தேடும் கண் பார்வை தவிக்க-47


 

அத்தியாயம்-47

ரிஷி அவளிடம் தன் காதலை சொல்லி யாசிக்க, அவளோ அவள் மாமனைத்தான் இன்னும் காதலிப்பதாக சொல்லி அவனை நிராகரித்து விட உள்ளுக்குள் உடைந்து போனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளுடன் நல்ல நண்பனாக பழகி வந்தான் ரிஷி..  

கண்ணம்மா ரிஷியை  திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த அதையும் மறுத்து விட்டாள் தமயந்தி.. அதன்பிறகு அவள் கல்லூரி வேலையில் பிஸியாகி விட, அவர்களும் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டனர்..

அவளின் ப்ராஜெக்ட் சப்மிஸ்ஸன் முடிந்து வைவா வும் முடிந்து விட  அவளுடைய கல்லூரியும் முடிந்து போனது.. அப்பொழுது தான் மீண்டும் கண்ணம்மா அவளின் திருமண பேச்சை ஆரம்பித்தார்..

இதற்கு இடையில் தினமும் இரவு நேரம் ரிஷி அவர்கள் இருவரிடமும் சிறிது நேரம் அழைத்து பேசிக் கொண்டிருப்பான்..

அவனுடன் பேசிய இந்த கொஞ்ச நாளில் மனம் மாறி இருப்பாள் என்று திரும்பவும் பேச்சை ஆரம்பிக்க அன்று சொன்ன அதே டயலாக்கை சொல்லி கண்ணம்மா வாயை அடைத்து விட்டாள் தமயந்தி..  

கண்ணம்மாவும் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டே இருந்தார்..  

ரு நாள் அதிகாலையில் கண்ணம்மாவுக்கு அழைப்பு வந்தது.. அவசரமாக தன் கைபேசியை எடுத்துப் பேச அதில் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியானார்..

அப்பத்தா கன்னியம்மா எப்படியோ கட்டிலிருந்து தவறி விழுந்து இப்பொழுது சீரியஸான நிலையில் இருப்பதாகவும்  தன் பேத்தியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பதாகவும் அருகில் இருந்தவர்  போன் பண்ணி சொல்ல,  அதிர்ந்து போனார் கண்ணம்மா..

அடுத்து என்ன செய்வது என்று கண்ணம்மாவுக்கு புரியவில்லை.. இங்கிருந்து பஸ் பிடித்துப் போனால் எப்படியும் ஏழு எட்டு  மணி நேரம் ஆகும்..  என்ன செய்யலாம் என்று யோசித்த அடுத்த நொடி ரிஷியை அழைத்திருந்தார்..

அவனும் அவர் சொன்ன செய்தியை கேட்டு அடுத்த அரைமணி நேரத்தில் தன் காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்..

காரிலேயே ஊருக்கு சென்று விடலாம் இது வேகமாக போகும் என்று சொல்லி கண்ணம்மா மற்றும் தமயந்தியை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்துவிட்டான்..

கன்னியம்மாவும் கட்டிலில் படுத்தவாறு வாயிலையே ஏக்கத்துடன் பார்த்திருக்க கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் ஆவலுடன் பார்வை வாயிலுக்கு சென்றது..

அதே நேரம் ரிஷியும் தமயந்தியும் ஜோடியாக வீட்டிற்குள் ஒன்றாக கால் எடுத்து வைத்து உள்ளே வர கன்னியம்மாவுக்கு அந்த நொடி மனம் நிறைந்து போனது..

கண்களில் ஒரு வித புது ஒளி வந்து போனதை தமயந்தியும் கண்டு கொண்டாள்.. இதுவரை ஒரு வெறித்த பார்வையும் சோகமான பார்வையுமாய் இருந்த தன் அப்பத்தா கண்ணில் வந்து போன புதுவித ஒளியை கண்டதும் புரியாமல் வேகமாக அவர் அருகில் ஓடிச் சென்றாள் தமயந்தி..

