அழகான ராட்சசியே!!-38(final)

 


அத்தியாயம்-38

ன்று இரவு பெரியவர்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து கதை பேசி கொண்டிருக்க, சந்தியாவை சிவகாமியின் அறையில் அமர வைத்து அவளை முதலிரவுக்காக அலங்கரித்து  கொண்டிருந்தாள் மது...

சந்தியாவிற்கு உள்ளே படபடப்பாக இருந்தது..  

என்னதான் தைரியமானவளாக இருந்தாலும் வாய் ஓயாமல் அடுத்தவர்களை வம்பு இழுத்து மிரட்டினாலும் பெண்மைக்கே உரித்தான நாணம் அவளை சூழ்ந்து கொள்ள வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன..

அதுவும்  சற்று முன்னே இரவு உணவின் பொழுது எல்லோரும் கலகலப்பாக அமர்ந்து பேசியவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்க,  மகிழன் நொடிக்கொரு தரம் அவளை விழுங்கி விடுவதை  போல பார்த்துக் கொண்டிருந்தான்..

மற்றவர்களிடம் கலகலப்பாக  பேசிக் கொண்டிருந்தாலும்  தன் கணவனின் பார்வையை சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் வயிற்றுக்குள் படபடக்க ஆரம்பித்தது.. அதை இப்பொழுது நினைக்கும் பொழுதும்  ஏதோ ஒரு இனம் புரியாத,  பயமும் இல்லாமல் மகிழ்ச்சியும் இல்லாத  ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது...

உடனே தன்னை சீண்டியவாறே அலங்கரித்துக் கொண்டிருந்த மதுவை பார்த்து

“ஹே.. மந்தி...உன்கிட்ட ஒன்னு கேட்கவா? “ என்றாள் அவள் புடவை முந்தானையை திருகியபடி முகத்தில் வெட்கத்துடன்..

அதை கண்ட மதுவுக்கும் ஆச்சர்யமாகி விட,

“பார்டா... இந்த ரௌடி சந்திக்கு கூட வெட்கம் எல்லாம் வருதே..”என்று சொல்லி சிரித்தவள்

“சொல்லு டீ... என்ன கேட்கணும்.. தயங்காம கேள்.. “ என்றாள் நமட்டு சிரிப்புடன்...

சந்தியாவும் தயங்கியவாறு

“வந்து...நான் ஏற்கனவே பழகிய மகிழை தனியாக சந்திக்கவே எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு.. நீ எப்படி டீ  முன்ன பின்ன தெரியாத மாம்ஸ் கூட ஃபர்ஸ்ட் நைட் அப்ப தனியா போன? உனக்கு பயமா இல்லையா? நான் கூட அப்ப உன் பக்கத்துல இல்லையே... எப்படி சமாளிச்ச? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..  

அதைக் கேட்டு கன்னம் சிவந்த மது அவள் நினைவுகள் பின்னோக்கி  சென்று மீண்டு வந்தது..உடனே ஒரு பெருமூச்சை விட்டவள் 

“ப்ச்... ஃபர்ஸ்ட் நைட் ஆ? அப்படி எல்லாம் ஒன்னும் எனக்கு இல்ல டீ..  சொல்ல  போனால் எனக்கு அகி கூடத்தான் ஃபர்ஸ்ட் நைட். எனக்கு கல்யாணம் ஆன முதல் நாள் அவ கூடதான் தூங்கினேன்... ”  என்று சொல்லி சிரித்தாள் மது.. அதை கேட்டு அதிர்ந்த சந்தியா

“அடிப்பாவி...  என்னடி சொல்ற? என்னாச்சு? என்று கேட்க

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் பெரிய கதை.. நீ பொறுமையா காதோடுதான் நான் பாடுவேன் கதையை படிச்சு தெரிஞ்சுக்கோ.. இப்ப  உன் கதையை பாரு.. “  என்று சிரித்தவாறு  சந்தியாவின் முகத்தில் செல்லமாக  இடித்து அவள் முகத்தை தன் பக்கமாக திருப்பி அவள் முகத்துக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்...

அதே நேரம் அகிலாவும் வெளியில் தோட்டத்தில் இருந்து துள்ளி குதித்தவாறு உள்ளே ஓடி வந்தாள்.. உள்ளே வந்தவள்  சந்தியாவை பார்த்ததும்

"வாவ்... சூப்பரா இருக்கீங்க சின்ன அண்ணி.. இன்னைக்கு அந்த மங்கி டோட்டல் சரண்டர் ஆக போறான்.. பார்த்து அண்ணி..என் அண்ணன  ரொம்ப மிரட்டிடாதிங்க.. “  என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தாள் அகிலா..

அதைக் கேட்டு சந்தியாவும் முறைக்க பின் மதுவும் அகிலாவுடன் இணைந்து சந்தியாவை சீண்ட அவளும் இருவரையும் சமாளிக்க முடியாமல் தடுமாறி  போனாள்..

