தேடும் கண் பார்வை தவிக்க-37

 




அத்தியாயம்-37

ளன் பைக்கை ஸ்டார்ட் பண்ணி அதில் ஏறி அமர... பிடிமானத்திற்காக அவன் தோள்பட்டையை பிடித்து  ஏறி பின்னால் அமர்ந்தாள் தமயந்தி..

அமரும் பொழுது,  மெத்தென்று அவன் மீது இடித்துக் கொள்ள, அவளின் வனப்பான முன்பகுதி அவனின் முதுகில் அழுத்தியது..!

அவன் தோளை பற்றியபடி, சிறு குலுக்கலுடன் பைக்கில்  ஏறி  பின்னால் அமர,  அவள் தலையில் பின்னால் வைத்திருந்த மல்லிகைச் சரம் வழுக்கிக் கொண்டு,  அவள் தோள் வழியாக முன்னால்  சரிந்து விழ,  அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான்  நளன்...  

முன்பு எத்தனையோ முறை, இதுமாதிரி அவன் மீது இடித்துக்கொண்டும், அவனஒ ஒட்டி உரசிக்கொண்டும் அவன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறாள் தமயந்தி..!

ஆனால் அப்பொழுதெல்லாம் அவள் வெறும் அவளின் அத்தை மகள் மட்டும்தான்..!

இப்பொழுதோ அவள் தன் மனைவி என்ற உரிமை வந்துவிட, அவளின் லேசான மெய் தீண்டல்..! அவள் பெண்மையின் மென்மை அவனை மொத்தமாய் புரட்டி போட்டது..!

அவளின் சிறு ஸ்பரிசமும் அவன் உள்ளே பெரும் சூறாவளியை உண்டாக்கியது..  

அவன் பைக்கில் இருந்த பின்பக்க கண்ணாடியை நன்றாக திருப்பி வைத்து,  அவள் முகம் பார்க்குமாறு வைத்துக் கொண்டான்..  

அதில்   தெரிந்த அவள்  முகத்தையே  ரசித்து பார்த்துக் கொண்டிருக்க

“டேய் மாமா... நான் உட்கார்ந்து ரொம்ப நேரமாச்சு.. வண்டிய ஸ்டார்ட் பண்ணு டா.. “  என்று அவன் பின்னந்தலையை செல்லமாக தட்டினாள் தமயந்தி..

உடனே அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவாறு வண்டியை ஸ்டார்ட் பண்ணி மெதுவாக ஓட்ட ஆரம்பித்தான்...

******  

ந்த கிராமத்து தென்றல் ஓடி வந்து அவன் முன் உச்சி முடியை கலைத்து விளையாட, பின்னால் அமர்ந்திருந்தவளின் வாசமும்...  அவள் சூடி இருந்த அந்த மல்லிகையின் வாசமும் அவன் நாசியை தீண்ட, மொத்தமாக தன்னை தொலைத்திருந்தான் அந்த நொடியில்....!  

பைக் ஐ ஒரு கையால் பிடித்து ஓட்டி கொண்டே,  மறு கையால் அவன் முச்சி முடியை கோதி கொண்டு... அப்படியே தலையை  பின் பக்கமாகவும் தடவி கொண்டவன்...  லேசாக வெட்கப் பட்டு சிரித்து கொண்டான் தனக்குள்ளே..

அவனுக்கே இன்னும் நம்ப முடியவில்லை..!  

எத்தனையோ  நாட்கள் அவளை பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறான்..  ஆனால் அப்பொழுது எல்லாம் அவள் அவனுக்கு அத்தை மகள் மட்டுமே.. ஒரு நாள் அவன் மனைவியாக என் பின்னால் இவ்வாறு உட்கார்ந்து வருவாளா என்று ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டிருக்கிறான் பல சமயம்...

இன்று அதுவே உண்மையாகி போக,  அவனுக்குள்  பெரும் பரவசம்..

