என்னுயிர் கருவாச்சி-18

 


அத்தியாயம்-18

ப்பாப்ளீஸ்ப்பா... இந்த ஒரு டைம் மட்டும். ப்ளீஸ் ப்பா...”  என்று தன் தந்தையின் காலில் விழாத  குறையாக தன் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

“இல்ல பாப்பா... அதெல்லாம் முடியாது. அம்புட்டு தூரம் உன்னை தனியா அனுப்ப மாட்டேன்...”  என்று தன் முகத்தை முயன்று கடுமையாக்கி கொண்டு மறுத்தார் தணிகாசலம்.  

எங்கே தன் மகளின் கெஞ்சலுக்கு மசிந்து அவள்  கேட்டதற்கு தலையை ஆட்டிவிடுவாரோ என்ற  கலவரத்துடன் தன் கணவனை பார்த்துக் கொண்டிருந்த சிலம்பாவுக்கு அப்போது தான் நிம்மதி வந்தது.

தன் மகளை பார்த்து முறைத்தவர்

“ஏன் டி...அப்பா தான் இவ்வளவு தூரம் சொல்றாங்க இல்ல. ஒரு தரம்  வேண்டாம் னா  வேண்டாம் தான். இப்படி கெஞ்சறத விட்டுப்புட்டு ஆக வேண்டிய  சோலியப்  பாரு...”  என்று முறைக்க,  இப்பொழுது தன் தந்தையிடம் கெஞ்சுவதை விட்டுவிட்டு தாயிடம் சரண் அடைந்தாள் பூங்கொடி.  

அம்மா... நீயாவது சொல்லேன்... நான்  தனியாவே போய்க்குவேன். ப்ளீஸ் மா...இன்னைக்கு போய்ட்டு வந்து நாளைக்கு வயல்ல எல்லா வேலையும் நானே செஞ்சு தர்ரேன்...”

என்று  முன்பு பாடிய பாட்டை இப்பொழுது திருப்பி பாட, அதில் கொஞ்சமும் மனம் இறங்காத சிலம்பாயி தன் திட்டை தொடர்ந்து கொண்டிருந்தார்.

அதே நேரம் தன் புல்லட்டை நிறுத்திவிட்டு வீட்டிற்கு உள்ளே வந்தான்  ராசய்யா.  

உள்ளே  வந்தவன்  ஒரு நொடி  பார்வையால் அங்கு இருந்தவர்களின் முகத்தை படித்துவிட்டு பூங்கொடியிடம் வந்து நின்றது  அவன் பார்வை.  

ஏற்கனவே கடுப்பில் இருந்தவள், ராசய்யாவை அங்கே காண,  இன்னுமே கடுப்பானவள் அவனை  பார்த்து முறைத்தாள்.

“இருக்கிற பிரச்சனை போதாதுனு இவன் ஒருத்தன் நடுவுல வந்து நிக்கறான்...இனிமேல் அப்பா இவன் கூட பேச ஆரம்பிச்சிடுவார்...”  என்று  உள்ளுக்குள் புலம்பினாள் பெண்.

அவளின் முறைப்பை   சட்டை செய்யாதவனாய் தணிகாசலம் பக்கம் திரும்பியவன்  

“மாமா...டவுனுக்கு போறேன்... வயலுக்கு ஏதாச்சும் வேணும்னா சொல்லுங்க.. வாங்கிட்டு வர்ரேன்...”  என்று அப்பொழுது அவன் அங்கு  வந்த வேலையைச் சொன்னான்.

இது பொதுவாக நடப்பதுதான்.

அவன் முசிறிக்கு செல்லும்பொழுதெலலம் வயலுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து , விதை என தணிகாசலத்துக்கு தேவையானதை அவனே வாங்கி வந்து கொடுத்து விடுவான்.

தணிகாசலம் என்று இல்லை... யாரெல்லாம் முசிறிக்கு நேராக செல்ல முடியாதோ எல்லாரும் ராசய்யாவிடம் தான் சொல்லி விடுவார்கள்.

நேற்று தணிகாசலம் நெல் வயலுக்கு அடிக்க பூச்சி மருந்து  வாங்க வேண்டும் என்று சொல்லி இருக்க, அதைக்கேட்டு செல்ல என வந்திருந்தான் ராசய்யா.

எப்பொழுதுமே ராசய்யாவை பூங்கொடிக்கு பிடிக்காது. அதுவும் அந்த சம்பவத்திற்கு பிறகு அவன் மீது தீராத கோபத்தில் இருக்கிறாள். அப்படி இருந்தவள் இன்று அவனை பார்த்துவிட, அவள் கோபமெல்லாம் அவன் பக்கம் திரும்பியது.  

“ஆமா...இவன் வாங்கி வரலைன்னா வேற ஆளே இல்லையா? என்னமோ பெரிய கலெக்டர் வேலைக்கு போற  மாதிரி ஆக்சனை பாரு...  இந்த எடுபுடி வேலைக்கே இந்த பந்தா...

இப்ப இவன கவனிக்கிறதுல அப்பா என்னைய மறந்துடுவாரே...”  என்று மீண்டும் உள்ளுக்குள் அவனை அர்ச்சனை பண்ணியவள் பின் தணிகாசலம் ராசய்யாவிடம் போவதற்கு முன்னால் குறுக்கே புகுந்தவள் 

தன் தந்தையை பார்த்து

“அப்பா ப்ளீஸ் பா...இந்த ஒரு தரம் மட்டும்... ப்ளீஸ் பா...”  என்று சற்றுமுன் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து  கெஞ்சினாள் பூங்கொடி.

