தேடும் கண் பார்வை தவிக்க-44

 


அத்தியாயம்-44

வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தி விட்டு உள்ளே வர, அப்பொழுதுதான் அவன் கையில் ஒரு பார்ஷல் இருந்ததை கவனித்தாள் தமயந்தி...

என்ன அது என்று யோசனையுடன் அழைப்பு மணியை அழுத்தினாள்.., கண்ணம்மா வந்து கதவை திறந்தவர் இருவரையும் ஜோடியாக பார்க்க அவர் மனம் நிறைந்து போனது..

சிரித்த முகமாக

"ரிஷி கண்ணா... வா வா.. " என்று அவனை வரவேற்க அவனும் சிரித்தவாறு உள்ளே வந்தவன்

"மா... இது சிக்கன் பிரியாணி.. உங்களுக்காக பார்ஷல் பண்ணிட்டு வந்தேன்.. சூடு ஆறுவதற்குள் சாப்பிடுங்க.. " என்று  அவர் கையில் கொடுக்க, அதை கண்டு திகைத்து போனார் கண்ணம்மா...

"என்னாச்சு மா.. ஏன் அப்படி பார்க்கறீங்க? " என்றான் ரிஷி

"ரிஷி கண்ணா... என்ற மவன் எப்ப வூட்டுக்கு வந்தாலும் எனக்கு மட்டும் சிக்கன் பிரியாணிதான் வாங்கி வந்து தருவான்.. அவன் அப்பாருக்கு வெளில வாங்கி சாப்பிடறது புடிக்காது.. ஆனால் எனக்கு இந்த பிரியாணினா உசுரு..

அதை புரிஞ்சுகிட்டு எப்ப வந்தாலும் டவுனுக்கு போறப்ப இதை  மறக்காமல் வாங்கி வந்துடுவான். இப்ப நீயும் அதே மாதிரி வாங்கி வந்திருக்கவும் அவன் நினைப்பு வந்துடுச்சு.. " என்று கண்ணோரம் கரித்த நீரை முந்தானையால் துடைத்து கொண்டார்...

தயாவுக்கும்  திகைப்பாக இருந்தது..

அவள் கூட அத்தை  பத்தி யோசிக்கவில்லையே.. இவன் அவருக்காக பார்ஷல் செய்துட்டு வந்திருக்கானே என்று அவனுக்கு கண்களால் நன்றி சொன்னாள்..

சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி செல்ல, கண்ணம்மாவோ ரிஷியை புகழ்ந்து தள்ளினார் தயாவிடம்..

அவளோ அதை எல்லாம் வெறும் ம் போட்டு கேட்டு கொண்டாள்.. 

ரு வாரம் ஓடி இருந்தது..

அடுத்த ஒரு வாரம் ரிஷி எவ்வளவு வேலை இருந்தாலும் இரவு படுக்கைக்கு போகும் முன் தினமும் கண்ணம்மாவை ஒரு முறை அழைத்து பேசி விடுவான்..

தமயந்தி அருகில் இருந்தால் அவளிடம் கொஞ்ச நேரம் பேசுவான்.. இல்லை என்றால் அவளை தொந்தரவு செய்யவில்லை..

அவளும் அவளுடைய பைனல் செமஸ்டர் ப்ராஜெக்ட் ல் பிசியாகி இருந்ததால் ரிஷியை பெரிதாக கண்டு கொள்ளவில்லை..

அந்த வார விடுமுறையில் ஞாயிற்றுகிழமை தமயந்தி தலைக்கு சேம்பு போட்டு குளித்திருக்க, கண்ணம்மா அவள் முடிக்கு சாம்பிராணி போட்டு சிக்கு எடுத்து அவளை அமர வைத்து தலை வாரி கொண்டிருந்தார்..

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவளாக தன் அத்தையை அண்ணாந்து பார்த்தவள்

“அத்தை... அடுத்த வாரத்தோடு என் காலேஜ் முடியுது.. ப்ராஜெக்ட் சம்மிட் பண்ணிட்டா அவ்வளவுதான்.. அப்பனா இந்த மாசத்தோட நாம ஊருக்கு போய்டலாமா? “ என்றாள்

அதை கேட்டு கண்ணம்மாவுக்கு தூக்கி வாரிப்போட்டது..

இதை பற்றி யோசித்திருக்கவில்லை அவர்...