ஓரக் கண்ணால் முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தை  பார்த்து ரசித்துக் கொண்டே சாலையை பார்த்து பைக்கை செலுத்திக் கொண்டிருந்தவன்,  மெதுவாக பேச ஆரம்பித்தான்..!

“ஏன் டி தயா.. நாம ரெண்டு பேரும் இப்படி பைக்ல போறது உனக்கு என்ன மாதிரி இருக்கு? என்று நாசுக்காக கேட்டான்..  

அவளும் தன் தாடையில் கை வைத்து

“ஹ்ம்ம் என்ன மாதிரி இருக்கு? என்று யோசித்தவள்

“ஒரு மாதிரியும்  இல்லையே?  ஏன் கேட்கிற? என்றாள் தன் புருவத்தை உயர்த்தி அப்பாவியாய்...

“அடிப்பாவி.. சரியான  ஞான சூனியம்.. தத்தி.. “  என்று  உள்ளுக்குள் புலம்பியவன்

“ஆமா.. வேட்டையாடு விளையாட்டு படத்துல கமல் இப்படித்தானே பைக்ல அவர் பொண்டாட்டிய பின்னால உட்கார வச்சுகிட்டு டூயட் பாடிகிட்டு போவார்.. ஹ்ம்ம்ம் என்ன பாட்டு அது? என்று தெரியாதவனை போல கேட்டான்...

“ஹ்ம்ம்ம் எனக்கு தெரியுமே.. இரு பாடி காட்டறேன்.. “ என்றவள் தன் குரலை செருமி கொண்டு   

பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே...

காட்சி பிழை போலே

உணர்ந்தேன் காட்சி பிழை போல..

 

ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்

கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே!

 

என்று அந்த பாடலை ராகமாக பாடிக் காண்பிக்க, நளனும் அதுக்கு அடுத்து வரும் ஆண் குரலுக்கான வரிகளை ரசித்து பாடினான்....

காட்டிக் கொடுக்கிறதே..  கண்ணே காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே

கண்ணில் காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை

பார்த்தேன் கடந்தேன் பகல் இரவாய்

உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின் நானும் மழையானேன்

 

என்று உருகி ரசித்து காதலுடன் அவளை முன்னால் இருந்த கண்ணாடியில் பார்த்து ரசித்தவாறு அனுபவித்து பாடினான்...

அவன் குரலில் இருந்த உற்சாகமும்,  துள்ளலும் அதை அனுபவித்து பாடிய விதமும் கண்டு வியந்து போனவள்

“வாவ்..! சூப்பரா பாடற டா மாமா...அப்ப லண்டன் ல கரண்டி புடிக்கிற வேலை போனாலும் ரோட்டோரமா நின்னு இப்படி பாடியே பொழச்சுக்கலாம்... அங்க ரோட்டோரத்துல பாடறவங்களுக்கு நிறைய காசு போடுவாங்களாம்..

அதை வைத்தே பெரிய ஆளா ஆய்டலாம்... எப்புடி? “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் தமயந்தி...!  

அவன் உருகி பாடியதை கண்டு அவன் மனதை புரிந்துகொள்வாள்.. அவன் காதலை உணர்ந்து கொள்வாள் என்று ஆவலுடன் அந்த கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்தையே பார்த்து இருக்க,  அவளோ எப்பவும் போல அவனுடன் வம்பு இழுந்தாள்..

அவளின் கிண்டலுக்கு செல்லமாக முறைத்தவன்

“போடி..” என்று செல்லமாக முறைத்தவன்

“ஹே பொண்டாட்டி... நீயும் என் கூட வந்து உட்கார்ந்துகிட்டு  காசு கலெக்ட் பண்ண ரெடினா,  நானும் பாட ரெடிதான்..எப்புடி? “ என்று அவனும் குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான்...