ஒரு வழியாக அலங்காரம்  முடிந்ததும் சந்தியாவை மேலிருந்து கீழாக பார்த்தவள்

“ஹே சந்தி... சூப்பரா இருக்கடி.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. மகி நிலைமை ரொம்ப மோசம்.. ” என்று சிரித்தவாறு தன் கையால் அவள் முகத்தை சுத்தி நெட்டி முறித்து சிரித்தாள் மது..

அதை கேட்டு சந்தியாவின் கன்னம் சிவந்தாலும் அதை மறைத்து கொண்டு மதுவை முறைத்தாள்.. மதுவும் சிரித்தவாறு

“அகி...சந்தியா ரெடி..  நீ போய் வெளியில் இருக்கறவங்களை எல்லாம் வரச்சொல்..” என்க,  அகிலாவும் துள்ளி  குதித்தவாறு வெளியில் ஓடினாள்..

அதைக் கண்ட சந்தியா

“ஹே மந்தி.. இப்ப எதுக்குடி அவங்களையெல்லாம் வரச் சொன்ன? மகிழ் ரூம்க்கு நானா போக மாட்டேனா? “ என்று சிணுங்கினாள்..

“ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் ஏன் டீ  இப்படி பப்ளிக் ஆ பண்றாங்க..எனக்கு வெட்கமா இருக்கு..” என்று  முகத்தை சுளித்தாள் சந்தியா..

அதைக் கேட்டு மதுவும் சிரித்துக் கொண்டே

“லூசு சந்தி.. நம்ம முன்னோர்கள் எல்லாத்துக்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள்..எந்த ஒரு நல்ல காரியம் ஆரம்பித்தாலும் அது பெரியவர்களின் ஆசியோடு தான்  இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்..

அவர்களிடம் ஒரு வித பாசிட்டிவ் எனர்ஜி எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும்.. அவர்கள் மனம் நிறைந்து  புதுமண தம்பதிகளை வாழ்த்த,  அவர்களிடமிருந்து வரும் அந்த பாஸிட்டிவ் எனர்ஜி அந்த தம்பதியர்க்கு  ஒரு விதமான மகிழ்ச்சியையும் அவர்களுக்கிடையே உறவு  வலுப்பெற்று  நல்ல ஒரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் னு தான் இந்த மாதிரி கொண்டாடுவது.. “ என்று சொல்லி சிரித்தாள் மது..

“அடேங்கப்பா..  நீ ரொம்பவுமே தேறிட்ட டீ.. எவ்வளவு விஷயம் தெரிந்து  வச்சிருக்க.. “  என்று சிரித்தாள் சந்தியா..

அதே நேரம் பெரியவர்களும் உள்ளே வர அவர்களை கண்டதும் சந்தியா வெட்கப் பட்டு உதட்டை கடித்து கொண்டு தலையை  குனிந்து கொண்டாள்..  அதைக் கண்ட சிவகாமி

“பாருடா!!  என் வாயாடி சின்ன மருமகளுக்கு கூட வெட்கம் எல்லாம் வருது.. ”   என்று சொல்லி சிரிக்க,  உடனே வேல்மணியும்

“எனக்கும் அதுதான் ஆச்சரியமா இருக்கு தங்கச்சி.. என் பாப்பாவுக்கு வெட்கம் எல்லாம் கூட வருமா என்று.. "  என்று  சொல்லி சிரித்தார்...  

“மணி.. யூ டூ ... “ என்று  சிணுங்கியவாறு தன் தந்தையின் அருகில் சென்று  அவர் இடுப்பை கட்டி கொண்டு தோளில் சாய்ந்து கொண்டாள்...

அவரும் வாஞ்சையுடன் தலையை தடவியவர்

“எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருடா... உனக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சு..இனிமேல் பொறுப்பா இருக்கணும்.. விளையாட்டு பிள்ளையா இருக்க கூடாது..    நம்ம மதுகுட்டி மாதிரி நீயும் சமத்தா இருந்து இந்த வீட்ல நல்ல மருமகனு பேர் எடுக்கணும்.. அப்புறம் மது மாதிரியே சீக்கிரம் எனக்கு ஒரு பேத்தியை பெத்து கொடுத்திரு..

அந்த சண்முகம் மட்டும் அவ பேத்தியை தூக்கி வச்சு கொஞ்சிகிட்டு இருக்கான்.. அவனுக்கு போட்டியா நானும் என் பேத்திய தூக்கி கொஞ்சனும்.. “ என்று சொல்ல, சந்தியாவோ கன்னம் சிவந்து அவர் தோளில் இன்னும் முகம் புதைத்து கொண்டாள்..