ரிஷியிடம்  தமயந்தியை  திருமணம் செய்து கொள்ள சொல்லி இருக்க ரிஷியும்  அவளிடம் தன் காதலை சொல்லி யாசிக்க, அவளுக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டாள் என்று வருத்தத்தோடு கண்ணம்மாவிடம் சொல்லி இருந்தான்..

”அவள் படிப்பு முடியட்டும் மா.. அதுக்கு பிறகு மீண்டும் இதை பற்றி பேசலாம்.. என்னைக்கு இருந்தாலும் அவதான் என் பொண்டாட்டி.. அவ மனசுல இன்னும் பழைய வேதனை அப்படியே இருக்கு.. அது கொஞ்சம் ஆறட்டும் அவளுக்கு.. “ என்று சொல்லி விட்டான்..

கண்ணம்மாவுக்கும் இந்த பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தயக்கமாக இருந்தது.. ரிஷி அடிக்கடி பேசினாலும் இங்கு வந்து போனால் ஒருவேளை இவ மனசு மாறலாம் என்று எண்ணி இருக்க, இவளோ திடீரென்று  ஊருக்கு போகலாம் என்கிறாளே என்று திடுக்கிட்டு போனார்...

“என்ன அத்தை? எதுவும் பேச மாட்டேங்கிறிங்க.. நீங்கதான் இந்த பட்டணம் வேண்டாம்.. நம்ம ஊருக்கே போய்டலாம் னு சொன்னிங்க.. அதான் இந்த மாசத்தோட ஊருக்கு போய்டலாமா? வைவாக்கு நான் திரும்ப வந்துக்கறேன்.. “ என்றாள் தன் அத்தையின் முகத்தை ஆராய்ந்தவாறு..

முன்பெல்லாம் அவர்கள் ஊருக்கு போகலாம் என்று சொன்னால் உடனே பளிச்சென்று ஆகிவிடும் அவர் முகம்..

என்னதான் சென்னையில் இருந்தாலும் கண்ணம்மாவுக்கு அவங்க ஊர்தான் பிடிக்கும்...நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க முடியாமல் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டபட்டார்..

எப்படியோ அது பழகிவிட்டது.. ஆனாலும் தங்கள் ஊரை பார்த்து, அங்கயே தங்கி விட வேண்டும் என்பது கண்ணம்மா ஆசை.. அதனாலயே தமயந்தியும் படிப்பை முடித்ததும் அவள் மாமா ஆசைபட்ட மாதிரி விவசாயத்தை பார்க்கலாம் என்று  முடிவு செய்திருந்தாள்..

கூடவே அவள் அப்பத்தா கன்னியம்மாவும் இன்னும் கிராமத்தில் தங்கி இருக்கிறார்..... அவர் மகன் மற்றும் மருமகளின் இழப்பு பெரிதும் அவரை மாற்றி விட்டது..

அவரிடம் இருந்த அந்த அகங்காரம் தற்பெருமை ஆணவம் எல்லாம் அழிந்து விட்டது..

தன் பேத்தி வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று மருகி மருகியே கட்டிலில் விழுந்து விட்டார்.. ஆனாலும் தன் பேத்திக்கு ஒரு நல்ல வாழ்வு அமைய வேண்டுமே என்று  உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார் ..

அதனால் விடுமுறை நாட்களில் கண்ணம்மாவும் தமயந்தியும் அவர்கள் ஊருக்கு சென்று விடுவர்.. கண்ணம்மா சொன்னதால்தான் தமயந்திக்கும் படிப்பை முடித்ததும் அவள் சொந்த ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தாள்..

வழக்கமாக முகம் மலரும் தன் அத்தை யோசனையுடன் இருப்பதை கண்டவள்

“என்னாச்சு அத்தை.. உங்க முகம் யோசனையா இருக்கு? ஊருக்கு போகலாம் இல்ல “ என்றாள் தமயந்தி யோசனையாக..

அதற்குள் அவசரமாக யோசித்தவர்

“தமா குட்டி... இன்னும் கொஞ்ச நாள் இங்கயே இருக்கலாமே... “ என்றார் தயக்கத்துடன்..

அதை கேட்டு திகைத்தவள்

“என்னாச்சு அத்தை.. நீங்கதான் ஊருக்கு போய்டலாம்னு சொன்னிங்க.. அதுக்குள்ள இந்த சென்னையை பிடித்துவிட்டதா? நீங்களும் சென்னை வாசி ஆய்ட்டிங்களா? இந்த ஊரை பிரிஞ்சு வர முடியலையாக்கும்.. “ என்று சிரித்தாள்..

