தேடும் கண் பார்வை தவிக்க-52



 அத்தியாயம்-52

காரை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வீட்டிற்கு உள்ளே வந்தான் ரிஷி...

அவன் கார் உள்ளே வருவதை கண்டதுமே கண்ணம்மா சமையலறைக்குள்  சென்று அவன் அருந்துவதற்கு பழச்சாற்றை கொண்டு வந்தார்..  அவன்  உள்ளே நுழையவும்

“ரிஷி கண்ணா...  வா வா..  என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட...? “  என்று சிரித்தவாறே அவன்  அருகில் வந்தவர்

“நீ களைப்பா இருக்க கண்ணா.. இதை முதல்ல குடி.. “  என்று அவன் கையில் அந்த பழச்சாற்றை வைத்தார்..

அவனுக்கோ கண்கள் பனித்தது.. அவன் அன்னை இதே போல தான் செய்வார்.. சில நாட்களில் எவ்வளவு களைப்பாக வந்தாலும் எப்படித்தான் தெரியுமோ அவருக்கு..  சரியான நேரத்துக்கு இந்த மாதிரி குடிக்க என எதையாவது கொண்டு வந்து தந்திருப்பார்..

அவர் நினைவில் கண்கள் பனித்தன.. அவரை மெல்ல அணைத்துக்கொண்டு விடுவித்தவன்

“ரொம்ப தேங்க்ஸ் மா...  ஆமா தயா எங்கே? “ என்று கண்களால் தேடினான்..

“இன்னைக்கு ஃபுல்லா கும்பகர்ணி மாதிரி தூங்கிகிட்டே இருந்தா ..  இப்பதான் தோட்டத்து பக்கமா போனா.. அது சரி கண்ணா... கொஞ்ச நேரம் முன்னாடி அவ உன்கிட்ட என்னவோ கேட்டாளா? “ என்றார் அவன் முகம் பார்த்து யோசனையாக...

அவள் என்ன கேட்டாள் என்றது நினைவு வர, உடனே புரை ஏறியது அவனுக்கு... அவன் தலையை செல்லமாக தட்டியவர்

“பாத்து குடிப்பா.. இப்படி புரை ஏறுது பார்.. “ என்று செல்லமாக கண்டித்தார்.. அவனும் தன்னை சமாளித்து கொண்டு

“மா.. அவ உங்க கிட்ட ஏதாவது சொன்னாளா ? “   என்றான் சிறு வெட்கத்துடன்..  

“ஹ்ம்ம் உன்கிட்ட ஏதோ கேட்டேன் னு சொன்னா..  ஆனால் என்ன கேட்டா னு சொல்லல.. அவ எது கேட்டாலும் கொடுத்துடுப்பா..  இதுவரைக்கும் அவள்  கேட்டு  நாங்க யாருமே மறுத்ததில்லை...

அப்படியே பழகி விட்டாள்.. கொஞ்சம் அடம் ஜாஸ்தி.. அதனால் என்ன கேட்டாலும் கொஞ்சம் யோசிக்காம கொடுத்துடு... " என்றார் வெகுளியாக..

ரிஷியோ அவள் கேட்டதை எண்ணி உள்ளுக்குள் சிரித்து கொள்ள அதன் வெட்கம் அவன் முகத்திலும் படர்ந்தது.

தன் மகனின்  முகத்தில் வந்திருந்த அந்த வெட்கம் அவருக்கு புதிதாக தெரிந்தது... இதுவரை அவன் இப்படி வெக்கப்பட்டு பார்த்ததில்லை..

நெடுநெடுவென்று  ஆறடி உயரத்தில் வளர்ந்து நின்றிருந்தவன் முகத்தில் பூத்திருந்த அந்த வெக்க பூவை, அதில் மிளிரும் அவன் கண்களையே  ரசித்துக் கொண்டிருந்தவருக்கு  அப்பொழுதுதான் உறைத்தது.. 

