அழகான ராட்சசியே!!-34

 


அத்தியாயம்-34

 

தன்பின் துள்ளலுடன் மாடி ஏறி மகிழன் அறையை அடைந்ததும் கதவை  தட்டிவிட்டு உள்ளே செல்ல,  மகிழன் அவன்  தொலைபேசியில் இருந்த சந்தியாவின் புகைப்படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..  

அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை..  தன் மனம் கவர்ந்தவள்  மதுவின் தோழி என்று தெரிந்ததும் அதோடு அவள் தன் குடும்பத்தில் அனைவரிடமுமே எந்த தயக்கமும் இல்லாமல் கலகலப்பாக பழகுவதை கண்டதும்  பெரும் மகிழ்ச்சி ஆகிவிட்டது..

என்னதான் பார்த்தவுடனே அவளை விரும்பியிருந்தாலும்  உள்ளுக்குள் சிறு கலக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது மகிழனுக்கு..  

அவள் எப்படி தன் குடும்பத்தில் பொருந்த போகிறாளோ?  என்று சிறு கவலையும் இருந்தது.. ஆனால் அவள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதும் மற்றும் அவளைப் பற்றி அலுவலகத்தில் கேள்விப்பட்டதை வைத்து அவளின் குணம் புரிந்துதான் இருந்தது..

என்னதான் ஓயாமல் வாய் அடித்தாலும்,  அடுத்தவரிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு சென்றாலும்,  அவள் செய்வதில் ஒரு நியாயம் இருக்கும்..வீணாக வம்பு சண்டைக்கு செல்ல மாட்டாள்..  

கூடவே எல்லாரிடம் அனுசரித்து  செல்வாள்  என்று புரிந்தவனுக்கு  நிம்மதியாக இருந்தது..ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது..  

ஆனால் சற்றுமுன் அவளின் குரல் கேட்டு திடுக்கிட்டவன் தன் அறையில் இருந்தவன் உடனே வெளி வந்து பார்க்க அங்கே அவனவள்  தன் அன்னையின் கழுத்தில் கையை போட்டுக்கொண்டு அவர் தோளில் சாய்ந்து கொண்டு உரிமையாக பேசிக் கொண்டிருக்கும் காட்சியை கண்டதும் அவன் உள்ளம் துள்ளி குதித்தது..   

அதைவிட அவன் முன்பு சொல்லிய தனக்கு மனைவியாக வர வேண்டியவளை பற்றி அவன் சொல்லி இருந்த  எல்லா கன்டிஷனுமே  சந்தியாவுக்கு பொருந்த இன்னுமே மகிழ்ச்சியாகி போனான்..

அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.. திடீரென்று மது மாடி மேல பார்க்கவும், கூடவே தான் சைட் அடித்ததை கண்டு கொள்ளவும் வெட்க பட்டு சிரித்து கொண்டே தன் அறைக்கு வந்து விட்டான் மகிழன்..! .

இப்பொழுது தன் அலைபேசியில் இருந்த, டீம் அவுட்டிங் போது எடுத்த,  அவள் தன் அருகில் நின்றிருந்த அந்த க்ரூப் போட்டோவை திறந்து பார்த்து ரசித்து கொண்டிருந்தான்..   

மகிழன் அறைக்கு உள்ளே வந்த மது,  அவனைப் பார்த்து தலையை சரித்து கிண்டலாக சிரிக்க, அதைக் கண்ட மகிழன் அவள் எதற்கு சிரிக்கிறாள்  என்று புரிந்தாலும் அதை வெளிக் காட்டி  கொள்ளாமல்

“என்னாச்சு மது?  ஏன் இப்படி சிரிக்கிற? “ என்று தன் சிரிப்பை அடக்கி கொண்டு பாவமாக கேட்டான்...

