என்னுயிர் கருவாச்சி-36

 


அத்தியாயம்-36



திகாலையில் நன்றாக அசந்து உறங்கி கொண்டிருந்தவளை கொக்கரக்கோ என்ற சேவலின் சத்தம் தட்டி எழுப்பியது.

அதில் தூக்கம் கலைந்ததில்  எரிச்சலடைந்தாள்  பூங்கொடி,

“சை... இந்த செவிலிக்கு  வேலையே இல்லை.  அதுக்கு தூக்கம் வரலைன்னா சீக்கிரம் எந்திரிச்சு எல்லாரையும் எழுப்பி விட்டுட்டு இருக்கு.

அடுத்த வாரம் முதல்ல இதை பிரியாணி போடணும்...” என்று மனசுக்குள்ளே திட்டிக் கொண்டு, மீண்டும் விலகியிருந்த போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயன்றாள்.

ஆனால் அவளை தூங்க விடாமல்,  மீண்டும் கொக்கரக்கோ கோ ...  என்று திரும்பத் திரும்ப கூவி, அவளை இன்னுமாய்  எரிச்சல் படுத்திக் கொண்டிருந்தது செவிலி.

“ஏய்.. செவிலி... நீ என்னை ரொம்பவும்  டென்ஷன் பண்ற... கண்டிப்பா  நீ  பிரியாணி தான்...” என்று முனகியவாறு அனிச்சையாய் திரும்ப,  அருகில் இருந்த கட்டிலில் அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்  ராசய்யா.  

அவனை கண்டதும் தான் அடுத்து அவள் செய்ய வேண்டிய வேலை நியாபகம் வர, 

“ஆஹான்... இந்த செவிலி நம்மள கரெக்ட்டான டைம்முக்குத்தான் எழுப்பி விட்டிருக்கு... இல்லைனா இன்னும் நல்லா அசந்து தூங்கி இருப்பேன். அப்படி தூங்கி இருந்தால், நேத்து நான் போட்ட சவால் ல தோத்து போயிருப்பேன்.

செவிலி... உனக்கு ரொம்ப தேங்க்ஸ்...நீ பிரியாணி இல்ல. உனக்கு பிரியாணி வாங்கித் தர்ரேன்...” என்று தனக்குள்ளே சிரித்துக் கொண்டவள், கலைந்திருந்த  கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையாக போட்டுக் கொண்டாள்.

நேற்றைப் போலவே இன்றும் தன் நெற்றியில் இருந்த   குங்குமத்தை கலைத்து  விட்டு,  தலையில் சூடியிருந்த   மல்லிகைப்பூவை பிய்த்து எடுத்து  ஆங்காங்கே   போட்டவள்,  மெல்ல அடிமேல் அடிவைத்து அன்ன நடை இட்டு ராசய்யாவின் கட்டில் அருகில் வந்தாள்.  

பிச்சு வச்சிருந்த பூவை கொஞ்சம் அவன் மீது தூவிவிட்டு,  அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தை எடுத்து அவன் கன்னத்தில் மெல்லமாக தடவினாள்.

மீதி குங்குமத்தை அவன் உதட்டில் தடவ வர, அடுத்த நொடி ஒரு  வலிய கரம் ஒன்று அவள் கையை இறுக்கமாக பிடித்துக்  கொண்டது.

அதைக் கண்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க,  கட்டிலில் படுத்திருந்த ராசய்யா கண்ணை உருட்டி விழித்தபடி அவளை பார்த்தபடி படுத்திருந்தான்.

தன் கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் அவனை உற்று பார்க்க, இப்பொழுது அவன் விழிகள் அசைய, அவளையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்ல இதழ் திறந்து  

என்னடி இது? “  என்றான் அவளை  செல்லமாக முறைத்தவாறே.

“எ...எ..  எது என்றாள்?”  தவிப்புடன்.  

“ஹ்ம்ம் செத்த நேரம் முன்னாடி நீ பண்ணினது... அப்புறம் என் உதட்டுல எதையோ தடவ வந்தியே...இதெல்லாம் என்ன ட்ராமா?” என்று நக்கலாக சிரித்தபடி கிண்டலாக கேட்க,  பெண்ணவளோ ஆட்டை திருடி மாட்டிகிட்ட திருடன் போல திருதிருவென்று முழித்தாள்.