அவரும் தன் பேத்தியின் கன்னம் வருடி ஆசை தீரப் பார்த்துக் கொண்டவர் சற்று தள்ளி நின்றிருந்த ரிஷியை பார்வையால் அழைத்தார்.. அவனும் வேகமாக அருகில் வந்தவன்

“எப்படி இருக்கீங்க அப்பத்தா.. பாத்து கவனமா இருந்திருக்கலாம் இல்லை..  இப்படி கீழ விழுந்துட்டீங்களே..  கவலைப்படாதீங்க... சீக்கிரம் சரியாயிடும்.. “  என்று அவர்  கையைப் பிடித்துக்கொண்டு குனிந்தபடி சொல்ல அந்தக் குரலைக் கேட்டு கன்னியம்மா திடுக்கிட்டார்..

“அந்த  குரல்...  அதே குரல்..  அவனுடையது அல்லவா..  தன் பேத்தியை ஆசை ஆசையாக மணந்து ஒரே வாரத்தில் அவளை தவிக்க விட்டு சென்ற அவனுடைய குரல் ஆச்சே.. “  

என்று திகைத்தவர் அவசரமாக அருகில் நின்று கொண்டிருந்தவனை கண்களை சுருக்கி ஆராய்ந்தார்...

ஒருவேளை அவன்தான்  வந்துவிட்டானோ  என்று ஏக்கம் ஆர்வம் அவர் பார்வையில்.. பார்வையை சுழற்றி ரிஷியை தாண்டி நாலா பக்கமும் தேட காணவில்லை அவன்..

அதற்கு பிறகு கண்ணம்மாவும் அருகில் வந்து அவரை நலம் விசாரிக்க, அவர் முகத்தில் ஏதோ ஒரு விரக்தி புன்னகை..

“என் பேத்திக்கு ஒரு நல்ல வாழ்வு அமையும்வரை நான் என் உசுரை விட்டுவிட மாட்டேன் கண்ணம்மா.. “ என்றார் கண்களில் வழியும்  நீருடன்..

தமயந்தி அவசரமாக குனிந்து அவர் கண்ணில் வழிந்த நீரை துடைத்து விட, ரிஷியும் பரிவுடன் அவரையே பார்த்து இருந்தான்...

அவனின் கம்பீரமான தோற்றத்தையும் தன் பேத்தியின் அருகில் உரிமையுடன் நெருங்கி நின்றவனையும் கண்டு கண்ணம்மாவிடம் ஜாடையில் ஏதோ கேட்க, கண்ணம்மாவும் ஆமாம் என்று கண்ணால் பேசினார்..

கண்ணம்மா ரிஷியை பற்றி முன்பே அப்பத்தாவிடம் சொல்லியிருக்கிறார்..  கூடவே முன்பு கன்னியம்மா அடிக்கடி சொல்வதை போல பெரிய பங்களா நாலு கார்..கோடி கோடியாக சம்பாதிக்கும் பெரிய கோடீஸ்வரன் தன் பேத்தியை தேடி வந்து   கட்டிக்கிட்டு போவான் என்று சொல்லி மாய்ந்து போவார்..

“அதேபோல அந்த கோடீஸ்வரன் ராஜகுமாரன் உங்க பேத்தியை தேடி  வந்துவிட்டான் மா.. ஆனா உங்க பேத்தி தான் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாள்.. “  என்று   முன்பே கன்னியம்மா விடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார்

அதைக்கேட்டதும் முதலில் மனம் பூரித்துப் போனார் கன்னியம்மா.. தன் பேத்திக்கு எப்பேர்பட்டவன் மாப்பிள்ளையா வர இருக்கிறான் என்று பெருமை பூரித்தது..

ஆனால்  அடுத்த நொடியில் நளனின் சிரித்த முகம் கண்முன்னே வர உதட்டில் ஒரு விரக்தி புன்னகை..

“காசு பணம் இருந்து என்ன செய்வது?  மனுஷங்க உயிர் எப்ப வேணாலும் போய் விடும் நிலையில் காசையும் பணத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது..?

வாழவேண்டிய சின்ன வயசில் அந்த பய எதையும் அனுபவிக்காம எல்லாத்தையும் விட்டுபோட்டு போய் சேர்ந்துட்டானே.. “  என்று  விரக்தியாக சிரித்தார்..  

அந்த ஆக்சிடென்ட்... ஒரே நாளில் தன் மகனையும் மருமகளையும் பேத்தி புருஷனையும் பறிகொடுத்த விபத்து அவருக்கு வாழ்க்கையில் நல்ல ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டது..