அவள் எதற்காக கெஞ்சுகிறாள் என்று புரியாமல் கேள்வியுடன்   தணிகாசலத்தை பார்க்க,  ராசய்யாவின் பார்வையை  புரிந்து கொண்டவராய் காரணத்தை சொன்னார்.

“அது ஒன்னும் இல்ல மாப்ள. பாப்பா  படிக்கிற காலேஜிலிருந்து ஏதோ விளையாட்டு போட்டிக்கு எல்லாரும்  போறாங்களாம். அதற்காக திருச்சிக்கு  போகணுமாம்.  அதுக்குத்தான் விடச்சொல்லி நச்சு பண்ணிக்கிட்டு இருக்கு... என்று சலிப்புடன் சொல்ல,

அது ஒன்னும் ஏதோ ஒரு விளையாட்டு இல்லப்பா.. கோ-கோ விளையாட்டு. எங்க டீம் லயே நான்தான் நல்லா விளையாடுவேன். என்ன நம்பிதான் எங்க டீம் போட்டியில் கலந்துக்க இருக்கறாங்க.

இப்ப நான் போகலைனா எங்க டீம் தோத்துடும் பா... ப்ளீஸ் ப்பா... “ என்று தன் விளையாட்டு திறமையை பற்றி பெருமையுடன் ஆரம்பித்து, பின் கெஞ்சலில் முடித்தாள் பூங்கொடி.

“நல்ல விஷயம் தானே மாமா... பூவு நல்லா விளையாடும் மாமா.  நம்ம புள்ள வெளி ஊருக்கு சென்று விளையாடுவது நமக்கும் பெருமை தான... யோசிக்காம அனுப்பி வைங்க...”  என்று பூங்கொடிக்காக வக்காலத்து வங்கினான் ராசய்யா...

“ஆஹான்... ரொம்ப அக்கறைதான்...என்னமா என் மேல அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்கிறான்.  ஆமா... இப்ப எதுக்கு இந்த அக்கறை சக்கரை எல்லாம்... என்ன ப்ளான் பண்றானாம்? “ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

“ஹ்ம்ம் அங்கதான் சிக்கலே மாப்ள... எனக்கு மட்டும் ஆசை இல்லையா என் புள்ள விளையாட்டுல ஜெயிச்சுட்டு வரோணும்னு... இன்னைக்குனு பார்த்து வயல்ல வேலை நிறைய கிடக்கு. வாழக்காட்டுக்கு உரம் வைக்கணும். ஆளுங்கள வேற வரச்சொல்லிட்டேன். நான்  கூட இருந்து பார்த்து செய்யணும்.

நெல்லங்காட்டுக்கு மருந்து அடிக்கணும். இப்படி  ஏகப்பட்ட வேலை கிடக்க. இதுல இந்த புள்ளைய வேறு திருச்சிக்கு கூட்டிகிட்டு போனால் ஒருநாள் பொழப்பு போய்டும்.  அதுதான் அதெல்லாம் வேண்டாம் னு  சொல்லிக்கிட்டு இருக்கேன்...”  என்று தன் நிலையை விளக்கினார் தணிகாசலம்.  

“அப்பா... நீங்க ஒன்னும் கூட வர வேண்டாம்.  நான் என்ன சின்ன புள்ளையா நீங்க என்னை கூட்டிக்கிட்டு போறதுக்கு. நான் மட்டுமே தனியா போய்ட்டு வந்திடுவேன்...ப்ளீஸ்ப்பா... நான் போக பெர்மிசன் கொடுங்க..”  என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள் பூங்கொடி.  

வளுக்கு இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை, கனவு எல்லாம்.

பள்ளியில் இருந்தே கோ-கோ விளையாட்டின்மீது ஆர்வம் அதிகம். பள்ளியில்  பி.டி பீரியட் ல் பிள்ளைகளோடு விளையாடுவது... அவ்வபொழுது தெருவில் இருக்கும் பிள்ளைகளோடு விளையாடுவதோடு சரி.

விளையாட்டு போட்டி என்று பெரிதாக விளையாண்டதில்லை.

கல்லூரியில் சேர்ந்ததும் இந்த மாதிரி கல்லூரிகளுக்கு இடையிலான் பல போட்டிகள் இருக்கும். அதில் கோ-கோ ம் உண்டு என்று அறிந்ததுமே துள்ளி குதித்தாள் பூங்கொடி.  

பி.டி மாஸ்டரிடம் சென்று தனக்கு கோ-கோ நன்றாக விளையாட வரும். அதில் அவளை சேர்த்துக்க சொல்லி தைர்யமாக கேட்டுவிட, அவரும் அவளை பரிசோதித்துவிட்டு  அந்த கல்லூரியின் பெண்கள் அணியில் சேர்த்துக் கொண்டார்.

அதோடு இன்னும் கொஞ்சம் ட்ரெயினிங் கொடுக்க, இன்னுமே அந்த விளையாட்டு ரொம்பவும் பிடித்து போனது. இந்த போட்டிக்காக  ஆரம்பத்தில் இருந்து அவளை தயார் படுத்தி வந்தாள்.

