தேடும் கண் பார்வை தவிக்க-53(Pre-Final)

                                                                         


                                                            அத்தியாயம்-53

நான்கு வருடங்களுக்கு பிறகு...

"நளா... டேய் நளா... எங்கடா இருக்க? " என்று கத்தி கொண்டே கையில் ஒரு உணவு கிண்ணத்துடன் வீட்டின் கொல்லப்பக்கம் வந்து கொண்டிருந்தாள் தமயந்தி..

அவர்கள் கிராமத்தில் இருந்த நளன் வீடு அது..

அவளை கண்டதும் அந்த பெரிய வேப்ப மரத்தில் கட்டி இருந்த பொன்னி தன் தலையை வேகமாக ஆட்டி அவளை மகிழ்ச்சியோடு வரவேற்று சிரித்தது..

அதை கண்டவள் வேகமாக அதன் அருகில் சென்றவள்

"பொன்னி எப்படி இருக்க? உன்னை நல்லா பார்த்துக்கறாங்களா? “ என்றவாறு அதன் தலையை தடவி அதன் நெற்றியில் முத்தமிட்டாள்..

அதுவும் சிலிர்த்து தலையை இன்னும் வேகமாக ஆட்டி தன் சந்தோஷத்தை காட்டியது... அவளும் சிரித்துவிட்டு

"நளா... இங்கதான் நீ எங்கயோ இருக்க.. எனக்கு தெரிஞ்சிடுச்சு.. நீயா வந்துடு... " என்றாள் நாலா பக்கமும் தேடியவாறு..

அப்பொழுது அந்த பெரிய வேப்ப மரத்தின் அருகில் இருந்த சிறிய வேப்ப மரத்தில் ஒரு கிளைக்கு பின்னால் அசைவு தெரிய

"தயா... நீ என்னுடைய ஃபேவரைட் பாட்டை பாடு... அப்பதான் உன் கண் முன்னே வருவேன் .. " என்று மழலை குரல் அவள் காதில் தேனாய் வந்து பாய அதில் சிலிர்த்தவள் அடுத்த நொடி பாட ஆரம்பித்தாள்

தேடும் கண் பார்வை தவிக்க.... " என்று உருகி பாட அடுத்த நொடி அந்த கிளையில் இருந்து எட்டி குதித்திருந்தான் அவள் மைந்தன் நளன்.. நளன் வர்மா...

திடீரென்று அவன் மரத்தில் இருந்து குதிக்கவுக் திடுக்கிட்டு போனாள் தமயந்தி..

சின்ன வேப்பம் கன்னுதான் அது.. இப்பொழுது தான் வளர்ந்து இருந்தது.. உயரம் அதிகம் இல்லை என்றாலும் மேலே இருந்து குதித்ததில் அவனுக்கு அடிபட்டு விட்டதோ என்று பதறியவள் உடனே தன் மகனை அள்ளி எடுத்தவள் அவன் உடல் முழுவதும் அவசரமாக ஆராய்ந்தாள் தவிப்புடன்..

“ஹா ஹா ஹா எனக்கு ஒன்னும் ஆகலை தயா.. இதெல்லாம் ஜுஜுபி. நான் பெரிய பெரிய உயரத்தில் இருந்தெல்லாம் குதிப்பேன்.. " என்று தன் அன்னையின் கழுத்தை கட்டி கொண்டு தலை சரித்து சிரித்தான் மூன்று வயதான அவள் ஆசை மகன் நளன்..

"ஹ்ம்ம் நீ குதிப்படா குதிப்ப... நீ யாரு..?  ஆனால் எனக்குத்தான் உயிர் போய் உயிர் வருது..இனிமேல் இப்படி எல்லாம் மரத்து மேல ஏறக்கூடாது... புரிஞ்சுதா?”  என்று அவன் கன்னத்தை  செல்லமாக கிள்ளியவள்

"சரி... உன் அப்பா எங்க?   அவர் எங்க ஒளிஞ்சு இருக்கார்? " என்றாள் அவனிடம் ரகசியமாக..

அவனும் சுற்றிலும் தன் குட்டி கண்களை உருட்டி பார்த்தவன்

"எனக்கு தெரியாதே..! . நீயே கண்டுபுடி.. " என்று பிஞ்சு கைகளை அழகாக விரித்து காட்டி கிளுக்கி சிரித்தான்..

