அழகான ராட்சசியே!!-25

 


அத்தியாயம்-25

காலை 7 மணிக்கே இரண்டு பேருந்துகள் அலுவலகத்தில் இருந்து  கிளம்புவதாக இருந்தது.. மகிழன் அதற்கு முன்னதாகவே அலுவலகத்தை அடைந்திருக்க, அஜய் மற்றும் ப்ரவீன் மகிழனுக்கு உதவுவதற்காக முன்னரே வந்து இருந்தனர்..

முன்னரே வந்தவர்கள் அங்கு இருந்த பெண்களிடம் கடலை போட்டு கொண்டிருக்க இவனை கண்டதும் அப்படியே ஆப் ஆகி போனார்கள்..

மகிழனும் சிரித்து கொண்டே அனைவருக்கும் காலை வணக்கத்தை  சொல்லியவாறு  வந்தவன்

“என்ன அஜய்... எல்லாரும்  வந்தாச்சா? “  என்றான்..

“வந்துகிட்டே இருக்காங்க தல.. வாட்ஸ்அப் குரூப்ல மெசேஜ் போட்டுட்டேன்.. எல்லாரையும் 7 மணிக்குள்ள இங்க அசெம்பிள் ஆக சொல்லி.. “ என்றான் அஜய்..

“குட்..”  என்றவன் மற்ற ஏற்பாடுகளையும் ஒரு முறை  சரி பார்த்தவன் முதல் உதவி பெட்டி, மற்றும் காலை உணவு பேருந்திலயே சாப்பிடுமாறு பேக் பண்ணி வரவைத்திருந்தனர்..

அதையெல்லாம்  இரண்டு பேருந்திலும்  ஏற்றி எல்லாம் தயார் நிலையில் வைக்க 7 மணி அளவில் கிட்ட தட்ட எல்லாருமே வந்து இருந்தனர்..

மகிழன் கண்களோ சந்தியாவை தேடியது.. அவள் இன்னும் வந்திருக்கவில்லை... தனியாக சென்று அவள் எண்ணிற்கு அழைக்க அவளோ இன்னும் அவன் எண்ணை  ப்ளாக் பண்ணி வைத்திருந்தாள்

“ஷிட்... “என்று  தரையை  காலால் உதைத்தவன் மீண்டும் பேருந்து நிற்கும் இடத்திற்கு வர, சந்தியா கேங் ம் பேருந்தின் அருகில் நின்று கொண்டு ஏதோ சீரியஸாக பேசி கொண்டிருந்தனர்.. ஆனால் சந்தியா மட்டும் மிஸ்ஸிங்...

அவர்கள் அருகில் சென்றவன்

என்ன அன்பு.. உங்க கேங் ல் எல்லாரும் வந்திட்டாங்களா? “ என்றான் சந்தியா பெயரை நேரடியாக சொல்லாமல்.

“ஆங்.. எல்லாரும் வந்தாச்சு மகிழன்.. இன்னும் சந்தியா மட்டும் வரலை.. போன் பண்ணினாலும் போனை எடுக்க மாட்டேங்கிறா ? “  என்று  கையை பிசைந்தாள் அன்பு...

“சரி அவங்க வீட்டுக்கு போன் பண்ணி கேளு..  அவ கிளம்பிட்டாளா னு.. “

“வந்து.. அவ வீட்டு நம்பர் எதுவும் இல்லை மகிழன்.. “

“வாட்? நீங்கள் எல்லாம் பிரண்ட்ஸ் தான.. எப்பவும் கூடவே சுத்திகிட்டு இருக்கீங்களே.. ஒவ்வொருத்தங்க வீட்டு நம்பரையும்  வாங்கி வச்சுக்க மாட்டிங்களா ? எதுவும் ஒரு எமர்ஜென்சினா எப்படி கான்டாக்ட்  பண்ணுவீங்களாம்..?  “ என்று எரிந்து விழுந்தான்...

அதை கேட்டு முழித்தனர் மற்றவர்கள்...

நேரம் ஆக அதற்கு மேல் காத்திருக்காமல் முதல் பேருந்தில் அசைன் பண்ணி இருந்தவர்கள்  எல்லாரையும் ஏற்றி அந்த பேருந்தை அனுப்பி வைத்தான் மகிழன்..

சந்தியாவுக்காக அடுத்த பேருந்தை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்தவன்  அவன் அடுத்த  பேருந்தில் வருவதாக சொல்லி நின்று  கொண்டு மனோ மற்றும் வினித் ஐ  முதல் பேருந்தில் அனுப்பி வைத்தான்...

நேரம் 7.30 ஐ தொட, சந்தியா இன்னும் வந்திருக்கவில்லை.. மகிழனுக்கு டென்ஷன் ஏறி கொண்டிருந்தது..

"இவள் வேண்டும் என்றே வராமல்  இருந்து விட்டாளோ ? "  என தோன்ற

"அன்பு.. சந்தியா வருவாளா?   இல்லையா? இல்லைனா நாம் கிளம்பலாம்.. “என்றான் கடுப்புடன்...

"எங்க கிட்ட வர்ரேனு தான் சொன்னா  மகிழன்... ஆனால் இப்ப என்னாச்சுனு தெரியலை.. இன்னும் ஒரு 5 நிமிசம் வெய்ட் பண்ணுங்களேன்.. வந்திடுவா.. “என்றாள் தயக்கத்துடன்..

"ஓகே.. லெட்ஸ் வெய்ட் பார் 5 மோர் மினிட்ஸ்.. “ என்றவன் கையை இறுக்கி மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு அந்த பேருந்தின் அருகில் நடந்து கொண்டிருந்தான்..

மணி 7.40 தாண்டியும் அவள் வராமல் போக,

"சரி.. இதுக்கு மேல் வெய்ட் பண்ண வேண்டாம்.. “என சொல்லி  பேருந்தை கிளப்ப சொன்னான்...

