என்னுயிர் கருவாச்சி-42

 


அத்தியாயம்-42

 

ன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்து  இருந்தாள் பூங்கொடி

அன்று முகூர்த்த நாள் என்பதால் அன்றே வயலிலும் வேலையை ஆரம்பித்து விட்டான் ராசய்யா.

முன்னதாகவே விவசாய ஆபீஸிற்கு  அவனை அழைத்துக் கொண்டு சென்று,  குறைந்த காலத்தில் அறுவடைக்கு வரும் வகையில் என்ன நெல் வகை  பயிரிடலாம் என்று விவரம் கேட்டு வந்திருந்தனர்.

அதன்படி வயலில் ஒரு ஓரமாக ஏற்கனவே நாத்து முளைப்பதற்கான நெல் விதையை  போட்டு வைத்திருக்க, இன்று மற்ற பகுதியை   கொத்தி சமன் செய்ய வேண்டும்.

நெல் வயலில் நாற்று நடுவதற்கு முன்பே அந்த வயலை தயார் படுத்தவேண்டும். வயலை நெல்லம் பயிர் வளர்வதற்கு ஏற்ற வகையில் தயார் படுத்துவது தான் முக்கியமான ஒன்று.

ஏற்கனவே ட்ராக்டரில் ஆழ உழுது இருந்தாலும்,  ஆங்காங்கே கிடக்கும் மண் கட்டிகளை உடைத்து விட்டு, நிலத்தை சமன்படுத்தி நீர் பாய்ச்ச வேண்டும்.

பின் இலை தலைகளை போட்டு மிதித்து வைக்க வேண்டும். அதில் கிடைக்கும் ஊட்டசத்துதான், நாற்று வளர்வதற்கு ஏற்றதாகும்.

குறைந்தது பத்து நாளைக்கு அந்த வயலில் தொடர்ந்து நீர் பாய்ச்சி, ஈரப்பதத்தில் பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

தணிகாசலமும் ராசய்யாவுக்கு உதவி செய்ய, கூட  இன்னொரு ஆளையும் சேர்த்துக்கொண்டு  வேலையை தொடர்ந்தனர்.

 

******

தியம் சாப்பாட்டுக்கு அவர்கள் வீட்டுக்கு வராததால் பூங்கொடியே அவர்களுக்கு  சாப்பாடு எடுத்துச் சென்றாள்.  

உச்சி வெயில் மண்டையை பிளக்க, அணிந்திருந்த கைலியையும், மேல் சட்டையும் கழட்டி வைத்துவிட்டு, தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு,    இடுப்பில் பட்டாபட்டி டிராயரை போட்டுக்கொண்டு,  மண்வெட்டியால் மண்ணை கொத்தி கொண்டிருந்தான் ராசய்யா.  

இதுவரை சட்டையில்லாமல் அவள்  முன்னே வந்ததில்லை அவன்.

முதன்முதலாக தன் கணவனை சட்டையில்லாமல் பார்க்க,  அவனின் இறுகிய படிக்கட்டு  தேகமும், திண்ணிய மார்பும்,  மண்வெட்டியால் மண்ணை வெட்டி அள்ளி மறுபக்கம்  வீசும்பொழுது புடைத்துக் கொண்டு நின்ற  புஜங்களையும் கண்டதும்  பெண்ணைவளுக்கு கன்னங்கள் சிவந்து போனது.   

அவனின் ஆண்மையை கண்டவளின்  பெண்மை விழித்துக்கொள்ள, அவனின் ஆண்மையோடு இரண்டற கலக்க அவளின்  பெண்மை தவித்தது.  

திருமணமாகி ஒரு மாதம் முடிந்து இருந்தாலும், இன்னுமே தள்ளிதான் நிற்கிறான் அவள் கணவன்.

ஆரம்பத்தில்  நல்ல நிலைமைக்கு வந்த பிறகு மத்ததெல்லாம் என்று தடா போட்டான்.  

பிறகு ஆடிமாதம் வந்துவிட,  அதையும் காரணத்தில் சேர்த்துக்கொண்டான்.

அதனால் தன் கணவனை இப்படி ஓரக்கண்ணால் சைட்  அடிக்கத்தான் முடிந்தது அவளால்.

அவன் சொன்ன ஆடி கணக்கு முடிந்து ஆவணியும் வந்து விட்டது. சொந்தமாக ஒரு  கூரை இல்லை என்ற குறையும் இப்பொழுது நீங்கிவிட்டது.

இனிமேலாவது அவன் பார்வை என் மேல படுமா? இல்லை அந்த சாமியார் இன்னும் வேற ஏதாவது காரணத்தை தேடி பிடிச்சு வச்சிருப்பானோ ? “ என்று ஏக்க பெருமூச்சு விட்டவாறு அவர்கள் அருகில் சென்றாள்.

தன்னவனை இன்னுமாய் அருகில் காண,  ஓடிச்சென்று அவனை இறுக்க கட்டி அணைத்துக் கொண்டு, அவனின் திண்ணிய மார்பில் முகம் புதைத்து கொள்ள  வேண்டும் என்று தவிப்பாக இருந்தது.  

