என்னுயிர் கருவாச்சி-40

 


அத்தியாயம்-40

 

ன்னவள் தன் தோளை அழுந்த பற்றிய கையில்,  தெரிந்த அழுத்தத்தில்,  இருந்தே,  அவளின்  மனநிலை புரிய,  ஒரு காலை கீழ ஊன்றி நின்றவன், பக்கவாட்டில் திரும்பி அவளை பார்த்தவாறு

“கீழ  இறங்கு பூங்கொடி...”  என்று மென்மையாக சொல்ல, அவளோ கீழ இறங்காமல் அவன் தோளை இன்னுமாய் அழுந்த பற்றியவாறு அப்படியே அமர்ந்து இருந்தாள்.

முகமோ பாறை போல இறுகி கிடந்தது.

அவனை அனல் கக்கும் பார்வை பார்த்து,  திட்ட எத்தனிக்க, அதே நேரம் ராசய்யாவின் பைக் சத்தம் கேட்டதும், அந்த வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தனர் இருவர்.

“வாங்க... வாங்க..  ஏன் இங்கயே நிக்கறீங்க... உள்ள வாங்க...” என்று வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்றனர்    அவள் அக்கா பொற்கொடி மற்றும் அவள் கணவன் தினேஷ்.  

அவர்களை கண்டதும் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் பூங்கொடி.  வண்டியிலிருந்தும்  இறங்கவில்லை. அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு .

“ப்ளீஸ் டி. எனக்காக உள்ள வா.  மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.  நேத்து நம்ம விட்ட சவால் நான் ஜெயிச்சா   நான் சொல்றதெல்லாம் கேட்பேன்னு சொல்லி இருக்க.

அதுல ஒன்னுதான் இதுவும். நீ அதை தட்டக்கூடாது. நான் சொல்றேன்ல... உள்ள வா...” என்று மெதுவாக கிசுகிசுக்க,  அவளோ  அவனை  இன்னுமாய் எரிக்கும் பார்வை பார்த்தாள்.  

அதற்குள் இருவரும் பைக்கின் அருகில் வந்து இருக்க, அதற்குமேல மறுக்க   முடியாமல் வண்டியிலிருந்து கீழே இறங்கினாள்.  

பூங்கொடியின் திருமணத்திற்கு வந்து சென்ற பிறகு,  எத்தனையோ முறை பொற்கொடி தன் தங்கையிடம் பேச முயன்றாள்.

அவளை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து பார்த்தாள்.  

பூங்கொடியோ அவள் வீட்டுக்கு  போக மாட்டேன் என்று மறுத்து விட்டாள். அதோடு அவளிடம் பேசக்கூட பிடிக்கவில்லை என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஆனால் இப்பொழுது கல்லூரிக்கு வந்தவளை இங்கே கூட்டிட்டு வருவான் அவள் கணவன் என்று தெரியாது அவளுக்கு.  

இப்பொழுது வீடு வரைக்கும் வந்த பிறகு எப்படி திரும்பிச் செல்வது என்று வேறு வழியில்லாமல் அந்த வீட்டிற்குள்  வந்தாள்.  

அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.

அன்று தன் அக்காவிடம் எத்தனை கெஞ்சினாள்?. அவளால்  முடிந்த காசை கொடுக்கச் சொல்லி.  அது மட்டுமா?  

திருமண மண்டபத்தில் அவளை வைத்துக் கொண்டு எல்லாரும் பேரம் பேச,  எப்படியாவது தன்னை காப்பாற்ற சொல்லி  தன் அக்கா இடம்தானே மன்றாடினாள்.

ஆனால் அவளோ தன் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை. தன் தங்கையின் துயர் துடைக்க சிறு துரும்பை கூட எடுத்து போடவில்லை. அவளுக்கு உதவ முன்வந்த தன் கணவனையும் அல்லவா தடுத்து இழுத்துக் கொண்டாள்.  

“அப்படி பட்டவள், இப்பொழுது எதற்காக இந்த விருந்தும் சீராட்டும்? இதுலயும் அவளுக்கு ஏதாவது ஆதாயம்  இருக்கும்.  இல்லையென்றால் என்னை ஏன் வருந்தி வருந்தி விருந்துக்கு அழைக்கிறாள்?   

என்று யோசித்தவாறு  தன்  முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே வர, அடுத்த நொடி  சித்தி...  என்ற குரல் கேட்டது.

