அழகான ராட்சசியே!!-30

 


அத்தியாயம்-30

 

ந்தியா மகிழனை பற்றி எதை எதையோ நினைத்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க வெளியே குளியலறை கதவை வேகமாக தட்டினாள் மது.. அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் அவசரமாக தன் குளியலை முடித்து ஒரு டவலை கட்டிக் கொண்டு வெளி வர அங்கிருந்த மது

“ஏன் டி... முன்ன பின்ன குளிச்சதே கிடையாதா? முதல் முறை குளிக்கிற மாதிரி இவ்வளவு நேரம் குளிக்கிற..  சீக்கிரம் வா டி.. உன்னை ரெடி பண்ணனும் “  என்று முறைத்து அதட்டினாள் மது..

சந்தியாவும் அவளை  முறைத்தவாறே வெளி வந்தாள்..

“ சரி டீ..  சீக்கிரம் இந்த ப்ளவுசை போடு..நானே உனக்கு புடவை கட்டி விடறேன்..”  என்று திரும்பி நின்று கொண்டாள் மது..

சந்தியாவும் எதுவும் பேசாமல் அந்த ப்ளவுசை போட்டு கொண்டு திரும்ப, மது அவளுக்கு அழகாக அந்த புடவையை கட்டி விட்டாள்.. பின் கீழ குனிந்து அவள் புடவையின் ப்ளிட்சை நேராக வைத்து நீவி விட்டவாறே நிமிர்ந்து தன் தோழியை பார்க்க, சந்தியாவோ ஏதோ பலத்த யோசனையில் இருந்தாள்...

“என்னாச்சு இவளுக்கு? இதுவரைக்கும் நல்லாதானே சிரிச்சு பேசி கிட்டிருந்தா? நான் குனிந்து அவள் காலை பிடித்ததுக்கு இந்நேரம் என்னை ஓட்டி இருப்பாளே..

அதோட நான் புடவை கட்டற அளவுக்கு தேறி இருக்கறதை கண்டு கிண்டல் அடித்திருப்பாளே.. எதுவும் பேசாமல் ஏன் இப்படி  உம் முனு கம்முனு இருக்கா.. “ என்று யோசித்தவாறு எழுந்தவள்

“ஏய் சந்தி.. என்னாச்சு டீ? ஏன் டல்லா இருக்க? “ என்றாள் மது யோசனையாக..

அதில் விழித்து கொண்டவள்

“ஆங்.. ஒன்னும் இல்லடி.. சும்மாதான்.. “ என்று ஏதோ சொல்லி சமாளித்தாள் சந்தியா..

“இல்லையே.. நீ ஒன்னும் இல்ல னு சொல்றதிலயே ஏதோ விஷயம் இருக்கும் போல.. என்னானு சொல்லு டீ.. “ என்று வற்புறுத்தினாள் மது..

“ப்ச்... அதெல்லாம் ஒன்னும் இல்லடி.. நீ வந்த வேலைய பார்.. “ என்று முறைத்து சமாளிக்க மதுவும் யோசித்தவாறே அவளை அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபில் முன்னால் அமர வைத்து அவளுக்கு தலை வாரினாள்...

“ஏன் டி சந்தி ?  முன்ன எல்லாம் எவ்வளவு நீளமா முடி வச்சிருந்த..அதை ஏன்டி இவ்வளவு கொறச்சு எலி வால் மாதிரி பண்ணி வச்சிருக்க?  நல்லாவே இல்லை “  என்று தன் தோழியின் தலையில் செல்லமாக  கொட்டினாள்..

அதைக் கேட்ட சந்தியா அவளுக்கு அடுத்து என்ன செய்யறது என்று ஏற்கனவே  தலையை பிய்த்து கொண்டிருக்க, இந்த நிலையில் மது அவளை கொட்டவும் கடுப்பானவள்

“அவ அவளுக்கு வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யறது னு குழம்பி கிட்டு இருக்கா.. ஆனா இந்த மந்தி மயிறு போனதைப் பத்தி பேசிகிட்டு இருக்காளே..”  என்று உள்ளுக்குள் அவளை திட்டி கொண்டவள்  எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்து கொண்டு  இருந்தாள்..

அதை கண்ட மதுக்கு இன்னும் ஆச்சரியம்..