அதனால் ரிஷியின் வசதி வாய்ப்பை பற்றி பெரிதாக எண்ணாமல் தன் பேத்தியை நன்றாக பார்த்துக் கொள்வானா  என்றுதான் முதலில் கேட்டார்..

“அப்படித்தான் மா.. தமா பொண்ணு மேல உசிரையே வைத்திருக்கிறான்..”  என்று ரிஷியை பற்றி இன்னும் புகழ்ந்து சொல்ல கன்னியம்மாவுக்கு மனம் பூரித்துப் போனது..

இன்று அவனையே நேரில் காண அவனை அருகில் அழைத்தவர் கன்னம் வருடி

“என் பேத்தியை நல்லா பாத்துக்குவியா ராசா ? “ என்று ஏக்கத்துடன் கேட்க, அவர் கையை பிடித்து கொண்டவன்

“கண்டிப்பா அப்பத்தா... அவளை என்கிட்ட கொடுத்துடுங்க.. என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்.. “ என்று தவிப்புடன் புன்னகைத்தான்..

அதற்கு  பிறகுதான் அவர் மனதில் அந்த  திட்டம் உருவானது..

ரிஷியும் தமயந்தியும் அறைக்கு சென்று இருக்க, கண்ணம்மாவை அழைத்து  இவர்கள் இருவருக்கும் எப்படியாவது திருமணத்தை பண்ணி வைத்துவிட வேண்டும் என்று  சைகையால் சொல்ல  கண்ணம்மாவும் ஆமோதித்தார்..

அதன் விளைவாக அடுத்த நாள் கன்னியம்மா வை  பார்க்க வந்த மருத்துவர் அனைவரையும் அழைத்து அவருக்கு ஆயுட்காலம் இன்னும் ஒரு வாரம் தான்.. அதற்குள் அவர் ஆசையை எல்லாம் நிறைவேற்றி வைத்து விடுங்கள்..”  என்று சொல்லி விட்டுச் சென்றார்..

அதை கேட்டு அதிர்ந்த  தமயந்தி  வேதனையுடன் தன் அப்பத்தா அருகில் வந்து

“உனக்கு என்ன ஆசை அப்பத்தா ? “ என்று  தழுதழுத்த படி கேட்க அவரும்

“உனக்கும் அந்த பட்டணத்து தம்பிக்கும் கல்யாணம் பண்ணி பாக்கோணும் தாயி.. அதுதான் எனக்கு கடைசி ஆசை...  இந்த கிழவியோட கடைசி ஆசையை நிறைவேத்துவியா? என்று கையெடுத்து கும்பிட அதை கேட்டு தமா ஆடிப் போய்விட்டாள்..

“மறுபடியும் கல்யாணமா?  அதுவும் முன்பு மாதிரி தன் அப்பத்தாவை காப்பாற்ற, அவர்  கடைசி ஆசையை நிறைவேற்ற திரும்பவும் இன்னொரு கல்யாணமா? அதெல்லாம் என்னால் முடியாது.. “  என்றும் மறுத்து சொன்னாள்..

ஆனால் அப்பத்தா ஆரம்பித்ததை கண்ணம்மாவும் பிடித்துக்கொண்டு அவளுக்கு எடுத்துச் சொன்னார்.. அவளோ முடியவே முடியாது என்று மறுத்து விட அதன் பிறகு தான் ரிஷி அவளை தனியாக அழைத்து பேசினான்..  

“தயா..  உன் அப்பத்தா உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும் னு தான ஆசைப்படுது.. அவங்க ஆசையை நிறைவேற்றாமல்  போனால் பின்னால் உனக்கு பெரிய குற்ற உணர்வாக இருக்கும்..

அந்த கஷ்டம் உனக்கு வேண்டாம்..  பேசாம நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா? “ என்று ஆவலுடன் கேட்க,  அவளோ ஒரு வெறிக்கும் கோப பார்வையை அவன் மீது செலுத்தினாள்..

“ஹே தயா பொண்ணு.. அதுக்குள்ள என்னை கண்ணாலயே எரிச்சு சாம்பலாக்கிடாத.. நான் சொன்னது வெறும் பொம்மை கல்யாணத்தை..

