காந்தமடி நான் உனக்கு!!!-47

 


அத்தியாயம்-47

முதனும், சத்யாவும் மறுவீட்டிற்கு என்று சத்யாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

நேற்றைய திருமண அலைச்சலில் ரூபாவதிக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போக, அவரை பார்த்துக்கொள்ள என மதியழகனும் அங்கு வரமுடியவில்லை.

வீட்டிற்கு வந்த  தன் மகளையும் மருமகனையும் ஆரத்தி எடுத்து வரவேற்றார் வளர்மதி. அதோடு மருமகனுக்காக தடபுடலாக விருந்து சமைத்து அசத்தியிருந்தார்.

சத்யாவின் தங்கைகளும் முகம் கொள்ளா பூரிப்புடன் ஓடி வந்து தன் அக்காவை கட்டி அணைத்துக் கொண்டனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சத்யாவின் திடீர் திருமணத்தை கேள்விப்பட்டு,  சத்யாவை பார்க்க வந்திருந்தனர்.

அதோடு சத்யாவின் தோழி, சுகாசினியும் தன் தோழியை பார்க்க  வந்திருக்க,  சத்யாவும் அவளை செல்லமாக  கோபித்துக் கொண்டாள்.  

அடியே சுகா... நீ கூட இந்த பிராட் பண்ணின நாடகத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாயே..!  நீயும் அந்த கட்சியில் சேர்ந்து கொண்டாய்  தானே...போடி...”  என்று முறைத்தாள் சத்யா.

“ஹீ ஹீ ஹீ அப்படி இல்லடி. உன்னை பற்றி நன்றாக தெரியும். கண்டிப்பாக அமுதன் ப்ரோ உன்னிடம் உண்மையைச் சொல்லி இருந்தால் கூட,  நீ திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு இருக்க மாட்டாய்.

உனக்கு எல்லாம் இந்த மாதிரி அதிரடி தாக்குதல் அவசியம் தான்.

அதனால் தான் ராமருக்கு அணில் உதவியதை போல, உன்னை நல்லபடியாய் உன் புருஷன் வீட்டில் சேர்க்க,  சிறு உதவியாய் நானும் இந்த ட்ராமா வில் இணைந்து கொண்டேன்...

நீ இப்பொழுது சந்தோசமாக இருக்கிறாய் தானே... உன் மனதிற்கு பிடித்தவரை மறந்து கொண்டாய் தானே. அது போதும்... நீ ஹேப்பியா இரு

அது போதும் டி. மத்ததை எல்லாம் எதுவும் நினைக்காதே. விஸ் யூ ஹேப்பி மேரிட் லைப்..”  என்று தன் தோழியை ஆரத் தழுவிக் கொண்டாள் சுகாசினி.

மதிய உணவிற்கு பிறகு அமுதன் டயர்டாக இருப்பதாக சொல்லி,  சத்யாவின் அறைக்கு உறங்கச் சென்றுவிட,  சத்யாவும் அங்கிருந்தவர்கள் உடன் எல்லாம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.  

பிறகு அவள் வீட்டில் குடியிருக்கும் ஒவ்வொரு போர்சனையும் சென்று பார்ப்பதற்காக வெளியில் சென்று விட்டாள்.  

சற்று நேரம் கழித்து, தன் தூக்கம் களைந்து ரெப்ரெஷ் ஆகி வந்தவன்,  வளர்மதி அவனுக்கு காபியை கொடுக்க,  அதை வாங்கிக் கொண்டவன், “ஆன்ட்டி உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணு ம். கேட்கலாமா? “  என்றான் தயக்கத்துடன்.

“சொல்லு அமு...” அமுதன் என்று சொல்ல வந்தவர், பின் தன் உதட்டை கடித்துக் கொண்டு

“சாரி...மாப்பிள்ளை...”  என்று திருத்தினார்.  

