தாழம்பூவே வாசம் வீசு-2

 


அத்தியாயம்-2

ரு மாதம் முன்பு..

ஒரு சிறிய கோவிலின் திண்ணையில் காலை கீழ தொங்க விட்டவாறு ஏதோ யோசித்தவாறு  அமர்ந்து இருந்தான் பார்த்திபன்..

ஏனோ  மனம் எல்லாம் கசந்து வழிந்தது.. வாழ்க்கையையே வாழ பிடிக்காமல் வெறுப்பாக இருந்தது..

“இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? “என்று  யோசித்தவன் தன் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட் ஐ எடுக்க, அது காலியாக இருந்தது..

ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அதில் இருந்த கடைசி சிகரெட் ஐ இழுத்திருந்தான்...

மீண்டும் அந்த பாக்கெட் ஐ எடுத்து பார்த்தால் அது என்ன அமுத சுரபியா சிகரெட்  ஐ சுரந்து கொண்டே இருக்க..?  ஆத்திரத்தில் அந்த காலி  சிகரெட் பாக்கெட் ஐ தூக்கி எறிந்தான்..வேற ஒரு சிகரெட்  பாக்கெட் வாங்கலாம் என்று சட்டை பாக்கெட் ஐ தடவ நயா பைசா இல்லை..

“சே.. இதெல்லாம் ஒரு பொழப்பா? ஒரு சிகரெட் வாங்க கூட வக்கில்லை..அதுக்கு கூட ஆத்தா கையை எதிர்பார்த்துட்டு இருக்கியே.. நீயெல்லாம் உருப்படுவியா ?? நீயெல்லாம் வாழ்ந்து என்னத்த சாதிக்க போற ? “ என  தன் தங்கை  ஏசி கூறியது காதில் விழுந்தது இப்பொழுது நினைவு வந்தது....

“ஆமா.. மீனா சொன்ன மாதிரி நான் வாழ லாயக்கில்லாதவன்.. இந்த உலகத்துக்கு பாரமாக இருப்பவன்.. என்னால் யார்க்கு என்ன பயன்? ..பேசாமல் செத்து விடலாம் என்றால் அதுக்கும் தைர்யம் வர மாட்டேங்குது... சே.. என்ன பொழுப்புடா இது..  “ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டிருந்தான்..

கையில் கிடைத்த கற்களை பொறுக்கி ஒவ்வொன்றாக தூரத்தில் விசிறி கொண்டிருந்தான்..

அப்பொழுது ஒரு காவி கட்டிய சாமியார் நெற்றியில் பெரிய விபூதி பட்டையும் தலை முடி திரிதிரியாக வெறும் ஒரு காவியை மட்டுமே உடல் முழுவதும்  போர்த்தி கொண்டு அவன் அருகில் வந்து அமர்ந்தார்...

அவரை கண்டதும் அவசரமாக எழ முயன்றான் பார்த்திபன்.. உடனே அவன் கையை பிடித்து

“உட்கார் மகனே.. என்னை கண்டு என்ன பயம்.? அப்படியே உட்கார்.. “ என்று  சிரித்தார்..

பார்த்திபனும் மெல்ல தயங்கி அவன் எழுந்த இடத்திலயே மீண்டும் அமர்ந்தான் அவரை ஒரு மாதிரி பார்த்தவாறு..

“என்ன அப்படி பார்க்கிறாய்? நானும் ஒரு காலத்தில் உன்னை மாதிரி இப்படி கோவில் திண்ணையில் உட்கார்ந்து இருந்தவன் தான்.. ஏதோ என் அப்பன் புண்ணியத்தில் இப்ப வயிற்றை கழுவ முடியுது.. “ என்று பெருமூச்சு விட்டார்...

அவரை கண்டதும் பார்த்திபனுக்கு நாக்கு ஒட்டி கொண்டது.. எதுவும் பேச நா வரவில்லை... அவரையே பார்த்து கொண்டிருந்தான்..