வழக்கமாக பெண்களை அந்த கல்லூரியில் இருந்து வெளியில் போட்டிக்கு என்று  அழைத்து சென்றதில்லை இதுவரை.

அவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அது ரிஸ்க் என்று அந்த கால கட்டத்தில் பெரிதாக பெண்களின் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதனால் அந்த கல்லூரிக்குள் விளையாடுவதோடு நின்று விடும் அந்த பிள்ளைகளின் திறமை.

ஆனால் இந்த வருடம் பெண்கள் அணி எப்படியாவது திருச்சி மாவட்ட கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில்  விளையாட வேண்டும்.

தங்கள்  கல்லூரிக்கு பெருமை  சேர்க்க வேண்டும் என்று எப்படியோ இந்த முறை அவள் கல்லூரியின்  பி.டி மாஸ்டர், கல்லூரி  முதல்வரிடம் எடுத்துச் சொல்லி,  பெண்களை  அந்த  போட்டிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வாங்கியிருந்தார்.  

ஆனால் அங்கு செல்வதற்கு அவரவராகவே சொந்த செலவில், விளையாட்டு நடக்கும், திருச்சி மாவட்டம், காட்டூரில் உள்ள  உருமு தனலெக்ஷ்மி கல்லூரிக்கு வந்து விட வேண்டும் என்று சொல்லிவிட அதற்குத்தான் பூங்கொடி அவள் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.  

அதுவும் திடீரென்று நேற்றுதான் இந்த போட்டியை பற்றி  சொல்லி நாளைக்கு எல்லாரும் நேராக காட்டூர்  உருமு தனலெக்ஷ்மி கல்லூரிக்கு வந்து விட வேண்டும் என்று  சொல்லிவிட, தன் தந்தையிடம் சொல்ல இரவு காத்திருந்தாள் பூங்கொடி.

அவள் நேரம்... நேற்று இரவு தணிகாசலம் வீட்டிற்கு வர நேரமாகியிருக்க, அவள் உறங்கிவிட்டாள்.  அவளால்  சொல்ல முடியவில்லை.

இன்று காலை எழுந்ததும் அவர் வயலுக்கு சென்றுவிட, பூங்கொடியும் பரபரவென்று தன் வீட்டு வேலைகளை செய்துவிட்டு தன் தந்தைக்காக காத்திருந்தவள், அவர் வந்ததும் தன் கோரிக்கையை முன் வைத்து இதோ போராடிக் கொண்டிருக்கிறாள்.

******

னோ தன் மகளை மட்டும் தணியாக அனுப்ப மனம் இல்லை பெரியவருக்கு. அந்த மாதிரி அவளை வளர்க்கவில்லை அவர் .

அப்படி இருக்க, திடீரென்று  தன் பிள்ளையை அவ்வளவு தூரம் தனியாக அனுப்பி வைக்க மனம் இசையவில்லை.

“நீ சின்ன புள்ள பாப்பா.  உனக்கு உலகம் தெரியாது.  காலம் எவ்வளவு கெட்டு கிடக்குது தெரியுமா?  ஒரே பஸ்ஸா இருந்தாக்கூட ஏத்தி விட்டு விடுவேன்.  இது வேற திருச்சி போய் அங்கிருந்து வேற பஸ் ஐ புடிச்சி காட்டூர்க்கு போவோணும்.

அதெல்லாம் வேலைக்கு ஆகாது.  உன்னை அம்புட்டு  தூரம் தனியா அனுப்பிட்டு நாங்க இங்க பயந்துகிட்டு இருக்கோணும்.  அதனால இந்த பேச்ச இதோட விடு... போய் சோலிய பாரு..”  என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் பெரியவர்.  

இளையவளோ மனம் வாடிப்போய் விட, தன் முயற்சியை விடாமல்,

“அப்பப்பா...  ப்ளீஸ்ப்பா...”  என்று மீண்டும் கெஞ்ச,  அவளின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தையும்,  கண்களில் மின்னிய கனவையும் கண்ட ராசய்யாவுக்கு கஷ்டமாக இருந்தது.  

பின் திடீரென்று ஏதோ யோசனை வர

“மாமா...  உங்க பிரச்சனை என்ன? பூவ தனியா அனுப்பக்கூடாது அம்புட்டுதானே.  நான் வெட்டியா தான் இருக்கேன். நான் வேணா கூட்டிகிட்டு போயிட்டு வரட்டுமா?”  என்றான் தயக்கத்துடன்.  

அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் பூங்கொடி.  ஏற்கனவே ஒருமுறை அவளிடம் அவன் நடந்து கொண்டது கண் முன்னே வர திடுக்கிட்டது பெண் மனம்.

“ஆஹான்...சோலியன் குடுமி சும்மா ஆடாதுங்கிற மாதிரி, இந்த பொறுக்கி இம்புட்டு நேரம் எனக்கு வக்காலத்து வாங்கி என்னை தாங்கி பேசின தெல்லாம் இதுக்குத்தானா?

நான் என்னவோ என் மீது இருக்கிற அக்கறையினாலதான் சப்போர்ட் பண்றானு நினைச்சேன்...

இந்த கருவாயனோடு நான் தனியா போவதா?  அன்னைக்கே என்கிட்ட அப்படி நடந்துகிட்டான்...”  என்று அவனை பார்த்து முறைத்தாள் பூங்கொடி.