"ஹீ ஹீ ஹீ உன் அப்பனை நான் தேடாமலயே எப்படி வெளில கொண்டு வருவது என்று எனக்கு தெரியும் டா.. நீ உள்ள போ.. பாட்டி உன்னை கூப்பிட்டாங்க.. " என்று தன் மகனை வீட்டுக்கு உள்ளே அனுப்பி வைத்தவள் சுற்றிலும் கண்களால்  தன்னவனை தேட காணவில்லை அவனை..

அடுத்த நொடி

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க...
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ..
வெறும் மாயமானதோ...

 என்று காதலுடன் உருகி பாட அடுத்த நொடி அந்த பெரிய மரத்தில் இருந்த ஒரு கிளையில் இருந்து சரித்தவாறு அவள் பின்னே குதித்தவன் அவள் நீண்ட ஜடையை பிடித்து இழுத்து

"ஹாய் பொண்டாட்டி... என்ன என்னை காணாம ரொம்ப தவிச்சு  போய்ட்டியாக்கும்... " என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான் ரிஷி வர்மா..

அவ்வளவு பெரிய மல்ட்டி மில்லினர்.. சின்ன பிள்ளையாட்டம் மரத்தில் ஏறி ஒளிந்து கொண்டு விளையாடுவதை காண அவளுக்கு பெருமையாக இருந்தது..

இப்பொழுது மட்டுமா?

நான்கு வருடம் முன்பு அவள்  நளன் மாமன் அவளுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்பதற்காகவே   அவனுடன் கூடிய பொழுதும் அதன் பிறகு எப்பொழுது தனக்கு குழந்தை உருவாகும் என்று தினமும் நச்சரித்து அவனிடம் புலம்பிய இரவுகளில் எந்த ஒரு முக சுளிப்பும் இல்லாமல் பொறுமையாக அவளை அரவணைத்து கொண்டான்..

அவள் வயிற்றில் குழந்தை உருவான நாளில் என் மாமன் என் உள்ளே வந்து விட்டான் என்று அவள்  ஆர்பரிக்க அவனும் அவளுடன் இணைந்து அவள் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து கொண்டான்...

எல்லா பெண்களும் கர்ப்ப காலத்தில் தன் கணவனின் புகைப்படத்தை அடிக்கடி பார்த்துகொண்டு  தன் கணவனை போல குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட,

தமயந்தியோ அவர்கள் அறை முழுவதும் நளன் புகைப்படத்தை பெரிய அளவில் மாட்டி வைத்து அவனை போலவே தன் மகன் பிறக்க வேண்டும் என்று நொடிக்கொரு தரம் வேண்டி கொண்டாள்..

அத்தோடு நிறுத்தாமல்  

“ரிஷி.. நளன் மாமா என்னை உதைக்கிறான்.. என் வயிற்றில் ஓடுகிறான்.. இப்ப என்ன செய்வான்? தூங்கறானா?

என்று சதா காலமும் நளனை பற்றி சிந்தித்து கொண்டிருந்தவளை வெறுத்து ஒதுக்காமல் முகம் சுளிக்காமல் அவள் சந்தோஷம் மட்டுமே அவன் சந்தோஷமாய் அவளை கண்ணுக்குள் வைத்து தாங்கி கொண்டான் அவள் கணவன்...

அவள் பிரசவத்தின் பொழுது அவள் துடித்ததை விட அவன் துடித்து அவள் வலியை விட மேலான வலியை அனுபவித்து காத்து கொண்டிருந்தவன் கையில்  ரோஜா குவியலாய் தன் மகனை கையில் கொடுக்க அப்படியே திகைத்து போனான்...

அந்த குட்டி சிசுவை கண்ட கண்ணம்மாவும் மகிழ்ந்து அதிர்ந்து போனார்..

அப்படியே நளனை உரித்து வைத்து பிறந்திருந்தான் ரிஷியின் மகன்... நளன் பிறந்த பொழுது எப்படி இருந்தானோ அதே அச்சு பிசகாமல் அப்படியே பிறந்திருந்தான்..

அவனை கையில் ஏந்திய அந்த நொடி கண்ணம்மா சிலிர்த்து போனார்..