இந்த வெட்கத்தின் பின்னே ஏதோ விஷயம் இருக்கு என்று..

எப்பொழுதும் ரிஷியை பற்றி விசாரிக்காத,  அவனை கண்டு கொள்ளாத தன் மருமகள் அதிசயமாக இன்று எழுந்து வந்ததும் ரிஷி எப்போ வருவான் என்று அவரிடம் விசாரித்ததும் எதுக்கு என்று கண்ணம்மா அவளிடம் கேட்க,

“எனக்கு ஒன்னு  வேணும் அத்தை. அதுக்குத்தான்..”  என்று அவளும் வெட்க பட்டு சிரித்தவாறு தோட்டத்துக்கு நழுவி சென்றிருந்தாள்..

அவர்கள் இருவர் முகத்திலும் தோன்றியிருந்த அந்த மாற்றம் எதையோ உணர்த்த அவரும் உள்ளுக்குள் மகிழ்ந்து போனார்... தன் மகனை பார்த்தவர்

“ரிஷி கண்ணா... தமா தோட்டத்துல தான் இருக்கா.. போய் பார்...”  என்று சிரித்தவாறு தன் மகனை தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார்...  

ஒரு வித துள்ளலுடன் தோட்டத்திற்கு சென்றவன் மனதில் என்றும் இல்லாத உற்சாகம் பொங்கி பெருகியது..

அதுவும் அவள் சற்றுமுன் அவனிடம் கேட்டதும் கூடவே அவனை உரிமையோடு டா போட்டு  அழைத்ததும் கண் முன்னே வர, அவன் இதழ்களில் பெரிய புன்னகை...

அந்த பெரிய தோட்டத்தில் எங்கிருக்கிறாள் என கண்களால் தேட அதற்கு அவசியமே இல்லாமல்  அடுத்த நொடி அவளின் வாசமே அவள் இருக்கும் இடத்தை சொல்லியது..

அங்கிருந்த ரோஜா செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தாள் தமயந்தி...

அங்கு பூத்து குலுங்கிய மலர்களின் நடுவில் அவளும் ஒரு ரோஜாவாய் ஏதோ அந்த ரோஜாவிடம் சொல்லி செல்லம் கொஞ்சி கன்னம் குழிய சிரித்து கொண்டிருக்க, அதை கண்டவனுக்கோ இன்னுமாய் நிறைவான புன்னகை.. உள்ளுக்குள் நிம்மதி பிரவாகம்..

இதுவரை அவன் வீட்டில் அவள் உரிமையோடு எதையும் செய்ததில்லை.. அது அவள் வீடு என்ற ஒட்டுதலே இல்லாமல் தான் இருப்பாள்.. அதை  கண்டு வேதனையாக இருந்தாலும் சீக்கிரம் புரிந்து கொள்வாள் என்று  பொறுமை காத்தான்..

இன்று அந்த தோட்டத்துக்கு சொந்தக்காரியாய் அங்கு நின்று சிரித்து கொண்டிருக்க, அந்த மாலை நேரத்து மஞ்சள் வெய்யிலில் அவளின் கொழுகொழு கன்னம் இன்னும் அழகாய் மிளிர்ந்தது..

“கொல்றியேடி....ரோஜா பொண்ணு...அப்படியே உன்னை அள்ளிக்க துடிக்குதே...!  ஹ்ம்ம்ம் எத்தன நாளைக்குத்தான் என்னை ஏங்க விடுவியோ..! சீக்கிரம் என்னிடம் வந்து விடு டீ... “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அவளை நோக்கி நடந்தான்...

