என்னுயிர் கருவாச்சி-8

 


அத்தியாயம்–8

காலை எட்டரை மணிக்கே , அந்த ஆதவன் எழுந்து, தன் காலை கடன்களை முடித்து படு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தான்.

அவன் சுறுசுறுப்பில் அப்பாவி மக்களை எல்லாம் காலையிலயே காலில் வெந்நீரை கொட்டியதை போல ஓட வைத்துக் கொண்டிருந்தான்.

அதில் ஒருத்தியாய், தன் காலை வேலைகளை முடித்துவிட்டு, கல்லூரிக்கு செல்ல  கிளம்பி அவசர அவசரமாக பேருந்து நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.  

அன்று ஒரு நாள் பேருந்தை விட்டுவிட்டு ராசய்யாவின் புல்லட்டில் போனதிலிருந்து இப்பொழுதெல்லாம் நேரத்திற்கு கிளம்பி விடுகிறாள்.

சிலம்பாயி கொடுக்கும் வேலையையும் சீக்கிரம் முடித்துவிட்டு,  குளித்து முடித்து சீக்கிரம் கிளம்பி விடுகிறாள்.

கண்ணாடியை பார்த்துக்கொண்டு இப்பொழுது எல்லாம் நீண்ட நேரம்  நிற்பதில்லை. அப்படியும் நின்றால் அடுத்த கணம் , ராசய்யாவுடன் புல்லட்டில் சென்றது நினைவு வர, உடனே அருவருப்புடன் முகத்தை சுளித்தவள், கண்ணாடியை வைத்துவிட்டு வேகமாக தயாராவாள்.

அவசரமாக தலையை வாரிக் கொண்டு கிளம்பி விடுகிறாள். பேர் அன்ட் லவ்லியை மட்டும் எவ்வளவு அவசரத்திலும் மறக்காமல் போட்டுக் கொள்வாள்.  

ன்றும் அப்படித்தான்... பேருந்தை பிடிக்க பூங்கொடி வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கசற்று தொலைவில் இருந்து பார்த்தவளுக்கு  பேருந்து நிறுத்தத்தில் இருந்த கும்பல் கண்ணில் பட்டது.

இப்ப எதுக்கு இம்புட்டு கூட்டம் என்று யோசித்தவாறு நடையை வேகமாக்கினாள் பூங்கொடி.  

கொஞ்சம் அருகில் வரவும், லேசாக ஒதுங்கியிருந்த கூட்டத்தின் ஊடே உற்று பார்க்க, அங்கே ஒருத்தனை போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் ராசய்யா.

அதைப் பார்த்ததும் மீண்டும் அருவருப்பில் அவள் முகம் சுருங்கியது.  

“பொறுக்கி...பொது இடம் என்றும் பார்க்காமல், கொஞ்சம் கூட மனித தன்மையே  இல்லாமல் எப்படி நடந்துக்கிறான் பாரு. இங்க எத்தனை பேர் இருக்காங்க.  யாராவது தட்டிக் கேட்கிறார்களா? “  என்று உள்ளுக்குள் பொரிந்தவாறு வேகமாக அங்கு ஓடினாள் பூங்கொடி.  

அருகில் சென்றதும், அடி வாங்கிக் கொண்டிருந்தவனை உற்று பார்த்தாள்.  அசல் ஊர் போல. காமாட்சிப்பட்டியில்  அவனை பார்த்ததில்லை அவள்.

அந்த ஊரில் இருப்பதே ஐம்பது குடும்பங்கள் தான் என்பதால், அந்த ஊரில் இருக்கும் நண்டு சிண்டுகளில் இருந்து, பெரியவர்கள், இளைஞர்கள்  என எல்லாரையுமே அவளுக்கு தெரியும்

“முன்ன பின்ன பார்த்த மாதிரி தெரியலையே? இவன் யாராயிருக்கும்? ஊருக்கு புதுசோ?  எதுக்கு இந்த கருவாயன் அவனை போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கான்? “  என்று யோசனையுடன் வேகமாக ஓடிச்சென்று பார்த்தாள்.