தன் மருமகள் அரற்றி கொண்டிருந்ததை போல தன் மகனே திரும்பவும் வந்துவிட்டான் என பூரித்து போனவர் தன் பேரனை அள்ளி அணைத்து கொண்டார்...

அதே நேரம் தன்னை போல இல்லாமல் நளனை போல பிறந்திருந்த குழந்தையை கண்டதும் ரிஷி என்ன நினைப்பானோ என்று அச்சத்துடன் அவன் முகம் பார்க்க, அவனோ அருகில் வந்து கண்ணம்மாவை கட்டி கொண்டவன்

மா... நான் வேறு நளன் வேறு அல்ல...இப்பதான் தயாவுக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும்.. அவள் மாமனே வந்துவிட்டதாக பூரித்து போவாள்..

அப்படி இல்லாமல் இந்த குட்டி பையன் என்னை மாதிரி பிறந்திருந்தால் அவளுக்கு அதுவே பெரும் ஏமாற்றமாக இருந்திருக்கும்... அப்புறம் மறுபடியும் நத்தை மாதிரி சுருங்கி விடுவாள்..

இப்ப அவ ஹேப்பியாய்டுவா... அவ ஹேப்பினா நானும் ஹேப்பி.. அதனால் பேரனோட என்ஜாய் பண்ணுங்க.. என் பொண்டாட்டியை நான் பார்த்துக்கறேன்.. “

என்று அவர் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி இருபக்கமும் ஆட்டினான்..

நெகிழ்ந்து போனார் கண்ணம்மா..

“இப்படி ஒருத்தன் என் வயிற்றில் பிறக்காமல் போனானே..  என்று வருந்தியவர் 

“என் வயிற்றில் பிறக்கா விட்டாலும் என் மகன்தான்.. “  என பூரித்து போனார்...  

தமயந்திக்கோ சொல்லவே வேண்டாம்...

தன் மாமனின் குழந்தை படத்தை பார்த்து இருந்ததால் அவள் மகன் அப்படியே தன் மாமனை போலவே இருக்க, அவன் தன் மாமன் கேட்ட கடைசி ஆசையை  நிறைவேற்றி விட்ட பெருமை பூரிப்பு ஒரு நிறைவு அவள் முகத்தில்..

பிரசவம் முடிந்து சோர்ந்து போய் படுக்கையில் துவண்டு கிடந்தாலும் அவள் முகம் பூரித்து இருந்தது..

அவள் அருகில் நின்று கொண்டு அவள் தலையை வாஞ்சையுடன் வருடி கொண்டிருந்த தன் கணவனை கண்டவள் எட்டி அவனை தன் அருகே இழுத்தவள் அவன் இடுப்பை கட்டி கொண்டு அவன் இடுப்பிலயே முத்தமிட்டவள்

“ரொம்ப தேங்க்ஸ் ரிஷி.. ரொம்ப தேங்க்ஸ் டா ரிஷி மாமா.. ஐ லவ் யூ... ஐ லவ் யூ சோ மச்... " என்றாள் தழுதழுத்தவாறு..

“ஹே தயா பொண்ணு.. என்ன இது?  நன்றி சொல்லி என்னை தள்ளி வைக்கிற பார்த்தியா? உன் சந்தோஷம் தான் என் சந்தோஷம் டா... நீ ஹேப்பினா நான் ஹேப்பி.. " என்று குனிந்து அவள் தலை முட்டி அவன் நெற்றியில் முத்தமிட்டான்...

அதோடு அந்த குட்டிக்கு பெயர் சூட்டும்பொழுதும் நளன் என்றே வைக்க வேண்டும் என்று சொல்லி அவன் குடும்ப பெயரையும் சேர்த்து நளன் வர்மா என்று தன் மகனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தான் ரிஷி..

அதை இன்று நினைத்தாலும் புல்லரித்தது அவளுக்கு.. அந்த நினைவுகளில் கண்கள் பனிக்க தன் கணவனையே காதலுடன் பார்த்து கொண்டிருந்தாள்

“ஹோய் பொண்டாட்டி.. என்ன இப்படி பகல்லயே  என்னை சைட் அடிக்கற?  மாமா மீது அவ்வளவு ஆசையா?”  என்றான் ரிஷி கண் சிமிட்டி குறும்பாக சிரித்து..