அதைக் கேட்டதும் அதுவரை அவள் மனதில் இருந்த கசப்பு வெறுப்பு வன்மம்  எல்லாம் மாயமாய் மறைவதை  போல இருக்க,  குரல் வந்த திசையை பார்த்தாள்.

அங்கே அவள் அக்கா மகன் ஆதவன் அவளை நோக்கி ஓடிவந்தான்.

கையில் இருந்த நோட்டு புத்தகத்தை  ராசய்யாவிடம் கொடுத்து விட்டு ஓடிச் சென்று அவனை  தூக்கி தட்டாமாலை சுற்றி,  அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.  

அவனும் கிளுக்கி சிரித்தவன், தன் சித்தியின்  இது கன்னத்தையும் தன் பிஞ்சுக் கரங்களால் பிடித்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டான்.

அதை ஒரு வித பொறாமையோடு பார்த்தவாறு நின்றிருந்தான் ராசய்யா.

பொற்கொடி அவர்களை வரவேற்று பலகாரம் கொடுத்து உபசரித்தாள்.

மற்றவர்களிடம் ராசய்யா கதை அடிக்க, பூங்கொடியோ  தன் அக்கா மகன் ஒருவன் தான் அங்கே இருக்கிறான்  என்றபடி அவனிடம் மட்டுமே கொஞ்சிக் கொண்டிருந்தாள்.  

பூங்கொடிக்கு என வைக்கப்பட்ட சிற்றுண்டி  தட்டில் இருந்த உணவு பதார்த்தங்களை  எடுத்து ஆதவனுக்கு ஊட்டி விட்டாள்.

மறந்தும்  ஒரு வாய் கூட அவள் சாப்பிடவில்லை.

அதைக்  கண்ட ராசய்யாவுக்கு கஷ்டமாக இருந்தது. அவனுக்கு  அதை சாப்பிட பிடிக்கவில்லை.  

அவளின் அருகில் அமர்ந்திருந்தவன்,  அவளின் அருகில் நெருங்கி அமர்ந்தவன், அவள்புறமாய் சாய்ந்து,

“சாப்பிடு பூவு... “ என்க, அவளோ அவனை  கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரத்தோடு முறைத்து  வைத்தாள்.  

“இவள் மனதில் இருப்பதை கேட்டு இருக்கணுமோ?    அவளிடம் சொல்லாமல் இங்கே  அழைத்து வந்தது தவறோ? என்று முதன்முறையாக யோசித்தான் ராசய்யா.  

“சாரி டி... உன் அக்கா செஞ்சது தப்புதான். அதற்காக அப்படியே விட்டுட முடியுமா?  இந்த குட்டி பயல உன்னால விட்டுட்டு இருக்க முடியுமா?  

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைனு நீ படிச்சது ஞாபகம் இல்ல?  

இந்த உலகத்துல, தப்பு செய்யாதவங்க யாருமில்ல டி. நான் உறவுகள் யாரும் இல்லாத அனாதையாக வளர்ந்து விட்டேன்.  நீ  உன் குடும்பத்தில்,  அக்கா தம்பி தங்கைனு  வளர்ந்தவ. அந்த உறவுகளை வெட்டி விடக்கூடாது.

நிழலின் அருமை வெய்யிலில் நிக்கும்போது தெரியும் என்பார்கள். அது மாதிரி உறவுகளின்  அருமை, அந்த மாதிரி உறவுகள் இல்லாத அனாதையான  எனக்குத்தான்   தெரியும். அதனாலதான் சொல்றேன்.

உன் அக்கா செய்ததை மன்னித்து விடு...” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும்படி குட்டி பிரசங்கம் செய்தான்.

“ப்ச்...ஆபத்தில் எதிரி கூட உதவுவான். ஆனால் என் வாழ்க்கையே பறிபோகும் ஆபத்தில், காலை பிடித்துக்கொண்டு கெஞ்சாத குறையாக இவளிடம் உதவி கேட்டேன்.

முழு பணத்தையும் கூட கொடுத்திருக்க வேண்டாம். என்னால முடிந்தது என்று சிறு தொகையை கொடுத்திருந்தால் கூட என் மனம் ஆறி இருக்கும்.

அக்காவால முடிந்தது இவ்வளவுதான் என்று பெரிதாக வருத்தபட்டு இருக்க மாட்டேன். ஆனால் கையில் வைத்துக்கொண்டே இல்லை என்று கை விரித்தது தப்பு இல்லை. துரோகம்.