“நான் கிண்டல் அடித்ததற்கு இந்நேரம் ஏதாவது கவுண்டர் கொடுத்து இருப்பாளே இந்த சந்தி..  இப்படி அமைதியா இருக்காளே ??  என்னவா இருக்கும்? “  என்று தீவிரமாக யோசித்தாள் மது..

அவள் அறிவுக்கு எட்டிய வரை எதுவும் புரியவில்லை..

உள்ளுக்குள்  புலம்பிக் கொண்டே சந்தியாவுக்கு அழகாக ஃபிரெஞ்ச் ப்ளைட் போட்டு அவள் கோர்த்து கொண்டு வந்திருந்த குண்டு மல்லியை இரு பக்கமும் தொங்கவிட்டு வைத்து விட்டாள்..

அப்பொழுது   வெளியில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.. அதைக் கேட்ட மது

“ ஹே.. சந்தி..  மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல..நான் போய் பார்த்துட்டு வர்ரேன்.. “ என்று துள்ளி குதித்து  ஓடினாள்.

அதைக் கேட்டதும் திக்கென்றது சந்தியாவிற்கு..

“ஐயோ !!  நிஜமாலுமே எனக்கு நிச்சயம் ஆகப் போகிறதா ?  இந்த மணி சும்மா ஏதோ சொல்கிறார் என்று பார்த்தால் உண்மையிலேயே இந்த மாப்பிள்ளையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டாரா? “  என்று அதிர்ச்சி அடைந்தாள்

ஆனால் அவளுக்கு அடுத்து  என்ன செய்வது என்று புரியவில்லை..  

அதற்குள் வெளியில் சென்றிருந்த மது திரும்பி துள்ளலுடன் உள்ளே வந்தாள்..  

“ஹே.. சந்தி..மாப்பிள சூப்பரா இருக்கார் டி..  நல்ல ஹைட்.. நல்ல வெய்ட்.. வசதியும் நிறைய போல..பயங்கர பர்ஸனாலிட்டியா இருக்கார்..அதோட நல்ல பசையுள்ள பார்ட்டி போல.. ஆடி கார் ல தான் வந்திருக்கார்...

அங்கிள் சொன்னார் சொந்தமா பிசினஸ் பண்றாராம்..கன்டிப்பா சீக்கிரமே இன்னும் பெரிய ஆள் ஆகிடுவார் பார்..

இனிமேல் நீ வேலைக்கு போக வேண்டாம்.. ஜாலியா வீட்ல உட்கார்ந்துட்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கலாம்.. “ என்று சொல்லி சிரித்தாள்

அதைக் கேட்டதும் கடுப்பாக வந்தது சந்தியாவுக்கு..

“கொஞ்சம் வாய மூடு டீ.. “ என்று எரிந்து விழுந்தாள் சந்தியா..  

அதைக் கேட்டதும் மதுவின் முகம் வாடிவிட்டது..  

“நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி எரிஞ்சு விழறா ? “ என்று தன்  முகத்தை நொடித்தாள் மது..  

ஆனாலும் சந்தியா க்கு செய்ய வேண்டிய மேக்கப் ஐ தொடர்ந்தாள் மது..

முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக் கொண்டு சந்தியாவை முன்னால் திருப்பி அருகிலிருந்த பவுண்டேஷன் பவுடரை எடுத்து சந்தியாவிற்கு போட்டாள்..

பின்  கண்ணுக்கு மையிட்டு உதட்டுக்கு லிப்ஸ்டிக் ஐ போட்டு இன்னும் ஏதேதோ அலங்காரம் செய்தாள்..  

அவள் அலங்காரம் முடித்ததும் அவளை உற்று பார்க்க அம்சமாக இருந்தாள் சந்தியா

அவளுக்கே அவளைப் பார்த்து அடையாளம் தெரியவில்லை..தன் தோழியை கண்ட மது வியந்து 

“ஹே சந்தி..சூப்பரா இருக்க டீ.. மாப்பிள்ளை மட்டும் உன்னை இப்படி பார்த்தால் நிச்சயம் எல்லாம் வேண்டாம்.. நேரா இன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம் னு சொல்ல போறார் பார்..

மது குட்டி.. உனக்கு கூட இப்படி எல்லாம் மேக்கப் பண்ண வருதே !!   கலக்கிட்ட டி “ என்று தனக்குத்தானே சொல்லி சிரித்தாள் மது..

ஆனால் சந்தியாவின் கவனமோ அங்கு இல்லை.. மது பேசியது எல்லாம் அவள் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை..

கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க ஏனோ அதில் மகிழன்  முகமே தெரிந்தது

அவள் அலங்காரத்தை பார்த்து அவன் மெய் மறந்து ரசிப்பதை போலவும் கண் சிமிட்டி குறும்பாக சிரிப்பது போலவும் செமையா இருக்க பொண்டாட்டி என்று ஆக்சன் பண்ணுவது போலவும் தெரிந்தது..  

அதைக் கண்டு ஒரு நொடி அவள் மனம் வலித்தது..  

“இனிமேல் இந்த மங்கி என்னை ஓட்ட மாட்டான் இல்ல ?  என்னை பார்த்து பொண்டாட்டி னு  சொல்ல மாட்டான்  இல்ல?  

நான் வேற ஒருத்தனுக்கு சொந்தமாக போகிறேன்..  இந்த விஷயம் கேள்விப் பட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? “  என்று எண்ணி பார்த்தவளுக்கு அடுத்த நொடி இதயத்தை கசக்கி  பிழிந்தது

சந்தியா அவனிடம் திருமண அழைப்பிதழை கொடுப்பதைப் போலவும் வேற ஒருவனுடன் மகிழன் முன்னே சென்று நிற்பதைப் போலவும் எண்ணிப் பார்க்க,  அதைக் கண்டவன் முகம் வேதனையில் துடிப்பதும் கண்கள் வலியை சுமந்து வேதனைப் படுவதையும் கண் முன்னே கொண்டு வந்த சந்தியா அதிர்ந்து போனாள்..  

எப்பொழுதுமே  குறும்பு தவழும் கண்களுடனும் சிரித்த முகத்துடன் கண்டவனை வேதனைப் பட்டு பார்க்க அவளுக்கு தாங்க முடியவில்லை..

“ஐயோ !!  எனக்கே அவன் முகத்தை பார்க்க  இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே.. அந்த மங்கிக்கு எப்படி இருக்கும்?  எப்படி இந்த வலியை தாங்க போகிறான்?  

ஒரு வேளை சூசைட் எதுவும் பண்ணிப்பானா? இல்லையென்றால் வாழ்க்கையே வெறுத்து பைத்தியம் பிடிச்சு அலைவானோ? “ என்று ஏதேதோ எண்ணிப் பார்க்க உடனே அன்று அவன்  பாடிய பாடல் நினைவு வந்தது..

அன்று சும்மா பாடும் பொழுதே  அவன் இதயத்தில் இருந்த வலியும் வேதனையும் அவளுக்கு புரிந்தது.. இந்த செய்தியை மட்டும் கேட்டால் எப்படி உணர்வான்  என்று எண்ணி பார்க்க அவள் இதயத்தை கத்தியால்  திருகுவதைப் போல வலித்தது..

“நான் பாட்டுக்கு அவசரபட்டு அவனை பழி வாங்க என்று இந்த மாப்பிள்ளைக்கு ஒத்திருக்க கூடாதோ ?  அட்லீஸ்ட் நேற்று நைட் அப்பா சொன்னப்பயாவது சீரியஸாக எடுத்து கொண்டு அப்பயே யோசித்து வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டுமோ?

இப்படி விளையாட்டு தனமா கேர்லேஸ் ஆ இருந்திட்டியே சந்தி.. இப்ப எப்படி இதை சமாளிப்பது ? “ என்று அவசரமாக யோசித்தாள்..

அதே நேரம் ருக்மணி ஒரு கையில் ட்ரேயில்  காபி கோப்பைகள் வைத்து எடுத்து கொண்டு உள்ளே வந்தார்..

மதுவை பார்த்தவர்

“மது குட்டி..இதை இவ கையில் கொடுத்து இவளை கூட்டிட்டு வா டா.. எல்லாரும் இவளுக்காக வெய்ட் பண்றாங்க.. “  என்றார்..  

உடனே சந்தியாவும் வேகமாக  எழுந்து

“மா... எனக்கு இதெல்லாம் வேண்டாமே... “ என்று பாவமாக பார்த்தாள் தன் அன்னையை பார்த்து..

அதில் மீண்டும் அதிர்ந்து போன ருக்மணி

“என்னடி சொல்ற? இப்பதானே உங்க அப்பா வந்து உன் கிட்ட பேசிட்டு போனாரு..  திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுன மாதிரி அதே பழைய பாட்ட பாடற?”   என்று சிடுசிடுத்தார்

“மா...சொன்னா புரிஞ்சிக்க..  எனக்கு இந்த நிச்சயத்தில் இஷ்டமில்லை..”   என்றாள்

அதை கேட்டு அவள் அருகில் நின்றிருந்த மது அதிர்ந்து போனாள்..