அவங்க ஆசைக்காக நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் மத்தபடி எப்பவும் போல ப்ரெண்ட்ஸா இருக்கலாம்...நான் உன்னை எந்த விதத்திலயும் தொந்தரவு செய்ய மாட்டேன்..

எனக்கும் கண்ணம்மா அம்மா என் பக்கத்திலேயே இருப்பாங்க.. அவங்களுக்கும் என்னை பார்த்தால் ஒரு ஆறுதல்.. நாம எல்லாம் ஒரே வீட்டிலயே இருக்கலாம்.. யோசிச்சு பாரு.. இந்த கல்யாணத்தால்  எத்தனை பேருக்கு நல்லது என்று... “

என்று இன்னும் ஏதேதோ பேசி கடைசியில் அவளை சம்மதிக்க வைத்து விட்டான்..

அடுத்த இரண்டே நாளில் முகூர்த்த நாள் இருப்பதால் திருமணத்தை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டனர்..

ரிஷி தன் உதவியாளன் விஷ்ணுவை பொள்ளாச்சிக்கு வரச் சொல்ல அவனும் ஓடிவந்து எல்லா பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான்..  

அதிகமாக யாரையும் அழைக்காமல் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் சொல்லியிருந்தனர்.. ரிஷி அவன் சார்பாக விவேக் மற்றும் ரோஜாவுக்கு மட்டும் அழைப்பு விடுத்தான்..  

சென்னைக்கு சென்ற பிறகு பெரிய வரவேற்பு வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டவன் இரண்டே நாளில் அசுர வேகத்தில் எல்லா ஏற்பாட்டையும் செய்து முடித்து இதோ காலையில் அவள் கழுத்தில் தாலியை கட்டி முறைப்படி அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான்..  

அதையெல்லாம் நினைத்து பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது..

“எது எப்படியோ?   என் மான்குட்டி..எனக்கே எனக்காக என்னவள் ஆகிவிட்டாள்.. மெல்ல மெல்ல அவள் மனதை ஜெயித்து அவளை என் மனதார மனைவியாக்கிக் கொள்ள வேண்டும்.. “  என்ற எண்ணியவனுக்கு  மனம் நிறைந்து நின்றது..

உதட்டில் நிறைவான புன்னகை மலர, தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தவளின் முன் உச்சி நெற்றியில் மெல்ல இதழ் பதித்தான் அவள் துயில் கலையாமல்...

தே நேரம் கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் அருகருகே அமர்ந்து இருந்தனர் விவேக் ம் ரோஜாவும்..

ரிஷியின் திருமணத்தை முடித்துவிட்டு ரோஜாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சியின் அருகில் இருந்த வால்ப்பாறைக்கு சென்றிருந்தனர்.. ரோஜாவுக்கும் அது தேவையாக இருந்தது..

வெளியில் சிரித்து கொண்டிருந்தாலும் அவள் மனதில் அரித்துகொண்டிருந்த வலி வேதனையை அறிந்தவன் விவேக் என்பதால் அவனால் முடிந்தவரை ரோஜாவை சிரிக்க வைத்து கொண்டிருந்தான்..

மலர்ந்த ரோஜாவை போல மலர்ந்து சிரித்து கொண்டிருப்பவள் இப்படி வாடி துவண்டு போய் கிடந்தவளின் முகத்தை பார்க்க மனதை பிசைந்தது.. அவன் மனம் தானாக அந்த நிகழ்ச்சியை அசை போட்டது..

சென்ற வாரம் ஒரு நாள் விவேக் ஐ அழைத்து இருந்தாள் ரோஜா... அவனும் அவளை காணும் ஆவலில் ஒரு வித துள்ளலுடன் சென்றான்.. அவளோ சோகமாக  ஒரு புகைப்படத்தை காட்டி

“விவா.... எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பாத்து இருக்கிறார்.. அடுத்த வாரம் என்னை பொண்ணு பார்க்க வர்றாங்களாம்.. சது கிட்ட சொல்லி அவனை வந்து பொண்ணு கேட்க சொன்னால் அவன் தயங்கறான்..

கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் னு நழுவறான்..எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை..நீதான் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..

இந்த மாப்பிள்ளையை பற்றி விசாரித்து ஒரு ரிப்போர்ட் கொடுக்கணும்.. அதுவும் கொஞ்சம் மாற்றி கேரக்டர் சரியில்லை னு மாத்தி கொடுக்க முடியுமா? “ என்றாள் தவிப்புடன்..