“வந்து.... ரிஷி தம்பி என்மேல ரொம்ப பாசமா இருக்கு டா செல்லம்....  எனக்கும் அவனை   பார்க்கிறப்ப அப்படியே நம்ம நளனை பார்க்கிற மாதிரியே  இருக்கு... அவனை விட்டு போகணுமேனு இருக்கு..

பாவம் அவனுக்கும் அப்பா அம்மா இல்லாம ரொம்ப கஷ்டபடறான்..அதான் நாம கொஞ்சம் ஆறுதலா இருக்கலாமேனு..... இன்னும் ஒரு ஆறு மாசம் இங்கயே இருக்கலாம் தமா குட்டி.... “ என்றார்..

“அத்தை... அவர் எவ்வளவு பெரிய கோடிஸ்வரர் தெரியுமா?  நம்ம கூட ஏதோ ஒரு வேகத்துல பழகறார்.. அதனால் அவர் மீது ரொம்ப அட்டாச்ட் ஆ இருக்காதிங்க அத்தை..

அவங்க எல்லாம் எப்ப வேணாலும் மாறலாம்..அப்புறம் உங்களுக்குத்தன் மனசு கஷ்டபடும்.. “

“இல்லடா செல்லம்.. ரிஷி அப்படிபட்டவன் இல்லை.. பணத்தை பெருசா மதிக்கிறவன் இல்லை... பாசத்துக்க்காகத்தான் ஏங்கறான்...

எனக்கும் அங்க போனா நம்ம குடும்ப ஞாபகமாவே இருக்கும்.. அதுவும் நளன் குரல் கேட்டுகிட்டே இருக்கிற மாதிரியே இருக்கும்...

அதனால் அங்க போய்  தினம் தினம் பழசை நினைச்சு வேதனை பட்டுகிட்டு இருக்கறதுக்கு இங்கயே இருந்திடலாமே.. “ என்றார் தவிப்புடன்..

அவள் தன் அத்தையை யோசனையாக பார்க்க

“ஒரு ஆறு மாசத்துக்கு தான் தங்கம்.. அப்புறம் நம்ம ஊருக்கு போய்டலாம்.. “ என்று  சமாதான படுத்த முயனறார்...

அதற்குள் எப்படியாவது ட்ஹன் மருமகளின் மனதை மாற்றி விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்..  

“ஹ்ம்ம்ம்ம் சரி அத்தை.. உங்களுக்கு அங்க பிடிக்கலைனா இங்கயே இருந்துக்கலாம்... “ என்று தன் அத்தையின் கன்னத்தை கிள்ளி சிரித்தாள்..

கண்ணம்மாவும் இணைந்து சிரித்தவர்  

“தமா குட்டி.. வந்து... நான் சொல்றதை  தப்பா எடுத்துக்க கூடாது.. “  என்று  பீடிகை போட்டவர்

“ரிஷி உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் னு சொல்றான் செல்லம்... பார்க்க நல்ல பையனாதான் இருக்கான்... உனக்கு எல்லா விதத்திலயும் பொருத்தமா இருப்பான்... “

என்று  அவர் முடிக்கும் முன்னே அத்த என்று அலறியவாறு வெடுக்கென்று  அவர் கையில் இருந்த தன் தலைமுடியை  பிடுங்கி கொண்டு எழுந்து நின்றவள்

“அத்த.. என்ன சொல்றிங்க..?  எனக்குத்தான்  ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே.. ஒரு பொண்ணுக்கு ஒரு தரம் தான் கல்யாணம் ஆகும்..என்னை பொறுத்தவரை எனக்கு எப்பயோ கல்யாணம் ஆகிடுச்சு.... நளன் மாமாதான் என் புருஷன்..

இன்னொரு தரம் எனக்கு கல்யாணம் னு பேசாதிங்க.. “ என்று கண்ணகியாக முழங்கினாள்..

உடனே அவள் கைபிடித்து இழுத்து அமர வைத்தவர் 

“கோபப்படாம நான் சொல்றதை கேளு தமா குட்டி..எனக்கு என்னவோ ரிஷி வடிவத்தில் நளன்தான்  வந்திருக்கிறான் னு  தோணுது.. 