கூட பொறந்தவளுக்காக அவள் செய்த துரோகம். அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாது..

நீ இங்கதான் வரப்போறனு தெரிஞ்சிருந்தா நான் பாதியிலயே எட்டி குதிச்சு அப்படியே போயிருப்பேன். நீயும் என்னை ஏமாத்திட்ட இல்ல...” என்று கண்களில் வலியுடன் அவனை அடிபட்ட பார்வை பார்க்க, அதில் பதறியவன்

“அப்படி இல்ல மா... உன் அக்கா விருந்துக்கு வரச்சொல்லி ரொம்பவும் கேட்டுக்கிட்டா... அதோட இந்த சின்ன பண பிரச்சனைக்காக எதுக்காக  ஒரு உறவை வெட்டி விடணும். அதான் உன்னை இங்க கூட்டிகிட்டு வந்தேன்..”

“அது வெறும் பணப்பிரச்சனை மட்டும் அல்ல. என் வாழ்க்கை பிரச்சனை. மண்டபத்துல அத்தனை பேர் முன்னால் அந்த பொறுக்கி என்னை வைத்து பேரம் பேச எனக்கு எப்படி இருந்திருக்கும்.

அங்கயே செத்துட்டேன்...அப்படிப்பட்டவ வீட்டுக்கு வந்து நான் எப்படி விருந்து சாப்பிடுவதாம்.. “  என்று இதழ் துடிக்க, கண்ணில் நீர் திரள தழுதழுத்தாள் பூங்கொடி.

அதைக் கண்டவனுக்கு மனம் பதைத்தது.

அந்த திருமணம் சம்பவம் அவள் மனதில் இப்படி ஒரு வலியை ஏற்படுத்தி இருப்பது அவனுக்கு தெரியாது.

அவனிடம் அவள் சிரித்து பேசுவதை வைத்து, அதை அன்றே மறந்திருப்பாள் என்று எண்ணியிருக்க, அவளோ அதை மறக்காமல் இன்னும் உள்ளுக்குள் வைத்து வேதனை பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று இப்பொழுது புரிந்தது.

அருகில் அமர்ந்து இருந்தவளின் தொடை மீது இருந்த அவள் கையை மெல்ல   அழுத்தி  கொடுத்தான்.

“சாரி டி...உன் மனம் தெரியாமல் இங்க கூட்டிட்டு வந்திட்டேன்.  இப்போ எனக்காக ஒரு வாய் சாப்பிடு..” என்று கெஞ்சலுடன் சொல்ல, அவளோ அவனை  முறைத்தாள்.

“வா... ராசு... வீட்டை சுற்றி பார்க்கலாம்...  என்று ராசய்யாவை அழைத்தாள் பொற்கொடி.

வழக்கமாக அவனை ராசு என்றுதான் அழைப்பாள் பொற்கொடி.

ஆனால் இப்பொழுது அவன், அவள் தங்கையின்  கணவன் ஆகி விட, வயதிலும் பொற்கொடியை விட மூத்தவன்...

மாமா என்று அழைக்காமல், ஏதோ வேலைக்காரனை அழைப்பது போல ராசு என்று அழைத்தது கண்டு பூங்கொடிக்கு எரிச்சலாக இருந்தது.

இதே அந்த சந்தோஷ் பயலை மாமா மாமா என்று எப்படி அழைத்து வைத்தாள் என்பதும் நினைவில் வர, அவளின் முகம் கடுத்தது.

“நீயும் வா   பூங்கொடி...”  என்று அவளையும் அழைத்தான் ராசய்யா.

“இந்த மாளிகையை நான் ஏற்கனவே  பார்த்துட்டேன். நீங்க  போய் பாத்துட்டு வாங்க மாமா...” என்று முறைத்தாள்.

அவனும் தோளை குலுக்கி கொண்டு பொற்கொடி உடன் செல்ல, சில விநாடிகளிலயே தெரிந்துவிட்டது ஏன் பூங்கொடி வர மறுத்தாள் என்று.

*****  

ந்த வீட்டின்  ஒவ்வொரு பகுதியையும் காட்டி  பெருமையடித்துக் கொண்டாள் பூங்கொடி.

கீழ் தளம், மேல தளம் என்று ஒன்றாக இணைக்கபட்டிருந்த ட்யூப்ளக்ஸ் வீடு அது.