“ஹே.. என்னாச்சு டீ? ஏன் வேண்டாங்கிற? நீதான மாப்பிள்ளை பிடிச்சிருக்கிறதா சொன்ன.. இப்ப ஏன் இப்படி சொல்ற? “ என்றாள் மது..

“அப்ப என்னவோ ஒரு வேகத்துல  சொன்னேன்...ஆனால் இப்ப எனக்கு..   எனக்கு புடிக்கல அவ்வளவுதான்.. இந்த நிச்சயத்தை நிறுத்துங்க.. “ என்றாள் தன் அன்னையை பார்த்து..

“அது எப்படி டீ  ? உடனே நிறுத்தறது? ஏன் டி.. சந்தி.. நீ யாரையாவது விரும்பறியா? அதான் இந்த நிச்சயத்தை வேணாங்கிறயா? அப்படி எதுவும் இருந்தால் சொல்லு டி.. நானே அங்கிள் கிட்ட சொல்லிக்கறேன்.. “ என்றாள் மது யோசனையாக..

அதை கேட்டதும் உடனே மகிழன் கண் முன்னே வந்தான்..அவளிடம் மண்டியிட்டு  காதலை யாசித்து கண் சிமிட்டி சிரிப்பதை போல இருந்தது..

அதை எண்ணியதும் அவள் உள்ளே சந்தோஷம் உற்சாகம் பொங்கியது.

அவனை பார்க்கும் பொழுதெல்லாம், நினைக்கும் பொழுதெல்லாம் உதடுகள் அவனை பார்த்து முறைத்தாலும் கண்கள் வெருப்பை உமிழ்ந்தாலும் அவள் உள்ளம்  துள்ளி குதிப்பதும் உள்ளே  மழைச்சாரல் அடிப்பதும் உள்ளம் படபடப்பதும்  அப்பொழுது தான் புரிந்தது... 

ஆனாலும் தன்னை மறைத்து கொண்டவள்

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எனக்கு இந்த நிச்சயத்தில் விருப்பம் இல்லை... இத நிறுத்துங்க.. “ என்றாள் பிடிவாதமாக..

“இது என்னடி நியாயம்?  காரணமே இல்லாமல் எப்படி பிடிக்காம இருக்கும் ? ஒழுங்கா உண்மைய சொல்..” என்று மது மிரட்ட

“மூடிகிட்டு போடி.. உனக்கு இதெல்லாம் தெரியாது.. நீ போய் உன் வேலையை பார்.. “ என்று எரிந்து விழுந்தாள்..

உடனே அதை கண்ட மதுவும் திடுக்கிட்டு முகம் வாடி விட, உடனே முகத்தை தூக்கி வைத்து கொண்டு விடுவிடுவென்று நடந்து வெளியில் சென்றாள்..

அதை கண்ட ருக்மணி தன் மகளுக்கு இன்னும் கொஞ்சம் அர்ச்சனை பண்ணியவர்

“எப்படியோ போ.. என்னமோ பண்ணி தொல..  எனக்கு எதுவும் தெரியாது..உன்னை ரொம்ப செல்லம்  கொடுத்து கெடுத்து வச்சிருக்கார் அந்த மனுஷன்..

அதான் இப்படி நீ யார் பேச்சையும் கேட்காம உன் இஷ்டத்துக்கு ஆடற.. நீயே  உன் அப்பா கிட்டே பேசிக்கோ.. “ என்று அவளை ஒரு எரித்துவிடும் பார்வை பார்த்து முறைத்தவாறு வெளியில் சென்றார்...

அடுத்த நொடி வேல்மணி உள்ளே வந்திருந்தார்.. அவர் முகத்திலும் கலவரமாக இருந்தது..

“என்னாச்சு பாப்பா? “  என்றார் வாஞ்சையுடன்..

சந்தியா மீண்டும் தனக்கு பிடிக்கவில்லை என்ற பாட்டை பாட அவரும் தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு மீண்டும் தன் மகளுக்கு அட்வைஸ் பண்ணினார்..