“அடடா...இந்த மாப்பிள்ளை வேப்பிள்ளை என்ற மரியாதை எல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. நீங்க என்னை எப்பவும் போல அமுதன் என்றே கூப்பிடுங்க. அதுதான் எனக்கு பிடிக்கும்...”  என்று புன்னகைத்தவன்,

“வந்து...கொஞ்ச வருஷம் முன்னாடி மூர்த்தி என்று ஒருத்தர் உங்க வீட்டில் குடி இருந்தாரா? “  என்று மெல்ல விசாரித்தான்.  

சத்யா சொன்னதெல்லாம் உண்மையா என்று உறுதிபடுத்திக்கொள்ள எண்ணிதான் மூர்த்தியை பற்றி லேசாக விசாரிக்க ஆரம்பித்தான்.

ஒருவேளை தனக்குள்ளே நடக்காத ஒன்றை பற்றி எதுவும் கற்பனை பண்ணி வைத்துக் கொண்டு அதன்படி எதுவும் வாழ்ந்து வருகிறாளோ என்று தெளிவு படுத்திக் கொள்ள எண்ணினான்.

அதனால்தான் அந்த மூர்த்தியை பற்றி மெல்ல விசாரித்தான். அதைக்கேட்ட வளர்மதியும் சற்று நேரம் தன் தலையை தட்டி யோசித்தவர்

“ஆங்...இப்ப நினைவு வந்து விட்டது அமுதன். நம்ம வீட்ல ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல தான் மூர்த்தினு ஒரு குடும்பம் இருந்தது. அப்ப சத்யா சின்ன பொண்ணா இருந்தா.

மூர்த்திக்கு சத்யா னா ரொம்ப இஷ்டம். அடிக்கடி அவளை தூக்கி வைத்துக் கொள்வான். அப்ப எனக்கு சின்னவளுங்க பிறந்துவிட, சத்யாவை கவனிக்க நேரம் இல்லாமல் போனது.

பாதி நேரம் அந்த மூர்த்தி வீட்டில்தான் இருப்பாள். அவனும் வேலை முடிந்து வந்ததும், வந்து சத்யாவை அழைத்துக்கொண்டு போய்விடுவான். ரொம்ப தங்கமான பையன்...” என்று வெள்ளந்தியாய் மூர்த்தியை பற்றி புகழாரம் பாடினார் வளர்மதி.

அதைக்கேட்டதும் அதிர்ந்து போனான் அமுதன்.

“அந்த மூர்த்தி தங்கமானவனா? இவர் மகளுக்கு அந்த பொறுக்கி செய்து வைத்த காரியம் தெரிந்தால் தாங்குவாரா?  அவனும் தான் என்னமா நல்லவன் வேஷம் போட்டிருக்கிறான்.

தன் உயிராய் இருப்பவளை அந்த இளம்பருவத்தில் கசக்கி முகற எப்படி மனம் வந்தது அந்த காமுகனுக்கு...” என்று உள்ளுக்குள் குமுறியவன், நேற்று இரவு சத்யா பட்ட வலியும் வேதனையும் மீண்டும் கண் முன்னே வர, அவன் நரம்புகள் எல்லாம் புடைத்தன. கை முஷ்டியை இறுக்கியவன்

“அவன் மட்டும் இப்ப என் கையில் கிடைத்தான்...அடுத்த நொடி அவன் குரல் வலையை கடித்து துப்பி இருப்பேன்..ராஸ்கல். சத்யா மாதிரி எத்தனை குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாண்டானோ..?    

அவனைச் சொல்லியும் குற்றமில்லை. இதோ இந்த வளர் ஆன்ட்டியைப்  போலத்தான் எத்தனையோ அன்னையர்கள்...தங்கள் அருகில் இருக்கும் காமுகன்களை அடையாளம் கண்டு கொள்ளாமல்,  வெள்ளந்தியாய் எண்ணி தங்கள் குழந்தைகளை பழக விடுகிறார்கள்.

இந்த மூர்த்தி மாதிரி ஆட்கள் உள்ளுக்குள் விஷத்தை வைத்துக் கொண்டு வெளியில் தேன் தடவி அல்லவா பேசி நாடகம் ஆடி,  தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.