“நான் பார்க்கும் பொழுது நன்றாகத்தானே உறங்கி கொண்டிருந்தான். அப்புறம் எப்படி கண் முழிச்சான்.. சை.. தூங்கற மாதிரி நடிச்சிருக்கான். நான்தான் அவன் தந்திரம் தெரியாமல் தானா வந்து சிக்கிட்டேன்...ஹ்ம்ம்ம் சமாளிப்போம்...” என்று தனக்குள்ளே புலம்பியவள் 

“ஹீ ஹீ ஹீ  அது வந்து மாமா..ஆங்..  உன் மீசை அழகா இருந்ததா...  அதனால தொட்டுப் பார்க்கலாம் னு கிட்ட வந்தேன்...”  என்று சமாளித்தாள்

அப்படியா... சரி சரி நம்பிட்டேன்...ஆமா... நீ ஏன்  உன் நெத்தியில இருந்த  குங்குமத்தை கலச்சுவிட்டுகிட்ட... அப்புறம் என் கன்னத்துலயும் தடவின மாதிரி இருந்தது..”  கட்டிலில் படுத்தவாறு மீண்டும் அவளை கிண்டல் உடன்  கேட்க, அதில் அதிர்ந்தவள்

“அது வந்து... அது வந்து...”  என்று வார்த்தை வராமல் தடுமாறினாள்.

அவளின் திருதிரு முழியில் இருந்தே ஓரளவுக்கு நடந்ததை யூகித்து விட்டவன்.

“ஓஹோ... அப்படினா நேத்தும் இதுதான் நடந்ததா?  

ஏன் டி...  நீயே என்ன என்னவோ பண்ணிக்கிட்டு,  நமக்குள்ள எல்லாம் நடந்திட்ட மாதிரி சீன் போட்டியா?  எதுக்கு அப்படி செஞ்ச?  

அதானே...  இந்த ராசய்யா அப்படி எல்லாம் நடந்திருக்க மாட்டானு  எனக்கு உறுதியா  தெரிஞ்சது.  ஆனாலும் நீ கொடுத்த பில்டப் ல அப்படியும் நடந்திருக்குமோனு கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்தது

இப்ப எல்லாம் தெளிவாகிடுச்சு...!  எல்லாம் உன்னோட ட்ராமா என்று தெளிவா புரிஞ்சிடுச்சு.  எல்லாம் உன்னோட தகிடுதத்தம் தானா...”  என்று மெல்ல புன்னகைத்தான்.

தன் சாயம் இப்படி அநியாயமா வெளுத்து போனதும், எங்கே அவளை ஏக வசனத்தில் திட்டப் போகிறானோ என்று அஞ்சி இருந்தவள்,   அவளை  திட்டாமல் மெல்ல  சிரித்து வைக்கவும், அவளுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.  

அவளும் ஒரு அசட்டு சிரிப்பை  சிரித்து வைக்க,  இப்பொழுது அவளைப் பார்த்து முறைத்தவன்

“சொல்லுடி...  எதுக்கு இப்படி செஞ்ச? “  என்றான்  கடுமையான பார்வையில்

ஹீ ஹீ ஹீ... அது வந்து... சும்மா விளையாட்டுக்குத்தான் மாமா...”  என்று சிரிக்க

உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தை இல்லையா? எது எதுல விளையாடறதுனு இல்ல..இப்படித்தான் நடக்காத ஒன்னை நடந்ததா சொல்லி என்னை ஏமாத்துவியா? “  என்று சிடுசிடுத்தான்.  

“ஆமா...  உன்கிட்ட விளையாடாம  நான் யார்கிட்ட விளையாடுவேனாம்? நான் ஒன்னும் உன்னை ஏமாத்தல.

எப்படியும் நமக்குள்ள நடக்க போவதைத்தான் முன்கூட்டியே சொன்னேன்.   அதுக்கு போய் இப்ப எதுக்கு இப்படி சிலுத்துகிற?”   என்று அவளும் எகிற ஆரம்பித்தாள்.

அப்பொழுதுதான் அவன் ஏன் கோபபட்டான் என்ற  காரணம் அவனுக்கு உறைத்தது.  

அவளை எப்படியாவது தன்னிடமிருந்து விலக்கி வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்து,  அவளுக்கு  நல்ல வாழ்க்கையை  அமைந்து தர வேண்டும்  என்பது அவன் திட்டம்.

அதனால்  பெயரளவில் மட்டும் கணவன் , மனைவியாக இருக்க வேண்டும்  என்று எண்ணி இருந்தான்.

அவன் திட்டத்தில் மண்ணை போடுவதை போல, நேற்று காலை எழுந்தவள்,   அவர்களுக்குள் எல்லாம் நடந்து விட்டது என்று சொல்லவும், அவன் போட்ட  திட்டம் ப்ளாப் ஆகி விட்டதே என்று தான் ஏமாற்றமாக  இருந்தது.  

