என்னுயிர் கருவாச்சி-53

 


அத்தியாயம்-53

றுநாள் காலையில் எழுந்ததும், முசிறியில் இருக்கும் பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாம் என்று அவளை தயாராக சொன்னான் ராசய்யா.

அதைக்கேட்டு அதிர்ந்து போனாள் பூங்கொடி.  

அவன் எதற்காக கூட்டி போகிறான்  என்று தெரிந்ததும் வர மறுத்தாள்.  

அவனோ மீண்டும் கோபம் கொண்டு பொங்கி எழுந்தவன், தன் குரலை உயர்த்தி அவளை திட்ட ஆரம்பிக்க, தான் அங்கு இருந்தால் அவளை திட்டி திட்டியே சம்மதிக்க வைத்து விடுவான் என்று உசாரானவள்,

“நீ என்னதான் கத்தினாலும், திட்டினாலும் ஏன் என்னை அடிச்சு உதச்சாலும் உன் உயிரில் உருவான இந்த புள்ளைய நான் கலைக்க மாட்டேன்...எனக்கு இந்த புள்ள வேண்டும்...நான் என் பொறந்த வூட்டுக்கு போறேன்.

உனக்கு இந்த புள்ளையும், பொண்டாட்டியும் வேணும்னா வந்து என்னை கூட்டிகிட்டு வா.. இல்ல.. புள்ள வேண்டாம்.. பொண்டாட்டி மட்டும்தான் வேணும்னா அந்த பக்கம் வந்திடாத...

நல்லா யோசிச்சு  நீயே ஒரு நல்ல முடிவா எடுத்துக்க...  ” என்று திருப்பி  கத்தி விட்டு, அவன் பதிலுக்கு காத்திருக்காமல், காலில்   செருப்பை மாட்டிக்கொண்டு விறுவிறுவென்று தன் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள் பூங்கொடி.

****  

திருமணம் ஆகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு,  இத்தனை நாளில்  அவளாக தன் பிறந்த வீட்டிற்கு சென்றதில்லை.

அவள் பெற்றோரின் மீது இருந்த கோபத்தால் அந்த வீட்டு பக்கம் தலை காட்டவில்லை.

அவள் தங்கையின் சடங்குக்கு வந்துவிட்டு சென்றவள் தான்.  அதன் பிறகு அங்கு வரவில்லை.  

இப்பொழுது காலங்காத்தாலயே தன் மகள் வேகமாக அங்கு வரவும், அதுவும் முகத்தில்  கோபம் கொப்புளிக்க, மூச்சு வாங்க வேகவேகமாக உள்ளே வரவும்,  தணிகாசலமும் சிலம்பாயிம் ஒருவரை ஒருவர் பாத்து ஜாடையில் என்னவாயிருக்கும் என்று கேட்டுக் கொண்டனர்.  

விடுவிடுவென்று வந்தவள், வீட்டு  திண்ணையில் உட்கார்ந்து கொள்ள,  அவளின் அருகில் வந்து உட்கார்ந்த தணிகாசலம்,  

“என்னாச்சு பாப்பா?  ஏன் இவ்வளவு கோவமா இருக்க?  இந்த நேரத்துல நீ இப்படி கோபப்படக் கூடாது கண்ணு....” என்ற கனிவாக தன் மகளுக்கு எடுத்துச் சொல்லி விசாரிக்க, அதுவரை வாயை மூடிக்கொண்டு இருந்தவள் பொங்க ஆரம்பித்தாள்.  

“அதை அந்த மரமண்டையனுக்கு எடுத்து சொல்லுங்க...”  என்று எகிறினாள்.  

“மரமண்டையனா? யாருடா  அது? “  என்று யோசனையுடன் கேட்க

“அதான் மாப்பிள்ளை மாப்பிள்ளை ஒரு அரை லூச தலைல தூக்கி வச்சு கிட்டு கொண்டாடுவிங்களே... அந்த மாங்காமடையன் தான்...”   என்று  ஏக வசனத்தில் திட்ட,  அவன் பின்னாலேயே வந்த ராசய்யா அவள் சொன்ன  பெயரை எல்லாம் கேட்டு  அதிர்ந்து போனான்.  