அடி வாங்குகிறவனைப் பார்க்க பாவமாக இருந்தது. உடனே கூட்டத்தை விலக்கிகொண்டு உள்ளே சென்றவள்,   

“நிறுத்துங்க...எதுக்கு அந்த ஆளை போட்டு இப்படி அடிக்கிற?“  என்று வரிந்து கட்டிக் கொண்டு ராசய்யாவிடம் சண்டைக்கு சென்றாள்  பூங்கொடி.

“ஏய் பூங்கொடி...நீ எதுவும் பேசாத. இவனை எல்லாம் அடிக்கிறதோடு விடக்கூடாது.  போட்டிருக்கிற துணிய எல்லாம் உருவிட்டு உடம்புல ஒட்டு துணி இல்லாம நடுரோட்டில் ஓடவிட்டு அடிக்கணும்...”  மீண்டும் வேகமாக ஓங்கி அவன் முகத்தில் குத்தினான் ராசய்யா.

ராசய்யாவின் திடகாத்திரமான வலிமைக்கு, அவனின் அடி ஒவ்வொன்றும்  இடி போலத்தான் இறங்கி கொண்டிருந்தது.  அடி வாங்கியவன் வாயிலிருந்து பொளபொள வென்று ரத்தம் கொட்டியது.  

ஏற்கனவே கை,  கால், காது, மூக்கு  என்று ரத்தம் வழிந்து கொண்டிருக்க பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அதை பார்க்கவும் மனம் கேட்காமல்,

“எதுக்கு இந்த ஆள போட்டு  இம்புட்டு அடி அடிக்கற? அப்படி என்னதான் செஞ்சான்?. எது செஞ்சிருந்தாலும் பேசி தீர்த்துக்கங்க...” என்று பஞ்சாயத்து பண்ண,

“பூங்கொடி...திரும்பவும் சொல்றேன்... நீ இதுல தலையிடாத. இதெல்லாம் பேசி தீர்க்கற சமாச்சாரம் இல்ல. நீ எதுவும் பேசாம போய்  ஓரமா நில்லு...”  அவளை அதட்டினான் ராசய்யா... அவன் முகத்திலோ அப்படி ஒரு ரௌத்திரம்.

இதுவரை அவளிடம் வம்பு இழுத்து சீண்டும் ராசய்யாவைத்தான்  பார்த்திருக்கிறாள் பூங்கொடி .  

கோபத்தின்  உச்சமாய்,  அருள் வந்து ஆடும் கருப்பண்ண சாமியைப்  போல வானத்துக்கும் பூமிக்குமாய் விரைத்துக் கொண்டு நின்றிருந்தவனை பார்க்க அவளுக்குமே  கொஞ்சம் அச்சமாகத்தான் இப்பொழுது தெரிந்தது.  

ஏன் எல்லாரும் அவனை கண்டு பயந்து ஒதுங்குகிறார்கள் என்று இப்பொழுது புரிந்தது.

“இப்படி,  ருத்ர தாண்டவம் ஆடும் சிவபெருமான் மாதிரி நிக்கிறவனை எதிர்த்துக்கொண்டு மோத யாருக்கு தைர்யம் வருமாம். அதுதான் இவன் பண்ணும் அராஜகத்தை எல்லாம் தட்டி கேட்காமல் ஒதுங்கி கொள்கிறார்கள் இந்த ஊரில் இருக்கும் வீராதி வீரர்கள்...சூராதி சூரர்கள்.