அவர் தோளில் மாட்டி இருந்த பையில் இருந்த வாழைப் பழத்தை எடுத்து அவனுக்கு ஒன்றை கொடுத்து தானும் ஒன்றை வைத்து கொண்டு அதன்  தோலை உரித்தார்..

அவன் தயக்கத்துடன் அந்த பழத்தை  கையில் வைத்து கொண்டே அவரையே பார்த்து இருக்க

“தயங்காமல் சாப்பிடு மகனே.. நம்மிடம் இருப்பதை எப்பவும் பகிர்ந்து உண்ண வேண்டும்.. இன்று நீயும் என்னுடன் இருப்பாய் என்று தெரிந்தே என் அப்பன் இரண்டு பழத்தை எனக்கு கொடுத்திருக்கான்..

எனக்கு ஒன்னு போதும்.. மீதிய உனக்கு தருகிறேன்.. சாப்பிடு..நீயும் பசியோடுதான் இருப்பாய்... “ என அன்பாக கூற மந்திரத்துக்கு கட்டுண்டவனை போல அந்த பழத்தை உரித்து சாப்பிட்டான்..

அவரும் அந்த பழத்தை சாப்பிட்டபின் அவர் பையில் இருந்த சோழிகளை எடுத்து உருட்டி போட்டு எதை எதையோ நகர்த்தி பார்த்தவர் முகம் மலர அவனிடம் திரும்பியவர்

“பார்த்திபா... உனக்கு நல்ல காலம் பொறக்க போகுது.. இப்போதைய உன் நிலையை நினைத்து கவலைப் படாத மகனே... இன்னும் ஒரு மாதத்தில் உன் க்ஷ்டத்தை  எல்லாம் போக்கி பாலைவனமாக வரண்டு இருக்கும் உன் வாழ்வை வசந்தமாக்க ஒரு தேவதை வரப் போகிறாள்...

அவள் வரும் பொழுது அவளை விட்டு விடாமல் அவளையே கெட்டியாக பற்றி கொள். உன் வாழ்வை அவள் வசந்தமாக்குவாள்.. நீயும் மற்றவர்களை போல சந்தோஷமாக வாழ்வாய்.. “ என்று சொல்லி சிரித்தார்..

அதை கேட்டு பார்த்திபன் அதிர்ந்து அமர்ந்தான்.

“சாமி.. என் பெயர் எப்படி உங்களுக்கு தெரியும்.? நான் இதுவரை உங்களை முன்ன பின்ன பார்த்ததே இல்லையே..” என்றான் ஆச்சர்யமாக..

“ஹா ஹா ஹா  அது வந்து...  எல்லாம் எனக்கு தெரியும் மகனே.. அது எப்படி என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ண கூடாது.. நான் சொல்வதை மட்டும் நினைவில் கொள்.. எந்த நிலையிலும் நம்பிக்கையை விட்டு விடாதே.. உன் தேவதைக்காக நீ காத்திரு...” என்று சொல்லி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்து  எழுந்து சென்றார்..

ன்று அவர் சொன்னதை இன்று நினைத்தவன் தன் கையில் இருந்த அந்த குட்டி தேவதையை காண அன்று அந்த சாமியார் சொன்னது நடந்து விட்டதை போல இருந்தது அவனுக்கு..

அதுவரை இருண்ட அவன் வாழ்வில் விடி வெள்ளியாக சின்ன வெளிச்ச புள்ளி ஒன்று அவன் கண்ணுக்கு தெரிந்தது...

அந்த சிறு புள்ளியை கண்டதுமே உள்ளுக்குள்  துள்ளி குதித்தவன் தன் கையில் இருந்த தேவதையை மீண்டும் பார்க்க, அந்த குட்டியும் அவனையே பார்த்து கொண்டிருக்க, அதை கண்டு மீண்டும் பரவசமானான்...

அவன் இதயம்  பல மடங்கு சந்தோஷத்தில்  எகிறி குதித்தது..