அவர்களின் வளமை, அந்த வீட்டில் ஆங்காங்கே வீற்றிருக்கும் விலை உயர்ந்த அலங்கார பொருட்களை பார்க்கும்பொழுதே தெரிந்தது.

அதோடு அவர்களை வருந்தி வருந்தி விருந்துக்கு அழைத்த பொற்கொடியின் நோக்கம் சற்று நேரத்திலேயே புரிந்துவிட்டது இருவருக்கும்.  

அவளை பற்றியும்,  அவள் கணவன் அவளை எப்படி தாங்குகிறான்.. அவளுக்காக எவ்வளவு பெரிய வீட்டை கட்டி இருக்கிறான் என்று அவளின் புகுந்த வீட்டை பற்றி பெருமை அடித்துக் கொள்ளவும்,

தன் தங்கை ஒன்னும் இல்லாதவனை கட்டிக்கிட்டா என்று சொல்லாமல்   சொல்லிக் காட்டுவதற்காகவும்தான் இந்த விருந்து என்பது புரிந்து போனது.   

அதைக்கண்ட ராசய்யாவுக்கு கஷ்டமாக இருந்தது.  

ஒரே வீட்டில் பிறந்த இரண்டு பெண்களில் ஒருத்தி நன்றாக, சொகுசாக வாழவும்,  இன்னொருத்தி ஒன்னுமே இல்லாதவனுக்கு  கழுத்தை நீட்ட வேண்டியது ஆயிடுச்சே என்று எண்ணும்பொழுது கஷ்டமாக இருந்தது.  

“இதுக்குத்தான் நான் அவ்வளவு தூரம் மறுத்தேன். பூங்கொடிக்கு நல்ல இடத்தில் பார்த்து கட்டி வைக்கலாம் என்று எவ்வளவுதூரம்  வாதம் செய்தேன்.

என் பேச்சை யாரும் கேட்காமல், குறிப்பா இந்த கருவாச்சி கேட்காம என்னை கட்டாயபடுத்தி தாலி கட்ட வச்சுட்டாளே..!  

இப்ப அவ அக்கா முன்னாடி அவளுக்குத்தானே தலைக்குனிவு... “ என்று உள்ளுக்குள் மருகினான்.

தன் அக்கா மகனுக்கு சாதத்தை பிசைந்து  ஊட்டி கொண்டிருந்தாலும், ஓரக்கண்ணால் தன் கணவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள் பூங்கொடி.

தன் அக்கா அளந்து விட்டு கொண்டிருந்ததை கேட்க பூங்கொடிக்கும்  எரிச்சலாக வந்தது.

அதோடு தன் கணவனின்  முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டு, அவன் மனதில் என்ன நினைப்பான் என்று புரிய, அடுத்த கணம்  பொங்கி எழுந்தாள்.  

“இந்த சோபா சுத்தமான தேக்கால் செஞ்சது. இந்த லஸ்தர் விளக்கு இருக்கே...இது மட்டுமே பத்தாயிரத்துக்கு வாங்கினோம்... இந்த பெயிண்டிங்... இதுவும் ஆயிரத்துக்கும் மேல.. இது மாதிரி ஒரு பத்து அங்கங்க இருக்கு...” என்று பீற்றிக்கொள்ள,

“ஏக்கா... வீட்டையே கடன் வாங்கித்தான் கட்டினேன் னு சொன்ன? அந்த கடனை  எல்லாம் அடைக்கிற வரைக்கும் இது ஒன்னும் உன் சொந்த வீடு இல்லதானே.

வாடகை வீடு மாதிரிதான். அதுக்கு ஏன் இம்புட்டு பில்டப்..?”  என்று நக்கலாக கேட்க, தன் தங்கையின் நக்கலைக்கேட்டு பல்லைக் கடித்தாள்  மூத்தவள்.

அவளுக்கு எப்படியாவது தன் தங்கையின்  மூக்கை உடைக்க வேண்டும். அவள் மனதில் ஒரு பொறாமையை தூண்ட வேண்டும் என்று விருந்துக்கு அழைத்திருக்க, அவளோ அதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளவில்லை.

ராசய்யா  கூட இந்த வசதியை எல்லாம் பார்த்து உள்ளுக்குள் வருந்தினாலும் அவன் கண்களில்  பொறாமை இல்லை.