பின் வெளியில் வந்து வரவேற்பறையில் இருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் காலில் விழுந்து ஆசி பெற அவர்களும் மனம் நிறைந்து அவளை வாழ்த்தினர்.. உடனே மதுவும்

“ஹோய்... நான் இந்த வீட்டோட மூத்த மருமக.. என் கால் ல எல்லாம் விழ மாட்டியா? “ என்று கைகளை குறுக்காக கட்டி கொண்டு புருவங்களை உயர்த்தி மிரட்டுவதை  போல ஆக்சன் பண்ண

“கால் ல தான..  இருடி விழறேன்.. “ என்றவள் மது அருகில் வந்து அவள் இடுப்பில் கை வைத்து கிச் கிச் மூட்ட. உடனே துள்ளி குதித்த மது பின்னால் சாய அங்கு சிரித்து கொண்டே நின்றிருந்த நிகிலன் மார்பில் விழுந்தாள் மது...

அவனும் அவளை இடையோடு சேர்த்து இறுக்கி பிடிக்க, அதில் அப்படியே மயங்கி கிறங்கி நின்று விட்டாள்..

“கட்.. கட்.. கட்... பெரிய அண்ணா.. சின்ன அண்ணனுக்கு தான் இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்.. உனக்கு இல்ல.. அடக்கி வாசிங்க.. இது பப்ளிக் பப்ளிக்.. “ என்று  அகிலா சொல்லி சிரிக்க, அப்பொழுது தான் தன் நிலை உணர்ந்து கன்னம் சிவக்க,  தன் கணவன்  பிடியில் இருந்து துள்ளி குதித்து தள்ளி நின்று கொண்டாள் மது..

நிகிலனும் வெட்கபட்டு அசட்டு சிரிபை சிரித்தவாறு பெரியவர்களை பார்க்க, அவர்களும் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டனர்..சிவகாமியும் சிரித்து கொண்டே

“மது... நீ சந்தியாவை மேல கூட்டிட்டு போ..   சின்னவன் மேல போய் ரொம்ப நேரமாகிடுச்சு..  அவன் பொண்டாட்டிய காணோம் னு  அவன் பாட்டுக்கு கீழ இறங்கி வந்திட போறான்.. சீக்கிரம் கூட்டிட்டு போ.. “  என்று சொல்லி சிரித்தவாறு  சந்தியா கையில் பால் சொம்பை கொடுத்தார்..

சந்தியா மீண்டும் வெட்கப் பட்டு சிரித்து கொண்டே அவர் தந்த  பால் சொம்பை வாங்கி கொண்டு மதுவுடன் மாடி ஏறினாள்...   

மாடி ஏறும் பொழுதும் மது சந்தியாவை சீண்டிக் கொண்டே செல்ல,  சந்தியாவும் மதுவை முறைத்தவாறு திருப்பி கவுண்டர் கொடுத்து கொண்டே மாடி ஏறினாள்..

மகிழன் அறையை அடைந்ததும் கதவை திறந்து சந்தியாவை உள்ளே விட்டவள்

“ஆல் தி  பெஸ்ட் சந்தி...  சீக்கிரம் என் பொண்ணு கூட விளையாட ஒரு குட்டி பையன பெத்து கொடு..” என்று கண் சிமிட்டி சிரிக்க, சந்தியாவும் வெட்கபட்டு சிரித்து அவளை அடிக்க வர,  மது வேகமாக கதவை மூடிவிட்டு சிரித்தவாறே குதித்த படி மாடியில் இருந்து இரண்டு இரண்டு படியாக தாவி  இறங்கி கீழே சென்றாள்....

படபடக்கும் இதயத்துடன் அறைக்குள்ளே வந்தவள்  கதவை தாளிட்டு விட்டு அறையை சுற்றிலும் பார்க்க அங்கு படுக்கையில் மலர் அலங்காரங்களும் தட்டில் பழங்களும் கூடவே ஊதுபத்தி மணமும் நிறைந்து இருந்தது..

“இதெல்லாம் அந்த மந்தி மற்றும் அகியோட வேலையா இருக்கும்.. “ என்று செல்லமாக அவர்களை திட்டி கொண்டே அந்த அறையில் நுழைந்தவள்  தலையை குனிந்தவாறே கண்களால் தன்னவனை தேடினாள் சந்தியா..

மகிழன் அந்த அறையில்  எங்கும் இல்லை..பால் சொம்பை அருகில் இருந்த டீப்பா ல்  வைத்தவள்  மீண்டும் நன்றாக தேடி பார்க்க எங்கும் காணவில்லை அவனை..

பின் அந்த அறையை ஒட்டி இருந்த பால்கனி கதவை   திறந்துகொண்டு வெளியில் வந்தாள்..அங்கே கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்று  கொண்டு மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு  அந்த வெண்ணிலவை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் மகிழன்..

அவனுமே பட்டு வேஷ்டி சட்டை அணிந்து அந்த வேஷ்டியை மடித்து முழங்காலுக்கு மேலே கட்டியிருந்தான்..கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தவனை காண, செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம் போல  கம்பீரமாக நின்றிருந்தான்...  

