நிலவே என்னிடம் நெருங்காதே-37

 


அத்தியாயம்-37

குளியலறைக்கு சென்றவள் அலுப்பு தீர நல்ல சுடுதண்ணியில் தலைக்கு குளித்து விட்டு தன் நீண்ட முடியை உலர்த்த அந்த அறையை ஒட்டியிருந்த பால்கனியில் நின்றிருந்தாள்..

அன்று வானம் மப்பும் மந்தாரமுமாய் மூடியிருக்க எப்பொழுதும்  சுட்டெரிக்கும் ஆதவன் அன்று ஓய்வு எடுத்து கொண்டு இருந்தான்..  

அந்த மதிய நேரத்திலும் இனிமையான குளுகுளுவென்ற தென்றல் அவளை கண்டதும் ஓடி வந்து அவளை தழுவிக் கொள்ள, அதன் தீண்டலில் அவள்  உள்ளே சிலிர்க்க வைத்தது...

அவள் கூந்தலை தொட்டு  தடவி மேனி தழுவி, அவள் கன்னம் வருடி ஆசையாக முத்தமிட்டு அவளை குறுகுறுக்க வைத்து கொண்டிருந்தான் அந்த தென்றல் காதலன்...

எப்பொழுதும் இந்த தென்றல் என்றால் கொள்ளை பிரியம் நிலாவுக்கு...

அதுவும் அவள் கிராமத்தில் சுற்றிலும் பச்சை பசேல் என்று நெல் வயல்கள் சூழ்ந்திருக்க, அந்த வயல்களுக்கு நடுவில் வரப்பில் நடக்கும் பொழுது ஓடி வந்து தழுவி கொள்ளும் அந்த தென்றல் என்றால் இன்னுமாய் பிடித்து போகும்..

அதனாலயே வேலையே இல்லை என்றாலும் தங்கள் வயலுக்கு சென்று மாலை நேரத்தில் அவள் காதலுடன் கொஞ்சி விளையாடி விட்டு வருவாள்...

இந்த ஜமீனுக்கு வந்த நாளில் இருந்து அதெல்லாம் மிஸ்ஸிங் என்று அப்பொழுதுதான் உறைத்தது...

பழைய நினைவுகளில் தன் காதலனையும் அவன் தீண்டல்களையும் இமை மூடி ரசித்தபடி ஏதோ சிந்தனையில்  வெட்கத்துடன் ரசித்துக் கொண்டு நின்றிருக்க இன்று அவனின் தீண்டல்கள் வழக்கம் போல இல்லாமல் வித்தியாசமாக இருந்ததை போல இருந்தது...

புருவம் முடிச்சிட என்ன வித்தியாசம் என்று ஒரு நொடி யோசித்தவளுக்கு உண்மை புரிந்து விட்டது...

ஏனோ இந்த முறை தன் தென்றல் காதலனின் ஒவ்வொரு தீண்டலும்  தன்னவன்,  தன் கழுத்தில் தாலிகட்டி தனக்கு கணவனாகியவன் அந்த தென்றலாய்,  தன் தென்றல் காதலனாக தோன்ற அப்படியே ஸ்தம்பித்து மெய்மறந்து நின்றிருந்தாள் நிலா...

தன்னவனின் வலிய கரங்கள்,  அவள் மேனியில் ஊர்வலம் போக, அடுத்த கரமோ அவள் கன்னம் வருடி,  அவளின் காது மடலை நிமிண்டி, அதில் அவன் மீசை உரச, அவனின் அழுத்தமான இதழால், செவி மடலை மென்மையாய்  வருடுவதை போல இருக்க, உள்ளுக்குள் சிலிர்த்து போனாள் பெண்ணவள்...

ஏதோ ஒரு புதுவிதமான உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.

அது என்னவென்று புரியாத போதும், அதை, அந்த உணர்வை, நொடி நொடியாய் ரசித்து கொண்டிருந்தாள் நிலா.

திடீரென்று அவள் தென்றல் காதலன்,  அவளை விட்டு விலகி சென்றிருக்க, மெல்ல இமை திறந்து விழித்துக்கொண்டவள், எதேச்சையாக பார்வையை பக்கத்தில் திருப்ப,  அப்படியே ப்ரீஸ் ஆகி போனாள்...

பக்கத்து அறையில் தான் ஸ்டீபன் மற்றும் லியா தம்பதியினர் தங்கி இருந்தனர்.. அந்த அறைக்கும் பால்கனி அந்த அறையை ஒட்டி இருக்க, அந்த அறையில் இருந்தவர்களும் அப்பொழுது பால்கனியில் நின்று  கொண்டிருந்தனர்...