அந்த கடுப்பில் இன்னும் தன் பல்லை நரநரவென்று  கடித்தாள் . அவள் ஆத்திரத்திற்கு இன்னும் தூபம் போட்டாள் இளையவள்.

“மாமா...  நாம கட்டப்போற வீடு இந்த மாதிரி எல்லாம் இருக்கக்கூடாது. இதெல்லாம் இப்ப  ஓல்டு மாடல்.  இப்பல்லாம் நல்ல மாடர்ன்  டிசைன்ஸ் நிறைய  இருக்கு.  அதன்படிதான் கட்டணும்...”  என்று தன் அக்காவை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்ல,  

“என்னது? வீடு  கட்ட போறீங்களா? ராசுகிட்ட அவ்வளவு பணம்  இருக்கா என்ன? என்றாள் ஆச்சர்யமாக.  

“ஏன்... உன்கிட்ட மட்டும்தான் பணம் இருக்கணுமா? எங்க கிட்ட இருக்கக் கூடாதா?  உன் புருஷன் ஸ்ப்ளெண்டர் ஓட்டறப்பயே  என் புருஷன்  லட்ச ரூபாய் போட்டு புல்லட் வாங்கி ஓட்டினவர்... ஞாபகம் இருக்கட்டும்.” என்று திருப்பி கொடுத்தாள் பூங்கொடி.

அதைக் கேட்டு பொற்கொடியின்  முகம் கருத்துப் போனது.  

அதற்கு மேல் அந்த பேச்சை  வளர்க்க பிடிக்காமல்,  சரி வாங்க சாப்பிடலாம் என்று சாப்பிட அழைத்து சென்றாள் பொற்கொடி.

*****

பொற்கொடி இருவரையும் மதிய உணவிற்குத்தான் அழைத்து இருந்தாள். ஆனால் பூங்கொடியிடம் நேரடியாக சொன்னால் அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

அதனாலயே அவளை கல்லூரியில் இருந்து நேராக இங்கு அழைத்து வருவதால் இரவு உணவிற்கு வருகிறோம்  என்று சொல்லி இருந்தான் ராசய்யா.   

ஆகவே இரவு உணவிற்காகத்தான் பூங்கொடியை அழைத்து வந்திருந்தான். இப்பொழுது உணவு மேஜையில் அமர்ந்தவர்களுக்கோ   பொற்கொடி இதுவரை கொடுத்த பில்டப்பில் சாப்பிடத்தான் இருவருக்கும் பிடிக்கவில்லை.  

“எங்க வீட்டிலெல்லாம் தினமும் அசைவம் இருக்கும். அசைவம்  இல்லாமல் அவருக்கு சாப்பாடே இறங்காது...” என்று பெருமையடித்துக் கொண்டாள்.  

“பாத்துக்கா...  ரொம்ப அசைவம் சாப்பிட்டு, மாமா  ரொம்ப ஊதிப்போய்ட போறார்.  அப்புறம் வீட்டு வாசலை இடித்து கட்டற மாதிரி ஆய்டப்போறது.

ஏற்கனவே மாமாவுக்கு தொப்பை வருது. நீயும்தான் ரொம்பவும் வெய்ட்  போட்டிருக்க. இனிமேல்தான் நாக்கை அடக்கி வைக்கணும்..” என்று குட்டு  வைத்தாள் தங்கை.

அதில் முகம் இறுகி போனாலும் நொடியில் சமாளித்துக்கொண்டு

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்...உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி ”  என்று அக்காவும் விடாமல் திருப்பி கொடுத்தாள்.

அக்கா தங்கை இருவரையும் பேச விட்டு சகலைகள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

சற்று நேரத்தில் ராசய்யா சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றிருக்க, தினேஷ்ம் எழுந்து சென்றிருந்தான்.

சகோதரிகள் இருவர் மட்டுமே தனித்திருக்க, தன் தங்கையை பார்த்தவள்,

“ஏன் டி...  நீயாவது சொல்லக்கூடாதா...  உன் புருஷன் தலையை  பாரு.  பரட்டை தலையா இருக்கு. பார்க்கவே ரௌடி  மாதிரி இருக்கார். முன்னதான் கேட்க யாரும் இல்ல. இப்பதான் நீ இருக்கியே... நீயாவது அவருக்கு எடுத்து சொல்லக் கூடாதா

இந்த மாதிரி எல்லாம் எங்க வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காது.  நல்ல வேளை என் மாமியார் வீட்ல இல்லை.

