நிலவே என்னிடம் நெருங்காதே!!-35

 


அத்தியாயம்-35

முதினி புகுந்த வீட்டிலிருந்து அவள் கணவன்,  மாமியார்,  மாமனார் மற்றும் அவள் நாத்தனார் என எல்லோரும் கிளம்பி விருந்திற்காக வந்திருந்தனர்..  நிலா தான் தாத்தாவிடம் சொல்லி இந்த விருந்தை ஏற்பாடு பண்ணியிருந்தாள்..

அதற்காகத்தான் காலையிலிருந்து இரண்டு மூன்று சமையல்கார பெண்களை சேர்த்துக் கொண்டு விதவிதமாக சமைத்து இருந்தாள்

மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தவள்  அந்த வீட்டு மருமகளாய் வந்தவர்களை வரவேற்று அவர்களை உபசரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க பின் அனைவரையும் மதிய உணவிற்காக உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றாள்..

அனைவரையும் அமர வைத்து பொன்னியின் உதவியுடன் அவளே பரிமாற,  அமுதினி புகுந்த வீட்டாருக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது..

இத்தனை நாள் தங்கள் மருமகள் தங்கள் வீட்டோடு ஒட்டாமல் இருந்ததால் இந்த ஜமீன் பக்கம் அவர்கள் அடிக்கடி வருவதில்லை..  

ஆனால் தங்க மருமகள் இப்பொழுது மனம் திருந்தி தங்கள் மகனை ஏற்றுக் கொண்டு புகுந்த வீட்டிற்கு வந்து விட கூடவே அவர்களை முறையாக விருந்துக்கு அழைத்து இருக்க இத்தனை நாட்களாக அவர்களுக்குள் இருந்த பெரும் வருத்தம் வேதனை நீங்கியது..

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டே அந்த உணவை ரசித்து உண்டனர்..  ஒவ்வொரு பதார்த்தமும் வித்தியாசமாகவும் சுவையானதாகவும் இருக்க அதை செய்த நிலாவை புகழ்ந்து பாராட்டியவாறு உணவை ரசித்தனர்..  

நிலாவும் ஒரு புன்சிரிப்போடு அதை ஏற்றுக் கொண்டாலும் அவள் பார்வை மட்டும் அடிக்கடி தன் கணவனிடம் சென்று மீண்டது..  அவன் வாய் திறந்து ஏதாவது பாராட்ட மாட்டானா என்று சிறு நப்பாசை அவள் உள்ளுக்குள்..

அவனையே அப்பப்ப ஆவலும் ஏக்கமுமாக பார்க்க அவனோ அந்த உணவை பெரிதாக கண்டு கொள்ளாதவனை போல காட்டி கொண்டாலும் ருசித்து உண்டு கொண்டிருந்தான்..

அவன் ருசித்து சாப்பிடுவதை ஓரக்கண்ணால் கண்டு  கொண்டவள்

“சரியான அழுத்தக்காரன்.... கல்லுளி மங்கன்.. இத்தனை பேர் என்னை பாராட்டி விட்டனர்.. இவன்  மட்டும் பேருக்காவது ஒரு வார்த்தை நல்லா இருக்கு  என்று சொல்கிறானா பார்..சரியான கள்ளன்.. “  என்று உள்ளுக்குள் பொருமியவள் அவனை முறைத்து முகத்தை நொடித்துக் கொண்டாள்..  

விருந்து முடிந்து அனைவரையும் மகிழ்ச்சியோடு வழியனுப்ப,  அமுதினி மாமியார் சமையலறையில் எல்லாம் எடுத்து  வைத்துக் கொண்டிருந்த நிலாவை பார்க்க அங்கு வந்தவர் அவளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்..

“ரொம்ப நன்றி மா.. ஒரு மருமகளாய் இந்த வீட்டிற்கு வந்ததும் பொறுப்பா உன் கடமையை செய்திருக்க.. மூணு வருஷமா பிரிந்திருந்த ஒட்டாமல் இருந்த என் மருமகளை என் மகன் கூட சேர்த்து வச்சிட்ட..