அன்பும் மற்றும் சந்தியா கேங் மற்றவர்களும்  சந்தியாவை திட்டி கொண்டே பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.. ஓட்டுனர்  பேருந்தை ஸ்டார்ட் பண்ணி நகர்த்த சிறிது தூரம் பேருந்து சென்றிருக்கும். எக்சிட் கேட் ஐ தாண்டும் முன்பே

"அண்ணா.. ஒரு நிமிசம் நிறுத்துங்க.. “என்ற மகிழன் அவசரமாக அந்த அலுவலகத்தின் என்ட்ரன்ஸ் ஐ பார்க்க அங்கு ஒரு பெண் ஸ்கூட்டியில் செக்யூரிட்டியிடம் தன் ஐ டி ஐ காட்டி கொண்டிருந்தாள்..

எக்சிட் கேட் தொலைவில் இருந்ததால், தொலைவில்  இருந்து பார்க்கையிலயே அது தன்னவள் என புரிந்து விட,

"அன்பு.. அது சந்தியா தான... நாம இங்க வெய்ட் பண்றோம்னு சொல்லி சீக்கிரம் அவளை வரச் சொல்.. “ என்றான் நிம்மதியுடன்..

அன்புக்கே ஆச்சரியம்..

"இவ்வளவு தொலைவில் இருந்து அங்கு இருப்பது சந்தியா என்று எப்படி கண்டு பிடித்தான்? ” என்று யோசித்தவாறே சந்தியா எண்ணிற்கு மீண்டும் அழைக்க இந்த  முறை அலைபேசியை எடுத்தவளிடம்

“ஏய்... எரும மாடு... சீக்கிரம் வாடி.. எல்லாரும் உனக்காக ஒரு மணி நேரமா காத்துகிட்டிருக்காங்க.. உன் ஓட்ட வண்டியை செக்யூரிட்டியிடம் கொடுத்துட்டு அப்படியே இந்த பக்கம் பஸ் நின்னுகிட்டிருக்கு பார்..  அங்க வா.. “என்று கத்தினாள் அன்பு...

"ஆங்... "  என்று  முழித்தவள் திரும்பி பார்க்க அங்கு ஒரு  பேருந்து நின்றிருக்க அன்பு  வெளியில் தலையை நீட்டி  கையை  நீட்டி  ஆட்டி கொண்டிருந்தாள்..

"அண்ணே .. இந்த  வண்டியை இப்படியே நிறுத்திடறேன். கொஞ்சம் அர்ஜென்ட்.. “என்று சொல்லி அருகில் இருந்த விசிட்டர் பார்க்கிங் லயே நிறுத்தி விட்டு தன் கைப்பையை எடுத்து கொண்டு வேகமாக ஓடி வந்தாள்...

மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தில்  ஏறவும் கால் இடறி விழப் போக, முதல் இருக்கையில் அமர்ந்து  இருந்த  மகிழன் மின்னலென எழுந்து அவள் கையை பிடித்து கொண்டான்...

ஒரு நொடி கீழ விழப்போறோம் என்று கண்ணை இறுக்கி மூடி கொண்டவள் கையை பிடித்து மேலும் தூக்கி பேருந்தின் உள்ளே இழுத்து  விட்டான்..

“பார்த்து வர மாட்ட.. இப்படித்தான் ஓடி வந்து ஏறுவியா? .. இந்நேரம் கீழ விழுந்திருந்தால் என்னாகி இருக்கும்? “என்று  அடிக் குரலில் சீறினான் மகிழன்.. 

அவளுக்கோ கண்ணை கட்டி தலை சுற்றி வந்தது.. ஆனாலும் சமாளித்து கொணடு மெல்ல அவனை பிடித்தவாறே உள்ளே வந்தவள் மகிழன் அமர்ந்து இருந்த இருக்கைக்கு பக்கவாட்டில் இருந்த  இருக்கையின் பின்னால்  சென்று அமர்ந்து கொண்டாள்...

அன்பும் அபர்ணாவும் அந்த இருக்கையில் அமர்ந்து இருக்க சில நொடிகள் தலையை சாய்த்து முன்னால் இருந்த   இருக்கையில் வைத்து  கொண்டாள்..

மகிழன் உடனே தண்ணீர் பாட்டிலை எடுத்து அன்புவிடம் கொடுத்து அவளுக்கு குடிக்க கொடுக்க சொன்னான்..

அன்பு ம் சந்தியாவிடம் அந்த பாட்டிலை கொடுத்து குடிக்க சொல்ல ,அதை குடித்ததும் கொஞ்சம் நார்மல் ஆனாள்..

அதன் பின் பேருந்தை  கிளப்ப சொல்லியவன் முன் இருக்கையில் அமர்ந்து தலையை இருக்கையில் பின்னால் சாய்த்து  கண்ணை இறுக்க மூடி கொண்டான்..

அவள் விழ இருந்த அந்த  நொடி அவன் உயிர்  வரை வலித்தது..

அவளுக்கு  எதுவும் அடிபட்டு அவள் வலியால் துடித்திருந்தால் என்னவாகி இருக்கும் என எண்ணியவனுக்கு உடல் எல்லாம் வேதனை பரவியது..

அதில் இருந்தே  அவன் அவளை எவ்வளவு நேசிக்கிறான் என புரிந்தது அவனுக்கு..

"அவளுக்கு ஒன்று  என்றால் அவனால் தாங்க முடியாது .. “ என தோன்ற அவள் மீதான காதல் மற்றும் அவள் தான் என்னவள் என்ற உறுதியும் மேலும் அதிகரித்தது....

இருக்கையில் அமர்ந்த சந்தியாவை அவள் தோழிகள் பிடித்து வாங்கி கொண்டிருந்தனர்..