இவனுங்களுக்கெல்லாம் வாய் பேசத் தெரியாத, தனக்கு நடந்ததை வெளியில் சொல்லத் தெரியாத பச்சிளம் குழந்தைகள் தான் இலக்கு. அப்பதானே தங்கள் இச்சையை தீர்த்துக்கொண்டு எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்.

அதுவும் அதற்கு விலை ஒரு ஐந்து ரூபாய் சாக்லெட் மட்டும் போதும்...

டேமிட்...பால்வடியும் அந்த குழைந்தைகளின் முகத்தை காண எப்படி காம உணர்வு வந்து தொலைக்குமோ? அந்த பிஞ்சு குழந்தைகளிடம் போய் எப்படி அப்படி நடந்து கொள்ள மனம் வந்தது.

மிருகங்கள் கூட தங்கள் வயதுக்கு ஏற்ற, பொருத்தமான இணையிடம் மட்டும் தான் நாடிச்செல்லும்... இவர்கள் எல்லாம் மிருகங்களை விட மோசமானவரக்ள்.

தங்கள் மகளைப்போன்ற சின்னசிறு பிள்ளைகளிடம் போய்...சை... “ என்று அருவருப்பாக இருந்தது அமுதனுக்கு.

தன் மருமகன் முகத்தில் வந்து வந்து போன கோபத்தையும்,  வெறுப்பையும் இப்பொழுது வந்திருந்த் அருவருப்பையும் கண்டு வளர்மதி அதிர்ந்து போனார்.

“என்னாச்சு மாப்பிள்ளை ? “ என்று பதற்றத்துடன் விசாரிக்க, அவரின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டான் அமுதன்.

அப்பொழுதுதான் வளர்மதி தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது உறைக்க, தன்னை சமாளித்துக்கொண்டவன்

“நத்திங் ஆன்ட்டி....” என்று புன்னகைத்து சமாளித்தான்.

வளர்மதி இன்னும் யோசனையாக

“மாப்பிள்ளை...திடீர்னு ஏன் மூர்த்தியை பற்றி விசாரிச்சிங்க? “ என்றார் தயக்கத்துடன்.

“சும்மாதான் ஆன்ட்டி. நீங்க சொன்ன மாதிரிதான் சத்யாவும் மூர்த்தியை பற்றி பெருமையாக சொன்னாள். அதனால் ஒரு சின்ன ஆர்வம். மற்ற்படி ஒன்னுமில்லை. நீங்கள் நான் விசாரித்ததை பற்றி சத்யாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம்...” என்றான் இறைஞ்சலுடன்.

அதே நேரம் வெளியில் சென்றிருந்த சத்யாவும் முகம் கொள்ளா பூரிப்புடன் துள்ளலுடன் உள்ளே வந்தவள்

“அம்மு...ப்பா...நம்ம டெனன்ட்ஸ் எல்லாரும் உங்களைத்தான் புகழோ புகழ்னு புகழ்ந்து தள்ளறாங்க. நீங்கதான் பெரிய ஹீரோவாம்...எப்படி என்னை மடக்கி கல்யாணம் பண்ணிகிட்டிங்கனு புகழ்ந்து தள்ளறாங்க.

அதோட இந்த ஏரியாவில் இருக்கும் எல்லா வசதி குறைந்த பசங்களுக்கும் படிப்பு செலவை நீங்களே ஏத்துக்கிட்டிங்களே... அதுக்கு வேறு அத்தனை பாராட்டு..

விட்டா இந்த ஏரியாவே உங்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து விடுவார்கள் போல. போல என்ன.. அந்த டிங்கு பையன் இப்பவே வாயாலயே ரசிகர் மன்றத்தை திறந்துட்டான்.

இப்ப எல்லாம் வாயை திறந்தால் உங்க புராணம்தானாம்... “ என்று பெருமையுடன் சிலாகித்துக் கொண்டாள் சத்யா...

அதோடு சோபாவில்  அமர்ந்திருந்தவன் அருகில் ஒட்டி அமர்ந்து,  அவன் தோளில் உரிமையோடு சாய்ந்து கொண்டு,  அவள் கேள்வி பட்ட விஷயங்களை எல்லாம் கதை அளந்து கொண்டிருந்தாள்.