ஆனால் இருவரும் நெருக்கமாக நின்று கொண்டு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து, ஆரத்தழுவி இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர் ஆங்கிலேயர் பாணியில்..

அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு உதட்டோடு உதட்டை வைத்து தங்களை மறந்து சுவைத்துக் கொண்டிருக்க அதை கண்ட நிலவினிக்கோ உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது..

இது மாதிரி முத்தமிடும் காட்சிகள் திரைப்படத்தில்  வந்தாலே கண்ணை இறுக்க மூடிக் கொள்வாள்.. ஏனோ அதை பார்க்க அருவருப்பாக இருக்கும் அவளுக்கு..

அவள் கல்லூரியிலும் தோழிகள் இங்கிலிஷ் கிஸ் என்று கமெண்ட் அடித்து அவர்கள் பார்த்த ஆங்கில படத்தில் வந்த முத்தமிடும் காட்சியை விவரித்து பேசும் பொழுதும் சில பேர் அதே போல தங்கள் காதலர்களுடன் அனுபவித்தேன் என்று ரசித்து பெருமையாக பேசும் பொழுது அவளுக்கு என்னவோ அந்த மாதிரியான  பேச்சு பிடித்ததில்லை... செவிகளை மூடிக் கொள்வாள்..

ஆனால் இன்று அந்த மாதிரி ஒரு காட்சியை லைவ் ஆக பார்க்க அவளுள் என்னென்னவோ இனம்புரியாத ரசாயன மாற்றங்கள்..!

அந்த நேரம் பூத்தது அழகாய் ஒரு பூ அவள் உள்ளே...!  அந்த நொடி விழித்து கொண்டது இதுவரை அவளுள் ஒளிந்து கொண்டிருந்த அவள் பெண்மை..! 

அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் கலந்து கொண்டிருக்கும் அந்த காட்சி இப்பொழுது அருவருப்பை தராமல் அவளுக்குள் கிளர்ச்சியை தூண்டியது...

கன்னங்கள் சூடேற அதற்கு மேல் அந்த காட்சியை பார்க்க முடியாமல் நாணம் தடை போட அவசரமாக திரும்பி அறைக்குள் ஓடி வர, அங்கு பால்கனி நுழைவாயிலில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு நின்றிருந்தவன் மீது வேகமாக மோதி கொண்டாள் நிலா..

மோதிய வேகத்தில் அவள் கீழ சரிய,  அனிச்சையாக மார்புக்கு குறுக்காக கட்டி இருந்த   அவன் கரம் நீண்டு அவள் இடையோடு பிடித்து நிறுத்த முயல, இப்பொழுது இன்னும் தடுமாறி அவன் மார்பின் மீதே சாய்ந்திருந்தாள் பெண்ணவள்...

அவனின் திடகாத்திரமான பரந்து விரிந்த மார்பும்,  தன்னை பிடித்து நிறுத்திய அவனின் உறுதியான வலிமையான கரங்களும்,  அகன்ற தோள்களுமாய் தனக்கு உரியவனை...  தன்னவனை நெருக்கத்தில் காண சற்று முன் அவள் கண்ட காட்சியில் கிறங்கி இருந்தவள் அதே கிறக்கத்தோடு தன்னையும் மறந்து தன்னவனின் மார்பில் மையலோடு வாகாக சாய்ந்து கொண்டாள் நிலா...!  

நிலாவை அழைப்பதற்காக அந்த அறைக்கு வந்திருந்த அதிரதன்,  கார் காலத்தில் தோகை விரித்து ஆடும் மயிலாய் தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டு வெளியில் மப்பும் மந்தாரமாய்  இருந்த வானத்தை ரசித்தபடி கூடவே அந்த சில்லென்ற தென்றலின் தீண்டலில் மெய் மறந்து நின்றிருந்தவளையே தன்னையும் மறந்து  இமைக்க மறந்து ரசித்து பார்த்திருந்தான் அதிரதன்...  

அவளை அப்படி காணும்பொழுது, அவனுள்ளேயும் ஏதோ ஒன்று புரள்வதை போல இருந்தது...

மெல்லிய கொடி போன்ற இடையுடன் அந்த தென்றலின் தீண்டலுக்கு சிலிர்த்த படி மயங்கி நின்றவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள அவன் கைகள் பரபரக்க,  அதை கட்டுபடுத்தி அவளையே ரசித்து கொண்டு அந்த பால்கனி வாயிலில் நின்று கொண்டிருந்தான் அதிரதன்..

