டார்... என்னை வெறுத்துடுவாரா?? “என்றாள் பாவமாக

“ஹா  ஹா ஹா  அப்படி வெறுப்பதற்கா ஒரு வருசமா உனக்காக காத்து கிட்டிருக்கார்?? இதெல்லாம் சும்மா ட்ராமா வா  இருக்கும்.. நீ போய் அவர கன்வின்ஸ் பண்ணு.. “ என்று சிரித்தாள் சரண்யா...

“ஆங்...  நான் போய் எப்படி கன்வின்ஸ் பண்றது?? ஏதாவது ஐடியா குடேன் சரண்.. “ என்றாள் பவித்ரா அவளை பாவமாக பார்த்தவாறு

“அடிங்க... ஏன் டி.. உன் புருசனை எப்படி கன்வின்ஸ் பண்றதுனு உனக்குதான் தெரியணும்... அடுத்தவங்க சொல்லி எல்லாம் செய்யக்கூடாது... உனக்கு என்ன தோணுதோ அத பண்ணு.. நீ சொதப்புறதுலயே நம்ம ஹீரோ சரண்டர் ஆனாலும் ஆய்டுவார்.... “ என்று குறும்பாக சிரித்தாள் சரண்யா..

ஆனாலும் அவள் முகம் தெளியாததை கண்டு

“இன்னும் என்னடி  குழப்பம்  உனக்கு...??

“வந்து... நானா போய்  பேசினா  அப்ப நான்  தோத்துட்டதா  ஆய்டும் டீ... அது எப்படி நான் தோற்கறதாம்?? அப்ப என்னை இன்னும் ஓட்டுவான்... “  என்று கை யை பிசைந்தாள் பவித்ரா..

“அடிப்பாவி... அப்ப இன்னும் உன் ஈகோவை விட்டு கொடுக்க மாட்ட.. உன்னை போய் தேடி புடிச்சு கல்யாணம் பண்ணியிருக்கார் பார்... தி கிரேட் ஆதித்யா நிஷாந்த் அவர சொல்லணும்...

நீ தேற மாட்ட.. பேசாம அந்த ஸ்வீட்டியவே கோர்த்து விட்டுட வேண்டியது தான்.. ”  என்று முறைத்தாள் சரண்யா

 அதை  கேட்டு பவித்ராவும் அவளை முறைத்தாள்...

“ஹே முறைக்காத ஜான்சி ராணி... ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ..

திருமணம்  ங்கிறது வெறுமனே இரண்டு பேரும் இணைவது இல்ல.. மனப்பூர்வமா இருவரும் ஒன்னுக்குள் ஒன்றாக இணைவது தான் திருமண பந்தம் என்பது ..

அப்படி ஒன்றுக்குள் ஒன்றாக மாறிய பின் இதில் யார் ஜெயிச்சாலும் தோற்றாலும் வெற்றி தோல்வி இருவருக்குமே தான் டி ..

அதாவது உன் புருசன் தோத்தா நீ தோத்த மாதிரி.... அவர் ஜெயிச்சா நீ ஜெயிச்ச மாதிரி..

இப்ப சொல்... உன் புருசன் தோக்கனுமா இல்ல ஜெயிக்கணுமா?? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு..

“ஆங்... என்னடி இது ??

ஒம் பணம் பணம் ... எம் பணம் பணம்
எம் பணம்
... ஒம் பணம்...  ...
எம் பணம் பணம்
...  ஒம் பணம் பணம்
ஒம் பணம்
... எம் பணம்...  

னு  விவேக் பாடற மாதிரி நல்லா குழப்பறியேடி... இப்ப நீ  என்ன சொல்ல  வர?? “என்றாள் தலையை சொறிந்த படி..  

“ஏன் டி.. விடிய விடிய இராமயணம் கேட்டு விடிஞ்சதும் சீதைக்கு ராமன் சித்தப்பானு சொன்னானாம் ஒருத்தன்...