சத்யா சொன்னது போல அமுதன் அந்த பகுதியை தத்து எடுத்து இருந்தான். வளர்ச்சி இல்லாத குடும்பத்திற்கு தகுந்த உதவிகளை செய்து வருகிறான். அதற்காக இலவசம் என்று அவர்களை சோம்பேறி ஆக்கி விடவில்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் தக்க வருமானம் வரும் வகையில் அவர்களின் தகுதிக்கு தகுந்த வேலையை வாங்கி கொடுத்தும், அங்கிருந்த பிள்ளைகளின் கல்விச் செலவை மட்டும் அவன் ஏற்றுக்கொண்டான்.

அதற்கே அந்த பகுதியில் அவனை ரொம்பவும் கொண்டாடுகிறார்கள்.

சத்யாவின் மலர்ந்த சிரிப்பையும், பழைய சத்யாவாய் வளவளத்து கொண்டிருப்பதையும் காண பெரும் நிம்மதியாக இருந்தது.

தன்னவளையே இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருக்க, வளர்மதியோ அவர்கள் இருவரின் அன்யோன்யத்தை கண்டு மனம் குளிர்ந்து போனார்.  

ன்று இரவு, இரவு உணவை சத்யாவின் வீட்டிலயே முடித்து விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினர் இருவரும். 

காரில் வரும் பொழுதும் வாய் ஓயாமல்  வளவளத்துக் கொண்டே வந்தவள்,  வீட்டை அடையும் முன்னே நன்றாக உறங்கி இருந்தாள். 

அமுதன் காரை அதன் இடத்தில் நிறுத்தியவன்,  அசந்து உறங்குபவளை எழுப்ப மனமில்லாமல்,  அப்படியே தன் கரங்களில் அள்ளிக் கொண்டான்.

நல்ல வேளை...வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் உறங்க சென்றிருந்தனர்.

அது ஒரு ஸ்மார்ட் ஹோம் என்பதால் அவன் முகத்தை பார்த்ததுமே கதவு திறந்து கொண்டது.

தன் அறைக்கு வந்தவன், தன் கரங்களில் கிடந்தவளை கட்டிலில் கிடத்தியவன்,  சிறு குழந்தைபோல உறங்கும் தன்னவளை ஒருமுறை ரசனையோடு பார்த்து விட்டு,  அவளின் நெற்றியில் மிருதுவாய்  முத்தமிட்டு அங்கிருந்து நகர முயன்றான்

ஆனால் அடுத்த நொடி அவனின் வலிய கரத்தை எட்டிப் பற்றியது ஒரு மென் கரம்.

லேசாக அதிர்ந்து திரும்பி பார்க்க,  சத்யா தான் விழித்துக் கொண்டிருந்தாள்.  கூடவே அவன் கையை பிடித்தவாறு மையலுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“ஹே..பேபி... நீ தூங்கலையா? அப்பனா தூங்கினது மாதிரி நடித்தாயா? ப்ராட்...”  என்று செல்லமாக முறைக்க 

“ஹி ஹி ஹி அதைக் கூட உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்க லாம் என்ன பெரிய பிசினஸ்மேன் ஓ?

ஆக்சுவலா நான் தூங்கிட்டேன் தான் ஆனால் நீங்கள் என்னை காரில் இருந்து தூக்கும் பொழுது விழிப்பு வந்து விட்டது. ஆனாலும் அந்த தூக்க கலக்கத்திலேயே இவ்வளவு தூரம் நடந்து வர வேண்டுமே என்று சோம்பேறித்தனப்பட்டு கண்ணை மூடிக்கொண்டேன். 

இப்ப பார்த்தீங்களா நடக்காமலேயே இங்கே வந்து விட்டேன்...அதுவும் என் புருஷன் எவ்வளவு லாவகமாக தூக்கிட்டு வந்தார். ஸோ ஸ்வீட் ஆ யூ... “  என்று எக்கி,  அவன் தாடையை பிடித்து ஆட்டி செல்லம் கொஞ்ச, அமுதனோ தன் மனையாளின் கொஞ்சலில் கிறங்கித்தான் போனான்.