“அடடா... என் கொழுந்தனாருக்கு  நான் எதுக்கு சிரிக்கிறேன் னு  தெரியாது பாரு.. “ என்று நக்கலாக சிரிக்க

“ஹீ ஹீ ஹீ நிஜமாகவே தெரியல மது.. நீ எதுக்கு இப்படி  சிரிக்கிற? .. சொன்னால், நானும் சிரிப்பேன் இல்ல.. “  என்றான் மீண்டும் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டே..

உடனே மதுவும்

கண்டு  புடிச்சேன்..  கண்டு  புடிச்சேன்..

காதல் நோயை கண்டு  புடிச்சேன்..

மகிழா  மகிழா !! இது சரியா சரியா !!

மானே தேனே மயிலே குயிலே என்று

நீ சைட்  அடிக்கும் போது பார்த்தேன் இன்று...

என்று குறும்பாக கண் சிமிட்டி பாட்டு பாட

அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் மகிழன் தன் கைகளை மேலே உயர்த்தி

“வருங்கால கலெக்டர் அம்மா.. நிகழ்கால மிஸ்டர் என்கவுண்டர் பொண்டாட்டியே... நான் உண்மையை ஒத்துக்கறேன்.. இப்ப உனக்கு என்ன தெரியணும்? “ என்று  சிரித்தான்..

“ஆங்.. அப்படி வாங்க வழிக்கு... இந்த வேலை  எத்தனை நாளா நடக்குது எங்களுக்கு தெரியாமல்? “  என்று செல்லமாக முறைத்தாள் மது..

ஹீ ஹீ ஹீ என்று அசட்டு சிரிப்பை சிரித்த மகிழனும் தன் காதல் காவியத்தை,  அவன் காதல் கொண்ட தருணத்தை எல்லாம் மதுவிடம் சொல்ல, அதைக் கேட்டவள்

“அடப்பாவி.. இந்த பூனையும் பால் குடிக்குமா ன்ற மாதிரி என்னவோ அப்பாவி மாதிரி மூஞ்சை வச்சுகிட்டு சின்சியரா ஆபிஸ்க்கு போய்ட்டு வர்ரீங்கனு பார்த்தால்  இவ்வளவு நடந்திருக்கா?  என் கிட்ட மூச்சு விடலையே...என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தால் இவ்வளவு கஷ்டமே இல்லை.. “  என்று சிரித்தாள் மது...

“ஹ்ம்ம்ம் அமைதியா சாந்த சொரூபிணியா இருக்கற  உனக்குப் போய்  இப்படி ஒரு பிரண்டு இருப்பானு எனக்கு எப்படி தெரியுமாம்? “ என்று சிரிக்க, மது அவனை பார்த்து முறைத்தாள்..

மகிழனும் சிரித்துக் கொண்டே 

“மது...அம்மாக்கு தெரிஞ்சிருச்சா? என்ன சொன்னாங்க? அம்மா ஒன்னும் நோ சொல்ல மாட்டாங்க இல்ல? “  என்றான் சிறு வெட்கத்துடன் + ஆர்வத்துடன்..

“ஐய.. ரொம்ப தான் வெட்கப் படாதீங்க.. அத்தை கிட்ட நான் இன்னும் நீங்க சந்தியாவை விரும்பறதா  சொல்லல..  நானாதான் கல்யாண பேச்சை ஆரம்பிச்சிருக்கேன்.. அவங்களுக்கு டபுள் ஓகே..

இந்த சின்ன பாகுபலிய  அவரோட தேவசேனாவிடம் இருந்து பிரிச்சு வைக்கிற அந்த சிவகாமி இல்ல என் அத்தை... அவரோட  அருமை மகனுக்கு புடிச்சிருந்தா கட்டுடா தாலியனு எடுத்து கையில கொடுக்கிற மாடர்ன் சிவகாமியாக்கும்..” என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

“அடேங்கப்பா.. மாமியாருக்கு சப்போர்ட் பண்ற  முதல் மருமகள் நீதான்..உன்னை வரலாறு போற்ற போகுது மது... “  என்று சிரித்துக் கொண்டான் மகிழன்.. மதுவும் இணைந்து சிரித்தவள் 

“சரி அத விடுங்க.. அடுத்து என்ன செய்யலாம் னு  இருக்கீங்க? “  என்று கேட்டாள் மது...