முயன்று தன்னை  கட்டு படுத்திக் கொண்டவள், வரப்பின் மீது வழுக்கி விடாமல் கவனமாக நடந்து  அவனை அடைய, அப்பொழுதுதான் நிமிர்ந்து அவளை பார்த்தான் ராசய்யா.

அவளைக் கண்டதும் அவன் கண்கள் மின்னின.

அதுவும் அவள் கட்டியிருந்த கண்டாங்கி புடவையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு, தலையில் தூக்கை வைத்தபடி வந்தவளை காண அவனின்  மனம் தழும்பியது.

ஆனாலும் இந்த வெய்யிலில் வருகிறாள் என்றது உறைக்க, கையில் இருந்த மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு வேகமாக அவள் அருகில் சென்றான்.

“நீ எதுக்குடி வேகாத வெய்யில்ல இங்க வந்த? இந்த ஒரு செரவு மட்டும் கொத்தி விட்டுட்டு நாங்களே வீட்டுக்கு வர்றதா இருந்தமே... “ என்று செல்லமாக   கடிந்து கொண்டான்.  

“யோவ்...  ரொம்பத்தான் தாங்காத... என்னமோ நான்  இந்த மாதிரி வெய்யில் ல சுத்தாத மாதிரி சொல்ற? இதெல்லாம்   எனக்கு பழகினதுதான்.

நீதான் இந்த வேலைக்கும், வெயிலுக்கும் புதுசு போல... இப்படி வேர்த்து வடியுது...” என்றவள் தூக்கை கீழ வைத்து விட்டு, இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து அவன் மார்பில் இருந்த வியர்வையை துடைத்து விட்டாள்.

பின் அவனை  குனிய சொல்லி,  அவன்  முகத்தில் இருந்த வியர்வையையும் ஒற்றி எடுத்தாள்.   

கழுத்திலும் ஒட்டியிருந்த வியர்வையை முந்தானையால் துடைக்க, அவளின் மெல்லிய கை விரல் பட்டு அவனின் இறுகிய  தேகம் சிலிர்த்து போனது.  

அதுவரை இருந்த அலைச்சல்,  மண்ணை வெட்டிய  கலைப்பு எல்லாம் நொடியில்  மாயமாய் மறைந்து போக, உச்சி வெய்யிலிலும் சில்லென்று இருந்தது.

உள்ளுக்குள் புதுவெல்லம் பாய்ந்தோடியது.

அவன் உயரத்துக்கு இணையாக வேண்டி, நுனி காலில் நின்று கொண்டு எக்கி அவன் முகத்தை துடைக்க,  அவளின்  வழுவழுப்பான இடை,   அவனின் கைக்கு வெகு அருகில்

அவளின்  கொடி போன்ற மெல்லிடையை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள தவித்தது அவன் உள்ளே.

அவளின் அந்த நெருக்கமும், அவள் மீதிருந்து வந்த பிரத்யேக வாசமும் அவனை புரட்டி போட்டது.

தன்னை அடக்க படாத பாடுபட்டான் ராசய்யா.  

அதற்குள் தன் மகளை கண்டதும், தன் வேலையை நிறுத்திவிட்டு, மதிய உணவிற்காக, அருகில் இருந்த வாய்க்காலில், தன் கை கால்களை கழுவிக்கொண்டு தணிகாசலம் அங்கே வர,  உடனே ராசய்யா அவளை விட்டு தள்ளி நின்று கொண்டான்.

தன் கணவன் உடலில் நிகழ்ந்த மாற்றம் அவளுக்கும் புரிந்தது.

ஏனென்றால், அவனின் மேனியை லேசாக தீண்டிய அவள் விரல்களின் வழியாக அவள் உள்ளேயும் மின்சாரம் தாக்கி இருந்தது தான்.

அதனாலயே இன்னும் அவனை ஒட்டி நின்று  ஓரக்கண்ணால் பார்த்தவாறு  அவன் வியர்வையை துடைக்க, அவன் படும் அவஷ்தை அவளுக்கும் புரிந்தது.

அதைக்கண்டு நமட்டு சிரிப்பை சிரித்துக்கொண்டவள், அவனின் அடுத்த ஆக்சனுக்காக காத்திருக்க, அதற்குள் அவள் அப்பா அங்கே வர, உடனே அவளிடம் இருந்து விலகி நின்று கொண்டான்.

“சை... இந்த  அப்பாவுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்லை.  சின்னஞ்சிறுசுக...  தனியா இருக்குதேனு செத்த நேரம் கழிச்சு வரமாட்டாரா...

இப்பதான் இந்த கருவாயனுக்கு  கொஞ்சமா  பொண்டாட்டி மேல ஆச வந்து என்னை அணைக்க வந்திருப்பான். அதுக்குள்ள நந்தி மாதிரி கரெக்ட்டா வந்திட்டார்...”

என்று உள்ளுக்குள்  தன் தந்தையை அர்ச்சனை பண்ணியவாறு,  தன் முந்தானையை மீண்டும் இடுப்பில் சொருகிக்கொண்டு சாப்பாட்டு தூக்கை தூக்கி கொண்டு அருகில் இருந்த வேப்ப மரத்திற்கு சென்றாள்.    