“மரமண்டை... மாங்கா மடையன்...  அர லூசு.. ஆஹான்..  நல்ல நல்ல பேரா வச்சு திட்டறாளே இந்த கருவாச்சி... “ என்று அந்த நிலையிலும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,  தயக்கத்துடன் மாமனார் வீட்டுக்குள்ளே வந்தான்.  

திடீரென்று அவள் இப்படி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு வருவாள் என்று  எதிர்பார்க்கவில்லை ராசய்யா

இத்தனை நாள் இரண்டு பேரும் சின்ன சின்ன சண்டை போட்டுக் கொண்டாலும் வீட்டு வாசலைத் தாண்டி வந்ததில்லை அவள்.

இன்றோ பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே  விடுவிடுவென்று கிளம்பி வந்து விட ஆடித்தான் போனான் ராசய்யா.    

தன்னவள் இல்லாமல் அந்த வீட்டில் ஒரு கணம் கூட அவனால்  இருக்க முடியவில்லை.  

உடனே அவனும் செருப்பை மாட்டிக்கொண்டு அவள் பின்னாலேயே ஓடி வந்திருந்தான்.  

உள்ளே  வந்தவனை கண்டதும்,  அன்பரசன் மலர்க்கொடியும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தனர்.

தன் அக்கா வேகமாக வீட்டிற்குள் வரவும்,  வாசலில் கிட்டி விளையாண்டு  கொண்டிருந்தவர்கள் பதற்றத்தோடு உள்ளே ஓடி வந்து இருந்தனர்.

தன் தந்தை அக்காவை விசாரிக்க, அதில் அக்கா,   தங்கள் செல்ல , பிரிய மாமனை ஏக வசனத்தில் திட்டுவதைக் கேட்டு இருவருக்கும் தன் அக்கா மேல கோபம் வந்தது.

ஆனால் அக்கா பின்னாலயே மாமனும் வந்துவிட, தங்கள் கோபம் மறந்து அவள் திட்டியதை எல்லாம் எண்ணி இருவரும் மாமனை பார்த்து கிண்டலாக சிரித்து வைத்தனர்.

அவர்களைப் பார்த்து முறைத்தவன், ஒரு ஆட்காட்டி  விரலை நீட்டி  பத்திரம் காட்டி எச்சரித்துவிட்டு உள்ளே சென்றவன், அவள் அமர்ந்திருந்த திண்ணையில் அவளருகே சென்று  அமர்ந்து கொண்டான்.  

அவன் தன் அருகில் அமர்வது தெரிந்தும்,  நிமிர்ந்தும் அவனை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டிருந்தாள் பூங்கொடி.

“பூ...வு...”  என்று மெல்ல அழைத்தவாறு, அவள் தோளை,  தொட வெடுக்கென்று அவன் கையை தட்டிவிட்டவள், அவனை பார்த்து முறைத்து ,

“உன்னை யார் இங்க வரச் சொன்னா? “  என்று முறைக்க,  

“இது என் மாமனார் வீடு டி... நான் அப்படித்தான்  வருவேன்...” என்று திரும்பி முறைக்க,  

“அப்ப நீயே  இங்க இருந்து உன் மாமனார் வீட்ல விருந்தாடு... நான் போறேன்... “  என்றவாறு எழ முயன்றவளை,  கை பிடித்து இழுத்து, திண்ணையில்  அமர வைத்தான்.  

“இப்ப எதுக்குடி இம்புட்டு கோபப்படுற? “  என்று அதட்ட

“பின்ன... நீ செய்யச் சொன்ன வேலைக்கு, உன்னை கொலையே பண்ணியிருக்கணும்...”  என்று எகிறினாள்.  