அந்த மாதிரி பக்கம் பக்கமா டயலாக் பேசி உன் மணடையில நுழைய வச்சா கடைசியில்  என்ன சொல்ல வர்ற னு  அசால்டா கேட்குற ??

நீயெல்லாம் எப்படி ஒரு மல்ட்டி மில்லினரோட பொண்டாட்டியா குப்ப கொட்ட போறியோ??... “

என்று இழுத்தாள் சரண்யா...

“ஹ்ம்ம் எல்லாம் என் நேரம் டி.. உன்கிட்ட எல்லாம் நான் திட்டு வாங்க வேண்டி இருக்கு.. எல்லாம் அந்த நெட்டையால வந்தது... அவனுக்கு இருக்கு இன்னைக்கு.. “ என்று மீண்டும் வேதாளம் மரம் ஏற ஆரம்பிக்க சரண்யா வோ அலறி

“அம்மா தாயே.. உங்க ஆட்டத்தை இதோட முடிச்சுக்கங்க.. பாவம் மக்கள் ரொம்ப நொந்து போய்ட்டாங்க உங்க கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து...

அதனால் நீ நேரா போற.. என் ஹீரோ எங்க இருந்தாலும் கண்டு பிடிக்கிற.. அவர்கிட்ட உன் காதல சொல்லி சரண்டர் ஆற..

அதோட நாங்க ஆட்டத்தை முடிக்கிறோம்.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்... இதுக்கு மேல இல்லாத மூளைய போட்டு எதுவும் குழப்பிக்காத... “என்று அவள் தலையை பிடித்து ஆட்டினாள்...

“ஹ்ம்ம்ம்ம் சரி டீ... நீ சொல்றதும் கரெக்ட் தான்... அப்படியே செஞ்சுடறேன்...

அது சரி எனக்கு ஒரு சந்தேகம்... “ என்று  இழுத்தாள் பவித்ரா..

“ஐயயோ!!  மறுபடியுமா?? உனக்கு திரும்பவும் விளக்கற அளவுக்கு என்கிட்ட எனர்ஜி இல்லடி மா.. உன்கிட்ட பேசினதுக்கு நான் பத்து கஸ்டமர கவனிச்சிருந்தா இன்னும் கொஞ்சம் சேல்ஸ் ஆவது ஆகியிருக்கும்.. “ என்று அலறினாள் சரண்யா...

“ஐய... ரொம்பத்தான்... “என்று முகத்தை நொடித்த பவித்ரா

“சரி.. காதல பற்றி இவ்வளவு டயலாக் பேசுனியே?? உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது?? What is the matter?? “என்று தன் புருவங்களை உயர்த்தி குறும்பாக சிரித்து தன்  தோழியின் காதை பிடித்து திருகினாள் பவித்ரா..

“ஹீ ஹீ ஹீ.. இதெல்லாம் என்ன டிகிரி வாங்கி படிக்க வா முடியும்?? தானா தெரிஞ்சுகிட்ட பாடம் தான் டி .. “ என்றாள் சரண்யா இலேசாக கன்னம் சிவக்க..

“ஹா ஹா ஹா  அந்த பாடத்தை சொல்லி கொடுத்தது என் ப்ரதர் தான.. கள்ளி..

எனக்கு தெரியாம தனியா ட்ராக் ஓட்டற..ஹ்ம்ம்ம் நீ நடத்து டீ  என்று கண் சிமிட்டி சிரித்தாள் பவித்ரா

“ஹே.. அதெல்லாம் ஒன்னும் இல்லடி.. “ என்றாள் சரண்யா அவசரமாக மறுத்து

“ஹீ ஹீ ஹீ நம்பிட்டேன்.. ஒன்னும் இல்லாமதான் அவர பார்க்கிறப்ப எல்லாம் உன் கண்ணு டாலடிக்குதாக்கும்...அவரும் ஏதாவது  ஒரு காரணத்தை சொல்லிகிட்டு தினமும் இங்க வந் து நிக்கிறாராக்கும்

பாத்து டீ.. என் ப்ரதர ரொம்ப சுத்த விடாம சீக்கிரம் ஓகே சொல்லிடு... பாவம் அன்னைக்கே ரொம்ப புலம்பினார்... “ என்று சிரித்தாள் பவித்ரா

“உன்ன... “ என்று அவளை அடிக்க துரத்தினாள் சரண்யா...