“சாரி  டி.. அலார்ம் வச்சுட்டுத்தான் படுத்தேன்.. அது அடித்ததும்  அதை ஆப் பண்ணிட்டு மறுபடியும் தூங்கிட்டேன்.. அப்புறம் எங்க வீட்டு ருக்கு அலார்ம் வந்து என்னை அடித்து எழுப்ப, அப்பதான் எழுந்தேன்..பார்த்தால் மணி 7..

அப்புறம் அவசர அவசரமா கிளம்பி ஓடி வந்தேன்.. அதான் லேட் ஆகிடுச்சு.. “என்று மெல்ல ரகசியமாக சொல்ல அது தவறாமல மகிழன் காதிலும் விழுந்தது..

அதற்குள் தன்னை ஆசுவாசபடுத்தி சமாளித்திருந்தவன் சந்தியா சொன்னதை கேட்டதும் திடுக்கிட்டான்.. 7 மணிக்கு எழுந்து 7.50 க்கு அலுவலகம் வந்திருக்கிறாள் என்றால் எவ்வளவு வேகத்தில் வந்திருப்பாள் என்று புரிய உள்ளே பதறியது அவனுக்கு..

“முதலில் அவள் ஓட்ட வண்டியை புடுங்கி வைக்கணும்.. “ என்று முனகியவன் உதட்டில் தானாக புன்னகை மலர்ந்தது தன்னவளை நினைத்து..

"சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போல இருக்கு..இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்கா.. மகிழா உன் பாடு கஷ்டம் தான்.. “ என்று சொல்லி தனக்குள்ளே சிரித்து கொண்டான்..

பேருந்து நகரத்தை தாண்டி சிறிது தூரம் சென்றதும்,  மகிழன் காலை உணவு பொட்டலத்தை எடுத்து அனைவருக்கும் கொடுத்தான்... கலகலப்பாக எல்லாரும் சிரித்து பேசி உண்ண, சிறிது நேரம் கழித்து சாலை  ஓரத்தில் பேருந்தை  நிறுத்த சொல்லி ஓட்டுனரையும் உண்ண வைத்தான்..

சாப்பிட்ட பொட்டலத்தை யாரும் சன்னல் வழியாக வீச வேண்டாம் என்று  சொல்லி அதை  எல்லாம் சேகரித்து பெரிய ப்ளாஸ்டிக் கவரில் போட்டு டிஸ்போஸ் பண்ணுவதற்காக வைத்தான் மகிழன்..

அதை கண்ட சந்தியா  உள்ளுக்குள் அவனை மெச்சி கொண்டாள்.. பேருந்து அங்கயே சிறிது நேரம் நிற்க எல்லாரும் கிழிறங்கி அங்கிருந்த இயற்கை காட்சியை ரசித்தவாறு செல்ஃபி எடுத்து கொண்டனர்...

பேருந்தின் உள்ளே அமர்ந்து இருந்த மகிழன் எதேச்சையாக திரும்ப அங்கு சந்தியா கேங் செல்ஃபியில் மும்முரமாக இருந்தனர்.. அப்பொழுது தான் தன்னவளை முழுவதுமாக கண்டான் மகிழன்..

காலையில் அவள் அவசரமாக ஓடி வந்து ஏற, அதுவும் கீழ விழப் போய் அவன் தூக்கி விட அதில் அவளை சரியாக  கவனிக்காமல் விட்டவன் இப்பொழுது செல்ஃபிக்காக  போஸ் கொடுத்து கொண்டிருப்பவளை பார்க்க ஒரு நொடி அவன் இதயமே நின்று விட்டது..

எப்பொழுதும் டாப்ஸ் அன்ட் லெக்கின்ஸ் ல்  வருபவள் இன்று ஜீன்ஸ் அன்ட் டீ சர்ட் ல் வந்திருந்தாள்..

அவளை இதுவரை டீசர்ட்ல் பார்த்ததில்லை மகிழன்...

அழகான பிங் நிற டீசர்ட்  அவள் பெண்மையை இன்னும் அழகாக எடுத்து காட்ட ஆபாசம் இல்லாத ஆனால் தன்னவள் என்ற உரிமையில் அவளை  ரசித்து பார்க்க அவனுக்குள் ஏதோ புரண்டது...

இதுவரை  அவளை ஒரு வாயாடி, கேடி, ராட்சசியாக பார்த்திருந்தவன் இன்று முழு குமரியாக காண அவன் உள்ளே சிலிர்த்தது...

அவளை அப்படியே இறுக்கி அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளே..

ஆனால் அதற்கு முதலில் உன் காதலை அவள் ஏற்று கொள்ள வேண்டும் என மனஸ் அவன் தலையில் ஒரு குட்டு வைக்க, உடனே அவன் முகம் வாடிவிட்டது..

ஆனாலும் தன் முயற்சியை கைவிடக் கூடாது என தன்னைத் தானே தேற்றி கொண்டான் மகிழன்..

தன் வட்டத்தினருடன் அரட்டை அடித்தாலும் சந்தியாவின் கண்கள் அடிக்கடி மகிழனிடமே வந்து சென்றது..

எல்லாரும் கீழ இறங்கி ஜாலியாக சிரித்து பேசி கொண்டிருக்க அவன் மட்டும் பேருந்திலயே அமர்ந்து  இருக்க கஷ்டமாக இருந்தது அவளுக்கு..

“ஒரு வேளை எனக்காக ரொம்ப ஃபீல் பண்றானோ? “ என்று இருந்தது சந்தியாவுக்கு ..

அதே சமயம் அவள் மீது படிந்த அவனின் ரசனையான பார்வையை கண்டு கொண்டவளுக்கு  உள்ளே படபடப்பாக இருந்தது..

“இவன் ஏன் என்னை பார்த்து இப்படி லுக் விடறான்? “ என்று யோசித்தவள் உடனே குனிந்து  தன் தோற்றத்தை  கண்டாள்..அவனின் பார்வைக்கான அர்த்தம் இப்பொழுது புரிந்தது..