நாங்க கூட எத்தனையோ முறை இந்த  பெண் வேண்டாம்.. விட்டுவிடலாம்.. மூன்று வருடமாய் ஒட்டாதவளா இனிமேல் ஒட்ட போகிறாள்  என்று ரஞ்சனிடம்  கெஞ்சினோம்..  

ஆனால் அவன் முடியவே முடியாது..  உங்க மருமகனா அது அமுதினி மட்டும்தான்.. அவ மட்டும்தான் என் மனைவி என்று உறுதியாக நின்றுவிட்டான்.. எங்கே என் மகனின் வாழ்வு இப்படியே பட்டுப் போய் விடுமோ என்று கவலையாக இருந்தது..

நல்லவேளை சரியான நேரத்தில் நீ என் மருமகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து விட்டாய் அம்மா.. உனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோமோ?”  என்று தழுதழுத்தார்..

உடனே நிலாவும் அவரை கட்டிக் கொண்டு

“என்னம்மா இது? கைமாறு னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க..?  அம்மு எங்க வீட்டு பொண்ணு.. எங்க வீட்டு பொண்ணு புருஷனோட சந்தோஷமா இருந்தா தானே எங்களுக்கும் மகிழ்ச்சி  பெருமை..

ஏதோ கெட்ட காலம் அம்மு இவ்வளவு நாளா பிரிஞ்சிருந்தா.. அவ  ஒரு குழந்தை மாதிரி.. எங்க அத்தை அவளை கைக்குள்ளயே வச்சு வளர்த்திட்டாங்க.. அதனால அவளுக்கு நல்லது எது கெட்டது எது என்று புரியவில்லை..

அவள் எதுவும் தவறாக செய்தால் ஏதாவது துடுக்குத்தனமாக  பேசினாலும் உங்கள் மகளாக நினைத்து அவளை மன்னித்து விடுங்கள்.. “ என்றாள் புன்னகையுடன்..

அதைக் கேட்டு இன்னும் பூரித்துப் போனார் பெரியவள்... 

“தேவநாதன் ஜமீன்தார் சரியான மருமகளைத்தான் கொண்டு வந்திருக்கிறார்.. உன்னை பற்றி ரஞ்சன் சொன்னான் மா..  உனக்கு யாரும் இல்லை என்று கவலைப்படாதே நிலா.. நீயும் எங்க வீட்டு பொண்ணு தான்..

என்னை உன் அம்மாவாக நினைத்துக் கொள்.. உனக்கு பொறந்த வீட்டு ஞாபகம் வரும்போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்.. என்னிடம் அழைத்து பேசு.. “ என்று சிரித்து அவள் கன்னம் வருடி அவளை கையோடு அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்..

அதேநேரம் அங்கு எதேச்சையாக வந்திருந்த மனோகரி அவள் சம்பந்தியின் பேச்சை கேட்டிருந்தார்..

அப்பொழுது தான் தன் மூத்த மகள் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்திருக்கிறாள்  என்று புரிந்தது.. இவர் பேச்சை கேட்டு தன் மருமகனும் அம்முவை கை கழுவி இருந்தால் ??

தன் மகள் வாழாமலயே அவள் வாழ்க்கையை தொலைத்து விட இருந்தாளே..!  என்னதான் ஜமீன் வீட்டு இளவரசி என்றாலும் தன் கணவனுடன் சேர்ந்து வாழாமல் வாழா வெட்டியாக வீட்டில் இருந்திருந்தால் ?? என்று எண்ணுகையிலயே அவர் மனம் பதைத்தது..

நல்லவேளையாக தன் மருமகள் அதை தடுத்துவிட்டாள்.. அழிய இருந்த தன் மகள் வாழ்வை  காப்பாற்றி விட்டாள்.. என்று நினைக்க முதன் முதலாக நிலாவின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் மனோகரிக்கு  வந்தது..

உள்ளே இருந்தவர்கள் வெளியில் வருவதைக் கண்டதும் வேகமாக நகர்ந்து மறுபக்கம் சென்றுவிட்டார்..