இருந்திருந்தா எனகுத்தான் அசிங்கமா போயிருக்கும். உன் தங்கச்சி புருஷன் ரௌடி மாதிரி இருக்கான் னு கிண்டல் அடிச்சிருப்பாங்க.

அட்லீஸ்ட் இனிமேல் என் வீட்டுக்கு வர்றப்ப கொஞ்சம் நல்லா ட்ரெஸ் பண்ணிகிட்டு  வரச்சொல்......”  என்றாள்  முகத்தை சுளித்தவாறு.

இதுவரை விதவிதமாய் தன் தங்கையை மட்டம் தட்ட முயன்று விட்டாள். ஆனால் அவளோ அனைத்துக்கும் திருப்பி கொடுத்துவிட, இறுதியாக ராசய்யாவின் தோற்றத்தில் வந்து நின்றாள் பொற்கொடி.

அவனை மட்டம் தட்டினால் எப்படியும் இவளுக்கு வலிக்கும் என்று கடைசி ஆயுதத்தை கையில் எடுத்தாள்.

அவள் எதிர்பார்த்த மாதிரியே அவள் எறிந்த ஆயுதம் அதன் இலக்கை சரியாக தாக்கி இருந்தது.  தன் கணவனை பற்றி கமெண்ட் அடித்த தன் அக்காவை பாத்து முறைத்தவள்

“இங்க பாருக்கா... என் புருஷனுக்கு எந்த கெட்டப் நல்லாயிருக்கும். எது  நல்லா இருக்காதுனு  எனக்குத்தான் தெரியும். என் புருஷன் இப்படி இருக்கிறதுதான் எனக்கு புடிச்சிருக்கு.

என் காலேஜ் முன்னால் வந்து நின்னா எத்தனை பேர்  என் கண் முன்னாலயே அவரை  சைட் அடிக்கிறாங்க தெரியுமா?  அதனால என் புருஷன் எப்படி இருக்கணும்னு நீ பேசாத.

உன் வீட்டுக்கு நாங்க வருவது கௌரவ குறைச்சலா இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் வரமாட்டேனு சொன்னேன். உன்னை பற்றி சரியாக தெரியாமல், உறவு விட்டு போய்விடக்கூடாதுனு இந்த மனுஷன் என்கிட்ட கூட சொல்லாம என்னை இங்க கூட்டிகிட்டு வந்திட்டார்.

இதுவே முதலும் கடைசியும்னு வச்சுக்க. இனிமேல் நாங்க இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டோம். உனக்கு எங்களால எந்த கௌரவ குறைச்சலும் வந்திடாது.

அப்புறம் இத்தனை நாள் என் புருஷனை நீ எப்படி வேணா கூப்பிட்டு இருக்கலாம்.

ஆனால் இப்ப அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை. நான் மாமாவுக்கு எப்படி மரியாதை கொடுக்கறேனோ, அதே மாதிரி நீயும் நம்ம வீட்டு சின்ன மாப்பிள்ளைக்கான மரியாத கொடுக்கணும்.

அவரை பேர் சொல்லி அழைப்பதை விடு. மாமானு கூப்பிடு...” என்று பொரிந்து தள்ளினாள்.

கைகழுவி வந்த ராசய்யா , பொற்கொடியின் விமர்சனத்தை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போனான்.

மறுகணம் தன்னவள் அவனுக்காகப் பரிந்து பேசியது,  மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது

ஆனாலும் பொற்கொடியின் பேச்சு திரும்பத் திரும்ப அவன் காதில்  ஒலித்துக் கொண்டே இருந்தது.  

அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல் இருவரும் விடைபெற்று கிளம்ப எத்தனிக்க, அவர்கள் இருவரையும் நிற்க வைத்து  ஒரு தட்டில் இருவருக்கும் ட்ரெஸ் ஐ  எடுத்து வைத்து,  அதில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை    வைத்து விருந்துக்கு வந்ததற்கு பரிசாக கொடுக்க,  ராசய்யா மறுத்து விட்டான்.  

“சொந்தம் விட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விருந்துக்கு வந்தது.  வந்ததுக்கு எங்க வயிறு ரொம்பவும் நிறைஞ்சு போச்சு.  

இந்த மாதிரி சீரெல்லாம் வேண்டாம். என் பொண்டாட்டிக்கு அவ இஷ்டப்பட்டதை வாங்கிக் கொடுக்க நான் இருக்கேன். இந்த பரிசு வேண்டாம்...”  என்று தடுத்துவிட்டான்.    