“பாப்பா..அவங்க எல்லாம் வந்துட்டாங்க.. இப்ப போய் எப்படிடா மறுத்து சொல்றது? அட்லீஸ்ட் நீ வந்து அவங்கள  பார்த்துட்டு மட்டும் வந்திடு... அதுக்கப்புறம் பிடிச்சிருக்கா இல்லையா னு அவங்க கிட்ட சொல்லிக்கலாம்..

இப்படி பார்க்காமலயே பிடிக்கலைனு சொன்னா அவங்க முகத்துல அடிச்ச மாதிரி இருக்கும்..இந்த அப்பாவுக்காக வந்து உன் தலைய மட்டும் காட்டிட்டு வந்திடு.. அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்..என் செல்லம் இல்ல..  “ என்று கெஞ்சி கொஞ்சி அவளை சமாதானப்படுத்தினார்..

அவளும் அரை மனதுடன் தலையசைத்து அந்த ட்ரே ஐ எடுத்துக் கொண்டு வாயிலை நோக்கி நடந்தாள்..  

அவள் நடக்கும் ஒவ்வொரு நொடியும் மகிழனிடமிருந்து விலகிச் செல்வதை போல இருந்தது.. அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவன் இதயத்தில் விழுந்த இடி போல இருக்க கால்கள் தடுமாற ஆரம்பித்தன..

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பொழுதும் அவன் அவளை உரிமையோடு பொண்டாட்டி என்று அழைத்ததும் குறும்பாக சிரித்ததும் அவள் இடையை பிடித்து நிறுத்தியதும் அவன் மார்பின் மீது அவள் சாய்ந்திருந்த அந்த சில நொடிகள்  என்று எல்லா பாவங்களும் கண் முன்னே வந்தன..

அதே நேரம் அவள் தன்னருகில் வேறு ஒருவனை தனக்கு இணையாக வாழ்க்கை துணையாக  நிறுத்திப் பார்க்க அந்த முகத்தை நிமிர்ந்து பார்க்க அதில் அந்த முகத்தில் மகிழனே தெரிந்தான்.. கூடவே கண்சிமிட்டி உதடு குவித்து முத்தமிட்டு குறும்பாக சிரித்தான்..

அதே போல அவளுக்கு யாரோ தாலி கட்டுவது போல ஒரு காட்சி கண் முன்னே  விரிய தனக்கு தாலி கட்டியவனை  நிமிர்ந்து பார்க்க அதிலும் மகிழனே தெரிந்தான்..  

அதை கண்டதும் உடனே திடுக்கிட்டு விழித்தாள்..

மகிழன் உருவத்திற்கு பதிலாக வேற ஒருத்தனை தன் அருகில் நிறுத்தி பார்க்க உடனே அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது..

அவசரமாக அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள்..  

அப்பொழுது தான்... அந்த நொடியில் தான் அவளின் ஆழ்மனம் அவளுக்கு புரிந்தது..

கற்பனையில் கூட வேற ஒருத்தனை தன் அருகில் நிற்க அனுமதிக்காத அவள் மனம் புரிந்தது..அவள் மனம் முழுவதும் மகிழனே நிறைந்திருக்கும் உண்மை தெள்ள தெளிவாக புரிந்தது..

“அப்படி என்றால் அவனை நான் காதலிக்கிறேன் !!  அவனை மட்டும் தான் நான்  காதலிக்க முடியும் !! அவனால் மட்டும் தான் என் அருகில் நெருங்க முடியும்..  அவன்  மட்டும் தான் எனக்கு புருஷனாக முடியும்..  

மனதால் எப்பயோ நான் அவனுடைய பொண்டாட்டி ஆகி விட்டேன்.. அதனால் தான் அவன் என்னை உரிமையாக பொண்டாட்டி என்று அழைக்கும் பொழுதெல்லாம் பெரிதாக எதிர்ப்பை காட்டாமல் அதை உள்ளுக்குள் ரசித்து வந்திருக்கிறேன்..

ஆனால் என்னுடைய ஈகோ னால அதை உணராமல் போய் விட்டேன்...வம்பு அப்பயே சொன்னாளே.. 

அப்படி என்றால்??  ஐ லவ் ஹிம்... ஐ லவ் மங்கி.. ஐ லவ் அந்த கொரில்லா.. ஐ லவ் அந்த லவ்வபிள் இடியட் ..  ஸ்டுப்பிட்..” என்று தனக்குள்ளே சொல்லி சிரித்து கொண்டாள்..

