நிலவே என்னிடம் நெருங்காதே!!-16

 


அத்தியாயம்-16

னிமேல் நீங்க கவனமா இருக்கணும் தாத்தா.. இது உங்களுக்கு வந்திருக்கிற முதல் அட்டாக்... நல்ல வேளையா பக்கத்துல ஆள் இருந்ததனால் உங்கள சரியான நேரத்துக்கு கொண்டு வந்து சேர்க்கவும் எங்களால உங்களை காப்பாற்ற முடிந்தது..

இதுவே இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால்................. ? “ என்று இழுக்க, அதை கேட்டு அருகில் நின்று கொண்டிருந்த அதிரதன் உடல் ஒரு முறை நடுங்கியது..

அவன் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி, வேதனை வந்து போனது.. தன் பேரனின் உடல் இறுகியதையும் அவன் முகத்தில் வந்து போன மாற்றத்தையும் ஓரக்கண்ணால் கண்டு கொண்ட தேவநாதனுக்கு தன் வலியையும் மீறி புன்னகை தவழ்ந்தது உதட்டில்

“ஹ்ம்ம்ம் என்னமோ பெருசா முறுக்கிகிட்டு போனான்.. இந்த கிழவனுக்கு ஒன்னுன்ன உடனே விழுந்தடிச்சு ஓடி வந்துட்டானே... பரவாயில்ல.. இன்னும் தாத்தா மேல பாசமாத்தான் இருக்கான்...

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னாங்க... இதெல்லாம் அந்த பட்டணத்துக்காரிக்கு தெரிய மாட்டேங்குதே...என் பேரனாக்கும்... “ என்று உள்ளுக்குள் கம்பீரமாக சிரித்து கொண்டவர் தன் மீசையை பெருமையுடன் நீவி விட்டு கொண்டார்.

ஐ.சி.யூ வில் இருந்து அப்பொழுதுதான் தனி அறைக்கு மாற்றி இருந்தார்கள்..

மற்றவர்கள் வெளியில் நின்று கொண்டிருக்க, உள்ளே டாக்டர் மீண்டும் ஒருமுறை தேவநாதனை பரிசோதித்து கொண்டிருந்தார். அதிரதன் மட்டும் டாக்டர் அருகில் இருந்தான்..

அப்பொழுதுதான் டாக்டர் சொன்னதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனவன்

"எதனால இவருக்கு இப்படி ஆனது சிவா ? தாத்தா முறையா உடற்பயிற்சி செய்யறவர்.. ரெகுலரா செக்கப் எல்லாம் பண்ணி டயட் லயும் கட்டுபாடா இருப்பாரே...

போன மாசம் பண்ணின செக்கப் ல கூட கொலஸ்ட்ரால், சுகர் எல்லாம் நார்மலா இருக்கு.. ஹார்ட் லயும் எந்த ப்ராப்ளமும் இல்லைனு இல்ல ரிப்போர்ட் வந்துச்சு..அப்புறம் எப்படி இப்படி திடீர்னு ?  " என்றான் யோசனையாக..

அதை கேட்டு தேவநாதன் ஒரு நொடி திகைத்து போனார்.. ஏனென்றால் போன மாதம் அவர் செக்கப் போனது வீட்டில் யாருக்கும் தெரியாது.. அதிரதனும் சென்னையில் இருந்தான்..

“அப்படி இருக்க நான் செக்கப் போனதும் என் ரிப்போர்ட் ம் அவனுக்கு எப்படி போனது? " என்று  யோசிக்க, அப்பொழுதுதான் அவருக்கு உண்மை உறைத்தது...

"படவா. ராஸ்கல்... அத்தன மைல் தாண்டி போய் உட்கார்ந்து இருந்தாலும் நீ என்னையவே வேவு பார்த்துகிட்டு இருக்கியா? இம்புட்டு பாசத்தை வச்சுகிட்டுதான் நீ இந்த தாத்தாவை முறைச்சுகிட்டு போறியா? பார்க்கலாம். நீ எத்தன நாளைக்கு இப்படி திருப்பி கிட்டு போவனு... " என்று  உள்ளுக்குள் பெருமையாக சிரித்து கொண்டார்...