இப்பொழுதோ அதெல்லாம் வெறும் ட்ராமா என்று தெரிய வரவும்,  அவன் ஏமாற்றம் கோபமாக மாறி  அவளை முறைத்தபடி கடிந்து கொண்டான்.  

இப்பொழுது  அவளும் அவனிடம் எகிற, தன் கோபத்தை தணித்து கொண்டவன்,

“இனிமேல் இப்படி எல்லாம் விளையாடாத பூவு... இது எவ்வளவு பெரிய விஷயம். அதுல போய்...

அது சரி...  நம்ம வெச்ச பெட்ல நான் தான் ஜெயிச்சேன். அப்ப  நீ ஒத்துகிட்ட மாதிரி நான் சொல்றதெல்லாம்  நீ கேட்க வேண்டும்...”  என்று புன்னகைத்தான்.  

“அதெல்லாம் முடியாது....” என்று ஆரம்பித்தவள், அவன் முறைக்கவும்,  

“சரி சொல்லுங்க...  ஆனா நான் கேட்கிற மாதிரிதான் நீங்க  சொல்லணும்...”  என்று கன்டிசன் போட்டாள்.  

ஹே... இது செல்லாது,  அப்படியெல்லாம் இல்ல. நான் சொன்னதை செய்யறேன்னுதான்  நீ ஒத்துகிட்ட.  அப்ப நான் சொல்ற மாதிரிதான்  நீ கேக்கணும்....  நடந்துக்கணும்...  பேச்சை மாத்தக்கூடாது...”  

“ஆஹான்... இந்த கருவாயன் கொடுக்கிற பில்டப் ஐ பார்த்தால் ஏதோ என்னை வில்லங்கத்துல மாட்டி விடற மாதிரி தெரியுதே,,, ஹ்ம்ம்ம் அப்படி என்னத்த சொல்லப் போறானாம்.. சரி...என்னானு  கேட்டுத்தான் பார்க்கலாம்...” என்று எண்ணிக் கொண்டவள்,  

சரி சொல்லுங்க....  பார்க்கலாம்...”  என்றாள் விட்டேத்தியாக

சரி... நீ செய்ய வேண்டியதில நம்பர் ஒன்.  இன்னைக்கு நாம பண்ணையார் வீட்டிற்கு விருந்துக்கு போகப் போறோம்.  பண்ணையார் அம்மா உன்னை கூட்டிகிட்டு  வரச் சொன்னாங்க.

நேத்தே சொல்லனும்னு நினைச்சேன்... மறந்துட்டேன். அதனால மதிய விருந்துக்கு நாம அங்க போகணும்...” என்றான்  அவளை பார்த்தவாறு.  

பண்ணையார் வீடு என்றதும் பூங்கொடியின் முகம்  சுருங்கியது.

பண்ணையார் வீட்டில் அவன்  வேலை செய்வது ஏனோ பிடிக்கவில்லை அவளுக்கு.

இப்பொழுது அந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றதும் அவள் முகம் கருத்து, சுருங்கியது.  

அவளின் முகத்திலிருந்தே அகத்தை  கண்டு கொண்டவன், அவள் அவ்வளவு பெரிய இடத்திற்கு வர தயங்குகிறாள் என்று எண்ணியவன்,

“பண்ணையார் அம்மா ரொம்ப நல்ல டைப் பூவு. நமக்கு கல்யாணம் ஆனது தெரிந்ததும், உன்னைப் பார்க்கணும்னு அவங்கதான் வர சொன்னாங்க.  நீ  எதுவும் யோசிக்க வேண்டாம். ஒரு நடை போயிட்டு வந்திடலாம்....”  என்று சமாதானப்படுத்தினான்.

திருமணத்திற்கு பிறகு அவன் முதன்முறையாக அவளிடம் கேட்டது. அதனால்  மறுக்க முடியாமல் சரியென்று  தலையை ஆட்டி வைத்தாள்.

இந்த பயணம் இருவரின் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது என்று இருவருமே அறிந்திருக்கவில்லை அப்பொழுது.  

****

ன்று மதியம் 12 மணிக்கு டிவிஎஸ் 50 ஐ தயாராக வைத்துக்கொண்டு பண்ணையார் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தான் ராசய்யா.  

மயில் கழுத்து கலரில், மெல்லிய ஜரிகை இட்ட மைசூர் சில்க் புடைவையை கட்டிக்கொண்டு, முன்னால் இருந்த புடவையை கால் தடுக்கி விடாமல் ஒரு கையால் பிடித்தவாறு வேகமாக அங்கு வந்தாள் பூங்கொடி.