அதே நேரம் மெது மெதுவாக அடியெடுத்து நடந்திருந்தாலும் அந்த வரவேற்பறையின்  நுழை வாயிலை அடைந்திருந்தாள் சந்தியா..

அதற்கு மேல் உள்ளே செல்ல வேண்டும்.. உள்ளே சென்று எவன் முன்னாலயோ நிற்க வேண்டும் என்று உரைத்தது..    

அவள் மகிழனை காதலிக்கிறாள் என்ற  உண்மை புரிந்த அடுத்த நொடி அப்படியே நின்று விட்டாள்.. அதற்குமேல் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை..

பின் என்ன நினைத்தாலோ.. உடனே திரும்பி வேகமாக தன் அறைக்கு மீண்டும் ஓடி வந்து விட்டாள்..

அதை கண்ட வேல்மணி திடுக்கிட்டார்..தன் மகளின் பின்னாலேயே விரைந்து உள்ளே வந்தவர்

“என்னாச்சு பாப்பா?  ஏன் பாதியிலேயே திரும்பி வந்துட்ட”  என்றார் கலவரமாக..

“பா.. என்னால முடியல..  என்னால அங்கு வந்து நிற்க முடியாது.. “  என்றாள்  வேதனையுடன்..

“ஏன் டா?  என்னாச்சு ? “  என்றார் அதே  கலவரத்துடன்..

“எனக்கு இந்த நிச்சயம் வேண்டாம் பா.. எனக்கு பிடிக்கல..  என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..இதெல்லாம் எனக்கு வேண்டாம்.. “ என்று தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள்..

அதைக்கண்டு திடுக்கிட்டு கலங்கிப் போனார் வேல்மணி..

இதுவரை எதற்கும் தன் மகளை அழ வைத்ததில்லை.. அவளை ஒரு ராஜகுமாரியாகத்தான் வளர்த்து வந்தார்.. அவள் சொல்லாமலயே அவள் நினைப்பதை எல்லாம் நிறைவேற்றி விடுவார்..

அவளும் எப்பொழுதும் குறும்பும் கிண்டல் கேலி என்று எப்பொழுதும் சிரித்து கொண்டேதான் இருப்பாள்.. அப்படி சிரித்த முகமாக பார்த்திருந்தவர் முதல் முதலில் தன் மகளின் கண்ணில் ஈரத்தை பார்க்க, நெஞ்சம் பதறி விட்டார்..

உடனே அவள் அருகில் வந்தவர் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு

“நீ இப்படி அழுவற அளவுக்கு என்னடா ஆச்சு? .. உனக்கு மாப்பிள்ளை யை பிடிக்கலைனா சொல்லு .. “ என்று  முடிக்கும் முன்னே

“பா... ப்ளீஸ்..  இன்னொரு தரம் அந்த ஆளை மாப்பிள்ளை னு சொல்லாதே..  அவன் ஒன்னும் உன் மாப்பிள்ளை இல்லை..  உன் மாப்பிள்ளை வேற.. “  என்று பொரிந்தாள்..

அதைக் கேட்டு அதிர்ந்து போனார் வேல்மணி..

“என்னடா சொல்ற ?  என்றார்  கேள்வியாக    

“அதெல்லாம் நான் அப்புறம் தெளிவா சொல்றேன்..முதல்ல அங்க ஹால் ல உட்காந்து இருக்கும் அவங்களை எல்லாம் போக சொல்லுங்க..  என்னால யாரையும் பார்க்க முடியாது.. “  என்று குரலை உயர்த்தினாள்..

அதைக் கேட்ட வேல்மணி இன்னும் அதிர்ந்து போய்

“பாப்பா... மெதுவா பேசுடா.. அவங்களுக்கு எல்லாம் கேட்கும்.. “  என்றார் கெஞ்சலாக..

“ஹ்ம்ம் கேட்கட்டுமே..அப்படியாவது எழுந்து போகட்டும்..எனக்கு யாரையும் பிடிக்கல..  என்னால் யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..முடியாது...முடியாது... “  என்று மீண்டும் கத்தினாள்

“பாப்பா மெதுவா பேசு டா.. அப்படி எல்லாம் எப்படி உடனே எழுந்து வெளில போங்கனு சொல்ல முடியும்?  ஒரு பார்மாலிட்டிக்காவது வந்து அவங்க முன்னாடி நின்னுட்டு வந்திடு கண்ணா...”  என்று கெஞ்சினார் வேல்மணி...