அந்த நிலவின் ஒளி அவன் முகத்தில் பட்டு இன்னும் தகதகக்க அவனை  அப்படியே ஓடிச் சென்று கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகம் புதைக்க துடித்தது அவள் உள்ளே..  இருந்தாலும் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள்

“ ம்க்கும்.. “ என்று தொண்டையை செருமி அவள் வருகையை அவனுக்கு உணர்த்தினாள்..

அவள் குரல் கேட்டு உடனே திரும்பி பார்த்தவன்  அந்த பால்கனி கதவை பிடித்துக் கொண்டு ஒரு வித மயக்க நிலையில் நின்று கொண்டிருந்தவளை காண  அப்படியே கிறங்கி போனான் மகிழன்..

இரண்டே எட்டில் அவளை அடைந்தவன் அவள் எதிர்பார்க்காத வண்ணம் அவளை அப்படியே கையில் அள்ளிக் கொண்டு பால்கனி கதவை மூடிவிட்டு அறைக்கு  உள்ளே வந்தான்..

இதை எதிர்பார்த்திராத சந்தியா “ஐயோ..  விடுங்க மகிழ்.. “  என்று செல்லமாக சிணுங்கினாள்..

“ஹா ஹா ஹா ஏன் டி..  உன்னை விடுவதற்காக வா நான் இவ்வளவு நேரம் காத்து  கொண்டிருந்தேன்.. ஒரு மனுஷனை எவ்வளவு நேரம் காக்க வைப்ப..”  என்று செல்லமாக முறைத்தவாறு கட்டிலில் சென்று அமர்ந்து அவளை தன் அருகில் அமர்த்தி கொண்டவன் அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்...

“ம்க்கூம்..  நான் என்ன பண்றதாம்?  எல்லாம் அந்த மந்தியோட வேலை..  மணிக்கணக்கா என்னை உட்கார வைத்து அலங்காரம் பண்ணி ரெடி பண்றதுக்கு இவ்வளவு நேரம் ஆகிடுச்சு.. “  என்று தன் புடவையின் முந்தானையை எடுத்து தன் கை விரலில் சுற்றி கொண்டே செல்லமாக  சிணுங்கினாள்..

அவளின் அந்த செயலில் இன்னும் கிறங்கியவன்

“உனக்கு எதுக்கு டீ  இவ்வளவு அலங்காரம்?  எப்படியும் அதெல்லாம் களைய போறது தான? என்று கண் சிமிட்ட, உடனே தன்  கன்னங்கள் சிவந்து போக,

“சீ... போங்க மகிழ்.. “ என்று வெட்க பட்டு சிரித்து தன் கைகளை எடுத்து முகத்தை மூடிக் கொண்டாள்...

அவளின் இந்த வெட்கம் சிரிப்பை  கண்டு இன்னுமே கிறங்கி போனான் மகிழன்..

தன் அருகில் இருந்தவளை  காதலுடன் பார்த்தவன் அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு

“ஹே.. தியா..இந்த மேக்கப் ல சூப்பரா இருக்கடி பொண்டாட்டி.. “  என்று ஒரு மாதிரி குரலில் சொல்ல உடனே அவளும்

“நீங்களும் தான் சூப்பரா இருக்கீங்க மகிழ்.. “ . என்றாள்  கன்னம் சிவக்க..

“ஹே ரியலி !! சரி.. எப்ப இருந்து உனக்கு என்னை பிடிக்க ஆரம்பித்தது? என்று கேட்டவாறு அவள் கைகளுக்குள் தன் கையை பொருத்தி கொண்டான்.. உடனே அவளும் அவன்  முகம் பார்த்தவள்

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் தெரியல..  எப்ப, எப்படி எனக்கு பிடிக்க ஆரம்பிச்சதுனு   சரியா சொல்ல தெரியலை.. மே பி முதல் தரம்  உங்க மேல இடிச்சப்பயே உங்களை எனக்கு பிடிக்க ஆரம்பிச்சிருச்சுனு நினைக்கிறேன்..”என்று சிரித்தாள்..

“ஓ... சூப்பர் டீ... அப்புறம் எதுக்கு டீ  என்னை எப்ப  பார்த்தாலும்  சண்டக்காரன் மாதிரி சிலிர்த்துக்கிட்டிருந்த.? .” என்று மீண்டும் அவள்  கைகளை வருடியபடி கேட்டான்...

“வந்து.... அது என்னோட கேரக்டர்..யாராவது ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னால் அது எனக்கு பிடிக்காமல் போய் விடும்..

உங்களை எல்லாரும் நல்லவன் வல்லவன் னு சொல்லி தலையில தூக்கி வச்சு கொண்டாட, அது ஏனோ எனக்கு பிடிக்காமல் போய்டுச்சு.. அதான் உங்க மேல தேவையே இல்லாம வெறுப்பை இழுத்து புடுச்சு வளர்த்திகிட்டேன்..  “ என்று சிரித்தாள்..