ராசய்யா சொன்னதைக்கேட்ட தணிகாசலமும் தலையை சொரிந்தவாறு யோசித்தவர்

“இல்ல  மாப்ள...  அது வந்து...”  என்று தயக்கத்துடன் தலையைச் சொரிந்தார் தணிகாசலம்.  

“இதுல யோசிக்க என்ன மாமா இருக்கு. என்னைய பத்தி நல்லா தெரியும் இல்ல. நம்ம புள்ளைய பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்துடுவேன்.  

பாவம் எவ்வளவு ஆசையா கேக்குது.  அது ஆசைய  நிறைவேத்தி வைங்க மாமா...”  என்று தணிகாசலத்தை  கன்வின்ஸ் பண்ண முயன்றான் ராசய்யா.  

அதைக்கேட்ட பூங்கொடிக்குத்தான் தவிப்பாக இருந்தது.  

“இவனை பத்தி தெரியாதா னு வேற கேட்கறானே? இவன் என்கிட்ட  அப்படி நடந்துகிட்டது இன்னும் அப்பாக்கு தெரியாதே... அதனால தான் தைரியமா என்னை அவன் கூட அனுப்பி  வைக்கச் சொல்கிறான்...பொறுக்கி ராஸ்கல்...”  என்று உள்ளுக்குள் ராசய்யாவை வறுத்து எடுத்தாள்  பூங்கொடி.

ராசய்யா கூட போக இருந்த தவிப்பை மேலும் தொடராமல், அவளுக்கு சிரமமே வைக்காமல், அடுத்த முட்டுக்கட்டையை போட்டார் சிலம்பாயி.

இல்ல ராசு.. அதெல்லாம் சரி வராது. இப்ப இவ  விளையாட்டு போட்டியில் போய் விளையாண்டு என்ன  தங்க பதக்கமா வாங்கிட்டு வரப்போறா? சும்மா காலேஜ்க்குள்ள விளையாடறது தான.

அதைத்தான் நம்ம தெரு புள்ளைங்களோட எப்பொழுதும் குதிச்சுகிட்டே இருக்கிறளே... அதுவே போதும்...” என்று சிலம்பாயி வேறு குறுக்கே புகுந்து ராசய்யாவை தடுத்தாள்.

“அது அப்படி  இல்ல அத்தை.. இது நம்ம தெருவுல விளையாடற மாதிரி இல்ல. இந்த போட்டியில் ஜெயிச்சா அடுத்து மாவட்டங்களுக்கு இடையில்  நடக்கும் போட்டியில் கலந்துக்கலாம். அதுலயும் பூவு நல்லா விளையாண்டா  மாநில அளவில கூட விளையாட வாய்ப்பு இருக்கு.

பேப்பர்ல டிவி ல எல்லாம் கூட உங்க பொண்ணு போட்டோ வரும்...அவ்வளவு  ஏன் பொண்ணோட அம்மா அப்பானு நீங்க கூட டி.வி ல  வரலாம்...” என்று சிலம்பாய்க்கு ஆசை காட்ட,  அதில் எல்லாம் என்னை வீழ்த்திட முடியாது என்று சிலிர்த்துக் கொண்டவர்

“ஐயோ அப்படி எல்லாம் வந்தா வேண்டவே வேண்டாம். அதுக்கு பொறவு இவ பாட்டுக்கு பெரிய அளவில் விளையாடறேனு கிளம்பிட்டா அப்புறம் இவ உசரத்துக்கு மாப்பிள்ளைய எங்க தேடறது.

இப்பவே நம்ம பக்கம் காலேஜ் போய் படிச்ச பயலுங்களே கம்மி. எல்லாரும் வாத்தியார் அடிக்கு பயந்து கிட்டு பத்தோ , பன்னென்டோட படிப்பை நிறுத்திக்கிறானுங்க.

அதனாலதான் காலேஜ் க்கு இவளை அனுப்ப வேண்டாம்னு தலையால அடிச்சுகிட்டேன்..

இந்த மனுஷன் தான் கேட்காம பொண்ணு ஆசைப்படறார்னு காலேஜ்க்கு அனுப்பி வச்சாரு. இடத்தை கொடுத்தா மடத்தை பிடிச்சானாம் ஆன்டி.

காலேஜ்க்கு போ னு அனுப்பி வச்சா, இப்ப இவ விளையாட போவேன் னு வந்து நிக்கறா.... அதெல்லாம் வேலைக்கு ஆகாது...இவ ஒன்னும் விளையாட போக வேண்டாம்...“ என்று சிலம்பாயி நீட்டி முழக்க, ராசய்யாவுக்கே எரிச்சலாக இருந்தது.

நல்லா விளையாடற புள்ளைய கல்யாணம் அது இதுனு சொல்லி கட்டி போடறாங்களேனு கோபமாக வந்தது. ஆனாலும் பெத்தவங்க சொல்றப்ப நாம் எதுவும் செய்ய முடியாது என்று பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டான்.

“அப்படி எல்லாம் இல்ல அத்த. அப்படியே ஆனாலும் அது அப்புறம் தான். இப்போதைக்கு பூவு போய் விளையாண்டுட்டு வரட்டும். மேல என்ன செய்யலாம்னு பொறவு யோசிச்சுக்கலாம்... என்ன   மாமா நான் சொல்றது சரிதான ? “ என்று முடிவை தணிகாலசத்திடம் வைத்தான்.