இதுவரை எந்த ஆடையையும் அசால்ட்டாக அணிந்து வருபவள் இன்று மகிழன் அவளை ரசித்து பார்க்கவும்  அந்த ஆடையில் ஏனோ ஒரு மாதிரி இருந்தது...அவன் பார்வையின் வீச்சில், அவள் கன்னங்கள் தானாக சிவக்க ஆரம்பித்தன...

“சே.. இவன் வருவான் னு  நினைக்கவே இல்லையே.. நல்ல ஒரு ட்ரெஸ் ஆ போட்டுகிட்டு வந்திருக்கலாம்.. எப்படி பார்த்து வைக்கிறான் பார்..

ஏதோ காணாததை கண்ட மாதிரி...இல்ல  பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி.. “

என்று அவனை உள்ளுக்குள் திட்டிகொண்டே தன் கன்ன சிவப்பை மறைத்து கொண்டு அவனை ஓரக்கண்ணால்  பார்க்க, அதே நேரம் மகிழனும் இன்னும்  அவளையேதான் ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான்..

அவள் தன்னை  பார்ப்பது தெரியவும் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தவாறு  கையால் ஜாடை  காட்டி “சூப்பர்..  செமயா இருக்க..”   என்று ஆக்சன் செய்தான்..

அவன் ஆக்சனை புரிந்து கொண்டவள் ஒற்றை விரலை நீட்டி

“கொன்னுடுவேன்.. “ என்று சைகை செய்ய, மகிழனோ மீண்டும் கண் சிமிட்டி சிரித்தவாறு உதடு குவித்து தன் முத்தத்தை காற்றில் பறக்க விட்டான்..

அதில் இன்னும்  கன்னம் சிவக்க அவனை முறைத்து விட்டு  தன் பார்வையை திருப்பி கொண்டாள் சந்தியா..

மகிழனும் சிரித்து கொண்டே பின் நேரம் ஆவதை உணர்ந்து தன் கையில் இருந்த விசிலால் ஊதி

“கைஸ்.. நேரம் ஆகுது.. எல்லாரும் பஸ்க்கு வாங்க.. கிளம்பலாம்.. “என்று சத்தமாக சொல்ல  அனைவரும் வந்து பேருந்தில் ஏறி அமர்ந்தனர்..

வர்கள் செல்ல வேண்டிய அந்த ரிசார்ட் ஐ அடைய  இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதால் ஒவ்வொருவரும் தங்கள் கேங் உடன் அரட்டை அடித்து கொண்டு வந்தனர்...

மகிழன் காதில் இயர்போனை மாட்டி கொண்டு பாடலை கேட்டவாறு சன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான்..ஆனாலும் அவன் பார்வை அடிக்கடி சந்தியாவிடம் சென்று வந்தது..

அவளோ இவனை கண்டு கொள்ளாமல் தன் வட்டத்தினருடன் அரட்டை அடிக்கும் ஜோதியில் ஜக்கியமாகி போனாள்..

“ராட்சசி... கொஞ்சம் கூட என்னை கண்டுக்கவே மாட்டேங்கிறாளே.. ஒரு வேளை நான் நினைப்பதை போல அவளுக்கு என் மேல் எந்த ஒரு ஃபீல் ம் இல்லையா? இல்லை அவளையே மறைத்து கொள்கிறாளா? “ என்று மீண்டும் ஏதேதோ யோசித்தவாறு அமர்ந்து இருந்தான்...

சிறிது நேரம் கழித்து எல்லாரும் சில விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்தனர்.. எல்லாரும் அவரவர் குழுவினருடன் ஏதோ விளையாண்டு கொண்டு வர, மகிழன் மட்டும் அந்த ஓட்டுனருடன் உரையாடிய படியே வெளியில் வேடிக்கை பார்த்து வந்தான்..

திடீரென்று “செந்தூரப்பூவே செந்தூரப்பூவே....  என் மன்னன் எங்கே.. “ என்று  சந்தியாவின் அலைபேசி ஒலிக்க தன் கைப்பையை திறந்து அந்த அலைபேசியை அவசரமாக எடுத்தாள் சந்தியா...

எல்லாரும் திரும்பி  அவளையே பார்த்து நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டனர்..

மகிழனும் ஆர்வமாக அவளையே பார்த்தான் இந்த பாட்டை போய் ரிங் டோனா வச்சிருக்காளே என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்..

அஜய் உடன் அமர்ந்து இருந்த கதிரேசன்

“என்ன சந்தி? .நீயும் இரண்டு வருடமா  தேடி கிட்டிருக்க.. இன்னுமா உன் மன்னன் கிடைக்கலை..“ என்று சிரித்தான்..

ஏற்கனவே எல்லாரும் அவளை பார்த்து சிரிக்கவும் அதுவும் மகிழன் குறும்பாக சிரித்ததை கண்டதும் கடுப்பாகி இருந்தவள் கதிரேசன் அவளை கிண்டல் பண்ணவும் இன்னும் சூடானவள்

“டேய் காக்கா.. உன் பாடிகார்ட் பக்கத்துல இருக்கான் னு ரொம்ப துள்ளாத.. தனியா மாட்டுன தொலஞ்ச.. “ என்று அஜயை ஒரு பார்வை பார்த்து விட்டு கதிரேசனை பார்த்து  முறைத்தாள் சந்தியா...

“ஹீ ஹீ ஹீ  நோ டென்ஷன் சந்தி... ஜஸ்ட் ஃபார் ஃபன்.. “ என்று சமாளித்தான் கதிர்..

“ஹ்ம்ம்ம் அது... அந்த பயம் இருக்கட்டும்.. “ என்று விரல் நீட்டி மிரட்டியவள் அந்த அழைப்பை ஏற்று பேசி விட்டு அது கிரெடிட் கார்ட் க்கான மார்க்கெட்டிங் கால் ஆகி போக, கடுப்புடன் அந்த அழைப்பை துண்டித்து தன் கைப்பைக்குள் வைத்தவள் மீண்டும் தன் நண்பர்களுடன்  அரட்டையை தொடர்ந்தாள்.