“நல்ல கேரக்டர் டீ.. அப்ப உன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போல..” என்று சிரித்தவன்

“உன்னை பத்தி மது நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கா.. “ என்று சிரித்தவன்  உடனே  யோசனையாக

“தியா...மதுவை பெயர் சொல்லி கூப்பிடறதனாலயும் ஒருமையில் கூப்பிடறதனாலயும் உனக்கு பிரச்சனை இல்லையே..அது என்னவோ மதுவை அண்ணினு சொல்லி மரியாதை கொடுத்து கூப்பிட்டா தள்ளி வைக்கிற மாதிரி இருக்கு..“  என்றான் அவசரமாக  அவள் என்ன நினைத்து  கொள்வாளோ  என்று...

அதைக் கேட்ட சந்தியா மகிழனை முறைத்தவள்

“ஹலோ மங்கி...  அந்த மந்தி எனக்குத்தான்  முதல்ல பிரண்ட்..அப்புறம் தான் உங்களுக்கு அண்ணியாக்கும்..  எனக்கு அவள பத்தி தெரியும்.. நீங்க எப்பவும் போல மதுனே கூப்பிடுங்க.. நோ அப்ஜெக்ஷன்..

அதோடு உங்களை கட்டிக்கிட்டதுல எனக்கு இன்னொரு சந்தோஷம் என்னன்னா உங்க பேமிலி.. எனக்கு சிவா அத்தையை ரொம்ப புடிக்கும்..அந்த மந்தி பேசறப்ப எல்லாம் அத்தையை பத்திதான் அதிகமா புகழ்ந்து பேசுவா.. அதை கேட்டு கேட்டு எனக்கும் அவர் மாதிரி ஒரு மாமியார் வரணும்னு தோணுச்சு.. அவர்கிட்ட மணிக்கணக்கா பேசிகிட்டிருந்தாலும் போர் அடிக்காமல் இருக்கும்..  

அப்புறம் நான் பொறந்ததில் இருந்தே பார்த்து பழகிய மூஞ்சியான அந்த மந்தியே என் கூட எப்பவும் இருக்க போறா ன்றது இன்னும் சந்தோஷம்..அப்புறம் மாம்ஸ்..அவரை பத்தி சொல்லவே வேண்டாம்.. எவ்வளவு கலாய்ச்சாலும் அசறாமல் தாங்குவார்..

அடுத்து அகி குட்டி.. எனக்கு ஒரு தங்கச்சி இல்லைன்ற குறையை அவள பார்த்தாலே போய்டும்.. இப்படி எல்லாருமே என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்க, இந்த வீட்டில் வந்து நான் வாழப் போகிறேன் என்று தெரிந்ததும் எனக்கு டபுல் சந்தோஷம்..

எனக்கு என்னவோ நான் கல்யாணம் ஆகி வேற ஒரு புது  வீட்டுக்கு போற மாதிரியான பயமோ தயக்கமோ  இல்லை..எனக்கு ஏற்கனவே பழகிய என் வீட்டுக்கு போகிற மாதிரிதான் இருந்தது..

அதனால் நான் இங்கு வர்ரதுக்கு முன்னாடி இப்படி இருந்திங்களோ அதே மாதிரியே எப்பவும் இருங்க..எனக்காக எதையும் மாத்திக்க வேண்டாம்..அதுக்கு  அவசியமும் இல்லை.. “  என்றாள் சிரித்தவாறு..

அதை கேட்டு மகிழ்ந்தவன்

“ரொம்ப தேங்க்ஸ் தியா...எங்க வீட்டை பற்றி இவ்வளவு புரிஞ்சுகிட்டதற்கு...   என்று  அவள் கையை எடுத்து முத்தமிட்டான்.. அதில் குறுகுறுக்க, தன் கையை விலக்காமல்  ரசித்திருந்தவள் அப்பொழுது சந்தியாவுக்கும் ஏதோ நியாபகம் வர மகிழனை பார்த்தவள்

“மகிழ்... உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. “  என்றாள் தயங்கியவாறு...

“ஹ்ம்ம் சொல்லு டா.. என்ன அது? என்றான் ஆர்வமாக...

“வந்து...  நான் செல்வினு ஒரு பொண்ணை அடாப்ட்  பண்ணி இருக்கேன்.. அவளுக்கு எல்லா செலவையும் நான் போட்டு பார்த்து கிட்டு வர்ரேன்..இதுனால உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..” என்றாள் தவிப்புடன்..

அதை கேட்டவன் அவளை சீண்டி பார்க்க எண்ணி,

“ஹ்ம்ம்ம் இனிமேல் நீ அதை தொடரக் கூடாதுனு  சொன்னா என்ன செய்வ? “ என்றான் முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு..