“ஹ்ம்ம் எப்படியோ.. நல்ல ஒரு வளமான எதிர்காலம் நமக்கு இருக்கு.. சூப்பர் டா மாமா...” என்று கிளுக்கி சிரித்தாள்..

அவனும் இணைந்து நகைத்தவன்

“ஹே பொண்டாட்டி..அதெல்லாம் சரி...  அந்த பாட்டுல வர்ற மாதிரி,  எங்க இந்த மாமாவை அப்படியே கட்டி பிடிச்சுக்கோ பார்க்கலாம்.. “  என்று குறும்பாக சிரித்தான்..

அதை கேட்டு திகைத்தவள்  

“ஐய... இது என்ன புது பழக்கம்?  எத்தனை நாள் நான் உன் கூட பைக்ல வந்திருக்கேன்.. அப்ப எல்லாம் நீ இப்படி கேட்கல..  இப்ப மட்டும் என்ன இது புதுசா? “ என்று முறைத்தாள்...

“அப்ப எல்லாம் நீ என் பொண்டாட்டி இல்ல டி.. இப்பதான் நீ என் பொண்டாட்டி.. எனக்கே எனக்கு னு சொந்தமான என் பொண்டாட்டி நீ..இப்ப கட்டி புடிச்சா தப்பில்ல.. “ என்று மனதுக்குள்  புலம்பியவன் அதை நேரடியாக சொல்ல முடியாமல்

“அது அப்ப...  இது இப்ப... இப்ப நீ என்னை கட்டி பிடிச்சுக்கலாம்...தப்பில்ல... வா வா வா.. இந்த மாமா சொல்ற மாதிரி என் இடுப்பை பிடிச்சுக்கோ.. பார்க்கலாம்.. “  என்று குறும்பாக கண்சிமிட்டி சிரிக்க அவளோ  

“சீ போடா மாமா..நீ ரொம்ப மோசம்.. " என்று  செல்லமாக சிணுங்கியவள் அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்..

அதற்கு பிறகு அவளிடம் வம்பு இழுத்து சிரித்தவாறே தங்கம் வீட்டை அடைந்தனர்..

வீட்டை அடைந்ததும் பைக்கில் இருந்து இறங்காமல் வேண்டும் என்றே ஹார்ன் அடிக்க, அவன் பைக் சத்தம் கேட்டதுமே வாயிலுக்கு ஓடி வந்து விட்டாள் தங்கம்..

பைக்கில் இருவரும் ஒன்றாக வந்து நின்றதையும்... அதுவும் இருவர் முகத்திலும் இருந்த சிரிப்பையும்,  பூரிப்பையும் கண்ட தங்கத்துக்கு மனம் பூரித்து போனது...

அவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருப்பதை அவன் செல்ல அத்தை காண வேண்டும் என்றுதான் ஹார்ன் அடித்தது...

அவன் எதிர்பார்த்த மாதிரியே அவர்கள் இருவரையும் கண்டதும் தங்கத்தின் முகம் பூரிப்பில் விரிந்தது..

நளன் பைக் ஐ நிறுத்தி இருக்க, இந்த முறையும் பிடிமானத்திற்காக  முன்னால் இருந்தவன் தோளை பற்றி எட்டி குதித்து இறங்கி நின்றாள் தமயந்தி..

அதை கண்ட தங்கம் இன்னும் மகிழ்ந்து போய்

“எப்படியோ.. என்ற  மவ இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டாள்.. இனி கவலை இல்லை.. எல்லாம் என்ற மருமவன் நளன் பார்த்துக்குவான்.. “ என்ற நிம்மதி பரவியது தங்கத்திற்கு...

கூடவே மஞ்சள் தாலி சரடு பளபளக்க, பெரும் பெண்ணாக, அழகு ஓவியமாக நின்றிருந்த தன் மகளை கண்டதும் இன்னுமே பெருமையிலும் பூரிப்பிலும் ஆனந்தத்திலும் கண்கலங்கி நின்றாள்  தங்கம்..