விடைபெறும் பொழுது வழி அனுப்பும் விதமாக அதிரதன் நிலா இருவரும் அருகருகே நின்று கொண்டிருக்க இருவரையும் பார்த்ததும் அமுதினி மாமியார் அதிரதனை பார்த்தவர்

“மாப்பிள்ளை... நிலா எங்க வீட்டு பொண்ணு மாதிரி.. அவளை பத்திரமா பாத்துக்கங்க.. அப்புறம் நீங்கதான்  புதுசா கல்யாணம் ஆனவங்க.. அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு விருந்துக்கு வரணும்.. “  என்று அழைக்க அதைக் கேட்டு அதிரதன் அதிர்ந்து போனான்..

“இந்த கல்யாணமே ஒரு நாடகம்.. இவளை எப்படி கழட்டி விடுவது   என்று எண்ணிக் கொண்டிருப்பவன் இவளை மனைவியாக இழுத்துகொண்டு விருந்துக்கு  வேற போகணுமா? “ என்று உள்ளுக்குள் பொரிந்தவன்

“சாரி ஆன்ட்டி.. எங்க மேரேஜ் திடீர்னு நடந்துட்டதால் ஆபீஸ்ல வேலை நிறைய இருக்கு.. தாத்தா வேற  இப்ப வீட்ல இருக்கிறதால அந்த பிசினஸ் ஐயும்  பார்க்க வேண்டியதா இருக்கு..  எல்லாம் செட்டில் ஆன பிறகு ஒரு நாள் வருகிறோம்.. “  என்று நாசுக்காக மறுத்துவிட்டான் அதிரதன்..

“ஹ்ம்ம்ம் என்னமா சமாளிக்கிறான்..என்னை அழைத்துக்கொண்டு  போக மனம் இல்லாமல் அதை மறுக்க இல்லாத வேலையை எல்லாம் பிடித்து கொண்டான்.. கெட்டிக்காரன்தான்.. “ என்று உள்ளுக்குள் நக்கலாக சிரித்து கொண்டாள் நிலா...

ன்று இரவு அனைவரும் உணவு மேஜையில் கூடியிருக்க, மதியம் விருந்து வெற்றிகரமாக எல்லாருக்கும் மகிழ்ச்சியுடன் முடிந்து விட, அதை சிலாகித்து பேசி கொண்டே எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..  

அந்த நேரம் தேவநாதன் எல்லாரையும் ஒருமுறை பார்த்தவர் தொண்டையை கணைத்து கொண்டு

“உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்.. “  என்று ஒன்று  இல்லாமல் இரண்டு விஷயத்தை சொன்னார்..

அதைக் கேட்டதும் அதிர்ந்து போனான் அதிரதன்.. அவன் உடல் விரைக்க, முகம் இறுகியது.. அவன் முக இறுகும் அளவுக்கு தாத்தா என்ன சொன்னாராம்??

“முதலாவது விஷயம் அமெரிக்காவிலிருந்து அவருடைய வாடிக்கையாளரும் நண்பருமான டேவிட் அவரின் மகனும் மருமகளும் இந்தியாவிற்கு அதுவும் இந்த ஜமீனுக்கு வருகிறார்கள்... இங்கதான் தங்க போகிறார்கள்.. அவர்களுக்கு நம்ம ஜமீனில் பெரிதா விருந்து கொடுக்க வேண்டும்.. “ என்று சொன்னார்..

அதில் ஒன்றும் அதிரதன் அதிர்ந்து போகும் அளவுக்கு விஷயமில்லை.. இது மாதிரி அவருடைய வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தொழில் சம்பந்தமாக கோயம்புத்தூர் வருவது வாடிக்கைதான்..

அப்படி வருபவர்களுக்கு முறைப்படி ஜமீனில் விருந்து கொடுப்பார் தேவநாதன்.. அதனால் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. ஆனால் அந்த விருந்தை நிலாவின் தலைமையில் ஏற்பாடு செய்யவேண்டும் என சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்து போனான் அதிரதன்..