ராசய்யாவும்  வாய்க்காலில் கை கால் அலம்பி விட்டு வர, அந்த வேப்ப மரத்தின் குளுகுளு நிழலில்,  அவர்கள் இருவரையும் அமர வைத்து தட்டில் உணவை போட்டு கொடுத்தாள்.

புதிதாக குடி வந்ததும் முதன்முதலாக சமைத்திருக்க, கத்திரிக்காயும், மொச்சையும் போட்டு குழம்பு வைத்திருந்தாள்.  அதை சாதத்தில் ஊற்றி இருவருக்கும் கொடுக்க, அவள் கொடுத்த உணவை ரசித்து சாப்பிட்டான் ராசய்யா.

அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தவள்,

“எப்படி இருக்கு மாமா? “  என்று ஆசையோடு கேட்க

“ரொம்ப நல்லா இருக்கு பாப்பா... அப்படியே என் ஆத்தா கை பக்குவம் உனக்கு.

உன் ஆத்தா  வந்ததில் இருந்து,  என் ஆத்தா சோறாக்கறது நின்னு போச்சு.  உன் ஆத்தா சோறு பொங்கறத  வாயில வெக்க முடியாது. ஆனாலும் அதை வாய்விட்டு வெளியில சொல்ல முடியாது.  

சொன்னா அடுத்த நேரம் சோறு கிடைக்காதே...  

இப்ப உன் கையால சாப்பிடறது, திரும்பவும் என் ஆத்தா கையால சாப்பிட்ட மாதிரி...  ரொம்ப நல்லா இருக்கு...” என்று  நெகிழ்ச்சியோடு கண்கலங்க தழுதழுத்தார் தணிகாசலம்.

“யோவ் அப்பா... உன்னை கேட்டனா? என் புருஷன் கிட்ட கேட்டா இவர் முந்திரி கொட்டை மாதிரி முந்திகிட்டு பதில் சொல்றாரே..!  யாருக்கு வேணும் இவர் பாராட்டு...”  என்று உள்ளுக்குள் தன் தந்தையை அர்ச்சனை முதலில் அவரை முறைத்தாலும்,

தன் தந்தையின் நெகிழ்ச்சியும், தழுதழுத்த குரலும், அவளையும் நெகிழ செய்தது.

இன்னுமே அவரிடம் பேசவில்லை அவள். ஆனாலும் அவர்தான் அவளிடம் பேச முயன்ரு கொண்டிருக்கிறாற். இப்பொழுது கூட தன் சமையலை சாப்பிட்டதும், பாசத்தில் கண் கலங்கித்தான் போனது.

அதைக்கண்டவளின்  மனம் அவர் பக்கமாக சாய ஆரம்பிக்க, சுதாரித்து அதை நிறுத்திக் கொண்டவள், எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டு  கண்ணோரம் துளிர்த்த நீரை சுண்டி விட்டுக் கொண்டாள்.

இன்னுமே தன் தந்தையிடம் முகம் கொடுத்து பேசாமல் அவரை விலக்கி வைத்தாலும் அவர் ஒதுக்கி விடாமல் அவளுக்காக பார்த்து பார்த்து செய்து கொடுக்கிறார் தான்.

அவள் அப்பா அவளை புகழ்ந்ததுக்கு மற்ற நேரமாக இருந்திருந்தால், அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தம் இட்டிருப்பாள்.

இப்பொழுது மனம் வெறுமையாக இருக்க, அவரிடம் இன்னுமே அவளால் சகஜமாக பேச முடியவில்லை.

மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டவள், தலையை நிமிர்ந்து  

“நீ சொல்லு  மாமா...சாப்பாடு எப்படி இருக்கு? “ என்று ஆர்வமாக கேட்டு வைக்க,

“ஓகே...  ஓகே...  மோசமில்லை...”  என்றான் அவளை சீண்ட எண்ணி.

“அப்படினா ? நல்லா இல்லையா? “  என்று கோபமாக முறைத்து பார்க்க,

“ஹீ ஹீ ஹீ அப்படி சொல்ல ஆசைதான். ஆனால் இப்பதானே என் மாமனார் இத்தனை வருஷம் அத்தையோட குடும்ப நடத்தின  ரகசியத்தை சொல்லாமல் சொன்னார்.  

நானும் அவர் வழியை   புடிச்சுக்க வேண்டியதுதான்...” என்று கண்களால் சிரித்தவன்

“சாப்பாடு சூப்ப்ப்ப்ப்பர் டி....  என்ற விஷமமாக சிரிக்க, அவன் தன்னை  நக்கலடிக்கிறான் என்று கண்டு கொண்ட  பூங்கொடி  பல்லைக் கடித்தவள்,  ஓங்கி அவன் தலையில் கொட்டினாள்.

அதைக்கண்ட  தணிகாசலம் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையை குனிந்து கொண்டார்.