அந்த இரு சக்கர வாகனத்தில் இரண்டு பக்கமும் காலை போட்டபடி, அமர்ந்தவாறு அவள் வருகைக்காக காத்திருந்தவனை கண்டதும் கஷ்டமாகி போனது பூங்கொடிக்கு.

அதுவரை அவன் பெயருக்கு ஏற்ற மாதிரி ராஜா போல கம்பீரமாக புல்லட் ல் வந்து இறங்கியவன்...  

இன்று பண்ணையார் வீட்டிற்கு செல்ல,  அவன் புல்லட் இல்லாததால், தணிகாசலம்  அவ்வப்பொழுது பயன்படுத்தும் அவருடைய டிவிஎஸ் 50 ஐத்தான்  எடுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தது.

அவனுடைய ஆறடிக்கும் மேலான உயரத்திற்கும்,  ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு,  அந்த சிறிய இருசக்க சக்கர வாகனத்தில் காலை மடக்கி  அமர்ந்து இருப்பதை காண,  நெஞ்சை பிசைந்தது பெண்ணவளுக்கு.

தன்னால்தான் அவனுக்கு இந்த ஒரு நிலை என்று வேதனைப் பட்டாலும், அடுத்த கணம் அவன் அமர்ந்து  இருந்த காட்சியை கண்டு  சிரிப்பும் தானாக பொங்கி வந்தது.

******

ரு முறை, முசிறியில் போட்டிருந்த சர்க்கஸில் பார்த்த ஒரு காட்சி நினைவு வந்தது.

பெரிய யானை ஒன்று சிறிய சைக்கிளில் அமர்ந்து ஓட்டிச் செல்வதைப் போல இருந்தது. ராசய்யாவை யானையாக கற்பனை பண்ணி பார்த்தவள்,  தன்னை மறந்து களுக்கென்று கிளுக்கி சிரித்து விட்டாள்.

அவளின் சிரிப்பை கேட்டு திரும்பி  அவளை ரசித்து பார்த்தாலும், தன்னை மறைத்துக்கொண்டு

“எதுக்குடி சிரிக்கிற? “  என்றான் செல்லமாக முறைத்தவாறு.

“ஹீ ஹீ ஹீ  ஒன்னும் இல்ல மாமா...”  என்று சமாளித்தாள்.

“ஹோய்...  நீ  ஒன்னும் இல்லங்கறதிலேயே ஏதோ விஷயம் இருக்குன்னு தெரியுது. ஒழுங்கா சொல்லு...எதுக்கு சிரிச்ச? “ என்று மீண்டும் துருவ,

“ஹா ஹா ஹா எனக்கு  உன்னை இப்படி பார்க்க காமெடியா இருக்கு...  அதான் சிரிச்சேன்...”  என்று தன் மனதில் தோன்றிய கற்பனையை சொல்ல அவனும் வாய் விட்டு சிரித்தான்.

“சரி சரி பெரிய யானைக்கு பின்னாடி இன்னொரு குட்டியானை உட்கார்ந்து போகும் இல்ல.  அது மாதிரி நீயும் வந்து  என் பின்னாடி உட்காரு...”  என்று சிரிப்புடனே சொல்ல,

“ஐய...  என்னை பார்த்தால் யானை மாதிரியா இருக்கு? “  என்று அவனை முறைத்தாள்.

“ஹா ஹா ஹா நீ யானை இல்லையா? ஆமால்ல... நீதான் உன்னை பாயும் புலி என்று சொன்னியே.  சரி அப்ப யானைக்கு பின்னால உட்கார்ந்து போற  புலினு  வச்சுக்க...” என்று சிரித்தான் ராசய்யா.

“என்னாது ?  வச்சுக்கிறதா?  “  என்று கண்களில் குறும்புடன் கேட்க,  

“அட ராமா...நான் சொன்னது அந்த வச்சுக்க இல்லடி....”

“ஓஹோ...வேற எந்த வச்சுக்கவாம்? “ என்று முறைக்க,

“ஷப்பா... முடியலடி... இப்படி உச்சி வெயில்ல என்னை ஏன்டி இப்படி போட்டு படுத்தற? “ என்று அலுத்துக் கொள்ள,

“என்னது? நான் படுத்தறேனா? மாமா... இது சரியில்ல... செத்த நேரம் முன்னாடி வச்சுக்கனு சொன்ன.. இப்ப படுத்தறேனு சொல்ற...ஒன்னும் தெரியாத பச்ச புள்ளைகிட்ட பேசற பேச்சா இது...”  என்று செல்லமாக சிணுங்க,

“டேய் மச்சான்... ஒன்னும் தெரியாத பச்ச புள்ளையண்டாம். அது யாருனு தெரியுமா உனக்கு? “அவர்கள் சண்டையை ஆ வென்று வாயை பிளந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அன்பரசனை வம்புக்கு இழுத்தான் ராசய்யா...