அவளை எப்படியாவது இந்த ஜமீனில் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று அவன் காத்திருக்க,  அவளோ மெல்ல மெல்ல ஒவ்வொருவராக அவள் பக்கம் இழுத்துக் கொண்டிருப்பது புரிந்தது..

முதலில் அவனின் சின்னத் தங்கை யாழினி அவளுடன் சேர்ந்து கொண்டு அவளைப் பற்றி புகழ்ந்து பேசினாள்.. இப்பொழுது அம்மு வும் தன் அண்ணி பக்கம் சேர்ந்து விட்டாள்..

சேர்ந்ததோடு அவர்கள் இருவரும் அவர்கள் அண்ணி நிலாவின் சமையலுக்கும் அவள் பண்ணும் அலங்காரங்களுக்கும்  விசிறி ஆகிப் போனார்கள்.. வாயை திறந்தால் அந்த திமிர் பிடித்தவள் புராணம் தான் தன் தங்கைகளிடமிருந்து..

ஏற்கனவே இந்த தாத்தா அவள்  பக்கம் சாய்ந்து கிடக்கிறார்.. இன்னும் அம்மா, அப்பா அப்புறம் பாட்டிதான் அவனுக்கு ஆதரவாக அவளை வெறுத்து வருவது...

இப்பொழுது இந்த விருந்தையும் இவள் ஏற்பாடு செய்து மற்றவர்களை எல்லாம் அவள் பக்கம் இழுத்து விட்டால்?  தன் பக்கம் நிற்பதற்கு யாரும் இருக்க மாட்டார்களே..  இவளை  விவாகரத்து செய்ய வேண்டும் என்று சொன்னால் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்

ஒருவேளை அதுதான் இவளுடைய திட்டமோ?  எல்லாரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த ஜமீனை பிடித்து விடலாம் என்று மனக் கோட்டை கட்டி இருக்கிறாளோ?  அதற்காகத்தான் என்னுடைய காய்களை ஒவ்வொன்றாக சாய்த்துக் கொண்டிருக்கிறாள் ?  

ஆனால் இந்த அதிரதன் அவ்வளவு சீக்கிரம் சாய்ந்து விடமாட்டான்.. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் “ என்று அவசரமாக உள்ளுக்குள் எண்ணியவன் தன் தாத்தாவை நேராக பார்க்காமல் எங்கேயோ பார்த்தவன்

“வருகிறவர்கள் வெளிநாட்டுக்காரர்கள்.. அவர்களின் உணவு முறை பற்றி புதுசா ஜமீன்க்கு வந்த இவளுக்கு என்ன தெரியும்?  பொன்னி அக்காதான் இந்த மாதிரி வருகிறவர்களுக்கு நிறைய தரம் விருந்து செய்திருக்கிறார்.. அவங்களே இந்த விருந்தையும் முன்னின்று செய்யட்டும்.. “  என்று எங்கோ பார்த்தபடி பதிலளித்தான் அதிரதன்..

உடனே தாத்தா அவனை நேராக ஊருவி பார்த்தவர்  

“ரதன்... இப்போ உனக்கு பிரச்சனை உன் பொண்டாட்டி சமைக்கக் கூடாது என்பதா?  இல்லை அவள்  செய்தால்  சரியாக வராது என்பதா? “  என்று நேரடியாக கொக்கி போட்டார்..

இதற்கு என்ன காரணத்தை சொல்ல என்று அவன் மனம் அவசரமாக கணக்கிட்டது..  முதலாவது காரணம் தான்.. அவள் சமைக்க கூடாது என்பது தான்.. ஆனால் அதைச் சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்.. அதனால் இரண்டாவது காரணத்தை பிடித்துக் கொண்டான்..  

அவள் செய்தால்  நன்றாக வராது என்று சொல்லி  முடிக்கும் முன்னே ஸ்ருதி இறங்கி  போனது..