அப்பொழுது அந்த லேபர் வார்டின் அறைக் கதவு திறக்க உள்ளே இருந்து ஒரு 58  வயதை நெருங்கும் அந்த அம்மா வெளியில் வந்தார்..

பார்ப்பதற்கு தெய்வ கடாட்சபம் நிறைந்து பார்த்த உடன் கையெடுத்து கும்பிட தோன்றும் கருணையான கண்களும் எப்பொழுதும் சிரிக்கும் முகமாக இப்பொழுதும் அவனை பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு வெளியில் வந்தார்... 

அவர் தோற்றத்தை  வைத்து அவர் தான் இந்த குட்டி தேவதையை இந்த உலகுக்கு கொண்டு வந்த பெரிய டாக்டர் என புரிய கொஞ்சம் பயம் கொஞ்சம் மரியாதையுடன் அவரையே பார்த்தவாறு ஒதுங்கி ஓரமாக  நின்று  கொண்டான் பார்த்திபன்..

வெளியில் வந்த சுசிலா ஒதுங்கி நின்றவனை கண்டு அவன் அருகில் சென்றவர்

“தங்க விக்கிரகம் மாதிரி பொண்ணு பிறந்திருக்கா பா... இவளை நல்லா பார்த்துக்கோ..உனக்கு என்ன உதவினாலும் தயங்காமல் என்கிட்ட கேள்.. காட் பிளஸ் யூ மை சன்..” என்று அவன் தலையில் கை வைத்து வாஞ்சையுடன் தடவி சென்றார்..

அவனோ ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியில் நன்றி சொல்லக் கூட நா எழாமல் அப்படியே நின்றிருந்தான்..

என்ன பார்த்திபா ?  இப்ப சந்தோஷமா..??  மேடம் எவ்வளவு பெரிய டாக்டர் தெரியுமா? .. அவங்களே இந்த குட்டிக்கு பிரசவம் பார்த்திருக்காங்க .. நீ கொடுத்து வச்சவன்..” என்று சிரித்தாள் அந்த செவிலி..

அவனும் முதல் முறையாக தன் இதழ்களை பிரித்து புன்னகைத்தான்..

“நல்லாதான் சிரியேன்.. சிரிப்பதற்கே காசு கேட்ப போல..சரி.. சரி... உன் பொண்டாட்டியை ரூம்  க்கு மாத்தியாச்சு.. நீ போய் 108 ரூம் ல பார்.. இன்னும் கொஞ்சம் நேரம் மயக்கத்தில இருக்கும்.. அப்புறம் கண் விழிச்சிடுவாங்க.. “ என்று சொல்லி நகர்ந்தாள்..

அவனும் அந்த குழந்தையை கையில் ஏந்தி கொண்டு அந்த செவிலி சொன்ன அறையை நோக்கி நடந்தான்..

அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கு படுக்கையில் துவண்ட கொடி போல கிடந்தாள் அவள்...

வெள்ளை வெளேரென்று பால் வண்ணத்தில் வெகுளியான குழந்தைதனமான முகத்துடன் கண் மூடி படுத்து  இருந்தாள்..

தன் மகளை இந்த உலகுக்கு வெளி கொண்டு வர, கடந்த இரண்டு மணி நேரமாக போராடிய களைப்பிலும் மயக்க மருந்தின் தாக்கத்திலும் இப்பொழுது கண்ணை மூடி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்...

அவளை பார்க்க அவன் மனதை பிசைந்தது..

அவளுமே உறக்கத்திலும்  முகத்தில் வேதனையை சுமந்து இருக்க, அந்த வேதனையை போக்கி அவளை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் போல துடித்தது அவன் உள்ளே..

ஒரு கையில் அந்த குட்டியை பிடித்து கொண்டு மறு கையில் அவள் தலையை மெல்ல வாஞ்சையுடன் வருட வர, அப்பொழுது அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்க உடனே முன்னால் நீண்டிருந்த தன் கையை இழுத்து கொண்டான்..