அனைவரும் எல்லா கேம் ஐயும் ஆடி முடிக்க அரட்டையும் முடிந்திருக்க, எல்லாரும் சேர்ந்து  அந்தாக்சரி விளையாடலாம் என சிலர் சொல்ல, எல்லாரும் ஓ வென்று கத்தி ஆர்பரித்தனர்..

ஆண்கள் ஒரு குழுவாகவும் பெண்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து பேருந்தில் இடம் மாறி அமர்ந்தனர்..மகிழனையும் அழைக்க, அவன் வர மறுத்தான்.. உடனே  அஜய் எழுந்து சென்று

“சும்மா வாங்க தல.. ஒரு என்ஜாய்மென்ட் தான.. எப்ப பார்..வேலை.. வேலை னு வேலையை பற்றியே யோசிச்சுகிட்டு இருக்காதிங்க.. இன்னைக்கு ஒரு நாள் எங்களோட ஜாலியா இருங்க.. “ என்று சொல்லி  அவனை கை பிடித்து இழுத்து வந்தான்..

மகிழனும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் எழுந்து பின்னால் வந்து  அவர்களுடன் அமர்ந்து கொள்ள, அந்தாக்சரியை ஆரம்பிக்க, இரண்டு பக்கமும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல்  நிறைய திரைப்பட பாடல்களை  பாடினர்..

சிறிது நேரத்தில் பெண்கள் குழுவினர்க்கு ஜா என்ற எழுத்தில் வர, உடனே அன்பு

ஜானி ஜானி யெஸ் பாப்பா.. ஈட்டிங் சுகர் நோ பாப்பா.. “என்ற பாடலை பாட

“ஹோய் வம்பு... இது சினிமா பாட்டு இல்லையே..  எல்.கே.ஜி குழந்தை பாடற ரைம்ஸ்.. இதெல்லாம் ஒத்துக்க முடியாது..” என்றான் ப்ரவீன்..

“ஆங்.. ரூல்ஸ் படி பாட்டுதான பாடணும்..சினிமா பாட்டு மட்டும் தான்  னு சொல்லலையே.. அதான் நானும் பாடினேன்.. அஸ் பர் தி ரிகுயர்மென்ட், இதுவும்  கரெக்ட் தான்.. “ என்று சிணுங்கினாள் அன்பு..

“ஓகே கைஸ்.. அப்ப நாமளும் ரைம்ஸ் எல்லாம் பாடலம். நீங்க சின்ன வயசுல படிச்ச எல்லா ரைம்ஸ் ஐயும்  நியாபகம்  படுத்திக்கங்க.. ரெடி ஸ்டார்ட்.. “ என்று அஜய் சிரிக்க,  அடுத்து சிறுவயதில் படித்த எல்லா ரைம்ஸ் ம் இரு அணியினரிடம்  வலம் வந்தது...

இரு அணியினருமே ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காமல் பாடலை பாட ஓரளவுக்கு ரைம்ஸ் ஐயும் சேர்த்து எல்லா பாடலுமே முடிந்திருக்க, ஆண்கள் அணியினருக்கு எ என்ற எழுதில் முடிய அனைவரும் முழித்தனர்...

அதை கண்டு பெண்கள் குழுவினர் ஓ வென்று  கத்த, அதற்குள் இதுவரை அமைதியாக அங்கு நடப்பவற்றை பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்த மகிழன் திடீரென்று பாட ஆரம்பித்தான்

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ ??   என ஆரம்பிக்க

 

“தல.. அது ஏற்கனவே பிறந்தவள் இவளோ தான.... நீங்க என்ன எவளோ னு மாத்தி பாடறிங்க. என்றான் தன் தலையை சொரிந்தவாறு அருகில் அமர்ந்து இருந்த மயில்..

உடனே ப்ரவின்

“டேய் தம்பி மயில்வாகனம்.... நம்ம தல இன்னும் அவருடைய  அவளை தேடிகிட்டிருக்கார் டா.. அதான் பாட்டை மாத்தி பாடுறார்... நீங்க பாடுங்க தல.. “ என்றான் சிரித்தவாறு..

மகிழனும் மெல்ல வெட்கபட்டு  அந்த பாடலை பாட ஆரம்பித்தான்...

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ ??

இதயத்தை கயிறு கட்டி இழுப்பவள் இவளோ?

ஒளி சிந்தும் இரு கண்கள்

உயிர் வாங்கும் சிறு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…

அது என்னென்று அறியேனடி...

 

அவனுடை வசீகர குரலுக்கு அவன் அனுபவித்து பாட எல்லாருமே கை தட்டி ஆரவரித்தனர்..அவனுடைய ஃபேவரைட் பாடல் என்பதால் தன்னை மறந்து முழு பாடலையும் பாடி முடித்தான்.. 

அவன் முடித்ததும்

“வாவ்.. சூப்பர் தல..செமயா இருந்தது.. உங்க வாய்ஸ் சூப்பர்.. சான்ஸே இல்ல..  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா  சூப்பரா பாடி கலக்கிட்டிங்க..நம்ம அணியின் மானத்தை காப்பாத்திட்டிங்க.. ” என்று சிரித்த அஜய்

“ஹாய் கேர்ள்ஸ்.. அடுத்து நீங்க பாட வேண்டியது  ஓ அல்லது உ என ஆரம்பிங்க..” என்றான் பெண்கள் பக்கம் பார்த்து...

அந்த எழுக்களில் ஏற்கனவே எல்லா பாடலும் முடிந்து போயிருக்க, இப்பொழுது பெண்கள் குழுவினர் முழித்தனர்..