ஏனென்றால் மதியம் தான் அவள்  தலைமையில் பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருந்தாள்..  ஒவ்வொரு பதார்த்தமும் அவ்வளவு அருமையாக இருந்தது..  அவனே  தன் ஈகோவை விட்டு இலையில் வைத்த எல்லா பதார்த்தங்களையும் ரசித்து ருசித்து  கொண்டிருந்தான்..  

அப்படியிருக்க அவள் செய்தாள் நன்றாக இராது என்று சொல்வதும் அபத்தம் தான் என்று அவனுக்கே தோன்றினாலும் வேறு வழியில்லாமல் இதை சொல்லி முடித்தான்..

தன் பேரனின் குரலில் ஸ்ருதி இறங்கியதை வைத்தே அவன் மனதை படித்தவர் உள்ளுக்குள் சிரித்து கொண்டு

“நல்லது... உனக்கு உன் பொண்டாட்டி சமையல் மேல நம்பிக்கை இல்லை என்றால் அதுக்கு நான் கேரண்டி.. என் பேத்தி மருமக சமையல் சூப்பரா இருக்கும்.. அவளால அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு பிடித்த மாதிரி சமைக்க முடியும்.. அதனால் அந்த கவலையை நீ விட்டு விடலாம்..”  என்று அவன் வாயை அடைத்தார்..

அதிரனும் யாராவது தன் பக்கம் இருப்பார்கள் தனக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என்று மற்றவர்களின் முகத்தை பார்க்க, யாரும் அவன் பக்கம் இல்லை...

அவன் தந்தை வாய் திறந்து

“அப்பா சொல்வது கரெக்ட்தான் அதி... நிலா நல்லா தான் சமைக்கிறா. நம்ம சம்பந்தி வீட்ல இருந்து எல்லாருமே அப்படி பாராட்டினாங்க இல்ல.. “ என்க

“ஆமா ணா... அண்ணி சூப்பரா விதவிதமா கேக், ஐஸ்க்ரீம் எல்லாம் சூப்பரா பண்றாங்க.... அதனால் அவங்களே சமைக்கட்டும்.. பொன்னி அக்கா சமையல் போர்.. அண்ணி சமையல் சூப்பர்..என் ஓட்டு அண்ணிக்கே... “ என்று தன் கையை தூக்கி தன் அண்ணிக்கு ஓட்டு போட மற்றவர்களும் நிலாவுக்கு சப்போர்ட்  பண்ண, பாரிஜாதம் மட்டும்தான் அதிரதன் பக்கம் இருந்தார்..

ஆனாலும் அவர் ஒரு ஓட்டு மட்டும் பத்தாதே..!  டெபாசிட் இழந்து தோற்று போனான் அந்த அழுத்தக்காரன்...

ஓரக்கண்ணால் நிலாவை பார்க்க அவளோ தன் புருவத்தை மேலாக உயர்த்தி நாக்கால் தன் இதழை வருடி தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டு ரகசியமாக கண் சிமிட்டினாள் அவனை பார்த்து..

அவனோ ஒரு எரிக்கும் பார்வையை செலுத்தியவன் அவளை முறைத்தவாறு தலையை வெடுக் என்று திருப்பி கொண்டான்..

அடுத்ததாக இரண்டாவது ஆட்டோ பாம் மை தூக்கிப் போட்டார் ஜமீன்தார்..

அதுதான் இன்னுமே அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை..

“வருகிறவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள்... தேனிலவுக்காக மற்ற நாடுகளுக்கு செல்லாமல் இந்தியாவைப் பற்றி அதுவும் தமிழகத்தைப் பற்றி தெரிந்தவர்கள் அவர்களுடைய தேனிலவை நம்ம ஊர் பக்கமாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப் பட்டனர்,,

கூடவே நம்முடைய கலாச்சாரத்தையும் அவர்கள் நேரடியாக கண்டு அவர்களும் நம்முடைய கலாச்சாரத்தின் படி ஒரு வாரம் இங்கு வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.. “

இதுவரை எல்லாம் சரிதான்..  ஏதோ வித்தியாசமாக ஆசை பட்டு வருகிறார்கள்.  வந்து பார்த்துவிட்டு செல்லட்டும் என்று எண்ணிக்கொண்டான் பேரன்..  