அதாவது அத்தை  வாயை அடைத்து நீ ஒரு நல்ல முடிவா சொல்லு மாமா என்று கண்ணால் ஜாடை வேறு காட்டி வைத்தான்.   

தணிகாசலம் மீண்டும் யோசிக்க,  மறுபடியும் ராசய்யா பூங்கொடிக்காக சப்போர்ட் பண்ணி எடுத்துச் சொல்ல,  இறுதியாக அவனே வெற்றி பெற்றான்.  

“சரிய்யா மாப்ள....  நீ இம்புட்டு தூரம் சொல்றதனால  உனக்காக பார்க்கிறேன் உனக்கு சிரமம் இல்லேனா ஒரு நடை கூட்டிக்கிட்டு போயிட்டு வா...” என்று அனுமதி அளிக்க,  அதில் இன்னுமாய்  அதிர்ந்து போனாள்  பெண்.  

அவள்  தந்தை யாரையும் அவ்வளவு எளிதாக நம்பிவிட மாட்டார் தான்.  

அவளை தனியாக அனுப்ப அவ்வளவு யோசித்தவர்,  இந்த கருவாயனுடன்  அனுப்ப முன்வந்தது தான் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  

“அப்படி என்றால் இந்த கருவாயனை இவ்வளவு தூரம் நம்புகிறாரா அவள் தந்தை?  அவன்  அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இல்லையே என்னிடம் அப்படி நடந்து கொண்டானே...

இப்பொழுது என்ன செய்வது?  அவனுடன் போவதா?  வேண்டாமா?  அவனுடன் போகவில்லை என்றால் கண்டிப்பாக அவள்  அப்பா அவளை தனியாக திருச்சிக்கு  அனுப்ப மாட்டார்.  

இந்த போட்டியை இத்தோடு மறந்துவிட வேண்டியதுதான்.  விளையாட்டா?  இல்லை இந்த பொறுக்கியை சமாளித்துக்கொண்டு அவனுடன் செல்வதா? “   என்று தன் மனதுக்குள் அவசரமாக குட்டி பட்டிமன்றம் ஒன்றை நடத்தினாள் பூங்கொடி.

“அன்னைக்குத்தான் நான் ஏதோ அசந்து போயிட்டேன். என்கிட்ட அப்படி நடந்து கொண்டான். இந்த முறை  விழிப்போடு இருந்தால்,  அவன் என் கிட்ட கூட வர விடாமல் தடுத்து விடலாம்.  

அந்த சம்பவத்திற்கு பிறகு அவளிடம் பெரிதாக எதுவும் வம்பு செய்வதில்லை ராசய்யா. அவளைக் கண்டாலே கொஞ்சம் ஒதுங்கி சென்று விடுகிறான் தான் எப்பொழுதாவது தான் கருவாச்சி என்று அழைத்து வம்பு இழுப்பான்.

ஆனாலும்  இவன்  நல்லவன்   என்று நம்பி விடக்கூடாது.  அந்த குமரேசன் பய கூட சேர்ந்துக்கிட்டு இவனும் கூட ஏதாவது பிளான் பண்ணி இருக்கலாம்.  இல்லனா  எதுக்காக  எனக்காக வக்காலத்து வாங்கிகிட்டு இம்புட்டு தூரம் தம் கட்டி எனக்காக பேசிகிட்டு இருக்கான்,..” என்று அவன்  பக்கம் இருந்த நல்லதையும், வேற மாதிரியும் யோசித்துப் பார்த்தாள் பெண்.

சற்று நேரம் எல்லா பக்கமும் இருந்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, அதே நேரம்

“என்ன  பாப்பா... நீ  ராசு கூடவே போயிட்டு  வந்துடறியா?   என்று தணிகாசலம் தன் மகளை கேட்க,  அவள்  என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்தாள்.  

அவளின் முழியில் இருந்தே அவன்  உடன் வருவதற்கு அவளுக்கு பிடிக்கவில்லை என புரிய, அதை கண்டு கொண்டவனுக்கு உரல் விறைதது.  முகம் இறுகியது.  தணிகாசலத்தை பார்த்தவன்

“சரி மாமா... பூவுக்கு என் கூட வர இஷ்டமில்லை போல.  வேணும்னா வேற யாரையாவது ஏற்பாடு பண்ணி தரவா? “  என்று தணிகாசலம் இடம் கேட்க, அதைக்கேட்டு  பதறியவள்

“இல்லை... இல்லை.... இஷ்டம் தான்....” என்று அவசரமாக சொல்லி வைத்தாள்.

இவன் பாட்டுக்கு வேற யாரையாவது ஏற்பாடு பண்றேன் என்று போய்விட்டால், நேரம் விரயம் ஆகும். அதோடு வேற யாரும் முன்ன பின்ன பார்த்திராதவனை கூட அனுப்பிட்டா? அவன் எப்படி இருப்பனோ?

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு பரவாயில்லை. அதைப்போல யாரோ ஒருத்தன் கூட போறதுக்கு இவனே பெட்டர். ஏதாவது வாலாட்டினால் நம்ம கை வரிசையை காட்டிட வேண்டியதுதான்..”   என்று அவசரமாக முடிவெடுத்தவள் இஷ்டம் என்று சொல்லி வைத்தாள்.  

அதைக்கேட்டு ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது ராய்யாவின் முகத்தில்.