“ஹீ ஹீ ஹீ.. தி கிரேட் ஆதித்யா கிட்டயே நான் மாட்டினது இல்ல.. உன்கிட்ட சிக்குவேணா.. “ என்று அவள் கைக்கு அகப்படாமல் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடியவள் மீண்டும் கதைவை திறந்து தலையை மட்டும் நீட்டி அவளுக்கு அழகு காண்பித்தாள் பவித்ரா..

“எனிவே.. தேங்க்ஸ் டீ.. சரண்.. இப்பதான் கொஞ்சம் தெளிவா நிம்மதியா  இருக்கு.. “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பவித்ரா..

“குட் கேர்ள்.. ஆல்  தி பெஸ்ட் டீ... “ என்று சரண்யா கத்தியது காற்றில் தான் போனது...

அதற்குள் ஓடியிருந்தாள் பவித்ரா....

தன் கடையை விட்டு வெளியில் வந்தவள் சக்தியை அழைத்து காரை எடுக்க சொல்லி ஆதி  எங்க இருப்பான் என்று கேட்க, சக்தியும்

“எனக்கு தெரியாது மேடம்.. சார் இன்னைக்கு அவரே காரை எடுத்துகிட்டு போய்ட்டார்.. எந்த ஆபிஸ்ல இருப்பார் னு  தெரியாது மேடம்.. “என்றான்..

சிறிது யோசித்த பவித்ரா பின் வீட்டிற்கே காரை விட  சொன்னாள்...

வீட்டிற்கு வந்ததும் அவள் மனம் முழுவதும் அவன் மட்டுமே நிறைந்து இருந்தான்... ஹாலில் மாட்டியிருந்த அவனின் ஆளுயர புகைபடத்தை கண்டதும் காதல் பொங்க அவனையே ரசித்து பார்த்தாள்....

அவள் உதடுகள் தானாக ஒரு பாடலை ஹம் பண்ணியது  

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே
..  என் நெஞ்சே..  செல்லாயோ அவனோடு
சென்றால் வரமாட்டாய் அது தானே பெரும்பாடு
தன்நன் நானான
தன்நன் நானான
தன்நன் நானான

என்று அந்த பாடலை ரசித்து பாடிகொண்டே தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்க இன்னுமே அது  அனைக்கபட்டிருந்தது...

சிறிது நேரம் தோட்டத்தில் உலாவியவள் திரும்ப வீட்டிற்கு வந்து ஹாலில் அமர்ந்தவள் தன் அலைபேசியை எடுத்து வாட்ஸ்அப்பில் “சாரி.. “என்று திரும்ப திரும்ப அனுப்பி கொண்டிருந்தாள்...

இரவு 10 மணிக்கு மேல் திரும்பி வந்த ஆதி, ஹாலில் தன் மனைவி அமர்ந்திருப்பதை கண்டு ஆச்சர்யபட்டான்..

இந்நேரம் தங்கள் அறையில் அமர்ந்து எதையாவது நோண்டி கொண்டிருப்பாள்.. இல்லையென்றால் தூங்கியிருபாள்..

இன்று ஏன் இங்க உட்கார்ந்திருக்கா??  என்று யோசித்தவனுக்கு

 அப்பொழுதுதான் நினைவில் வந்தது காலையில் அவளுடன் சண்டை இட்டு சென்றது...

கோபமாக கிளம்பி அலுவலகம் சென்றவன் அதன்பின் அலுவலக வேலையில் மூழ்கி விட, அதை தொடர்ந்து பல மீட்டிங் தொடர்ந்து இருக்க தன் பெர்சனல் மொபைலை அணைத்து வைத்திருந்தான்...