அதிரதன் யோசனையுடன் அவர் உடல் நலம் பற்றி விசாரித்ததை கண்டதும் ஒரு முறை தேவநாதனை பார்த்த அந்த டாக்டர் தொடர்ந்தார்

"எல்லாம் உன் மேரேஜ் னால வந்த அழுத்தம் தான் அதி... உன் மேரேஜ் அவசரமா கொஞ்சம் குழப்பத்துல நடந்து முடிய அதை தொடர்ந்து அடுத்த நாளே ரிசப்ஷனும் வைத்துவிட, அதற்கெல்லாம் இவரே தனியா அலஞ்சு இருக்கார்.. அதுல இழுத்து விட்டுகிட்டது தான்..

என்னதான் நம்ம உடலை நார்மலா வச்சுகிட்டாலும் திடீர்னு ஒரு குறிப்பிட்ட நேரத்துல வர்ற ரத்த அழுத்தம் யாராலும் கட்டுபடுத்த முடியாது..

ஒரு வீடியோ பார்த்திருப்பியே.. கார்டியாலஜிஸ்ட் ஒருவர் ட்யூட்டியில் இருக்கும் பொழுதே நெஞ்சு வலி வந்து அந்த இடத்திலயே உயிர் பிரிந்தது.. அவ்வளவு ஏன்.. நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா. அவர் எவ்வளவு திடகாத்திரமா இருந்தார்.. அவர் உடலை பரிசோதித்திருக்காமலயா இருந்திருப்பார்..

ஷில்லாங் ல் மாணவர்களிடையே பேசி கொண்டிருக்கும்பொழுதே அட்டாக் வந்து ஸ்பாட் அவுட் ஆகலையா? அது போல இந்த இதயம் மிகவும் சென்சிட்டிவ் ஆனது.. அது துடிக்க சிரமப்படுவதையும் துடிக்க முடியாமல் நின்று போவதை மட்டும் யாராலயும் முன் கூட்டியே கணிக்க முடியாது..

உடலில் பிரச்சனை இருப்பவர்கள் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு உடலை தயார் படுத்தி கொள்வார்கள்.. உங்க தாத்தா மாதிரி  ஆளுங்க உடலில் பிரச்சனை இல்லை என்றாலும் மனதையும் ஆரோக்கியமா வச்சுக்கணும்..

எந்த ஒரு அழுத்தமும் கவலையும் மனதில் தேக்கி வைத்துக் கொள்ள கூடாது.. அவர் மனதில் சமீபமா ஏதோ ஒரு கவலை இருந்து வந்திருக்கிறது.. கூடவே வேலை பளுவும் கூட அதுதான் இப்படி படுக்க வைத்து விட்டது.

அவர் நல்லா ஓய்வு எடுத்து மனம் விட்டு பேசி சிரிச்சாலே எல்லாம் சரியாகி விடும்.. ஆனாலும் இனிமேல் கவனமா இருக்கணும்.. பொதுவா முதல் அட்டாக் வந்தவங்களுக்கு அடுத்த அட்டாக் எப்ப வேணாலும் வரலாம்.. அதனால் நீங்கதான் அவரை கவனமா பார்த்துக்கணும்...” என்றவர் தேவநாதனை பார்த்து

“என்ன தாத்தா... சொன்னது புரிஞ்சுதா? உடம்பை வருத்திக்காதிங்க.. நல்லா ஓய்வு எடுங்க... " என்றார் டாக்டர் சிவா..அவன் அதிரதனின் பள்ளியில் சீனியர்..தேவநாதனுக்கு மிகவும் வேண்டப்பட்டவன்.. 