“ஏன் மாமா... அத்தையும் இப்படித்தான் கொட்டுவாங்களா?  அதை சொல்லாம விட்டுட்டீங்களே...”  என்று தன் மாமனாரை செல்லமாக முறைத்து பார்க்க  

“ஏய்யா மாப்ள...  இதையெல்லாம் பெருமையா வெளியில சொல்ல முடியுமா?   என் தலையில நடுவுல மட்டும் மயிரு இல்லாம சொட்டையா இருக்கே... அதுல இருந்து தானா புரிஞ்சிக்க மாட்டியா?”  என்று சிரிக்க

“ஆஹான்... அதான்  உங்க சொட்டையோட ரகசியமா? என் பொண்டாட்டி கொட்டற கணக்க பார்த்தா உங்கள  விட சீக்கிரமே எனக்கு  சொட்டை ஆயிடும் போல...”  என்று மலர்ந்து சிரிக்க, அவன்  தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் அவன் மனையாள்.

 ****

ன்று இரவு,  இரவு உணவை சாப்பிட்டதும் அங்கிருந்த முற்றத்தில் கட்டிலை போட்டு படுத்திருந்தான் ராசய்யா.  

இன்று முழுவதும் சரியான வேலை..  கூடவே இதுவரை  இந்த மாதிரி கடினமான வேலையை செய்ததில்லை அவன்.   

பொதுவாக டிராக்டரில் வயலை உழுவதும்,  மடை கட்டுவதும் பண்ணையாருக்கும், அவர் குடும்பத்தினருக்கு தேவை என்றால்   கார் ஓட்டுவது தான் அவனுடைய வேலையாக இருக்கும்

இப்பொழுது வயலை ட்ராக்டரில் உழுத பிறகு,  அதை சமப்படுத்த மண்வெட்டியால்  கட்டிகளை அங்காங்கே எடுத்து போட வேண்டியிருந்தது.

காலையில் இருந்து சலைக்காமல் வேலை செய்ததால்,  அவன் தோள்  பட்டைகள் இரண்டிலும் நன்றாக வலித்தது.

காலிலும் ஆங்காங்கே ரத்தம் கட்டியிருக்க, உடல் வலியில் அப்படியே நீட்டி படுத்துவிட்டான்.

இந்த மாதிரி வயலில் கடினமாக  வேலை செய்யும் சமயத்தில்,  அவள் தந்தையை இரவு நன்றாக வெந்நீரில் குளிக்க வைத்து,  பிறகு நாட்டுக்கோழி சூப்பு வைத்து  கொடுப்பார் சிலம்பாயி.  

பூங்கொடி அதை பார்த்திருந்ததால், அதே போல மாலை அவன் வீட்டிற்கு  வரும் முன்னே சுடசுட வெந்நீரை போட்டு வைத்து இருந்தாள்.  

அவனை குளிக்க வைத்து பின் ஒரு கோப்பையில் சூப்பை ஊற்றி   கொடுத்தாள்.

அலுப்பு தீர குளித்தவனுக்கு அந்த சூடான நாட்டுக்கோழி சூப் அமிர்தமாக இருந்தது.  

இரவு சமையலிலும் கோழிக்கறியும், மட்டன் குழம்பும் சமைத்திருக்க,  வழக்கமாக அசைவம் என்றால்  நன்றாக சாப்பிடுபவன், அன்று ஒரு பிடி பிடித்திருந்தான்.  

சாப்பிடும் பொழுது அவளை சீண்டாமல்,  உண்மையை சொல்லியிருந்தான்.

“சும்மா சொல்லகூடாது கருவாச்சி... நல்லாவே சமைக்கிற.. மத்தியான சாப்பாடு சூப்பரா இருந்தது. இப்ப அதைவிட சூப்பர்... நான் கூட  நீ நல்லா சமைப்பேனு எதிர்பார்க்கல. நீ அடிக்கிற வாய்க்கு, வாயாலதான்  வடை சுடுவனு  நினைச்சு இருந்தேன்.

ஆனால் மாமா  சொன்ன மாதிரி உனக்கு கை பக்குவம் நல்லாதான் இருக்கு டி...” சிலாகித்து பாராட்ட, பெண்ணவளுக்கோ அவன் சொன்னதில் முதலில் கடுப்பானாலும், இறுதியாக சொன்ன பாராட்டுதலில்  மனம் குளிர்ந்து போனது.  

சாப்பிட்டு முடித்ததும்,  அது ஜீரனமாக வெற்றிலையையும் அவனுக்கு மடித்து கொடுத்து கட்டாயப்படுத்தி அவனை  உண்ண  வைத்தாள்.

அவனும் வெற்றிலையை போட்டு மென்று கொண்டே,  கட்டிலை எடுத்து காத்தோட்டமாக முற்றத்தில் போட்டு நீட்டி படுத்தவாறு வானத்து நட்சத்திரங்களை பார்த்து கொண்டிருந்தான்.

அடுப்படியில் எல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்து விட்டு புடவை முந்தானையில் கையை துடைத்தபடி வந்தவள்,  கட்டிலில் தலைக்கு அடியில் கையை மடித்து வைத்துக் கொண்டு வானத்தை அன்னாந்து பார்த்தவாறு படித்திருந்தவனை  கண்டதும் சின்ன சிரிப்புடன் அங்கே சென்றாள்.