அவனும் திருப்பி கத்த, சற்று நேரம் அவர்கள் சண்டையை பொறுமையாக வேடிக்கை பாத்து கொண்டிருந்த தணிகாசலம்,  அதற்குமேல் பொறுக்க முடியாமல்  இரண்டு  பேருக்கும்  நடுவில் வந்து பஞ்சாயத்து பண்ணி இருவரையும் சமாதானப் படுத்தி விட்டு விஷயம் என்ன என்று மெதுவாக கேட்க,

பூங்கொடியோ தன் கணவனை முறைத்தபடி, தன் தந்தையை பார்த்தவள்,  

“உன் அருமை மாப்பிள்ளை..வேப்பிலைக்கு இந்த குழந்தை வேண்டாமாம்.  கலைச்சுட  சொல்றான்...”  என்று கோபத்துடன் சொல்ல,  அதைக்கேட்ட அனைவருமே அதிர்ந்து போயினர்.

தன் மாப்பிள்ளைக்காக காபி தண்ணி எடுத்து வந்த சிலம்பாயி, தன் கையில் இருந்த டம்ளரை அப்படியே கீழ போட்டுவிட்டு வேகமாக அருகில் ஓடி வந்தார்.

“என்னடி சொல்ற? “ என்று சந்தேகமாக தன் மகளை பார்க்க,

“அதான் சொன்னேனே... என் வயித்துல வளர்ற குழந்தை உன் அரும மருமகனுக்கு வேண்டாமாம்... கலச்சிட சொல்றான்...” என்று கண்ணில் நீரோடு தழுதழுத்தவாறு சொல்லியவள்

எவ்வளவு முயன்றும் அதுவரை  வெளியில் தைர்யமாக காட்டிக் கொண்டிருந்தவள், இப்பொழுது பொளபொளவென்று கண்ணில் நீர் வழிய, புடவை முந்தானையை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு ஓ வென்று கேவி அழுதாள்.

அவ்வளவுதான்...பூங்கொடி குடும்பத்தார் எல்லாரும் ஒன்று சேர்ந்து கொண்டு  அந்த வீட்டு சின்ன மருமகனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.  

“என்ன மாப்பிள்ளை... நான் கூட நீ புத்திசாலினு நினச்சேன்....இப்படி முட்டாப்பயலா இருக்கியே... புள்ள கிடைப்பது கடவுள் கொடுத்த வரம்யா...

இப்பல்லாம் வூட்ல கொஞ்சி விளையாட ஒரு புள்ளை இல்லைனு எத்தனை பேர் கோயில் கோயிலா ஏறி இறங்கறாங்க...

அரசமரம், புங்க மரம்னு எத்தனை மரத்த சுத்தி வாராங்க.... அப்படி எந்த குறையும் இல்லாம கடவுளா பாத்து கொடுத்த வரத்தை போய் யாராவது வேண்டாம்னு தட்டி விடுவாங்களா? தலச்சம்  குழந்தையை போய் யாராவது  அழிப்பார்களா?  அது கொலை பண்றதுக்கு சமம் யா... “  என்பதில் ஆரம்பித்து

“உங்க  வீட்டுக்கு வரப் போகிற மகாலட்சுமி மாப்ள.. அதைப்போய் யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா..” என்று  சிலம்பாயி முறைக்க,  

“ஏன் மாமா...  பாப்பா பொறக்கிறது  உனக்கு புடிக்கலைனா , அக்கா பெத்து எடுத்ததும்  என்கிட்ட கொடுத்துடுங்க...  நான் பாத்துக்கிறேன் பாப்பாவை..”  

என்று அவன்  மச்சினிச்சி மலர்க்கொடி அவனிடம் எகிறினாள்  என்றால்,  அவன் குட்டி மச்சானோ இன்னும் ஒரு படி மேல போய்

“என்ன மாமா...உன் புள்ளையோட தாய் மாமன் நான் இருக்கேன். என் அக்கா மவளுக்கு  ஒரு குறையும் இல்லாமல் நான் பாத்துக்குவேன். உன்னால  முடியலன்னா என்கிட்ட கொடு...