அவனை மேலும் சோதிக்க, அவன் உறுதியை  சீண்டி பார்க்க என அந்த நொடி வந்தது அந்த சோதனை...

ஒரு வித மயக்கத்தில் நின்றிருந்தவள் முகத்தில் திடீரென்று வந்து அப்பி கொண்ட வெட்கமும் அதனால் செவ்வானமாய் சிவந்து போன அவள் குண்டு கன்னங்களும் அவள் உடலில் வெட்டி சென்ற சிலிர்ப்பும் தாபத்தால் தவித்த இதழ்களை தன் பற்களால் அழுந்த கடித்த தோற்றமும் அவனுள் பெரும் கிளர்ச்சியை தூண்ட அவள் பார்வை சென்ற திசையை அவனும் நோக்கினான்..

அங்கு பக்கத்து அறையின் பால்கனி வாயிலில் அரங்கேறி கொண்டிருந்த முத்த காட்சி அவன் கண்களுக்கும் வந்தது...

ஆனால் அவன் கண்ட காட்சி ஒன்றும் அவனுக்கு புதிதல்ல..

அவன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றிருந்த பொழுது இந்த மாதிரி பல காட்சிகள சில நேரங்களில் பார்த்து இருந்ததாலும் அதைவிட இப்பொழுதெல்லாம் நம்ம ஊர் பார்ட்டிகளிலயே இதெல்லாம் சகஜம் என்பதாலும் அவனுக்கு பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை...

ஆனால் பாதித்தது அந்த காட்சியை கண்டு இதழ் தவிக்க நின்றிருந்தவளை கண்டதும்... அவளின் குழைந்த உருகிய நிலையை கண்டதும் அவனுக்குள் இன்னும் என்னென்னவோ ரசாயன மாற்றங்கள்..

அவனையும் மீறி அவளை  நோக்கி எட்டி வைக்க அதே நேரம் அவளும் திடீரென்று  திரும்பி அறைக்கு உள்ளே வர முயல அவனுக்கு சிரமமே வைக்காமல் அவன் மீது மாலையாக அவன் மஞ்சத்தில் வந்து வீழ்ந்திருந்தாள் அவன் மனையாள்..

அவளை கீழ விழாமல் காக்கும் விதமாக உயர்ந்த அவன் கைகள்,  அவள் மையலுடன் அவன் மார்பின் மீது சாய்ந்திருக்கவும்,  இன்னும் துள்ளி கொண்டு அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டது...

மற்றொரு கையோ சில்லென்றிருந்த அவள் கூந்தல் தடவி, காது மடலை வருடி கழுத்தில் கோலமிட்டு அவளின் வெற்று முதுகை மென்மையாக வருட அதில் சிலிர்த்தவள் இன்னுமாய்  அவனுள் புதைந்து கொண்டாள்...

அவன் கைகளோ அதன் தேடலை நிறுத்தாமல் அவள் மெல்லிய முதுகு எங்கிலும் ஊர்வலம் சென்று  அடுத்த கட்டமாக அவள் சிறுத்த இடையில் ஊர்வலம் வந்து இன்னும் எல்லை மீற எத்தனிக்க அந்த நேரம் கேட்டது அந்த குரல்....... 

“அண்ணி........... அண்ணி........... எங்க இருக்கிங்க?  தாத்தா   உங்களை கூப்பிடறாங்க... “ என்ற யாழியின் குரல் ஏதோ கிணத்துக்குள் இருந்து கேட்பதை போல மிக மெல்லியதாக கேட்டது நிலாவுக்கு...

தன் கணவனின் தீண்டலில் சொர்க்கத்தை காண ஆரம்பித்து இருந்தவள் அதன் வாயிலை மட்டும் எட்டி பார்த்து ரசித்து கொண்டிருந்தவள் உள்ளே நுழையும் முன்னே யாரோ அதன் கதவை அடைத்து மூடிவிட்டதை போல தன் கணவனின் கைவிரல் தீண்டலுக்கு மயங்கி  கிறங்கி கிடந்தவளுக்கு யாழியின் அந்த குரல் சொர்க்கத்தின் உள்ளே  நுழைய விடாமல் பிடித்து இழுக்க,  மெல்ல மெல்ல விழிப்பு வர ஆரம்பித்தது....

இப்பொழுது அண்ணி........ என்று மிக அருகில் கேட்ட யாழியின் குரலில் முழுவதும் விழித்து கொண்டவள் அப்பொழுதுதான் அந்த சூழ்நிலை புரிந்தது நிலாவுக்கு..