அவள் அருகில் சென்றதும் பின்னால் தொங்கிய அவளின் நீண்ட ஜடையை பிடித்து இழுத்து

“ஹாய் பொண்டாட்டி..... “ என்று குறும்பாக சிரிக்க, அந்த இழுப்பிலும் அந்த அழைப்பிலும் அப்படியே அவள் மாமன் நளன் இழுப்பதை போல இருக்க, விலுக் கென்று திரும்பியவள் அவள் அருகில் நின்றவனை கண்டதும்

“மாமா..... வந்துட்டியா? “ என்று அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்..

அவள் மாமா என்று அழைத்ததும் அதுவரை அவன் உள்ளே பொங்கி கொண்டிருந்த காவிரி ஆறு கடலில் சேர்ந்ததை போல அடங்கி போனது...

முகத்தில் வேதனை வந்து ஒட்டிகொள்ள எதுவும் பேசாமல் அப்படியே இறுகி போய் நின்றிருந்தான்...

அவனை இறுக்கி அணைத்திருந்தவள் அவன் மார்பில் இருந்து விலகாமல் தலையை மட்டும் நிமிர்த்தி அவன் முகத்தை பார்த்தவள் தலை சரித்து மையலுடன்

“மாமா  என்னை தூக்கிக்கயேன்... “ என்று வெட்கம் படர முனகினாள்..

ஆனால் ரிஷியோ அசையாமல் அப்படியே நின்று கொண்டிருக்க,

“டேய் மாமா...... ஏன் அப்படியே நிக்கற,,,? நான் ஒன்னும் அவ்வளவு வெய்ட் ஆ இருக்க மாட்டேன்.. ப்ளீஸ் தூக்கிக்கோயேன்... “ என்று கொஞ்ச அவனுக்கோ தன் பெற்றோர்களின் காலை கட்டி கொண்டு தன்னை தூக்கிக்க சொல்லும் குழந்தையை போல இருக்க, அடுத்த நொடி தன் வேதனையை மறைத்து கொண்டு அவளை தன் கைகளில் அள்ளி இருந்தான்....

“ஹ்ம்ம்ம் குட் பாய்.. அப்படியே என்னை வீட்டுக்கு தூக்கிட்டு போ.. “ என்றாள் மீண்டும் வெட்கத்துடன் சிரித்தவாறு...

“ஹே தயா... என்ன விளையாட்டு இது? யாராவது பார்க்க போறாங்க ? “ என்றான் சங்கோஜத்துடன்..

“பார்த்தா பார்க்கட்டும்... என் புருஷன்தானே என்னை தூக்கிக்கறான்.. அது ஒன்னும் தப்பில்ல.... நீ உள்ள போடா மாமா... “ என்று அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்..

அவனும் வேற வழி இல்லாமல் அவளை அள்ளி கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.. அடுத்த நொடி அவள் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தில் போட்டு கொண்டவள் முகத்திலோ இன்னுமாய் வெட்கம் வந்து அப்பி கொண்டது..

அந்த மஞ்சள் வெய்யிலில் அவள் கன்னங்கள் செவ்வானமாய் மின்ன அதை வெகு அருகில் பார்க்க, அவள் கன்னத்துடன் ஒட்டி விளையாட அவன் இதழ்கள் தவித்தன....

ஆனாலும் தன்னை முயன்று கட்டுபடுத்தியவன் பார்வையை வேற பக்கம் மாற்றி கொண்டு முன்னால் நடந்தான்....

பூங்கொத்தை விடவும் மென்மையானவளை மெல்லியளை அவன் கைகள் அள்ளி கொண்டு செல்வது பேரானந்தமாய் இருந்தது அவனுக்கு.. இப்படியே நடந்து கொண்டே இருக்க வேண்டும் போல பேராவலாய் இருந்தது..

தன் வேகத்தை குறைத்து மெது மெதுவாக நடக்க ஆரம்பித்தான்...