அவனும் தன் மாமன் தன்னை கோர்த்து விடுவதை கண்டு கொண்டு  சுதாரித்துக் கொண்டவன்

“அதுவா மாமா... என் அக்கா பூங்கொடிதான்... ஒன்னும் தெரியாத பச்ச புள்ள. வேணும்னா அவ வாயில கை வச்சு பாருங்க...கடிக்கவே மாட்டா...” என்று தனக்கு வந்த பாலை திருப்பி விட்டான் குட்டி மச்சான்.

ஆஹான்... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்ற மாதிரி , இரண்டடி இருந்துகிட்டு, இந்த மச்சான் விவரமாதான் இருக்கான்...” என்று உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவன்,

“சரிடா மச்சான்.. நான் இன்னொரு நாள் உன் அக்கா வாயில விரல வச்சு டெஸ்ட் பண்ணிக்கிறேன். இப்ப உத்தரவு வாங்கிக்கறேன்... “ என்று வாயில் கை வைத்து பவ்யமாக புன்னகைக்க,

அது... இந்த மச்சான்கிட்ட அந்த பயம் இருக்கோணும்...” என்று ஸ்டைலாக தன் காலரை தூக்கி விட்டுக்கொண்டான்.

அடிங்... விட்டா ஓவரா பேசுவடா நீ. இரு உன்னை வந்து வெச்சுக்கறேன்...” என்றவன், சற்றுமுன் வச்சுக்கறது னு சொன்னதுலதான் இந்த வாய்ப்போரே ஆரம்பித்ததை எண்ணி பாதியில் நிறுத்திக் கொண்டான்.

அதை கண்டு கொண்டவள் கலகலவென்று வாய் விட்டு சிரித்தாள்.

ஒரு நொடி அவளின் சிரிப்பை ரசித்தவன்,  

“சரி சரி அக்காவும் பொறந்தவனும் என்னை கலாய்ச்சது போதும்.  உட்காருடி... கிளம்பலாம்...”  என்று முறைக்க, அவளும் தன் சண்டையை நிறுத்திவிட்டு, அவன் தோள் தொட்டு அந்த சிறிய வாகனத்தில் ஏறி அவன் பின்னால் அமர்ந்து கொண்டாள்.

அவனும் அந்த வண்டியை கிளப்பி சென்றான்.

இருவரின் செல்ல சண்டையும், அதில் தன் மகளின் மலர்ந்த சிரிப்பையும் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த பெரியவர்கள் இருவருக்கும் மனம் நிறைந்து போனது.

எப்படியோ தன் மகள் சீக்கிரம் வெளிவந்து விடுவாள். தங்களிடம் சகஜமாக பேச வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

*****

முன்பு ராசய்யா  உடன் புல்லட்டில்  செல்லும்பொழுது அவன் மீது இடித்து விடாமல் இருக்க, எவ்வளவு  தூரம் தள்ளி அமர முடியுமோ  அவ்வளவு தூரம் தள்ளி அமர்ந்து கொள்வாள் பூங்கொடி.  

இப்பொழுது அது சிறிய வாகனம் என்றதாலும், ஓட்டுபவன் தன் கணவன் என்ற உரிமையில், பின்னால் அமர்ந்து இருந்தவள், நெருங்கி அவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள்.  

கிட்டத்தட்ட அவனின் முதுகில் சரிந்தபடி ஒட்டி அமர்ந்து கொள்ள, அவளின் மெல்லிய பட்டு மேனியின்  உரசலில் தவித்துப் போனான்  ராசய்யா.  

அவனின் திடகாத்திரமான தேக்கு போன்ற முறுக்கேறிய தேகத்தில், கொடி போன்ற மென்மையான அவளின்  மேனி உரச, பற்ற வைக்காமலயே பற்றிக்கொண்டது மோகத்தீ அவன் உள்ளே.

அதை இன்னும் தூண்டிவிடும் வகையில்,  சாலையில் கிடந்த ஒரு சிறிய கல்லின்  மீது  அந்த வாகனம் ஏறி இறங்க,  அதில் குலுங்கியவளின்   முன்பக்கம் நன்றாக அவன் மீது இடித்து வைக்க,  அதில்  இன்னுமே சூடாகிப் போனான் ராசய்யா.