உடனே ஆண்கள் பக்கம் இருந்து ஓ வென்று கத்த ஆரம்பிக்க, அதில் பொங்கி எழுந்த சந்தியா உடனே

“உனக்கென உனக்கென பிறந்தேனே.. “ என்று பாட ஆரம்பித்தவள் உடனே சற்றுமுன் மகிழன் எனக்கென ஏற்கனவே பிறந்தவள் எவளோ?  என்று பாடி இருக்க, அவனுக்கு பதில் சொல்லும் விதமாக வந்துவிட்டதை உணர்ந்தவள் உதட்டை கடித்து கொண்டு  பாதியில் நிறுத்தி கொண்டாள்..

அதை  கண்ட அவள் குழ்வினர்

“ஹே... சந்தியா. சூப்பர் டீ.. பாடு பாடு.. அப்பதான் நம்ம டீம் ஜெயிக்கும்.. விட்டுடாத பாடு.. “ என வற்புறுத்த அவளும் வேறு வழியில்லாமல் அந்த பாடலை தொடர்ந்து பாடினாள்..

உனக்கென உனக்கென பிறந்தேனே..

உயிரென உணர்வென கலந்தேனே...

இதயத்தை இதயத்தில் இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே !!!

 

என்று பாடிக் கொண்டே ஓரப் பார்வையில் மகிழனை பார்க்க அவனோ  அசந்து போய் அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்..

அவன் பார்வையில் இருந்த ஏதோ இன்று அவளை புரட்டி போட, வெட்கத்துடன் அந்த பாடலை பாடி முடிக்க, எல்லாரும் கை தட்டி ஆரவரித்தனர் சந்தியாவை புகழ்ந்தவாறு..

அதற்கு மேல் வந்த எழுத்திற்கு ஆண்கள் முழிக்க, இறுதியில் பெண்கள் அணியினர்  வெற்றி பெற்றதாக அறிவிக்க, அந்த பேருந்தே  அதிர்ந்தது.

பெண்கள் அணியினர் எல்லாரும் எழுந்து  உற்சாகமாக கை தட்டி டான்ஸ் ஆடி ஆண்கள் குழுவினரை  பார்த்து பழிப்பு காட்டி லூஸர்.. லூஸர்.. லூஸர்.. என கத்தி  ஆர்பரித்தனர்....

அவர்களை முறைத்த  அஜய்

“போங்கடீ.. என்னமோ பெரிய இன்டர்நேஷனல் கேம் ல ஜெயிச்சிட்ட மாதிரி பீத்திகிட்டு ஆடறாளுங்க..” என்று முகத்தை நொடித்தான்..

ஓரளவுக்கு பெண்களின் ஆர்ப்பாட்டம் அடங்க, மகிழன் அருகில் அமர்ந்து இருந்த  அஜய் ம்  ப்ரவீன் ம் மகிழனை பார்த்து

“தல...  உங்க வாய்ஸ் செமயா இருந்தது.. எங்களுக்காக இன்னொரு பாட்டு பாடுங்களேன்.. ப்ளீஸ்.. “  என்க, பெண்கள்  அணியில் இருந்த பெண்களும் மற்ற அனைவருமே

“யெஸ் தல.. வி வான்ட் எ சாங்.. தல... தல...  தல... “ என்று கத்த

“டேய்..  எனக்கு பாட வராது.. என் குரல் நல்லா இருக்காது...என்னை விடுங்கடா.. “ என்றான் மகிழன் வெட்கத்துடன்..

“ஆங்.. அத நாங்க சொல்லணும்.. உங்களுக்கு இருக்கிற குரல்லயே பாடுங்க. அது உன்னி  கிருஷ்ணன் குரலா இல்லாமல் காக்கா குரலா இருந்தாலும் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்....ப்ளீஸ் பாடுங்க தல.. ”

என்று காட்டாய படுத்த அவனும் வேற வழி இல்லாமல் தன் தொண்டையை செருமி கொண்டு பாட ஆரம்பித்தான்..

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...

உன் காதலன் நான் தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் !!!

 

பூக்களில் உன்னால் சத்தம்...

அடி...  மௌனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்?

இதைத் தாங்குமா என் நெஞ்சம் ?

 

“ என்று தன் கண்களை மூடி கொண்டு தன்னவளை கண் முன்னே நிறுத்தி அவளின் காதலை யாசித்து உருகி பாடினான் மகிழன்..

அவனின் அந்த வசீகர குரலுக்கு அனைவருமே அமைதியாகி விட,  மெய் மறந்து அவன் பாடுவதையே ரசித்திருந்தனர்..

அவன் உருகி பாடும் சில இடங்களில் மனதை பிசைந்தது அனைவருக்கும்...

அவனுமே அந்த பாடலை  அனுபவித்து ரசித்து தன்னவளுக்காக பாடி முடிக்க, சில நொடிகள் பின் ட்ராப் சைலன்ட் ஆக இருந்தது அந்த பேருந்தில்..

அனைவர் மனதிலுமே ஏதோ ஒரு பாரம் அழுத்துவதை போல இருந்தது..

மகிழனுக்கே கண்ணோரம் சிறு நீர் துளிகள் திரண்டிருந்தது அவனையும் அறியாமல்.. அவசரமாக அதை உள்ளிழுத்து கொண்டு புன்னகைத்தான்..  

சில நொடிகளில் அனைவரும் சுய நினைவுக்கு வர, அனைவருமே பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவரித்தனர்...

“வாவ்... செம சாங் தல... அப்படியே எங்களுடைய மனதை பிசைந்து விட்டது.. என்ன ஒரு குரல் !!  என்ன ஒரு ஃபீலிங் !!.. சான்ஸ்லெஸ்.. “என்று ப்ரவீன் மகிழன் கை பற்றி குலுக்கினான்..

பெண்களும் அதை  ஆமோதித்து அவனை வாழ்த்த சந்தியாவுக்குத்தான் இன்னும் கஷ்டமாக இருந்தது..

தன்னை நினைத்துத்தான் அவன் பாடினான் என புரிய அவளுக்குமே மனதை பிசைந்தது..