எவ்வளவு மெதுவாக நடந்திருந்தாலும் வீடு வந்திருக்க, அவளை அள்ளியவாறே வீட்டிற்குள் செல்ல, அதே நேரம் கண்ணம்மா அங்கு வர, இதுவரை ஒருவித மயக்கத்தில் இருந்தவள் தன் அத்தையை கண்டதும்

“ஐயோ.... அத்தை... “ என்று முனகியவள் அவன் கைகளில் இருந்து துள்ளி குதித்து தன் முகத்தை இரு கைகளாலும் மூடிய படி மாடிக்கு ஓடி விட்டாள்...

அவள் மான்குட்டியாய் துள்ளி ஓடியதையே இருவரும் கண் குளிர ரசித்தவர்கள் அவள் கண்ணை விட்டு மறைந்ததும் தன் அன்னையை பார்த்த ரிஷிக்கோ வெட்கமாக இருந்தது..

ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைக்க , கண்ணம்மாவும் சிறு வெட்கத்துடன் சிரித்தவர்

“ரிஷி கண்ணா... நீ ப்ரியா இருந்தா உன் கிட்ட கொஞ்சம் பேசலாமா? “ என்றார்  தயக்கத்துடன்..

“ஐயோ. என்னம்மா இது..?  இன்னும் என்கிட்ட பெர்மிஸன் கேட்டுகிட்டு.. எதுனாலும் என்கிட்ட தாராளமா பேசுங்க.. “ என்று அவர் கழுத்தை கட்டி கொண்டு அதில் முகம் புதைத்து கொண்டான் உரிமையுடன்..

கண்ணம்மாவும் நெகிழ்ந்து போய் அவன் தலையை செல்லமாக கலைத்தவர்

“வாப்பா. தோட்டத்துக்கு போகலாம்.. “ என்று அழைத்து சென்றவர் இருவரும் அருகருகில் ஒட்டி அமர்ந்து கொள்ள, அவன் அவர் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டே அவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தான்...

அவரோ எப்படி ஆரம்பிப்பது என்று கொஞ்சம் தயங்கியவர் பின் தைர்யத்தை வரவழைத்து கொண்டு

“கண்ணா... உங்க சொந்த விஷயத்தில் தலையிடுகிறேன் என்று தப்பா எண்ணிவிடாதே.. ஒரு அம்மாவாய் சொல்ல வேண்டியது என் கடமை..”  என்று பீடிகையுடன் ஆரம்பித்தவர்

“வந்து..... கண்ணா.. உங்களுக்கு கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் நீங்க இன்னும் உங்க வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லையே...அதுதான் கொஞ்சம் மனசுக்கு உறுத்தலா இருக்கு... நீ விரும்பித்தான தமா வை கட்டிகிட்ட.. அப்புறம் என்னப்பா தயக்கம்? “ என்றார் தயங்கி தயங்கி கேட்டவாறு..

அவனும் ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டவன்

“மா... அவ இன்னும் மனதார என்னை கணவனா ஏத்துக்கல மா... அவ மனசுல இப்பவும் நளன்தான் இருக்கான்.. அவன் மேல பைத்தியமா இருக்கா.. அவ கிட்ட போய் நான் எப்படி கணவனுக்கான உரிமையை எடுத்துக்க முடியும்?

அதான் அவ மனசு மாறுகிற வரைக்கும் காத்திருக்கேன்..அவ கிட்ட நான் நெருங்கும் பொழுதெல்லாம் அவ மாமானாதான் என்னை பார்க்கிறா.. அப்புறம் எப்படி மா? “ என்றான் வேதனையுடன்..

என்னதான் அவன் அவளுக்கு நல்ல நண்பனாக இருப்பேன் என்று  அவளிடம் சொல்லி கொண்டாலும் அவனும் ஒரு ஆண்மகன் தானே..

அவள் நண்பன் என்பது அவளை நம்ப வைக்க சொன்ன வெறும் வார்த்தை.. ஆனால் அவன் ஆழ் மனதில் அவள் காதலி அவன் காதல் மனைவி அவள்..