பார்த்தியா என் புருஷனின் பெருந்தன்மையை என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி நக்கலாக சிரித்து தன் அக்காவை  லுக்கு விட்டாள் பூங்கொடி.  

பண்டிகை தவறாமல் தன் பிறந்த வீட்டிலிருந்து அவளுக்கும்,  தன் கணவனுக்கும் துணிமணிகளை  கேட்டு வாங்கிக் கொள்வாள் பொற்கொடி.

ஆனால் இதுவரைக்கும் தன்னை பெற்றவர்களுக்கோ, உடன் பிறந்த தம்பி தங்கைகளுக்கோ சிறு துரும்பை கூட கிள்ளி போட்டது கிடையாது .

கிடைக்கிறவரைக்கும் லாபம் என்று சுரண்டுபவள்.

அப்படி இருக்க அவள் கொடுத்த பரிசை வேண்டாம் என்று சொல்லவும் ஒரு கணம் ஆச்சர்யமாக இருந்தாலும் மறுகணம்,

“ஹ்ம்ம் பிழைக்கத் தெரியாதவர்கள்.  ரெண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதான். இதுங்க எப்படி முன்னேறப் போகுதோ...” என்று தனக்குள்ளே நக்கல் அடித்துக் கொண்டாள் பொற்கொடி.   

*****

பொற்கொடியின் வீட்டிலிருந்து கிளம்பியவன் சற்று தூரம் வந்ததும், அங்கிருந்த ஒரு உணவகத்தில் வண்டியை நிறுத்தினான்.

அவள் கேள்வியாக புருவம் உயர்த்தி பார்க்க,

நீ அங்க சாப்பிடவே இல்ல டி. வா... ஹோட்டலயாவது சாப்பிடு...” என்று கனிவுடன் அழைக்க, அவள் சாப்பிடாமல் உணவை அலைந்து கொண்டிருந்ததை கவனித்து இருக்கிறான்.

மேலும் அவள் பசியோட இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு இங்கு அழைத்து வந்த தன் கணவனை எண்ணி பெருமையாக இருந்தது.

கண்களில் நீர் திரண்டு நிக்க,

“ஹே..லூசு..இதுக்கெல்லாம் யாராவது டேமை திறப்பாங்களா? “ என்று செல்லமாக கண்டித்து அவள் கண்ணீரை சுண்டி விட்டான்.

“சே..சே.. நான் எதுக்கு அழுவனும்... என் கண்ணு வேர்க்குது.. அதான்...” என்று கண் சிமிட்டி சொல்ல,

“அதானா....உன்னைப்போய் யாராவது அழ வைக்க முடியுமா? நீதான் நாலு பேரை அழ வைப்ப. ஆனாலும் உன் அக்காவுக்கு நல்லாவே திருப்பி கொடுத்த...” என்று சிரித்தபடி அவளை அந்த உணவகத்திற்குள்  அழைத்து சென்றான்.

அவளுக்கு பிடித்த  பரோட்டாவை வாங்கி கொடுத்தவன், அவள் வீட்டிற்கும் பார்சல் வாங்கி கொண்டான்.

அவளைப்போலவே அவள் தம்பி , தங்கைக்கும் பரோட்டா என்றால் கொள்ளை பிரியம்.

அவள் கூட அதை மறந்து இருக்க, அவர்களை நினைவு வைத்து அவன் வாங்க, மீண்டும் மனம் பொங்கியது அவளுக்கு.

அவளின் அக்கா கணவன்...கை நிறைய சம்பாதிச்சாலும், இதுவரை ஒரு நாள் கூட சிறியவர்களுக்காக எதையும் வாங்கி வந்ததில்லை.

தன் கணவன் பெரிதாக சம்பாதிக்க வில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவும் தாராள குணம் கொண்டவன் என்று புரிய, அதுவே அவளுக்கு பெருமையாக இருந்தது.

****

வீட்டிற்கு திரும்பும் பொழுது நன்றாகவே இருட்டி இருந்தது.

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் வண்டியை லாவகமாக ஓட்டிக்கொண்டிருந்தான் ராசய்யா.

அன்று பௌர்ணமி என்பதால், தலைக்கு மேல பால் நிலா  வெள்ளி அருவியாய் இதமான ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது.