அதை கேட்டவள் அமைதியாக சில நொடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தவள்

“என் மகிழ் அப்படி சொல்ல மாட்டார்.. “ என்றாள் தீவிரமாக..

அவளின் குரலில் இருந்த தீவிரத்தை கண்டு சிலிர்த்து போனவன்

“எப்படி சொல்ற? உனக்கு அவனை பற்றி எதுவும் தெரியாதே.. “ என்றான் தன் ஆர்வத்தை மறைத்து கொண்டு...

“ஹ்ம்ம்ம் எனக்கு அவனை பற்றி நல்லா தெரியும்..என் மகிழ் என்னை பற்றி நல்லா புரிந்து வைத்திருக்கிறான்.. எனக்கு எது புடிக்குமோ  அது அவனுக்கும் புடிக்கும்.. என் விருப்பத்துக்கு அவன் என்றும் குறுக்க நிக்க மாட்டான்..அதே மாதிரி அவனுக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிக்கும்... “ என்று பெருமையாக சொன்னாள்...

“ஹே.. அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற? ஒரு வேளை உன்கிட்ட அவன் நடிச்சிருக்கலாமே.. “ என்றான் சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா... என் புருஷனுக்கு நடிக்க எல்லாம் தெரியாது மகிழ்.. எப்படி அவ்வளவு உறுதியா சொல்றேனா என்னை பார்த்து என் அடாவடி தனத்தை பார்த்து  எத்தனையோ பேர் பயந்து போய் ஓடி இருக்கானுங்க.. என் கிட்ட வந்து எவனாவது லவ் கிவ் னு உளறினதில்லை..

ஆனால் முதன் முதலா என் புருஷன்தான் என் வெளித்தோற்றத்தை பார்க்காமல் என் உள்ளே இருக்கும் மனசை புரிஞ்சுகிட்டு என்னை உண்மையா காதலிச்சார்..

அப்படி என் மனசை பார்க்க தெரிந்த என் புருஷனுக்கு அதுக்குள்ள இருக்கிற ஆசையை பத்தி தெரியாமலயா போய்டும்..அதுவும் இல்லாமல் உங்களை பார்த்த உடனே என் மனசு சொல்லிடுச்சு.. நீங்க ஒரு நல்லவர் வல்லவர்.. யார் மனசையும் வருத்தப்பட வைக்க முடியாத உத்தமர் னு..

அதனால 200% என் புருஷன் செல்விக்கு நோ சொல்ல மாட்டார்..” என்று சிரித்தவள் அருகில் அமர்ந்திருந்தவன் இடுப்பை சுற்றிலும் கை போட்டு அவனை கட்டி கொண்டாள்...

அதில் மகிழனுமே நெகிழ்ந்து விட்டான்..

"என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள்..இதற்கு இருவருமே இதுவரை மனம் விட்டு பேசிக் கொண்டதில்லை.. அவர்கள் நிச்சயத்திற்கு பிறகு அடுத்த மாதமே முகூர்த்தம் வந்து விட, திருமண ஏற்பாட்டை கவனிப்பதிலயே நேரம் ஓடிப் போனது..கூடவே அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலையும் சேர்ந்து கொள்ள நிக்க நேரம் இல்லாமல் ஓட வேண்டியதாயிற்று..

இப்பொழுது அமர்ந்து பேசும் இந்த மாதிரி கூட அவளிடம் பேசி இருக்கவில்லை.. அப்படி இருக்க தன்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கிறாளே..என்று பெருமையாக இருந்தது..

உடனே அவனும் அவளை மெல்ல அணைத்து அவள் முன் உச்சி நெற்றியில் முத்த மிட்டு

"ரொம்ப தேங்க்ஸ் தியா... என்னை இந்த அளவுக்கு புரிஞ்சுகிட்டு  என் மீது நம்பிக்கை வைத்ததற்கு... 

ஹ்ம்ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான்.. எனக்கு செல்வியை பற்றி ஏற்கனவே தெரியும்.. இன்ஃபேக்ட் செல்வியை பற்றி நீ ஒரு நாள் ஆபிஸ் ல பேசிய பிறகுதான் உன் மீது எனக்கு இன்னுமே காதல் அதிகமானது..

அதோடு நிகிலன்  அத்தனை பெருசுகள வச்சு சமாளிக்கிறான்.. நான்  ஒரே ஒரு சின்ன பொண்ணை வச்சு  சமாளிக்க முடியாதா?

உன் விருப்பப்படியே நாம ரெண்டு பேரும் முறைப்படி செல்வியை தத்து எடுத்துக் கொள்ளலாம்..நம்ம வீட்டிலேயே செல்வி இருக்கட்டும்.. நமக்கு முதல் பொண்ணாக அவளே இருக்கட்டும்.. "  என்று அவள்  கைகளை அளந்தவாறே அவள் முகம் பார்த்து சொன்னான்..