ஆனால் அதோடு நிறுத்தாமல் அடுத்து ஆரம்பித்தார் சாணக்கிய தாத்தா..

அவர்கள் தேனிலவு செல்வதற்கு கேரளாவை தேர்ந்தெடுந்திருப்பதாகவும் அவர்களுக்கு துணையாக அவர்கள் கூட அதிரதனையும் நிலாவையும் சென்று வர சொன்னார்..

அதைக் கேட்டு அதிரதன் மற்றும் நிலா இருவருமே அதிர்ந்து போய்

“நான் எதுக்கு தாத்தா ? “  என்று நிலாவும் “இது எதுக்கு தாத்தா? “  என்று அதிரனும் ஒரு சேர குரலை உயர்த்தி இருந்தனர்..

அதை கேட்ட தாத்தாவும்

“இதில் கூட இருவரும் ஜாடிக்கேத்த மூடிதான்..  ஒத்த கருத்தாய் இருக்கிறார்களே..!  சபாஷ்.. “  என்று உள்ளுக்குள் சிலாகித்து கொண்டார்..

ஆனாலும் தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டவர்

“அவர்களுக்கு இது தெரியாத இடம்.. அதோடு நம்மை நம்பி வருகிறார்கள்.. நாமதான் கூட இருந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.. அது நாம் பண்பாடும் கூட..”  என்றார் மிடுக்குடன்

அதிரதன் எப்படியாவது இதில் இருந்து தப்பித்து கொள்ள வேண்டும் என்று யோசித்தவன்

“எனக்கு வேலை இருக்கு தாத்தா... நான் சென்னைக்கு போக வேண்டும் அங்கே என்னுடைய அலுவலகத்தில் நிறைய ப்ராஜெக்ட் என்னுடைய ரெவியூக்காக வெயிட்டிங்..  நான் போயாகணும்.. “  என்றான் அவரைப் போலவே மிடுக்குடன் ..

“ஹ்ம்ம் ரதன்... நீ சென்னையில் போய் செய்யும் வேலையை கேரளாவிலும் இருந்து கொண்டே செய்யலாம்.. இப்பொழுது தான் எல்லாத்தையுமே ஆன்லைனில் செய்ய முடிகிறதே..  

உன்னுடைய எல்லா வேலையையும் உன் கம்ப்யூட்டரிலேயே செய்து கொள்..மீட்டிங் இருந்தால் கூட அதுதான் ஆன்லைனிலயே பேசி கொள்ளலாம்..   ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் உன் வேலையை பார்..  

நிலா அவர்களுக்கு கம்பெனி கொடுக்கட்டும்.. மற்ற நேரம் நீயும் அவர்களுடன் சேர்ந்து கொள்.. “ என்று சுலபமாக சொல்யூசனை சொல்ல அவனோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அடுத்த காரணத்தை கண்டுபிடித்து மறுத்தான்..  

சிறிது நேரம் அவனிடம் வாதிட்டவர்

“சரி... முடிவா என்னதான் சொல்ற? உனக்கு அவர்கள் கூட போக பிடிக்கலைன்னா நீ இப்பவே நடைய கட்டு.. நான் கேரளாவுக்கு அவர்களுடன் சென்று வருகிறேன்.. “  என்றார் மிடுக்குடன்..

அதைக்கேட்டு இன்னும் அதிர்ந்தவன்

“தாத்தா... உங்களுக்கு இன்னும் உடல் சரியாகவில்லை.. வேண்டும் என்றால் வேறு யாரையாவது அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யலாம்.. “  என்றான்..

“இல்லை ரதன்.. அது சரி வராது.. மிஸ்டர் டேவிட் என்னுடைய வாடிக்கையாளர் மட்டும் அல்ல என் நெருந்க்கிய நண்பரும் கூட ..  நான் அமெரிக்கா சென்ற பொழுது என்னை அப்படி கவனித்துக் கொண்டார்..விருந்தோம்பல் என்பது நமது பண்பாடு..   