“எதுக்கு இஷ்டமாம்? “  என்று அவளின் காதருகில் அவளுக்கு மட்டுமே கேட்கும் படி கேட்டு வைக்க, அதைக்கேட்டு விதிர்விதிர்த்து போனாள் பெண்ணவள்.

அவனை முறைத்தவள்

“உன் கூட வரத்தான்...”  என்று சொல்லவும் அப்பொழுதுதான் அதிலிருந்து அர்த்தத்தை புரிந்து கொண்டு மீண்டுமாய் அவனை எரிக்கும் பார்வை பார்த்து முறைத்தாள்

அவனோ கண் சிமிட்டி குறும்பாக புன்னகைக்க,  இவளுக்கோ  பற்றிக்கொண்டு வந்தது.

“ஆனாலும் இப்பொழுது கோபத்தை வெளிக்காட்டினால்  காரியம் கெட்டுவிடும். போட்டிக்கு போனமாதிரிதான்... “  என்று யோசித்து  தன் கோபத்தை தணித்துக் கொண்டாள்.

அவனும் இப்பொழுது  இயல்பாய் முகத்தை வைத்துக்கொண்டவன்

“சரி பூவு.. நீ போய்  சீக்கிரம் கிளம்பி வா.  நம்ம புல்லட்டிலயே முசிறி போயிடலாம். அங்கிருந்து திருச்சிக்கு பஸ் புடிச்சுக்கலாம்...”

என்று அவளை விரட்டியவன், தணிகாசலம் பக்கமாய் திரும்பியவன், அவர் முகத்தில் இன்னுமே தெளிவில்லாமல் இருக்க, அதைக்கண்டவன்,  

“நீங்க  ஒன்னும்  கவலைப்படாதிங்க மாமா....நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வந்திடுவேன்.   உங்க பொண்ணு பாதுகாப்புக்கு நான் கேரண்டி...

எப்படி அவளை அழைத்துக் கொண்டு போறேனோ அதே மாதிரியே  திரும்ப அழைத்துக் கொண்டு வந்திடுவேன்...” மீண்டும் ஒருமுறை எடுத்துச்சொல்லி அவரை தெளிய வைத்தவன்  பூங்கொடியை அழைத்துக்கொண்டு தன் புல்லட்டில் பறந்தான் ராசய்யா.

அவன் புல்லட்டில் ஏறுவதற்கு தயக்கமாக இருந்தது பூங்கொடிக்கு.

அன்று ஒருநாள் அவன் கூட சென்ற பிறகு இனி அவன் புல்லட்டிலயே ஏறக்கூடாது என்று சபதம் எடுத்திருந்தாள்.

ஆனால் இன்று அவள் சபதத்தை அவளே உடைக்க வேண்டிய நிலை.     

ரொம்பவும் இடைவெளி விட்டு அவனிடம் இருந்து தள்ளி அமர்ந்து  கொண்டாள்.  அவனும்    அவளிடம் வம்பு எதுவும் செய்யாமல் தன் புல்லட்டை வேகமாக விரட்டினான்.

அவர்கள் இருவரும் புல்லட்டில் ஒன்றாக செல்வதைக் கண்டு  ஒரு ஜோடி கண்கள் வஞ்சத்தில் புகைந்தது.

*****

ற்று நேரத்தில் முசிறியை  அடைந்ததும், பேருந்து நிலையத்திற்கு அருகிலயே இருந்த  இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை கடைக்கு சென்றான் ராசய்யா.

அவன் வெளியூர் செல்லும் நேரங்களில் தன் புல்லட்டை கொண்டு வந்து பட்டறையில் விட்டுவிட்டு செல்வான். திரும்ப வந்ததும் எடுத்துக்கொள்வான். அதே போல வண்டியை விட என அந்த பட்டறைக்கு சென்றான்.

தன் புல்லட்டை நிறுத்திவிட்டு, மறுபக்கமாய் போட்டிருந்த காலை இழுத்து கீழ ஊன்றி நிற்க, அவனைத்  தொடர்ந்து அவன் பின்னால் அமர்ந்து இருந்த பூங்கொடியும் எட்டிக் குதித்து  கீழ நின்றாள்.

ராசய்யாவின் புல்லட் சத்தம் கேட்டதும்,  கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து ராசய்யாவை பார்த்தவர்கள், அடுத்த நொடி அவன் பின்னால் இருந்து இறங்கிய பூங்கொடியை பார்த்ததும் கடையில் வேலை செய்பவர்கள் எல்லாம் ஆவென்று வாயைப் பிளந்தனர்.  

அவர்கள் அனைவருமே ராசாவுக்கு நெருங்கிய தோழர்கள் தான்.

அவன் முசிறி வரும்போது, பட்டறையில்  வேலை இல்லை என்றாலும் அந்த பட்டறைக்குச் சென்று கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருப்பான்.  

சில நேரம் அவனுமே  சில வண்டிகளை  சர்வீஸ் பண்ணியும் கொடுப்பான்.  அதோடு அவன் வரும்பொழுதெல்லாம் கடையில் வேலை செய்யும் பசங்க எல்லாருக்கும், அருகில் இருக்கும் டீக்கடையில் டீயும் பஜ்ஜியும் வாங்கித் தந்து அவர்களுடன் கதை அடித்துக் கொண்டிருப்பான்.  

அவர்களுக்கும் ராசய்யாவை பற்றியும் அவனின் முரட்டுத்தனமான  சுபாவத்தை பற்றியும் தெரியும் தான்.  