அதைக் கேட்டு மகிழ்ந்தவள் உள்ளம் துள்ளி குதிக்க,

"ரொம்ப தேங்க்ஸ் மகிழ்.. நீதான் என் க்யூட் புருஷன்.." என்று மீண்டும் கட்டி கொண்டவள் பின் ஏதோ யோசனையாக

“வந்து...  அத்தை என்ன சொல்லுவாங்களோ? அவங்களுக்கு செல்வியை புடிக்குமா? “ என்றாள் சந்தேகமாக..

“ஹா ஹா ஹா..அம்மா பார்க்கறதுக்குத்தான் சீரியல் மாமியார் மாதிரி மிரட்டற மாதிரி இருக்கும்..ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப ஸாப்ட்.. எங்க விஷயத்துல எதுலயும் அம்மா தலையிட மாட்டாங்க.. என் கல்யாணம் கூட எனக்கு டைம் வேணும்னு சொன்ன உடனே கம்பெல் பண்ணாம விட்டுட்டாங்க..

அதனால் நம்ம வாழ்க்கையை  எப்படி அமைச்சுக்கிறதுங்கறது  நம்ம  கையில.. அம்மா எதுக்கும் குறுக்க நிக்க மாட்டாங்க.. ஒவ்வொன்றுக்கும் அம்மா பர்மிஷன் கேட்டுதான் செய்யணும் னு எல்லாம் எதிர்பார்க்க மாட்டாங்க..சோ டோன்ட் வொர்ரி.. “  என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தான்..  

“ஹ்ம்ம்ம் இருந்தாலும்.. வீட்ல பெரியவங்க இருக்கிறப்போ எந்த காரியம் பண்ணினாலும் அவங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டோ  சொல்லிட்டோ செய்யறது நல்லது..

அவங்க நமக்கு ஃப்ரீடம் கொடுத்து நம்ம இஷ்டத்துக்கு நடக்க சொல்லி இருந்தாலும் பெரியவங்க என்ற முறையில நாமலும் அவங்களை  கலந்துகிட்டு செய்தால் அவங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும்.. நமக்கும் அது மன நிறைவை தரும்... “  என்றாள் சிரித்தவாறு..  

அதைக் கேட்டவன் மகிழ்ந்து போய்

“பாருடா...  என் பொண்டாட்டிக்கு கூட  இப்படி எல்லாம் பொறுப்பா யோசிக்க, பேச தெரியுதே..அப்புறம் ஏன் என் மாமனார் இன்னும் என் பொண்டாட்டிக்கு பொறுப்பு வரலைன்னு சொல்லி என் கிட்ட அட்வைஸ் மழையா பொழிஞ்சார்.. “  என்று  தாடையில் கை வைத்து யோசித்தான்...

“ஹலோ...நான் எப்பவுமே பொறுப்பாதான் இருப்பேன்.. இந்த மணிக்கு தான் நான் இன்னும் வளராமல் அப்படியே சின்ன பொண்ணா இருக்கிற மாதிரியே நினைச்சுப்பார்..  எப்ப பாரு எனக்கு பொறுப்பு இல்லைனு  அட்வைஸ் பண்ணிக்கிட்டே  இருப்பார்..மத்தபடி நான் அல்ரெடி பிக் கேர்ள்தான்.. " என்று தோளை குலுக்கி சிரித்தாள்..

அதைக் கேட்ட மகிழனும் சிரித்தவாறு

"நீ சொல்றது சரிதான் தியா..  சண்முகம் மாமாவும் அப்படிதான்.. இன்னுமே மதுவை  தன் மடியில படுக்க வச்சிட்டு தட்டிக் கொடுப்பார்.. அப்பாக்களுக்கு எல்லாம் எப்பவுமே தங்கள் மகள் சின்ன பொண்ணாதான் தெரியும் போல..  

என் மாமனார், சண்முகம் மாமா அப்புறம் நிகிலன் எல்லாம் அவர்கள் பொண்ணை கொஞ்சறதை  பார்க்கிறப்போ எனக்கும்  அந்த மாதிரி பொண்ணு வேணும் னு இருக்கு.. நித்தி குட்டி , கார்த்தி குட்டி  மாதிரி ஒரு க்யூட் ஏஞ்சல் வேணும்... என்ன உனக்கு ஓகே வா ? என்று ஒரு மார்க்கமாக பார்த்து கண் சிமிட்டி சிரித்தான்..

சந்தியா அதில் கன்னம் சிவந்தாலும் தன்னை மறைத்து கொண்டு

“ஹ்ம்ம்ம் ரொம்பவும் ஆசைதான்.. சரி.. நீங்க சொல்லுங்க.. என்னை எப்ப இருந்து உங்களுக்கு  பிடித்தது? “ என்றாள் ஆர்வமாக..