“ஹ்ம்ம்ம் இந்த ராட்சசி இன்னும்  வாயை திறந்து அவ காதலை ஒத்துக்க மாட்டேங்கறாளே..  சில நேரம் பார்த்தா என்னை விரும்புவதாக தெரிகிறது..  சில நேரம் அவ முறைக்கிற முறைப்புல அப்படி ஒன்றும் இல்லையோ என்றே தோணுது.. அதனால் என்ன செய்யறது னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்.. “ என்றான் வருத்தமாக..

அதை கேட்டு மதுவும் சிரித்தவாறே

“அவ்வளவு தானே..  கவலைய விடுங்க.. இப்ப உண்மைய கண்டுபுடிக்கிறேன் பாருங்க.. “  என்று சிறிது நேரம் யோசித்தவள்

“மகி..சந்தியா டீம் ல வம்புனு ஒருத்தி இருக்காளே.. அவ போன் நம்பர் உங்ககிட்ட  இருக்கா? “ ..

“வம்பா? அப்படீனு யாரும் இல்லையே.. “  என்று யோசித்தவன்

“ஓ.. நீ அன்பழகியை சொல்றீயா? இரு.. நம்பர் வாட்ஸ்அப் குரூப் ல இருக்கும்.”  என்றவன் அவனுடைய அலுவலக  குரூப் ஐ  ஓபன் பண்ணி அதிலிருந்த அன்பழகி எண்ணை எடுத்து மதுவிடம் கொடுத்தான்..

உடனே மதுவும் தன் அலைபேசியில் இருந்து அவளை அழைக்க, அன்பும் அதை எடுத்திருந்தாள்.. உடனே மதுவும்

“ஹாய் வம்பு?  எப்படி இருக்க? “  என்று ஆரம்பிக்க மறுமுனையில் இருந்தவள் திருதிருவென்று விழித்தாள்.. பின் சுதாரித்தவள்

“யாருங்க  நீங்கஎன் செல்லப்பேரு எப்படி உங்களுக்கு தெரியும்? “ என்று முழித்தாள்..

“ஹா ஹா ஹா உன் செல்ல பெயர் மட்டும் இல்ல.. ஆபீஸ்ல நீ அடிக்கிற லூட்டி  எல்லாமே எனக்கு தெரியும் .. அந்த சந்தி என்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கா..  நான் சந்தியாவோட பிரண்ட் மது பேசறேன்.. “  என்று சிரித்தாள் மது..  

அதைக் கேட்ட அன்பு  ஒரு நொடி அவசரமாக யோசித்து

“ஓ.. நீங்கதான மந்தி.. “ என்று முடிக்கு முன்னே

“ஹோய்.... “    என்று மது மிரட்டியவாறு முறைக்க

“ஐயோ.. சாரிங்க..  அந்த சந்தியா எப்பவும் உங்களை மந்தி மந்தினு சொல்லி பேசறதால  அதுவே வாயில வந்துருச்சுங்க..தப்பா எடுத்துக்காதிங்க..  “ என்று அவசரமாக அசடு வழிந்தாள் அன்பழகி..

மந்தி என்ற அவளின் செல்ல பெயர் எங்கே மகிழனுக்கு கேட்டு விட்டதோ என்று அவசரமாக மகிழனை பார்க்க மகிழன் அவர்கள் பேச்சை கேட்டிராதவன் மதுவை ஸ்பீக்கரில் போட சொல்லி ஜாடை காட்டினான்..