அதே செவிலிதான் மீண்டும் வந்திருந்தாள்..

"என்ன பார்த்திபா? உன் பொண்டாட்டியை பார்த்திட்டியா?

“ஆமா பெரியவங்க யாரும் இல்லையா? நீ ஒருத்தனா எப்படி இரண்டு பேரையும் பார்த்துக்குவ? உன் பொண்டாட்டிக்கு ஆபரேஷன் பண்ணி இருக்கிறதால நடக்க முடியாது..

தாயும் சேயும் பார்த்துக்க ஆள் வேணும்.. யாரும் கூட  வரலையா? என்ன லவ் மேரேஜா? 

நீ இருக்கிற கலருக்கு இப்படி வெள்ளை வெளேர் னு  தேவதை மாதிரி பொண்டாட்டி கிடைச்சிருக்கா பார்.. இது தான் அந்த ஆண்டவனின் முடிச்சு என்பது..ஹ்ம்ம்ம்  நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன் தான்... " என்று பெருமூச்சு விட்டு சிரித்தாள்..

அதை கேட்டதும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது பார்த்திபனுக்கு..

இதுவரை அவனை யாரும் அதிர்ஷ்டக்காரன் என்று சொல்லியதில்லை..

பார்ப்பவர்கள் எல்லாம் அவனை முரடன், காட்டான் , ரவுடி, துரதிஷ்டக்காரன் என்று தான் பாராட்டி இருக்கிறார்கள்..

முதல் முறையாக தன்னை அதிர்ஷ்டக்காரன் என்று  அழைத்த அந்த செவிலியை மகிழ்ச்சியுடன் நோக்கினான்... இதுக்கெல்லாம் காரணமான அந்த குட்டி தேவதையை மீண்டும் பூரிப்புடன் நோக்கினான்...

அவன் முகத்தில் வந்து போன கலவையான உணர்வுகளை கண்ட அந்த  செவிலி அவன் உள்ளுக்குள் ஏதோ மருகுகிறான் என புரிய , மேலும் அவனை கிண்டல் அடிக்காமல்

"சரி புள்ளைய இப்படி கொடு.. அதுக்கு பால் ஊட்டணும்.. அப்புறம் பெரியவங்க யாராவது இருந்தால் சீக்கிரம் வரச் சொல்..  “ என்று சொல்லி அந்த குட்டியை வாங்கி கொண்டு அவனை வெளியே அனுப்பினாள்.. 

அறைக்கு வெளியில் வந்த பார்த்திபனுக்கு அப்பொழுது தான்  நினைவு வந்தது...

"வர்ர அவசரத்துல இந்த ஹாஸ்பிட்டல் பெயரை சொல்லாம வந்திட்டனே... “ என்றவன் அவசரமாக தன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த சிறிய  நோக்கியா மொபைலை எடுத்தவன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பேப்ரை எடுத்து அதில் எழுதி இருந்த ஒரு எண்ணிற்கு அழைத்து தான் சொல்ல வேண்டிய செய்தியை  சொன்னான்..

மறுமுனையில் வேண்டா வெறுப்பாக மறுக்க, அவரிடம் கெஞ்சி  கூத்தாடி அவரை ஒத்துக்க வைத்தான்..கடைசியாக மறுமுனையில் இருந்தவரும் சரி என்று ஒத்துகொள்ள, அவருக்கு நன்றி சொல்லி அந்த அலைபேசியை அணைத்தான்...

மனம் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. அப்பொழுது தான் அவனுக்கு பசி வயிற்றை கிள்ளுவது தெரிந்தது.. மதியத்தில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருப்பதும்  நினைவு வந்தது

இத்தனை நேரம் தெரியாமல் இருந்த பசி இப்பொழுது தெரிய, மெல்ல கீழ இறங்கி அங்கிருந்த உணவகத்திற்கு சென்றான்.. அங்கு உணவும் இலவசமாக வழங்க படுவதை கண்டு ஆச்சர்யபட்டான்..