அப்படி இருக்க, ஒரு கணவனுக்கான ஆசையை அடக்கி கொண்டு தினம் தினம் அவளுடன் நண்பனாக பழகுவது எவ்வளவு கஷ்டம் என்று அந்த படிக்காத கிராமத்துக்காரிக்கும் புரியத்தான் செய்தது..

அவன் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவர்

“ரிஷி கண்ணா... அவ மனசு மாறும்னு நீ காத்திருந்தா அது அலை அடிச்சு ஓய்ந்த பொறவு மீன் புடிக்க போவதுக்கு சமம்... அவ அவ்வளவு சீக்கிரம் மாற மாட்டா...

நீதான் அவளை கொஞ்சம் கொஞ்சமா மாத்தோணும்.. அவ இன்னுமே குழந்தையாதான் இருக்கா. குழந்தைங்க சில நேரம் என்ன பண்றோம்னு தெரியாமலயே எதுக்கு அடம் புடிக்கறோம்னு தெரியாமலயே அடம் புடிப்பாங்க..

அப்படி அடம்புடிக்கிற குழந்தைக்கு சில நேரம் அன்பா எடுத்து சொல்லலாம்... அதுக்கும் அடங்கலைனா அதட்டி மிரட்டிதான் சமாளிக்கோணும்... தமா இப்ப இரண்டாவது ரகம்.. கல்யாணம் ஆகி ஆறு மாசத்துக்கு மேல ஆகியும் அவ மனசு மாறலைனா நாம இப்ப அதிரடியா இறங்க வேண்டியதுதான்..

அதுக்கு முதல் படியா நீதான் அவ புருஷனு அவளுக்கு புரிய வைக்கோணும்... “ என்று நிறுத்தினார்...

ரிஷியோ அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் யோசனையுடன் அவர் முகம் பார்க்க

“வெளிப்படையா சொல்லணும்னா நீ நண்பனா இல்லாமல் கணவனா நடந்துக்க கண்ணா.. அவளுக்கு கொடுத்த டைம் போதும்... இதுக்கு மேலயும் அவளை அப்படியே விட்டு வைக்க முடியாது...

அவளுக்குனு ஒரு குழந்தை வந்துட்டா அதை பார்த்தாலாவது அவ மனசு மாறிப் போகும்... நான் என்ன சொல்றேனு புரியுதாப்பா? “ என்றார் அவருமே தயக்கத்துடன்...

அதை கேட்டதும் யோசனையானான் ரிஷி..

“சற்றுமுன் அவளும் இதைத்தான் கேட்டாள்.. ஆனால் அவ மனசுல என்னை நளன் ஆகத்தானே எண்ணிக்கொள்கிறாள்...  என்று யோசித்தவன்

“மா... அவ என்னை இன்னுமே நளனாகத்தான் பார்க்கிறாள்.. அப்படி இருக்க நான் எப்படி ஒரு கணவனாய்? “ என்று இழுத்தான் தயக்கத்துடன்...

“கண்ணா... அவ உன்னை நளனா பார்த்தால் நீயும் உன்னை நளனாகவே நினைச்சுக்கோயேன்.. என்னை பொறுத்தவரைக்கும் நீதான் கண்ணா என்ற மவன் நளன்.. நளன்தான் நீ..

நீ உன்னை ரிஷி னு நினைச்சுக்காம நளன் னு நினைச்சுக்கோ.. அப்புறம் எந்த தயக்கமும் இருக்காது.. இந்த அம்மாவுக்காக இதை செய்ப்பா..அவளை எப்படியாவது வெளில கொண்டு வரோணும்... நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழோணும்.. அதுக்கு இத விட்டா வேற வழி இல்லை...  “ என்றார் தழுதழுத்தவாறு...

அவர் சொன்னதை கேட்டதும் இத்தனை நாள் அவன் மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைத்தது...