வேலை எல்லாம் முடித்து சோர்வாக வீடு திரும்பியவன் தன் மனைவியை கண்டதும் தான் காலையில் நடந்த சம்பவம் நினைவு வந்தது.. உடனே அவன் முகம் மாற ,அப்பொழுதுதான் அவள் கையில் இருந்த அலைபேசியை கவனித்தான்...

உடனே தன் பெர்சனல் அலைபேசியை எடுத்து ஆன் பண்ண, சாரி...  சாரி... என்று பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொண்டே இருந்தன...

அதை கண்டதும் அவன் கோபம் மறைந்து தானாக உதட்டில் புன்னகை அரும்ப மீண்டும் தன் அலைபேசியை பார்க்க அதில் அவள் “ Typing…”  என்றபடியே நின்றிருந்தது...

சாரி.. என்று அடித்த படியே உறங்கியிருந்தாள் பவித்ரா...

அதற்குள் அவனை கண்டதும் வள்ளி அருகில் வந்து

“ஐயா... அம்மா எதுவும் சாப்பிடாமல் உங்களுக்காகவே காத்துகிட்டிருந்தாங்க.. இப்பதான் தூங்கிட்டாங்க போல இருக்கு.. நீங்க சாப்பிட வர்ரீங்களா?? “ என்றாள்..

“வேணாம் வள்ளி.. நான் ஆபிஸ்லயே சாப்டிட்டேன்.. பால் மட்டும் எடுத்து வச்சுடு.. இவ எழுந்திருச்சா கொடுத்திடறேன்...”  என்றவன் தன் மனைவியின் அருகில் சோபாவில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு கண் மூடி சிறிது நேரம் பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தான்...

அதுவரை இருந்த களைப்பு சோர்வு எல்லாம் பறந்திருந்தது அவள் முகத்தை பார்க்கையிலயே...

பின் வள்ளி அவள் அறைக்குள் சென்றவுடன் அவளை அப்படியே அள்ளி கொண்டு தன் அறைக்கு சென்றான்...

அவளை தன் கட்டிலில் கிடத்தியவன்

“ராட்சசி... என்னை எப்படி சுத்த விட்ட.. எத்தனை நாள் என்னை ஏங்க வச்ச... ஒரு இரண்டு நாளைக்கு உன்னை எப்படி சுத்த விடறேன் பார்... அப்ப தான் நான் பட்ட வலியும் வேதனையும் உனக்கு புரியும்... அனுபவி டி.. “ என்று குறும்பாக சிரித்தவன் மெல்ல  குனிந்து  அவள் முன் உச்சி நெற்றியில் இலேசாக இதழ் பதித்து

“குட் நைட் டி மை ஸ்வீட் ராட்சசி.. “ என்று முறுவலித்தான்...

உறக்கதில் இருந்த பொழுதும் தன் கணவனின் முத்தத்தை உணர்ந்ததாலோ என்னவோ அவளும் மெல்ல புன்னகைத்து

“குட் நைட் ஷா... “என்றாள் உறக்கத்திலயே...

அவள் பின்னால் சொன்ன ஷா  என்பதை கவனிக்காமல் அவளின் இதழில் விரிந்த புன்னகையை ரசித்தவன் அவள் அருகில் படுத்து கொண்டு அவளையே இமைக்க மறந்து பார்த்தவாறே கண் அயர்ந்தான்....

ஒரு வழியா பவி குட்டி தன் காதலை உணர்ந்தாச்சு.. அடுத்து எப்படி தன் கணவனை  கன்வின்ஸ் பண்ண போறா?? வெற்றி பெறுவாளா? இல்ல திரும்பவும் முறுக்கி கொள்வாளா?? பார்க்கலாம்.... 

( இன்னும் 4 அத்தியாயங்களில் இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் நிறைவு பெறும் )

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!