ராசய்யாவின் பின்னால் அமர்ந்திருந்த பூங்கொடியோ எதுவும் பேசாமல் அமைதியாக எதையோ யோசித்தபடி வந்தாள்.

வண்டியில் உட்கார்ந்த உடனேயே அவனை ஒட்டி உரசிகிட்டு அமர்பவள், இப்போது அவன்  மீது  ஒட்டாமல் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்திலும் ஏதோ சிந்தனை கோடுகள்.  

பின் பக்க கண்ணாடி வழியாக அவளை பார்த்தவன் அவளின் அமைதி அவனை என்னவோ செய்ய, மெல்ல பேச்சை ஆரம்பித்தான்.

என் மேல கோபமா பூவு? “ என்று தயக்கத்துடன் ஆரம்பிக்க,

அவளோ பதில் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்து பார்த்தவாறு தன் சிந்தனையை தொடர்ந்தாள்.

ஒரு கையால் வண்டியை பிடித்து கொண்டு மறுகையால் அவளின் இடையை பற்றி அவன் புறமாக இழுத்து அவனை ஒட்டி அமர வைத்து கொண்டான்.

அதை எதிர்பார்த்திராதவள், திகைத்து விழிக்க, அவளின் கையை எடுத்து  அவன் இடுப்பை   சுற்றி வைத்துக்கொள்ள,  அவளின்  கோபம் கொஞ்சம் குறைந்து சிரிப்பு வந்தது.

“ரொம்ப யோசிக்காத டி. ப்ரியா விடு. உன் அக்கா விருந்துக்கு வரச்சொல்லி ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டா...   

அதோடு அத்தையும், மாமாவும்  மூத்த பொண்ணு இருந்தும் நம்மளை விருந்துக்கு அழைத்து ஒரு நேரம் சாப்பாடு போடலையேனு உள்ளுக்குள் புலம்பிகிட்டிருந்தாங்க.

சரி.. வயசான காலத்துல அவங்களுக்கு வருத்தத்தை கொடுப்பானேன்... அதோட வெட்டிவிடறதா உறவுகள்... நீயும்,  உன் அக்காவும் எப்பொழுதும் போல சகஜமாக பேசி பழகவும், போய் வரவும் வேண்டும்.

அதற்காகத்தான் உன்கிட்ட சொல்லாம அங்க கூட்டிகிட்டு போனது. நீ இவ்வளவு தூரம் வேதனைப்படுவனு தெரிஞ்சிருந்தா போயிருக்கவே மாட்டேன்.

தூரத்தில் இருக்கும் உறவுகளை விட, என் பக்கத்தில் இருக்கும் என் பொண்டாட்டி சந்தோஷம் எனக்கு முக்கியம்.    

ப்ச்... அந்த குள்ளச்சிக்கு ரொம்பவும் கொழுப்புதான்.  என்னமா பீத்திக்கிறா? நீ ஒன்னும் கவலைப்படாத டி. அவளை விட உன்னை நான் ராணி மாதிரி பார்த்துக்கிறேன்.

நீ வேதனைப்படாத. எனக்கு தாங்காது. என்கிட்ட பேசுடி...” என்று தழுதழுத்தவாறு பாவமாக கேட்டு வைக்க,

அதுவரைக்கும் தன் வாய்க்கு போட்டிருந்த பூட்டை அப்பொழுதுதான் கழட்டினாள் அவன் மனையாள்.

“ஹ்ம்ம் அவ குணம் எனக்கு நல்லா தெரியும்.  அதனால் தான் அவ சங்காத்தமே வேண்டாம் என்று இருந்தேன்...”  என்றாள் வெறுப்புடன்.

தன் இடுப்பை சுற்றி இருந்த  அவள் கையை மெல்ல அழுத்திக் கொடுத்தவன்

“புரியுது டி. இனிமேல் அந்த பேச்சை விடு. ஏதோ போகவேண்டிய கடமைக்கு போய்ட்டு தலையை காட்டிட்டு வந்தாச்சு...

அப்புறம் இன்னைக்கு  காலேஜ் எப்படி போச்சு? என்று பேச்சை மாற்றினான்.

அவளுக்குமே அதற்குமேல் முகத்தை தூக்கி வைத்திருக்க முடியாமல்,  தன்னை இயல்பாக்கி கொண்டவள், அன்று நடந்த   கல்லூரி கதையை சொல்லி  கலகலவென்று சிரித்தபடி இருவரும் வீட்டை அடைந்தனர்.


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!