அந்த மருத்துவமனையின் உரிமையாளரை மெச்சி கொண்டு அவருக்கு மனதுக்குள் நன்றி சொல்லி,  முழு சாப்பாட்டை வாங்கி ரசித்து சாப்பிட்டான்.. 

நீண்ட நாட்களுக்கு பிறகு மனமும் வயிறும் நிறைந்ததை போல இருந்தது அவனுக்கு..

சிறிது நேரம் சென்றதும் அந்த குட்டி தேவதையின் சிரித்த முகம் கண் முன்னே வர,

“ஐயோ.. அவர்களை தனியாக விட்டு விட்டு வந்து விட்டனே.. “ என்று  புத்தியில் உரைக்க அவசரமாக மீதி சாப்பாட்டை அள்ளி கொட்டி கொண்டு கையை கழுவி கொண்டு மாடிக்கு ஓடினான்..

அறை எண் 108 ற்கு வேகமாக சென்றவன் அறையை அடைந்ததும் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே சென்றான்...

அங்கு பின் நாற்பதுகளில் இருக்கும் ஒரு பெண்மணி அந்த படுக்கையின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு அந்த குட்டி தேவதையை கையில் வைத்து கொஞ்சி கொண்டிருந்தார்..

“யார் இவர்? “ என்ற யோசனையுடன் அவர் அருகில் சென்றான் பார்த்திபன்..

இவனை பார்த்ததும் அவரும் இவன் யாரென்று புரியாமல்  புருவத்தை சுளித்தார்...

அவனுடைய கருகரு நிறமும், எண்ணெய் காணாத பரட்டை தலையும், சேவ் பண்ணாமல் அலங்கோலமாக இருந்த தாடி மீசையும் இடுங்கிய கண்களுமாக இருந்தவனை பார்க்க ரௌடி போல இருக்கவும் உள்ளுக்குள் திடுக்கிட்டார்...

அவன் போட்டிருந்த அந்த அழுக்கான காக்கி சட்டையை காணவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..  

பார்த்திபன் அவரை யோசனையாக பார்த்தவாறு அவர் அருகில் சென்றவன் அவர் கையில் இருந்த அந்த குட்டி தேவதையை மீண்டும் ஆசையாக  பார்த்தான்..

இவன் வருகையை உணர்ந்ததாலோ என்னவோ இவன் புறம் கண்களை சுழற்றினாள் அந்த குட்டி தேவதை..

அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்திருக்க, அதை கண்டவர் கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்து கொண்டு

“யாருப்பா நீ? “ என்றார் அந்த பெண்மணி யோசனையாக...

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அந்த குட்டியையே பார்த்து இருக்க, அதற்குள் மயக்கம்  தெளிந்திருந்த அந்த குட்டியின் தாயும் கண் விழித்திருக்க, அவளை பார்த்த அந்த பெண்மணி 

“சுமி.. யார் இவர்? “ என்றார் பார்த்திபனை கண்ணால்   சுட்டி காட்டி...

அவளும் அருகில் நின்றிருந்தவனை கண்டதும் கண்களை சுருக்கி பார்த்தவள் ஏதோ நினைவு வர,

“அம்மா... இவர்தான் என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்.. நான் பிரசவ வலி வந்து துடித்த பொழுது இவர் தான் தெய்வமா வந்து என்னை காப்பாற்றினார்...” என்று  பதில் அளித்தவள்

அவன் பக்கம் திரும்பி

“ரொம்ப நன்றி சார்... சரியான நேரத்தில நீங்க மட்டும் என்னை காப்பாத்தலைனா நானும் என் குழந்தையும்  இந்நேரம் உயிரோட இருந்திருக்க மாட்டோம்..” என்று  கண் கலங்கினாள்..

“ஓ.. நீங்க தான் பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணி  சொன்னிங்களா தம்பி.. ரொம்ப நன்றிப்பா.. இந்த காலத்துல உதவிக்கு பக்கத்துல இருக்கிறவங்களே வராதப்ப ஒரு ஆட்டோ ட்ரைவர் நீ முன் வந்து உதவி இருக்கியே...