"ஹ்ம்ம்ம்ம் எல்லாம் புரியுது டாக்டர் தம்பி.. ஆனா. என்னை நம்பி பல குடும்பங்கள்  இருக்கே.. அவங்களை எப்படி நான் அம்போனு விட முடியும்.. என் தொழில் நல்லபடியா நடத்தாதான் அவங்க வயிறு நிறையும்.

நீங்க சொல்ற அட்வைஸ் எல்லாம் ஒத்துவராது டாக்டர் தம்பி.. நான் நாளைக்கே ஆபிஸ் போயாகணும்.. வெளிநாட்டு ஒப்பந்தம் இரண்டு மூணு முடிய வேண்டி இருக்கு.. நான் போனால்தான் வேலை ஆகும்..

நீங்க நேரத்துக்கு சாப்பிட வேண்டிய மாத்திரையை மட்டும் எழுதி கொடுங்க.. கையில வச்சுகிடறேன்.. எப்ப இதுமாதிரி வலி வந்தாலும் ஒன்ன எடுத்து வாயில போட்டுக்கறேன்..

நான் இருக்கிற வரைக்கும் இந்த தொழில மூட முடியாது.. எனக்கு பொறவு எப்படியோ போகட்டும்..  நான் என்ன கண்ண தொறந்து பார்த்துகிட்டா இருக்க போறேன்.. " என்றார் விரக்தியுடன்...

"நோ.. நோ.. தாத்தா... நீங்க ட்ராவல் பண்ணவே கூடாது. இன்னும் ஒரு வாரத்துக்கு பெட் ரெஸ்ட்லதான் இருக்கணும்.. " என்றான் அந்த மருத்துவன்  பதற்றத்துடன்..  

"அட நீங்க என்ன டாக்டர் தம்பி கூறுகெட்ட தனமா பேசிகிட்டிருக்கீங்க.. நான்தான் என் நிலமையை தெளிவா சொல்லிட்டனே.. எனக்கு என் உசுர விட என் தொழில் தான் முக்கியம். அத நம்பி இருக்கிற குடும்பங்க தான் முக்கியம்.. " என்றார் தன் பேரனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு...

அதுவரை ஏதோ யோசனையில் இருந்த அதிரதன் வாயை திறந்து  

"டேய் சிவா... இப்ப என்ன அவர் பிசினஸ் ஐ பாத்துக்கணும்.. அவ்வளவு தான.. நான் பார்த்துக்கறேன்.. அவரை ரெஸ்ட் எடுக்க சொல்லு.. " என்றான் முகத்தை திருப்பி கொண்டு..

அவர்கள் இருவருக்குமான ஊடல் அவனுக்கும் தெரிந்து இருந்ததால் அவனும் சிரித்து கொண்டே

"தாத்தா.. அதுதான் அதியே சொல்லிட்டானே.. உங்க பிசினஸ் ஐ அவன் பார்த்துக்கிறதா.. அப்புறம் என்ன? " என்றான் சிரித்தவாறு...

"எப்படி நம்பறதாம்? கண்ணாலம் கட்டி மூனே நாள் ல யார்கிட்டயும் சொல்லா கொள்ளாம பட்டணத்துக்கு ஓடி போனானே.. அந்த மாதிரி இந்த முறையும் ஓடி போனா? " என்று கொக்கி போட்டார்..

"டேய்.. நான் பூமிநாதனோட கொள்ளு பேரன்.. இவர மாதிரி ப்ராட் பண்ண மாட்டேன்.. சொன்ன வாக்கை காப்பாத்துவேன்.. அவர் மண்டையில உறைக்கிற மாதிரி சொல் “ என்று முறைத்தான்..

அதை கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டவர்

“அப்படி வாடா என் வழிக்கு என் அரும பேராண்டி... “ என்று  தன் நரைத்த மீசையை நீவி விட்டு கொண்டவர்

“ஹ்ம்ம்ம் தொழிலை அவன் பார்த்துக்கறதா வாக்கு கொடுத்த பொறவு எனக்கு என்ன கவலை..நான் நல்லா ரெஸ்ட் எடுக்கறேன் டாக்டர் தம்பி.. “ என்று சிரித்தவாறு  கண்ணை மூடி நன்றாக தலையணையில் சாய்ந்து கொண்டார்..