“என்ன மாமா... வானத்துல எத்தனை நட்சத்திரம் இருக்குனு எண்ணி கிட்டு இருக்கியா? “ என்று சிரித்தவாறு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தவள்,  அவனின் கையை மெல்ல பிடித்து விட, அதுவரை வானத்தை பார்த்து படுத்திருந்தவன்,  அவளின் மெல்லிய ஸ்பரிஷத்தில்  அவள் பக்கமாக பார்வையை திருப்பினான்.  

அவள் தன் கையை  அமுக்கி விடுவது கண்டு பதறியவன்,  

“ஏய்.. என்னடி பண்ற? “  என்றவாறு எழப் போனான்.  

அவனை எழ விடாமல் தடுத்தவள்  

“சும்மா படு மாமா...  நான் கையை அமுக்கி விடறேன்...” என்று அதட்ட,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டி.  நீ வச்சு கொடுத்த சூப்பால  உடம்பு வலியெல்லாம் போயே போச்சு...  

நீ இப்படி தினமும் சூப்பு வச்சி தருவன,  மண்ணு வெட்டறது என்ன? இதைவிட மலையவே புரட்டுவேன்...” சிரித்தான் அவளவன்.

“அவ்வளவு தானே...  வச்சிட்டா போச்சு... ஆனாலும் இங்க கொஞ்சம் தசை புடிச்சிருக்க மாதிரி இருக்கு.  இரு தைலம் தடவி விடறேன்...”  

என்றவள்  எழுந்து சென்று தைலத்தை எடுத்து கொண்டு வந்து,  கொஞ்சமாக வீங்கியிருந்த இடத்திலெல்லாம் தடவி, மெல்ல அழுத்தி  நீவி விட்டாள்.

அவளின் மெல்லிய விரல்களின்  தீண்டலில்,  அவனின் உடல் வலி மறைந்து வேற ஒரு வலி ஆரம்பமானது.

அதோடு வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து வீசிய குளுகுளு தென்றல்...தலைக்கு மேலே காய்ந்து கொண்டிருந்த நிலா...வெகு நெருக்கத்தில் அவனுக்கு உரிமையானவள்...சொக்கித்தான் போனான் அந்த காளையவன்.

அவன் வாழ்வில் இப்படி ஒரு தருணம் வரும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை. எந்த ஒரு பொறுப்பும், ஆசையும், குறிக்கோளும் இல்லாமல் கடனே என்று வாழ்நது கொண்டிருந்தவனுக்கு அவன் வாழ்விலும் இப்பொழுது பிடிப்பு வந்திருந்தது.

அவனுக்கும் தன் மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டிருந்தது.  

நல்ல வெந்நீரில் குளித்து இருந்ததால் தளர்ந்திருந்த அவனின் நரம்புகள், பெண்ணவளின் விரல் தீண்டலில்  முறுக்கேற ஆரம்பித்தன்.  

அவன் குடித்த சூடான நாட்டுக்கோழி சூப்பும், ருசித்து சாப்பிட்ட மட்டன் கறியும்  அவனை சூடேற்ற,  அவன் உள்ளே  சொல்ல முடியாத உணர்வுகள் பொங்கி எழுந்தன.  

அவளை அப்படியே இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து,  முத்தத்தால் அவளின் மேனியெங்கும் ஊர்வலம் நடத்திட தவித்தன அவன் இதழ்கள்.  

அவன் கரங்களோ,  அவளின் வெற்றிடையில் தாளமிட்டு, சங்கு கலுத்தில் கோலமிட்டு, பட்டு மேனியின் மென்மையை  ஆராய்ச்சி செய்திட தவித்தன.

அவன் தவிப்பு புரியாமல் பெண்ணவளோ கட்டிலில் அமர்ந்தவாறு ஒவ்வொரு பக்கமாக தைலத்தை தேய்த்து விட்டுக்கொண்டிருந்தாள்.

கையை நன்றாக ஸ்ட்ரெட்ச் பண்ணி நீட்டி இருந்ததால், எக்கி மறுப்பக்கம் இருந்த அவனின் இடது கைக்கு தைலத்தை தடவ முயல, அதில் அப்படியே அவன் மார்பின் மீது சரிந்திருந்தாள்.

பஞ்சு மெத்தையாக தன் மீது சரிந்திருந்தவளின் எடுப்பான முன்பக்கம் வேறு அவன் மார்பில் அழுத்த, அதில் இன்னுமாய் வீறு கொண்டு எழுந்தது அவன் ஆண்மை.

தன் மீது கிடந்தவளை அப்படியே சரித்து அவள் மீது படற தவித்தது அவன்  கணவன்  மனம்.

இப்படி அவன் உடலின் ஒவ்வொரு பாகமும் தன்னவளை ஆராதிக்க, அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் அவளை ஆட்கொண்டு,  அவளுடன் ஒன்றர  கலக்க  தவித்துக் கொண்டிருக்க,  கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவனை கட்டிப் போட்டிருந்தது.  