“அவள் என்னை நளனாகத்தானே பார்க்கிறாள்.. நான் அப்படியே இருந்துட்டு போறேன்.. என் மான்குட்டி சந்தோஷமாக இருக்கவேண்டும்.. அதுக்கு நான் நளனாக தெரிந்தால் என்ன?  ரிஷியாக தெரிந்தால் என்ன..?  அவள் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்... “ என்று தனக்குள்ளே தெளிவு படுத்தி கொண்டான்..

“ஹ்ம்ம் கண்டிப்பா மா.... உங்களை நான் என் அம்மாவா பார்த்த மாதிரி தானே அவளும் என்னை நளனாக பார்த்து இருக்கிறாள்.. நீங்க என் ஏக்கத்தை புரிந்து கொண்டு என் அம்மாவா மாறினதை போல அவள் ஏக்கத்தை அவள் கண்ணில் இருந்த தேடலை புரிந்து  கொண்டு அவள் நளனாக நான் மாறாமல் போய்விட்டேன்..

இந்த விஷயம் எனக்கு இதுவரை புரியாமல் போய்விட்டதே. !  ரொம்ப நன்றி மா எனக்கு புரியற மாதிரி எடுத்து சொன்னதுக்கு.. “ என்று அவரை கட்டி கொண்டு அவர் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டான் நளனாகிய ரிஷி வர்மா...

ன்று இரவு படுக்கையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு தன் அலைபேசியில் எதையோ நோண்டி கொண்டிருந்தான் ரிஷி... அப்பொழுது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் தமயந்தி..

தலையை நிமிர்த்தாமலயே அவள் வாசமே அவள் வருகையை உணர்த்திவிட, ஆனாலும் தன் தலையை நிமிர்த்தாமல் குனிந்து கொண்டிருந்தான்...

அருகில் வந்தவள் தன் தொண்டையை செருமி

“பால்..” . என்று அவன் முன்னே நீட்ட அப்பொழுதுதான் அவளை பார்ப்பவனை போல தலையை நிமிர்த்தி பால் டம்ளரை வாங்க அடுத்த நொடி ப்ரீஸ் ஆகி போனான்..

அவன் திருமணத்தன்று முதல் இரவு அன்று அணிந்திருந்த அதே மயில் கழுத்து கலர் புடவை.. தலை நிறைய மல்லிகைப்பூ.. குலுங்கும் கண்ணாடி வளையல்கள் என அன்று பார்த்த அதே தோற்றத்தில் நின்றிருந்தாள் தமயந்தி..

ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்.. அன்று அவள்  கண்களில் ஒரு மிரட்சி.. முகத்தில் ஒரு அச்சம், பயம் என சூழ்ந்து முகமே இறுகி போய் இருந்தது...

இன்று நின்று கொண்டிருந்தவளிடமோ பெரும் மாற்றம்.. கன்னங்கள் செம்மையுற்று கண்கள் படபடவென்று அடித்து அவனுக்கு அழைப்பு விடுக்க, உதடுகள் துடிக்க அதை தன் பற்களால் கடித்து கொண்டு வெட்கத்துடன் நின்று கொண்டிருந்தவளை கண்டதும் அப்படியே உறைந்து போனான் ரிஷி..

அவனாலயே நம்ப முடியவில்ல.. அவன் தயா பொண்ணா இப்படி குழைந்து உருகி தன் அருகில் நிற்பது ? இல்லை இது கனவா ? என்று தன்னையே கிள்ளி பார்த்து கொண்டவன் உள்ளே அதுவரை உறங்கி கொண்டிருந்த அவன் கணவன் மனம் விழித்து கொண்டது...

மாலை கண்ணம்மா சொல்லியதும் நினைவு வர, அவன் இதழ்களில் மெல்லிய குறுநகை தவழ்ந்தது..

ஆனாலும் அவளை கொஞ்சம் சீண்டி பார்க்க எண்ணியவன் அவள் கொடுத்த பாலை குடித்துவிட்டு டம்ளரை அவளிடம் நீட்ட, அவளோ முகம் தொங்கி போனாள்..