தன் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டவள்  

“அதெல்லாம் சரி..  அது என்ன என்னை  ங்க போட்டு மரியாதையா பேசற..  நானும் உன் செட்  தான்.. என்ன?  எனக்கு முன்னாடியே கல்யாணத்த பண்ணி  ஒரு குழந்தையும் பெத்திக்கிட்டதால  உடனே நான் ஒன்னும் ஆன்ட்டி கிடையாது..  நானும் இன்னும் யூத்து தான்..  அதனால் என்னை மது னே கூப்பிடு.. “  என்று அன்புவை மிரட்டினாள் மது..

அதைக் கேட்ட அன்பு சிரித்தவாறு

“சரி மது..  நானே உன்னை ஒரு நாள் சந்திக்க வேண்டும் என்று இருந்தேன்.. சந்தியா எப்பவுமே உன்னை பத்திதான்  சொல்லிக் கொண்டிருப்பாள்..

உங்களுக்கு இல்ல இல்ல உனக்கு கோயில் கட்டி கும்பிடணும் போங்க..

என்னால ரெண்டு வருஷமே  அவளோட சேர்ந்து குப்பை கொட்ட முடியல.. அவள வச்சு சமாளிக்க முடியல.. மூச்சு முட்டுது..அப்பப்ப கண்ணையும் கட்டும்..  ஆனா நீ  எப்படி பிறந்ததிலிருந்தே அவ  கொடுமையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிற மது ?... “ என்று சிரித்தாள்

அதைக் கேட்டு மதுவும்  சிரிக்க உடனே மகிழன் அவளை பார்த்து முறைத்து

“இது ரொம்ப முக்கியமா இப்ப? .. முதல்ல என் மேட்டர்க்கு வா.. “ என்று கையால் சைகை செய்து முறைத்தான்.. உடனே மதுவும் நாக்கை துருத்தி அவனுக்கு அழகு காட்டிவிட்டு

“சரி வம்பு... உன்கிட்ட சில கேள்விகள் கேட்கணும்..  கேட்கலாமா? “  என்றாள்..அதை கேட்டு அதிர்ந்த அன்பு

“எனனது?  கேள்வியா? நான் எதுவும் பிரிப்பேர் பண்ணலையே!!  அதுவும் நான் எதுவும் வேற வேலைக்கு அப்ளை பண்ணலையே.. அப்புறம் எதுக்கு என்கிட்ட கேள்வி கேட்கணும்..?  “ என்றாள் யோசனையாக..

ஹ்ம்ம்ம் ஒரு விஷயம் இருக்கு.. அதனாலதான் கேட்கறேன்.. அப்புறமா விளக்கமா சொல்றேன்.. இப்ப நான் கேட்கிற கேள்விக்கு மறைக்காம பதில் சொல்லணும்..  கேட்கவா? “  என்றாள் மது..

“ஹ்ம்ம்ம்  கேளும்.. கேளும்..  கேட்டுப் பாரும்.. “  என்று திருவிளையாடல் பாணியில் சொல்ல,  மதுவும்

“உங்க ஆபீஸ்ல மகிழன் னு யாராவது இருக்காங்களா? “  என்று கேட்க , உடனே அன்பழகி

“ஆமா..  இருக்கார்.. நம்ம தல..அவர் தான் எங்க ஆபீஸ் ஹீரோ ஆச்சே..அவர பார்த்து ஜொள்ளு விடாத புள்ளைங்களே இல்ல.. “ என்று சொல்ல, மகிழன் தன் காலரை தூக்கி விட்டு கொண்டான்.. மது அவனை பார்த்து மீண்டும் அழகு காட்டி முறைத்தவள்

“ஆமா.. எதுக்கு   அவர பத்தி கேட்கற மது? “ என்றாள் ஆர்வமாக..  

“ஹ்ம்ம் அவருக்கு ஒன்னும் இல்ல..  நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..  குறுக்க குறுக்க கேள்வி கேட்கக் கூடாது.. “  என்று மிரட்டியவள்

“ஆமா... சந்தியாவுக்கும்  உங்க தலைக்கும் நடுவுல  ஏதாவது ட்ராக் ஓடுதா? “ என்றாள் ஆர்வமாக..