அதற்குள்  சிங்காரமும் வாசலுக்கு வந்திருக்க,  தன் மகளையே ரசித்து பார்த்து கொண்டிருந்த தன் மனைவியை ரசித்தவர்

“அடியே..  ஏன் இப்படி புள்ளைங்கள வாசலிலேயே காக்க வச்சுகிட்டு இருக்க...சீக்கிரம் ஆரத்தி எடுத்து அவங்களை உள்ளார கூப்பிடு.. “

என்று சிங்காரம் செல்லமாக அதட்ட அதில் உணர்வு பெற்றவள்,  உடனே உள்ளே ஓடிச் சென்று தயாராக வைத்திருந்த ஆரத்தி தட்டை எடுத்து வந்து,  இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து,  மனநிறைவுடன் ஆரத்தி எடுத்து அவர்கள் இருவருக்கும் திருஷ்டி பொட்டு வைத்து உள்ளே அழைத்தாள்..

அவர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தத்தை கண்டு அக்கம் பக்கத்தில்  நின்றிருந்தவர்கள் எல்லாரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்..  

தமயந்தியும்  சிரித்தவாறு வீட்டுக்குள் வர, உடனே தங்கம் அவளை கட்டிக் கொண்டாள்..

தமயந்தியும் தன் அன்னையை கட்டி கொண்டு செல்லம் கொஞ்ச அருகில் நின்றிருந்த நளனுக்கு காதில் அதிகமாக புகை வந்தது...

“அத்தை.... இதெல்லாம் ஓவரா இல்ல?  என்னமோ பல நாள் இவளை பார்க்காமல் இருந்த மாதிரி இந்த பில்டப் கொடுக்குறீங்க !  காலையில் தானே இவள பாத்துட்டு நம்ம வீட்ல இருந்து இங்க கிளம்பி வந்திங்க...அதுக்குள்ள எதுக்கு இந்த சீன் ?

என்று நக்கலாக சிரித்தான் நளன்...  

“போடா போக்கிரி...  உனக்கு என்ன தெரியும் இதெல்லாம் ?  என்னதான் என்ற  மவ உன் வூட்ல இருந்தாலும்  என்ற  வூட்டுக்கு வர்ற சந்தோசம் அதெல்லாம் சொல்லி புரியாது டா...

என்ற மவ இப்ப கண்ணாலம் கட்டி புருஷனோட முதமுதலா என் வூட்டுக்கு வந்திருக்கா.. இதனை பார்க்க எவ்வளவு பூரிப்பா இருக்கு தெரியுமா? என்று பெருமையுடன் முகத்தை நொடித்தாள்  தங்கம்..  

தன் அத்தை சொன்னதைக் கேட்டு நளனும் ஆர்வமாக தமயந்தியை பார்த்தான்...  

அத்தை சொல்லியதில் இருந்தாவது அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று உணர்ந்து கொள்வாளா என்ற ஒரு சிறு நப்பாசை அவன் உள்ளே..  

வெட்கத்தில் அவள் முகம் சிவக்கும்.. ஏதாவது ஒரு மகிழ்ச்சி அவள் முகத்தில் வந்து போகும் என்று ஆர்வமாக தமயந்தியின் முகம் பார்த்து கொண்டிருக்க,

அவளோ தன் அன்னை சொன்னதை பெரிதாக கண்டு கொள்ளாமல் எப்பவும் போல் கன்னம் குழிய சிரித்தவள்  அடுத்து தன் அப்பத்தாவிடம் ஓடிச் சென்று அவரை கட்டி கொண்டு செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள்..

சிறிது நேரத்தில் தமயந்தியின் தோழிகள்... அக்கம் பக்கத்து சின்னஞ்சிறுசுகள் எல்லாம் அவளை  பார்க்க வந்து விட.. அதற்கு  பிறகு அவளை பிடிக்கவே முடியவில்லை..