அவன் குடித்துவிட்டு தனக்கும் தருவான் என்று ஆவலுடன் எதிர்பார்க்க அவனோ முழவதும் குடித்து விட்டு தர அவனை முறைத்தவாறே அதை வாங்கி கொண்டு சென்று கழுவி வைத்து விட்டு வந்தவள் மீண்டும் கட்டிலின் அருகில் நின்று கொண்டு கட்டை விரலால்  தரையில் கோலமிட்டாள்...

அவனோ அவளை ஓரப்பார்வையில் பார்த்து ரசித்து கொண்டே  மீண்டும் அலைபேசியில் தலையை புதைத்து கொள்ள, கொஞ்ச நேரம் தயங்கி நின்றவள் பின் அவளாகவே கட்டிலில் ஏறி அவன் அருகில் அவனை போலவே காலை நீட்டி வைத்து  அமர்ந்து கொண்டவள் அவன் தோளில் உரிமையோடு சாய்ந்து கொண்டு அவன் கை விளாவுக்குள் தன் கையை விட்டு கொண்டாள்..

அவனோ வேண்டும் என்றே அவளை கண்டு கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருக்க இல்லை இல்லை  இருப்பதை  போல காட்டி கொள்ள, சற்று நேரம் பொறுத்தவள்  நேராக நிமிர்ந்து அமர்ந்து பின்னால் தொங்கிய மல்லிகை சரத்தை முன்பக்கமாக இழுத்து தொங்க விட்டு கொண்டவள் தன் புடவையின்  மேல் மடிப்பை சரி செய்வது போல சரி செய்தவாறு  

“மாமா..... நான் எப்படி இருக்கேன் ? “ என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு...

அவளின் மாமா என்ற அழைப்பில் அவள் நளனைத்தான் அழைக்கிறாள் என புரிய மனம் சுனங்கினாலும் கண்ணம்மா சொல்லியது மீண்டும் நினைவு வர, உடனே தன்னை நளனாக பாவித்து கொண்டான்..

அவன் கண்களில் நளனின் காதல் வந்து ஒட்டி கொள்ள,  நிமிர்ந்து அவளை ரசனையுடன் பார்த்தவன்

“ம்ம்ம்  சூப்பரா இருக்க தயா... “ என்று சொல்லி மீண்டும் அலைபேசி பக்கம் பார்க்க அவளோ கடுப்பானவள்  அந்த அலைபேசியை புடுங்கி தூர எறிந்தவள்

“டேய் ரிஷி மாமா.. ட்யூப் லைட்.. நான் என்ன சொல்றேனு புரியலை உனக்கு? " என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்..

அவளின் ரிஷி மாமா என்ற அழைப்பில் திகைத்து போனான் ரிஷி..

“அப்ப இவ்வளவு நேரம் என்னைத்தான் மாமா னு கூப்பிட்டாளா? “ என்று சிலிர்த்தவன்

"ஹே பொண்டாட்டி.. என்ன சொன்ன? இப்ப என்ன சொன்ன ? " என்றான் அவள் கண்களுக்குள் பார்த்தவாறு...

"ஹ்ம்ம்ம்ம் சொன்னேன் சுரக்காய்க்கு உப்பில்லைனு.. சரியான தத்தி நீ ரிஷி மாமா. " என்று அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்...

"சரி... நான் தத்தியாவே இருந்துட்டு போறேன்.. என் பொண்டாட்டி தான் புத்திசாலியா இருக்காளே..அது போதும்....  " என்றான் குறும்பாக சிரித்தவாறு..

"ஆங்..... " என்று  முழித்தவள் அடுத்து என்ன செய்ய என்று யோசித்தவள்

"வந்து....  நான் கேட்டது வேணும்... " என்றாள் தயக்கத்துடன் கன்னங்கள் செம்மையுற..