நீ நல்லா இருக்கணும்.. உன்னால இன்னைக்கு இரண்டு உசுரு பொழைச்சிருக்கு..உனக்கு நாங்க ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கோம்.. “ என்று  தழுதழுத்தார்...

அவர் சொன்னதை கேட்டதும் தான் அவன் மண்டையில் உரைத்தது..

அவன் யாரென்றும் , அந்த குட்டி தேவதை  அவன் குழந்தை இல்லை.. கொடி போல துவண்டு கிடந்தவள் அவன் மனைவி இல்லை...அவன் அவர்களுக்கு யாரென்றே தெரியாத உறவினன் என்ற உண்மை..

அந்த உண்மை  மண்டையில் உரைக்க அதுவரை குமிழிட்டு பொங்கி கொண்டிருந்த உற்சாகம், பரவசம் எல்லாம் பொங்கி வரும் பாலில் நீர் பட்டதை போல உடனே அமைதியாகி போனது..

அந்த குழந்தையையே ஏக்கமாக பார்த்தான்..

இப்பொழுது அவளின் பாட்டி ஆம் பாட்டியாகத்தான் இருக்க வேண்டும்..அவர்  கையிலயே உறங்க ஆரம்பித்து இருந்தாள் அந்த குட்டி..

அவரும் அந்த குட்டியை பார்த்து புன்னகைத்து அந்த குழந்தையை முத்தமிட்டு அவர் அருகில் இருந்த தூளியில் போட்டார்...

அந்த நிலையில் அவர்களை பார்க்க அவனுக்கு தன் குடும்பத்தை பார்த்ததை  போல இருந்தது..

அவர்களை விட்டு பிரிய மனமே இல்லை...

ஆனால் அவன் எதுவும் பேசாமல் வெளியிலும் செல்லாமல் அங்கயே நின்று  கொண்டு இருந்ததை கண்ட அந்த பெண்மணி

“சரிப்பா.. எவ்வளவு ஆச்சு ஆட்டோவுக்கு ? “ என்றார் தன் கையில் இருந்த பர்ஸை திறந்தவாறு..

அதை கேட்டதும்  சுருக்கென்றது அவனுக்கு..

அதுவரை  மாய உலகில் சஞ்சரித்து வந்தவனை யாரோ அவனை பிடித்து கீழ தள்ளி விட்ட மாதிரி அரண்டு விழித்தான்..

அதற்குள் அவன்  சொல்லாமலயே ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு அவன் அருகில் வந்தவர்

“நல்ல நேரத்துல வந்து என் பொண்ணையும் பேத்தியையும் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றிப்பா. இந்தா இதை  வச்சுக்க.. “  என்று சொல்லி அந்த ரூபாய் நோட்டை அவன் கையில் திணித்தார்... 

அதை கண்டு திடுக்கிட்டவன்

“இல்லங்க.. காசெல்லாம் வேணாம்... வந்து... இந்த குட்டி  தேவதையை நல்லா பார்த்துக்கங்க.. “ என்றவன் உறங்குபவளையே சில நொடிகள் ரசித்து பார்த்திருந்தான்...

பின் மனமே இல்லாமல் நகர்ந்தவன் வாசலுக்கு சென்று மீண்டும் திரும்பி  வந்தவன்

“ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க..  “ என்றான்

அவன் அறை வாயிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்ததை கண்டு மிரண்டவர் தன்னை சமாளித்து கொண்டு

“ஹ்ம்ம் கண்டிப்பா தம்பி.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தார்..

அதற்கு பிறகும்  அங்கு நின்றால் அவரே கழுத்தை பிடித்து தள்ளினாலும் தள்ளி விடுவார் என தோன்ற, மனமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான் பார்த்திபன்..

வாயில் வரைக்குமே அந்த குட்டியையே திரும்பி பார்த்து கொண்டே சென்றான்..