அவர்கள் வேண்டுமானால் இவனைக்  கண்டு  பயந்து கொண்டு இருக்கட்டும். ஆனால் இந்த பூங்கொடி அப்படி ஒன்றும் விட்டுவிட மாட்டாள். அப்படி என்னதான் செய்துவிடுவான்? என் தலையை சீவிடுவானா? “ என்று தன் தலையை சிலுப்பிக்கொண்டவள், அடி வாங்கியவனை மீண்டும் பார்க்க,     இன்னுமாய்  பாவமாக இருந்தது.

மிருகங்களையே மனிதர்கள் துன்புறுத்தக்கூடாது என்று சட்டமே கொண்டு வந்திருக்க, ஆறறிவு கொண்ட ஒரு மனிதனை,  இன்னொரு மனிதன் இப்படி மாட்டை அடிக்கிற மாதிரி அடித்துக்கொண்டிருப்பதை அவளால் காண இயலவில்லை.

உடனே ராசய்யாவின் மீது கோபம் பொங்கி வர, இப்பொழுது ராசய்யாவின் முன்னால் சென்று சட்டமாக நிமிர்ந்து நின்றவள்,  

“யோவ்... உனக்கு கொஞ்சமாச்சும் ஈவு இரக்கம் இல்லையா?  அந்த ஆள்தான் விடச்சொல்லி கெஞ்சறான் இல்ல. விட்டுத்தொலைக்காம ஏன் இப்படி போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிற?

இது அராஜகம்.. உன் ரௌடித்தனத்தை எல்லாம் இப்படித்தான் காட்டுவியா? இப்ப இவனை விடப் போறியா இல்லையா? “  என்று மீண்டும் அவனிடம் சண்டைக்குப் போனாள்  பூங்கொடி.

அதைக்கேட்டு பொங்கி எழுந்தவன்

“பூ ங் கொ டி....”  என்று ஒவ்வொரு எழுத்தாக சொல்லி ஊரே அதிரும்படி உருமினான் ராசய்யா.  

அதைக்கேட்ட பெண்ணவளுக்கோ  கொலை நடுங்கியது.  அனைவருமே  அவனின் உருமலில் அதிர்ந்து இரண்டடி தள்ளி நின்று கொண்டார்கள்.

பக்கத்தில் நின்றிருந்த வயதான மூதாட்டி,  பூங்கொடியின் கையை பற்றி இழுத்து

“நீ வா தாயி... இதெல்லாம் ஆம்பளைங்க விஷயம். உனக்கு ஒன்னும் தெரியாது. நீ போய் இதுல தலையிடாத...”  என்று இழுத்துக்கொண்டு செல்ல முயல,  அவளோ  பாட்டியின் கையை உதறியவள் மீண்டும் சிலிர்த்துக் கொண்டு வந்து அவன் முன்னால் நின்றவள்,

“யோவ்... நீ இப்படி கத்தினா, அதைக்கண்டு இந்த ஊர் வேணா பயந்து நடுங்கலாம். ஆனால் இந்த பூங்கொடி ஒண்ணும் பயந்துக்கிட  மாட்டேன்.  அப்படி பயந்துக்கற ஆள் நான் இல்லை...இப்ப அவனை விடப்போறியா இல்லையா? ”  என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவனிடம் வாதிட்டாள் பெண்ணவள்.

“பூங்கொடி.... அவன் என்ன செஞ்சானு உனக்கு தெரியாது..நீ பேசாம போ...” என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பினான் ராசய்யா. தன் கை முஷ்டியை இறுக்கியவாறு. அவளோ அதற்கெல்லாம் அசரவில்லை.  

“இந்த ஆள் என்ன செஞ்சு இருந்தாலும் இப்படி அடிக்கிறது தப்பு...நீங்க செய்யறது தப்பு...”  அவனை நேருக்கு நேராக பார்த்து விரல் நீட்டி  மிரட்டி சொல்ல,  அதைக் கேட்ட  ராசய்யாவுக்கு தன் கோபத்தை மறந்து ஒரு நொடி கண்ணில் மின்னல் வெட்டிச்  சென்றது


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!