அத விட்டுபோட்டு புள்ளைய கலைக்கறேன் கிலைக்கிறேனு சொன்ன, அம்புட்டுதான்.. என் பிரிய மாமன் னு கூட பாக்க மாட்டேன்... வகிந்து புடுவேன்... “ என்று பெரிய மனுசனாக மிரட்ட, அதைக்கண்டு வாயடைத்து போனான் அந்த முரட்டுக்காளை.

கடைசியில் அவன் என்ன காரணத்துக்காக இந்த குழந்தை வேண்டாம் என்று சொன்னான்  என்பதை யாரும்  புரிந்து கொள்ளவில்லை.  

அவனை ஒரு கொலைகாரனை பார்த்து வைப்பதை போல பார்த்து வைத்தனர் அந்த குடும்பத்தினர் அனைவரும்.    

கொஞ்ச நேரம் முன்னால் வரைக்கும் அவன் அணியிலிருந்த, அவனுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருந்த  அந்த குடும்பத்தினர் எல்லாரும் தடாலென்று அவள்  பக்கம் சேர்ந்து கொள்ள, ராசய்யா மட்டும் தனித்து விடப்பட்டான்.

“சை... எல்லாம் என் நேரம்... நண்டு , சிண்டெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு வச்சுட்டா இந்த கருவாச்சி...

அவ நல்லதுக்குனு நான் சொன்னா அதை புரிஞ்சுக்காம இப்படி ஊரை கூட்டிட்டாளே.. இந்த விஷயம் கேட்டு, இவ குடும்பத்துகுள்ளயே இத்தனை பேர் எனக்கு எதிரியாகிட்டாங்க.

இன்னும் ஊருக்குள்ள மட்டும் இந்த விஷயம் தெரிந்தது அவ்வளவுதான்..

ஊர் பயலுவ எல்லாம் என்னை கல்லால அடிச்சே துரத்திடுவானுங்க.. எல்லாம் இந்த கருவாச்சியால...” என்று அவளை முறைக்க, அவளோ தன் குடும்பத்தாரின் பாசத்தில் திக்கு முக்காடி கொண்டிருந்தாள்.

அதுவும் தன் தம்பியின் வீர வசனத்தை கேட்டு அந்த நிலையிலும் சிரிப்பு பொங்கி வந்தது.

ஆனாலும் முயன்று  தன் சிரிப்பை அடக்கி கொண்டு, இன்னுமே புடவை முந்தானையை வாயில் வைத்தபடி வராத அழுகையை வரவழைத்து கொண்டிருந்தாள்.

ராசய்யா அவளை பார்த்த அதே நேரம்  , அவளும் அனைைத்தான் நிமிர்ந்து பார்த்தாள்.

இருவர் பார்வையும் சந்திக்க, அவளோ

“எப்புடி..இப்ப என் குடும்பமே என் பக்கம்...” என்று கண் சிமிட்டி தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி காட்டி புன்னகைத்தாள்.

“சரியான கேடி டி.. கொஞ்சநேரத்தில அழுகாச்சி ட்ராமா பண்ணி எல்லாரையும் அவ பக்கம் இழுத்துட்டா. இனிமேல் நான் தலைகீழ நின்னாலும் நான் சொல்வதை யாரும் காதில் வாங்க மாட்டாங்க..” என்று  உள்ளுக்குள் புலம்பியவன் .   

“சரி...  ஆயா தான் நமக்கு கம்பெனி...”  என்று அருகில் இருந்த குடிசையில் இருந்த பெரியவளை பார்க்க போனவனை, உள்ளே நுழையும்பொழுதே தன்  கைத்தடியால் நாலு  சாத்து சாத்தினாள்  பெரியவள்.

குடிசையில் இருந்தாலும் வயதாகி பல் எல்லாம் விழுந்து போனாலும் காது நன்றாகவே கேட்கும்.