"ஆங் என்ன கேட்ட? ஓ ஐஸ்க்ரீம் ஆ? நாளைக்கு வாங்கிட்டு வர்றேன் டா.. நீ இப்ப படுத்து தூங்கு.. " என்றான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு...

"ஐயோ... முட்டாள்... முட்டாள்.. தத்தி...தத்தி...  ரிஷி...ரிஷி னு பெயருக்கு தகுந்த மாதிரியே சரியான சாமியார் நீ... நான் கேட்டது வேற... “ என்று தலையில் அடித்து கொண்டாள்..  

“ஹ்ம்ம் அப்ப நீயே சொல்லுடா செல்லம்.. " என்று அவளை மீண்டும் சீண்டினான்.. அவளோ தன் தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு

"எனக்கு  குழந்தை வேண்டும்... " என்றாள் புடவை முந்தானையின் ஓரத்தை திருகியவாறு தன் உதட்டை அழுந்த கடித்தவாறு..

"அதெல்லாம் கடையில் கிடைக்காது டீ என் மக்கு பொண்டாட்டி.. " என்று குறும்பாக சிரித்தவாறு  அவள் தலையில் செல்லமாக முட்ட

"அது எனக்கும் தெரியும் டா என் மக்கு தத்தி புருஷா..நீ கொடுக்காட்டி போ.. நானே எடுத்துக்கறேன்... "  என்றவள் அவனே எதிர்பார்க்காத அந்த நொடி அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள்..

“லவ் யூ டா மாமா... நீ அன்னைக்கு என்கிட்ட  முத்தம் கேட்டு நான் கொடுக்கலை இல்ல.. இப்ப தர்றேன் பத்து,  நூறு,  ஆயிரம் முத்தம்.. " என்று சொல்லி திகட்ட திகட்ட அவனை முத்தமிட்டாள்...

அடுத்து அவன் முரட்டு இதழ்களை அவள் மெல்லிய இதழ் கொண்டு மூடி அழுந்த முத்தமிட்டாள்...

ரிஷிதான் அவள் மாமன் என்று எண்ணி கொண்டவள் தன் மாமன் மீது அவள் கொண்ட காதலை எல்லாம் கொட்டிவிடும் வேகத்தில் அவள் காதலை அவன் உள்ளே பாய்ச்சி விடும் ஆர்வத்தில் அழுந்த அழுந்த ஆழமாக முத்தமிட்டு பூரித்தாள்....

அவனுமே அவள் காதலில் ஆசையில் மோகத்தில் சிலிர்த்தவன் அவள் தந்த முத்தத்தை திகட்ட திகட்ட ருசித்தவன்  அவள் அவனை விடுத்த அடுத்த நொடி அவன்  ஆரம்பித்தான்...

அவள் கொட்டிய காதலை விட பல மடங்கு தன் காதலை உணர்த்தி விடும் வேகத்தில் அவள் செவ்விதழை சிறை பிடித்தவன் இதழோடு நிறுத்தி விடாமல் அவள் மேனி முழுவதும் முத்தத்தால் ஆராதித்தான்...

அதில் உருகிய பெண்ணவளும் இன்னுமாய் குழைந்து உருகி அவனுள் புதைந்து கொள்ள அழகாய் இரு உடல்களின் சங்கமம் ஆரம்பமானது அங்கே....

இரு காதலர்கள் மனதில் இருந்த காதல் காற்றாற்று வெள்ளமாய் அடித்து கொண்டு வர, இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் நொடியும் விலகாமல் பல முறை கூடி களித்து திளைத்து போயினர்..

இரவு முழுவதுமே திகட்ட திகட்ட தொடர்ந்தது அவர்களின் காதல் மற்றும் கலவி போராட்டம்..... 

அத்தியாயம்-50                                                                       அத்தியாயம்-53

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!