அதை கேட்டதும் அன்பழகி வாயெல்லாம் பல்லாக அவள் மனதில் இருந்ததை எல்லாம் மதுவிடம் கொட்டினாள்..  அதுவும் டீம் அவுட்டிங் போனபொழுது அவள் சந்தியாவிடம் கவனித்ததை  எல்லாம் அப்படியே சொல்ல அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மகிழனுக்கு நம்பவே  முடியவில்லை..

“இந்த ராட்சசி இவ்வளவு வேலை பண்ணியிருக்காளா?”   என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்...  

ஓரளவுக்கு அன்பழகியிடம் சந்தியா பற்றிய எல்லா விஷயத்தையும் கேட்டவள்  

“வம்பு..அப்படினா சந்தியா கண்டிப்பாக மகியை லவ் பண்றா தான.. “  என்று கேட்க,

“200% கரெக்ட் மது... ஆனால் அந்த அமுக்குனி அவ வாய திறந்து அத ஒத்துக்க மாட்டேங்கிறா.. கூடவே தல அவ பின்னாடி சுத்தறதயும் கண்டு புடிச்சிட்டேன்.. இவ மட்டும் இன்னும் அவருக்கு பச்ச கொடி காட்டலை போல.. அவர பார்த்தாதான்  பாவமா இருக்கு.. “ என்று மகிழனுக்காக அனுதாப பட்டாள் அன்பு..

“சரி வம்பு..  அத நான் பாத்துக்கறேன்.. ரொம்ப தேங்க்ஸ் அவளை பத்தி சொன்னதுக்கு.. சீக்கிரமே அந்த சந்தியை உனக்கு அவளோட கல்யாண பத்திரிக்கையை கொடுக்க வைக்கிறேன்..மறக்காம கல்யாணத்துக்கு வந்திடு.. “ என்று சிரித்து தன்  நன்றியை சொல்லி தன் உரையை முடித்தாள் மது...

பின் மகிழனிடம் திரும்பியவள்

“என்ன கொழுந்தனாரே? இப்ப ஹேப்பியா? “ என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு..

“ஹ்ம்ம் என்னை பத்தியும் நான் லவ் பண்றது பத்தியும்  ஊருக்கே தெரிஞ்சிருக்கு..அந்த ராட்சசிக்கு தெரிய மாட்டேங்குது... ஆனாலும்  அவ  வாய திறந்து உண்மையை ஒத்துக்க மாட்டேங்கிறாளே.. “  என்றான்  அதே சிறு கவலையுடன்..

“ஹ்ம்ம் அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று எனக்கு தெரியும் மகி.. மயிலே மயிலே என்றால்  இறகு போடாது.. அத புடிச்சு நாமலே பிச்சுக்கணும்.. அதே மாதிரி சின்ன வயசிலிருந்தே சந்தியாவுக்கு ஒரு வித்தியாசமான குணம்..  

அவளுக்கு யாராவது எதையாவது  பிடிக்கும் என்று சொன்னால் அதை உடனே அவ  புடிக்கலைன்னு சொல்வா.. நாம பிடிக்கலைனு சொன்னா அதுதான்  அவளுக்கு பிடிக்கும்..

அவள பத்தி எனக்கு நல்லா தெரியும்..உங்கள எல்லாரும் புகழ்ந்து பேசறதால உங்க மேல ஒரு வெறுப்பு மாதிரி காட்டிக்கிறா.. கூடவே  நீங்களே அவளைத் தேடி போனதால உடனே மேலே ஏறி உட்கார்ந்து கிட்டா..  

அவளை எப்படி கீழே இறக்குவது என்று எனக்கு தெரியும்..பேசாம நான் சொல்ற மாதிரி செய்யலாம்.. நாம  போய் அவ  அப்பா அம்மா கிட்டயே  நேரடியா பார்த்து பேசலாம்.. “  என்றாள்..