கட்டிலில் படுத்திருந்தவர் தன் பேத்தியின் அழுகுரல் கேட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டவர், காதை தீட்டி வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நடப்பதை உன்னிப்பாக கேட்டு வைக்க, அதில் தான் ராசய்யா குழந்தையை கலைக்க சொல்லும் விஷயம் புரிந்தது.  

“ஏன் டா படவா ராஸ்கோலு... உனக்கு  ஒரு வாரிசு... உன் அம்மாவே  உனக்கு புள்ளையா  வந்து பொறக்க போறா.. அதைப்போய்  வேண்டாம்னு கலைக்க சொல்றியா?  உனக்கு மண்டையில கொஞ்சமாச்சும் மூள இருக்கா?

ஆளுதான் நெடுநெடுனு வளர்ந்திருக்க... ஆனால் மண்டையில ஒன்னுமே இல்ல...  “  என்று அவர் பங்கிற்கு திட்டி வைக்க, ஆக மொத்தம் ராசய்யா  டெபாசிட் கூட இல்லாமல் தோற்று போனான்.

இறுதியில் வேற வழியில்லாமல் எல்லாரும் சொல்லியதற்கு தலையை ஆட்டி வைத்தான் அந்த முரட்டுபையன்.  

******  

தன் பிறகு அவன் பேச்சு அங்கே எடுபடவில்லை

அன்றிலிருந்தே  அவளுக்கு தலை சுத்தல், வாந்தி  என்று உபாதைகள் ஆரம்பிக்க,  அவளை  தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டாள் சிலம்பாயி.  

தன்னவளை இங்கே விட்டு வேலைக்காக பண்ணையார் வீட்டுக்கு சென்றவனுக்கோ வேலையில் கவனம் செலுத்த  முடியவில்லை.

கண் முன்னே தன்னவளே வந்து வந்து போக, இப்பவே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது.  

மதிய சாப்பாட்டிற்கு என்று சொல்லிவிட்டு  வீட்டிற்கு வந்துவிட்டான்.  

சரியாக அவன் உள்ளே  வரும் நேரம் அப்பொழுதுதான் எதையோ எடுத்து வாயில் போட்டவளுக்கு குமட்டிக் கொண்டு வர,  எழுந்து வாசலுக்கு ஓடி வந்தவள், எதிரில் வந்த தன் கணவன் மீது  அப்படியே வாந்தி எடுத்து வைத்தாள்.

அதைக்கண்டு  அச்சமும், மிரட்சியுமாய் தன்னவன் முகத்தை பார்க்க, அவனோ  கொஞ்சமும் முகம் சுளிக்காமல், அவளை வாசலுக்கு அழைத்து சென்று குனிய வைத்து,  அவள் தலையை இருபக்கமும் அழுத்தி பிடித்துக் கொண்டு இன்னும் வாந்தி எடுக்க உதவினான்.  

அதைக் கண்டவளுக்கு  கண்கள் கரித்துக்கொண்டு வர, கடகடவென்று கண்ணீரை சொரிந்தாள்.

அவள் கண்ணில் நீரைக்கண்டவன் துடித்து போனான்.  

“இதுக்குத்  தான்டி சொன்னேன்...உன்னால இந்த மாதிரி உபாதை எல்லாம் தாங்க முடியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் னு. நீ கேட்டியா.. இப்ப பார் எப்படி கஷ்டபடற...”

என்று  திட்ட, கடைசி சொட்டையும் வாந்தி எடுத்து முடித்தவள், அவன் அணிந்திருந்த சட்டையில் வாந்தி இல்லாத பக்கத்தில் தன் வாயை வைத்து தேய்த்து,  ஒட்டியிருந்த வாந்தியை துடைத்துக்கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்த்து

“யோவ்... நான் எனக்கு முடியலனு உன்கிட்ட சொன்னேனா? “ என்று முறைக்க,

“இப்ப உன் கண்ணுல தண்ணி வந்துதே டி... “ என்று பாவமாக பார்க்க,

“கண்ணுனு இருந்தா தண்ணி வரத்தான் செய்யும்... அதுக்குனு நான் வேதனைப்படறேனு அர்த்தமா? இது ஆனந்த கண்ணீர் யா...