பெண்கள் என்றாலே பின்னங்கால் பிடரியில் பட தலைதெறிக்க ஓடுபவன்  இன்று ஒரு வயது பெண்ணுடன் வந்து இறங்க, எல்லாரும்  ஆச்சரியமாக பார்த்து வைத்தனர்.  

அப்பொழுதுதான் ஒரு பைக்கின்  சக்கரத்தை சுற்றிக் துடைத்துக்கொண்டிருந்த சிறியவன்,  தன் வேலையை விட்டுவிட்டு எழுந்து ராசய்யாவின் அருகில் வேகமாய் வந்தவன்

“வாங்கண்ணே...  என்ன கொஞ்ச நாளா இந்த பக்கம் வரவே இல்ல... ஆமா இவங்கதான் அண்ணியா? சூப்பரா இருக்காங்க...”  என்று சந்தோஷத்துடன் விசாரிக்க, அதைக்கேட்ட ராசய்யாவும் பூங்கொடியும்  திடுக்கிட்டுப் போயினர்.  

அப்பதான் புல்லட்டில்  இருந்து இறங்கியவன் தன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே, அந்த சிறியவன்  தலையில் பட்  என்று ஒன்று வைத்தான்.  

“டேய்... உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா?  இந்த கருவாச்சிய போயி நான் கட்டுவேனா? இவள போய் உன் அண்ணி ன்ற  “ என்று முறைக்க, அந்த பையன் அண்ணி என்று அழைத்ததை விட, அவன் கருவாச்சி என்ற விளிப்பில் புசுபுசுவென்று கோபம் பொங்கி வந்தது.

“ஆமாமா... இந்த கருவாயன  கட்டறதுக்குனு தேவலோகத்தில் இருந்து  ரம்பா,  ஊர்வசி, மேனகா ஏன் ரதி கூட வந்து நீ நானு னு போட்டி போட்டுகிட்டு வரிசையில நிக்கறாளுங்களாம்...”  என்று சொல்லி கழுத்தை வெட்டினாள் கடுப்புடன் பூங்கொடி.

அதைக்கேட்டு அந்த பொடியனுக்கு ரோசம் வந்துவிட்டது. அவன் ஹீரோ போல மதிக்கும் ராசண்ணாவை கருவாயன் என்று  அழைத்தது அவனுக்கு பிடிக்கவில்லை. பூங்கொடியை பார்த்து முறைத்தவன் 

“எங்க அண்ணனுக்கு என்ன குறைச்சல் க்கா...அவர் ஹீரோக்கா.. பத்து ஆள் சேர்ந்து வந்தாலும் ஒத்தாளா நின்னு அடிப்பார்.

அம்புட்டு ஏன்... இங்க கடையில அவர் உட்கார்ந்து செத்த நேரம் டீ குடிக்கிறப்ப கூட இந்த பக்கமா போற வர்ற பொண்ணுங்க எல்லாம் நின்னு ஒரு நிமிஷம் சைட் அடிச்சிட்டுத்தான் போவாளுங்க.

நீங்க சொன்ன மாதிரி ரதி  மாதிரி, சுண்டினால் ரத்தம் வரும் கலர்ல தான்  பொண்ணு எங்க அண்ணனுக்கு வரப்போகுது பாருங்க...”  என்று   தன் உடன்பிறவா அண்ணனுக்கு சப்போர்ட் பண்ண, அதில்  இன்னுமாய் பொங்கினாள்.

“டேய் தவக்கல...அதையும் தான் பார்க்கலாம். யோவ்...  இப்ப நாம  கிளம்பலாமா? நேராமாகுது...”  என்று ராசய்யாவை அங்கிருந்து கிளம்ப முயல,  

“இருங்க அண்ணி.... “  என்றவன்,  பூங்கொடி அவனை முறைக்கவும் உடனே சமாளித்துக் கொண்டு

“இருங்க அக்கா...முதல் தரம் நம்ம கடைக்கு வந்திருக்கிங்க... டீ  வாங்கிட்டு வரேன்.  குடிச்சுட்டு போகலாம்.  பக்கத்து நாயர் கடை டீ  அவ்வளவு சூப்பரா இருக்கும்...” என்று அவளை வற்புறுத்த,

“டேய் பாசக்கார தம்பி...  நான் இப்ப அவசரமாக திருச்சி போகணும்.  இங்கே உக்காந்து டீ குடிச்சிட்டு இருக்க வரல. இன்னொரு நாள் வர்ரேன்.  

“யோவ்... இப்ப நீ வரியா இல்லையா? அங்க போட்டி ஆரம்பிச்சுடுவாங்க... அதுக்குள்ள நான் போகணும்...இங்க நின்னுகிட்டு கதை அடிச்சுகிட்டு இருக்க...

இந்த அப்பா வேற உன்னைப்போய் என் கூட அனுப்பி தொலச்சுட்டார்...“  என்று ராசய்யாவை  பார்த்து முறைத்துவிட்டு  அவனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் விடுவிடுவென்று முன்னால் நடந்தாள் பூங்கொடி.