நளன் அவன் அத்தையுடனும்,  மாமனுடனும் பேசிக் கொண்டிருந்தான்..!

வாய் அவர்களிடம் பேசி கொண்டிருந்தாலும் கண்கள் என்னவோ தன்னவளிடமே சென்று வந்தது  

ஓரக் கண்ணால் தமயந்தியின் குறும்பு சிரிப்பையும்... கலகலவென்று சிரித்து பேசுவதையும்  ரசித்துக் கொண்டிருந்தான்..

சிறிது நேரத்தில் தங்கராசும்,  கண்ணம்மாவும் வந்துவிட,  மதிய விருந்து கலகலப்பாக முடிந்தது..

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு பெரியவர்கள் கிளப்பிவிட நளனும் தமயந்தியை வீட்டிற்கு போகலாம் என்று அழைத்தான்..

அவளிடம் இன்னும் தனியாக பேசி இருக்கவில்லை அவன்..

அதனால் இன்று அவள் நல்ல மூடில் இருக்கிறாள்..இன்றே தன் மனதில் இருப்பதை சொல்லி விட வேண்டும் என்று அவன் உள்ளே துடிக்க,  அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றான்..  

ஆனால் அவளோ தன் நட்பு வட்டத்தை விட்டு வர மனமில்லாமல்,  முகத்தை பாவமாக  வைத்துக் கொள்ள,  தங்கம் அதை கண்டு கொண்டவள் தன் மருமகனை பார்த்து

“தமா... இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கட்டும் நளா...” என்றாள் தயக்கத்துடன்...

“ஹ்ம்ம் அதுக்கில்ல அத்த... நாளைக்கு நான் லண்டன் கிளம்பனும்.. இன்னும் பேக்கிங் ஆரம்பிக்கவே இல்ல.. வீட்டுக்கு போயிட்டுதான்  எல்லாம் எடுத்து வைக்கணும்.. அதுக்குத்தான்.. “  என்று தயக்கத்துடன் இழுத்தான்..

அதைக் கேட்டதும் தங்கத்துக்கு என்னவோ போல் இருந்தது..

அவசரமாக திருமணம் முடிந்து,  அதற்குள் அவன் கிளம்ப வேண்டியதாக இருக்கிறது என்று வருத்தமாக இருக்க

“ஏன் டா கண்ணா.. இன்னும் ஒரு வாரம் தங்கி விட்டு போலாமில்ல...”  என்றார் கவலையுடன்..

“இல்ல அத்த... நான் முன்னாடியே ரிட்டர்ன் டிக்கெட் போட்டுட்டேன்.. அதை மாற்றினால் இன்னும் அதிக செலவாகும்.. அதில்லாமல் எனக்கு லீவ் ம் முடிந்து விட்டது.. நாளை மறுநாள் ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணனும்..

தயாவுக்கும் இன்னும் ரெண்டு நாளில் எக்சாம் இருக்கு.. அவளும் நாளைக்கு காலேஜ் போகணும்.. நான் இங்க இருந்து என்ன செய்ய போறேன்..நான் போயிட்டு இன்னும் ஆறு மாதத்தில் வந்து விடுகிறேன்.. “  என்று தங்கத்தை சமாதானம் செய்தான்..

தமயந்தியும் அவன் நாளை லண்டன் போவதைப் பற்றி சொல்லி கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தாலும்,  எதுவும் சொல்லவில்லை..  

தன்னை போக வேண்டாம் என்று அவள் சொல்லுவாள் என்று ஒரு சிறு எதிர்பார்ப்பு அவன் உள்ளே..

ஆனால் அவளோ அதை கண்டு கொள்ளாமல்,  எதிர்த்த வீட்டு சின்ன பசங்களுடன் பல்லாங்குழி விளையாண்டு கொண்டு இருந்தாள்.