“ஹ்ம்ம்ம் அப்படி எல்லாம் மாத்தி கொடுக்க முடியாது ரூப்ஸ்.. அது என் தொழிலுக்கு செய்யும் துரோகம்..

உனக்காக அந்த மாபியை பத்தி விசாரிக்கிறேன்..உன் நல்ல நேரம் அவன் இயல்பிலயே கொஞ்சம் மாதிரினா அதையே ரிப்போர்ட் ஆ கொடுத்துடலாம்...

இல்லையா நீ அவனை பார்த்து பேசி உன் நிலைமையை எடுத்துச்சொல். .அவனாகவே உன்னை வேண்டாம் என்று சொல்ல வைத்து விடலாம்... சியர் அப்...

இதுக்கெல்லாம் இப்படி மூஞ்சை தொங்க போட்டுக்கலாமா? நீ முதல்ல உன் சதுகிட்ட பேசி சீக்கிரம் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல். எத்தனை பேரை இப்படி அவாய்ட் பண்ண முடியும்.. “ என்று அறிவுறுத்தினான்..

அவளும் கொஞ்சம் தெளிந்து விட, நிம்மதியுடன் விடை பெற்று சென்றாள்..

டுத்த இரண்டே நாளில் விவேக் அவளை ஒரு காபி ஷாப் பிற்கு அழைத்து இருந்தான்... அவளும் சென்றிருக்க,

“ஹே ரெட் ரோஸ்.. உனக்கு ஒரு குட் ந்யூஸ்.. ஒரு பேட் ந்யூஸ்... எது முதல்ல சொல்லட்டும்? “ என்று கண் சிமிட்டி சிரித்தான்.. அவன் உற்சாகம் அவளையும் தொற்றி கொள்ள,

“குட் ந்யூஸ் பர்ஸ்ட்.. “ என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் நீ கேட்டுகிட்ட மாதிரியே அந்த மாபியோட டீடெய்ல்ஸ்...நல்ல சம்பளம்.. நல்ல வசதி என்றாலும் கொஞ்சம் தண்ணி கேஸ்.. ஏற்கனவே லவ் பெய்லியர்.. “ என்று இன்னும் அவன் வரிசை படுத்த அதை கண்டு துள்ளி குதித்தாள் ரோஜா..

ஆனால் அவள் மகிழ்ச்சி உற்சாகம் எல்லாம் அடுத்து வரும் செய்தியில் பறிபோக போவதை அறியாமல்...

“வாவ்.. தேங்க்யூ சோ மச் விவா. இது போதும்.. இதை அப்பாகிட்ட கொடுத்தா போதும்.. இந்த மாபி யை தூக்கி போட்டுவிடுவார்.. “ என்று ஆர்பரித்தவள்

“சரி.. அது என்ன பேட் ந்யூஸ்... ? “ என்றாள் கண்கள் பளபளக்க....

அதை கேட்டு சற்று தயங்கியவன்

“ரெட் ரோஸ்.. இதை கேட்டு நீ மனசு உடைந்து விடக்கூடாது.. எதையும் டேக் இட் ஈஸியா எடுத்துக்கணும்.. ப்ராமிஸ்.. ?

என்று கை நீட்ட அவளும் யோசனையுடன் அவன் கை மீது கை வைத்தவள் அவனை பார்க்க தன் பேக்பேக்கில் இருந்து இன்னொரு பைலை எடுத்தான்..

அதை அவள் முன்னே வைக்க, அவளோ இது என்ன என்று கண்ணால் வினவ

“இது...  ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரி ஆஃபர் ரெட் ரோஸ்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான்.. இல்லை அப்படி சிரிக்க முயன்றான்..

“வாட்? ஃப்ரி ஆஃபர் ஆ?  என்னது அது? “ என்றாள் குழப்பத்துடன்..

“படித்து பார்..”  என்று அந்த பைலை அவள் புறம் நகர்த்த அதை எடுத்து திறந்தவள் அதிர்ந்து போனாள்..

சதிஸ் என்று கொட்டை எழுத்தில் போட்டு இருக்க, அவனை பற்றிய தகவல்கள் அதில் இருந்தன..