பின் அதிரதன் டாக்டர் உடன் பேசி கொண்டே வெளியேற அடுத்து வெளியில் காத்திருந்த கும்பல் உள்ளே வந்தது....

எல்லார் கண்ணிலுமே தேவநாதனுக்கு இப்படி ஆனதுமே கலங்கி தவித்தன..

யாழினி தாத்தா என்று  ஓடி வந்து அவரை கட்டி கொள்ள, அவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தவர்

“என்னடா சின்ன குட்டி.. இந்த தாத்தா போய் சேர்ந்துடுவார்னு பயந்துட்டியா? அவ்வளவு சீக்கிரம் நான் உங்களை எல்லாம் நிம்மதியா இருக்க விட்டுட்டு போய்டுவேனா? “ என்று  கண் சிமிட்டி குறும்பாக சிரித்தார்..

போங்க தாத்தா.. இப்படி எல்லாம் பேசாதிங்க.. நீங்க எப்பவும் எங்க கூட இருக்கணும்.. “ என்று தழுதழுக்க, நெடுமாறனும்

“ஆமாம் பா... இந்த ஜமீனுக்கே ஆலமரம் நீங்க... இப்படி எல்லாம் பேசக் கூடாது.. “ என்று அருகில் வந்து அமர்ந்து அவர் கையை பிடித்து கொண்டார்..

இத்தனை வருடங்கள் ஆனாலும் தன் மகன் இன்னும் தன்னை மதித்து தன்னை பெரிதாக கருதி இப்படி உருகுகிறானே என்று பெருமையாக இருந்தது அவருக்கு..

அமுதினி மட்டும் இன்னும் கோபம் குறையாமல் தள்ளி நின்று கொண்டுதான் இருந்தாள்.. அவள் அண்ணனை போல கொஞ்சம் ரோசக்காரி... அவர் பார்வை சுழல, அங்கு நிலவினியும் கண்ணில் வேதனையுடன் தாத்தாவை பாவமாக பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள்..

இதுக்குள்ளயே பாரிஜாதம்

“எல்லாம் அவ வந்த நேரம் தான் தேவநாதனுக்கு இப்படி ஆகி விட்டது.. என்று திட்டி தீர்த்திருந்தார் அந்த கலக்கம் கொஞ்சம் அவளுக்கு.. அதனால் தாத்தாவையே பாவமாக பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்..

மற்றவர்கள் எல்லாம் உடல் நலம் விசாரித்து பின் வெளியேற, நிலா எதுவும் பேசாமல் தலையை குனிந்த படி வெளியே சென்றாள்.. அவளுக்குள் ஒரு மாதிரி குற்ற உணர்வு தன்னால் தான் இப்படி ஆகிவிட்டதா என்று?

அவளுக்கு இந்த மூட நம்பிக்கையில் எல்லாம் நம்பிக்கை இல்லைதான்.. ஆனால் தேவநாதன் தாத்தா ஆரோக்கியம் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும் .. உடலை பேணுவதில் அவர் அவ்வளவு அக்கறை எடுத்து கொள்வார்.. அவள் தாத்தா சொல்லி இருக்கிறார்..

அப்படி இருக்க, அவள் இந்த ஜமீனுக்கு அடி எடுத்து வைத்து இரண்டே நாட்களில் அவரை படுக்க வைத்து விட்டது என்றால் ??? அப்பொழுது அவள் ராசிதான் அவளுடையை  துரதிர்ஷ்டம் தான் இந்த ஜமீனையும் பிடித்து கொண்டதோ..

பிறந்த உடனே தாயை முழுங்கியவள்... கொஞ்ச நாட்களில் தந்தையும் மறைந்து விட, எல்லாம் அவள் வந்த நேரம்தான் என எத்தனையோ பேர் அவளை வசை பாடி இருக்கிறார்கள்..