அதை கண்டு சிறு ஏமாற்றம் அவன் உள்ளே..

ஆனாலும் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டவன்

“சரி அத்த... அப்ப நான் கிளம்பறேன்.. தயா இங்கயே இருக்கட்டும்.. அப்புறமா மாமாவ கொண்டு வந்து வீட்ல விட  சொல்லுங்க. நான் போய்  பேக்கிங் பண்றேன்.. “  என்று சொல்லி கிளம்பினான்..  

கிளம்பும் பொழுது கன்னியம்மா வை பார்க்க சென்றான்..  

“நான் வர்ரேன் அப்பத்தா... உடம்ப நல்லா பாத்துக்கோங்க.. ஜாக்கிரதையா இருங்க.. “  என்று சொல்லி கட்டிலில் நீட்டி வைத்திருந்த அவர் காலை தொட்டு வணங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றான்..

அவரோ தன் முகத்தை நொடித்தவாறு மறு பக்கம் திரும்பி கொண்டார்..

அவனும் தோளை குலுக்கி விட்டு மீண்டும் ஒரு முறை தன்னவளை பார்த்து ரசித்து விட்டு கிளம்பி சென்றான்...

******

டுத்த நாள் காலையில் எழும்பொழுதே நளனுக்கு மனம் பாரமாக இருந்தது..  

ஏதோ கெட்டது நடக்கப் போவதை போல ஆழ்மனம்  சொல்லிக் கொண்டே இருந்தது..

ஆனால் அது என்னவென்று அவனுக்கு சரியாக தெரியவில்லை.. இன்னும் கொஞ்சம் தலையை தட்டி ஆழ்ந்து யோசிக்க அப்பொழுதுதான் தன் மனைவியை விட்டு பிரிந்து செல்கிறோம் என்ற அந்த வேதனை புரிந்தது அவனுக்கு..

முன்பெல்லாம் லண்டன் செல்லும் பொழுது இந்த மாதிரி இருந்ததில்லை அவனுக்கு..  

தன் சொந்தங்களை விட்டுச் செல்லும் சிறு கவலை இருக்கும்.. ஆனால் மனதை இப்படி பாரமாக வைத்து அழுத்தியதில்லை..உயிர் வரை சென்று வலித்ததில்லை...

ஆனால் இன்று ஏனோ அவனுக்கு லண்டன் செல்ல மனமே இல்லை..

ஏதோ எல்லோரையும் விட்டு தனியாக செல்வதைப் போல மனதை பிசைய செய்தது.. அதுவும் அவன்  மனதில் இருந்ததை இன்னும் அவளிடம் சொல்லியிருக்கவில்லை..

நேற்று எப்படியாவது அவளிடம் தன்னை பற்றி தன் காதலை பற்றி சொல்லி விடலாம் என்று முயற்சி செய்ய அவளும் மதிய விருந்துக்கு சென்றவள்  அவள் வீட்டிலேயே இருந்து விட்டாள்..

நளன் அவளை விட்டு விட்டு வீட்டிற்கு வந்தவுடன் எல்லாம் அடுக்குவதில் பிசியாகி விட அடுத்து சிங்காரம் தமயந்தியை ஒன்பது மணிக்குத்தான் அவன் வீட்டிற்கு அழைத்து வந்தார்..

வந்தவள்  சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் தன் அத்தை மாமாவிடம் கதை அடித்துக் கொண்டு இருந்தவள்  தூக்கம் வருவதாக சொல்லி கண்ணம்மாவின் அறைக்குச் சென்று படுத்து விட்டாள்..

அவள்  இங்கு வந்ததிலிருந்து கண்ணம்மா உடன்தான் உறங்குகிறாள்..

அதே மாதிரி இன்றும் அங்கே சென்று படுத்துக் கொள்ள,  நளனுக்கு தவிப்பாக இருந்தது..