தன்னவன் மார்பில் சாய்ந்திருக்கும் நிலை புரிய கூடவே அவன் இன்னொருத்தியை விரும்புபவன் என்ற உண்மையும் அந்த நேரம் மண்டையில் உறைக்க,  தீச்சுட்டதை போல துள்ளி குதித்து அவனிடம் இருந்து விலகினாள் நிலா...

ஏய் என்று அழைத்தவாறு, அதிரதன் தாபத்துடன் எட்டி அவளை பிடிக்க முயல, அதற்குள் முழுவதுமாக தன் நிலைக்கு வந்திருந்தவள்,  அவன் கைக்கு எட்டாமல் லாவகமாக  குனிந்து ஓடியவள், அறைக்  கதவை திறந்து கொண்டு சிட்டாக பறந்திருந்தாள் நிலா..!  

அதிரதனுக்கோ நடந்தது புரிய சில நிமிடங்கள் ஆனது..

அவன் உள்ளே எழுந்த வேகம் இன்னுமாய் அவனை சுழற்றி அடித்து கொண்டிருக்க, அந்த நேரம் அழைத்து இருந்தாள் அவன் நிலா பொண்ணு...

அலைபேசியை எடுக்க, அப்பொழுதுதான் தூக்கிவாரி போட்டது அவனுக்கு...

“இது எப்படி சாத்தியம் ? என் நிலா பேபி யை விட்டு இந்த சதிகாரியிடம் எப்படி மயங்கினேன்? அவளை தீண்ட எப்படி என் மனம் வந்தது..? என் நிலாவை தவிர இதுவரை யாரிடமும் என் மனம் படர்ந்ததில்லையே...!

எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஆபாச உடைகளில் கூட பெண்கள் அவனை  அணுக நெருங்க முயன்றிருக்கிறார்கள்..

“ஆனால் அப்பொழுது எல்லாம் மனம் பிறளாமல் அவர்களை எல்லாம் தள்ளி வைத்து நிலாவை மட்டுமே மனதில் இறுத்தி வைத்திருந்தேனே..!  அவளின் இடையில் தவழ்ந்த என் கைகள் இப்பொழுது இவளிடமும் எப்படி படர்ந்தது...

என்ன மாயம் செய்தால் இந்த சதிகாரி? இதுவும் என்னை அவள் பக்கம் இழுக்கும் மாய வேலையாதான் இருக்கும். அந்த  ஜமீன்தாரின் திட்டத்தில் இதுவும்  ஒன்றாக இருக்கும்.. அவர்கள் திட்டப்படி நானும் வளைந்து கொடுக்க ஆரம்பித்தேனே..

சே. நல்லவேளை யாழி குட்டி காப்பாற்றினாள்..! இல்லையென்றால் ஏதாவது ஏடாகூடாமாக ஆகி இருந்தால் அதை வைத்தே என்னை என் நிலாவிடம் இருந்து பிரித்து விடுவார் இந்த ஜமீன்தார்..

கரெக்ட்... அதுதான் அவர்  திட்டம்...

இருக்கட்டும்.... அவர்கள் திட்டத்தை  வைத்தே  அவர்களை மடக்கறேன்.. என்னை சீண்டி தன் திட்டத்தை  நிறைவேற்றி கொள்ள எண்ணி இருந்தவளுக்கு திருப்பி கொடுக்கிறேன்..

அவளும் தானே என்னிடம் மயங்கி கிறங்கி கிடந்தாள்... அவளை அப்படி மயக்கத்தில் கிடத்தி சொர்க்கத்தின் வாயிலை காட்டி அதை பறித்து கொள்ள போகிறேன்.. அதன் வலி இன்னும் பெரும் வலியாக இருக்கும்.. அனுபவிக்கட்டும்.. அந்த வலியும் வேதனையும் இவளும் அனுபவிக்கட்டும்.

என் நிலா பொண்ணை என்னிடம் இருந்து பிரிக்க நினைத்தால் எனக்கும் இப்படித்தானே வலிக்கும் என அவளுக்கு புரிய வைக்கிறேன்.. அதை வைத்தே அவளை  அவளாகவே என்னை விட்டு பிரிந்து செல்ல வைக்கிறேன்... வைப்பான் இந்த அதிரதன்.. “ என்று பல்லை கடித்து தனக்குள் சூளுரைத்து கொண்டான்..

அவனுக்கு தெரியவில்லை.. அவன் விரித்த வலையில் அவனே விழப் போகிறான் என்று. தனக்குத்தானே ஆப்பு  வைத்து கொள்வது,  தனக்குத்தானே குழி பறித்து கொள்வது என்பது இதுதான் போல..! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!