உனக்கு உன் ஆத்தா  நளதமயந்தி கதை எத்தனை தரம் சொல்லி இருக்கா.. உன் ஆத்தா அந்த கதைய சொல்லி சொல்லியே உன்னை வளர்த்தினா..நளன் சின்ன வயசுலயே அந்த கதையைத்தான் திரும்ப திரும்ப அவன் அத்தை கிட்ட கேட்பான்...

நீங்க ரெண்டு பேரும் அந்த நளதமயந்தி மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தரா பிரியத்தோட வாழோணும்னுதான் உங்க ரெண்டு பேருக்கும் நளன் தமயந்தினு பேர் வச்சா..

அந்த கதையில வர்ற நளனும் தயந்தியும் ஆதர்ஷ தம்பதிகளாகத்தான் வாழ்ந்தாங்க... நளன் நாட்டை எல்லாம் இழந்து வனவாசம் போனப்ப, தன் கணவனை விட்டு பிரியாமல் அவன் கூடவே காட்டுக்கு சென்றாள் தமயந்தி..

ஆனால் தன் மனைவி மேல பிரியமா இருந்த நளன் அவள் கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அவன் கூட அலைந்து திரிந்து அவள் கஷ்டபடுவது தாங்க முடியாமல்  நளன் தமயந்தியை விட்டு பிரிந்து சென்று விடுவான்..

தமயந்தி தன் அப்பா ராஜ்ஜியத்துக்கே சென்று விடுவாள்.. ஆனாலும் தன் புருசனை தேடி கொண்டெ இருந்தாள்..

அப்பதான் நளன் சனீஸ்வரனின் சதியால் கார்கோடன் ன்ற பாம்பு தீண்டி விட அவன்  உடல் நிறம் மாறி கருப்பாகி போய்விட தேரோட்டியாவும் சமையல்காரனாவும் ஒரு ராஜ்ஜியத்தில் வேலைக்கு சேர்ந்தான்...

அவன் சமையல் அவ்வளவு அமிர்தமா இருக்குமாம்.. அதனால்தான் நளபாகம் என்று சொல்லுவார்கள்..  

அது மாதிரி தன்னை மறைத்து கொண்டு தன் மனைவி நன்றாக வாழ வேண்டும் என்று அவள் கண் முன்னே வராமல் ஒளிந்து கொண்டான் நளன்..அவளும் விடாமல் எல்லா இடத்திலும் தேடி கொண்டிருந்தாள்..

கடைசியில் தமயந்தி தன் கணவன் மீது வைத்திருந்த உண்மையான அன்பால்  மாறுவேடத்தில் இருந்த தன் புருஷனை கண்டு கொண்டாள்..

இந்த கதையை நான் ஏன் சொல்றேனா, இப்ப நளன்,  ரிஷி என்ற உருவத்தில வந்திருக்கிறான் செல்லம்..

எனக்கு  பல நேரம் ரிஷியின் குரலும் தோற்றமும் அப்படியே நளனை போலவே இருக்கும்..என்னை கூப்பிடுவது கூட அப்படியே நளன் மாதிரியே இருக்கும்..

உனக்கு ஒன்னு தெரியுமா தங்கம்.. உன் மாமா ரிஷியை பார்த்து இருக்கான்..”  என்று ரிஷி நளனை பார்த்த கதையை சொன்னவர்

“நளனுக்கு எப்படியோ அவன் விதி முடிய போகிறது தெரிந்திருக்கிறது செல்லம்.. அதனால் தான் அன்னைக்கு உன்னை விட்டு போக அப்படி தவித்தான்...

யாரிடமும் சொல்லாமல் என்னை மட்டும் அழைத்து உன்னை பார்த்துக்க சொல்லிபோட்டு போனான்..

அதே நேரம் உன் போட்டோ ரிஷியின் கையில் கிடைக்கிற மாதிரி செஞ்சிருக்கான்.. ரிஷிதான் உன்னை நல்லா பார்த்துக்கணும்னுதான் அப்படி செஞ்சிருக்கான்....

இல்லைனா ரிஷிக்கும் அவன பெத்தவங்கள எதுக்கு அதே ப்ளைட்ல பறி கொடுக்கோணும்? முகம் தெரியாத உங்க ரெண்டு பேரையும் ஒரே நாள் ல ஏன் லண்டனுக்கு வரச்சொல்லி இழுக்கோணும்..

நீங்க ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க வச்சு அதுவும் உனக்கு எந்த கஷ்டமும் வராமல் உன்னை பத்திரமா நீ போகவேண்டிய இடத்துக்கும் ரிஷி மூலமா உன்னை சேர்த்திருக்கான் உன் மாமன்...