அப்பொழுதுதெல்லாம் மனதிற்குள் சுருக் என்று வலித்தாலும் கண்டு கொள்ளாமல் சென்று விடுவாள்.. ஆனால் இன்று பாரிஜாதம் ஜாடை சொல்லி சொன்னதும் அதை தொடர்ந்து அந்த வீட்டு பெண்கள் எல்லாருமே அவளையே குற்றவாளி மாதிரி பார்ப்பதும் கண்டு வேதனையாக இருந்தது...

அவர்கள் அப்படி ஜாடை சொல்லுகிறார்களே என வருத்தம் இல்லை... இந்த ஜமீனின் ஆணி வேராக இருக்கும் தேவநாதன் தாத்தாவுக்கு தன்னுடைய ராசியால் இப்படி ஆகிவிட்டதே என்று தான் கவலையாக இருந்தது..

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மைமாதிரி தெரிவதை போல ஒரு தவறான எண்ணத்தை பாரிஜாதம் திரும்ப திரும்ப சொல்ல அவளின் வெள்ளை மனமும் அப்படியும் இருக்குமோ என்று ஆராய ஆரம்பித்தது..

அதனாலேயே அவள் தாத்தாவின் அருகில் செல்லாமல் தள்ளி நின்று அவரை பார்த்தவள் மற்றவர்கள் கிளம்பவும் அவளும் ஒரு முறை அக்கறையோடு தேவநாதனை பார்த்துவிட்டு அப்புறம் வாயில் புறம் சென்றாள்..

அவளுக்கு முன்னதாக சென்றவர்கள் வெளியேறி இருக்க கடைசியாக சென்ற நிலவினியை பார்த்தவர்

"அம்மாடி நிலா.... இங்க கொஞ்சம் வாடா... “  என்று கையசைத்து அவளை கூப்பிட்டார் தேவநாதன்..

மற்றவர்கள் வெளியேறி சென்றிருந்ததால் அவர் அழைத்தது மற்றவர்களுக்கு கேட்காமல்  அவளுக்கு மட்டுமே கேட்டது..

உடனே முன்னே சென்றவர்களை ஒரு முறை பார்த்து விட்டு பின் வேகமாக திரும்பி அவர் அருகே வந்தவள்

“என்ன தாத்தா?  ஏதாவது வேணுமா ? டாக்டரை எதுவும் கூப்பிடணுமா? என்றாள் பதட்டத்துடன்...

அவரோ இருபக்கமும் தலையாட்டி இல்லை என்று சொல்லியவர்

“இப்படி வந்து உட்காருமா.. “  என்று படுக்கையின் அருகில் கையை காட்டினார்..

அவளும் அவர் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்தவள் தாத்தாவின் ஒரு கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு

“உங்களுக்கு ஒன்னும் இல்ல தாத்தா... சீக்கிரம் சரியாகி வருவீங்க.. “ என்று கண்களில் கலக்கத்துடன் அவர் கையை மெல்ல அழுத்தி கொடுத்தாள்..

“ஹா ஹா ஹா என்ன நிலா பொண்ணு.. இந்த கிழவன் அவ்வளவு சீக்கிரம் உங்களையெல்லாம் விட்டுட்டு போய்விட மாட்டான்... நீ தைரியமா இரு.. “  என்று  சிரித்தவர்

“அப்புறம் நான் இப்படி படுத்ததற்கு நீதான் காரணம் என்று எல்லாரும் உன்னை கை காட்டுகிறார்களாக்கும்? அதுதான் இந்த நிலா முகம் வாடிப்போச்சாக்கும்? “  என்று சிரித்தார்..

அதை கேட்டு அவளோ தலையை குனிந்து கொண்டாள் கண்களில் துளிர்த்த நீரை மறைக்க..