அதை கண்டு அதிர்ந்தவள்

“வாட் நான்சென்ஸ் திஸ் விவா? நான் சதுவை பற்றி விசாரிக்க சொன்னேனா? எதுக்காக இந்த தேவை இல்லாத வேலை..” என்று எரிந்து விழுந்தாள்..

“ஹே சில் ரோஸ்... இது நானா ஒரு ஆர்வக்கோளாறுல உன் ஆளை பத்தி தெரிஞ்சு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் னு செய்தேன்.. ஆனால் ரிசல்ட் தான் நான் எதிர்பார்த்த மாதிரி வரலை... “ என்றான் வருத்தமாக..

“வாட்? ஏன் என்னாச்சு? “ என்று  தவிப்புடன் பார்க்க, புரட்டி பார் என்று கண்ணால் சொல்ல, அவளும் அந்த பைலை புரட்டினாள்..

அடுத்த பக்கத்திலயே சதிஸ்,  அவள் சது வேற ஒரு பொண்ணுடன் நெருக்கமாக நின்று சிரித்து கொண்டிருந்தான்.. அதை கண்டு அதிர்ந்து போனவள் கோபத்துடன் விவேக் ஐ முறைத்தவள்

“இடியட்.. நீ எவ்வளவு நல்லவன் னு நினைச்சேன்.. எதுக்கு இப்படி என் சதுவை பற்றி தப்பா என்கிட்ட காட்டற? ஓ... அப்பதான் நான் அவனை விட்டுவிட்டு உன்கிட்ட வருவேனா..

அதான் உன் கண்ணுல அப்பப்ப என்னை பார்த்தாலே டால் அடிக்குமே.. அதுக்குத்தான் இந்த ப்ராட் ரிப்போர்ட் ஆ..?  சீ நீ இப்படி சீப் ஆ இருப்பேனு நினைச்சு கூட பார்க்கலை.

உன்னை போய் என் பெஸ்ட் ப்ரெண்ட் ஆ நினைச்சிருந்தேனே...எனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்.. “ என்று பொரிந்து தள்ளினாள்..

அந்த கடையில் இருந்தவர்கள் திரும்பி இவர்களை பார்க்க, அமைதியாக அவள் திட்டியதை கேட்டிருந்தவன் அவள் கை மீது கை வைக்க, உடனே வெடுக்கென்று தன் கையை உருவி கொண்டாள்..

“ரோஸ்.. என்று ஆரம்பிக்க

“கால் மி ரோஜா... “ என்றாள் எரிக்கும் பார்வையில்

“ஒகே.. ஒகே.. கூல் ரோஜா..ஒரு நிமிஷம் நான் சொல்லுவதை பொருமையா கேள்.. ப்ளீஸ்.. அப்புறம் நீ என்னை திட்டு ..அடி..இந்த ரிப்போர்ட் பொய் இல்லை ரோஜா.. நான் அப்படி செய்ய மாட்டேன்.. நான் முன்பே சொன்ன மாதிரி அது என் தொழிலுக்கு செய்யும் துரோகம்..

அந்த சதிஸ் நல்லவன் இல்லை..அவனுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.பேஸ்புக் ல் ப்ரெண்ட் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக அவங்க மனசை மாத்தி காதல் வலையில் விழ வைத்து அவர்களை அடைவதுதான் அவன் நோக்கம்..

இது பணத்துக்காக செய்வதில்லை.. அது ஒரு ஹாபி போல..நீ அவனுடன் பழகிய நாட்களை நினைத்து பார்.. காதலை தாண்டி அவன் உன்னை அடைவதில் குறியாக இருந்திருப்பான்..

அதற்காகத்தான் அடிக்கடி உன்னை வெளியில் அழைத்து செல்வது.. நல்ல ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்து கொண்டிருக்கிறான்.. நல்ல வேளையாக நீ ஸ்ட்ராங்காக தெளிவாக இருப்பதால் அவனால் உன்னை நெருங்க முடியவில்லை..

ஒரே அறையில் தங்கிய பொழுதும் நீ அவனை உன்னிடம் நெருங்க விடவில்லை.. அதனால் இன்னும் கொஞ்சம் காலம் கனிய காத்திருக்கிறான்.. நன்றாக நினைத்து பார். அப்படி பல நிகழ்வுகள் நடந்திருக்கும்.. “

என்று சொல்ல ரோஜாவும் அதிர்ந்து போய் அவசரமாக திருப்பி பார்த்தாள்..