அவளோ கன்னம் சிவந்துபோக அடுத்த நொடி தன்னை மறைத்து கொண்டவள்

“ஆமா..  ஆசைதான்.. என் ரிஷி மாமா மேல ஆசைதான்.. “ என்று ராகமாக இழுத்து பாடியவள் அவன் சட்டையை பிடித்து அவள் அருகில் இழுத்தவள் அவன் மார்பின் மீது மையலுடன் சாய்ந்து கொண்டாள்..

அவனும் உருகி போய் அவளை கட்டி கொள்ள, அப்பொழுது கண்ணம்மா ரிஷியை அழைப்பது கேட்டது..

“ஹே பொண்டாட்டி.. அம்மா கூப்பிடறாங்க.. என்னனு கேட்டுட்டு  வர்றேன்.. உன் ஆசையை எல்லாம்  அப்படியே பத்திரமா வச்சிருந்து நைட் இந்த மாமாகிட்ட காட்டுவியாம்.. “ என்று கண் சிமிட்டி அவள் கன்னம் தட்டி செல்ல, அவளும் நாணத்தால் தலை கவிழ்ந்தவள் அவன் சிறிது தூரம் நடந்ததும்

“மாமா... ஒரு நிமிஷம்... “ என்று அவனை நிறுத்தியவள் அவனிடம் ஓடி வந்தவள்

“கொஞ்சம் குனியேன்.. “  என்க அவனும் ஆவலுடன் குனிய அவன் மீசையில் இருந்து ஒரு முடியை புடுங்கி கொண்டு கிளுக்கி சிரித்தாள் பெண்ணவள்..

அதை கண்டு காதல் பொங்க செல்லமாக முறைத்தவன் அவள் தலை முட்டி “போடி.. இன்னும் இந்த பழக்கத்தை விடலையா... “ என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி விட்டு மீண்டும் முன் பக்கம் சென்றான்.. அவளுக்கு பிடிக்கும் என்று அவள் கேட்காமலயே மீசை வளர்த்த அவள் கணவன்..

அவர்களுக்கு பிடிக்கும் என்பதற்காகவே தன் பிஸி செட்யூலிலும் தன் குடும்பத்தை மூன்று மாதம் ஒரு முறை அவர்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் அந்த கிராமத்தில் தங்கி செல்வான்..

அப்பத்தாவும் தன் பேத்தி   மஹாராணியாய் சிரித்த முகத்துடன் வளைய வருவதையும் தன் கொள்ளு பேரனையும் பார்த்த மகிழ்ச்சியில் நன்றாகவே உடம்பு தேறிவிட்டார்...முன்பு போல எழுந்து நடக்கவும் ஆரம்பித்து விட்டார்... 

தன் பேத்தி வந்து போகும்  இந்த இரண்டு நாட்களில் முகம் கொள்ளா பூரிப்புடன் தன் கொள்ளு பேரனை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்து போவார்...

அழிந்து போக இருந்த அவளை,  அவள் குடும்பத்தை மீட்டெடுத்த  தன் கணவனை காதல் பொங்க பார்த்து ரசித்தாள் தமயந்தி..

ரோஜா வெட்ஸ் விவேக் என்ற திருமண வரவேற்பு பலகை அனைவரையும் வரவேற்று கொண்டிருந்த திருமண மண்டபத்தின் உள்ளே  காரை செலுத்தினான் ரிஷி..

காரை நிறுத்தி விட்டு ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கிய ரிஷி பின் பக்க கதவை திறக்க, கண்ணம்மா மடியில் அமர்ந்து இருந்த அவன் மகன் வேகமாக அவனும் கதவை தள்ளி கொண்டு கீழிறங்கினான்..

காரின் உள்ளே இருந்து கீழ கால் எட்டவில்லை என்றாலும் அவனே முயன்று இறங்கி நின்று கொண்டான்.. ரிஷியும் அவன் முயற்சியை கண்டு சிரித்தவாறு அவனை தூக்கிக்க முயல, அவன் கையை தட்டி விட்ட நளன் குட்டி

“நோட் டாட்... என்னை தூக்க வேண்டாம்... நான் நளன்... நளன் மகாராஜா... நானே நடந்து வந்திடுவேன்.. “ என்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு மிடுக்குடன் கூற அதை கண்டு அனைவரும் வாயடைத்து நின்றனர்...