அவன் மீது இடித்தவள் அதன் பிறகு தள்ளி அமராமல் இன்னுமே அவன் மீது இடித்தபடி அமர்ந்திருக்க, ராசய்யாவுக்குத்தான் அவஷ்தையாக இருந்தது.

அதற்குமேல் சமாளிக்க முடியாமல், பக்கவாட்டில் திரும்பியவன்

“கொஞ்சம் தள்ளி உட்காருடி...”  என்றான்  வெளிவராத தாபக்குரலில்.

அவன்  சொன்னது கேட்காதவளாய், இன்னும் அவன் காதருகில் ஒட்டி வந்தவள், அவனின் காது மடலில் உரசியவாறு  

“என்ன மாமா சொன்னிங்க? “ என்றாள் ஹஸ்கி குரலில்.

அவளின் அந்த வெப்பமான மூச்சு காற்று அவனின் காது மடலில் பட்டு அவனை இன்னும் சூடேற்றியது.

ஏற்கனவே அவனை உரசிக்கொண்டி இருப்பதிலயே தவித்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்படி காதோடு அவள் கன்னம் உரச, நிலை குழைந்து போனான்.

ஆனாலும் முயன்று  தன்னை சமாளித்துக்கொண்டு,

“கொஞ்சம்  தள்ளி உட்காரு டீ...” என்றான்  சத்தமாக.  

“ஏனாம்? “   என்று செல்லமாக முறைத்தபடி  கேட்க

“இடிக்குது டி...”  என்றான் வெளிவராத குரலில்.

“எது இடிக்குதாம்? “  என்று தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,

“எல்லாம் தான்... ஏற்கனவே இந்த வெய்யில்ல சூடாகி இருக்கேன். இதுல நீ வேற மனுஷனை சூடாக்காத... கொஞ்சம்  தள்ளி உட்கார்...”  என்று சிடுசிடுத்தான்.  

“சூடாக்கறதா? அப்படின்னா என்ன மாமா? “ என்று கண்களை கொட்டி வெகுளியாக கேட்டு வைக்க, அவளின் முக பாவத்தை பின் பக்க பகண்ணாடி வழியாக பார்த்தவனுக்குள் இருந்த ஆண்மை இன்னுமாய் எகிறியது

“அதெல்லாம்  உனக்கு சொன்னா புரியாது. நீதான் வாயில விரலை வச்சாலும் கடிக்க தெரியாத பச்ச புள்ளனு உன் தொம்பியே ஒத்துக்கிட்டானே...” என்று  நகைக்க,

“ஹலோ...  நான் ஒன்னும் பச்ச புள்ள இல்ல.  எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சாக்கும்...”  என்று அவள் முறைக்க,

“சரி சரி ஒத்துக்கறேன்...  நீயும் குமரிதான்.  இப்போதைக்கு இந்த மாமன ரொம்பவும்  படுத்தாம  கொஞ்சம் தள்ளி உட்காரு  தாயே....” என்றான் கெஞ்சலாக.

“நான் ஏன்   தள்ளி உட்காரணும்?. என் புருஷன்..   நான் எப்படி வேணா ஒட்டிக்குவேன்...எப்படி வேணாலும் கட்டிக்குவேன்...”  என்று பின்னால் இருந்து அவனின் இடையோடு கை போட்டு அவனை இறுக்கி கட்டி கொண்டவள், அவனின் பரந்த முதுகில் தன்  முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அதில் திகைத்தவன், ஒரு நொடி தடுமாறிப்போனான். அவன் கையில் இருந்த வண்டியும் தடுமாறி சாலையின் ஓரத்திற்கு சென்று இருந்தது. அதற்குள் தன் தலையை உலுக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டவன்,

“அடியே...  இது நம்ம ஊர் டி..   அதுவும் பட்டப்பகல்ல இப்படி ஓட்டிக்கிட்டும், கட்டிகிட்டும்  போனா நல்லா இருக்காது. நாலு சுவத்துக்குள்ள என்னை  எப்படி வேணா கட்டிக்க.

இப்படி பப்ளிக்கா கட்டிகிட்டு மானத்தை வாங்காதா... “ என்று கெஞ்ச,

“ஆமாமா... நாலு சுவத்துக்குள்ள கட்டிக்கிட்டாலும்... நான் கட்டிக்க  கிட்ட வந்தா தான்,  நீ எட்டி எட்டி போறியே. இப்பதான்  எனக்கு சான்ஸ் கிடச்சிருக்கு. விட்டுடுவாளா இந்த பூங்கொடி...” என்று குறும்பாக கண்சிமிட்ட,  

“அதுக்காக இப்படியா ஒட்டிக்குவ டி... கொஞ்சம் தள்ளி உட்காரு.  நீ மண்டபத்துல என்னை அடிச்சதுக்கே என்னை ஊருக்குள்ள கலாய்க்கிறானுங்க.