அந்த ஏதோ ஒன்று அவசரப்படாதே ராசு என்று அபாய மணியை ஒலித்துக் கொண்டிருக்க, அதை மீற முடியாமல், அதற்குமேல் அவளின் தீண்டலை தாங்க முடியாதவன், விலுக்கென்று எழுந்து அமர்ந்தான்.

தன் மீது அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்தவளையும் பிரித்து எடுத்து அவளை நேராக அமர வைத்தான்.     

அவன் செய்கையில்  லேசாக அதிர்ந்தவள்,  

“என்னாச்சு மாமா? “  என்று வெளிவராத குரலில் தாபத்துடன் கேட்டாள்.

அவனைப் போலவே அவளும் உணர்ச்சியின் பிடியில்தான் சிக்கி தவித்து கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் அவனின் வலியை போக்க என்று ஆரம்பித்தவள்... அவன் திண்ணிய தசை கோலங்களை வருட வருட, அவளின் உணர்வுகள் பொங்கி எழுந்தன.

அவனின் வலிய கரங்களுக்குள் அடைக்கலமாகி விட... அவன் ஆண்மைக்குள் அடங்கி விட தவித்தது அவள் பெண்மை.

அவனின் அணைப்பை, இதழ் தீண்டலை எதிர்பார்த்து இருந்தவள்..திடீரென்று அவளை விலக்கி நிறுத்தவும்  அதிர்ந்து போனாள்.

அவளின் உணர்வுகள் இன்னுமே கொந்தளித்து கொண்டிருக்க, நடுங்கும் குரலில் என்னாச்சு என்று விசாரித்தாள்.

“வந்து.... இன்னும் கொஞ்ச நாள் தள்ளி இருக்கலாம் பூவு...” என்று தயக்கத்துடன் சொல்லி முடிக்கும் முன்னே  அவனை முறைத்தாள்  பூங்கொடி.  

“யோவ்... சொந்தமா ஒரு கூரை வந்ததும் நம்ம  வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு சொன்ன இல்ல. இப்போதான் நமக்குனு வீடு வந்திருச்சு.

அம்மா, அப்பா,  தம்பி, தங்கைனு எந்த தொல்லையும் இல்ல. நாம ரெண்டு பேர் மட்டும்தான் தனியா இருக்கோம் . இப்ப  என்னயா தடை ? “ என்று முறைக்க

“இப்பதான நாம தனியா வந்திருக்கோம். இன்னும் கொஞ்சம் நல்ல நிலைக்கு வரணும்.  இப்பொழுதுதான் வயல்ல நெல்லு  போடப்போறோம்.   அது விளைச்சலுக்கு வரட்டும்.

அதுக்கு பொறவு நம்ம கையிலயும் நாலு காசு இருக்கும்.  நீயும் உன் படிப்பை முடி.  நமக்கு என்ன வயசா ஆயிடுச்சு..கொஞ்சம் பொறுத்திருக்கலாம்...”  என்றான் தயக்கத்துடன் தன் உணர்வுகளை கட்டுபடுத்திக்கொண்டு.

அதைக்கேட்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவளே இவ்வளவு தூரம் நெருங்கி வந்தும் அவன் தயங்குகிறான் என்றால், அவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? இல்லை அவன் மனதில் வேற யாராவது ?

என்று அவசரமாக யோசித்தவள்,  கண் முன்னே கோமதி, பண்ணையார் மகள் ஸ்வாதி என அவன் மேல் ஆசைப்பட்ட பெண்கள் வந்து நின்றுகொண்டு அவளை பார்த்து  கை கொட்டி சிரித்தனர்.

ஒரு கணம் திக்கென்றது பெண்ணவளுக்கு...

தன்னை நிதானபடுத்திக் கொண்டவள்,  

“மாமா... உன் மனசுல வேற ஏதாவது இருக்கா?”  என்று தவிப்புடன் கேட்டாள்

“ஹே லூசு... அதெல்லாம் ஒன்னும் இல்லடி.  என்னைப் பற்றி தெரியாதா. நான்  உன் நல்லதுக்குத்தான் யோசிக்கிறேன். நாம இப்ப உணர்ச்சி வேகத்துல அவசரப்பட்டு ஒன்னு சேர்ந்துட்டு, புள்ள குட்டினு வந்துட்டா ,  அதை கவனிக்க நாம  நல்ல நிலையில் இருக்க வேணாமா?.  

நம்ம புள்ளைங்க, நல்ல ஆரோக்கியமான குடும்ப சூழலில் வளர வேண்டும். அது பொருளாதார ரீதியாகவும் தான். அதுக்குத்தான் நாம சம்பாரிச்சு கைல கொஞ்சம் காசு வச்சுக்கலாம்.  பிறகு மத்ததெல்லாம்...”

என்று பொறுமையாக எடுத்துச் சொல்ல, பெண்ணவளுக்கோ உள்ளே இருந்த கலக்கம் மறைந்து போனது.  தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது.

எத்தனை பேருக்கு வரும் இப்படி எதிர்காலத்துக்காக யோசித்து முடிவு எடுப்பது.

எத்தனையோ பேர் கல்யாணம் ஆனதும்  குழந்தையைப் பெற்றுக் கொண்டு அதை சரியாக வளர்க்க முடியாமல்  கஷ்டப்படுவதை அவளும் தான் பார்த்திருக்கிறாள்.