என் புருஷன் எம்புட்டு நல்லவன்...  நான் எடுக்கும் வாந்தியைக்கூட குற்றால அருவி மாதிரி தாங்கி நிக்கிறானேனு வந்த ஆனந்த கண்ணிர்.

அதுக்கு போய் திரும்பவும் தாம்தூம் னு குதிக்கிற... இனிமேல் எனக்கு தொல்லைங்கிற பேச்சை ஆரம்பிச்சா...உன் குரல் வலையை கடிச்சிடுவேன்... ஜாக்கிரதை... “

என்று  முன்னால் கிடந்த ஜடையை தூக்கி ஸ்டைலாக பின்னால் போட்டுக்கொண்டு   விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டாள்.

“எல்லாம் என் நேரம்.  இவளுக்கு கஷ்டதமா இருக்குமேனு  சொன்னா மறுபடியும் நான்தான் வில்லன் னு சொல்லாம சொல்லிட்டு போறாளே.. கருவாச்சி... நல்லா அவஷ்தை படுடி... “ என்று திட்டியபடி கொல்லைப் புறத்திற்கு சென்றான்.

அவள் வாந்தி எடுத்திருந்த சட்டையை கழட்டி,  அதை அலசி கொடியில் போட்டு விட்டு,  மேலே ஒரு டவளை எடுத்து போட்டுக்கொண்டு வீட்டிற்குள்  வந்தான்..

தன் மருமகனை கண்டதும், சிலம்பாயி அவனுக்கு மதிய சாப்பாடு எடுத்து வைத்து அவனை அமரச்சொல்லி, பரிமாற, பருக்கை  சாப்பாடு கூட அவனுக்கு உள்ளே இறங்கவில்லை.  

சற்று  தள்ளி முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தவளை பார்த்தவன்,

“நீ சாப்டியா டி? “  என்று  பூங்கொடியை  கேட்க

“அதெல்லாம் டைமுக்கு கொட்டிகிட்டேன்.  நீ வரலனு நான் ஒன்னும் உனக்காக  காத்துகிட்டு இருக்க மாட்டேன்...” என்று தலையை சிலுப்ப, அவன் அருகில் அமர்ந்து இருந்த அன்பரசனோ, ஜாடையில்

“இல்ல மாமா.. .அக்கா சாப்பிடலை... “ என்று மெல்ல கிசுகிசுத்தான்.

அதைக்கேட்டு பதறியவன், சாப்பிட்டுக்கொண்டிருந்த  தட்டை  எடுத்து கொண்டு சென்று  அவளின் அருகில் சென்று அமர்ந்துகொண்டு அவளுக்கு  ஒரு வாய் ஊட்டி விட்டான்.

முதலில் மறுத்தாலும் தன் கணவன் ஆசையாய், அக்கறையாய் ஊட்டுவதில் நெகிழ்ந்து போனவள், எதிர்ப்பு எதுவும் காட்டாமல் வாயை பிளந்து வாங்கி கொண்டாள்.

குருவி வாய் போல திறந்திருந்த அவளின் செப்பு வாயை கண்டவனுக்கோ சிரிப்புதான் வந்தது.

தன் சிரிப்பை அடக்கி கொண்டு, மீண்டும் அவளுக்கு ஊட்டிவிட்டான்.

அதுவரை கொஞ்சமும் அவள் வயிற்றில் இறங்காத சாப்பாடு, தன் கணவனின் கை பட்டதும் கடகடவென்று உள்ளே இறங்கியது.

வேக வேகமாக வாங்கி சாப்பிட்டாள்.

மீண்டும் குமட்டிக்கொண்டு  வருவது போல் இருக், உடனே அவளின் நெஞ்சை  நீவிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு ஊட்டினான்

அவர்கள் இருவரின் பாசத்தையும் அன்யோன்யத்தையும் கண்டு அவளின்  பெற்றோர்கள் பூரித்துப் போனார்கள்.