அதுவும் அவன் குரலில் இருந்த ஏக்கம், தவிப்பு, தான் அவனை நிராகரித்ததால் வந்த வேதனை என அத்தனையும் குழைத்து அவன் உருகி பாடி இருக்க, அந்த நொடியே ஓடிப்போய் அவனை இறுக்கி கட்டி கொண்டு அவன் வேதனையை போக்க  துடித்தது அவள் உள்ளே..   

“உண்மையிலயே என்னை இந்த அளவுக்கா லவ் பண்றான் ? “  என்று முதல் முறையாக தன் ஈகோவை விட்டு யோசிக்க ஆரம்பித்தாள் சந்தியா..

அவளை இன்னும் கொஞ்சம் யோசிக்க விட்டிருந்தாள் அவள் ஆழ்மனம் புரிந்திருக்குமோ..??

அதற்குள் அஜய் குறுக்கிட்டு

“தல.. நீங்க இப்படி உருகி பாடினதை  பார்த்தால் நீங்க யாரிடமோ புரபோஸ் பண்ணி அத ஏத்துக்காத மாதிரி தோணுதே..??. நீங்க புரபோஸ் பண்ணியும் உங்க காதலை ஏத்துக்காத அந்த லூசு யார் தல?..

பெயரை மட்டும் சொல்லுங்க.. இப்பயே போய் தூக்கிட்டு வந்து உங்க காலடியில போடறோம்... “என்று வீர வசனம் பேசினான்...

உடனே மகிழன் கண்கள் தானாக சந்தியா பக்கம் செல்ல மற்றவர்கள் அறியும் முன்னே பார்வையை மாற்றி கொண்டான்.. ஆனால்  அஜய் அதை கண்டு கொண்டான்..

“இவர் எதுக்கு இந்த ராட்சசியை பார்க்கறார்? .. ஒரு வேளை இவள் தான் தல தேடறவளோ? சே.. சே.. இவள பத்தி தெரிஞ்சே தல தானா போய் தன் தலையை கொடுத்து மாட்ட மாட்டார்..

கன்டிப்பா அப்படி ஒரு பெரிய தப்பை பண்ண மாட்டார்.. அது வேற யாராவது தான் இருக்கும்.. “ என்று சமாதானம் ஆனவன் விடாமல்

“சொல்லுங்க தல.. யார் அந்த லூசு.. இடியட், ஸ்டுப்பிட்,  அன்லக்கி கேர்ள்..? ” என்று சொல்லி திட்ட உடனே பொங்கி எழுந்த  சந்தியா அவனை பார்த்து முறைத்தாள்

“ஆத்தி.. இவ எதுக்கு இப்ப என்னை முறைக்கிறா? “ என்று  யோசிக்கும் முன்னே

“டேய்.. ஆச்சி (அஜய் உடைய நிக் நேம் 😊 ) .. உன் தல என்ன பெரிய பருப்பா..?  அவர் புரபோஸ் பண்ணினா அப்படியே பொண்ணுங்க எல்லாம் அவர் காலடியில விழுந்திடணுமா? “ என்று முறைத்தாள்..

ஆனால் அதில் அஜய்க்கு ரோஷம் வந்துவிட,

“பின்ன..  நம்ம தல அழகுக்கும் அறிவுக்கும் ஹேன்ட்சம் க்கும் எத்தனை பொண்ணுங்க க்யூல நிக்கறாங்க தெரியுமா? நம்ம ஆபிஸே அவர் கண் பார்வைக்காக அவர்  பின்னாடி தவம் இருக்கு..

அவ்வளவு ஏன் ?  ஹே கேர்ள்ஸ்.. நம்ம தல மட்டும் உங்க கிட்ட புரபோஸ் பண்ணினா நீங்க என்ன செய்வீங்க? “  என்றான் பெண்கள் பக்கம் பார்த்து..

“இது என்ன கேள்வி அஜய் ?.. அடுத்த நொடியே கல்யாணம் ஆகாட்டியும் பரவாயில்லைனு குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவோம்.. என்ன தல ரெடியா? “ என்று  கிண்டல் அடித்து சிரிக்க, மகிழனோ அஜய் ஐ முறைத்தான்..

அதே நேரம் சந்தியா அந்த பொண்ணுங்களை பார்த்து முறைத்து

“சீ... கருமம்.. அடங்குங்க டீ.. “ என்று முறைத்தாள்..

“ஹோய்.. சந்தி.. பார்த்தியா.. எங்க தலயோட பவரை..?  இப்ப ஒத்துக்கறியா? நான் சொன்னது உண்மைதான்  னு? “ என்று  புருவங்களை உயர்த்தினான் நக்கலாக சிரித்தவாறு..

“ரொம்பத்தான் பீத்திக்காத.. அப்ப ஏன் உங்க தல இன்னும் கல்யாணம் ஆகாம சாமியாரா  சுத்திகிட்டு இருக்காராம்? “ என்று  முகத்தை நொடித்தாள் சந்தியா..

“ஹா ஹா ஹா அவருக்கு ஏத்த ஏஞ்சலை தேடிகிட்டிருக்கார்.. அவருடைய ஏஞ்சல் நம்ம ஆபிஸ் ஏன் நம்ம சென்னையிலயே இல்லையாம்..எல்லாம் வத்தலும் தொத்தலுமா இருக்காம்.... “ என்று அவன்  முடிக்கும்  முன்னே

“ஹோய்.... “ என மொத்த பொண்ணுங்களும் கையை மடக்கி அவன் முகத்தில்  குத்தும் ஆக்சனில் அவனை நோக்கி வர.

“ஐயோ.. .சாரி கேர்ள்ஸ்.. அவசரபட்டு டங் ஸ்லிப்பிங்.. டெலிட் பண்ணிடுங்க.. நீங்க எல்லாம் பிரின்ஸஸ்.. தேவதைங்க...” என்றவன் “உங்க அப்பன்களுக்கு மட்டும்.. “ என்று தனக்குள் சொல்லி கொண்டான்..