அவருடைய மகனும் மருமகளும் நம் வீட்டுக்கு வரும் பொழுது நம் ஆட்கள் அவர்களுடன் செல்லாமல் வேற யாரையாவது அனுப்பி வைத்தால்  அது சரியாக இருக்காது..

நீ உன் வேலையை பார்.. நான் இதை பார்த்துக்கொள்கிறேன்.. “  என்று நேர் பார்வை பார்த்தார் உள்ளுக்குள் சிரித்தபடி..

அவனோ சற்று நேரம் யோசித்தான்..  அவரை தனியாக அனுப்ப மனமில்லாமல்

“சரி தாத்தா.. நானே போயிட்டு வருகிறேன்.. ஆனால் அவ வேண்டாம்.. “ என்று நிலாவை பார்த்து முறைத்தான்..

அவளும்

“ஆமாம் தாத்தா.. நான் எதுக்கு.. உங்க பேரன் மட்டுமே போகட்டும்.. “ என்றாள் அவசரமாக

“ஆஹா...என்னமா நடிக்கிறா? அப்படியே இவளுக்கு விருப்பம் இல்லாதவ மாதிரி காட்டி கொண்டு இந்த தாத்தாவை மடக்க பார்க்கிறாள்.. இவருக்கும் இவளின் நாடகம் தெரிய மாட்டேங்குது.. “ என்று உள்ளுக்குள் பல்லை கடித்தான்..

தேவநாதனோ தன் பேரனின் மனம் தெரிந்ததால் அவன் அடுத்து எங்கு வருவான் அதற்கு என்ன பதிலை சொல்வது என்று தயாராக எண்ணி வைத்திருந்தார்.. அவனும் அவர் நினைத்த மாதிரியே வர

“டேவிட் மகன் மட்டும் வருவதாக இருந்தால் நான் உன்னை மட்டுமே அனுப்பி இருப்பேன் ரதன்.. ஆனால் கூடவே ஒரு பெண்ணும் வருவதால் நம்ம பக்கமிருந்து ஒரு பெண்ணும் அவர்களுடன் துணைக்கு சென்றால்  அவர்களுக்கு வசதியாக இருக்கும்..

இரு பெண்களும் அவர்களுக்குள்  பேசி சிரித்துக்கொண்டு பொழுது போகும்.. ஏதாவது கேட்க வேண்டுமென்றால் உன்னிடம் வர தயங்குவர்.. அதனால் தான் சொல்கிறேன்..  நிலாவையும் அழைத்துச் செல்.. “ என்றார் முடிவாக....

இந்த முறை நிலா முந்தி கொண்டு

“இல்லை....  வேண்டாம் தாத்தா... “  என்று அவசரமாக மறுக்க

“நிலா...  நீ எதுவும் சொல்ல கூடாது.. இந்த தாத்தா சொன்னால்  அதிலே ஒரு அர்த்தம் இருக்கும் னு உணக்கு தெரியும் தான... அது எல்லாருடைய நல்லதுக்கு  தான்.. மறுபேச்சு பேசாமல் கேட்டுக்கொள்ள வேண்டும்.. நீ கேரளாவுக்கு  போற.. அவ்வளவுதான்.. “  என்று கண்டித்தவர் தன் பேரனை பார்த்து

“நீ சொல்லு ரதன்..  என்ன நான் சொல்லும் திட்டத்திற்கு சம்மதமா?  இல்லையா? “  என்றார் அவனை நேராக பார்த்தவாறு இடுங்கிய கண்களுடன்..

அவனோ என்ன செய்வது என்று புரியாமல் முழித்தான்..அவன் நகர முடியாமல் எல்லா பக்கமும் செக் மேட் வைத்திருக்க, கடைசியாக வேற வழி இல்லாமல் கேரளா செல்வதாக ஒத்துக் கொண்டான்..

அதைக்கேட்டு தேவநாதன் தன் மீசையை நீவி விட்டுக் கொண்டு

“மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.. “ என்று பெருமையாக சிரித்தார் 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!