நீ வேற இப்படி கட்டிகிட்டனா,    எல்லாரும்  இன்னுமே கலாய்ச்சு தள்ளிடுவானுங்க... “ என்று செல்லமாக எடுத்து சொல்ல,

“எவன் அவன்  என் புருஷனை கலாய்க்கிறது. பேர சொல்லுங்க அவனை ஒரு கை   பார்த்துக்கிறேன்...”  என்று தன் கை முஷ்டியை இறுக்கியவள், ரவுடி போல தன் கையில் இருந்த வளையலை  மேல இழுத்து விட்டுக் கொண்டாள்.

அவளின் ஆக்சனை கண்டு பொங்கி    சிரித்தவன்

“ஆமாமா நீயும் ரவுடிங்கறது மறந்து போச்சு....”  என்று சிரிக்க, அவளும் இணைந்து நகைத்தவள்,  திடீரென்று நிறுத்துங்க நிறுத்துங்க என்று கத்தினாள்.

அவள் கத்தியதில் திடீரென்று பிரேக் போட,  அதில் இன்னுமாய்  அவன் மீது இடித்தாள்.  

திரும்பி அவளை  முறைக்க,  அதற்குள்  இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கியவள்,  பின்னால் ஓடினாள்.  

அங்கே கோமதி நின்றிருந்தாள்.  

*****

பூங்கொடியை  கண்டதும் காணாதவளை போல முகத்தை வெடுக்கென்று மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் கோமதி.

அவளின் அந்த செய்கையை கண்டு பூங்கொடிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஹே கோதி...எப்படி டி   இருக்க? ஏன்  என் கல்யாணத்துக்கு வரலை? “  என்று செல்லமாக கோவித்தவாறு, அவளின்  முதுகில் செல்லமாக ஒரு அடி வைக்க,  கோமதியோ  அவளை  வெறுப்புடன் பார்த்தவறு எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதைக்கண்ட பூங்கொடிக்கு திகைப்பாக இருந்தது.  

எப்பொழுதும் கோமதி இப்படி நடந்துகொண்டதில்லை. பூங்கொடி அவளை அடித்தால்,  ஒரு அடியாவது திருப்பி  அடித்து வைப்பாள்.  

இப்பொழுது அவள் திருப்பி அடிக்காமல் விட்டதும், அதோடு அவள் முகத்தில் இருந்த வெறுப்பும், முகத்திருப்பலும் கண்டு பூங்கொடிக்கு குழப்பமாக இருந்தது.  

“என்னாச்சுடி?  ஏன் என் மேல எதுவும் கோபமா? “ என்றாள் குழப்பத்துடன்.  

“ப்ச்... உன்மேல எனக்கு என்னடி கோபம்?  அதெல்லாம் ஒன்னுமில்லை...”  என்று எங்கோ வெறித்து பார்த்தபடி பதில்  சொன்னாள் கோமதி.  

“இல்ல...உனக்கு என் மேல  கோபம் தான். கோபம்  இல்லைன்னா என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிகிட்டு  போயிருக்க மாட்ட. என்ன விஷயம்னு சொல்லு...”  என்றாள் தன் தோழியை  ஊடுருவி  பார்த்தவாறு.  

“ஒன்னும் தெரியாத பாப்பா...  போட்டாளாம் தாப்பா...” என்று விரக்தியுடன் சிரிக்க,  

“என்னடி சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல?  என்றாள் மீண்டும் குழப்பத்துடன்.

“அம்மா...தாயே... உனக்கு ஒன்னும் புரிய வேண்டாம். நீ போய் உன் புது புருஷனோட கொஞ்சி குலாவு. இனிமேல்  நான் எதுக்கு உனக்கு? “  என்று மீண்டும் எரிச்சலுடன் சொல்ல, அப்பொழுதுதான்  பூங்கொடிக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

கோமதி ராசய்யாவை விரும்பின விஷயம் அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது. நினைவு வந்ததும்,  உடனே அதிர்ந்து போனாள் பூங்கொடி.

“ஐயோ...எப்படி மறந்தேன்...இதை எப்படி மறந்தேன்...?  இவள் சும்மா விளையாட்டுக்குத்தான் ராசய்யா வை பார்த்து வைக்கிறாள்  என்று மேலோட்டமாக எடுத்துக் கொண்டது தப்போ?” என்று அவசரமாக ஆராய்ந்தாள் பூங்கொடி

கோமதியின் முகத்தில் இருந்த வேதனையும், கண்களில் தெரிந்த வலியும்,  அவளைப் பார்த்ததும் வந்த வெறுப்பும்,  விஷயம் லேசானது இல்லை என்று  புரிந்தது பெண்ணவளுக்கு..