அதை கேட்டு கடுப்பான சந்தியா

“யோவ் மணி..  உனக்கு அறிவு இருக்கா?  உன் பொண்டாட்டிய கொண்டு போய் யார் முன்னாடி யாவது பொண்ணு பார்க்க னு நிறுத்துவியா? 

அது மாதிரி தான்..இப்ப நான் வேற ஒருத்தன் பொண்டாட்டி..என் புருஷனை தவிர என்னால வேற யார் முன்னாடியும் வந்து நிக்க முடியாது.. என்ன புரிஞ்சுக்கோங்க..முதல்ல போய் அவங்கள எல்லாம்  போகச் சொல்லுங்க.. “ என்று மீண்டும் கத்தினாள் சந்தியா..

அதைக் கேட்டதும் இன்னும் ஆடிப் போனார் வேல்மணி

“என்னம்மா சொல்ற?  புருஷனா ?  அப்போ உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா ? என்று அவசரமாக அவள்  கழுத்தை பார்த்தார்

அப்படி ஒன்றும் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை..

“பா...  நான் அப்புறமா எல்லாம் தெளிவா சொல்றேன்.. இப்ப போய்  அவன எழுந்து போக சொல்லுங்க.. இப்ப நீங்க சொல்றிங்களா?  இல்ல நானே போய் அவங்களை எல்லாம் விரட்டி விடவா...?  என்று மீண்டும் கத்தினாள்..

மகளின் பிடிவாத குணம் தெரிந்த வேல்மணியும் அதற்கு மேல் அவளிடம் மல்லு கட்ட முடியாமல் வேதனையுடன் அறை கதவை மூடிவிட்டு கையை பிசைந்து கொண்டு வெளியில் சென்றார்..

சிறிது நேரத்தில் மீண்டும் அறைக் கதவு திறக்க,  தன் படுக்கையில் அமர்ந்து கொண்டு தன் முகத்தை  கையால்  மூடிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் சந்தியா..

யாரோ உள்ளே வரும் அரவம் கேட்டது.. வந்திருப்பது தன் தந்தைதான் என்று எண்ணி தன் தலையை கூட தூக்காமல்

“எனக்கு பிடிக்கல..  பிடிக்கல..  பிடிக்கல..  அவங்களை எல்லாம் போகச் சொல்லுங்க..என்னால என் புருஷனை தவிர வேற யார் முன்னாடியும் நிக்க முடியாது.. “  என்று மீண்டும் அதே பாட்டை பாடி தன் முகத்தில் கையை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்..

திடீரென்று

“ஏன் என்னை பிடிக்கலை? அப்படி என்ன குறை என்னிடம்..?  “  என்று ஒரு குரல் கர்ஜித்தது..

அது தன்னைப் பார்க்க வந்திருக்கும் அந்த மாப்பிள்ளை என்று புரிய

“ஆமா.. எனக்கு பிடிக்கல..  எனக்கு என் புருஷனை தவிர வேற யாரையும் பிடிக்காது..தயவு செய்து வெளில போங்க.. “  என்றவள் மீண்டும் குலுங்கி அழுதாள்..

உடனே 

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...

உன் காதலன் நான் தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் !!!

 

என்ற பாடல் கேட்டது... 

திடீரென்று கேட்ட பாடலும்  அந்த பாடலுக்கான குரலையும் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சந்தியா..  

அங்கே மூடியிருந்த கதவிற்கு பின்னால்   நின்று கொண்டு தன் ஒரு காலை மடக்கி அந்த கதவின் மீது வைத்துக் கொண்டு தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தான் மகிழன்..

அதைக் கண்டதும் அதிர்ந்த சந்தியா தான் காண்பது கனவா  என்று மீண்டும் தன் கண்களை நன்றாக துடைத்துக் கொண்டு மீண்டும் உற்றுப் பார்க்க அதே மகிழன் தான்..

மகிழன் தன் தலையை  சரித்து பக்கவாட்டில் வைத்து குறும்பாக காதலுடன் அவளை பார்த்து கண் சிமிட்டி உதடு குவித்து முத்தமிட்டு குறும்பாக சிரித்து கொண்டிருந்தான்..  

அவனை கண்டதும் அடுத்த நொடி மகிழ் என்று கத்தியவாறு வேகமாக  எழுந்தவள் பாய்ந்து சென்று அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் சந்தியா...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!