“அடிக்கள்ளி...பிராட்... 420...சீட்டர்... இப்படி எல்லாம்  இந்த சின்ன பையனை சீட் பண்ணக் கூடாது...”  என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டி அவளை செல்லமாக முறைக்க, 

அவளும் தன் முத்து பற்கள் தெரிய கிளுக்கி சிரித்தவள், அவள் புறமாக கைகளை ஊன்றி குனிந்திருந்தவன் கையை விளையாட்டாக தட்டி விட, அதில் பேலன்ஸ் தவறி அப்படியே அவள் மீது சரிந்தான் அமுதன். 

தன் மீது விழுந்தவனை அவளும் இறுக்கி அணைத்து கொண்டு அவன் முகத்தில் முத்த மழை பொழிய,  அவனும் தன் வசம் இழந்து போனான். 

அதன் பின் புதுமணத் தம்பதியர்களுக்கே உரிய சீண்டலும், சிணுங்களும், தீண்டலுமாய் சுகமாய்  நிமிடங்கள் கரைய,  இப்பொழுது அமுதன் மீண்டும் அவர்களின் தாம்பத்திய ஆட்டத்தில் நேற்று விட்ட இடத்திற்கே வந்து இருந்தான்.

அதுவரை தன் மனையாளின் மயக்கத்தில் கிறங்கி கிடந்தவன்,  அந்த நொடி அவன் அறிவு விழித்துக் கொண்டது.

நேற்றைப்போல இன்றைக்கும் அவள் சந்திரமுகியாக மாறி விடுவாளோ? இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ? என்று தயக்கமாக இருக்க, தயக்கத்துடன் அவள் முகம் நோக்கினான்.  

அவளோ நேற்றைய பாதிப்பு எதுவும் இல்லாமல், அவனுக்காக அழைப்பு விடுத்து காத்திருப்பது  புரிந்தது.  

என்ன செய்ய என்று மதில் மேல் பூனையாக அவன் தவித்துக் கொண்டிருக்க,  அவன் மனையாளோ அவனை விடாமல் இன்னுமாய் சீண்டி அவள் மீது மோகம் கொள்ள வைத்தாள்.  

அதற்கு மேல் தன் கட்டுப்பாட்டை இழந்தவன்,  அவளை ஆட்கொள்ள முயல அவ்வளவுதான்...அடுத்த நொடி மீண்டும் அவளின் உடல் விறைத்து போனது.  அதுவரை மையலுடன் குழைந்து கொண்டிருந்த அவளின் பால் வண்ண முகம் இறுக ஆரம்பிக்க, நேற்றைப் போலவே இன்றும் அவனை பிடித்து தள்ளி விட்டாள்.  

ஆனால் ஓரளவுக்கு அமுதன் இதை எதிர்பார்த்து இருந்ததால், அதற்குள் சுதாரித்துக் கொண்டான்.  

அவள் தன்னை வருத்திக் கொள்வதற்கு முன்னதாகவே அவனுடைய கலைந்த ஆடைகளை அணிந்து கொண்டு,  வேகமாக கதவை திறந்து கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டான்.  

அவனுக்கு தெரியும்... அவன் எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும் அவள் அறிவுக்கு அது எட்டாது.  தன்னை வருத்திக்கொண்டு வலியும் வேதனையும் அடைவாள் என்பதை அறிந்ததால், அவளுக்கு அதை கொடுக்காமல் வேகமாக வெளியேறி விட்டான்.  

ஆனாலும் அவன் மனம் அடித்துக் கொண்டது. உள்ளே என்ன செய்கிறாளோ  என்று தவிப்பாக இருக்க, முன்பே திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியாக மெதுவாக உள்ளே எட்டி பார்த்தான்.  

சத்யாவும் முகம் இறுகி, கோபத்தில் சிவந்த முகத்துடன் கலைந்திருந்த அவளுடைய ஆடையை அணிந்து கொண்டு அந்த படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.  

அதைக் கண்டவன் மனம் இன்னும் வேதனை கொண்டது.  உடனடியாக இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று அவன் மனம் அவசரமாக யோசித்தது. 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!