விவா சொன்னது 200% கரெக்ட் தான்..

நிறைய முறை தாபத்துடன் அவளிடம் நெருங்கி இருக்கிறான்..

காதலில் இதெல்லாம் சகஜம் என்பதால் அவள் வித்தியாசமாக எடுத்து கொள்ளாமல் ஆனால் அதே நேரம் திருமணத்திற்கு பிறகுதான் அதெல்லாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி, அவனை எல்லை தாண்டாமல் தடுத்து வைத்திருந்தாள்..

நிறைய நேரம் இதற்காகவே அவளிடம் கோவித்து கொண்டும்  இருந்திருக்கிறான்.. ஆனால் அவள் தெளிவாக சொல்லிவிட்டாள்.. திருமணத்திற்கு பிறகுதான் எல்லாம் என்று..

இதுவரை எத்தனையோ முறை அவள் திருமணத்திற்கு வற்புறுத்தியும் அவன் அவசர படவேண்டாம் என்று  தள்ளி போட்டது நினைவு வந்தது..

“அப்படி என்றால் ??  விவா சொல்வது உண்மையா? “ என்று  யோசிக்க விவேக் ம் தன் அலைபேசியை  காண்பித்தவன்

“லுக் ரோஸ்.. இதெல்லாம் அவன் வேற வேற பெயரில் உருவாக்கிய பேஸ்புக் அக்கவுண்ட்ஸ்..யாரும் பார்க்க முடியாமல் ப்ரைவசி செட் பண்ணி வச்சிருக்கான்.. நான் அதை ஹேக் பண்ணிட்டேன்..பார்.. “

என்று காட்ட ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பெயரில் ஒவ்வொரு பெண்ணுடனும் பழகிய,  சேட் பண்ணிய ஹிஸ்டரி எல்லாமே இருந்தது..

அதை கண்டு இன்னும் திடுக்கிட்டு போனாள்.. அப்படி என்றால் அவள் அவனுடன் உரையாடியதும் இருக்கும் தானே என்று பார்க்க அதுவும் இருந்தது அவன் அக்கவுண்டில்..

“ஓ மை காட்..இப்படி ஒருத்தனையா நான் காதலித்தேன் ? ” என்று தலையை பிடித்து கொள்ள, அவள் கையை மெல்ல அழுத்தியவன்

“ரிலாக்ஸ் ரோஜா.. உனக்கு இன்னும் நம்பிக்கை இல்லைனா நான் நேர்லயே கூட்டி போய் காண்பிக்கறேன்.. அவன் ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு ஷெட்யூல் வச்சிருக்கான்..

அவன் செல்லும் இடத்தை எல்லாம் இரண்டு நாட்களாக பாலோ பண்ணினேன்.. “  

என்று முடித்தவன் அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்று அழைத்து சென்றும் காட்டினான்..

அதை கண்டு வெறித்த ரோஜா அவனை என்ன செய்கிறேன் பார் என்று வெகுண்டு எழ, அவள் கையை பிடித்து தடுத்தவன்

“நான் சைபர் க்ரைமில் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டேன் ரோஸ்.. அவர்கள் இன்று மட்டும் அவனை பாலோ பண்ணி இன்று மாலை அர்ரெஸ்ட் பண்ண போறாங்க...

அவனை அவங்க பார்த்துக்குவாங்க.. நீ போய் இதில் இன்வால்வ் ஆக வேண்டாம்.. " என்று சொல்லி தடுத்து விட்டான்..

அதன் பிறகு இடிந்து போன அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை தேற்ற அவளோ அதன் பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் தவித்து போனாள்..

அந்த நிலையில் தான் ரிஷியின் திருமணம் என்று சொல்லி ரிஷி இருவரையும் அழைக்க,  அவளுக்கு ஒரு மாறுதலாக இருக்கட்டும் என்று  அவளை கட்டாயப்டுத்தி அழைத்து கொண்டு பொள்ளாச்சி வந்திருந்தான்..

திருமணம் முடிந்ததும் அவளை எல்லா இடத்துக்கும் கட்டாயபடுத்தி அழைத்து சென்று காட்ட அவளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வர முயன்றாள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!