ந்த மருத்துவமனையின் உள்ளே இருந்து வெளி வந்தவன் நேராக அங்கு பக்கவாட்டில் அந்த சிறிய கார்டனில் இருந்த அவன் நண்பன் கணேசனை  தேடி சென்றான்...

அந்த சிறிய கோவில் மண்டபத்தின் உள்ளே சென்றவன் கணேசன் முன்னே இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான்..

அந்த கணேசனோ  அவனை பார்த்து நக்கலாக சிரிப்பதை போல இருந்தது...

“டேய் பார்த்தா.... தேவையா உனக்கு.. யாரோ ஒருத்திக்காகத்தான் இவ்வளவு நேரமா இப்படி  உருகினியா? நான் கூட நீ என்கிட்ட கோவிச்சுகிட்டு இருக்கவும் உன்னை கண்டுக்காத அந்த சைக்கிள் கேப் ல கல்யாணத்தை பண்ணி வாழ்க்கையில செட்டில் ஆய்ட்ட னு இல்ல நினைச்சேன்...

நீ உருகி உருகி வேண்டறதை பார்த்ததும் அந்த பொண்ணு   உன் பொண்டாட்டினு இல்ல நினைச்சிட்டேன்...

அதான பார்த்தேன்.. உனக்கு முன்னாடி பிறந்த எனக்கே ஒரு பொண்ணு கிடைக்கலை...

இன்னும் பிரம்மச்சாரியா இருக்கேன்.. எனக்கு பின்னால் வந்த பொடி பயன் என் பிரண்ட் உனக்கு எப்படி அதுக்குள்ள பொண்ணு கிடச்சிடும்..

என்னை போல நீயும் கல்யாணம் ஆகாத கன்னி பையனாதான் சுத்தப் போற பார்த்தா... “ என்று சிரித்தான்..

“ஆமா... நான் இருக்கிற இருப்புக்குக்கு கல்யாணம் பண்ணாதது  ஒன்னுதான் கேடு ... அத விடு கணேசா... ஆனால் அந்த குட்டி பாப்பா... இல்ல இல்ல குட்டி தேவதை...  என்னை பார்த்து எவ்வளவு அழகா சிரிச்சுது தெரியுமா?

அப்படியே கண்ணுக்குள்ளயே இருக்குது ... அத விட்டு பிரிஞ்சு போவது தான் மனசுக்கு வேதனையா இருக்கு... “ என்று பெருமூச்சு விட்டான்..

“ஹ்ம்ம்ம் டோன்ட் வொர்ரி.. பி ஹேப்பி..நண்பா... என்கிட்ட வந்திட்ட இல்ல... இனி உன் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன்... என் ஆட்டத்தை பொறுத்திருந்து  பார்...”

என்று நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டவன் அவசரமாக சில கட்டங்களை போட்டு ஒரு திட்டத்தை தீட்டி  தன் ஆட்டத்தை ஆரம்பித்தான் அந்த தும்பிக்கையோன்...

அதை கண்ட அவன் தம்பி வேலன்

“ஆஹா.. எப்பவுமே நாமதான அடுத்தவங்க வாழ்க்கையில கேம் ஆடுவோம்.. இப்ப என் அண்ணனும் களத்துல இறங்கிட்டானே..!!. பார்க்கலாம் இந்த தடியன் எப்படி கேம் ஆடறானு..

மற்றவர்கள் ஆட்டத்தை பார்த்து ரசிப்பதும் ஒரு கிக் தான்... லெட்ஸ் வெய்ட் அன்ட் ஸீ.. “ என்று குறும்பாக சிரித்து கொண்டான் அந்த சிங்காரவேலன்...

தன் வாழ்க்கையில் அந்த  யானை முகத்துடையோன் புகுந்து கலக்க குழப்ப போவதை அறியாமல் அவன்  முன்னே அமர்ந்து கொண்டு ஏதேதோ சொல்லி புலம்பி கொண்டிருந்தான் பார்த்திபன்....!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!