அவர்களாகவே தேடி பிடித்து இருந்தால் கூட இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளையை கண்டு பிடித்து இருக்க முடியாது.

அந்த ராஜேந்திரன் மாதிரி ஏதாவது ஒரு பொறுக்கி, குடிகாரன்கிட்டதான் தன் பொண்ணு மாட்டி இருப்பா..

எப்படியோ...  எந்த சாமி புண்ணியமோ...காசு பணம் இல்லையென்றாலும் தன் மகளை உள்ளங்கையில் வைத்து தாங்கும் மாப்பிள்ளை கிடைத்து விட்டான் என்று மனம் பூரித்தனர்.

*****

வள் ஆசையாக வாங்கி சாப்பிட்டதெல்லாம் சற்று நேரத்தில் மீண்டும் வெளியில் தள்ளினாள்.

அவளை அப்படி விட்டுவிட்டு அவனால் மீதி வேலையை பார்க்க போக முடியவில்லை.

சிலம்பாயி நான் பாத்துக்கிறேன் என்று சொன்னாலும் அவனுக்கு போக மனமில்லை.

அவள் தலையை பிடித்தவாறே அங்கயே தங்கி விட்டான்.  

அவள்  ஓயாமல் வாந்தி எடுப்பதைத் கண்டவன்  அன்று மாலை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.  

மருத்துவரும் பரிசோதித்து விட்டு குழந்தை உண்டாகி இருப்பதை உறுதி செய்தார்.

இப்பொழுது இரண்டு  மாதம் ஆகிறது என்று சொல்லி,  அவள்  வாந்தி நிற்க, மற்றும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க, இரும்புச் சத்து மாத்திரை என்று   சில பல மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்

அதோடு ராசய்யாவுடைய பயத்தையும், அதற்காக குழந்தையை கலைக்க சொல்கிறான் என்றதையும்  பூங்கொடி அந்த மருத்துவரிடம்  சொல்லிவிட,  அந்த மருத்துவரிடமும் இருந்து நன்றாக வாங்கி கட்டிக் கொண்டான் ராசய்யா.  

நான்றாக டோஸ் வாங்கியவன், முகம் இஞ்சி தின்ன குரங்கைப் போல தொங்கிப் போனது.

அவளை மருத்துவரின் அறையில் இருந்து வெளியில் அழைத்து வர, வெளியில் வந்ததும், தன் கணவனின் தொங்கிப்போன முகத்தை கண்டு , அதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த சிரிப்பு பொங்கி வர,  அவளோ வாய் விட்டு  சிரித்தாள்.  

**** *

தன் பிறகு குழந்தையைக் கலைக்கும்  திட்டத்தை கைவிட்டு மனைவியை கவனிக்கும் திட்டத்தை செயல்படுத்தினான் ராசய்யா.

தினமும் வேலைக்கு செல்லும் முன்னே,  அதட்டி உருட்டி மிரட்டி அவளுக்கு ஊட்டி விட்டு சாப்பிட வைத்துவிட்டு  சென்று விடுவான்.  

எங்க தினக்கூலிக்கு வேலைக்கு போனாலும்,  மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுவான்.

ஒரு மணி நேரம் அவளோடு இருந்து விட்டு, பின்  மனமே இல்லாமல் மறுபடியும் வேலைக்கு செல்வான்.

ஓரளவுக்கு தேறியதும் பூங்கொடியும் அவனின் ஆசைக்காக படிப்பை தொடர்ந்தாள்.  

அடுத்த வாரம் இருந்த முதலாமாண்டு பரீட்சைக்காக சிரத்தை எடுத்து படித்தாள்.

ஒரு வாரத்தில் குமட்டல், தலை சுத்தல் குறைஞ்சிருக்க, கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினாள்.

அதன் பிறகு கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டிலயே தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டாள். 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!