இதுவரை அவனுடன் பேசி கொண்டிருந்ததில் அவள் தயக்கம் எல்லாம் நீங்கி தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு கதை அடிப்பதை போல இலகுவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன் கையை எடுத்து அவன் விரலுக்கு சொடக்கு எடுத்த படி அவன் கதையை கேட்டு கொண்டிருந்தாள் சந்தியா...

இருவருமே நீண்ட நாட்கள் பேசி பழகின மாதிரி எந்த தயக்கமும் இல்லாமல் கதை அடித்து கொண்டிருந்தனர்... மகிழன் தன் மனைவியின் செய்கையை ரசித்து கொண்டே 

"ஹ்ம்ம் எனக்குமே நீ எப்ப எப்படி என் உள்ளே வந்தனு  தெரியல தியா..  ஆனால் உன்னை முழுமையாக உணர்ந்தது உணர வைத்தது அந்த கொலுசு ஒலிதான்.. " என்றான் சிரித்தவாறு..

"என்னது கொலுசா? அது எப்ப? " என்றாள் கண்களை அகல விரித்து..

அவளின் அந்த அகன்ற விழிகளை ரசித்து பார்த்தவன் அதை மென்மையாக தன் இதழ்களால் ஒற்றி அவள் இமைகளை கீழிறக்கியவன் 

“அன்று ஆபிஸ் ஃபங்சன் அப்பத்தான்..நான் மாடிப்படியில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று அந்த கொலுசின் சத்தம் கேட்டது..அந்த சத்தம் தான் என்னுள்ளே உறங்கிக் கொண்டிருந்த இன்னொரு மகிழனை தட்டி எழுப்பி விட்டது.. அந்த சத்தத்தை வைத்துத் தான்  என்னவளை அன்றே கண்டுகொண்டேன்..

அந்த கொலுசுக்கு சொந்தக்காரிதான் என்னவள் என்று உறுதி செய்து கொண்டு அவளை தேட ஆரம்பித்தேன்..அதன் பிறகுதான் தெரிந்தது  அந்த  கொலுசுக்கு சொந்தக்காரி இந்த ராட்சசி என்று.. “ என்று சிரித்தவாறு அவளுடைய கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினான்..

உடனே அவளும் மகிழன் கையை தட்டி விட்டவள் தன் இடுப்பில் கையை வைத்து கோபமாக முறைத்து

“ஹலோ மங்கி....நான் என்ன ராட்சசி மாதிரியா இருக்கேன் ? “ என்று கோபப்பார்வை பார்த்து அவனை முறைத்தாள்..பழைய சந்தியா திரும்பி வந்ததை கண்டவன் உடனே அவன் பார்வை அவளுடைய முறைத்து கொண்டிருந்த  இதழுக்கு செல்ல,

“ஹா ஹா ஹா நீ ஆளை மிரட்டற அந்த ராட்சசி இல்லடி... இந்த மகிழனை முறைத்தே கவிழ்க்கற என் அழகான க்யூட் அன்ட் ஸ்வீட் ராட்சசி ..” என்று கண் சிமிட்டி சிரித்தவன் அவள் மீண்டும் முறைக்க எத்தனிக்க அடுத்த நொடி அவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன் அவளின் முறைத்த இதழை தன் வசபடுத்தி இருந்தான்...

அதில் கிறங்கி போனவள் கன்னங்கள் சூடேற, இமைகள் படபடக்க, அவன் சட்டையை இறுக்கி பிடித்து கொண்டு மையலுடன் அவன் மார்பில் தஞ்சம் புக, அவனோ  போதை ஏறியவனை போல அவளின் இதழை விடுத்து தன் மனையாளின் முகம் எங்கும் முத்தம் மழை பொழிந்து அவளை தன் வசப் படுத்தி  கொண்டான்...

அந்த அழகான ராட்சசியும் தன்னவனின் மோக அணைப்பில் அடங்கி விட,  அந்த புதுமண தம்பதிகளின் இல்லற வாழ்க்கை அழகாக தொடங்கியது அங்கே... 

மோதலில் ஆரம்பித்த  அவர்களின் அறிமுகம் காதலில் கலந்து திருமணத்தில் முடிய இதே போன்று காதலுடன் என்றென்றும் ஒருவருக்குள் ஒருவர் கலந்து மகிழ வாழ்த்தி விடைபெறுவோம்.. நன்றி!!!

*****சுபம்*****

ஹாய் பிரெண்ட்ஸ்,

என்னுடைய அலுவலகத்தில் நடந்த சில சுவையான சம்பவங்கள் மற்றும்   கற்பனையையும் சேர்த்து உருவாக்கியதுதான் இந்த கதை..பொழுது போக்கிற்காக எழுதிய இந்த கதை உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்...இந்த கதையை பொறுமையாக வாசித்து ரசித்த அனைவருக்கும் நன்றி!!!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!