அவளின் படபடவென்று பொரிந்ததை ஆச்சயமாக பார்த்த அந்த தவக்கலை, ராசய்யாவிடம் திரும்பியவன்

“ராசு அண்ணே... அண்ணி உன்ன மாதிரியே சட்டு  சட்டு னு  கோபப்படறாங்க..  உங்களுக்கு பொருத்தமான புள்ளதான். கெட்டியா  புடிச்சுக்கோ. விட்டுடாத...”  என்று நமட்டு சிரிப்பை சிரித்து குறும்பாக  கண் சிமிட்ட,  அவன் தலையில் மீண்டும் பட் என்று ஒன்று வைத்தவன் ராசய்யா.

“டேய் குள்ள வாந்து...உனக்கு தவக்கலைனு சரியான பேர தான் வச்சிருக்கா... தவக்கலை மாதிரி இருந்துகிட்டு வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடா.  அதிக பிரசங்கித்தனமா  பேசுனா, அங்க போறாளே உன் அக்கா, திரும்ப வந்து சாமி ஆடிடுவா...ஜாக்கிரதை...” என்று சிரித்தவன்

“சரி... என் புல்லட் ஐ இப்படி ஓரமா வச்சுட்டு போறேன்... பத்திரமா பாத்துக்கோங்க...  நான் வர சாயந்திரம் ஆயிடும்..”  என்றவன் தன் புல்லட்டை  நகர்த்தி வந்து  கடையின் உள்ளே நிறுத்திவிட்டு சாவியை உருவிக் கொண்டான்.

அதே நேரம் மற்றோரு பைக்கை பிரித்து கொண்டிருந்த அரும்பு மீசை முளைத்திருந்த ஒரு விடலைப்பையன் எழுந்து ராசய்யாவிடம் ஓடி வந்தவன்

“அண்ணே..அண்ணே... சாவிய கொடுத்துட்டு போங்கண்ணே... ஒரே ஒரு தரம் நானும் உன் புல்லட்டை ஓட்டி பார்க்கிறேன்...”  என்று சந்தடி சாக்கில் ராசய்யாவின் புல்லட்டின்  சாவியைக்  கேட்டான்.  

அவனுக்கு ராசய்யாவின் புல்லட்டை ஓட்டி பார்க்க  வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.  

அதுவும் ராசய்யா , அவன் குளிக்கிறானோ இல்லையோ, நல்ல விதமா உடுத்தறானோ இல்லையோ... தன் புல்லட்டை தினமும் துடைத்து பளபளவென்று  வைத்திருப்பான். இப்பொழுது பார்த்தாலும் புதுசு மாதிரியே இருக்கும்.  

ஒரு நாளாவது அதில்  ஏறி அமர்ந்து ஓட்டி பார்க்க வேண்டும். அதோடு அவன்  தெருவில் இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  சரசுக்கு முன்னால் அவன் இந்த புல்லட்டில்  உட்கார்ந்துகொண்டு, ஒற்றைக்கரத்தால் தலையை கோதியவாறு  ஸ்டைலாக அவள் முன்னால் வலம் வர வேண்டும் என்று அந்த விடலைக்கு ஆசை.

என்றைக்காவது ராசு இந்த புல்லட்டை சர்விஸ்க்கு விடும் நாளன்று அதை ஓட்டி பார்க்கும் சாக்கில் எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்று பார்த்தால், சர்விஸ் விடும் நாளன்று ராசய்யாவுமே உடன் இருந்து விடுவான்.

சில நேரம் அவனாகவே சர்விஸ் ம் பண்ணிக்கொள்வான். இதுவரை யாரையும் தன் புல்லட்டை தொட விட்டதில்லை. அதனால் இதுவரை அந்த விடலையின் ஆசை வெறும் ஆசையாகவே இருந்து வருகிறது.  

இப்பொழுது ராசய்யாவின் புல்லட் அந்த பட்டறையில் நின்று கொண்டிருக்க,  அந்த விடலையும் அதை ஓட்டி பார்க்க ஆர்வமாக கேட்டு வைத்தான்.  

அதைக் கேட்டு அவனை முறைத்தவாறே

“டேய் சேகரு... இது புல்லட் இல்ல . என் பொண்டாட்டி. என் பொண்டாட்டிய போய்  யார்கிட்டயும்   கொடுக்க மாட்டேன் னு  உனக்கு தெரியாது...”  

என்று அவன் தலையில் செல்லமாக தட்டி விட்டு, பாக்கெட்டில் இருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை உருவி அவன் கையில் திணித்து விட்டு டீ வாங்கி குடிங்க என்று சிரித்தவாறு  வேகமாக கடையில் இருந்து வெளியேறினான் ராசய்யா.  

அவனுக்கு முன்னால்  விறுவிறுவென்று வேக நடையில் நடந்து கொண்டிருந்தாள்  பூங்கொடி.  

“சே... ஆனாலும் இந்த கருவண்டுக்கு  இம்புட்டு வேகம் ஆகாது.  எப்படி வேகமா நடக்கிறா  பார். நடக்கிற போட்டி வைத்தால் இவளுக்குத்தான் ஃபர்ஸ்ட்  ப்ரைஸ்..

இவள கட்டிக்க போறவன் ரொம்பவும் பாவப்பட்ட ஜீவன்தான். இவ போற வேகத்துக்கு இவ பின்னாடி பைய தூக்கிட்டு லொங்கு லொங்குனு ஓடிகிட்டுத்தான் இருக்கணும்...”  என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் ராசய்யா.

பாவம்...அந்த பாவப்பட்ட ஜீவன் அவன்தான் என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை ராசய்யா...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!