“ஆனால் லுக் கேர்ள்ஸ்.. நம்ம தல வேற ரேஞ்ச்.. அவருக்கு நீங்க எல்லாம் செட் ஆக மாட்டிங்க..  அதான் அவர்  நேஷனல் இல்ல  இன்டர்நேஷனல் லெவல் ல தேடிகிட்டிருக்கார்..

அதான் கொஞ்சம் லேட் ஆகுது.. லேட் ஆ கண்டுபுடிச்சாலும் லேட்டஸ்ட் ஆ கண்டுபுடிச்சிடுவார் பார்..” என்று சிரித்தான் அஜய்...

“டேய் அஜய்.. போதும் என்ன வச்சு காமெடி பண்ணினது.. இதோட நிறுத்திக்க.. எல்லாம் “ என்று முறைத்தான் மகிழன்..

“அதெப்படி தல அப்படி விட முடியும்.. இது கிரேட் இன்ஸல்ட்.. இதுக்குனே நீங்க தீயா வேலை செய்யறீங்க.. அண்ணிய தேடி கண்டு புடிக்கறீங்க.. அடுத்த முகூர்த்தத்துலயே தாலிய கட்டறீங்க... “ என்றான் அஜய் பொங்கி எழுந்தவனாய்..

“ஆமா.. தல.. நீங்க பிஸியா இருந்தா தம்பிங்க நாங்க இருக்கோம்..  தீயா வேலை செய்யறோம் தல.. உங்களுக்கு ஏத்த பொண்ணை கண்டு புடிக்கறோம். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை முடிக்கறோம்.. இந்த சந்தி வாயை அடைக்கிறோம்.. “ என்றான் ப்ரவீன்..

“டேய்.. என்னை ஏன்டா இதுல இழுக்கறீங்க..?  போதும் என்னை வச்சு காமெடி பண்ணினது.. “ என்று அந்த டாபிக் ஐ மகிழன் முடிக்க முயல, அவனுங்களோ விடாமல்

“அதெல்லாம் முடியாது தல..போட்டியினு வந்திட்டா பின் வாங்க கூடாது..நம்ம தலைவரே  சொல்லி இருக்கார்...

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம் ...

 

என்று ரஜினி ஸ்டைலில் தலையை கையால் தடவி சிலிர்த்து கொண்டனர்..  

“அதனால இப்ப நாங்க  சொன்னதுக்கு டீலா?  நோ டீலா..? ” என்றான் ப்ரவின் கட்டை விரலை மேலும் கீழும்  ஆட்டி காட்டி...

அதில் கொஞ்சம் சீரியஸான மகிழனும் 

“ஓகே டா.. தம்பிங்களா.. நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்கறதால அடுத்த முகூர்த்தத்திலயே என் கல்யாணத்த முடிக்கிற மாதிரி பார்க்கறேன்.. எழுதி வச்சுக்கங்க.. “என்றான் சந்தியாவை ஓர பார்வை பார்த்தவாறு..

அவளோ அவன் பார்வையை கண்டு கொண்டு உதட்டை சுளித்து  அவனை பார்த்து முறைத்து அழகு காட்டினாள்..

“சூப்பர் தல.. இத..இத... இத.. இதத்தான் எதிர்பார்த்தோம்..  ஹோய் சந்தி.. குறிச்சு வச்சுக்க.. அடுத்த முகூர்த்தத்துல எங்க தல ஓட கல்யாணம். வந்து பந்தியில உட்கார்ந்து  மூக்கு புடிக்க நல்லா கொட்டிகிட்டு போ.. “ என்று சிரித்தான் அஜய்..

“டேய் ஆச்சி..  ரொம்ப ஆடாத.. அடங்கு டா.. பார்க்கலாம் உங்க தல தொல  எப்படி கல்யாணம் பண்றார் னு.. “என்று தலையை சிலுப்பி கொண்டாள் சந்தியா..

அதை கண்டு அதிர்ந்து போனான் மகிழன்...

“அடப்பாவிங்களா.. இப்படி அவளை சீண்டி விட்டு  கொஞ்சம் இறங்கி வந்தவளையும் மலை ஏற வச்சுட்டீங்களே.. ஓரளவுக்கு ஓடி கிட்டிருந்த என் காதல் காவியத்துல மொத்தமா சங்கு ஊதிட்டானுங்களே..  நல்லா  வருவீங்க டா.. “என்று மனதுக்குள் புலம்பினான் மகிழன்..

“ஹ்ம்ம்ம் பார்க்கத்தான போற.. “ என்று அஜய் சிரித்தவாறு எழுந்து பின்னால் சென்று அமர்ந்து கொண்டான்...

சந்தியா வோ  உள்ளே கொதிக்க ஆரம்பித்தாள்...

“எவ்வளவு திமிர் அந்த அஜய்க்கு? என்கிட்டயே சவால் விடறான்.. பத்தாதற்கு அந்த மங்கியும் அவனுடன் சேர்ந்து என் கிட்ட சவால் விடறான்..அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணி காட்டறானாம்.. பார்க்கறேன்.. எப்படி அவன் கல்யாணம் பண்றானு.. “ என்று உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்தாள்...

அப்பொழுது அன்பு எதுவோ  அவளிடம் கேட்க தன்னை மறைத்து கொண்டவள் நொடியில் இயல்பாகி அவளுடன் பேசி சிரிக்க ஆரம்பித்தாள்.. ஆனால் மகிழனை பார்க்கும் பொழுது மட்டும் முன்னைக்கு இப்ப ரொம்பவும் எரித்து விடும் பார்வை பார்த்தாள்...

பின் அனைவரும் ஏதேதோ பேசிய படி வம்பு இழுத்து கலாய்த்து கொண்டே  வர, ஒரு வழியாக அவர்கள் செல்ல வேண்டிய அந்த ரிசார்ட் வந்திருந்தது....!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!