அட்லீஸ்ட் இன்று ஒருநாள் இரவு அவள் தன்னுடன் இருப்பாள்.. தன் அருகில் இருப்பாள்.. அப்பொழுது அவள் கையை  பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவன்  மனதில் இருக்கும் காதலை எல்லாம் அவளிடம் கொட்டி  விட வேண்டும் என்று என்று ஆவலுடன்  எதிர்பார்த்து இருக்க,  அவளோ முந்தைய நாட்களைப் போல இன்றும்  வேறு அறையில் சென்று படுத்து விட்டாள்..

அவனுக்கோ எப்படி அவளை தன் அறைக்கு வரச் சொல்லுவது என்று யோசனையாக இருந்தது..

“சே.. இந்த திரைப்படங்களில் வருவதை போல,  எனக்கு மட்டும் ஏன் இந்த பெருசுங்க ஃபர்ஸ்ட் நைட் ஒன்னும்  ஏற்பாடு செய்யவில்லை.. “  என்று பெரியவர்களை எண்ணி கோபமாக வந்தது அவனுக்கு..

வெட்கத்தை விட்டு அவனாக சென்று கேட்கவும் அவனுக்கு ஒரு மாதிரி சங்கோஜமாக இருந்தது..

அதனால் என்ன செய்வது என்று புரியாமல் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் நளன்..  

மணி பதினொன்றை தொட்டிருக்க, அந்த வீட்டில் எல்லோரும் நன்றாக உறங்கி இருக்க,  ஏனோ  நளனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை..

தன்னவள்,  தன் மனைவி அவன் அருகில் அவன் வீட்டிலேயே இருந்தும்  அவள் அருகில் செல்ல முடியாமல்...  அவளை கொஞ்ச முடியவில்லையே என்ற ஏக்கம்,  வருத்தம்,  கோபம் எல்லாம் கலந்து சுழற்றி அடித்தது அவன் உள்ளே..

அதற்கு மேல் அவனை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக தன் அன்னையின் அறைக்கு சென்றான்..

அங்கே தமயந்தி கண்ணம்மாவின் இடையை கட்டிகொண்டு,  அவர் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்..  

குழந்தை போல வெகுளித்தனமாக தன் அன்னையை கட்டிக் கொண்டிருந்தவளை பார்த்ததும்,  அவன் உள்ளே இருந்து புயல் கரையை கடந்தது போல அப்படியே நின்று போனது..

அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருக்கிறாள் என்ற உண்மை உறைக்க,  அவளை சிறிது நேரம் ரசித்து பார்த்தவன் மெல்ல அவள் அருகில் வந்து,  விலகியிருந்த போர்வையை நேராக இழுத்து போர்த்தி விட்டு அவளின் நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான்...  

கொஞ்சம் கூட காமம் இல்லாத வெறும் அன்பான அக்கறையான மொத்தம் அது..

அவள் முறைப்படி அவனுக்கு மனைவியான பிறகு தன்னவள் என்ற உரிமையில் அவன் பரிசளித்த முதல் முத்தம் அது..  

முன்பெல்லாம் எத்தனையோ முறை அவள் நெற்றியில் முத்தம்  வைத்திருக்கிறான்.. ஏன் அவள் கன்னத்தில் கூட முத்தமிட்டு இருக்கிறான்..

அது எல்லாம் அவள் தன் அத்தை மகள் என்ற அளவில் மட்டுமே..  

முதன்முறையாக அவள் தன் மனைவி என்று  உள்ளம் பூரிக்க,  இதழில் புன்னகை தவழ,  மீண்டும் ஒரு முறை குனிந்து மெதுவாக முத்தமிட்டான்..  

தூக்கத்திலும் அவனின் அந்த  மெல்லிய ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள் தூக்கத்திலயே இதழ் கொஞ்சமாக விரிய புன்னகைத்தவள்...  