“அவங்க கிடக்கிறாங்க அம்மணி... நீ எதுவும் வருத்தப்படாத... எனக்கு இப்படி ஆனதுக்கு நீ ஒன்னும் காரணமில்லை.. எல்லாம் உன் புருஷன்தான் காரணம்.. “  என்று சிரித்தார்..

அதை கேட்டு திடுக்கிட்டவள்

“என்ன தாத்தா சொல்றீங்க?  அவர்  காரணமா? ஒன்னும் புரியலையே.. “  என்று யோசனையுடன் அவரை பார்த்தாள்..

“ஆமாம் ஆமாம் அவன் தான் காரணம்.. நான் இப்படி படுத்திருக்க அந்த தடிப்பய தான் காரணம்.. எல்லாம் அவனை இங்கேயே புடிச்சு வைக்கத்தான் இப்படி இல்லாத நெஞ்சுவலியை வரவழைத்தேன்.. “ என்று கண்சிமிட்டி நமட்டுச் சிரிப்பை சிரித்தார் தேவநாதன்..

அதைக்கண்டு அதிர்ந்து பின் திகைத்த நிலா

“என்ன தாத்தா சொல்றீங்க?  அப்போ உங்களுக்கு ஒன்னும் இல்லையா? “  என்றாள் ஆச்சர்யமாக கூடவே அவர் உடலை முழுவதுமாக ஆராய்ந்தவாறு....

“ஹா ஹா ஹா நான் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட் மருமவளே.. நாள் தவறாம உடற்பயிற்சி செய்து டயட்லயும் ஸ்ட்ரிக்ட் ஆ இருக்கிற எனக்கு போய் ஹார்ட் அட்டாக் எல்லாம் வருமா என்ன?

நான் இன்னும் நீண்ட நாட்கள் இருக்க போகிறேன் நிலா பொண்ணே..

102 நாட் அவுட் படம் பார்த்தியா? அதுல அமிதாப்பச்சன் அதிகம் வருஷம் வாழ்ந்து சாதனை செய்ய போறேனு சொல்வாரே...

அவரால முடியல.. ஆனால் நான் அதை செய்து காட்டப்போறேன்...

உலகிலயே அதிக வருடம் வாழ்ந்தவர் னு ரெக்கார்ட் செய்தவர் Jeanne Louise Calment. 122 வயசு வரைக்கும் வாழ்ந்திருக்காங்க... நான் அவங்களை விட ஒரு நாளாவது அதிகமா வாழ்ந்து அவங்க பண்ணின ரெக்கார்ட் ஐ முறியடிக்கணும்..

நீண்ட நாள் வாழ்ந்து சாதனை செய்தவர் இந்த ஜமீன்தார் தேவநாதன் என்று  எல்லாரும் மூக்குல விரல் வைக்கிற மாதிரி வரணும்.. அப்புறம் கின்னஸ்லயும் போடுவாங்களாம்.. அதனால நீ ஒன்னும் பயந்துக்காத நிலா மா..

நான் இப்படி வந்து படுத்ததெல்லாம் நீ வந்ததால் எல்லாம் ஒன்னும் இல்லை.. “  என்று கண் சிமிட்டி சிரித்தார்..

அவர் உற்சாகத்துடன் பேசுவதை கண்டதும் அவளுக்குள் உற்சாகம் தொற்றி கொள்ள,

"வாவ்.. சூப்பர் தாத்தா.. கண்டிப்பா நீங்க ரெக்கார்ட் ப்ரேக் பண்ணுவிங்க.. அப்புறம் நீங்க ஹிந்தி படம் எல்லாம் பார்ப்பிங்களா? உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? "  என்றாள் ஆச்சர்யமாக..

"ஏன் அம்மணி..? ஜமீன்தார் என்றதும் எழுத படிக்க தெரியாதவன்.. கை நாட்டுனு நினைச்சிட்டியாக்கும்.. என்னை பத்தி உன் தாத்தன் சொல்லலை..