அவள் வீடே அதற்கு உதாரணம் அல்லவா?

சரியாக திட்டமிட்டு இரண்டு புள்ளைகளோட நிறுத்தி இருந்தால், அவள் தந்தையும் தாயும் இப்படி கஷ்டபட தேவை இருந்திருக்காது.

இந்நேரம் அவளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அக்கடானு பேரன் பேத்தியை கொஞ்சிகிட்டு இருந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது அவளை அடுத்து அவள் தம்பி , தங்கை இருக்க, அவர்களுக்காக அவள் பெற்றோர் இன்னும் உழைக்க வேண்டும்.

என்னதான் பிள்ளை செல்வம் என்பது கடவுள் கொடுத்த வரம் என்றாலும் , இன்றைய விலைவாசிக்கு, அதெல்லாம் ஒத்து வராது என்று இரண்டோடு நிறுத்தி இருக்கலாம்.

ஆனால் வீட்டுக்கு ஒரு ஆண் பிள்ளை...வாரிசு...  வேண்டும் என்று இரண்டோடு நிறுத்தாமல், தன் தங்கையையு, தம்பியையும் பெத்துக் கொண்ட, தன் பெற்றோர்களைப்போல முட்டாளாக இல்லாமல், படிக்காத மேதையாய் தன் கணவன் இவ்வளவு தூரம் ஆழ்ந்து யோசிப்பது அவளுக்கு பெருமையாக இருந்தது.   

பிள்ளைகள் வரும் முன்னே அவர்களுக்கு  ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கியிருக்க வேண்டும் என்ற தன் கணவனின் தொலைநோக்கு  பார்வையை மனதுக்குள் மெச்சி கொண்டாள்.

ஆனாலும் அவளுக்காக பார்த்து பார்த்து  செய்கிறவனுக்கு எந்த சுகத்தையும் கொடுக்க முடியாமல் போகிறதே  என்றுதான் குற்ற உணர்வாக இருந்தது.  

அதையே அவனிடம் மனம் விட்டு சொன்னாள்.  

“அதெல்லாம் இல்ல டி. உடலால் கிடைக்கும் சந்தோஷம் தான் சந்தோஷம்னு இல்லை. அனாதையாக, இந்த குட்டிசுவராக இருந்த வீட்டின் விட்டத்தை வெறுச்சு பார்த்துகிட்டு இருந்த எனக்கு,  

இன்னைக்கு பொண்டாட்டினு ஒருத்தி வந்து இப்படி என் பக்கத்துல உட்கார்ந்து இருப்பதே எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா...!  

நீ எப்பவும் இப்படி என் பக்கத்துல இரு.. அது போதும் எனக்கு. அதை விட, உன்னால் கிடைக்கும் உடல் சுகம் ஒன்னும் பெருசில்லை...அதனால நீயும் இனிமேல் என்னை தொந்தரவு செய்யக்கூடாது... சரியா... ”  என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்.

அதற்குமேல் அவனை கட்டாயப்படுத்த அவளுக்கு பிடிக்கவில்லை.  

காதலும் காமமும் ஒருவரை கட்டாயப்படுத்தி வருவதில்லை.  இரண்டுமே  தானாக   மலர வேண்டும் என்று எண்ணிக்கொண்டவள், 

“யோவ் மாமா...  என்கிட்டயே கண்டிஷன் போடுறியா?  போடு போடு.  உன்னை எப்படி என் வாழிக்கு  கொண்டு  வருகிறேன்னு பார்...” என்று தனக்குள்ளே   சிரித்துக்கொண்டவள்,  அவனை சீண்ட எண்ணி,

“அச்சோ மாமா... நீ இப்படி என்னை தள்ளி வச்சா, அப்ப நான் போட்ட திட்டம் என்னாவறது? “ என்றாள் பாவமாக.

“திட்டமா? என்ன திட்டம்? “ என்று முழிக்க,

“அதுதான் உன்னை பழிவாங்கறது “ என்று  அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,

“என்னது? பழிவாங்கறதா? என்னடி சொல்ற கருவாச்சி ? “ என்று புரியாமல் அவளை முறைத்தான்.

கட்டிலில் காலை கீழ தொங்க போட்டு அமர்ந்து இருந்தவன் தோள் மீது சலுகையாக சாய்ந்து கொண்டு, அவன் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு

“அதே... இப்ப என்னை  கருவாச்சினு சொன்னதான.. இப்ப மட்டுமில்ல... என்னை பாக்கறப்ப எல்லாம்  வாய்க்கு வாய் கருவாச்சினு  கூப்பிட்ட இல்ல.

அதனால உன்னை  கட்டிக்கிட்டு, என் கலர்ல கருகருன்னு  ஒரு பொட்ட புள்ளய பெத்து கொடுக்கணும்

ஊரெல்லாம் அந்த புள்ளைய கருவாச்சினு கூப்பிடணும். அதை பார்த்து  உன் முகம் எப்படி போகும்னு  பாக்கணும். அதுக்குத்தான் உன்னை மிரட்டி கட்டிகிட்டேன்... எப்புடி? “  என்று நம்பியார் போல கையை பிசைந்தவாறு வில்லி சிரிப்பை சிரித்தாள் பூங்கொடி.  