முகத்தை செல்லமாக சிணுங்கி சுளிக்க, அவளின் அந்த சிணுங்கிய சுளித்த முகத்தையே தன் மனதில் பத்திரப் படுத்திக் கொண்டான் நளன்..  

பின் சிறிது நேரம் அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனது மனதில் இப்பொழுது பெரும் நிம்மதி வந்திருந்தது..

தன் அறைக்கு திரும்பி வந்தவன் கட்டிலில் படுத்து தலைக்கு அடியில் இரண்டு கையையும் மடித்து வைத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு யோசித்து கொண்டிருந்தான்..

சற்று முன் பார்த்த அவளின் குழந்தை தனமான முகமே கண் முன்னே வந்தது..

உடலால் வளர்ந்த குமரியாக நின்றாலும் மனதால் அவள் இன்னும் வளரவில்லை..கூடவே இன்னும் தன்னை கணவனாக ஏற்று கொள்ளவில்லை...

அதனால்தான்  நான் அவளை விட்டு பிரிந்து செல்வது அவள் மனதில் பாதிக்கவில்லை..எப்பவும் போல ஜோவியலாக எடுத்து கொண்டிருக்கிறாள்..

ஒரு வகையில் இதுவும் நல்லதுதான்..

இல்லை என்றால் அவளை பிரிய முடியாமல் நான் படும் வேதனை அவளுக்கும் இருந்திருக்கும்..என்னை காதலித்து இருந்திருந்தால் நான் அவளை விட்டு செல்வது நரக வேதனையாக இருந்திருக்கும்..

இப்படி பட்டாம்பூச்சியாக துள்ளி திரிந்திருக்க மாட்டாள்.. நல்ல வேளை. நான் என் காதலை சொல்லாததும் நல்லதுதான்.. இது பெரியவர்களுக்காக நடந்த அவசர கல்யாணமாகவே இருக்கட்டும்....

இன்னும் இரண்டு வருடம் இருக்கு அவள் படிப்பு முடிய.. அதுவரைக்கும் அவள் மனதில் எந்த சலனத்தையும் உண்டாக்க கூடாது..

அவள் படிக்கட்டும்.. படித்து முடிக்கட்டும்.. அதற்கு பிறகு அவளிடம்  என் காதலை சொல்லி,  அவளையும் லண்டன் அழைத்து சென்று,  எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து கொள்ளலாம்...

எப்படியோ என் மனைவி என்று ஆகிவிட்டாள்... அவளும் அதை மறுக்கவில்லை.. அப்படி என்றால் என்னை பிடித்துதான் ஏற்றிருக்கிறாள்..

ஆனால் மனைவியாக இன்னும் தயாராகவில்லை என்று குறிப்பாக காட்டி இருக்கிறாள்...

நான் அதை புரிந்து கொள்ளாமல் மடையனாக இருந்திருக்கிறேன்.. இருக்கட்டும்.. கிணத்து தண்ணியை வெள்ளம் வந்தா அடித்து சென்றுவிடும்??... அவள் என்னவள்.. எனக்கே எனக்கான என்னவள்..

இத்தனை வருடங்கள் பொறுத்தாகிவிட்டது..

இன்னும் இரண்டும் வருடம் மட்டுமே.. அதற்கு பிறகு என் காதலை அவளிடம் சொல்லி கொள்ளலாம்.. இப்போதைக்கு நான் அவளுக்கு மாமன் மகனாகவே இருந்து விட்டு போகிறேன்.. இதுதான் அவளுக்கு நல்லது.. “

என்று முடிவு செய்தவன் உதட்டில் புன்னகை மலர,  தன்னவளை நினைத்தவாறு நிம்மதியுடன் உறங்கி போனான்..

அவன் அறியவில்லை.. அந்த நாள்... அவன் காதலை சொல்ல காத்திருக்கும் அந்த நாள் என்றும் அவன் வாழ்வில் வரப்போவதில்லை என்று...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!