அவசரமாக அவள் திருமணம் நடந்த சூழ்நிலையை நினைத்து பார்த்தாள்.

அவள்  ராசய்யாவை கட்டாயப்படுத்தி அல்லவா மணந்து கொண்டாள். அது நினைவு வரவும்  பொண்ணு மனதில் பாரம் ஏறியது. கோமதிக்கு விளக்கம் கொடுக்க முயன்றாள்.

“அப்படியில்ல கோமதி.  என்  திருமணத்தில் நடந்த கூத்து உனக்கு  தெரியும்தானே. ராசு மாமா மட்டும் இல்லைன்னா, நான் அந்த பொறுக்கிக்கு கழுத்தை நீட்ட வேண்டியிருந்திருக்கும்.  அதனால் தான்...”  என்று இழுக்க

“அதுக்குத்தான்  மாமா லட்ச ரூபாய் கொடுத்து உங்கப்பா வாங்கின கடனை அடைக்க சொல்லிட்டாறே...  அதோட விட்டுட வேண்டியது தானே.  நான் அவரை விரும்புறது தெரிந்தும்,  கட்டுடா தாலியை னு நீதானே அவரை அதட்டி உருட்டி மிரட்டி உன் கழுத்துல தாலியை கட்ட வச்ச.

நானும் கேள்விப்பட்டேன்...  

மாமா எவ்வளவு தூரம் தாலி கட்ட மாட்டேன்னு மறுத்தாராம்.  ஆனால் நீ தான் அவர் கன்னத்துல ஒரு அறை விட்டு, விடாப்பிடியாக தாலிய கட்டணும்னு சொல்லி மிரட்டி தாலிய வாங்கிகிட்ட.

பத்தாதற்கு இதோ இப்படி  அவர் கூட ஒன்னா ஒட்டி உரசி உட்கார்ந்து ஜோடி போட்டுக்கிட்டு  ஜாலியா ஊரை சுத்தற.   

எப்பவும் அவர் கூட சண்டை போட்டுகிட்டு இருந்தவ... ஒரே நாள் ல எல்லாத்தையும்   மறந்துட்டு    அவர் பொண்டாட்டியா    ஒன்னா குடும்பம் நடத்தற.  

இதுல இருந்தே  தெரியல...நீ ஒரு சுயநலவாதி.  உனக்கு எது நல்லதோ அதை மட்டும்தான் பாக்கற.  

ராசு மாமா எவ்வளவு நல்லவர் னு நான் உனக்கு எடுத்து சொன்னப்பவெல்லாம்,

இவனெல்லாம் ஒரு ஆளு.. ரௌடி மாதிரி இருக்கிறான்... இவன எதுக்குடி  சைட் அடிக்கிறேன்னு என்னை  திட்டிபுட்டு இன்னைக்கு நீயே அவரை கட்டிக்கிட்டு சந்தோசமா இருக்க.

அவரையே இத்தன வருஷமா மனசுல நினைச்சுகிட்டு இருந்த என் வாழ்க்கையை பத்தி ஒரு நிமிஷமாவது யோசிச்சு பாத்தியா? “  என்று தன் மனதில் இருந்த ஆற்றாமையை எல்லாம் வார்த்தைகளாக படபடவென்று பொரிந்து தள்ளினாள் கோமதி.  

அவள் சொன்னதை கேட்டதும், தன் முகத்தில் யாரோ அறைந்தது போல இருந்தது பூங்கொடிக்கு.  

கோமதிக்கு  கிடைக்கவேண்டிய வாழ்க்கையைவா நான்  தட்டிப் பறித்துக் கொண்டேன்? “ என்று  அவளின் மனம் அவளை குற்றம் சாட்டியது

“இல்ல...  அப்படி இல்ல கோமதி...” என்று ஏதோ விளக்கம் கொடுக்க முயல,  அவளோ அதை காதில் வாங்காதவளாய்

“அடி போடி...  எப்படியோ  என் வாழ்க்கையை தட்டி பறிச்சுக்கிட்ட.  நீயாச்சும் சந்தோசமா  இரு...”  என்று வெறுப்புடன் சொல்லி விட்டு,  விறுவிறுவென்று தன் வீட்டை நோக்கி நடந்து சென்றாள் கோமதி.   

வேர் பிடித்த மரம்போல,  சிலையாக அப்படியே சமைந்து நின்று விட்டாள் பூங்கொடி..! 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!