“அடிப்பாவி...உனக்குள்ள  இப்படி ஒரு வில்லியா? “ என்று அதிர்ச்சியோடு கேட்க,

“பின்ன... எத்தனை தரம்  என்னை கருவாச்சினு கூப்பிட்டு என்னை கடுப்பேத்தி இருப்ப. அதுக்கு பழிவாங்க வேண்டாம். அதுக்குத்தான் உன் பொண்டாட்டியா இந்த தாலிய கட்டிகிட்டேன்...என்று தன் சிரிப்பை அடக்கி கொண்டு சீரியஸாக சொல்ல,

“அச்சச்சோ...என்னை பழிவாங்கறேனு இப்படி ஏமாந்துட்டியே கருவாச்சி...” என்று உச் கொட்டினான் ராசய்யா.

“என்ன  ஏமாந்துட்டேன் ? “ என்று புரியாமல் அவனை பார்க்க,

“நீ கருப்பா பெத்து கொடுத்தாலும் என் புள்ள எனக்கு தேவதையாக்கும். என் பொண்ணை எவனாவது கருவாச்சினு ,  சொன்னா  அடுத்த வார்த்தை சொல்ல அவன்  வாயில நாக்கு இருக்காது...”  என்று சிரிக்க,

“அப்ப ஏன்யா  நீ மட்டும் என்னை கருவாச்சினு  கூப்பிடற? “ என்று சிலிர்த்துக் கொண்டு வர,

“ஹா ஹா ஹா  நீயும் என் பொண்ணும் ஒன்னாடி?. நீ தணிகாசலம் பெத்த புள்ள. கருவாச்சினு  அவர் புள்ளைய யாராச்சும் கூப்பிட்டா, அவர் வேணா கண்டுக்காம இருக்கலாம்.

ஆனா. இந்த ராசய்யா  பெத்த புள்ளை...இந்த ஊருக்கே இளவரசி. இந்த ஊர் என்ன? தம்மாத்துண்டு. இந்த ஜில்லாவுக்கே இளவரசியா வருவா... அவள யாராவது ஏதாவது சொன்னா, தொலச்சிட மாட்டேன்...” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லி அவளை மீண்டும் சீண்டினான்..

“இப்ப என்ன சொல்ல வர? “  என்று அவள் முறைக்க,  

“அதாவது உன்னுடைய பழிவாங்கும் திட்டம் ப்ளாப் டி...நான் உன்னை கருவாச்சினு  கூப்பிடலாம்.  ஆனால் உன் அப்பன் மாதிரி, நானெல்லாம் என் புள்ளைய கருவாச்சினு சொல்ல விட மாட்டேன்.  

என் புள்ளைய யாராவது அப்படி சொன்னா அவ்வளவுதான்.  யாருக்கும்  அவளை அப்படி கூப்பிட தைரியம் வரக்கூடாது...”  என்று  கை முஷ்டியை இறுக்க,

“பாருடா... இது என்ன நியாயம். நீ மட்டும் அடுத்தவர் புள்ளைய கருவாச்சினு கூப்பிடலாமாம். ஆனால் உன் புள்ளைய யாரும் அப்படி கூப்பிடக்கூடாதாம்... இது நல்லா இருக்கே..”    கழுத்தை நொடித்தாள் பூங்கொடி.

“ஆமான் டி... அதுதான் இந்த ராசய்யாவோட நியாயம்.  என் புள்ளைய நான் இளவரசி மாதிரி பாத்துக்குவேன்.  அதுக்குத்தான் என் நிலையை நான் உசத்திக்கனும்.  

அவ  பொறக்கும் போது அவ அப்பன்  நல்ல நிலையில் இருக்கணும்.  கஷ்டம் னா  என்னானு அவளுக்கு தெரியக்கூடாது...”  என்று கண்கள் பளபளக்க தன் கனவுகளை சொன்னான் ராசய்யா.  

அதைக் கேட்டவளுக்கு மனம் பூரித்துப் போனது.

அவன்  மனதில்  இவ்வளவு ஆசை இருக்கு என்று இன்றுதான் கண்டு கொண்டாள்.

“டேய் கருவாயா... இம்புட்டு ஆசையை மனசுல வச்சுகிட்டுத்தான் தள்ளி நிக்கறியா?  உன் உறுதி எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கறேன்.

ஆனானப்பட்ட விசுவாமித்திரரையே மயக்கிட்டா அந்த மேனகை.  நீயெல்லாம் எம்மாத்திரம்.  சீக்கிரமே நீ உனக்காக போட்டிருக்கிற விலங்கை உடச்சிட்டு என் கிட்ட வர வைக்கிறேன்...  இல்லைனா என் பேரு பூங்கொடி இல்லை...”  என்று தனக்குள்ளே சவால் விட்டுக் கொண்டாள் அந்த கருவாச்சி.

அவள் சபதம் பலிக்குமா? பார்க்கலாம்...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!