நான் அந்த காலத்துலயே பி.ஏ இங்கிலிஸ் எடுத்து படிச்சு பட்டம் பெற்றவன்.. சமஸ்க்ருதமும் படிச்சிருக்கேன்.. ஹிந்தி நல்லாவே பேச வரும்..

"துமாரா நாம் க்யா ஹை? " என்று மீசையை பெருமையுடன் நீவி விட்டு கொண்டு கண் சிமிட்டி சிரித்தார்..

அவர் முகத்தில் இருந்த குறும்பை பார்த்து அவளாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. அவளும் களுக் என்று கிளுக்கி சிரித்தாள்..

அவளின் அந்த மலர்ந்த சிரிப்பையே ரசனையுடன் ரசித்து பார்த்தவர்

"நீ இப்படி சிரிச்சா நல்லா இருக்கு அம்மணி.. யார் என்ன சொன்னாலும் முகத்தை மட்டும் வாட விடாத.. எப்பவும் இதே மாதிரி தைர்யமா சிரிச்சுகிட்டே இருக்கோணும்.. " என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அதிரதன்..

அவனை கண்டதும் இருவரும் உடனே கப் பென்று அடக்கி கொண்டனர்... முகத்தை இருவரும் பாவமாக சோகமாக வைத்து கொண்டனர்..அதற்குமேல் தேவநாதன் ஒரு படி மேலெ சென்று உறங்குபவரை போல கண்ணை மூடி கொண்டார்..  

அறைக்கு அருகில் வரும்பொழுதே வெள்ளி சதங்கையை குலுக்கி போட்டார் போல கலகலவென்று ஒலித்த அவளின் சிரிப்பு அவன் செவியையும் தீண்டியது..

ஆனால் அறைக்கு உள்ளே வர, தான் கேட்டது பொய்யோ என்ற அளவில் அவள் முகத்தை பாவமாக வைத்திருக்க ஆனாலும் அவள் முன்பு  சிரித்ததின் அடையாளமாக கொஞ்சம் அவள் இதழில் சிரிப்பு ஒட்டி கொண்டிருக்க, அதை  கண்டு கொண்டவன் கூடவே அவள் கையில் இருந்த அலைபேசியையும் பார்த்தவன் அவள் அதில்தான் யாருடனோ பேசி சிரித்திருக்க வேண்டும் என்று  கணக்கிட்டவன்

"ஏய்.. என்ன இழிப்பு வேண்டி கிடக்கு...?  ஒழுங்கா தாத்தாவை பக்கத்தில் இருந்து பாத்துக்கோ.. மூணு வேளையும் கொட்டிகிட்டு படுத்து தூங்காம அவர் பக்கத்துல இருந்து பாத்துக்கோ..

வேளா வேளைக்கு மாத்திரை எடுத்து கொடு..நாங்கள் காலையில் வருகிறோம்..  " என்று உறுமியவன் தேவநாதனை ஒரு முறை பார்க்க அவரோ கண்ணை மூடி தூங்குபவரை போல பாவணை செய்தார்.

அவரை ஒரு முறை ஆராய்ந்துவிட்டு அவர் மேல் இருந்த போர்வையை இழுத்து விட்டு பின் அறைகதவை சாத்திவிட்டு சென்றான்..

அவன் சென்றதும் மெதுவாக கண்ணைத் திறந்தவர் நிலாவைப் பார்த்து

“எப்படி என் நடிப்பு? “  என்று புருவத்தை உயர்த்தினார்..

“போங்க தாத்தா.. இப்படி எல்லாம் ப்ராட் பண்ணுவிங்களா? இப்படி எல்லாம் அடுத்தவங்களை ஏமாற்றக் கூடாது.. “  என்று சிணுங்கினாள் பொய்யாக கோபத்தால்..  

“ஹா ஹா ஹா

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

 

என்று  வள்ளுவனே சொல்லியிருக்கிறான் அம்மணி..