இப்பவும் உன் மாமன்தான் ரிஷி மூலமா உன்னை சுத்தி வர்றான் டா செல்லம்... இல்லைனா அவ்வளவு பெரிய கோடிஸ்வரன் உன்னை விட அழகும் வசதியும் இருக்கும் எத்தனை பொண்ணுங்க அவனை கட்டிக்க ரெடியா இருந்தும் உன்னைத்தான் கட்டிக்குவேன் னு அடம்புடிச்சிகிட்டு இருக்கறானே..

இதுல இருந்தே தெரியல... ரிஷி மனசு பூரா நீதான் இருக்கடா செல்லம்.. அவன் வேற யாரும் இல்ல.. உன் நளன் மாமன்தான்

அப்பதான் நீ அவனை கட்டிகிட்டு சந்தோஷமா  வாழ முடியாம போய்டுச்சு.. இப்ப வந்திருக்கிறவனயாவது  ஏத்துகிட்டு சந்தோஷமா வாழுடா செல்லம்.. தயவு செஞ்சு ரிஷியை கய்லாணம் பண்ணிக்கடா தங்கம்.. அப்பதான் உன் மாமன் ஆத்மா சாந்தி அடையும்..

உன் மாமன்  மட்டும் இல்ல.. உன்னை பெத்தவ அந்த தங்கத்துக்கும் அப்பதான் நிம்மதியா இருப்பா.. இன்னை வரைக்கும் உனக்காத்தான் உன் ஆத்தா உருகி கிட்டு இருப்பா..

அவ ஆத்மா சாந்தி அடையவாது நீ நல்லா வாழோணும் தங்கம்..ரிஷியை கட்டிக்கடா... “  என்று கண்களில் நீர் திரள தழுதழுத்தவாறு தன் மருமகளின் கையை பிடித்து கொண்டு கெஞ்ச அவளோ

“அத்த.. நீங்க ஆயிரம் கதை சொன்னாலும் எனக்கு புருஷன் னா  என் மாமா மட்டும்தான்.. அதை யாராலும் மாத்த முடியாது..என் கழுத்துல இன்னொரு தரம் தாலி ஏறாது..

இந்த முடிவை யாராலும் மாத்த முடியாது.. நானே நினைச்சாலும் தான்.. அத்தை.. உங்க பேச்சை இதுவரைக்கும் நான் தட்டியதில்லை.. ஆனால் இந்த விசயத்தில் என்னை அப்படி நடந்து கொள்ள வச்சிடாதிங்க..

இந்த பேச்சை இதோட விடுங்க...”  என்று கொதித்தவள் தன் முடியை அள்ளி முடிந்து கொண்டு தன் அறைக்கு வேகமாக சென்றவள் கதவை அறைந்து சாத்தி கொண்டாள்..

அதை கண்ட கண்ணம்மா அதிர்ந்து போனார்..தான் சொன்னால் புரிஞ்சுக்குவா.. தன்னை மீறி எதிர்த்து பேசமாட்டா..எப்படியும் பேசி அவள் மனதை மாற்றிவிடலாம் என்று இருந்த ஆசையில் மண் விழுந்ததை போல திடுக்கிட்டார்...  

“ஐயோ. இப்படி குதிக்கிறவளை எப்படி சம்மதிக்க வைக்கிறது..? ரிஷியும் இவள் சம்மதித்தால்தான் கல்யாணம் னு சொல்லிட்டானே... இவளை எப்படி சம்மதிக்க வைப்பது?  

ஐயா நளா...என்ற குல வாரிசே...நீ ஒருத்தன் போனதால நம்ம ரெண்டு குடும்பமுமே சிதஞ்சு போய்டுச்சே... என்ற  மருமவ இப்படி சின்ன வயசுலயே வாழ்க்கைய தொலச்சுபுட்டு பட்ட மரமா நிக்கறாளே..

இதை பார்க்கவா நீ அப்படி ஆசை ஆசையா அவளை கண்ணாலம் கட்டின? என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது..  நீதான் என்ற மருமவளுக்கு ஒரு வழிய காட்டோணும்..

தெய்வமா இருந்து  அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கோணும்..எல்லாம் உன் கையில விட்டுபுட்டேன்..நீ பாத்துக்க எல்லாம்...“ என்று தன் மகனிடம் மானசீகமாக வேண்டி கொண்டார் கண்ணம்மா.......

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!