தமயந்தியும் அசந்து போய் தன் மகனையே ரசித்து பார்த்து கொண்டிருக்க, குட்டி சேர்வானியில் குட்டி இளவரசனாக நின்று கொண்டிருந்த தன் பேரனை காண திகட்டவில்லை கண்ணம்மாவுக்கு..

அதுவும் சிறுவயதில் அவர் மகன் நளன் அவன் அத்தை சொன்ன நளமகாராஜா கதையை கேட்டபிறகு இப்படித்தான் அடிக்கடி சொல்லி கொள்வான்..

இந்த குட்டியோ யாருமே நளன் ராஜா ஐ பற்றி சொல்லியிருக்காத போதும் நளன் சொல்லுவதை போல சொல்லி அதே மாதிரி ஆக்சன் வேறு பண்ண அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது..

ரிஷியும் பெருமையுடன் தன் மகனை பார்த்தவன் அவனை தனியாக நடக்க விட பயந்து கொண்டு

“ஒகே.. நளன் மகாராஜா அவர்களே.. உன் டாடிக்கு நடக்க முடியலையாம்.. என்னை கை பிடித்து கூட்டி போறிங்களா? “ என்று பவ்யமாக கேட்க

“ஓ யெஸ்.. ஐ கேன் ஹெல்ப் யூ... “ என்று கிளுக்கி சிரித்தவன் ரிஷியின் கையை பிடித்து கொண்டு மிடுக்குடன் முன்னால் நடந்தான்... மற்றவர்க்ளும் சிரித்தவாறு அப்பா மகன் இருவரையும் ரசித்தவாறு பின் தொடர்ந்தனர்.. 

ரிஷி தன் குடும்பத்துடன் அந்த திருமண மண்டபத்தில் நுழைய, அங்கு மேடையில் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் பூரிப்புடன் நின்றிருந்த விவேக் அவனை கண்டு கொண்டு கை அசைத்து வரவேற்றான்..

கிட்டதட்ட ஐந்து வருடங்கள் முன்பு தன் காதலை அவன் ரோஜா பொண்ணிடம்  உணர்ந்து கொண்டவன் அவள் அப்பொழுது இருந்த மனநிலையில் உடனே தன் காதலை சொல்லாமல் நல்ல நண்பனாய் அவள் அருகில் இருந்து அவளுக்கு ஆறுதல் அளித்து அவளை மீட்டெடுத்தான்..

ரோஜாவும் அந்த பாதிப்பில் இருந்து வெளிவந்து விட்டாலும் காதல் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது..

விவேக் தன் காதலை உடனே சொல்லி அவளை கட்டாயபடுத்தாமல் ஒரு நல்ல நண்பனாய் அவளையும் தன் தொழிலில் ஈடுபடுத்தி கொண்டான்..

ரிஷி சொன்னமாதிரி  அவனுக்கு தனியாக அலுவலகத்தை  அமைத்து கொடுத்துவிட கூடவே அவனுக்கு தெரிந்தவர்களிடம் ரெக்கமண்ட் செய்ய, விவேக் 007 கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைந்தான்...

ரோஜாவுக்கும்  அந்த தொழிலில் ஆர்வம் வந்துவிட தன் நடன பயிற்சி ஆசிரியை வேலையை விட்டுவிட்டு விவேக் உடன் முழுநேரமும் துப்பறியும் பணியில் சேர்ந்து கொண்டாள்... வார விடுமுறைகளில் தன் நாட்டியத்தை தொடர்ந்தாள்..

விவேக் ம் இத்தனை வருடமாக காத்திருந்து ஒரு வழியாக அவள் மனதை மாற்றி காலையில் அவள் கழுத்தில் தாலி கட்டி தன்னவளாக்கி கொண்டவன் இதோ மணமேடையில் அவர்களின் திருமண வரவேற்பு விழாவுக்காக தன்னவளுடன் அனைவரின் ஆசி வேண்டி நின்று கொண்டிருந்தான்..  

குடும்பத்துடன் மேடை ஏறிய ரிஷி அவனை கட்டி அணைத்து

“டேய் விவா.. எப்படியோ ஐந்து வருடம் போராடி உன் காதல் ல ஜெயிச்சுட்ட.. க்ரேட் டா.. “ என்று சிரித்தான் ரிஷி..