அதே மாதிரி ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்.. பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும்.. உன் புருஷனை எங்க அடிச்சா எப்படி  ஆடுவான்  என்று  நல்லாவே தெரியும் அம்மணி.. அதான்.. ஆனாலும் உன் புருஷன் கொஞ்சம் முட்டா பயதான்..

எல்லா செக்கப்பும் முறையா செய்யற எனக்கு போய் ஹார்ட் அட்டாக் வருமா என்று  கொஞ்சம் கூட யோசிக்க தெரியலையே.. இவன் எல்லாம் பட்டணத்துல போய தனியா என்னத்த தொழில் பண்றானோ? " என்றார் நக்கலாக சிரித்தவாறு..

"அது ஒன்னும் முட்டாள்தனத்தால் இருக்காது தாத்தா.. உங்க மேல உங்க பேரனுக்கு இருக்கிற பாசம்.. அதுதான் உங்களுக்கு ஒன்னுன்ன உடனே எதையும் யோசிக்காமல் அவரை இங்க இழுத்து வந்திருக்கிறது.. அது ஒன்னும் முட்டாள்தனம் இல்லை..அவர் ஒன்னும் முட்டாள் இல்ல... " என்றாள் சற்று  கோபமாக மிடுக்குடன்...

அவளின் அந்த கோபத்தை வியப்புடன் பார்த்தவர்

"பரவாயில்லையே... என் மகனோட மருமவளுக்கு அவ புருஷன பத்தி சொன்னா இம்புட்டு கோபம் வருது... நல்லதுதான்...மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.. " என்று மீசையை தடவி குறும்பாக சிரித்தார்

உடனே அவளும் நாக்கை கடித்து கொண்டவள்

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை தாத்தா...”  என்று சிரித்து சமாளித்தவள்

“அப்புறம் ஒன்னும் இல்லாததுக்கு எதுக்கு தாத்தா ஐ.சி.யு ல எல்லாம் போய் படுத்துகிட்டிங்க.. எங்களை எல்லாம் இவ்வளவு நேரமா எப்படி தவிக்க விட்டிங்க? " என்றாள் சந்தேகமாக...

“ஹா ஹா ஹா.. செய்யற தப்பை சரியா செய்யோணும் நிலா பொண்ணே.. நான் பாட்டுக்கு நெஞ்சு வலினு சொல்லிட்டு ஹாயா படுத்திருந்தா உன் புருஷனுக்கு  சந்தேகம் வந்துடும்..

அவன் கொஞ்சம் என்ன மாதிரி புத்திசாலி... ஈசியா கண்டுபுடிச்சிடுவான்.. அதனால் தான் ஐ.சி.யு ல ட்ரீட்மென்ட்  போறமாதிரி கொஞ்சம் பயம் காட்டினேன்... டாக்டர் பையன் என் ஆளு..

என் மேல பாசமா இருப்பான்..  அதனால் நான் சொன்னதும் முதல்ல  கொஞ்சம் யோசித்தான்... அப்புறம் நம்ம வள்ளுவர் குரலை விளக்கி சொன்ன பின்னாடி மண்டைய ஆட்டிட்டான்..

எப்படியோ நான் போட்ட திட்டப்படி உன் புருசனை பட்டணத்திலிருந்து இழுத்துகிட்டு வந்துட்டேன்.. இனிமேல் அவனை இங்கயே பிடித்து வைப்பது உன் சாமர்த்தியம் அம்மணி..

நான் அன்னைக்கு சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா நிலா மா? சீக்கிரம் ஏதாவது செய்.. அவன ரொம்ப நாளைக்கு இப்படி ட்ராமா பண்ணி எல்லாம் புடிச்சு வைக்க முடியாது.. அதுக்குள்ள அவன் மனச மாத்திடு...

நான் இப்ப கொஞ்ச நேரம் கண்ண மூடி தூங்கறேன்.. நீயும் இப்படி படுத்து தூங்கு மா.. “ என்றவர் தன் பேரனை இங்கு இழுத்து வந்து விட்ட நிம்மதியில் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தார்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!