உடனே  மகிழன் தன் அலைபேசியை எடுத்து இப்பவே பேசு என்றான்.. அதை கண்டவள்

“ஐய.. ரொம்ப அவசரம்தான்.. “  என்று கழுத்தை நொடித்தவள்  

“இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் போன்ல பேசக் கூடாது மகி.. நேர்ல போய் பார்த்து முறைப்படி பொண்ணு கேக்கணும்.. நான் என் அப்பாவையும் அத்தையையும்  கூட்டிகிட்டு போய் வேல் அங்கிள பார்த்து பேசிட்டு வர்ரோம்.. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க.. “ என்று சிரித்தாள்..

அதைக் கேட்டு மகிழனுக்கு ஆச்சர்யமாக இருந்தது...

சிறு பெண்ணாக இருந்தவள் இப்பொழுது பொறுப்பாக இவ்வளவையும் தெரிந்து வைத்திருக்கிறாளே என்று ஆச்சர்யமாக இருந்தது..

“பரவாயில்லையே..  விரல் சூப்பிக் கிட்டிருந்த இந்த மது குட்டி கூட பெரிய மனுசி மாதிரி பெரிய ஆளாய்ட்டியே.. இவ்வளவு பொறுப்பா பேசற? எல்லாம் அந்த போலீஸ்க்காரன் சொல்லி கொடுத்த பாடமாக்கும்.. “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அதைக் கேட்டு மது முறைத்தாலும் அவளும் இணைந்து சிரித்தாள்..

அப்பொழுது வாயில் பக்கம் நிழலாட, சிரித்தவாறே இருவரும் வாயில் பக்கம் திரும்பி பார்க்க, அங்கு நிகிலன் நின்று கொண்டிருந்தான்..

மகிழன் அறையில்  இருவரும் சிரித்துக் கொண்டிருக்க, திடீரென்று வந்து நின்ற நிகிலனை காணவும்  ஒரு நொடி இருவரும் திகைத்துப் போயினர்.. மதுவுக்கோ உள்ளே நடுங்க ஆரம்பித்தது..  

இப்படி தனியாக மகிழன் அறைக்கு வந்து அவள் அவனுடன்  சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு தன் கணவன் ஏதாவது தப்பாக எடுத்துக் கொள்வானோ?  என்று அஞ்சியவள் அவசரமாக அவன் முகம் பார்க்க, அவனோ

“என்ன ரெண்டு பேரும் சிரிச்சுகிட்டு  இருக்கீங்க?  எனக்கும் கொஞ்சம் சொல்லலாம் இல்ல.. “  என்று இயல்பாக சொல்லியவாறு உள்ளே வந்தான்..  அப்பொழுது தான் இருவருக்குமே நிம்மதியாக இருந்தது..

தன் கணவனை நினைத்து பெருமையாக இருக்க,  அவள் கண்களில் காதல் பொங்க நிகிலனையை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது..தன் மனைவியின் அந்த வித்தியாசமான  பார்வையில்  தடுமாறியவன் தன்னை சமாளித்து கொண்டு  

“சரி என்ன விஷயம் சிரிச்சுகிட்டு இருந்தீங்க? “  என்று கேட்க மது ஏதோ சொல்ல வர

“சரி வா.. அங்க வந்து சொல்லு.. “  என்று தன் மனைவியை மையலுடன் பார்த்து வாயிலை நோக்கி நடந்தான் நிகிலன்....

அவன்  பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளாக கன்னம் சிவக்க, மதுவும் நிகிலன் பின்னால் நடந்து வெளியேற, மகிழனோ நமட்டு சிரிப்பை சிரித்து

“ஹ்ம்ம் நடத்துங்க.. நடத்துங்க.. “ என்று சிரிக்க, திரும்பி தன் ஆட்காட்டி விரலை நீட்டி கொன்னுடுவேன்.. என்று சைகை செய்து கன்னம் சிவக்க வெட்க சிரிப்பை சிரித்து தன் கணவனை பின் தொடர்ந்தாள் மது...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!