ரோஜாவும் வெட்கத்துடன் மலர்ந்து சிரித்தாள்..  

“சிஸ்டர்.. மேரேஜ் பர்ஸ்ட் லவ் நெக்ஸ்ட் னு இருந்தவனையே தலைகீழா மாத்திட்டிங்களே... இவனை இத்தனை நாளா சுத்த வச்சது போதும்.. இனிமேலாவது விவாவை  சுத்த விடாதிங்க.. பாவம் அலைஞ்சு அலைஞ்சு  துரும்பா இளச்சுட்டான்..“ என்று நக்கலுடன் சிரித்தான் ரிஷி..  

“ஹலோ பாஸ்... போதும்.. இப்பதான் என் ரெட் ரோஸ் எனக்கு கருணை காட்டி இருக்கா.. நீங்க ஏதாவது சொல்லி என் வாழ்க்கையில கும்மி  அடிச்சிடாதிங்க..

நீங்க உங்க ரோஜா பொண்ணை மட்டும் பத்திரமா பார்த்துக்கங்க.. என் ரோஜா பொண்ணை நான் பார்த்துக்கறேன்.. “ என்று ரகசியமாய் சொல்லி  சிரிக்க அவன் வயிற்றில் செல்லமாய் குத்தி சிரித்தான் ரிஷி...

பின் ரிஷி விவேக் க்கிற்கு வாழ்த்து சொல்ல என நளன் குட்டியை தூக்க முயல, அவனோ அதை மறுத்து மணமக்கள் இருவரையும் அவன் உயரத்துக்கு குனிய சொன்னான்..

அவனின் அந்த மிடுக்கான தோரணையை கண்டு மணமக்கள் இருவரும் சிரித்தவாறு அவன் அருகில் முட்டி போட்டு அமர்ந்து கொள்ள, நளன் குட்டி விவேக் மற்றும் ரோஜாவுக்கு கை குலுக்கி,  ரிஷி காரில் வரும்பொழுது அவனுக்கு சொல்லி கொடுத்த படி

“ஹேப்பி மேரிட் லைப் அங்கிள் அன்ட் ஆன்ட்டி. “ என்று மழலையில் சொல்லி அவன் பால்பற்கள் தெரிய சிரிக்க, ரோஜா அதில் உருகி அவனை அப்படியே கட்டி கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...

அவனோ லேசாக வெட்கபட்டு தன் கன்னத்தை பிஞ்சு கரங்களால் துடைத்து கொண்டவன்

“ஆன்ட்டி.... நீங்க அங்கிள் க்குத்தான் கிஸ் பண்ணனும்...  எனக்கில்லை.. என் மாம் , என் டாடிக்கு இப்படித்தான் கிஸ் பண்ணுவாங்க.... “ என்று சிரிக்க, தமயந்தியோ கன்னம் சிவக்க குனிந்து அவன் வாயை உடனே பொத்தி கொண்டாள்..

ரிஷியும் வெட்கபட்டு சிரிக்க, அதற்குள் எழுந்து நின்றிருந்த விவேக் ரிஷியை பார்த்து

“பாஸ்.. சின்ன ரோஜா கவனிப்பு எல்லாம் பலமா இருக்கும் போல..என்ஜாய் பண்ணுங்க.. “ என்று கண் சிமிட்டி விஷமமாக சிரிக்க, ரிஷியோ அவனை செல்லமாக முறைத்து மீண்டும் ஒரு முறை அவர்களை வழ்த்திவிட்டு சென்றான்..

தமயந்தியும் ரோஜாவை கட்டி கொண்டு இருவரையும் மனம் நிறைந்து வாழ்த்த, ரிஷி குடும்பல் மேடையை  விட்டு கீழிறங்கினர்....

அத்தனை கஷ்டத்துக்கு பிறகு தமயந்தியை சிரித்த முகமாக, அவர்களை குடும்பமாக  பார்க்க விவேக் மற்றும் ரோஜா தம்பதிகளுக்கு மனம் நிறைந்து இருந்தது....

தங்கள் ஜோடியை மறந்து ரிஷி தமயந்தி ஜோடியை ரசித்து பார்த்தனர் இருவரும்......

(அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்..!)

அத்தியாயம்-52
அத்தியாயம்-54

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!